பண்டிதரான படைத்தலைவர்

இரா. கலைக்கோவன்


ஒற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்

தமிழ்நாட்டு வரலாறு சங்க காலத்திலிருந்தே வீறுடைப் போர்க்களங்கள் பலவற்றைப் பார்த்துள்ளது. கரிகாலரின் வெண்ணிப்போரும் கோச்செங்கணானின் கழுமலப்போரும் இலக்கியங்களாகுமளவு வெற்றி கண்டன. ஒரு போர், அது எந்த நாடுகளுக்கிடையில் நடந்தாலும் எத்தகு அரச மரபுகளுக்கிடையில் நிகழ்ந்தாலும் விளைவு வெற்றி ஒருபக்கம், தோல்வி மற்றொரு பக்கம் என்பதாகத்தான் முடியும். அந்த வெற்றியும் தோல்வியும்தான் போரிடும் அரசுகளின் தொடர்ச்சியையோ, இறுதியையோ முடிவுசெய்கின்றன. திருப்புறம்பியத்தில் நிகழ்ந்த போர் அத்தகையது. பெருகியிருந்த பல்லவர்களைச் சுருட்டி வீசியும் சுருங்கியிருந்த சோழர்களை எழுச்சியுடன் பரவவும் வைத்த களமது! 

புறம்பியத்துக்கு முற்றிலும் நேர்மாறாக அமைந்த போர்களையும் தமிழ் மண் சந்தித்துள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பொதுக்காலம் 949இல் நிகழ்ந்த தக்கோலப் போர். முதற் பராந்தகர் ஆட்சியில் சோழர்களுக்கும் கன்னரதேவர் தலைமையில் இராஷ்டிரகூடர்களுக்கும் நிகழ்ந்த அப்பெரும் போரில், போரை எதிர்பார்த்துப் பல ஆண்டுக் காலம் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் படையுடன் தங்கியிருந்த சோழ இளவரசர் இராஜாதித்தர் யானைமேலிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார். கன்னரதேவரின் துணைக்கு வந்த கங்க அரசர் பூதுகன் இராஜாதித்தரின் யானை மேல் தாவியேறி அவரை அழித்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. சோழர் படை தோற்றது. கன்னரதேவர் வெற்றிப் பெருமையுடன் தொண்டை மண்டலத்தில் நுழைந்தமைக்கு அப்பகுதியில் கிடைக்கும் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன. 

கச்சியும் தஞ்சையும் கொண்டவராகக் கன்னரதேவர் தம்மைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டாலும், அவரது கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் வடபகுதியில் மட்டுமே பதிவாகியுள்ளன. போரில் கன்னரதேவர் வென்றிருந்தபோதும், சோழ அரியணையில் பராந்தகரே தொடர்ந்தார். சோழராட்சியின் கீழிருந்த ஒருபகுதிதான் கன்னரதேவரால் கைக்கொள்ளப்பட்டதே தவிர, தக்கோலப் போர் சோழர்களை வீழ்த்தவில்லை. தஞ்சாவூரும் கன்னரர் வயமாகவில்லை. 

தமிழ்நாட்டுப் போர்க்களங்களில் தங்கள் இன்னுயிரை இழந்த அரசர்கள் பலராவர். சோழ மரபிலேயே யானை மேல் துஞ்சியவர்களாக இருவர் உள்ளனர். ஒருவர் தக்கோலத்தில் கொல்லப்பட்ட இராஜாதித்தர். மற்றொருவர் கொப்பம் போரில் உயிரிழந்த முதல் இராஜாதிராஜர். போர்க்கள மரணம் வீரர்கள் பெருமைப்படுவதுதான் என்றாலும், அந்த இழப்பு, சிலருடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுகிறது. இராஜாதித்தருக்குத் தக்கோலத்தில் நிகழ்ந்த முடிவு ஒரு படைத்தலைவரைப் பண்டிதராக்கியது என்றால் நம்புவீர்களா? இது கதையல்ல வரலாறு.

வடசென்னையின் புகழ் மிக்க கோயில்களுள் ஒற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலும் ஒன்று. பாடல் பெற்ற அத்திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள், சமஸ்கிருதத்திலும் தமிழிலுமாய்ப் பொறிக்கப்பட்டுள்ள இராஷ்டிரகூட அரசர் கன்னரதேவர் காலக் கல்வெட்டொன்று (பொதுக்காலம் 959), திருவொற்றியூர் மடத்தைச் சேர்ந்த சதுரானன பண்டிதர், தாம் பிறந்த அவிட்ட நட்சத்திரத்தின்போது கோயில் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் செலவினங்களுக்காக நரசிங்கமங்கலத்து சபையாரிடம் 100 பொன் அளித்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. கல்வெட்டின் தமிழ்ப்பகுதி இறைவழிபாடு பற்றிய விரிவான செய்திகளைச் சுட்ட, சமஸ்கிருதப் பகுதி பண்டிதரின் பழைய வரலாறு பேசுகிறது.

ஒற்றியூர் கல்வெட்டுக்கள்

பிறை சூடிய சிவபெருமானுக்கு முருகன் மகனானாற் போலக் கேரள இராஜசேகரனுக்கு இவர் மகனானார். இளமையிலேயே திறமைகளின் ஊற்றாய் விளங்கிய இவர், உலக நலத்திற்கு உழைக்க விழைந்தவராய்ச் சோழநாடு வந்து தம் வீரத்தாலும் ஆற்றலாலும் சோழ இளவரசரான இராஜாதித்தரின் உளம் உகந்த படைத்தலைவரானார். இளவரசரோடு இணைந்திருந்தபோதும் உரிய நேரத்தில் உடனிருக்க முடியாமல் போனமையால் போரில் மன்னரோடு உயிரிழக்கும் வாய்ப்பிழந்தார்.

தம் மரபுவழிக்கும் தகுதிக்கும் தாம் ஏற்றிருந்த பொறுப்பிற்கும் பொருந்தாத அச்செயலால் உளம் நொறுங்கிய அவர், உலக சுகங்களை வெறுத்தொதுக்கி கங்கையை அடைந்தார். அதில் மூழ்கிய பிறகே அவர் மனம் தெளிந்தது. நாடெங்கும் திரிந்து ஒற்றியூரிலிருந்த நிரஞ்சன குருவின் குகையில் தங்கியபோது ஞானம் பிறந்தது. அக்குகையை நிருவகிக்கும் பொறுப்பும் வந்தடைந்தது. ‘சதுரானன’ என்ற புதிய பெயருடன் மடத்தின் தலைவராக மறுபிறப்பெய்திய நிலையில்தான், ஒற்றியூர் இறைவனுக்குத் தம் பிறந்தநாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் கொடையை அவர் அளித்திருக்கிறார். 

தக்கோலத்தில் உயிரிழந்த இராஜாதித்தருடன் களத்தில் இருக்கமுடியாமைக்கு வருந்தி, நாடெல்லாம் சுற்றி, ஒற்றியூரில் ஞானம் பெற்றுப் பண்டிதரான இந்தக் கேரளப் படைத்தலைவரை அடையாளம் காணப் பெண்ணையாற்றங் கரையிலுள்ள கிராமம் எனும் சிற்றூரில் விளங்கும் சிவலோகநாதசாமி கோயிலுக்கு வரவேண்டும். பொதுக்காலம் 938இல் திருமுனைப்பாடிநாடு என்றழைக்கப்பட்ட இப்பகுதியில்தான் சோழ இளவரசர்களான இராஜாதித்தரும் அரிஞ்சயரும் பெரும் படையுடன் போரை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். போர் நிகழும்வரை திருமுனைப்பாடியில் தங்கியிருந்த சோழர்கள் பல அரும்பணிகளைச் செய்தனர்.

தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் பிறந்த திருநாவலூரிலுள்ள திருத்தொண்டீசுவரத்தை இராஜாதித்தர் கற்றளியாக்கினார். திருக்கோவலூர்க் கோயில் பணிக்கு அரிஞ்சயரின் படைகள் துணைநின்றன. கேரளத்துத் திருநந்திக்கரைப் புத்தூரில் பிறந்து, இராஜாதித்தரிடம் பெரும்படை நாயகராகப் பொறுப்பேற்றிருந்த வெள்ளங்குமரன், தம் தலைவர் போலவே அப்பர் பெருமான் பாடல் பெற்ற கிராமத்து சிவன் கோயிலாம் ஆற்றுத்தளியைக் கற்றளியாக்கி அறக்கட்டளை அமைத்தார். அவரது இரண்டு கல்வெட்டுகள் சிவலோகநாதசாமி கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. அவரோடு அவரது கேரளப் படை வீரர்கள் பலரும் கோயிலுக்குப் பலவாய் அறங்களைச் செய்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. 

செய்திக் குறிப்பைத் தாங்கிய ‘இந்து’ நாளிதழ்

இராஜாதித்தரின் உள்ளத்துக்கு நெருங்கியவராகவும் சோழர்களின் பெரும்படை நாயகராகவும் விளங்கிய வெள்ளங்குமரன், தக்கோலப் போர்க்களத்தில் இராஜாதித்தர் உயிரிழக்க நேர்ந்தபோது உடனிருக்க முடியாமல் போனமை எதனால் என்பதை வரலாறு நமக்குக் கூறவில்லை என்றாலும், அப்பேரிழப்புக் குமரனை எத்தகு துன்பத்திற்கு ஆளாக்கியது என்பதையும் அதனால், அவர் வாழ்வியலே மாறி ஒற்றியூர்ப் பண்டிதராய் அவர் மறுபிறப்புற்றதையும் கல்வெட்டாய் நின்று காட்டத்தான் செய்கிறது. இடைவெளிகள் இல்லாமல் வரலாறு இல்லை. ஆனால், அதனாலேயே, வரலாறு இடைவெளிகளால் ஆனதுதான் என்றும் நினைத்துவிடக் கூடாது.  

கார்த்திகைச் செல்வி கற்பகவல்லி

சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1006) பொறிக்கப்பட்டது கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லியின் கல்வெட்டு.

தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி குறித்தும் அவரளித்த அளப்பரிய கொடைகள் குறித்துமான மேலும் விரிவான தகவல்களை வழங்கும் டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘கார்த்திகைச் செல்வி கற்பகவல்லி’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-

கோலாட்டம்

அன்புள்ள வாருணி, நீயும் நானுமாய்க் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள
தாராசுரத்திற்குச் சென்ற பயணங்கள் உனக்கு நினைவிருக்கலாம். அங்கு
இரண்டாம் ராஜராஜ சோழரால் எடுப்பிக்கப்பெற்ற ராஜராஜ ஈசுவரம்
சிற்பக்களஞ்சியமாக விளங்குவதைப் போகும் வழியெல்லாம் பேசிச் செல்வோம்.
பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் விளங்கிய பண்பாட்டுக்
கூறுகளின் படப்பிடிப்புகளாகப் பல சிற்பங்களை அங்குக் காணமுடிவதை
உன்னிடம் பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் சில
சிற்பங்களைப் பார்ப்பதும் அவை பற்றிக் கலந்துரையாடுவதுமாகவே நம்
பயணங்கள் நிறைந்திருக்கின்றன. நீ பலமுறை பார்த்துப் பல கேள்விகளுடன்
என்னை நோக்கிய அந்தச் சிறப்பான சிற்பம் இன்றும் என் கண்முன் நிற்கிறது.
அந்தச் சிற்பத்தையும் அது தொடர்பான உன் கேள்விகளுக்கான விடைகளையும்
இம் மடல் வழிப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

மூன்று பெண்கள் இணைந்து நிகழ்த்துமாறு அமைந்த அந்தக் கோலாட்டச்
சிற்பம் தனித்துக் குறிப்பிடத்தக்கதுதான். தமிழ்நாட்டிலுள்ள பழங்கோயில்களில்
12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டமைந்த சிற்பக் காட்சிகளில் கோலாட்டத்தைக்
காணக்கூடவில்லை. ஆடற்சிற்பங்களின் காட்சியகமாக விளங்கும் துக்காச்சி
விக்கிரமசோழீசுவரத்தில்கூடக் கோலட்டச் சிற்பத்தை நாம் பார்த்ததில்லை. நாம்
அறிந்தவரையில், தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் முதல் கோலாட்டச் சிற்பமாகத்
தாராசுரம் காட்சியே முன் நிற்கிறது.

தாராசுரத்துக் கோலாட்டம்

தாராசுரம்

துணைத்தளக் கண்டசிற்பமாக அமைந்துள்ள இக்கோலாட்டக் காட்சியில்
மூன்று பெண்கள் இரண்டு கைகளிலும் கோல் கொண்டு ஆடுவதைக்
காணமுடிகிறது. பெருங்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், தோள், கை
வளைகள், சுவர்ணவைகாக்ஷம், இடைவிரிப்புடனான சிற்றாடை, இடைக்கட்டு
என ஒப்பனை நிறைத்து, கொண்டையை மீறிய சடைக்கற்றைகள் தோள்களில்
நெகிழ ஆடும் இம்மூவரில் முதலிருவர் நேர்ப்பார்வையில் ஆட, மூன்றாமவர்
ஒருக்கணிப்பிலும் சுழற்சியிலுமாய்க் கோலடிக்கிறார்.

இலேசான வலஒருக்கணிப்பில் இடப்பாதத்தை உத்கட்டிதத்திலும்
வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி மண்டலநிலையில் காட்சிதரும்
வலப்பெண்ணின் வலக்கை, கோலுடன் தலைக்குமேல் உயர்ந்துள்ளது. இடக்கைக்
கோல் தொடையருகே நீண்டுள்ளது. அவரைப் போலவே லேசான
வலஒருக்கணிப்பிலுள்ள நடுப்பெண் இருபாதங்களையும் உத்கட்டிதமாக்கி
வலக்கையை உயர்த்தி அதிலுள்ள கோலால் முதல் பெண்ணின் வலக்கைக்
கோலைத் தட்டுகிறார். இடமாய் ஒருக்கணித்து இளநடைபயில்வது போல்
திரும்பியுள்ள மூன்றாம் பெண்ணின் வலக்கைக் கோல் நடுமங்கையின் இடக்கைக்
கோலில் மோத, உடலின் சுழற்சியில் ஆட்ட விரைவைக் காட்டும் அவரது
இடக்கைக் கோல் இடுப்பருகே நீண்டுள்ளது. மூவரில் நடுப்பெண்ணின் இரு கைக்கோல்களும் பிற இருவர் கோல்களுடன் இணைந்து ஒலியெழுப்ப முதல்வர்,
மூன்றாமவர் கைக் கோல்களில் ஓரிணை அடுத்த சுழலுக்காய்க் காத்துள்ளன.

கோலாட்டக் கோயில்கள்

முதல் கோலாட்டச் சிற்பமாகத் தாராசுரக் காட்சி கண்முன் கதை
விரித்தபோதும் தமிழ்நாட்டில் கோலாட்டத்தைப் பரவலாக்கிய பெருமை
விஜயநகர அரசர்களையே சாரும் வாருணி. ஹம்பிக் கோயில்களில்
காணப்படுமாறு போலவே தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றிலும்
கோலாட்டத்தில் தங்களுக்குள்ள ஆளுமையை விஜயநகரச் சிற்பிகள்
பதிவுசெய்துள்ளமையை உன்னிடம் கூறியிருக்கிறேன். ஊர்வலக் காட்சிகள்
போலவும் தனித்த கோலாட்ட நிகழ்வுகளாகவும் அவர்தம் செதுக்கல்களைச்
சிராப்பள்ளி திருநெடுங்களநாதர், திருக்கோடிக்கா கோலக்கநாதர், காஞ்சிபுரம்
கச்சபேசுவரர் – ஏகாம்பரேசுவரர் – வரதராஜப்பெருமாள், வேலூர்
ஜலகண்டேசுவரர், வல்லம் விசுவநாதேசுவரர், மேலைச்சேரி திரௌபதி அம்மன்
கோயில்களில் நான் பார்த்திருக்கிறேன். காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திகுன்றம்
சமணக்கோயிலிலும் உத்தரகோசமங்கை ஆடவல்லான் மண்டபத்திலும்
ஓவியக்காட்சியாகக் கோலாட்டம் காட்டப்பட்டுள்ளது.

கோலாட்டக் களங்கள்

கோயில் கட்டுமானத்தின் பல பகுதிகளில் இக்கோலாட்டக் காட்சிகளைக்
காணமுடிந்தாலும் வளாகச் சுற்றின் துணைத்தளக் கண்டத்திலேயே அவை
பரவலாக இடம்பெற்றுள்ளன. வேலூர்க் கோயிலில் தூண் கட்டிலுள்ள பட்டையில்
சிற்றுருவச் சிற்பத் தொகுதியாகக் காட்டப்பட்டுள்ள கோலாட்டம்,
மேலைச்சேரியில் உத்திரத்தில் காணப்படுகிறது. திருக்கோடிக்கா கோலாட்டம்
கோபுர உட்சுவரிலமைய, வல்லத்துக் கோலாட்டம் அங்குள்ள நீர்த்தொட்டிகளின்
பக்கப்பகுதிகளைச் சிறப்பிக்கிறது. ஓவியக் கோலாட்டமோ கூரைக்காட்சியாய்
மலர்ந்துள்ளது.

ஊர்வலக் கோலாட்டம்

திருநெடுங்களநாதர் கோலாட்டம்

திருநெடுங்களநாதர் ஊர்வலம்

நெடுங்களநாதர் வளாகத்துள்ள அம்மன்கோயில் பெருமண்டபத்
தென்முகத்தில் வெளித்தெரியும் துணைத்தளப் பகுதியில் மண்டப வாயிலின்
வலப்புறம் கோலாட்டமும் இடப்புறம் ஊர்வலமும் சிற்பத்தொடராகக்
காட்சியாகின்றன. ஊர்வலத்தில், முன்னால் ஒருவர் ஓங்கிய வாளுடன் நன்கு
அலங்கரித்த குதிரையை நடத்திச்செல்ல அதன் மேல் இவர்ந்துள்ளவர்
இடக்கையில் கடிவாளத்தைப் பிடித்தவாறு வலக்கையை நீட்டியுள்ளார்.
குதிரையின் பின்னால் குடை, கவரி, குடுவை, சந்தனக்கிண்ணம் ஆகியவற்றுடன்
பணியாட்கள் ஐவரும் வாள், கேடயம் கொண்டவர்களாய் வீரர்கள் மூவரும்
பின்தொடர்கின்றனர்.

இந்த ஊர்வலத்திற்கான முன்னோட்ட ஆடலாய் வாயிலின் வலப்புறம்
பத்துப் பெண்களின் கோலாட்டம். அனைவருமே அழகிய கொண்டையும்
பனையோலைக் குண்டலங்களும் கழுத்தாரமும் தோள், கை வளைகளும் நடுப்பட்டை கொண்ட இடையாடையும் பெற்றுள்ளனர். இடையாடையின் மேல்
அழகிய விரிப்பாய் அனைவருக்கும் தொடையளவிலான சுருக்கிக்கட்டிய
மடிப்பாடை. சிலர் நேர்ப்பார்வையிலும் சிலர் லேசான ஒருக்கணிப்பிலும்
உள்ளனர். ஆட்ட விரைவுக்கேற்பச் சிலர் தலையை வலம் அல்லது இடம் சாய்த்தும்
குனிந்தும் சற்றே நிமிர்ந்தும் அழகுடன் திகழ்கின்றனர். ஒரு கையின் கோல்,
உடலின் முன்புறம் நீண்டு வல அல்லது இட ஆடலரின் கோலுடன் மோத,
மற்றொரு கை தலையின் பின்புறம் கோலை நீட்டி, அடுத்துள்ள ஆடலரின் அதே
அமைப்பிலான கோலைத் தட்டுமாறு ஆடும் இவ்வழகியரின் பாதங்கள்
ஆட்டத்தின் போக்கிற்கேற்பப் பார்சுவம், சூசி, அக்ரதலசஞ்சாரம் எனப் பலவாறு
அமைய, சிலர் ஊர்த்வஜாநுவாய்க் காலை உயர்த்தியும் ஆடுகின்றனர் வாருணி.

திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள்

தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண், திருக்கோடிக்கா

திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள் ஒரு பாதத்தைப் பார்சுவமாக்கி, ஒரு
காலை ஊர்த்வஜாநுவாக உயர்த்திக் கோலாட்டம் அடிக்கின்றனர்.
பூட்டுக்குண்டலம், கழுத்தணிகள், தோள், கை வளைகள், நெற்றிச்சுட்டி,
நடுவிரிப்புடனான இடைப்பட்டாடை, சலங்கையுடன் இரு கைக் கோல்களும்
அடுத்துள்ளவர் கோல்களுடன் மோத, விரைந்தும் சுழன்றும் ஆடும்
அப்பெண்களின் திருமுகங்கள் பல கோணங்களில் திரும்ப, இதழ்களில் எழிலார்ந்த
புன்னகை. ஊர்வலத்தில் வாளும் கேடயமும் ஏந்திய வீரர்கள் பலராகவும் ஈட்டி,
குத்துவாள், கொடி, தண்டு, பானை கொண்டவர்கள் சிலராகவும் உள்ளனர். ஒரு
சிற்பம் தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண்ணைப் படம்பிடிக்க,
மற்றொன்றில் கோலாட்டக் காரிகைக்கு மத்தளத் தாளம் தரும் கலைஞர்.

வல்லத்துக் கோலாட்டம்

திருவல்லம் தொட்டி

வல்லம் கோலாட்டம் நீ அறிவாய். 1990லேயே அது குறித்த என் தினமணி
கதிர் கட்டுரையை உனக்குத் தந்திருக்கிறேன். அக்கோயிலிலுள்ள கலையெழில்
தொட்டிகள் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கோலாட்டம் மங்கல
நிகழ்வின்போது நிகழ்த்தப்பட்டதாகும். கருவுற்ற பெண் ஒருவர் அமர்ந்திருக்க,
அவருக்குப் பூச்சூட்டி ஒப்பனை செய்கிறார் தோழி. முன்னால் கோலாட்ட நிகழ்வு.
வளைந்தும் நிமிர்ந்தும் சாய்ந்தும் சரிந்தும் கோலாட்டமிடும் அழகியர்தம்
இடையாடைகள் அவர்தம் ஆட்டத்திற்கேற்ப விரிந்தும் சுருங்கியும் மடிப்புகளுடன்
விளங்க, இவ்வாட்டத்திற்கு மத்தளம் வழித் தாளம் தருகிறார் ஆடவக்கலைஞர்.
கோயில் மடைப்பள்ளியில் உள்ள மற்றொரு தொட்டியிலும் அதன் கீழ்ப்புறத்தே
கோலாட்டக் காட்சியும் அன்னங்களும் காட்டப்பட்டுள்ளதைப் பார்த்தது உனக்கு
நினைவிருக்கலாம்.

பிற கோலாட்டங்கள்

கச்சபேசுவரர் கோலாட்டம்

ஏகாம்பரநாதர் கோயில் சுற்றுமாளிகைத் துணைத்தளக் கோலாட்டப்
பெண்கள் அனைவரும் ஒருபாதத்தைப் பார்சுவத்திலிருத்தி, மற்றொரு காலின்
முழங்காலை இடுப்பளவு உயர்த்தியுள்ளனர். அனைவருமே பனையோலைக்
குண்டலங்கள், தோள், கை வளைகள், பட்டாடை, இடைவிரிப்புக்
கொண்டவர்களாய் ஒருவர் வலமும் ஒருவர் இடமுமாய் ஒருக்கணித்தாடுகின்றனர்.
கோலாட்டங்களின் தாளத்திற்கு மத்தள இசை துணைநிற்கிறது. வேலூர்க் கோயில் தூண் கட்டுப் பெண்கள் ஊர்த்வஜாநுவின் பல நிலைகளில் ஒரு கால் உயரக்
கோலாட்டமடிக்கின்றனர். அவர்தம் கைக்குச்சிகளின் நீளம் சற்றே
குறைந்துள்ளது. இக்கோயில் துணைத்தளக் கண்டக் கோலாட்டக் குழுவினர்
கோடிக்காக் குழுவினரை ஒத்துள்ளனர். இங்கும் மத்தள வாசிப்பைக்
காணமுடிகிறது. கச்சபேசுவரர், வரதராஜர், மேலைச்சேரி கோலாட்டக் காட்சிகளும்
இவற்றைப் பின்பற்றியுள்ளன.

ஓவியக் கோலாட்டம்

திருப்பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம்

பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம் நாம் பார்த்ததுதான். பிற இடக்
கோலாட்டக் காட்சிகளிலிருந்து இது மாறுபட்டுள்ளது. இப்பெண்கள் முந்தானை
விரிந்த புடவையும் மேற்சட்டையும் அணிந்தவர்களாய்க் கோலாட்டமாடுகின்றனர்.
அவர்தம் நீள்சடை ஆட்டவளைவுக்கேற்பச் சுழன்றும் நெகிழ்ந்தும் காட்சிதர,
நிமிர்ந்த தலையினராய் ஒருவரையொருவர் பார்த்தவாறு அவர்கள் கோலடிக்கும்
அழகு சிறப்பானது. இதே அமைப்பிலான கோலாட்டம் உத்தரகோசமங்கையிலும்
ஓவியமாக்கப்பட்டுள்ளது. பருத்திக்குன்றம் போலல்லாது இங்கு புடவையின்
தலைப்பு ஆடுவோரின் மார்புப்பகுதியை மறைத்துள்ளது.

மாமல்லபுரம் செங்கல்பட்டுச் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் நாம்
பார்த்த காட்சி உனக்கு நினைவிருக்கலாம். இருபதுக்கும் மேற்பட்ட ஆடவர்கள்
கோலாட்டமாடிக் கொண்டே ஊர்வலமாகச் சாலையில் சென்றனர். அவர்கள் சற்று
ஓய்வெடுத்தபோது நாம் அவர்களை நெருங்கி உரையாடினோம்.
கோலாட்டமாடிக்கொண்டே திருப்பதிக்கு நடைப்பயணம் செல்வதாக
அப்பெருமக்கள் தெரிவித்தது உனக்கு நினைவிருக்கலாம்.

பிற்சோழர் காலத்தே ஒற்றைக் காட்சியாய்க் கண்காட்டும் கோலாட்டம்
விஜயநகர வேந்தர்களின் தழுவல் பெற்ற தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில்
தொடராகவும் தனித்தும் காட்டப்பட்டிருப்பதுடன் ஊர்வலம், தேரோட்டம்
ஆகியவற்றின் சிறப்பு நிகழ்வாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளமை இப்போது
உனக்குத் தெளிவாகியிருக்கும். இன்றைக்குத் தமிழகத்தில் ஆண், பெண்
இருவருக்குமான பொதுவான ஆடல்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோலாட்டம்
பிற்சோழர், விஜயநகரத்தார் காலத்தில் பெண்களால் மட்டுமே இம்மண்ணில்
நிகழ்த்தப்பட்டது போல் இதுவரை கிடைத்துள்ள சிற்பக்காட்சிகள்
கண்காட்டுகின்றன. உன்னுடைய ஆய்வுப் பயணங்களில் வேறெங்கேனும்
கோலாட்டக் காட்சிகள் கண்டிருப்பின் எனக்கு எழுது. கோலாட்டம் ஆய்வு
நிறைவுற அது உதவும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

தைப்பூசம்


டாக்டர் இரா. கலைக்கோவன்

அண்மைக் காலத்தே அரசு விடுமுறைநாளாக அறிவிக்கப் பெற்ற தைப்பூசத் திருவிழா தேவாரம் பாடிய மூவருள் அப்பர், சம்பந்தர் பதிகங்களில் சிறக்கக் குறிக்கப்பட்டுள்ளது. பொதுக் காலம் 6ஆம் நூற்றாண்டிலேயே இவ்விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை அவர்தம் பாடல்கள் சுட்டுகின்றன. ‘பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த’ என்று போற்றுமளவு பெருமையுடன் நிகழ்ந்த இத்தைப்பூசவிழாவை மேலும் பெருமைப்படுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழராட்சியில் திருக்கூத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.

வீரபாண்டியன் தலைகொண்ட பரகேசரிவர்மரான சோழஅரசர் ஆதித்தகரிகாலரின் 4ஆம் ஆட்சியாண்டின்போது திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயில் வளாகத்திருந்த நாடகசாலையில், அவ்வூரை நிருவகித்த நகரத்தார், அவ்வூரை உள்ளடக்கியிருந்த திரைமூர்நாட்டின் ஆட்சிக்குழுவினரான நாட்டார், கோயில் தேவகன்மிகள் ஆகியோர் கோயில் செயல்அலுவலரான பராந்தக மூவேந்தவேளார் தலைமையில் கூடி, தைப்பூசம், வைகாசித் திருவாதிரை விழாக்களின் போது கோயிலில் கூத்து நிகழ்த்த முடிவுசெய்தனர்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் சோழர் காலத்தே பலவகைக் கூத்துகள் ஆடப்பட்டன. சாந்திக்கூத்து, சாக்கைக்கூத்து, தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, விநோதக்கூத்து எனும் அவற்றுள், ஆரியக்கூத்தைத் தேர்ந்த கோயிலார் அக்கூத்தில் வல்லாராகத் திகழ்ந்த கீர்த்தி மறைக்காடனான திருவெள்ளறைச் சாக்கைக்குக் கூத்தாடும் வாய்ப்பை அளித்தனர்.

தைப்பூசத்தன்று ஒரு கூத்தும் இறைவன் தீர்த்தமாடிய மறுநாள் தொட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து மூன்று கூத்துகளும் அது போலவே திருவாதிரைக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து மூன்று கூத்துகள் ஆடவும் முடிவானது. ஒவ்வொரு கூத்தும் ஓர் அங்கமென ஏழங்கம் ஆரியக்கூத்தாட இசைந்த மறைக்காடனுக்குப் பிற செலவுகளுக்காகக் கோயில் பண்டாரத்திலிருந்து 14 கலம் நெல் அளிக்கப்பட்டதுடன், கோயிலுக்குச் சொந்தமான விளங்குடி நிலத்தில் ஒரு வேலி நிலம் வாழ்வூதியமாகத் தரப்பட்டது. 

திருவிடைமருதூரில் நிகழ்ந்தாற் போலவே திருநள்ளாறு, திருவாவடுதுறை, வயலகம் கோயில்களிலும் ஆரியக்கூத்து ஆடப்பட்டது. திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயிலில் புரட்டாசித் திருவிழாவின்போது ஏழுநாட்கள் இக்கூத்து நிகழ்ந்தது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர், வயலகம் விசுவநாதசாமி கோயில்களில் ஆரியக்கூத்து நிகழ்த்தப்பட்டதையும் அதை ஆடும் உரிமை பெற்றிருந்த கூத்தர்களின் பெயர்களையும் அறிய முடிகிறதே தவிர, அக்கூத்து எப்போது நிகழ்த்தப்பட்டது என்பதற்குத் தகவல் இல்லை. இக்கட்டுரையாசிரியர் அறிந்தவரையில் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டாடப்பட்ட தைப்பூசத்திற்குத் தமிழ்நாட்டுத் திருக்கோயில் ஒன்றில் நான்குநாள் கூத்து நிகழ்த்தப்பட்டதைத் தெரிவிக்கும் கல்வெட்டுத் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மட்டுமே பதிவாகியுள்ளது.

தைப்பூசம் தமிழ்நாட்டின் பல கோயில்களில் பெருவிழாவாக நிகழ்ந்தமை சுட்டும் கல்வெட்டுகள் பரவலாகக் கிடைத்தபோதும் நித்தவிநோதரான முதலாம் ராஜராஜரின் பெரியவேளத்தில் பணியிலிருந்த (பெண்டாட்டி) நக்கன் கற்பகவல்லி, 1500 ஆண்டுகள் பழைமையானதான திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில் (பாச்சில் ஆச்சிராமம்) வளாகத்தில் பொ. கா. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பதிவுசெய்திருக்கும் கல்வெட்டு குறிப்பிடத்தக்கதாய் ஒளிர்கிறது. அக்கோயில் இறைவனின் மகளாகத் தம்மைக் கருதி, ‘தேவனார் மகள்’ என்று தம்மைப் பெருமையுடன் விளித்துக் கொண்ட கற்பகவல்லி, அவ்விறைவனிடம் தம்மைத் தலைப்படுத்திக் கொண்டமை சுட்டவே, அக்கால வழக்காறு ஒட்டி ‘நக்கன்’ என்னும் முன்னொட்டையும் தம் பெயரின் முன் கொண்டிருந்தார்.

தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி, மாற்றுரைவரதீசுவரரிடம் மாற்றுக்குறையா அன்பு கொண்டிருந்தமையால், வரதீசுவரர் வளாக வழிபாட்டையும் படையல்களையும் செழிப்பாக்க 201 கழஞ்சுப் பொன்னும் 2மா முக்காணி நிலமும் கொடையளித்து 5 அறக்கட்டளைகளை அங்கு நிறுவினார். அவற்றுள் ஒன்றே தைப்பூசத் திருவிழா. அத்திருநாளன்று இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்து அவருக்குப் பெருந்திருஅமுது படையலிடத் தேவையான ஒரு கலம் தூணிப்பதக்குப் போனகஅரிசி, நெய், பருப்பு, பெரும்பயறு, தயிர், மிளகு, உப்பு, பாக்கு, கறியமுது ஆகியவற்றுக்குக் கற்பகவல்லி கொடையிலிருந்து வரவான  நெல் ஒதுக்கப்பட்டது.

போனகக்குருத்திடுவார், போனகம் இடுவார், நெல்குற்றிய பெண், விறகிட்டவர் ஆகியோருக்கான ஊதியம், அந்நாளில் இறைவன் உச்சம்போது உணவு கொள்கையில் 50 சிவயோகிகளும் 50 தவசிகளும் கோயிலில் உணவருந்த ஓராளுக்கு நாழி உரி என 100 பேருக்கு 1 கலம் தூணிப்பதக்கு 6 நாழி அரிசி, இவ்விருந்தைச் சமைத்தவர், சமைக்க விறகிட்டவர், நெல்குற்றியவர், உண்ணவந்தாருக்கு இலையிட்டவர், உரிய கலங்களிட்ட குயவர் ஆகியோருக்கும் கொள்ளுக்குமான நெல், விழாவை முன்னிருத்தித் தேவர்கன்மிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு கலம் நெல் ஆகிய அனைத்துச் செலவினங்களுக்குமாய் ஒதுக்கப்பட்ட நெல்லுமாகத் தைப்பூசத் திருவிழாவுக்காக ஆண்டுதோறும் 8 கலம் 2 தூணி 4 நாழி நெல் கணக்கிடப்பட்டுக் கொள்ளப்பட்டது.

விழாவில் இறைவழிபாடு, படையல் என்பதோடு நின்றுவிடாது, தவசிகளையும் யோகிகளையும் நினைந்தூட்டிய சிறப்பும் விருந்துக்காய் உழைத்தவர்களை உவப்போடு சிறப்பித்த பாங்கும் கற்பகவல்லியின் அன்புள்ளம் காட்டும் காலப் பதிவுகள். தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைக்கும் விழாக்காலக் கல்வெட்டுகளை ஒருங்கிணைத்துப் பார்த்தால் அக்காலச் சமூகப்போக்கும் சமயஞ்சார் சிந்தனைகளின் மக்கள் நோக்கும் வெளிப்படும் வாய்ப்புண்டு. 

 

கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லி

மு. நளினி, இரா. கலைக்கோவன்

திருப்பாச்சில் ஆச்சிராமம் என்று கல்வெட்டுகள் அழைக்கும் திருவாசி, சிராப்பள்ளி முசிறிச் சாலையில் 12 கி. மீ. தொலைவிலுள்ளது. சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பெற்ற இவ்வூர்க் கோயில் இறைவன் இப்போது மாற்றுரைவரதீசுவரராக அறியப்படுகிறார். பல காலக்கட்டங்களில் இங்கு ஆய்வுமேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தார் 17 புதிய கல்வெட்டுகளையும் பல துண்டுக் கல்வெட்டுகளையும் சில சதாசேவைக் கல்வெட்டுகளையும் கண்டறிந்துள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1006) பொறிக்கப்பட்டுள்ள கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லியின் கல்வெட்டு.

யார் இந்தக் கற்பகவல்லி?

வளாகத்தின் இரண்டாம் கோபுர மேற்குமுக வடசுவரில் தொடங்கி மேற்கு, தெற்குச்சுவர்களில் பரவி, தெற்குக் குமுதத்தில் தொடரும் இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி சுற்றுத்தரை உயர்வால் பார்வைக்கு மறைந்துள்ளது. கல்வெட்டின் பல பகுதிகளைப் படித்தறிய அடர்த்தியான சுண்ணாம்புப்பூச்சு இடையூறாக இருந்தமையால் முதலாய்வில் படிக்கப்பெற்ற சில பகுதிகள், தொடர்ச்சியற்ற நிலையிலும், அவற்றின் சிறப்புக் கருதி 1990இல் வரலாற்றாய்வு மையத்தின் பொறுப்பில் வெளிவந்த ஆவணம் முதல் இதழில் பதிவாயின.

காலப்போக்கில் சுண்ணாம்புப்பூச்சுகள் அகற்றப்பட்ட நிலையில், 2020 மார்ச்சுத் திங்கள் நிகழ்ந்த களஆய்வில் கல்வெட்டின் விடுபட்ட பகுதிகள் படித்தறியப்பட்டன. அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதிகளில் பல பிரிவுகளாக இக்கல்வெட்டுப் பதிவாகியிருந்தமையாலும் இருவேறு காலக்கட்டங்களில் அவை படிக்கப்பட்டமையாலும் சில பிரிவுப் பதிவுகளில் இடையிடையே எழுத்துக்கள் சிதைந்தும் விடுபட்டும் போயிருந்தமையாலும்  தொடர்புடைய பகுதிகளை இணைத்துப் பொருள் காண்பதில் சிக்கல்கள் இருந்தன. மையத்தின் மதிப்புறு இணைஇயக்குநர் பேராசிரியர் மு. நளினி அரிதின் முயன்று வரலாற்று நீரோட்டத்தில் கரைந்திருந்த கற்பகவல்லியைக் கரைசேர்த்திருக்கிறார். யார் இந்தக் கற்பகவல்லி?

தேவனார்மகள்

1500 ஆண்டுகள் பழைமையானதான மாற்றுரைவரதீசுவரர் கோயில் வளாகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காலப் பழைமையது முதலாம் பராந்தகரின் பொ. கா. 919க்குரிய பதிவாகும். இங்குக் காணக்கிடைக்கும் கல்வெட்டுகளில் மிக நீளமானதும் (293 வரிகள்) மிக முதன்மையானதுமான முதலாம் ராஜராஜர் காலப் பதிவே கற்பகவல்லியைக் காட்சிக்குத் தருகிறது. நித்தவிநோதரான ராஜராஜரின் பெரியவேளத்தில் பணியிலிருந்த (பெண்டாட்டி) நக்கன் கற்பகவல்லி, பாச்சில் ஆச்சிராமத்து இறைவனின் மகளாகத் தம்மைக் கருதி, ‘தேவனார் மகள்’ என்று தம்மை விளித்துக் கொண்டவர். அக்காலத்தே இறைவனிடம் தங்களைத் தலைப்படுத்திக் கொண்ட அடியவர்கள், தங்கள் பெயருடன் இணைத்துக்கொண்ட சிவபெருமானின் திருப்பெயரே கற்பகவல்லியின் பெயருடனுள்ள நக்கன் என்னும் முன்னொட்டு. இப்பழக்கம், பொ. கா. 5ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ்நாட்டில் வழக்கிலிருந்தமை சித்தன்னவாசல் வட்டெழுத்துக் கல்வெட்டால் உறுதிப்படும்.

கற்பகவல்லியின் கல்வெட்டு

தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி, மாற்றுரைவரதீசுவரரிடம் மாற்றுக்குறையா அன்பு கொண்டிருந்தமை வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பதிவால் தெரியவருகிறது. பொ. கா. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவரளித்த 201 கழஞ்சுப் பொன்னும் 2மா முக்காணி நிலமும் வரதீசுவரர் வளாக வழிபாட்டையும் படையல்களையும் செழிப்பாக்கியதுடன், அத்தளியில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள், ஆடலரசியர், கோயில் அலுவலர்கள் எனப் பலரையும் அப்பணியில் பங்கேற்கச் செய்து பெருமைப்படுத்தியது. சுருங்கியும் விரிந்தும் சுவர்களில் பரவியுள்ள கற்பகவல்லியின் கல்வெட்டு, பாச்சில் ஆச்சிராமத்துப் பழங்கோயிலின் பதினோராம் நூற்றாண்டு வாழ்க்கையைப் படம்பிடிக்கிறது.

கற்பகவல்லியின் பொன், நிலக்கொடை

அந்நாளில் வழக்கிலிருந்த பாச்சில் கல்லால் நிறுக்கப்பெற்ற 201 கழஞ்சுப் பொன்னைக் கோயில் பண்டாரத்திற்களித்த இவ்வம்மை, 2மா முக்காணி நிலமும் கொடையாகத் தந்தார். இரண்டு துண்டுகளாக அமைந்த இந்நிலத்தில், 2மா நிலம் விளைச்சலுக்காகப் பண்படுத்தப்பட்ட தரிசாகும். ‘தென்னூர் 2 மா’ என்றழைக்கப்பெற்ற இந்நிலத்துண்டிற்கு எல்லைகளாக இறைவனின் அப்பச்செய் (அப்பப் படையலுக்காக அளிக்கப்பெற்ற நிலத்துண்டு), திணை எனும் பொறுப்பிலிருந்த ஊர் அலுவலரின் வயக்கல், ஊருக்கான வழி, தென்னந்தோப்பு ஆகியன அமைந்தன. கீழை முக்காணி எனச் சுட்டப்பெற்ற மற்றொரு நிலத்துண்டுக்கான எல்லைகளாகக் கணக்கர் பங்கு, தேவரடியாரான நக்கன் சோழங்கன் நிலம், இறைவன் நிலம், ஊர்வாய்க்கால் ஆகியன அமைந்தன. இவ்விரு நிலத்துண்டுகளின் விளைவாகக் கோயிலுக்கு ஆண்டுதோறும் 16 கலம் நெல் வரவானது.

பொன்னைப் பகிர்ந்து கொண்டவர்கள்

பாச்சிலிலுள்ள திருவாச்சிராமம், திருஅமலீசுவரம், மேற்றளிக் கோயில்களைச் சேர்ந்த தலைக்கோலியர், உவச்சர், கந்தருவர், மெய்மட்டி ஆகிய கோயில் கலைஞர்களும் தேவரடியார், பரிசாரகர், வண்ணக்கர், குயவர், தச்சர், சோதிடர், விளக்கேற்றுபவர் முதலிய பணியாளர்களும் தங்கள் பணிக்கான வருவாய்ப் பங்கை (காணி) முன்னிருத்தி (தலைச்சமாடாக), அப்பங்கின் தகுதிக்கேற்ப, கற்பகவல்லி அளித்த 201 கழஞ்சுப் பொன்னைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு, ஆண்டுதோறும் அதற்கான வட்டியாக ஒரு கழஞ்சுப் பொன்னுக்குக் கோயில் பண்டாரத்திருந்த ராஜாச்ரையன் எனும் மரக்காலால் ஒரு கலம் நெல் அளந்தனர். அதன் வழி ஆச்சிராமத்துக் கோயிலுக்கு 201 கலம் நெல் கிடைத்தது. கற்பகவல்லி அளித்த நிலத்திலிருந்து கிடைத்த 16 கலம் நெல்லுடன் இது சேர ஆண்டுதோறும் கோயிலுக்கு 217 கலம் நெல் வரவானது. அது கற்பகவல்லி இக்கோயிலில் அமைத்த ஐந்து அறக்கட்டளைகளுக்கும் முதலானது.

ஐந்து அறக்கட்டளைகள்

1. நாளும் சிறுகாலையில் முதன்மை இறைக்குப் போனகஅமுது.

2. நாளும் சிறுகாலையில் உலாத்திருமேனிக்குப் போனகஅமுது.

3. கார்த்திகை விழா

4. தைப்பூசத் திருநாள்

5. புதுக்குப்பணி

போனகஅமுது

கற்பகவல்லியின் முதலிரு அறக்கட்டளைகள் கோயில் முதன்மை, உலா இறைத்திருமேனி களுக்கு நாளும் படைக்கப்பெறும் சிறுகாலைப் போனகஅமுதாக அமைந்தன. உடையார் எனக் கல்வெட்டில் சுட்டப்படும் முதன்மை இறைத்திருமேனிக்கு நாளும் 4 நாழி போனகஅரிசி, 2 நாழி பயறு, நெய், சர்க்கரை கொண்டு போனகஅமுதும் உடன் பொரிக்கறியும் படையலிடப்பட்டன. அதற்கான போனகப்பானை, பொரிக்கறிச்சட்டி இட்ட குயவருக்கும் சமைப்பதற்கு விறகிட்டவருக்கும்  நெல்குற்றிய பெண்ணுக்கும் ஊதியமாக உரிய நெல் வழங்கப்பட்டது. பரமவிடங்கதேவர் எனும் பெயரிலிருந்த உலாவரும் திருமேனிக்கும் அது போலவே சிறுகாலைப்போதில் போனகம் வழங்கப்பட்டது. அதற்கான போனகஅரிசி, பருப்பு, நெய், தயிர், பாக்கு உள்ளிட்ட பொருள்களுக்கும் அமுதுக்கான கலங்கள் அளித்த குயவருக்குமாக உரிய நெல் தரப்பட்டது. இவ்விரண்டிற்குமாக ஓராண்டிற்கு 150 கலம், 2 தூணி, குறுணி, 2 நாழி நெல் செலவானது.

கார்த்திகை விழா

கற்பகவல்லி கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் பிறந்தவர் என்பதால், அந்நாளில் திருப்பாச்சில் ஆச்சிராமத்து இறைவனுக்கு நெய், பால், தயிர் உள்ளிட்ட ஆனைந்து, தேன் ஆகியன கொண்டு 108 குடங்களால் திருமுழுக்காட்ட அமைத்த அறக்கட்டளை திருப்பிண்டி, திருச்சுண்ணம், நூல்சூழ நிறுவப்பட்ட குடம், ஜலபவித்ரத்துப் புடவை, நமனதிரவியம், குடத்தின் கீழிடும் பொருள்கள் எனப் பலவும் கொண்டு உரிய சடங்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. முழுக்காட்டுக்குப் பிறகு பெரும்பயறுடன் கறியமுதும் நெல்லுச்சோறும் தயிர், நெய், பாக்கு உள்ளிட்டனவும் இறைமுன் படைக்க ஒரு பொன் ஒதுக்கப்பட்டது.

முழுக்காட்டு, உணவு ஆகியவற்றிற்கான கலங்களை அளித்த குயவர், போனகக்குருத்திடுவார், நெல்குற்றிய பெண், குடத்தை நிறுவியவர், விறகிட்டார், கோமயம் கொணர்ந்தார் ஆகிய அனை வருக்கும் ஊதியமாக நெல் தரப்பட்டது. முதன்மை இறைக்கு முழுக்காட்டு, படையல் முடிந்ததும் உலாத்திருமேனி திருவோலக்கம் கொண்டு அப்பஅமுது கொள்ள, அதற்குரிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களுக்கும் பாக்கு, வெற்றிலை வழங்கவும் நெல்குற்றும் பெண், மாவிடிப்பவர், அப்பம் சுட்டவர் அதற்கான விறகிட்டவர், படையலிடக் கலங்கள் தந்த குயவர் முதலியோருக்கான ஊதியமாகவும் உரிய நெல் ஒதுக்கப்பட்டது.

தைப்பூச விழா

தைப்பூசத்தன்று இறைவன் நீராடிப் பெருந்திருஅமுது கொள்ளத் தேவையான ஒரு கலம் தூணிப்பதக்குப் போனகஅரிசி, நெய், பருப்பு, பெரும்பயறு, தயிர், மிளகு, உப்பு, பாக்கு, கறியமுது ஆகியவற்றுக்கு நெல் ஒதுக்கப்பட்டது. போனகக்குருத்திடுவார், போனகம் இடுவார், நெல்குற்றிய பெண், விறகிட்டவர் ஆகியோருக்கும் ஊதியமாக நெல் வழங்கப்பட்டது. அந்நாளில் இறைவன் உச்சம்போது உணவு கொள்கையில் 50 சிவயோகிகளும் 50 தவசிகளும் கோயிலில் உணவருந்த ஓராளுக்கு நாழி உரி என 100 பேருக்கு 1 கலம் தூணிப்பதக்கு 6 நாழி அரிசி ஒதுக்கப்பட்டது. இவ்வுணவைச் சமைத்தவர், சமைக்க விறகிட்டவர், நெல்குற்றியவர், உண்ணவந்தாருக்கு இலையிட்டவர், உரிய கலங்களிட்ட குயவர் ஆகியோருக்கும் கொள்ளுக்குமென  நெல் தரப்பட்டதுடன், விழாவை முன்னிருத்தித் தேவர்கன்மிகளுக்கும் ஒரு கலம் நெல் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் சேரத் தைப்பூசத் திருவிழாவுக்காக ஆண்டுதோறும் 8 கலம் 2 தூணி 4 நாழி நெல் செலவானது.

புதுக்குப்பணி

இக்கோயிலிலுள்ள பெரிய திருமண்டபத்தைப் பழுது நீக்கிப் பராமரிக்கவும் உரிய வகையில் புதுக்கவும் ஆண்டுதோறும் 10 கலம் நெல் பயன்படுத்திக்கொள்ள கற்பகவல்லியின் ஐந்தாம் அறக்கட்டளை துணைநின்றது.

கலைஞர்களும் பணியாளர்களும்

நக்கன் கற்பகவல்லியின் கொடைக் கல்வெட்டு முதல் ராஜராஜர் காலத்தில் பாச்சில் திருஆச்சிராமம், அமலீசுவரம், மேற்றளி ஆகிய மூன்று கோயில்களில் பணியிலிருந்த கலைஞர்களையும் தொழிலர்களையும் பெயர் சுட்டி அறிமுகப்படுத்துகிறது.

திருஆச்சிராமம்

திருஆச்சிராமத்தில் பொ. கா. 1006ல் பணியிலிருந்தவர்களுள் 7 கலைஞர்களும் 15 தொழிலர்களும் இக்கல்வெட்டால் அறிமுகமாகின்றனர். நக்கன் அழகியான நக்கன் சோழத்தலைக்கோலி, நக்கன் மோடியான மும்முடிசோழத் தலைக்கோலி, நக்கன் கொற்றமான வீதிவிடங்கத் தலைக்கோலி ஆகிய மூவரும் இக்கோயிலில் ஆடலரசிகளாகத் திகழ்ந்தனர். ஆடல் வல்ல பெண்டிருக்கே அக்காலத்தில் தலைக்கோலிப் பட்டம் வழங்கப்பட்டமையால் இம்மூவரும் ஆடற்கலையில் தேர்ந்திருந்தமை தெளிவாகும். அவர்களுள் மும்முடிசோழமும் வீதிவிடங்கமும் கற்பகவல்லி அளித்த பொன்னில் தலைக்கு 10 கழஞ்சு கொண்டு 10 கலம் நெல்லளக்க, அழகி 5 கழஞ்சுப் பொன்னுக்கு 5 கலம் நெல்லளித்தார். 

நக்கன் அகம், நக்கன் எதிரி, நக்கன் ஆவடுதுறை, நக்கன் மோடி ஆகிய நால்வரும் தேவரடியார்களாகப் பணியிலிருந்தனர். ஆவடுதுறை 5, எதிரி 15, அகம் 7, மோடி இரண்டரை எனக் கழஞ்சுகள் கொண்டு, அதற்கான வட்டியாக நெல்லளக்க, கோயில் உச்சவர் அணுக்கன் பொன்னன் பதின்மூன்றரைக் கழஞ்சு கொண்டு பதின்மூன்றரைக் கலம் நெல்லளந்தார். இங்குக் காளமிசைத்த ஆச்சன் இளம்பெருமானும் மற்றொரு காளக்கலைஞரான கந்தருவர் பொன்னையன் தில்லையடிகளும் தலைக்கு 10 கழஞ்சு கொண்டு 10 கலம் நெல்லளக்க, மெய்மட்டியாக விளங்கிய மற்றொரு கந்தருவரான ஐநூற்றுவன் விழுமியான் 2 கழஞ்சுப் பொன் கொண்டு 2 கலம் நெல் தந்தார்.

கலம் வனைந்து வழங்கிய டக்கன் (இப்பெயர் முழுமையாகக் கிடைக்கவில்லை), தெய்யன், கடம்பன் ஆகிய மூவரும் தலைக்கு 1 கழஞ்சு கொண்டு 3 கலம் நெல்லளக்க, வண்ணக்குப் பணியிலிருந்த இளங்குவனன் தில்லையழகன் 15 கழஞ்சுப் பொன் பெற்று 15 கலம் நெல்லளித்தார். தச்சுப்பணியாளர் காரி இரவி 3 கழஞ்சுப் பொன்னுக்கு 3 கலம் நெல் தர, இங்குப் பரிசாரகர்களாக விளங்கிய இரு குடும்பங்களைச் சேர்ந்த சிங்கன் பட்டாலகன், சிங்கன் சோழன், சிங்கன் பதியன், நெதிரன் ஐயன், நெதிரன் பரசுராமன், பொன்னன் நெதிரன் ஆகிய அறுவரும் 17 கழஞ்சுப் பொன்னைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு நெல்லளந்தனர்.

பாச்சில் அமலீசுவரம்

கோபுரப்பட்டியிலுள்ள பாச்சில் அமலீசுவரம் கல்வெட்டுகளில் அமனீசுவரமாகவும் அவனீசுவரமாகவும் அறியப்படும் அழகிய சிவத்தளியாகும். பொ. கா. 981க்குச் சற்று முன் கட்டமைக்கப்பட்ட இம்முற்சோழர் கோயில் இன்றளவும் சிறப்பான நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது (இக்கோயில் வரலாறு அறிய இக்கட்டுரையாசிரியர்களின் பாச்சில் கோயில்கள் நூல் உதவும். நூல் பெற: 9345111790). நக்கன் கற்பகவல்லியின் கொடைப்பொன்னில் 50 கழஞ்சுப் பொன்னை இத்தளிக் கலைஞர்கள் இருவரும் தொழிலர் இருவரும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு ஆண்டு வட்டியாக ஆச்சிராமத்தார் அளித்தவாறே 1 கழஞ்சுப் பொன்னுக்கு 1 கலம் நெல் ஆச்சிராமத்துக் கோயிலுக்கு அளந்தனர். அமலீசுவரத்து ஆடலரசியான திருவையாறு தலைக்கோலியும் அதே கோயில் கந்தருவரான கணவதி கங்காதிரனும் தலைக்கு 10 கழஞ்சுப் பொன் கொள்ள, அமலீசுவரத்தில் ஆச்சாரியம், பரிசாரகம் இரண்டும் பார்த்த கௌசியன் ஆச்சன் பொன்னன் 25 கழஞ்சுகள் பெற்று 25 கலமளிக்க, விளக்கேற்றும் பொறுப்பேற்றிருந்த குமரன் அம்பலவன் 5 கழஞ்சுப் பொன் பெற்று 5 கலம் நெல்லளந்தார்.

மேற்றளி

முற்சோழர் காலத்தில் பாச்சிலில் எழுச்சியுடன் திகழ்ந்த மூன்று தளிகளுள் ஆச்சிராமம், அமலீசுவரம் போலவே மேற்றளியும் அடங்கும். பல்லவர் காலத் தளியான இக்கோயில் தொல்லியல் துறையால் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தன் பழைமையைப் பெரிதும் இழந்து கல்வெட்டுகளுடன் காட்சிதருகிறது (இக்கோயில் வரலாறு அறிய இக்கட்டுரையாசிரியர்களின் பாச்சில் கோயில்கள் நூல் உதவும். நூல் பெற: 9345111790). கற்பகவல்லி அளித்த பொற்கழஞ்சுகளைக் கொண்டவர்களுள் இருவர் பாச்சிலைச் சேர்ந்த இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய பெருமையுடையவர்கள். நக்கன் குராவியான திருவரங்கத் தலைக்கோலி மூன்று கோயில்களிலும் ஆடல்நிகழ்த்திய கலைஞர். இவ்வம்மை 20 கழஞ்சுப் பொன் கொண்டு வட்டியாக 20 கலம் நெல்லும் அவர் போலவே 3 கோயில்களுக்கும் சோதிடராக விளங்கிய சிச்சல் அரையன் 3 கழஞ்சுப் பொன்னுக்கு 3 கலம் நெல்லும் அளந்தனர்.

கற்பகவல்லியின் தனிச்சிறப்பு

சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் மகளிர் கொடைகளைச் சுட்டும் கல்வெட்டுகள் பலவாகப் படித்தறியப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பான்மையன அவ்வக்கோயில்களில் கலைஞர்களாகவோ, பணியாளர்களாகவோ இருந்தவர்தம் கொடைகளாகவே அமைந்துள்ளன. சில கொடைகள் அரசமரபுசார் பெண்களாலும் கோயில்களைக் கட்டியவர்களாலும் வழங்கப்பட்டவை. வேறு சிலவோ வேற்றூர் மகளிர் விழைந்து தந்தவை. தஞ்சாவூர் அரண்மனை வேளத்தில் பணியாற்றிய நக்கன் கற்பகவல்லி இந்த வட்டங்களைத் தாண்டியவராய்ப் பாச்சில் ஆச்சிராமத்து இறைவனிடம் பேரன்பு கொண்டிருந்தார். அதுவே இருவருக்கும் இடையில் தந்தை மகள் உறவைப் பின்ன, அதன் விளைவாகவே கற்பகவல்லியின் ஐந்து அறக்கட்டளை அமைப்பும் அதற்கான கொடையும் பிறந்தன. இந்தக் கொடையால் கற்பகவல்லியின் உள்ளம் மட்டுமன்று, ஆச்சிராமத்து வரலாறும் வெளிச்சப்படுவதுதான் மிகு சிறப்பு. மூன்று கோயில்களின் கலைஞர்கள், பணியாளர்கள் என ஒரு பட்டியலும் கோயில் வழிபாடு, படையல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தவர் பட்டியலும் கிடைப்பதுடன், கோயில்சார் சடங்குகளும் அவற்றுக்கமைந்த செலவினங்களும் அந்நாள் பொன், நெல் மதிப்பீடுகளும் என்று வரலாற்றை வளப்படுத்தும் தரவுகளும் பலவாய் இக்கல்வெட்டில் பொதிந்துள்ளன. சுருங்கச் சொல்லின் கார்த்திகையில் பிறந்த நக்கன் கற்பகவல்லியின் இந்தக் கொடைக் கல்வெட்டால் ஆச்சிராம வரலாற்றின் பொன்னான பக்கமொன்று பொதுவெளிக்கு வந்துள்ளது.