‘பல்லவ மன்னன் மகேந்திரர்: கலைஞர்களின் கலைஞர்’ என்ற தலைப்பிலான டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் பிப்ரவரி 19, 2023 அன்று வெளியானது. மகேந்திரர் பற்றிப் பலரும் அறியாத பல புதிய தகவல்களை இக்கட்டிரை வழங்குகிறது.
நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-
சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1006) பொறிக்கப்பட்டது கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லியின் கல்வெட்டு.
தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி குறித்தும் அவரளித்த அளப்பரிய கொடைகள் குறித்துமான மேலும் விரிவான தகவல்களை வழங்கும் டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘கார்த்திகைச் செல்வி கற்பகவல்லி’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.
நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-
திருச்சிராப்பள்ளி கரூர் சாலையில் உள்ள அல்லூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது முதலாம் பராந்தகச் சோழர் காலத்ததான பசுபதீசுவரர் கோயில்.
அக்கோயிலில், அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா், புதிய கல்வெட்டு ஒன்றையும் ஏற்கனவே படியெடுக்கப்பட்டப் பழைய கல்வெட்டுகளின் பிற பகுதிகளையும் கண்டறிந்தனர்.
கல்வெட்டு குறித்து டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-
அன்புள்ள வாருணி, நீயும் நானுமாய்க் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள தாராசுரத்திற்குச் சென்ற பயணங்கள் உனக்கு நினைவிருக்கலாம். அங்கு இரண்டாம் ராஜராஜ சோழரால் எடுப்பிக்கப்பெற்ற ராஜராஜ ஈசுவரம் சிற்பக்களஞ்சியமாக விளங்குவதைப் போகும் வழியெல்லாம் பேசிச் செல்வோம். பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் விளங்கிய பண்பாட்டுக் கூறுகளின் படப்பிடிப்புகளாகப் பல சிற்பங்களை அங்குக் காணமுடிவதை உன்னிடம் பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் சில சிற்பங்களைப் பார்ப்பதும் அவை பற்றிக் கலந்துரையாடுவதுமாகவே நம் பயணங்கள் நிறைந்திருக்கின்றன. நீ பலமுறை பார்த்துப் பல கேள்விகளுடன் என்னை நோக்கிய அந்தச் சிறப்பான சிற்பம் இன்றும் என் கண்முன் நிற்கிறது. அந்தச் சிற்பத்தையும் அது தொடர்பான உன் கேள்விகளுக்கான விடைகளையும் இம் மடல் வழிப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
மூன்று பெண்கள் இணைந்து நிகழ்த்துமாறு அமைந்த அந்தக் கோலாட்டச் சிற்பம் தனித்துக் குறிப்பிடத்தக்கதுதான். தமிழ்நாட்டிலுள்ள பழங்கோயில்களில் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டமைந்த சிற்பக் காட்சிகளில் கோலாட்டத்தைக் காணக்கூடவில்லை. ஆடற்சிற்பங்களின் காட்சியகமாக விளங்கும் துக்காச்சி விக்கிரமசோழீசுவரத்தில்கூடக் கோலட்டச் சிற்பத்தை நாம் பார்த்ததில்லை. நாம் அறிந்தவரையில், தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் முதல் கோலாட்டச் சிற்பமாகத் தாராசுரம் காட்சியே முன் நிற்கிறது.
தாராசுரத்துக் கோலாட்டம்
தாராசுரம்
துணைத்தளக் கண்டசிற்பமாக அமைந்துள்ள இக்கோலாட்டக் காட்சியில் மூன்று பெண்கள் இரண்டு கைகளிலும் கோல் கொண்டு ஆடுவதைக் காணமுடிகிறது. பெருங்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சுவர்ணவைகாக்ஷம், இடைவிரிப்புடனான சிற்றாடை, இடைக்கட்டு என ஒப்பனை நிறைத்து, கொண்டையை மீறிய சடைக்கற்றைகள் தோள்களில் நெகிழ ஆடும் இம்மூவரில் முதலிருவர் நேர்ப்பார்வையில் ஆட, மூன்றாமவர் ஒருக்கணிப்பிலும் சுழற்சியிலுமாய்க் கோலடிக்கிறார்.
இலேசான வலஒருக்கணிப்பில் இடப்பாதத்தை உத்கட்டிதத்திலும் வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி மண்டலநிலையில் காட்சிதரும் வலப்பெண்ணின் வலக்கை, கோலுடன் தலைக்குமேல் உயர்ந்துள்ளது. இடக்கைக் கோல் தொடையருகே நீண்டுள்ளது. அவரைப் போலவே லேசான வலஒருக்கணிப்பிலுள்ள நடுப்பெண் இருபாதங்களையும் உத்கட்டிதமாக்கி வலக்கையை உயர்த்தி அதிலுள்ள கோலால் முதல் பெண்ணின் வலக்கைக் கோலைத் தட்டுகிறார். இடமாய் ஒருக்கணித்து இளநடைபயில்வது போல் திரும்பியுள்ள மூன்றாம் பெண்ணின் வலக்கைக் கோல் நடுமங்கையின் இடக்கைக் கோலில் மோத, உடலின் சுழற்சியில் ஆட்ட விரைவைக் காட்டும் அவரது இடக்கைக் கோல் இடுப்பருகே நீண்டுள்ளது. மூவரில் நடுப்பெண்ணின் இரு கைக்கோல்களும் பிற இருவர் கோல்களுடன் இணைந்து ஒலியெழுப்ப முதல்வர், மூன்றாமவர் கைக் கோல்களில் ஓரிணை அடுத்த சுழலுக்காய்க் காத்துள்ளன.
கோலாட்டக் கோயில்கள்
முதல் கோலாட்டச் சிற்பமாகத் தாராசுரக் காட்சி கண்முன் கதை விரித்தபோதும் தமிழ்நாட்டில் கோலாட்டத்தைப் பரவலாக்கிய பெருமை விஜயநகர அரசர்களையே சாரும் வாருணி. ஹம்பிக் கோயில்களில் காணப்படுமாறு போலவே தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றிலும் கோலாட்டத்தில் தங்களுக்குள்ள ஆளுமையை விஜயநகரச் சிற்பிகள் பதிவுசெய்துள்ளமையை உன்னிடம் கூறியிருக்கிறேன். ஊர்வலக் காட்சிகள் போலவும் தனித்த கோலாட்ட நிகழ்வுகளாகவும் அவர்தம் செதுக்கல்களைச் சிராப்பள்ளி திருநெடுங்களநாதர், திருக்கோடிக்கா கோலக்கநாதர், காஞ்சிபுரம் கச்சபேசுவரர் – ஏகாம்பரேசுவரர் – வரதராஜப்பெருமாள், வேலூர் ஜலகண்டேசுவரர், வல்லம் விசுவநாதேசுவரர், மேலைச்சேரி திரௌபதி அம்மன் கோயில்களில் நான் பார்த்திருக்கிறேன். காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திகுன்றம் சமணக்கோயிலிலும் உத்தரகோசமங்கை ஆடவல்லான் மண்டபத்திலும் ஓவியக்காட்சியாகக் கோலாட்டம் காட்டப்பட்டுள்ளது.
கோலாட்டக் களங்கள்
கோயில் கட்டுமானத்தின் பல பகுதிகளில் இக்கோலாட்டக் காட்சிகளைக் காணமுடிந்தாலும் வளாகச் சுற்றின் துணைத்தளக் கண்டத்திலேயே அவை பரவலாக இடம்பெற்றுள்ளன. வேலூர்க் கோயிலில் தூண் கட்டிலுள்ள பட்டையில் சிற்றுருவச் சிற்பத் தொகுதியாகக் காட்டப்பட்டுள்ள கோலாட்டம், மேலைச்சேரியில் உத்திரத்தில் காணப்படுகிறது. திருக்கோடிக்கா கோலாட்டம் கோபுர உட்சுவரிலமைய, வல்லத்துக் கோலாட்டம் அங்குள்ள நீர்த்தொட்டிகளின் பக்கப்பகுதிகளைச் சிறப்பிக்கிறது. ஓவியக் கோலாட்டமோ கூரைக்காட்சியாய் மலர்ந்துள்ளது.
ஊர்வலக் கோலாட்டம்
திருநெடுங்களநாதர் கோலாட்டம்
திருநெடுங்களநாதர் ஊர்வலம்
நெடுங்களநாதர் வளாகத்துள்ள அம்மன்கோயில் பெருமண்டபத் தென்முகத்தில் வெளித்தெரியும் துணைத்தளப் பகுதியில் மண்டப வாயிலின் வலப்புறம் கோலாட்டமும் இடப்புறம் ஊர்வலமும் சிற்பத்தொடராகக் காட்சியாகின்றன. ஊர்வலத்தில், முன்னால் ஒருவர் ஓங்கிய வாளுடன் நன்கு அலங்கரித்த குதிரையை நடத்திச்செல்ல அதன் மேல் இவர்ந்துள்ளவர் இடக்கையில் கடிவாளத்தைப் பிடித்தவாறு வலக்கையை நீட்டியுள்ளார். குதிரையின் பின்னால் குடை, கவரி, குடுவை, சந்தனக்கிண்ணம் ஆகியவற்றுடன் பணியாட்கள் ஐவரும் வாள், கேடயம் கொண்டவர்களாய் வீரர்கள் மூவரும் பின்தொடர்கின்றனர்.
இந்த ஊர்வலத்திற்கான முன்னோட்ட ஆடலாய் வாயிலின் வலப்புறம் பத்துப் பெண்களின் கோலாட்டம். அனைவருமே அழகிய கொண்டையும் பனையோலைக் குண்டலங்களும் கழுத்தாரமும் தோள், கை வளைகளும் நடுப்பட்டை கொண்ட இடையாடையும் பெற்றுள்ளனர். இடையாடையின் மேல் அழகிய விரிப்பாய் அனைவருக்கும் தொடையளவிலான சுருக்கிக்கட்டிய மடிப்பாடை. சிலர் நேர்ப்பார்வையிலும் சிலர் லேசான ஒருக்கணிப்பிலும் உள்ளனர். ஆட்ட விரைவுக்கேற்பச் சிலர் தலையை வலம் அல்லது இடம் சாய்த்தும் குனிந்தும் சற்றே நிமிர்ந்தும் அழகுடன் திகழ்கின்றனர். ஒரு கையின் கோல், உடலின் முன்புறம் நீண்டு வல அல்லது இட ஆடலரின் கோலுடன் மோத, மற்றொரு கை தலையின் பின்புறம் கோலை நீட்டி, அடுத்துள்ள ஆடலரின் அதே அமைப்பிலான கோலைத் தட்டுமாறு ஆடும் இவ்வழகியரின் பாதங்கள் ஆட்டத்தின் போக்கிற்கேற்பப் பார்சுவம், சூசி, அக்ரதலசஞ்சாரம் எனப் பலவாறு அமைய, சிலர் ஊர்த்வஜாநுவாய்க் காலை உயர்த்தியும் ஆடுகின்றனர் வாருணி.
திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள்தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண், திருக்கோடிக்கா
திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள் ஒரு பாதத்தைப் பார்சுவமாக்கி, ஒரு காலை ஊர்த்வஜாநுவாக உயர்த்திக் கோலாட்டம் அடிக்கின்றனர். பூட்டுக்குண்டலம், கழுத்தணிகள், தோள், கை வளைகள், நெற்றிச்சுட்டி, நடுவிரிப்புடனான இடைப்பட்டாடை, சலங்கையுடன் இரு கைக் கோல்களும் அடுத்துள்ளவர் கோல்களுடன் மோத, விரைந்தும் சுழன்றும் ஆடும் அப்பெண்களின் திருமுகங்கள் பல கோணங்களில் திரும்ப, இதழ்களில் எழிலார்ந்த புன்னகை. ஊர்வலத்தில் வாளும் கேடயமும் ஏந்திய வீரர்கள் பலராகவும் ஈட்டி, குத்துவாள், கொடி, தண்டு, பானை கொண்டவர்கள் சிலராகவும் உள்ளனர். ஒரு சிற்பம் தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண்ணைப் படம்பிடிக்க, மற்றொன்றில் கோலாட்டக் காரிகைக்கு மத்தளத் தாளம் தரும் கலைஞர்.
வல்லத்துக் கோலாட்டம்
திருவல்லம் தொட்டி
வல்லம் கோலாட்டம் நீ அறிவாய். 1990லேயே அது குறித்த என் தினமணி கதிர் கட்டுரையை உனக்குத் தந்திருக்கிறேன். அக்கோயிலிலுள்ள கலையெழில் தொட்டிகள் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கோலாட்டம் மங்கல நிகழ்வின்போது நிகழ்த்தப்பட்டதாகும். கருவுற்ற பெண் ஒருவர் அமர்ந்திருக்க, அவருக்குப் பூச்சூட்டி ஒப்பனை செய்கிறார் தோழி. முன்னால் கோலாட்ட நிகழ்வு. வளைந்தும் நிமிர்ந்தும் சாய்ந்தும் சரிந்தும் கோலாட்டமிடும் அழகியர்தம் இடையாடைகள் அவர்தம் ஆட்டத்திற்கேற்ப விரிந்தும் சுருங்கியும் மடிப்புகளுடன் விளங்க, இவ்வாட்டத்திற்கு மத்தளம் வழித் தாளம் தருகிறார் ஆடவக்கலைஞர். கோயில் மடைப்பள்ளியில் உள்ள மற்றொரு தொட்டியிலும் அதன் கீழ்ப்புறத்தே கோலாட்டக் காட்சியும் அன்னங்களும் காட்டப்பட்டுள்ளதைப் பார்த்தது உனக்கு நினைவிருக்கலாம்.
பிற கோலாட்டங்கள்
கச்சபேசுவரர் கோலாட்டம்
ஏகாம்பரநாதர் கோயில் சுற்றுமாளிகைத் துணைத்தளக் கோலாட்டப் பெண்கள் அனைவரும் ஒருபாதத்தைப் பார்சுவத்திலிருத்தி, மற்றொரு காலின் முழங்காலை இடுப்பளவு உயர்த்தியுள்ளனர். அனைவருமே பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், பட்டாடை, இடைவிரிப்புக் கொண்டவர்களாய் ஒருவர் வலமும் ஒருவர் இடமுமாய் ஒருக்கணித்தாடுகின்றனர். கோலாட்டங்களின் தாளத்திற்கு மத்தள இசை துணைநிற்கிறது. வேலூர்க் கோயில் தூண் கட்டுப் பெண்கள் ஊர்த்வஜாநுவின் பல நிலைகளில் ஒரு கால் உயரக் கோலாட்டமடிக்கின்றனர். அவர்தம் கைக்குச்சிகளின் நீளம் சற்றே குறைந்துள்ளது. இக்கோயில் துணைத்தளக் கண்டக் கோலாட்டக் குழுவினர் கோடிக்காக் குழுவினரை ஒத்துள்ளனர். இங்கும் மத்தள வாசிப்பைக் காணமுடிகிறது. கச்சபேசுவரர், வரதராஜர், மேலைச்சேரி கோலாட்டக் காட்சிகளும் இவற்றைப் பின்பற்றியுள்ளன.
ஓவியக் கோலாட்டம்
திருப்பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம்
பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம் நாம் பார்த்ததுதான். பிற இடக் கோலாட்டக் காட்சிகளிலிருந்து இது மாறுபட்டுள்ளது. இப்பெண்கள் முந்தானை விரிந்த புடவையும் மேற்சட்டையும் அணிந்தவர்களாய்க் கோலாட்டமாடுகின்றனர். அவர்தம் நீள்சடை ஆட்டவளைவுக்கேற்பச் சுழன்றும் நெகிழ்ந்தும் காட்சிதர, நிமிர்ந்த தலையினராய் ஒருவரையொருவர் பார்த்தவாறு அவர்கள் கோலடிக்கும் அழகு சிறப்பானது. இதே அமைப்பிலான கோலாட்டம் உத்தரகோசமங்கையிலும் ஓவியமாக்கப்பட்டுள்ளது. பருத்திக்குன்றம் போலல்லாது இங்கு புடவையின் தலைப்பு ஆடுவோரின் மார்புப்பகுதியை மறைத்துள்ளது.
மாமல்லபுரம் செங்கல்பட்டுச் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் நாம் பார்த்த காட்சி உனக்கு நினைவிருக்கலாம். இருபதுக்கும் மேற்பட்ட ஆடவர்கள் கோலாட்டமாடிக் கொண்டே ஊர்வலமாகச் சாலையில் சென்றனர். அவர்கள் சற்று ஓய்வெடுத்தபோது நாம் அவர்களை நெருங்கி உரையாடினோம். கோலாட்டமாடிக்கொண்டே திருப்பதிக்கு நடைப்பயணம் செல்வதாக அப்பெருமக்கள் தெரிவித்தது உனக்கு நினைவிருக்கலாம்.
பிற்சோழர் காலத்தே ஒற்றைக் காட்சியாய்க் கண்காட்டும் கோலாட்டம் விஜயநகர வேந்தர்களின் தழுவல் பெற்ற தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் தொடராகவும் தனித்தும் காட்டப்பட்டிருப்பதுடன் ஊர்வலம், தேரோட்டம் ஆகியவற்றின் சிறப்பு நிகழ்வாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளமை இப்போது உனக்குத் தெளிவாகியிருக்கும். இன்றைக்குத் தமிழகத்தில் ஆண், பெண் இருவருக்குமான பொதுவான ஆடல்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோலாட்டம் பிற்சோழர், விஜயநகரத்தார் காலத்தில் பெண்களால் மட்டுமே இம்மண்ணில் நிகழ்த்தப்பட்டது போல் இதுவரை கிடைத்துள்ள சிற்பக்காட்சிகள் கண்காட்டுகின்றன. உன்னுடைய ஆய்வுப் பயணங்களில் வேறெங்கேனும் கோலாட்டக் காட்சிகள் கண்டிருப்பின் எனக்கு எழுது. கோலாட்டம் ஆய்வு நிறைவுற அது உதவும்.
ஜூலை 18, 2021 அன்று மேலைச்சிவபுரி வள்ளுவர் மன்றம் நடத்திய மெய்நிகர் நிகழ்வில், “உங்கள் திருவடிகள் என் தலை மேலன” என்ற தலைப்பில், மரு.இரா.கலைக்கோவன் நிகழ்த்திய பொழிவின் பதிவு இது.
திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சிக்காக, அறிஞர் வ. சுப. மாணிக்கனார் பற்றி, டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய வானொலிப் பொழிவின் பதிவு இது. பொழிவு 4 பகுதிகளாக ஒலிபரப்பப்பட்டது.
திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திற்காக, ‘தமிழமுதம்’ என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய பொழிவின் பதிவுகளை இப்பகுதியில் கேட்கலாம்.
‘அமுது’, ‘மடை’, ‘பானை’, ‘குடம்’, ‘கலம்’, ‘மணி’ போன்ற பழந்தமிழ்ச்சொற்கள், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் மற்றும் கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளமையைச் சான்றுகளுடன், சுவைபட விளக்கியுள்ளார்.
தமிழர் வணிகச் சிறப்பு, மிகப் பழங்காலந்தொட்டே பெண்கள் வணிகத்தில் ஈடுபட்டமை, தமிழகத்து விளைபொருட்கள், வணிகக் குழுக்கள் என்று பரந்தூபட்ட செய்திகளை உள்ளடக்கிய பொழிவுகள் இவை.
திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திற்காக, சான்றோர் சிந்தனை என்ற நிகழ்ச்சியில், டாக்டர் மா. இராசமாணிக்கனார் பற்றி டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய வானொலிப் பொழிவின் பதிவு இது. பொழிவு 5 பகுதிகளாக ஒலிபரப்பப்பட்டது.
கண் மருத்துவரும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனருமான இரா. கலைக்கோவன் வரலாற்றாய்வைத் தொடங்கிய நாள் முதல் தொடரும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் திரும்பிப்பார்க்கிறோம் எனும் புதிய பகுதியை வரலாறு ஆய்விதழில் 2007இல் தொடங்கினார்.
ஆய்வு மையத்தின் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள், மையம் சார் ஆய்வாளர்களின் பணிகள், வரலாறு ஆய்விதழின் தோற்றமும் வளர்ச்சிப்பாதையில் அது சந்தித்த சூழல்களும் என ஓர் ஆய்வுக்குழுவின் நெடிய பயணச்சுவடுகள் இத்தொடரில் காலநிரலாகப் பதிவாகியுள்ளன. முதல் பத்துத் தொகுதிகள் தனியாகவும் வெளியிடப்பெற்றன. இதுநாள்வரை 13 தொகுதிகள் வரலாறு இதழுடன் இணைந்து பதிவாகியுள்ளன.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுமுடிவுகளையும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் 1993 ஆகஸ்டு 15ஆம் நாள் தோன்றியதே வரலாறு ஆய்விதழ். தொடக்கத்தில் அரையாண்டிதழாக ஐந்து இதழ்கள் வெளியாயின. 1996இல் ஆண்டிதழாக மாறிய வரலாறு இதுநாள்வரை 30 இதழ்களைக் கண்டுள்ளது. வரலாறு 25ஆம் தொகுதியின் வெளியீட்டு விழா 31.10.2015 அன்று வரலாறு டாட் காம் மின்னிதழ்க் குழுவினரால் சென்னையில் வெள்ளிவிழாவாக நடத்தப்பெற்றது. 25 தொகுதிகளின் வழி வரலாறு ஆய்விதழ் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளதை இதழின் தலையங்கப் பக்கம் பகிர்ந்துகொண்டது.
‘25 தொகுதிகளின் வழி வரலாறு இதழ் சாதித்திருப்பது என்ன? தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட 570 கல்வெட்டுகளை இந்த இதழ் பதிவுசெய்துள்ளது. பல கோயில்களிலிருந்து நடுவணரசால் படியெடுக்கப்பட்டுப் பாடம் வெளியாகாதிருக்கும் 408 கல்வெட்டுகளின் முழுமையான பாடங்களைப் ‘பதிப்பிக்கப்படாத பாடங்கள்’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு பதிப்பித்துள்ள கல்வெட்டுகள் சிலவற்றின் விட்டுப்போன தொடர்ச்சிகளைக் களஆய்வுகளில் கண்டறிந்து பதிவுசெய்துள்ளது. செப்பேடுகள் சிலவற்றை வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது.
ஆய்வுக்கட்டுரைகள் என்ற தலைப்பின் கீழ் இலக்கியம் சார்ந்து 17 கட்டுரைகளும் குடைவரைகள், ஒருகல் தளிகள், கற்றளிகள் ஆகியவற்றின் விரிவான ஆய்வின் வெளிப்பாடாக 85 கட்டுரைகளும் வரலாற்றின் பல்வேறு பிரிவுகள் சார்ந்து 48 கட்டுரைகளும் இந்த 25 இதழ்களில் பதிவாகியுள்ளன. பெருமைச்சுவடுகளாக இந்த மண்ணின் அறிவுவளத்தைப் பெருக்கியவர்கள் இதழ்தோறும் வெளிப்பட்டிருக்கிறார்கள். வரலாறு இதழின் வாழ்க்கைப் பயணத்தில் உள்ளத்தைத் தொட்டவர்கள், உண்டாலம்ம இவ்வுலகம் என்று நெகிழச் செய்து அதன் பக்கங்களாகியிருக்கிறார்கள். இலக்கியங்களின் சில முத்திரைப்பதிவுகள் பெட்டிச் செய்திகளாக வரலாற்றின் ஒவ்வோர் இதழையும் ஒப்பனை செய்துள்ளன. அத்யந்தகாமம், வரலாற்றின் வரலாறு, வலஞ்சுழி வாணர் எனும் மூன்று ஆய்வு நூல்கள் வரலாறு இதழின் உடன்பிறப்புகளாக முகிழ்த்துள்ளன.
ஓர் ஆய்வாளனின் பிறப்பும் வளர்ச்சியும் பற்றிய பதிவுகள் வரலாற்றிற்கும் வரும் தலைமுறை ஆய்வாளர்களுக்கும் வழிகாட்ட உதவும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்டதே திரும்பிப்பார்க்கிறோம் தொடர். ஒன்பதாண்டுகளாக ஆயிரம் பக்கங்களைக் கடந்த நிலையில் ஆய்வுவாழ்க்கையின் படப்பிடிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த அனுபவப் பதிவு, வாழ்க்கை வரலாற்றின் ஒரு புதிய முகம். ஓர் ஆய்விதழ் 25 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்து எண்ணம் கொண்டிருந்தோமோ அவற்றில் சிலவற்றையேனும் செம்மையாகச் செய்திருக்கிறோம் என்ற நிறைவோடு இந்த வெள்ளி இதழை உங்கள் கைகளில் வழங்குகிறோம்.
23 ஆண்டுகளில் 25 இதழ்கள். பாடுகளுக்கு எப்போதுமே பயன்கள் உண்டு. உடனிருந்து உழைத்தவர்களுக்கும் வரலாறு இதழின் 11ஆம் தொகுதி முதற்கொண்டு இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் நல்கை இதழுக்குக் கிடைக்குமாறு துணைநின்ற வரலாற்றறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், எம். ஜே. எஸ். நாராயணன் ஆகியோருக்கும் வரலாறு இதழ் கடப்பாடுடையது.
உண்மைகளின் பாதை துன்பமானதுதான்; தளர்ச்சி தருவதுதான். என்றாலும், உழைப்பு அவற்றை நேர்செய்கிறது. வரலாறு என்னும் பேரண்டத்தில் சில துகள்களையேனும் எங்களால் உலவவிட முடிந்திருப்பதே உறவுகள் உடன்நின்ற ஊக்கத்தால்தான். இந்த 25 இதழ்ப் பயணத்தில் கையிணைத்த நல்ல உள்ளங்களை நன்றியோடு வணங்குவதினும் வேறென்ன செயவல்லோம்.’
2016இல் வெளியான வரலாறு 26ஆம் தொகுதி தவத்துறை சப்தரிஷீசுவரர், பூரத்தூர் முக்தீசுவரம், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளையும் உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதரில் படியெடுக்கப்பட்டுப் பாடம் வெளியாகாத கல்வெட்டுகளையும் பதிவுசெய்துள்ளது. ஆய்வில் கண்டறியப்பட்ட தவத்துறை சப்தரிஷீசுவரர், திருஎறும்பியூர் எறும்பீசுவரர்க் கோயில் கல்வெட்டுகள் சிலவற்றின் விடுபட்ட பகுதிகள் விட்டுப்போன தொடர்ச்சிகளாக இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
சங்க காலத்தின் காலம்? வெள்ளறைக் குடைவரை, குடக்கூத்து, தவத்துறைக் கல்வெட்டுகள்-1, நகரி மாடக்கோயில், குலாலகோட்டையூர்க் குடைவரை, முழங்கால் (ஜாநு), திருப்பேர் நகர், இராஜராஜரின் புதல்வியர் மூவர் எனும் 9 ஆய்வுக்கட்டுரைகள் வரலாறு 26இல் பதிவாகியுள்ளன.
2017இல் வெளியான வரலாறு 27ஆம் தொகுதியில் கூத்தப்பார் மருதீசர், பாச்சில் மேற்றளி-ஆதிநாயகப் பெருமாள் கோயில்களிலும் உறையூர்க் குளத்திலும் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளுடன் பாச்சில் அவனீசுவரம் – மேற்றளிக் கோயில்களிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்களும் எறும்பியூர்க் கோயில் கல்வெட்டொன்றின் விட்டுப்போன தொடர்ச்சியும் பதிவாகியுள்ளன.
கழுகுமலைக் குடைவரை, கூத்தப்பார் மருதீசர், தவத்துறைக் கல்வெட்டுகள் -2, புதுப்பட்டிக் குடைவரை, பெருமுடியீசுவரம் மீளாய்வு, அரிட்டாபட்டிக் குடைவரை, தமிழமுதம்-1, மணப்பாடு குடைவரை, ஐந்தொகை காட்டும் தமிழர் சமயமும் கட்டடக்கலையும், நங்கவரம் சுந்தரேசுவரர், பசுபதிகோயில் எனும் 11 ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழில் இணைந்துள்ளன.
2018இல் வெளியான வரலாறு 28ஆம் தொகுதியில் உத்தமசீலிச் செங்கனிவாய்ப் பெருமாள், செந்துறைப் பெருமானடிகள், பாலைத்துறை மகாதேவர், எறும்பியூர் எறும்பீசுவரர் கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள், பாலைத்துறை மகாதேவர், துடையூர் விஷமங்களேசுவரர் கோயில்களில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்கள் ஆகியவற்றுடன் பாலைத்துறை மகாதேவர்கோயில் கல்வெட்டொன்றின் விட்டுப்போன தொடர்ச்சியும் இடம்பெற்றுள்ளது.
தமிழமுதம்-2, சேய்ஞலூர் மாடக்கோயில், சோழமாதேவி கயிலாசநாதர், சிங்கப்பெருமாள் குடைவரை, பாச்சில் கல்வெட்டுகள், வைகல் மாடக்கோயில், அகச்சாரல், கற்குடிக் கோயில் கல்வெட்டுகள்-1, வெள்ளறை வடஜம்புநாதர் எனும் தலைப்புகளில் 9 ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழில் உள்ளன.
2020இல் வெளியான வரலாறு ஆய்விதழ் 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த தொகுதியாக (29-30) திகழ்ந்தது. சிங்களாந்தகபுரம் அமரேசுவரம், எறும்பியூர் எறும்பீசுவரம், பேட்டைவாய்த்தலை மதுராந்தக ஈசுவரம், பாப்பாப்பட்டி, பத்தாளப்பேட்டை, கோட்டாரப்பட்டி, பனங்காட்டங்குடி ஆகிய இடங்களில் கண்டறிந்த புதிய கல்வெட்டுகள், கொல்லிமலை நடுகல் கல்வெட்டு, அமரேசுவரம், மதுராந்தக ஈசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம், பைஞ்ஞீலி நீலிவனநாதர் கோயில் கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்கள் ஆகியவற்றுடன் கட்டங்கம் கையதே, வட, தென்பரங்குன்றக் குடைவரைகள், மல்லூர் அரங்கநாதர், கற்குடிக் கோயில் கல்வெட்டுகள்-2 எனும் 5 ஆய்வுக்கட்டுரைகளும் இவ்விதழில் பதிவாயின.