மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 1. புவனேசுவர விளக்கு

அன்புள்ள வாருணி, நலந்தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னோடு பேச வாய்த்துள்ளது. எழுத்துப் பேச்சாகுமா என்று நீ கேட்கலாம். உன்னோடு நிகழும் எதுவும் எனக்கு உரையாடல்தான். நண்பர் ஒருவர் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பற்றி நூல் உருவாக்குவதாகவும் அதில் என் பணியாய்ச் சில கட்டுரைகள் அமையவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் தந்தை மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையிலும் அம்மா பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையிலும் பணியாற்றிய காலத்து ஏறத்தாழ ஐந்தாண்டுகள் என் பள்ளிப் பருவ வாழ்க்கை மதுரையில்தான்.

மீனாட்சிக் கோயில் திருவள்ளுவர் மன்றத்தில் அப்பாவை அடிக்கடிப் பேச அழைப்பார்கள். அருமையான மலை வாழைப்பழம் உண்ணக் கிடைக்கும் என்பதால் நான் தவறாது உடன் செல்வேன். அந்த வயதில் கோயில் புரிந்ததில்லை என்றாலும், வளாகத்தில் சுற்றாத இடமில்லை. பொற்றாமரைக் குளமும் புதுமண்டபமும் இசைத்தூண்கள் உள்ள சுற்றுவெளியும் என்னால் மறக்கவே முடியாத விளையாட்டுக் களங்கள்.

1959இல் அப்பா சென்னைப் பல்கலைக்கு வந்தார். மதுரைத் தொடர்பு அன்றோடு முடிந்து சென்னை வாசியானேன். மருத்துவம் முடிக்கும்வரை சிங்காரச் சென்னைதான் என்னை வடிவமைத்தது. காதலும் திருமணமும் கண்மருத்துவப் பணியும் என்னைத் திருச்சிராப்பள்ளிக்கு நகர்த்தின. 1975இல் இருந்து இந்தக் காவிரி மண்தான் எனக்குள் கலை வளர்த்து வருகிறது. உறையூர்ப் பஞ்சவர்ணசாமி கோயிலில் நான் பார்த்து வியந்த சைக்கிள் சிற்பத்தின் வடிவில் வந்த வரலாறு என் பயணம் மாற்றிப் பாதையைத் திருப்பியது. கோயில்களோடு கையிணைத்த பிறகுதான் எது வரலாறு என்பதே எனக்குத் தெளிவானது.

வாருணி, எதையோ சொல்லத் தொடங்கி எங்கோ போய்விட்டேன். நண்பரின் மதுரைக் கோயில் நூலுக்கு எழுத ஒப்புக் கொண்டதும், அக்கோயிலில் ஒலி, ஒளிக் காட்சி அமைக்கக் கருதிய அரசின் வேண்டுகோளேற்று நானும் பேராசிரியர் மு. நளினியும் அங்குத் தொடராய்வுகள் மேற்கொண்டமை நினைவுக்கு வந்தது. என் எண்ணவோட்டம் அறிந்தவராய் நளினி கணினித் தொகுப்புகளைக் கண்முன் நிறுத்தினார். ஒவ்வொரு காட்சியும் என்னை எழுதத் தூண்டின.

மதுரையைப் பற்றி எவ்வளவோ கட்டுரைகளும் நூல்களும் வந்திருந்தபோதும் பார்க்காமல் விட்டதும் சொல்லாமல் போனதும் கோயில் முழுவதுமாய் நிறைந்திருப்பதை உணர்ந்தேன். எழுத நினைத்ததுமே நினைவில் நிறைந்தவர் கண்ணன் விக்கிரமன்தான். அவரது ஆசிரியத்தில் வெளிவரும் இலக்கியப் பீடத்தில் ஒரு தொடராக எழுத அனுமதி கேட்டேன். ‘உடனே தொடங்குங்கள்’ என்று உள்ளம் பூரித்தார் கண்ணன். தந்தையைப் போலவே துடிப்பான செயற்பாடுகள்.

வாருணி, ஒரு கோயிலின் சிற்பங்கள் குறித்து ஓர் இதழில் தொடராக எழுதப்போவது இதுவே முதல் முறை. என் பார்வைகளின் விளைவான படப்பிடிப்புகளை உன்னோடு பகிர்ந்து கொள்வது எப்போதுமே எனக்குப் பிடித்தமானது. உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்வுகளை, அவை வரலாறு தொட்டே வளர்ந்தபோதும் நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்திக் களிப்பது சுகந்தானே.

சம்பந்தரால், ‘கூடல் ஆலவாய்’ எனப் போற்றப்படும் இக்கோயில் வளாகத்திலுள்ள மண்டபங்கள் பலவாகும். அவற்றுள் மூன்று மண்டபங்கள் அவற்றின் வாயிலைத் தழுவியுள்ள விளக்கு மாலைகளால் சிறப்புப் பெறுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகளில் தீபமாலைகளாகச் சுட்டப் பெறும் இந்த அகல் அடுக்கிய அழகுத் தோரணங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கின்றன.

மீனாட்சிக் கோயிலின் சிற்பக்களஞ்சியமாக விளங்கும் சிறந்த மண்டபங்களில் கம்பத்தடி மண்டபமும் ஒன்று. மையப் பகுதிக் கூட்டுத்தூண்கள் ஒரு சதுரமாக வடிவமைக்கும் காட்சிக் கூடத்தின் முன் இந்த அகல்தோரணம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கீர்த்திமுகத் தலைப்புடனான மகர திருவாசியில் மூன்றடுக்கு அகல்கள். அவற்றைத் தழுவி மேலடுக்காய் இலை போல் மதலைகள். தோரணத் தலைப்பில் நெற்றிச்சுட்டிப் போலத் தொங்கல்.

இந்த மகரத்திருவாசியை இருபுறத்தும் தாங்கும் தூண்களிலும் அகல் வரிசைகள். தாங்கலின் மேற்பகுதியில் விரிந்த ஊமத்தம்பூவாய் அழகிய நாணுதல்கள். அவற்றின் கீழே தாவும் யாளிகள். தாங்கலின் கீழ்ப்பகுதியிலோ, பக்கத்திற்கு ஒருவராகக் கருவிகளுடன் காவலர். இந்தக் கம்பத்தடித் தோரணத்தின் வலப்புறம் மலர்ப் பதக்கங்களுடன் பொதுக்காலம் 1654 ஜெய ஆண்டு மாசி மாதம் 12ஆம் நாள் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை நம் பேராசிரியர் நளினிதான் கண்டறிந்து படித்தார்.

விசுவநாத நாயக்கர் மரபினரான திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகக் குப்பையாண்டிச் செட்டியார் எனும் பெரியவர், ‘புவனேசுவர விளக்கு’ என்ற பெயருடன் இந்த மகர தோரண விளக்கைச் செய்தளித்திருப்பது கல்வெட்டால் தெரிய வந்தது. இந்தத் தோரணம் கோயிலில் அமையத் துணை இருந்தவர் அப்போது இங்குப் பாரபத்தியமாகப் பணியிலிருந்த நாவாயி ஆனந்த வீரப்பச் செட்டியாராம்.

இதைவிடச் சிறப்பானவை வீரவசந்தராயர், மீனாட்சி நாயக்கர் மண்டபத் தோரணங்கள். அவற்றிலும் கல்வெட்டுகள். தகவல்கள் அடுத்த மடலில்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

மரபுரிமை வாரச் சிறப்புத் தொடர்- ‘பாரம்பரியப் பெட்டகங்கள்’

உலக மரபுரிமை வாரத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையமும் இணைந்து வழங்கிய, ‘பாரம்பரியப் பெட்டகங்கள்’ என்ற சிறப்புத் தொடர் நிகழ்ச்சி, திருச்சிராப்பள்ளி பண்பலை 102.1இல் 19.11.25 முதல் 25.11.25 வரை ஒலிபரப்பானது. பெருமைக்குரிய பழங்கோயில்கள், கோட்டைகள் மற்றும் பழங்கால நினைவுச் சின்னங்கள் பற்றிய செய்திகளைத் தம்முடைய வரலாற்றாய்வுக் குழுவினருடன், சுவையான கலந்துரையாடலாக டாக்டர் இரா. கலைக்கோவன் அமைத்திருந்தது மேலும் ஆர்வமூட்டியது.

ஏழு நாள் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவினைக் கீழே இணைப்புகளில் கேட்டு மகிழலாம்.

1. அப்பருக்குச் சோறூட்டிய அழகன் கோயில்திருப்பைஞ்ஞீலி

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் அர. அகிலா, பேராசிரியர் மு. நளினி

2. பெருந்திருக்கோவிலும் பாறை அகழ்வுகளும்திருவெள்ளறை

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

3. விண்வருடும் இராஜேந்திரப் பெருமிதம்கங்கை கொண்ட சோழபுரம்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

4. சிற்பச் செழுமையின் சிகரம்புள்ளமங்கலத்து ஆலந்துறையார்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், வரலாற்றாய்வாளர் செல்வி அருண், பேராசிரியர் மு. நளினி

5. தேவன் கோவிலும் தேவியர் கற்றளிகளும் – திருவையாறு

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

6. குன்றில் தோன்றிய கோவில்கள் – திருமெய்யம்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், வரலாற்றாய்வாளர் செல்வி அருண், பேராசிரியர் அர. அகிலா

7. எங்கும் எதிலும் மரபுரிமை – பழங்காலச் சின்னங்கள்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் மு. நளினி, பேராசிரியர் அர. அகிலா

விருது வழங்கல் மற்றும் நூல் வெளியீட்டு விழாக்கள்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையமும் வரலாறு.காம் இணைய இதழும் இணைந்து நடத்திய இரண்டு விழாக்கள் (விருது வழங்கல் மற்றும் நூல் வெளியீடு), 03.08.25 அன்று திருவிடைமருதூர் ஶ்ரீவத்சம் முதுமக்கள் குடியிருப்பிலுள்ள பிரேமி கேந்திரம் அரங்கில் நடைபெற்றன.

முதலில், இதழியல் இமயம் பேராசிரியர் முனைவர் மா. ரா. அரசு அறக்கட்டளையின் ‘இளம் ஆய்வாளர்’ விருது, வரலாறு.காம் இணைய இதழின் பொறுப்பாசிரியர் திரு சு. சீதாராமனுக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வரலாறு.காம் இணைய இதழின் பொறுப்பாசிரியர் திரு ச. கமலக்கண்ணனுடைய ‘ஜப்பானிய பழங்குறுநூறு’ நூலை டாக்டர் இரா. கலைக்கோவன் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

அன்றைய நிகழ்வின் இணையப் பதிவை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். 

💐விருது வழங்கல் & நூல் வெளியீட்டு விழாக்கள் 💐@Srivathsam on 03-08-2025

நான்காம் புத்தகத் திருவிழா 2025, நாகபட்டினம்


நாகபட்டினம் மாவட்ட நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் மூன்றாண்டுகளாக நடத்தி வரும் புத்தகத் திருவிழாவின் நான்காம் ஆண்டு (2025) நிகழ்வுகள், ஆகஸ்டு 01 முதல் 11 வரை நடைபெற்றன. எட்டாம் நாளான 08.08.25 அன்றைய கருத்தரங்கில் டாக்டர் இரா. கலைக்கோவன், ‘நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள்’ பற்றிய பொழிவை நிகழ்த்தினார்.

அன்றைய காணொலிப் பொழிவின் இணையப் பதிவை இங்கு காணலாம். 

முதலாம் இராஜேந்திரரின் கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம் பற்றி வரலாற்றுத் துறை அறிஞர்களின் கருத்துகள் தாங்கிய காணொலி, இந்து இதழின் மின்தளத்தில் 26/07/25 அன்று பதிவானது. அதில், முதலாம் இராஜராஜருக்கும் வானவன்மாதேவிக்கும் பிறந்த திருமகன் முதலாம் இராஜேந்திரர், தமிழ்நாட்டை மிக உயர்ந்த நிலைக்குத் தம்முடைய ஆட்சிக் காலத்தில் கொண்டு சென்ற வரலாறையும், வேறு எந்த இந்திய மன்னரும் நிகழ்த்திடாத அளவுக்குக் கடல் போர்கள் நிகழ்த்தி வெற்றி கண்ட முதல் இராஜேந்திரருடைய சிறப்பையும் சுருக்கமாக விளக்கினார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

பேசும் தலைமை/ நியூஸ் 7 தமிழ்

25.06.2017 அன்று ‘நியூஸ் 7 தமிழ்’ அலைவரிசையில் ஒளிபரப்பான டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்காணலை இங்கே காணலாம்.

பந்தவிளக்குகளும் பங்கேற்ற ஊர்களும்

இரா. கலைக்கோவன்

காலந்தோறும் வரலாற்றைப் பதிவுசெய்ய மக்கள் கையாண்ட முறைகளுள் எழுத்துப் பொறிப்புகள் ஒன்றாகும். எதிலெல்லாம் முடியுமோ அதிலெல்லாம் அவ்வக் காலத்து வழக்கிலிருந்த எழுத்துகளால் அறிந்தவற்றையும் நடந்தவற்றையும் எழுதத் தொடங்கியவர்களால் கல்லில் செதுக்கப்பட்ட பதிவுகளே கல்வெட்டுகள் என அறியப்படுகின்றன. இந்தியாவில் மிக அதிக அளவிலான கல்வெட்டுகள் தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே கிடைப்பதாக இதுவரை வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன. முறை சாரா திருப்பணிகளால் காலந்தோறும் அழிவுக்குள்ளான கல்வெட்டுகள் ஏராளம் என்றாலும், எஞ்சியிருப்பவை பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடர் நழுவாமால் பகிர்ந்துகொள்கின்றன. அத்தகு கல்வெட்டுகளுள் ஒன்றுதான், பந்தவிளக்குகளையும் அவற்றுக்கான பொறுப்பைப் பகிர்ந்துகொண்ட ஊர்களையும் வெளிச்சப்படுத்துகிறது.

திருமுதுகுன்றம் கோயில்

தமிழ்நாட்டின் பெருங்கோயில்களுள் ஒன்றைத் தக்கவைத்துள்ள தேவார ஊர்களுள் ஒன்றான திருமுதுகுன்றம் இன்றைக்கு விருத்தாசலமாக அறியப்படுகிறது. திருமுறைப் பாடல் பெற்ற இக்கோயில் இறைவனைப் பதிகங்கள் முதுகுன்றத்தார் என்றழைக்க, கோயில் வளாகக் கல்வெட்டுகள் திருமுதுகுன்றமுடைய நாயனார் என்கின்றன. சோழஅரசி செம்பியன்மாதேவியால் கற்றளியாக்கப்பட்ட பல கோயில்களில் முதுகுன்ற வளாகமும் ஒன்றாகும். இவ்வாளகத்துள்ள, ‘ஸ்ரீபராந்தக தேவரான பெரியசோழனார் மகனார் கண்டராதித்ததேவர் தேவியார் மழபெருமானடிகள் மகளார் ஸ்ரீஉத்தமசோழர் தங்கள் ஆச்சி செம்பியன்மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்டது ஸ்ரீகோயிலும் ஸ்நபனமண்டபமும் கோபுரமும் சுற்றாலையும் பரிவாரக் கோயில்களும்’ எனும் உத்தமசோழரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இங்குள்ள சிறப்பான பதிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மிகச் சில கல்வெட்டுகளே ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகையில் அவரது தலையாய உறவுமுறைகளை விதந்தோதுகின்றன. அந்த வகையில் பேறுபெற்றவர்களாய்ச் செம்பியன்மாதேவியையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்த பூதிஆதித்த பிடாரியையும் குறிக்கலாம். திருமுதுகுன்றம் கல்வெட்டு செம்பியன்மாதேவியாரின் தந்தை, மாமனார், கணவர், மகன் என மூன்று தலைமுறை ஆண் உறவுகளைப் பகிர்ந்துகொள்கிறது. அன்னையைக் குறிக்கும், ‘ஆச்சி’ என்ற அழகான தமிழ்ச் சொல்லும் கோயிற்கட்டடக்கலை சார்ந்த கலைச்சொற்களும் இக்கல்வெட்டின் கொடைகளாகும். இது குறிக்கும் சுற்றாலையே இன்று பிரகாரம் என மாறியுள்ளது. ‘கோபுரம்’ என்ற கோயில் நுழைவாயில் கட்டுமானத்தைக் குறிக்கும் மிகச் சில பழங்கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மறக்கமுடியாத வரலாற்று நாயகி செம்பியன்மாதேவியால் கட்டப்பெற்ற இக்கோயிலுக்குச் சோழ அரசர்கள் காலத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு அளப்பரிய கொடைகள் அளிக்கப்பட்டன. அவற்றுள் தனித்த சிறப்புடன் திகழும் கொடை, பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனான குலோத்துங்கசோழக் காடவராயரால் வழங்கப்பட்டது. இரண்டாம் குலோத்துங்கர் காலச் சிற்றரசரான இவர், குலோத்துங்கர் மகனான இரண்டாம் இராஜராஜர் காலத்தில் திருமுதுகுன்றம் கோயிலில், ‘குன்றப்பெருமாள்’ என்ற திருப்பெயரில் இறைத்திருமேனி ஒன்றை எழுந்தருளுவித்தார்.

அத்திருமேனிக்காகவும் வைகாசி, ஆவணிமாதக் கொண்டாட்டங்களாகவும் கோயிலில் 36 நாள்கள் நிகழ்ந்த விழாக்களில் பந்தவிளக்குகள் ஏற்ற ஆகும் செலவுகளுக்காகக் காடவராயர், கோயில் கருவூலத்தாரிடம் 2810 காசு கொடையாகத் தந்தார். இக்காசை வைப்புநிதியாகக் கொண்டு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியால் 36 நாள் விழாவிலும் நாளும் 562 பந்தவிளக்குகள் எரிக்கவேண்டும் என்பது திட்டம். கோயிலார் கொடைத்தொகையை 70 ஊர்களுக்குப் பகிர்ந்தளித்து, அதை முதலாகக் கொண்டு விளக்கேற்றும் பொறுப்பை அந்தந்த ஊராட்சி ஏற்குமாறு செய்தனர். ஒரு விளக்கிற்கு 5 காசு வைப்புநிதி எனக் கணக்கிடப்பட்டு 2810 காசும் 70 ஊராட்சியினரிடம் பிரித்துத் தரப்பட்டது. காசு பெற்ற ஊராட்சியினர் கொடையை முதலாகக் கொண்டு அதன் வட்டியில் விளக்கேற்றும் பொறுப்பேற்றனர்.

திருமுதுகுன்றம் விமானம்

‘விளக்கேற்றக் கொடை, அதைப் பெற்ற ஊராட்சி அதன் வட்டிகொண்டு விளக்கேற்ற ஒப்பியமை’ என்பதே இக்கல்வெட்டின் அடிநாதச் செய்தி. ஆனால், இக்கல்வெட்டு வழங்கும் சமூகப் பொருளாதாரத் தரவுகள் பலவாகும். கோயிலிலுள்ள ஏழிசைமோகன் திருமண்டபத்தின் வடசுவரில் தொடங்கப்பட்டு, அங்கு இடம்போதாமையின் தென்சுவரில் தொடரப்பட்ட இக்கல்வெட்டு, தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் மிக நீளமான கல்வெட்டுகளுள் ஒன்றாகும். எத்தனையோ வகையான விளக்குகள் பற்றிப் பேசும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில், மிக அரிதாகவே இக்கல்வெட்டுச் சுட்டும் பந்தவிளக்கு பயின்று வந்துள்ளது. முதுகுன்ற விழாக்களில் எரிந்த இவ்விளக்குகளின் 562 என்ற உயர் எண்ணிக்கையும் வியக்கவைக்கிறது. ஒரு விளக்கிற்கு 5 காசெனக் கொடைப்பணம் பெற்ற ஊர்களால், 12ஆம் நூற்றாண்டில் பெண்ணாகடம், இருங்கோளப்பாடி, முதுகுன்றம் எனும் மூன்றிடங்களைச் சுற்றிலுமிருந்த பல ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் பெயர்களுடன் பழைய ஊர்களாக 32 உள்ளன. பிராமணர் குடியிருப்புகளாக 11, வணிகக்குடியிருப்புகளாக 2, கோயில் நிலமிருந்த ஊர்களாக 5 அமைய, 20 ஊர்கள் பல்வேறு பின்னொட்டுகளோடு முடியும் பெயர்களில் இருந்தன.

பெற்ற காசுக்கும் அதற்கான பந்தவிளக்கிற்கும் ஒவ்வோர் ஊராட்சியிலும் பொறுப்பேற்றவர்கள் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவேண்டும். ஆனால், அவர்களில் சரிபாதியினர் எழுத்தறிவற்றவர்களாய் இருந்தமையால் அவர்களுக்காக வேறு சிலர் கையெழுத்திட்டுள்ளனர். எழுத்தறிவின்மையை, ‘சையிஜையானமை, கைமாட்டாமை’ என்ற தொடர்களால் கல்வெட்டு குறிக்கிறது. சில ஊர்களில் பொறுப்பாளர்கள் அனைவருக்குமே பிறர் கையெழுத்திட்டுள்ளனர். ஓரிரு ஊர்களில் பொறுப்பேற்ற அனைவர் சார்பிலும் ஒருவரே கையெழுத்திட்டுள்ளார். மிகச் சில ஊர்களிலேயே பொறுப்பேற்ற அனைவரும் எழுத்தறிவுள்ளவர்களாய் விளங்கியுள்ளனர். பொறுப்பேற்ற அனைவருமே ஆண்களாக இருப்பதால், ஊராட்சிப் பொறுப்பில் இந்த 70 ஊர்களில் பெண்கள் யாரும் இல்லாமை தெளிவு. புஞ்சி, குப்பை, பிச்சன், சோறன், பன்றி, ஆவணம், மாட்டத்தான் எனச் சிலர் பெயர் கொண்டிருக்க, குடிதாங்கி, அறம், திருவரைசு போன்ற பெயர்களும் மக்களுக்கு இருந்தன.

பொறுப்பேற்றவர்களுள் பலர் பல்வேறு ஊர்களில் பிறந்தவர்களாகவும் அங்கு நிலம் உடையவர்களாகவும் இருந்தமையால், அக்கால வழக்கப்படி தத்தம் பெயருக்கு முன் பிறப்பூரையும் சுட்டியுள்ளனர். இதன்வழிக் கூடுதலாக, 85 சோழர் கால ஊர்ப்பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் ஊர்கள் 41. ஒழுகை, வாழ்க்கை, வஞ்சிரம், போகுடி, கடுகா, வரகு, ஈசால் முதலிய ஊர்ப்பெயர்கள் கவனமீர்க்கின்றன. மத்தளங்குடி எனத் தோலிசைக்கருவியின் பெயராலும் ஓர் ஊர் இருந்துள்ளது.

155 ஊர்ப்பெயர்களையும் எண்ணற்ற மக்கள் பெயர்களையும் வழங்கும் இக்கல்வெட்டு, கொடை வழங்கப்பட்ட காலத்தே சமூகத்தில் நிலவிய படிப்பறிவின் நிலையையும் படம்பிடிக்கிறது. ஒரு தனி மனிதக் கொடைக்குப் பொறுப்பேற்று அதை நிறைவேற்ற உளங்கொண்ட 70 ஊர் மக்களின் மனப்பாங்கு அன்றிருந்த கூட்டுறவுப் பார்வையையும் அறச்செயல்களில் மக்கள் காட்டிய ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதுடன், கோயில் விழாக்கள் மக்கள் பங்களிப்புடன் பொலிந்ததையும் வெளிச்சப்படுத்துகிறது.

சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்)

யான் 1941ஆம் ஆண்டுமுதல் செய்துவந்த “பெரிய புராண ஆராய்ச்சி”ச் சம்பந்தமான குறிப்புகள் பல இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாராய்ச்சிக் குறிப்புகள் 1942 முதல் யான் செய்துவந்த பெரிய புராண ஆராய்ச்சிச் சொற்பொழிவுகளில் குறிக்கப் பெற்றுத் தமிழ்ப் பெரும் புலவர் பலரிடம் பாராட்டுப் பெற்றனவாகும்.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

காவியம் செய்த கவியரசர்

சமயம் சார்ந்த மூடநம்பிக்கைகளும் சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத்தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும், தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தம் வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர். தாமுண்டு தம் குடும்பம் உண்டு தம் வேலை உண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை.

டாக்டர் இரா. கலைக்கோவன்

நாட்டுக்கு நல்லவை

‘பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால் தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார்.

டாக்டர் இரா. கலைக்கோவன்