வீரநாராயணச்சேரி

மு. நளினி, இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டில் இதுநாள்வரை கிடைத்துள்ள செப்பேடுகளில் பெரும்பான்மையன பிராமணர்களுக்கோ, சமயஞ் சார்ந்த கோயில், மடம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கோ, நிலம் அல்லது ஊரை அரசர்கள் கொடையளித்த செய்திகளையே கொண்டுள்ளன. ‘தானப்பத்திரமாக’ விளங்கும் இத்தகு ஆவணம் வரலாற்றுக்கு எப்படி உதவமுடியும் என்ற கேள்வி மிக இயல்பானது. அந்தக் கேள்விக்கு விடை சொல்வதென்றால், ஏதேனும் ஒரு செப்பேட்டுடன் உறவாடவேண்டும். சோழர் செப்பேடுகளில் காலத்தால் பழைமையானதும் எளிய அமைப்பினதுமான உதயேந்திரம் செப்பேடுகள் இதற்கு உதவக்கூடும்.

முதல் பராந்தகரின் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

சோழ அரசமரபு

பழஞ்செப்பேடுகளுள் பெரும்பாலன இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன. சமஸ்கிருத சுலோகங்களால் எழுதப்பெற்ற முதற்பகுதி கொடையளிக்கும் அரசரின் மரபுவழி பேசுவதால் சிறப்புப் பெறுகிறது. அந்த மரபுவழியில் தேவர்கள், புராண அரசர்கள், இலக்கிய அரசர்கள் என நீளும் பட்டியலின் இறுதியில் வரலாற்று அரசர்களும் உள்ளனர்.

முதல் பராந்தக சோழரால் வழங்கப்பெற்ற உதயேந்திரம் செப்பேட்டின் மரபுவழிப் பட்டியலில் புராண அரசர்களாகச் சிபி உள்ளிட்ட மூவரும் இலக்கிய வழி அரசர்களாகக் கோக்கிள்ளி, கரிகாலர், கோச்செங்கணான் ஆகியோரும் இடம்பெற, வரலாற்று அரசர்களாகப் பராந்தகரின் பாட்டனார் விஜயாலயரும் தந்தை ஆதித்தரும் சுட்டப் பெற்றுள்ளனர்.

பராந்தகருக்கு முற்பட்ட கால இலக்கியங்கள் பேசும் சோழ அரசர்களுள் மூவரை மட்டுமே இச்செப்பேடு குறிப்பதால் சோழமரபு இம்மூவரையும் பெருமையுற நினைத்தமை உணரப்படும். பத்துப்பாட்டு இலக்கியங்களில் பட்டினப் பாலையும் மலைபடுகடாமும் கரிகாலரை முன்னிட்டு எழுந்தவை. கோச்செங்கணானோ அப்பர், சம்பந்தர், மங்கையாழ்வார் எனத் தமிழ்நாட்டின் இரு பெருஞ் சமயப் பதிக ஆசான்களால் புகழப்பட்டவர். மாடக்கோயில் எனும் புதிய கலைஉத்தியைத் தமிழ் மண்ணில் அறிமுகப்படுத்திய மாபெரும் கலைஞர். சோழர்கள் வெளியிட்ட வேறு சில செப்பேடுகளும் இம்மன்னர்களைக் குறிப்பது இங்கு நினைக்கத்தக்கது.

முதல் பராந்தகர்

மிக எளிய செப்பேடு என்பதால், வரலாற்று அரசர்களில் பராந்தகரைக் குறித்து மட்டுமே உதயேந்திரம் சில பயனுள்ள தரவுகளைப் பதிவுசெய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவையாக அவர் கோயில்களை எடுத்தமை, கேரள அரசர் மகளை மணந்தமை, இரண்டு பாண அரசர்களை வென்றமை, பாண்டிய அரசர் இராஜசிம்மனையும் அவருக்குத் துணையாக வந்த இலங்கைப் படையையும் தோற்கடித்து சங்கிராமராகவன் எனும் சிறப்புப் பெயர் ஏற்றமை ஆகியவற்றைக் குறிக்கலாம். இந்நான்கனுள், இடையிலுள்ள இரண்டு செய்திகளும் வேறெந்தச் சோழர் செப்பேட்டிலும் இடம்பெறாதவை. பராந்தகர் மணந்த கேரள அரசரின் மகளாக அருமொழிநங்கையையும் அவர் தந்தையாகப் பழுவேட்டரைய அரசர் குமரன் மறவனையும் கல்வெட்டுகளின் அடிப்படையில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் அடையாளப்படுத்தியுள்ளது. பராந்தகர் வென்ற பாண அரசர்களாக இரண்டாம் விக்கிரமாதித்தனையும் மூன்றாம் விஜயாதித்தனையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

கேட்டவரும் தந்தவரும்

உதயேந்திரம் செப்பேடு சோழ அரசமரபுடன் கங்கர்களைப் பற்றியும் விரித்துரைக்கிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது. உதயேந்திரச் சதுர்வேதிமங்கலத்தில் வாழ்ந்த பிராமணர்களுக்கு நிலத்துண்டுகளை உரிமையாக்கக் கருதி, அதற்கான கொடை வேண்டிப் பராந்தகரிடம் விண்ணப்பித்தவர் இந்த கங்க மரபில் தோன்றிய இரண்டாம் பிருதிவிபதி. அவர் கேட்டதால்தான் பராந்தகர் இக்கொடையில் ஈடுபட்டார்.

படுவூர்க் கோட்டத்தின் மேல்அடையாறு நாட்டிலிருந்த கடைக்கோட்டூரைக் கொடையாக வழங்கிய பராந்தகர், அதை உதயசந்திரமங்கலத்தோடு இணைத்து ஓரூராக்கி வீரநாராயணச்சேரி எனப் பெயரிட்டு, பிராமணர்களுக்கான இடமாக, பிரமதேயமாக்குமாறு தம் 15ஆம் ஆட்சியாண்டில், அதாவது, பொதுக்காலம் 922இல் உத்தரவிட அடித்தளம் இட்டவர் இரண்டாம் பிருதிவிபதி. அதனால்தான், அவரைப் பற்றியும் அவர் மரபு பற்றியும் விரிவாகப் பேசுகிறது செப்பேடு.

முதல் பராந்தகரின் அல்லூர் பசுபதீசுவரர் கோயில்

கங்க மரபு

கங்கப் பரம்பரையின் முதல் அரசர் தொடங்கிக் கருநாடக மாநிலம் கோலாரில் நிகழ்ந்த முடிசூட்டைக் காட்டி, அவ்வழியில் வந்த சிறந்த வீரரான முதலாம் பிருதிவிபதியை முன்னிருத்துகிறது செப்பேடு. அந்த இடத்தில்தான் தமிழ்நாட்டின் புகழ்வாய்ந்த போர்க்களங்களுள் ஒன்றான திருப்புறம்பியம் பேசப்படுகிறது. அப்போரில் தம்மை எதிர்த்து வந்த பாண்டிய அரசர் வரகுணரைப் பல்லவ வேந்தர் அபராஜிதர் எதிர்கொண்டார். அவருக்குத் துணையாகப் போரிட்டுக் களத்தில் உயிரிழந்தவர் முதல் பிருதிவிபதி. அவரது பெருமைக்குரிய பெயரர்தான் உதயேந்திரம் செப்பேடு உருவாகக் காரணமான இரண்டாம் பிருதிவிபதி. அவரது போர்த்திறமும் வீரமும் பாராட்டியே அவருக்குப் பராந்தகர், ‘மாவலிவாணராயர்’ பட்டமளித்துச் சிறப்பித்ததாகச் செப்பேடு கூறுகிறது.

திருவடி சூட்டியவர்

கடைக்கோட்டூரில் இரண்டு நிலத்துண்டுகள் ஏற்கனவே திகம்பர சமணர்களுக்குத் தரப்பட்டிருந்தமையால் அவற்றை நீக்கி, எஞ்சிய ஊர்ப்பகுதியே பிரமதேயமாக்கப்பட்டது. இந்த அறச்செயலை எதிர்கால அரசர்கள் காக்கவேண்டிடும் பராந்தகரைக் குறிக்கும் செப்பேடு, அவர் சிவபெருமானின் திருவடிகளைத் தம் தலையில் சூடியவர் என்று பெருமை பேசுகிறது.

இது போல் சிவபெருமானின் திருவடிகளைத் தலையில் சூடியவராகக் கல்வெட்டு வழித் தம்மை அறிவித்துக்கொண்ட முதல் தமிழ்நாட்டு மன்னராகப் பல்லவ அரசர் இராஜசிம்மரைக் குறிக்கலாம். ‘சிவசூடாமணி’ என்றே சிறப்புப் பெயர் கொண்டிருந்தவர் அவர். ‘இடைவிடாத ஈடுபாட்டால் புனிதப்படுத்தப்பட்ட தம் தலையில் சிவபெருமானின் திருவடிகளைச் சூடியவர்’ என்று அவரது பனைமலைக் கல்வெட்டு அவரைக் கொண்டாடுகிறது.

சோழமரபில் பராந்தகரைத் தொடர்ந்து சிவபெருமானின் திருவடிகளைத் தலையில் அணிந்தவராக அறியப்படும் முதலாம் இராஜராஜர், சிவபாதசேகரன் என்றே தம்மை அழைத்துக் கொண்டவர். அத்திருப்பெயரில் சிவபாதசேகர மங்கலம் என்று ஓர் ஊரே விளங்கியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர் மகன் இராஜேந்திரனோ தம்மை சிவசரணசேகரனாகக் காட்சிப்படுத்தி மகிழ்ந்தவர்.

வீரநாராயணச்சேரி

உதயேந்திரம் செப்பேட்டின் வடமொழிப்பகுதி, கடைக்கோட்டூர் என்ற பெயருள்ள பூமியை உதயசந்திரச் சதுர்வேதிமங்கலத்திற்கு அரசர் தானமாக அளித்தார் என்று கூற, தமிழ்ப்பகுதி, பெருமானடிகள் பெயரால் கடைக்கோட்டூர் வீரநாராயணச்சேரி என்ற பிரமதேயமாய் வழங்கப்பட்டதாகச் சொல்கிறது. வீரநாராயணன் பராந்தகரின் விருதுப் பெயர்களுள் ஒன்று என்பதும் அப்பெயரிலேயே இப்போது வீராணம் என்றழைக்கப்படும் வீரநாராயணன் ஏரி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

எல்லைகள்

வீரநாராயணச்சேரியின் எல்லைகளைச் சுட்டுகையில் பாலாறு, விண்ணமங்கலத் தெற்றேறி, விண்ணப்புலியன் ஏரி, கங்காயன் ஏரி, வயிர வாய்க்கால், சிராங்குட்டை, சிற்றறியூர், மலை, முப்பெண்டிர் குறுக்கு, மொட்டைக் குறுக்கு, குதிரை வடி, அதியமான் முண்டை, பிடாம்புழை, எருமைச்சரி, ஆலந்தொட்டை மேடு, கல்லாலிஒட்டை, கற்குறும்பு, வேம்பு-ஆலம்-மருதம்-எட்டி-துரிஞ்சில்-தணக்கு முதலிய மரங்கள் ஆகியன வெளிப்படுகின்றன. திசை விளக்கிச் சொல்லப்படும் இந்த எல்லை வண்ணிப்பு ஒரு கிராமத்தின் வரைபடத்தையே நமக்குத் தந்துவிடுகிறது.

அறையோலையும் ஆவணமும்

அரசாணை கிடைக்கப்பெற்ற படுவூர்க் கோட்டத்து சபையார், கடைக்கோட்டூர் எல்லைகளை வரையறுத்து அவற்றை அடையாளப்படுத்தக் கல்லும் கள்ளியும் நட்டுச் செய்தியை மக்கள் அறியுமாறு அறையோலை செய்ய, மாவலிவாணராயனான இரண்டாம் பிருதிவிபதி அதைச் செப்பேட்டு ஆவணமாக்கி ஊரைப் பெற்ற பிராமணர்களுக்கு உரிமையாக்கி மகிழ்ந்தார்.

கங்க மன்னர் வேண்டுகோள் ஏற்றுச் சோழ மன்னர் வழங்கிய ஒரே பிரமதேயக் கொடை இதுதான் என்பதாலும் பல அரிய வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாலும் உதயேந்திரம் செப்பேடு சிறப்புப் பெறுகிறது.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 11. தேவதேவி

அன்புள்ள வாருணி, தமிழ்நாட்டின் மிகச் சில கோயில்களிலேயே ஆயிரக்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சிற்பக் களஞ்சியங்களாக விளங்குபவை திருவரங்கம், தில்லை, மதுரைத் திருக்கோயில்களில் உள்ளவையே. இம்மூன்றனுள்ளும் ஆளுயரச் சிற்பங்களுடன் காண்போரைக் கவர்ந்திழுக்கும் கவினுறு கட்டுமானமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரக்கால் மண்டபத்தைக் குறிக்கலாம். மண்டப வாயிலிலும் வாயிலை அடுத்து விரியும் கூடத்தின் முதல் வரிசைத் தூண்களிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் விரிவான ஆய்வுக்குரியவை. அவற்றுள் தனித்துக் குறிக்கத்தக்கது கரணக்கோலத்திலுள்ள தேவதேவிச் சிற்பம்.

தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு எப்போது தோன்றியது என்பது குறித்த விரிவான ஆய்வுக்கட்டுரை எங்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, ‘பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளதை நீ அறிவாய். சங்க இலக்கியங்களிலோ, அடுத்தமைந்த காலக்கட்ட நூல்களான காப்பியங்களிலோ இடம்பெறாத பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்துவன திருமுறைகளே. சம்பந்தரும் அப்பரும் வழங்கியுள்ள குறிப்புகள் பிள்ளையார் தோற்றம் பற்றிய தெளிவான தரவுகளை முன்வைக்கின்றன.

தமிழ்நாட்டில் காணப்பெறும் பிள்ளையார் சிற்பங்களில் காலத்தால் முற்பட்டவை குடைவரைகளில் அமைந்துள்ளன. பிள்ளையார்பட்டிக் குடைவரையிலுள்ள கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு அக்குடைவரையை ஆறாம் நூற்றாண்டு அமைப்பாகக் கருதுகின்றனர். எனில், தமிழ்நாட்டின் முதல் பிள்ளையாராக அவரையே கொள்ளவேண்டியிருக்கும். பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் பரவலாக இடம்பெற்றுள்ள பிள்ளையாரைக் காலத்தால் முற்பட்ட வடதமிழ்நாட்டுப் பல்லவக் குடைவரைகளில் காணமுடியவில்லை. வல்லம் குடைவரைகளின் பக்கச்சுவர்களிலும் சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரையிலும் தோற்றம் காட்டும் பல்லவப் பிள்ளையார் கற்றளிக் காலத்தே சிறப்பிடம் பெறுவதைக் காணமுடிகிறது.

தமிழ்நாட்டின் குடைவரைக் காலப் பிள்ளையார்களில் நின்றகோலத்தில் காணக்கிடைப்பவர் சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரையில் உள்ளார். நான்முகன், முருகன், கதிரவன், கொற்றவைக்கு இணையாகப் பின்சுவர்க் கோட்டத்தில் இடம்பெற்றுள்ள இப்பிள்ளையார், பிற்பல்லவர் கற்றளிகளில் விமானத்திற்கு முன்னமைந்த முகமண்டபத் தெற்குக் கோட்டத்திற்கு மாற்றம் பெறுகிறார். இம்மாற்றம் சோழர் காலத்தில் நிலைபேறடைவதை அவர்தம் கற்றளிகள் கண்முன் நிறுத்துகின்றன.

குழந்தை போல் இரு கால்களையும் மடக்கிப் பாதங்கள் எதிர்ப்பட அமர்ந்த எளிய கோலம் தொடங்கி இலலிதாசனம், மகாராஜலீலாசனம் என வரையறுக்கப்பட்ட அமர்வுகளில் பிள்ளையார் சிற்பங்கள் பலவாய்க் கிடைக்கின்றன. சில ஊர்களில் நின்ற கோலத்திலும் சோழப் பிள்ளையார்களைக் காணமுடிகிறது. இதன் அடுத்த நிலையாகப் பிள்ளையாரை ஆடற்கோலத்தில் அமைக்கத் தொடங்கினார்கள். ஒரு காலைத் தரையில் ஊன்றி மற்றொரு காலை முழங்காலளவில் மடக்கி உயர்த்தும் (ஊர்த்வஜாநு, பார்சுவஜாநு) கரணக்கோலப் பிள்ளையார்களைப் பல கோயில்களில் காணமுடிகிறது. முழங்காலை முன்னால் உயர்த்துவது ஊர்த்வஜாநு. பக்கவாட்டில் உயர்த்தினால் பார்சுவஜாநு.

தொடக்கக் காலங்களில் தனித்தமைந்த பிள்ளையாரை அவரது தேவியுடன் இணைத்துக் காட்டும் சிற்பங்கள் அடுத்த நிலையின. சுகாசனப் பிள்ளையாரின் தொடையில் அமர்ந்தவராய் அம்மை காட்சிதரும் சிற்பங்களும் இருவரும் களிநிலை காணும் சிற்பங்களும் தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ளன. ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரக்கால் மண்டபத் தூண் அதுவரை நாங்கள் கண்டிராத புதிய காட்சியைக் கண்முன் நிறுத்தியது, வாருணி.

மண்டபத்துள் நுழைவார் ஒவ்வொருவரும் காணுமாறு முகப்பு வரிசைத் தூணில் இப்பெருஞ் சிற்பம் படைக்கப்பட்டுள்ளது. இதில், பிள்ளையார் பேரழகராய் ஊர்த்வஜாநு கரணத்தில் காட்சியாகிறார். அவரது வலப்பாதம் தளத்தில் நன்கு ஊன்ற, இடக்கால் முழங்காலளவில் மடித்து உயர்த்தப்பட்டுள்ளது. பத்துத் திருக்கைகளுடன் திகழும் அவரது மேலிரு கைகளில் சக்கரமும் தாமரையும் விளங்க, வல முன் கையில் உடைந்த தந்தம். வலம்புரியாய் வளைந்துள்ள துளைக்கையிலோ அமுதக்குடம். கழுத்தணிகள், தோளணிகள், கையணிகள், தொங்கு சரத்துடன் அடர்த்தியான வயிற்றுக்கட்டு, கால்களில் தண்டை, சிலம்பு, பெற்றுக் கரண்டமகுடத்துடன் கண்களுக்கு விருந்தாகும் அவரது இடையில் பதக்கஅணிகளும் குறங்குசெறியும் இருத்தும் அழகிய சிற்றாடை. அதன் தொங்கல்கள் கால்களுக்கிடையே விரிந்தும் மடிந்தும் நெகிழ்ந்திருக்கும் பாங்கு சிற்பிகளின் திறம் காட்டுகிறது.

இது போல் ஊர்த்வஜாநு கரணத்தில் பல பிள்ளையார் சிற்பங்களைச் சோழர் காலத்தே காணமுடிந்தாலும் இது அளவில் பெரியதாகவும் அழகில் உச்சம் பெற்றதாகவும் அமைந்திருப்பதால் மட்டுமே இங்குக் குறிக்கப்படுவதாக நினைத்துவிடாதே வாருணி. அளவு, அழகு இரண்டினும் மேம்பட்ட புதிய சிந்தனை இச்சிற்பத்தில் கையாளப்பட்டுள்ளது. இதில், இறைவனின் உயர்த்தப்பட்ட கால் அவர் தேவிக்கு இருக்கையாகியுள்ளது. பிள்ளையாரின் இடத்தொடையில் கோயிலாரால் வல்லபை என்று அழைக்கப்பெறும் அவரது தேவி இனிதே அமர்ந்துள்ளார்.

அம்மையின் வலக்கை பிள்ளையாரின் முதுகு தழுவ, இடக்கையில் மலர். கரண்டமகுடம் உள்ளிட்ட பல அணிகலன்கள் அழகூட்டப் பட்டாடையும் கச்சும் அணிந்து இறைத்தழுவலில் இளகிக் காட்சிதரும் தேவியின் இடையைத் தம் இடக்கை ஒன்றால் பேரன்புடன் பற்றியுள்ளார் இந்தப் பேரழகர். ஆடும் நேரத்திலும் அந்தக் கோலத்திலும் தம்மில் நிறைந்திருக்கும் தேவியை உடன் கொண்ட இந்த அன்பின் விளைச்சலை என் கண்கள் வேறெங்கும் கண்டதில்லை வாருணி. அதனால்தான், இந்தத் தேவதேவி இலக்கியப்பீடப் பக்கங்களில் இனிதே பதிவாகிறார்.

தமிழ்நாட்டுச் சிற்பிகளின் எண்ண வண்ணங்கள் காலந்தோறும் கவிதைகள் போல் வெளிப்பட்டுத் தமிழ்நாட்டுக் கோயில்களில் நமக்காகவே காத்துக் கிடக்கின்றன. அவற்றைக் காணவும் அவை வழி விளையும் களிப்பில் நிறையவும் நாம்தான் முனைவதில்லை.

அன்புடன்,

இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில்  கண்டதும் கற்றதும்- 10. கழுவேற்றம்

அன்புள்ள வாருணி, நலந்தானே. ‘விளக்கேற்றலில் மகிழ்ந்தேன்; சிவபெருமானின் ஆடற்காட்சிகளிலும் காரைக்கால் அம்மையின் அன்பிலும் நெகிழ்ந்தேன்; மன்னர் திருமலையின் எளிமைப் பெருநோக்கில் உருகினேன்; இப்போதோ, தொடர்ந்து குற்றங்களும் தண்டனைகளுமாய்க் காட்சிப்படுத்துகிறீர்கள்! கோயில்கள் பதிவகங்கள் என்று பலமுறை நீங்கள் கூறியிருந்தபோதும், இவை எல்லாமும் அங்குக் காட்டப்பட்டுள்ளன என்பதை அறிய நேர்கையில், கோயிலைப் பற்றிய பார்வை விரியவேண்டும் என்பதை முற்றிலுமாய் உணர்கிறேன். பதிவகம் என்பதன் உட்பொருளும் அறிகிறேன்’ என்று நீ எழுதியுள்ளாற் போலவே, இத்தொடரைப் படிக்கும் அன்பர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர்.

கோயில்கள் பத்திமைக்காக எழுந்தவைதான் என்றாலும், அக்காலத்தே மக்கள் பெருமளவில் கூடுமிடங்களாகவும் அவை விளங்கியமையால், அவற்றைக் கட்டமைத்தவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் அறிவூட்டலுக்காகவே சமூகத்தின் அனைத்துப் பக்கங்களையும் அங்குப் பாடமாக்கினர். ஒவ்வொரு கோயிலும் அது உருவான, உருமாறிய காலங்களின் கண்ணாடியாகவே திகழ்வதைக் கோயிலுடன் உறவாடி வாழ்பவர்கள் அறியாதிருக்கமுடியாது. மீனாட்சிக் கோயிலில் வலம் வந்த ஒவ்வொரு நாளும், கோயில் எங்களுடனும் நாங்கள் கோயிலுடனும் கூடிக் கலந்ததாலேயே பலவும் பார்க்க முடிந்ததுடன், அவற்றின் பாடங்களும் உணர்ந்து கோயிலுடன் ஒன்றவும் இயன்றது.

மீனாட்சிக் கோயிலின் ஒவ்வோரிடமும் காலநிரலான வாழ்க்கைப் படப்பிடிப்புகளைப் பெற்றிருந்தாலும், கொண்டதும் இணைந்ததுமாய் அதன் ஆயிரங்கால் மண்டபம் உள்ளடக்கியிருக்கும் சிற்ப அற்புதங்கள் அதை வரலாற்றுக் களஞ்சியமாய் மாற்றியுள்ளன. மண்டபக்கூரையைத் தாங்கியிருக்கும் நெடுந்தூண்கள் ஒன்றின் கீழ்ப்பகுதியில் நாங்கள் பார்த்த சிற்பம் நாயக்கர்காலத் தண்டனைமுறைகளுள் ஒன்றான கழுவேற்றத்தின் படப்பிடிப்பாய்ப் புன்னகைத்தது.

‘கழுவேற்றல்’ என்ற அந்தத் தண்டனைமுறை தமிழ்நாட்டில் வழக்கிலிருந்ததைப் பதிகம் படித்த அனைவரும் அறிவர். தேவார மூவரில் ஒருவரான ஞானசம்பந்தரின் மதுரைப் பயணமும் அப்போது அங்கு நிகழ்ந்தனவும் அவற்றின் பலனாய் விளைந்த கழுவேற்றமும் சேக்கிழாரின் பெரிய புராணம் பயின்ற அனைவருக்கும் தெரியும். பொதுக்காலம் 6ஆம் நூற்றாண்டில் நிறைவேறிய அந்தக் கழுவேற்றம் சங்ககாலத்தில் இருந்ததா என்பதறிய இலக்கியப் பக்கங்களைப் புரட்டியபோது நான்கு சுட்டல்கள் கிடைத்தன. அவற்றுள் முதன்மையானது பெரும்பாணாற்றுப்படையின் பாடலடிகள் எனலாம். எயினர் குடியிருப்புகள் உள்ள ஊரின் வாயிலை வண்ணிக்க முற்பட்ட புலவர், நெடிய முனையுடைய வலிமையான கழுமரங்கள் அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பார். அவை பகைவரைக் குத்துவதற்குப் பயன்பட்டதாக இப்பாடலுக்கு உரையெழுதிய நச்சினார்கினியர் கூறுகிறார்.

புலவர் தமிழகனை நீ அறிவாய் வாருணி. நாமிருவருமே அவரைச் சந்திக்க அவர் இல்லம் சென்றிருக்கிறோம். மெத்தப் படித்தவர். பெருநூலகம் கொண்டிருப்பவர். அங்குள்ள நூல்கள் அனைத்தும் அவர் கைப்பட்டு மனம் சென்றவை. அவரிடம் மீனாட்சிக் கோயில் சிற்பம் குறித்து உரையாடியபோது, ‘பழங்காலத் தண்டனைகள்’ என்ற தலைப்பில், தாம் குறிப்புகள் சேர்த்திருப்பதாகவும், அருட்பா, பிரபந்தம், திருவிளையாடல் புராணம் இவற்றிலும்கூடக் கழுவேற்றல் சுட்டப்பட்டுள்ளது என்றும் செய்தி தந்தார். இராமலிங்க அடிகளாரின், ‘இருங்கழுவில் ஏற்றினாலும்’ எனும் அருட்பா அடி குறிக்கத்தக்கது. பழமொழியில்கூட, ‘இனம்கழுவில் ஏற்றினார் இல்’ என்ற பாடம் உள்ளது. மதுரைக் கோட்டை வாயிலில் இருந்த கழுக்கோல்களைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

இலக்கிய ஆளுகை கழுவேற்றலைச் சங்கம்தொட்டுத் தொடரும் தண்டனையாகக் காட்டுவதால், சிற்ப வெளிப்பாடுகளாய் இது பதிவாகியுள்ளதா என்று தேடினோம். பல்லவக் கற்றளியாய்க் காஞ்சிபுரத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் வைகுந்தப் பெருமாளின் உள்சுற்றுச் சுவர் பல்லவர் வரலாறு பேசும் சிற்பத்தொகுதிகளைத் தொடராய்க் கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்றில் கழுவேற்றல் காணலாம். அரசர ஆணையிட நிறைவேற்றப்பட்ட தண்டனையாகப் பதிவாகியுள்ள அக்காட்சியில், இரண்டு குற்றவாளிகளைக் காணமுடிகிறது. ஒருவரைத் தலைகீழாகவும் மற்றவரைத் தலை மேலிருக்குமாறு நேராகவும் கழுவில் ஏற்றியுள்ளனர்.

காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் கழுவேற்றம்

மீனாட்சிக் கோயிலில் முற்றிலும் மாறுபட்ட காட்சி. இங்குக் கழுமரம் பெரும்பாணாற்றுப்படைப் பாடலடியை ஒட்டி நெடிய முனையுடன் உள்ளது. வைகுந்தப் பெருமாள் காட்சி போலன்றி இங்குக் குற்றவாளி வயிற்றில் கழுமுனை நுழையுமாறு தண்டிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்து துவண்டிருக்கும் அவர் உடலின் கீழ்ப்பகுதியை நரிகளும் நாய்களும் கடிக்க, மேற்பகுதியைப் பருந்தும் கழுகும் கொத்துகின்றன. இச்சிற்பத்தின் மேற்புறத்தில் மற்றொரு கழு. அதிலும் ஒரு குற்றவாளி. அவரது தலையருகே ஒரு நரி.

மீனாட்சிக் கோயில் கழுவேற்றம்

இறைவன் ஆடும் இடு, சுடுகாட்டுக் காட்சிகளை வண்ணிக்க முனைந்த காரைக்கால் அம்மையார், அப்பர் பெருமான், சம்பந்தர் ஆகியோர் அங்கு நரிகளும் பருந்து, கழுகு முதலிய பறவைகளும் இறந்தோர் உடலை உணவாய்க் கொள்ளும் காட்சிகளைப் பலபடக் காட்டியிருப்பர். பரஞ்சோதி முனிவரோ, திருவிளையாடல் புராணத்தில் இந்தச் சிற்பக் காட்சியை நேரில் கண்டவர்போல் வண்ணித்திருக்கிறார். பார்வையின் விளைவே பாடலடிகள் என்பதை மீனாட்சிக் கோயில் கழுவேற்றல் காட்சியும் இலக்கியப் பக்கங்களின் பதிவுகளும் உறுதி செய்கின்றன வாருணி. ஆவுடையார் கோயில் ஓவியங்களிலும் கழுவேற்றம் இடம்பெற்றுள்ளதை நினைவூட்டிய பேராசிரியர் மு. நளினி அந்தப் படங்களையும் காட்சிப்படுத்தினார்.

குற்றங்கள் இல்லாத சமுதாயம் எக்காலத்தும் இருந்ததில்லை. அது போலவே குற்றத்திற்கேற்பத் தண்டனைகள் வழங்குவதும் காலந்தோறுமான நிகழ்வாகவே இருந்து வந்துள்ளது. அவற்றுள் சில, கிடைக்கும் வாய்ப்பிற்கேற்ப எதிர்வரும் தலைமுறைகளுக்கு எச்சரிக்கையாகப் படைப்பாளிகளால் பதிவு செய்யப்படுகின்றன. பார்ப்பவர்கள் பகிர்வதும் கேட்பவர்கள் உணர்வதும் சமுதாயத் திருத்தங்களுக்கு வழிகோலும் என்ற நம்பிக்கையுடன்தான் அதைக்கருத்துடன் காப்பாற்றி வந்துள்ளது.

​​அன்புடன்,

​​இரா. கலைக்கோவன்.

குறிச்சி ஆவணங்கள்

மு. நளினி, இரா. கலைக்கோவன்

திருப்பைஞ்ஞீலி சோறுடைய நாயனார் கோயில்

சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டத்திலுள்ள பழைமையான ஊர் திருப்பைஞ்ஞீலி. வாழையின் பெயருடன் விளங்கும் இவ்வூரில், பதிகம் பெற்ற 1400 ஆண்டு வயதுடைய பெருங்கோயில் 71 கல்வெட்டுகளுடன் வாழ்கிறது. உள்ளிருக்கும் இறைவன் நீலிவனப்பெருமாள். இறைவி நீள்நெடுங்கண்ணி.

இங்குள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் அழுத்தமான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டுள்ளன. அவற்றுள், நான்கு ஆவணங்கள் அடுத்தடுத்து சோழநாட்டை ஆண்ட இரண்டு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், ஓர் ஊர் கோயிலுக்கும் தனியர்களுக்குமாகப் பிரித்து விற்கப்பட்ட கதையைக் கூறுகின்றன. சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேறெந்தக் கோயிலிலும் இது போல் நான்கு விற்பனை ஆவணங்கள் பெற்ற ஓர் ஊர் காட்சியாகவில்லை.

‘குறிச்சி’ என்ற பின்னொட்டுடன் பதிவாகும் இந்த ஊரின் கதை பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகிறது. திரிபுவனவீரதேவராக அறியப்படும் மூன்றாம் குலோத்துங்கசோழரின் ஆட்சிக்காலத்தில் அறிமுகமாகும் இக்குறிச்சியின் முழுப்பெயர் பிள்ளையாண்டான்குறிச்சியான நானூற்றுவன்குறிச்சி. அக்குறிச்சியில் பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது.

முதல் ஆவணம்

சிராப்பள்ளி முசிறிச் சாலையில் ஏறத்தாழ 11 கி. மீ. தொலைவில் திருவாசியை அடுத்துள்ள துடையூர் அக்காலத்தே பிராமணர் குடியிருப்பாக, ‘தொடையூர்’ என்ற பெயருடன் திகழ்ந்தது. அவ்வூரில் வாழ்ந்த சிங்கப்பிள்ளை செந்தாமரைக்கண்ணர், திருவரங்கச் செல்வனான செல்வநம்பி, திருவரங்கப் பெருமாளான திருவரங்கபட்டன் ஆகிய மூவருக்கும் அக்குறிச்சியில் புன்செய் நிலமிருந்தது.

பைஞ்ஞீலி இறைவனின் வழிபாட்டுக்கெனப் பூந்தோட்டம் அமைக்க விழைந்த கோயில் அலுவலர் காத்தானுக்கு, இம்மூவரும் குறிச்சியில் தங்கள் காணியாக இருந்த 1600 குழிப் புன்செய் நிலத்தை 400 நற்காசுகளுக்கு விற்றனர். இந்நிலத்துண்டு குறிச்சியிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கும் அக்கோயில் நடைமுறைகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு மா அளவு நிலத்திற்கும் வடக்கில் இருந்தது. இதற்கான நிலவிலை ஆவணம் ஓலையாகவும் கோயிலில் கல்வெட்டாகவும் அமைந்தது.

பைஞ்ஞீலி, தென்சுற்று

இரண்டாம் ஆவணம்

மூன்றாம் குலோத்துங்கரின் மகனான மூன்றாம் இராஜராஜரின் ஆறாம் ஆட்சியாண்டில், அதாவது பொ. கா. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நடைமுறைக்கு வந்த இரண்டாவது விற்பனை ஆவணத்தில் இவ்வூரின் பெயர் முன்பின்னாக மாறி நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சியாகப் பதிவாகியுள்ளது. அக்காலத்தில் தொடையூர் சபை உறுப்பினர்களாய் விளங்கிய திருவரங்கப் பெருமாள் சிங்கப்பிள்ளையான செந்தாமரைக்கண்ணர், மண்டலபுருஷனான சூரியதேவன், வீற்றிருந்தான் திருவாலப்பிள்ளையான திருவரங்கமாளி, சுந்தரத்தோளுடையானான சீராமன் ஆகிய நால்வரும் அவ்விற்பனையை நிகழ்த்தியுள்ளனர்.

சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பழம்பெரும் ஊரான தவத்துறை(இலால்குடி)க்கு அருகிலுள்ள நகர் எனும் சிற்றூரைச் சேர்ந்த கல்லன் சதிரனான மழைநாட்டு விழுப்பரையனுக்கு இக்குறிச்சி நிலம் 40 வேலி 10, 300காசுக்கு இவர்களால் விற்கப்பட்டது. இந்நிலத்தைக் குறிக்கும் சபையின் விற்பனை ஆவணம், ‘நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சி நத்தமும் நீர்நிலைக் குளமும் இக்குளத்தால் விளையும் நிலமும் இது சூழ்ந்த புன்செயும் நிலக்குடியும்’ என்று விற்கப்பட்ட இடத்தின் வளம் குறிப்பதுடன், இப்பகுதியிலிருந்த பைஞ்ஞீலி இறைவனுக்கும் பிள்ளையாருக்கும் உரிமையுடைய நிலப்பரப்புகளைத் தவிர்த்தே இவ்விற்பனை நிகழ்ந்தமை கூறுகிறது. இவ்விற்பனை ஆவணத்தை எழுதியவர் அன்பிலைச் சேர்ந்த துடையூர் மத்தியஸ்தர். ஆவணத்தில் அரசு அலுவலர் விக்கிரமசோழ பிரும்மராயர் உள்ளிட்டவர், ‘இப்படி அறிவேன்’ என்று சான்றாளர்களாகக் கையெழுத்திட்டுள்ளனர்.

மூன்றாம் ஆவணம்

இப்பதிவின் தொடர்ச்சியாக உள்ள மூன்றாம் ஆவணம், இக்குறிச்சி நிலம் 40 வேலியை விலைக்குப் பெற்ற கல்லன் சதிரனை, பாண்டிய அரசர் முதலாம் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் மண்டல முதலிகளுள் ஒருவரான கேரளத்துக் காலடியைச் சேர்ந்த சங்கரன் மகனாகக் குறிப்பதுடன், கல்லன் சதிரன் இக்குறிச்சியில் தாம் வாங்கிய நிலத்தின் உரிமையை வாங்கிய விரைவில் கைமாற்றியதைப் பதிவு செய்துள்ளது.

சதிரன் வாங்கிய 40 வேலியைப் பைஞ்ஞீலி இறைவன் பெயரில் அவருக்கான திருநாமத்துக்காணியாக்க விரும்பிய தொடையூர் சபையார், சதிரனிடம் சபை உறுப்பினர் நால்வர் பெற்ற விலைத்தொகையைத் திருப்பியளிக்கச் செய்து, சதிரனை அந்த 40 வேலியையும் இறைவனுக்கான திருநாமத்துக்காணியாக மாற்றித்தருமாறு வேண்ட, சதிரன் அதையேற்று, பெற்ற கையோடு நிலத்தை விற்ற கையருமாயினார். இப்படி வாங்கியவுடன் நிலம் விற்கப்படுதல் திரிவிட்டுத் தருதலாகவும் அதற்கான ஆவணம் திரிவுத்தீட்டாகவும் அழைக்கப்பெற்றன. வாங்கியவுடன் விற்கும் இந்தப் பாங்கைப் பைஞ்ஞீலியின் வேறு கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது.

பைஞ்ஞீலி, வசந்த மண்டபம்

நான்காம் ஆவணம்

நானூற்றுவன்குறிச்சி பற்றிய நான்காம் ஆவணம் மூன்றாம் இராஜராஜரின் 11ஆம் ஆட்சியாண்டில் அமைந்தது. அதில் விற்பனையாளர்களாக அறிமுகமாகும் மூவருமே தொடையூர் சபையின் உறுப்பினர்கள். அவர்களை, ‘சபைக்குச் சமைந்த’ என்றழைத்தே ஆவணம் அறிமுகப்படுத்துகிறது. அவர்களுள் இருவர், கல்லன் சதிரனுக்கு நிலம் விற்ற ஆவணத்திலும் விற்பனையாளர்களாக இடம்பெற்றுள்ளனர். மூன்றாமவர், திருவரங்கப்பெருமாளாள செந்தாமரைக்கண்ணராக அறியப்படுகிறார். கல்லன் சதிரனின் தந்தையும் பாண்டிய அரசரான முதலாம் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் மண்டல முதலிகளில் ஒருவருமான கேரளத்தைச் சேர்ந்த காலடி சங்கரன் அழகனான மழவராயரே இந்த ஆவணம் வழி இக்குறிச்சியில் 60 வேலி நிலத்தை 6,000 காசுக்கு வாங்கியவராகக் காட்சியாகிறார். கல்லன் சதிரனுக்கு விற்பனையான 40 வேலி நிலம், பைஞ்ஞீலி இறைவனுக்கும் பிள்ளையாருக்கும் உரிமையுடைய நிலப்பகுதிகள் ஆகியன தவிர்த்த நிலையிலேயே இந்த 60 வேலி நிலம் விற்பனையானதாக அறியமுடிகிறது.

நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சியின் எல்லைகளாகக் கிழக்கில் மீசெங்கோடு, தெற்கில் பாண்டிகுலாசனிப்புரம், மேற்கில் நெல்வேலி, வடக்கில் பைஞ்ஞீலி ஆகிய ஊர்கள் இருந்தமையை இரண்டு ஆவணங்கள் படம்பிடிக்கின்றன. இந்த ஆவணத்தில் சான்றாளர்களாகத் தொடையூர் மத்தியஸ்தர் உய்யநின்றாடுவான் வாளவரிசன் கையெழுத்திட்டுள்ளார்.

நச்சினார்க்கினியனும் தற்குறிகளும்

இந்தக் குறிச்சி ஆவணங்களில் நம்மைக் கவர்வது நச்சினார்க்கினியன் என்ற அழகிய தமிழ்ப் பெயரும் அக்காலத்தே இப்பகுதியில் இருந்த பல ஊர்களின் பெயர்களுமாகும். கையெழுத்தாளர்களுள் சிலர் தற்குறிகளாக இருந்தமையால் எழுதத் தெரிந்த வேறு சிலர் அவர்களுக்காகக் கையெழுத்திட்டுள்ளனர். இப்படி மாற்றுக் கையெழுத்திட்டவர்கள், முன்னவர் ‘சயிஞ்ஞாதன்மை’ (தற்குறி) அதனால் இக்கையெழுத்து என்று தெளிவாகச் சுட்டியுள்ளனர்.

தொடையூர் சபை உறுப்பினர்கள் சிலரால் நானூற்றுவன் குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சி நிலம் நான்கு முறை விற்பனைக்கு ஆளாகியது. அந்நிலத்தொகுதிகளின் பெரும்பகுதியைத் தந்தையும் மகனுமான கேரளத்தவர்களே வாங்கியதையும் அவர்களுள் மகன், வாங்கிய கையோடு பைஞ்ஞீலிக் கோயிலுக்கு அதை உரிமை மாற்றம் செய்ததையும் வெளிச்சமிடும் இந்நான்கு ஆவணங்களும் பிற்சோழராட்சியின் இறுதிக் காலத்தே, இப்பகுதியில் நிலவிய சமூக, பொருளாதாரச் சூழல்களையும் கோயில் தொடர்ந்து நிலப்பற்றாளராகவே நீடித்ததையும் வெளிப்படுத்துவதோடு, அக்கால ஆவண நடைமுறைகளையும் கண்முன் வைக்கின்றன. காலம் காத்துத் தந்திருக்கும் இந்தக் குறிச்சி ஆவணங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றுக்குப் பைஞ்ஞீலிக் கோயிலின் கொடை என்றே சொல்லலாம்.

குடக்கூத்து

இராகலைக்கோவன்

பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடற்கலை பற்றி அதிகம் பேசும் நூலாகச் சிலப்பதிகாரத்தைச் சொல்லலாம். அரங்கேற்று காதை, கானல்வரி, ஊர்காண்காதை, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, நடுகற்காதை எனச் சிலம்பின் பல காதைகளில் ஆடற்கலைத் தரவுகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ‘பாட்டும் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து’ ஆடிய மாதவி, பதினோராடல்களையும் நிகழ்த்திப் பெருமிதமுற்றதைக் கடலாடு காதையில் காண்கிறோம். அந்தப் பதினோராடல்களில் ஒன்றுதான் குடக்கூத்து.

‘வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீள்நிலமளந்தோன் ஆடிய குடம்’ என்று இவ்வாடலை ஆடியவர், ஆடிய இடம் சுட்டும் சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து, ஆழ்வார் பெருமக்களும் இதை நிகழ்த்தியவர் திருமாலே என்பதை உறுதி செய்கின்றனர். ‘குடத்தை எடுத்தேறவிட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே’ என்று ஆண்டாளும், ‘குடமாடு கூத்தா’ என்று பெரியாழ்வாரும் கொண்டாடும் இந்தக் குடக்கூத்து விநோதக்கூத்து வகையைச் சேர்ந்தது.

குடக்கூத்தின் பின்னணியில் ஒரு கதை உண்டு. வாணன் என்னும் அசுரனின் மகள் உழையிடம் மன்மதன் மகன் அநிருத்தனுக்குக் காதல். அதை விரும்பாத வாணன் அநிருத்தனைப் பிடித்துத் தம் தலைநகரில் சிறையிட்டார். அவனை மீட்கப் பல கடவுளர்கள், ‘சோ’ நகருக்கு வருகின்றனர். அனைவருமே, திரைப்படங்களில் காட்டுமாறு புனைவடிவங்கள் கொண்டு கூத்தாடுநர்கள்போல் ஆடியவாறே நகருக்குள் நுழைந்து அநிருத்தனை மீட்க முயல்கின்றனர். மாதவியின் பதினோராடல்களில் சில அவர்களால் இங்கு நிகழ்த்தப்பட்டவையே. அவற்றுள் குடக்கூத்து திருமால் ஆடியது. பல குடங்களுடன் அவர் ஆடியதைப் பெரியாழ்வார் பதிவு செய்துள்ளார்.

சிலப்பதிகாரம் அடையாளப்படுத்தும் பதினோராடல்களில், இக்குடக்கூத்தே தமிழ் மக்களால் போற்றி ஏற்கப்பட்ட கலை வடிவமாக அமைந்ததைத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாகக் கிடைக்கும் குடக்கூத்துச் சிற்பங்கள் நிறுவுகின்றன. பிற்பல்லவர் காலமான பொதுக்காலம் 8ஆம் நூற்றாண்டிலிருந்து பிற்சோழர் காலமான 12ஆம் நூற்றாண்டு வரையில் இவ்வாடல் தமிழ்ச் சமுதாயத்தில் பரவலாகப் பயிலப்பட்டது.

இதுநாள்வரை பார்வைக்குக் கிடைத்திருக்கும் தமிழ்நாட்டுக் குடக்கூத்துச் சிற்பங்களுள் காலத்தால் முற்பட்டது சிராப்பள்ளி மாவட்டம் திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர் கோயில் துணைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. கால்களைக் குறுக்கீடு செய்து கண்ணன் ஆடுமாறு போலக் காட்டப்பட்டுள்ள இதில், குடம் அவரது இடக்கையின் மேற்பகுதியில் உள்ளது. வலக்கை நெகிழ்கையாக, தலையை வலப்புறம் சாய்த்துக் கண்ணன் நிகழ்த்தும் இந்த ஆடல் திருக்கோலம் அழகின் உச்சமெனலாம்.

சிவலோகநாதர் கோயில், கிராமம், விழுப்புரம் மாவட்டம்

பல குடங்களுடன் ஆடுமாறு அமைந்த சிற்பம் விழுப்புரம் மாவட்டம் கிராமம் எனும் ஊரிலுள்ள சிவலோகநாதர் கோயிலில் அமைய, இக்குடங்கள் ஆடும் நிலையிலேயே தூக்கி எறியப்பட்டுத் தோளிலோ, மேற்கையிலோ கொள்ளப்பட்டமையை ஐயாறப்பர் கோயில் சுற்றுமாளிகைத் தூண் சிற்பம் வழி அறியமுடிகிறது. இதுநாள்வரை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தால் அறியப்பட்டிருக்கும் 40 குடக்கூத்துச் சிற்பங்களின் பரவலான ஆய்வு பல அரிய தரவுகளைத் தந்துள்ளது.

ஆடலுக்குப் பயன்பட்ட குடத்தின் அளவு, கூத்தில் குடத்தின் நிலை, கூத்து நிகழ்த்திய முறை,குடமேந்திய கை, குடமேந்தாக் கை இவற்றின் இசைவான அசைவுகள்வழி காக்கப்படும் உடலின் சமன்நிலை, கால்நிலை, தலைச்சாய்வு, ஆடையணிகள் உள்ளிட்ட ஒப்பனை, இக்கூத்துக்கு இசையளித்த கருவிகள், அவற்றை இயக்கிய கலைஞர்கள் என இச்சிற்பங்கள் அள்ளித்தரும் கலையியல் செய்திகள் அளப்பரியன. இச்சிற்பங்களில் பெரும்பாலன ஆடவர்களையே குடக்கூத்தர்களாகக் காட்டினாலும், சிலவற்றில் பெண்களும் குடமேந்தியுள்ளனர்.

குடக்கூத்தாடும் பெண்

இசையற்ற கூத்தாகவே இது நிகழ்த்தப்பட்டதை 28 சிற்பங்கள் உணர்த்த, 12 சிற்பங்களில் உடன்கூட்டமாகத் தாளம், உடுக்கை, இடக்கைக் கலைஞர்களைக் காணமுடிகிறது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்திலுள்ள குடக்கூத்துக் கலைஞர் குடமுழவின் தாளத்திற்கேற்ப ஆடுவது வேறெங்கும் காணாத சிறப்பாகும். அவரது ஒருகால் தரையில் ஊன்றியிருக்க, மற்றொரு கால் இடுப்பளவு உயர்ந்துள்ளது. இடப்புறம் சாய்ந்தாடும் அவரது இடக்கை உடலின் சமநிலை காக்க, நெகிழ்கையாய்த் தாழ்ந்துள்ளது. குடமோ வல முழங்கையில்.

குடக்கூத்துக் கலைஞர், தஞ்சாவூர்

கோயில்களின் பல கட்டுமான உறுப்புகளில் இடம்பெற்றுள்ள இக்குடக்கூத்துச் சிற்பங்கள் மிகுதியும் காணப்படுவது தாங்குதளத்தில் அல்லது கூரையுறுப்புகளில் ஒன்றான வலபியில்தான். இறைக்கோட்டங்களுக்கு மேலமையும் மகரதோரணங்களிலும் குடக்கூத்தர்களைக் காணலாம். கூரையின் முன்னிழுப்பான கபோதத்தின் கூடுகளிலும் இக்கூத்தர்கள் சிற்றுருவச் சிற்பங்களாய் இளநகை சிந்துகின்றனர்.

மாதவியின் ஆடல்களுள் ஒன்றான இக்குடக்கூத்து, சோழர் காலத்தில் மிகப் பரவலாக நிகழ்த்தப் பெற்றதைச் சிற்பப் பேராசான்களின் உளிச்செதுக்கல்கள் தெள்ளிதின் உணர்த்துகின்றன. கையின் மேற்பகுதி, முழங்கை அருகில், தோள் மீது எனப் பெரும்பாலான சிற்பங்களில் காட்சிதரும் குடம், தலைக்கு மாறிக் குடக்கூத்து கரகமான வரலாற்றையும் கும்பகோணம் அருகே திருச்சத்திமுற்றத்துக் கோயிலிலுள்ள நாயக்கர் காலத் தூண் சிற்பம் கண்முன் காட்சியாகக் காட்டிக் கண்சிமிட்டுகிறது.

எறும்பீசுவரத்து வேதிபாதச் சிற்பங்கள்

மு. நளினி, இரா. கலைக்கோவன்

சிராப்பள்ளித் தஞ்சாவூர்ச் சாலையில் 15 கி. மீ. தொலைவில் உள்ளது எறும்பியூர். இவ்வூர்க் குன்றின் உச்சியிலுள்ள முற்சோழர் கோயில், சிராப்பள்ளி மாவட்டத்தின் சிறப்பான மலைக்கோயில்களுள் ஒன்றாகும். எறும்பீசுவரர் கோயிலாக அறியப்படும் இதன் இறையகம் (விமானம்) ஒருதள வேசரக் கற்றளியாக அமைந்துள்ளது.

உபானத்தின் மீது பாதபந்தத் தாங்குதளம் பெற்று, 5. 74 மீ. பக்கமுடைய சதுரமாக எழும் இறையகம், அதன் முன்னுள்ள முகமண்டபம் ஆகியவற்றின் சுவருக்கும் தாங்குதளத்திற்கும் இடைப்பட்டுள்ள உறுப்பு வேதிகைத்தொகுதி. கம்புகளுக்கு இடைப்பட்ட பாதங்களுடனான கண்டம் (உள்ளடங்கிய பகுதி), கீழ்நோக்குத் தாமரைவரி, வேதிகை என அமைந்துள்ள இத்தொகுதியின் பாதங்கள் சுவரில் அமையும் தூண்களின் கீழ்ப்பகுதிகளாகும். இப்பாதங்களில் பெரும்பாலன சிற்றுருவச் சிற்பங்கள் கொள்ள, சிலவற்றில் கொடிக்கருக்குகளும் பூக்களும் பறவை, விலங்குருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. விமானத்தின் உயரத்தை எழுச்சியுடன் கூட்டும் இவ்வேதிகைத் தொகுதியின் பாதச் சிற்பங்களை விரிவான அளவில் காணலாம்.

வேதிபாதச் சிற்பங்கள்

இறையகம், முகமண்டபம் இரண்டிலும் 60ஆக உள்ள வேதிபாதங்களில், 14 முகமண்டபப் பகுதியிலும் 46 விமானக் கட்டுமானத்திலும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள், விமானப்பகுதியில் இரண்டு பாதங்களும் முகமண்டபப் பகுதியில் நான்கு பாதங்களும் மட்டுமே செதுக்கல் ஏதுமின்றி வெறுமையாக உள்ளன. எஞ்சியவற்றுள் 33 பாதங்கள் சிற்பங்கள் பெற, 10 பாதங்கள் கொடிக்கருக்கு கொண்டுள்ளன. மூன்று பாதங்களில் உள்ள சிற்பங்கள் அடையாளப்படுத்த முடியாத அளவிற்குத் தேய்ந்துள்ளன. நான்கு பாதங்களில் நந்திகளும் இரண்டில் அன்னப்பறவையும் ஒன்றில் யானையும் மற்றொன்றில் யாளியும் செதுக்கப்பட்டுள்ளன.

கருவறையின் கிழக்குப்பாதங்களில் தனித்த நந்திகளும் முகமண்டபத் தெற்குப்பாதத்தில் இரட்டை நந்திகளும் வடக்குப் பாதத்தில் மூன்று நந்திகளும் காட்டப்பட்டுள்ளன. சிராப்பள்ளி மாவட்டத்தில் துடையூர் விஷமங்களேசுவரர் போன்ற ஒன்றிரண்டு சோழர் காலக் கோயில்களிலேயே நந்திகள் இத்தகு பெருமைநிலை பெற்றுள்ளன. கிழக்குப்பாத நந்தி கிரீவநந்திகளை ஒத்துள்ளமையும் இங்கு எண்ணத்தக்கது.

வேதிபாதச் சிற்பங்கள் உள்ள சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் எறும்பீசுவரமும் விஷமங்களேசுவரமும் மட்டுமே பதினொரு ஆடற்சிற்பங்களைக் கொண்டுள்ளன. எறும்பியூர்ச் சிற்பங்களுள் ஒன்று சிவபெருமானின் ஆடலாக அமைய, நான்கில் ஆண் இசைக்கலைஞராகவும் பெண் ஆடலரசியாகவும் காட்டப்பட்டுள்ளனர். சிலம்பின் அரங்கேற்றுகாதை குறிப்பிடும் பதினோராடல்களில் ஒன்றான குடக்கூத்து மூன்று பாதங்களில் மிளிர்வதும் தமிழ்நாட்டின் வேறெந்தத் திருக்கோயிலின் பாதச்சிற்பத் தொகுதிகளிலும் காணமுடியாத காட்சியாகும். தனித்த ஆடவர் ஆடல் மூன்று பாதங்களில் பதிவாகியுள்ளது.

பாகவதப் படப்பிடிப்புகளாக கருடன்மீதான விஷ்ணுவும் கண்ணன் உறியிலிருந்து வெண்ணெய் எடுப்பதும் ஆயர்களைப் பெருமழையிலிருந்து காக்க கோவர்த்தனமலையைக் குடையாகப் பிடிப்பதும் தன்னைக் கொல்ல வந்த காளை வடிவ அரக்கனை அடக்கி அழிக்கும் வீரமும் காட்டப்பட்டுள்ளன. இராமாயணப் பக்கங்களிலிருந்து சூர்ப்பனகையின் மூக்கறுப்பும் வாலி, சுக்ரீவப் போரும் வாலிமீது இராமன் அம்பெய்வதும் எடுக்கப்பட்டுள்ளன. வாலி, சுக்ரீவப்போர் மேற்கிலும் வடக்கிலும் இரண்டு முறை காட்டப்பட்டுள்ளமையும் இக்கோயிலுக்கே உரிய தனித்தன்மையதாக விளங்குகிறது.

தமிழ்நாட்டின் வேறெந்தச் சோழர் காலக் கோயிலின் பாதச்சிற்பங்களிலும் இடம்பெறாத அளவிற்கு எறும்பியூர்ப் பாதங்கள் பல்வேறு இறைவடிவங்களை, அவற்றுள் சிலவற்றை அவற்றின் வாகனங்களோடு தம்மில் கொண்டுள்ளன. சிம்மவாகினி, எருமையின் மேல் இயமன், மூஞ்சுறு தாங்கும் பிள்ளையார், குதிரையின் மேல் செண்டேந்திய ஐயனார், பேய் சுமக்கும் காளி, நந்தியின் மீது மழு ஏந்திய சிவபெருமான், இரட்டையர்களாய்க் கதிரும் நிலவும் ஆகியவற்றுடன் முத்தலைஈட்டியுடன் பாயும் காளியையும் இங்குப் பதிவு செய்துள்ளனர். இவை தவிர, சடைப்பாரத்துடன் நிற்கும் இருவரும் யாளிப் போர்வீரர் இருவரும் கருடாசன பூதமும் அமர்நிலை அரக்கரும் பத்மநிதியும் எந்தக் குழுவிலும் இணைக்கமுடியாத தனித்த சிற்பங்களாக எறும்பியூர்ப் பாதங்களை அலங்கரிக்கின்றனர்.

சிவபெருமானுக்குரியதான இக்கோயிலில் அவர் தொடர்பான தோற்றங்கள் இலிங்கவழிபாடு, யானையை அழித்தவர், சிவஆடல், நந்தி ஊர்தியர் என மிகமிகக் குறைந்த அளவிலேயே காட்டப்பட்டுள்ளமை அக்காலச் சமயப் பெரும்போக்கைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

ஆடற்சிற்பங்கள்

சிவபெருமானின் ஆடல்

மண்டலநிலையில் இருபாதங்களையும் பார்சுவத்தில் அமைத்து சிவபெருமான் ஆடும் ஆடலுக்கு, கீழே கால்களைக்குக் குறுக்கீடு செய்து வலப்புறம் திரும்பி அமர்ந்திருப்பவர் தம் மடியிலுள்ள குடமுழவை வாசித்தும் இறைவனைப் பார்த்தவாறு இடப்புறம் அமர்ந்திருப்பவர் தாளங்களை இயக்கியும் இசைகூட்ட, ஆடலைப் போற்றுமாறு வலப்புறம் மேலே உள்ள வானவர்
கையுயர்த்தியுள்ளார். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், இடைத்தொங்கல் பெற்ற சிற்றாடை கொண்டு நேர்ப்பார்வையராய் ஆடும் இறைவனின் பின் கைகளில் வலப்புறம் துடி, இடப்புறம் தீயகல். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை அர்த்தரேசிதமாகியுள்ளது. ஆடும் இறைவனின் இருபுறத்தும் கவரிகள்.

குடக்கூத்தாடும் பெண் கலைஞர்

குடக்கூத்துச் சிற்பங்கள் மூன்றனுள் இரண்டில் ஆடவர் தனித்தாட, பெண்ணாடும் குடக்கூத்து இசைக்கலைஞரைப் பெற்றுள்ளது. பாதங்களைப் பார்சுவத்தில் இருத்தி, இடக்கையை அர்த்தரேசிதமாக்கி, இடுப்பை இடப்புறம் நன்கு உயர்த்திச் சிற்பத்தளத்தின் மூன்றில் இரண்டு பகுதிகளில் பரவியுள்ள பெண் குடக்கூத்துக் கலைஞரின் வலக்கை மேற்பகுதியில் பானை. முழங்கையளவில் மடங்கியுள்ள அக்கையின் கீழ்ப்பகுதி மார்பருகே கடகமாக்கப்பட்டுள்ளது. உயர்த்தி முடித்த கொண்டை, சரப்பளி, கைவளைகள் கொண்டு ஆடும் பெண்ணின் வலப்புறம், அதே அமைப்பிலான கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, இடைத்தொங்கல் பெற்ற இடுப்புச் சிற்றாடையுடன் உடல் வலப்புறம் திரும்பியிருக்குமாறு செண்டுதாளக் கலைஞராக ஆடவர்.

ஆண் குடக்கூத்தர்களுள் ஒருவர் கரண இளைஞர். வலக்காலை ஊர்த்வஜாநு கரணத்தின் முதல் நிலையில் இருத்தி இடப்பாதத்தைப் பார்சுவமாக்கியுள்ள அவரது இடக்கை முழங்கையளவில் மடங்கி மார்பருகே பதாகமாய் அமைய, மார்பருகே தாழ்ந்துள்ள வலக்கையின் மேற்பகுதியில் பானை. தலையை இலேசாக இடப்புறம் சாய்த்து, வலப்பார்வையராக முக்கோண இடைத்தொங்கல் பெற்ற சிற்றாடையுடன் உச்சிக் கொண்டையும் சரப்பளியும் பெற்றாடும் அவரது பானையின் வாய் நன்கு அகன்றுள்ளது. இரண்டாமவரோ வலப்பாதத்தைப் பார்சுவமாகவும் இடப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் நிறுத்தி, இடக்கையை அர்த்தரேசிதத்தில் வீசி, மார்பருகே மடிந்து இறங்கியுள்ள வலக்கையின் மேற்புறத்தே பானை நிறுத்திக் குடக்கூத்து காட்டுகிறார். இதுவும் வாயகன்ற பானை என்ற போதும் கழுத்தின் குறுக்கம் உயரத்தைக் கூட்டுகிறது. நிறைவடையாத பாதச்சிற்பங்களில் இதுவும் ஒன்று.

தனியர் ஆடலைப் பதிவுசெய்துள்ள மூன்று பாதங்களுள் ஒன்றில் சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, கைவளைகள், முக்கோணத்தொங்கலுடனான இடைச்சிற்றாடை பெற்று மண்டலத்தில் பார்சுவப் பாதங்களுடன் ஆடும் ஆடவரின் இடக்கை மடிந்து மார்பருகே காட்சிதர, வலக்கை முழங்கை அளவில் மடிந்து மேலுயர்த்தப்பட்டுள்ளது. சுடர்முடி, பனையோலைக் குண்டலங்கள், சுவர்ணவைகாக்ஷம், கைவளைகள், முக்கோணத்தொங்கல் பெற்ற இடைச்சிற்றாடை கொண்டு ஆடும் மற்றோர் ஆடவரின் பாதங்கள் பார்சுவத்தில் அமைய, வலக்கை மேலுயர்த்திய பதாகமாக உள்ளது. இடக்கை நெகிழ்ந்துள்ளது. ஆடவரின் இடப்புறம் அழகிய தோரணம் காட்சிதர, இடையாடையின் முடிச்சுத்தொங்கல்கள் இடப்புறம் காட்டப்படுள்ளன. மூன்றாமவர் சிறுமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சுவர்ணவைகாக்ஷம், முடிச்சுத்தொங்கல்களுடனான இடைக்கட்டு இருத்தும் சிற்றாடை அணிந்து, மண்டலப் பார்சுவத்தில் வலக்கையில் பதாகம் காட்டி, இடக்கையை அர்த்தரேசிதமாக்கியுள்ளார். தலையின் இடச்சாய்வால் முகம் வலம் திரும்பியுள்ளது.

ஆண் இசைக்கலைஞருடன் பெண் ஆடற்கலைஞர்

நான்கு பாதங்களில் ஆண் இசைக்கலைஞருடன் பெண் ஆடற்கலைஞர் இணைந்தாடும் காட்சியைப் பார்க்கமுடிகிறது. அவற்றுள் நிறைவடையாதிருக்கும் பாதச்சிற்பத்தில் வலப்பாதத்தைப் பார்சுவத்தில் திருப்பி, இடக்காலை ஊர்த்வஜாநு கரண முதல் நிலையில் உயர்த்தியுள்ள ஆடற்காரிகையின் இடக்கை மேலுயர்த்திய பதாகமாக அமைய, வலக்கை தொடையில் இருத்தப்பட்டுள்ளது. மண்டலப் பார்சுவத்தில் இடுப்புக்கு மேற்பட்ட உடற்பகுதி வலச்சாய்வில் அமைய, இடத்தோளில் தொங்கும் இடக்கைக் கருவியை வலக்கையால் தட்டிக் கயிற்றுப்புரிகளை இடக்கையால் இளக்கியும் இறுக்கியும் இசைகூட்டுகிறார் ஆடற்பெண்ணின் வலப்புற ஆண் கலைஞர்.

தோரணங்கள் பின்னிருக்கத் தாளக்கலைஞர் வலப்புறத்தும் ஆடற்பெண் இடப்புறத்துமாய்க் காட்சிதரும் மற்றொரு சிற்பத்தில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடை கொண்டு சமபாதத்தில் நின்று ஆடற்கலைஞரை நோக்கியவாறு செண்டுதாளங்களை இயக்கும் இசைஞர் பாதத்தின் மூன்றில் ஒருபகுதியில் விளங்க, ஆடலர் இரண்டு பங்குகளில் பரவியுள்ளார். மண்டலப் பார்சுவத்தில் இடக்கையைத் தொடையில் இருத்தி, வலக்கையில் கடகம் காட்டி ஆடும் அவரும் பனையோலைக் குண்டலங்கள் அணிந்துள்ளார். இடைத் தொங்கலுடனான சிற்றாடையின் முடிச்சுத்தொங்கல்கள் வலக்காலின் புறத்தே ஆட்டநிலைக்கேற்ப நெகிழ்ந்துள்ளன.

ஆடற்பெண் வலப்புறத்தும் இடக்கைக் கலைஞர் இடப்புறத்துமாய் அமைந்த ஆடற்காட்சியில் பெண், சரப்பளி, பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை அணிந்து, பாதங்கள் இரண்டையும் பார்சுவத்தில் இருத்தி, வலக்கையைப் பதாகமாய் மார்பருகே நிறுத்தி, இடக்கையில் வியப்பு காட்ட, இடப்புறம் சவடியும் சிற்றாடையுமாய் இசையெழுப்பும் இடக்கைக்
கலைஞரும் பார்சுவப் பாதங்களுடன் மண்டலநிலையிலேயே காட்சிதருகிறார்.

இதே அமைப்பிலான மற்றொரு சிற்பத்தில் வலக்கை முழங்கையளவில் மடிந்து மேலுயர்த்திய பதாகமாக அமைய, இடக்கையைக் கடியவலம்பிதமாக்கி ஆடும் வலப்பெண் பனையோலைக் குண்டலங்கள், சவடி, இடைத்தொங்கலுடனான சிற்றாடை அணிந்துள்ளார். இடக்கை வாசிக்கும் இடப்புற ஆடவரோ கரண்டமகுடராய்ப் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி கொண்டு மண்டலநிலையில் பார்சுவப் பாதங்களுடன் காட்சிதருகிறார்.

ஊர்திகளில் இறைவடிவங்கள்

சோழர் கோயில்களின் பாதச்சிற்பங்களில் ஊர்திகளில் அமர்ந்தநிலையில் விஷ்ணு, முருகன் தவிர ஏனைய இறை வடிவங்களைப் பார்ப்பது அரிது. ஆனால், எறும்பியூர் வேதிபாதங்களில் சிவபெருமான், விஷ்ணு, காளி, கொற்றவை, பிள்ளையார், ஐயனார் ஆகியோருடன் எமனும்கூட எருமையில் அமர்ந்த நிலையில் பதிவாகியுள்ளார். வல முன் கை வாள் கொள்ள, இட முன் கை சிங்கத்தின் கழுத்தில் இருக்க, பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி சிம்மவாகினியாகக் காட்சிதரும் கொற்றவையின் தலையில் கரண்டமகுடம். பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சுவர்ணவைகாக்ஷம் அணிந்துள்ள இறைவியின் இடையில் பட்டாடை. முதுகு விரிப்புடன் உள்ள சிம்மம் வாலை உயர்த்தி வளைத்தபடி முன்னங்கால்களுள் ஒன்றை உயர்த்தி வாய்திறந்த நிலையில் உள்ளது.

காளியைத் தோளில் தாங்கும் பெண் பேய்

சடைப்பாரத்துடன், வலச்செவியில் பிணக்குண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம் அணிந்து, வல முன் கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இட முன் கையைக் கடகமாகத் தொடைமேல் இருத்தியுள்ள காளியைத் தன் தோளில் தாங்கும் பெண் பேய் கருடாசனத்தில் திரங்கிய மார்புகளுடன் அமைய, அதன் வலக்கை தொடைமீதுள்ளது. காளியின் வலக்கால் பேயின் வலப்பாதத்தில் அழுந்த, இடப்பாதம் அதன் தோள் மீதுள்ளது. பேயின் இடக்கை காளியின் இடக்காலைத் தழுவித் தாங்க உயர்ந்துள்ளது. காளியின் பின்கைக் கருவிகளை இனங்காண முடியவில்லை.

எருமையின் மீது எமன் ஒரு பாதத்திலும் நந்தியின் மீது சிவபெருமான் ஒரு பாதத்திலும் காட்சிதந்தபோதும் சிற்பங்கள் நிறைவடையாமையால் அவர்தம் தோற்றப்பொலிவை அறியக்கூடவில்லை. சிவபெருமானின் வலப் பின் கையில் மழு. எமன் கைக்கருவி கொடுவாளாகலாம். கருடாசனத்திலுள்ள கருடன் தோள்களில் உத்குடியாசனத்திலுள்ள விஷ்ணுவின் பின் கைகளில் சங்கு, சக்கரம். கிரீடமகுடம் அணிந்துள்ள அவரது வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை முழங்கால் மீது நெகிழ்ந்துள்ளது. கருடன் இருகைகளாலும் இறைவனின் திருவடிகளைத் தாங்கியுள்ள இச்சிற்பமும் நிறைவுறவில்லை.

பிள்ளையாரும் ஐயனாரும்

இவற்றினின்று மாறுபட்ட நிலையில் ஒரே பாதத்தில் இரு தெய்வங்களாகப் பிள்ளையாரும் ஐயனாரும் அவரவர் ஊர்திகளான மூஞ்சுறு, குதிரை மீதமர்ந்தவர்களாகக் காட்சிதருகின்றனர். கரண்டமகுடத்துடன் இடம்புரியாக உள்ள பிள்ளையாருக்கு மட்டும் இருபுறத்தும் கவரிகளும் மேலே குடையும். பின் கைகளில் அங்குசம், பாசம் கொண்டுள்ள அவரது வல முன் கையில் உடைந்த தந்தமும் இட முன் கையில் மோதகமும் உள்ளன. சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்களுடன் விளங்கும் ஐயனாரின் வலக்கையில் செண்டு. இடக்கை குதிரையின் கழுத்தைப் பற்றியுள்ளது. பிள்ளையாரின் ஊர்தியான மூஞ்சுறு அமர்நிலையில் காட்சிதர, ஐயனாரின் குதிரை நடைபயில்கிறது.

சிறப்புச் சிற்பங்கள்

ஆடல், ஊர்தி இறைகள் தவிர்த்த சிற்பங்களில் நான்கினை அவற்றின் செதுக்குத் திறத்துக்காகவும் தனித்தன்மைக்காகவும் விரிவாகப் பார்ப்பது பயன்தரும். சோழர் காலப் பாதச்சிற்பங்களில் அரிதாகக் காணப்படும் சூரிய, சந்திரர் இங்கு இணைந்த நிலையில் பறக்கும் கோலத்தில் மிகச் சிறந்த உடலமைப்புடன் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வலக்கையில் மலர் ஏந்தி, இடக்கையால் போற்றும் அவர்தம் தலை சுற்றி ஒளிவட்டம். இலேசான வலச்சாய்வுடன் முகமும் விண்ணுலாவிற்கேற்ப வளைவுகள் பெற்ற உடலமைப்பும் இச்சிற்பங்களில் மிக நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னிரு கைகளில் முத்தலைஈட்டி ஏந்தி, பின் கைகளில் வலப்புறம் கத்தியும் இடப்புறம் கேடயமும் கொண்டு அசுர வேகத்தில் செல்லும் சுடர்முடிக் காளியின் சுந்தரவடிவம் சின்னஞ்சிறு தூண் பாதத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. அம்மையின் நெற்றிப்பட்டமும் பனையோலைக் குண்டலங்களும் முடிச்சுத்தொங்கல்களுடன் இடையாடையை இருத்தும் இடைக்கட்டும் அவர் எழிலுக்கு எழில் சேர்க்கின்றன. முடிச்சுத்தொங்கல்களின் பரவல் காளியின் விரைவை உணர்த்துகின்றன.

காளை வடிவ அரக்கனை அடக்கும் கண்ணன்

காளை வடிவில் வந்த அரக்கனைக் கண்ணன் அழிக்கும் காட்சி பல கோயில்களில் காணப்பட்டாலும் எறும்பியூர்ப் பதிவு இணையற்றது. காளையின் தலையை வலக்கையால் இழுத்துத் தன் பக்கம் திருப்பிய நிலையில் இடக்கையை அதன் முதுகில் ஊன்றி அழுத்தும் கண்ணனின் கோலம் உடலமைப்பு, மெய்ப்பாடு இரண்டு நிலைகளிலும் உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு நிகழ்வை அது நடக்குமாறு போலவே சிற்பமாக்குவது எளிதானதன்று. தேர்ந்த உளித்திறம், கற்பனையாற்றல், நிகழ்வு பற்றிய செயல்தெளிவு ஆகியன இருந்தால்தான் பதிவு காலத்தை விஞ்சி நிற்கும். அவ்வகையில் இங்குள்ள கண்ணன் காளையழிக்கும் காட்சி தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயில் பதிவிலும் பார்க்கமுடியாத சிற்ப அற்புதமாக விளைந்துள்ளது.

சிராப்பள்ளி மாவட்டச் சோழர் கோயில்கள் பலவற்றில் வேதிபாதச் சிற்பங்களைக் காணமுடிந்தாலும் எறும்பியூர்ச் சிற்பங்கள் அவற்றின் ஆடல் காட்சிகளாலும் ஊர்திகளிலான இறை வடிவங்களாலும் தனித்துவம் பெற்றுள்ளன.

ஒரு கோபுரத்தின் கதை

இரா. கலைக்கோவன்

திருப்பைஞ்ஞீலி கோபுரம்

கோபுரங்களுக்குக்கூட கதை உண்டா எல்லாக் கோபுரங்களுக்கும் கதை இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், சில கோபுரங்களின் கதைகள் கல்வெட்டுகளாகக் கண்முன் வளர்கின்றன. பைஞ்ஞீலிக் கோபுரத்தின் கதை மூன்று கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது. கதைக்குள் போவதற்கு முன், ‘கோபுரம்’ எது என்பது தெரியவேண்டாமா? ஒரு கோயிலின் நுழைவாயிலும் அதன் மேலெழும் கட்டுமானமும்தான் கோபுரம். பலர் இறைவன் உள்ள கருவறைக் கட்டுமானத்தையும் கோபுரம் என்றே அழைக்கிறார்கள். ஆனால், அந்த அமைப்பிற்கு விமானம் என்று பெயர்.

‘திருப்பைஞ்ஞீலி’ என்று திருவுடன் இணையும் பைஞ்ஞீலி, சிராப்பள்ளி மாவட்ட மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள ஊராகும். முதல் இராஜராஜர் காலந்தொட்டுக் கல்வெட்டுகள் பெற்று விளங்கும் இக்கோயில் தேவார மூவரால் பாடப்பெற்றது. சூழவுள்ள வீதியையும் சேர்த்து நான்கு சுற்றுகள் கொண்டுள்ள இக்கோயிலின் மூன்றாம் சுற்றில் பொதுக்காலம் 8ஆம் நூற்றாண்டுக் குடைவரைக் கோயில் உள்ளது. தென்தமிழ்நாட்டிலுள்ள இரண்டே சோமாஸ்கந்தர் குடைவரைகளில் இது ஒன்று. தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய இக்குடைவரையில் மட்டும்தான் உமையன்னை வலப்புறமும் சிவபெருமான் இடப்புறமுமாய் இடையில் குழந்தை முருகனுடன் அமர்ந்துள்ளனர். வேறெந்தக் குடைவரையிலும் இந்த இட, வல மாற்றம் இல்லை.

இந்தச் சுற்றின் வாயிலாகவே எழுநிலைக் கோபுரம் ஒன்றமைக்கச் சோழர் கால மக்கள் விரும்பினர். அதற்கான பணி மூன்றாம் குலோத்துங்க சோழர் ஆட்சியில் பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்தது. திரிபுவன வீரதேவராகக் கல்வெட்டுகள் கொண்டாடும் இம்மூன்றாம் குலோத்துங்கர் அப்பெயரிலேயே கும்பகோணத்திற்கருகில் உருவாக்கிய திரிபுவன வீரேசுவரம் கோயிலின் முதற்கோபுரம் போலவே கருதப்பட்டுப் பைஞ்ஞீலிப் பணி வளரத் தொடங்கியது.

பேரளவினதாக ஏழுநிலைகள் கொண்டதாய் உருவாக்க எண்ணித் தொடங்கப்பட்ட இக்கோபுரத்தின் துணை, தாங்குதளங்களின் கட்டமைப்புப் பார்த்தாலே, எத்தகு எதிர்பார்ப்புடன் இக்கோபுரம் உயரத் தொடங்கியது என்பது புரிந்துவிடும். குலோத்துங்கரின் 31ஆம் ஆட்சியாண்டில் பதிவாகியுள்ள கல்வெட்டு, இக்கோபுரப் பணிக்கான செலவுகளைச் சந்திக்க, ஆதனூர் என்ற ஊரையே அதன் வருவாய், வரிகள் உட்பட மன்னர் அரசாணை வழிக் கோயிலுக்குக் கொடையளித்ததை உணர்த்துகிறது.

கீழ்த்தளம் எழும்போதே கட்டுமானச் செலவுகள் கைமீறிப் போனதால், ஆதனூர் வருவாய் போதாத நிலை ஏற்பட்டது. அதனால், தம் 36ஆம் ஆட்சியாண்டில் பெரியகள்ளிக்குடி என்னும் ஊரை அதன் வரி, விளைவு உட்படக் கோயிலுக்களித்து மற்றோர் அரசாணை மன்னரால் பிறப்பிக்கப்பட்டது.

கோபுரத்தின் வெளிப்புறத்தே காவலர் சிற்பங்கள் அமைந்தன. உட்பகுதியில் தெற்கிலும் வடக்கிலுமாய் 12 பெருந்தூண்கள் நிறுவி, ஒவ்வொரு தூணையும் பல சதுரங்களாக வரையறுத்த சிற்பிகள், ஒவ்வொரு சதுரத்திலும் அழகான சிற்பங்களைச் செதுக்கினர். சோழர் கால ஆடற்கோலங்கள், பூதங்களின் பல்வேறு அமர்வுகள், இறைவடிவங்கள் என அந்த 12 தூண்களில் அமைந்த 157 சிற்பங்களும் சோழர் கலைமுறைக்கும் சமயச் சிந்தனைகளுக்கும் சான்றுகளாயின. உட்பகுதியின் மேற்புறத்தே வடக்கில் கங்காளரையும் தெற்கில் சிவபெருமான் உமை இணையையும் பெருஞ்சிற்பங்களாய்க் காட்டிய சிற்பிகள், தூண்களுக்கு இடைப்பட்ட ஈரடுக்கு மாளிகையைத் தங்கள் கற்பனை வளத்தால் செழுமையாக்கினர். பிற்சோழர் கால ஆடற்கலைப் பெருமை விளம்பும் இந்த மாளிகைச் சிற்பங்களும் இதை அலங்கரிக்கும் தூண்களின் வடிவமைப்பும் கண்களில் நிற்கும் கலைச் சிறப்பின.

கோபுரத் தூண்கள்

மூன்றாம் குலோத்துங்கரை அடுத்து வந்த மூன்றாம் இராஜராஜர் காலத்தில் பாண்டியர் எழுச்சி ஏற்பட்டது. இராஜராஜருக்கு உதவ மைசூரிலிருந்து ஒய்சள அரசர் படை நகர்த்தினார். சோழ, பாண்டிய, ஒய்சளப் படைகளுக்கிடையே பைஞ்ஞீலியும் அதைச் சுற்றியிருந்த பாச்சில் கூற்றமும் பேரிழப்பைச் சந்தித்ததால், கோபுரப்பணி தடைபட்டது. குறைபணியாய் நின்ற இக்கோபுரத்தை முழுமையுறச் செய்யவேண்டும் எனும் அவா பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் இறுதியில், மாறவர்மர் குலசேகர பாண்டியரின் 27ஆம் ஆட்சியாண்டில் பெருந்தீயாய் எழுந்தது.

தவப்பெருமாள் முதலியாண்டான் என்பார் பொறுப்பேற்றார். சித்ரமேழிப் பெரியநாட்டார் துணையாயினர். நாட்டார் உறுப்பினர் ஒவ்வொருவரும் அவரவர் நிலங்களின் அளவுக்கேற்பப் பொருளோ, விளைவோ அளிக்க முடிவாயிற்று. அந்தப் பெருங்கருணையால் கீழ்நிலை முற்றுப்பெற்று இரண்டாம் நிலை தொடங்கப் பெற்றாலும் கோபுரப்பணி முடிவடையவில்லை.

ஈரடுக்கு மாளிகை

திரிபுவனவீரேசுவரத்தினும் சிறப்பான படைப்பாக விளங்கியிருக்க வேண்டிய இந்தப் பைஞ்ஞீலிக் கோபுரம், பலமுறை முயன்றும் இரண்டாம் தளத்துடன் நிறைவடையாமல் நின்றதற்குத் தொடர்ந்த போர்களும் நிலையற்ற அரசியலுமே காரணங்களாயின. முற்றுப்பெறாது போனாலும் தான் வளர்ந்த காலத்தின் சமூகப் பண்பாட்டுப் படப்பிடிப்பாய் 12 தூண்களும் 157 சோழச் சிற்பங்களுமாய் எழுச்சியோடு நிற்கும் இந்தக் கோபுரத்தின் கதை கண்களை நனைத்தாலும் இருக்கும் இந்த நிலையிலும் அது கவிதையாகவே உள்ளம் நிறைக்கிறது.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 9. தொட்டான் . . பட்டான் . .

அன்புள்ள வாருணி, ‘பொதுவான இல்லம்’ என்ற பொருளுடன் தோன்றிய சங்ககாலப் பொதியில்கள், அந்தந்த ஊர்மக்களின் வழிபாட்டிடங்களாக விளங்கியதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் விரித்துப் பேசுகின்றன. ஊர்மக்களின் திரட்சிக்கேற்ப, அவர்கள் இருந்து வழிபட இடமளிப்பதற்காகவே அந்த எளிய பொதியில்கள் முன் மண்டபங்கள் பெறத் தொடங்கின. மக்கள் மண்டும் (கூடும்) இடம் என்ற பொருளில், ‘மண்டகம்’ என்று தொடக்கக் காலக் கல்வெட்டுகளில் அழைக்கப்பெறும் இம்மண்டபங்கள், காலத் தேவைக்கும் வழிபாட்டுப் பெருக்கத்துக்கும் ஏற்பப் பலவாய்ப் பெருகின.

குடைவரைக் காலத்திலேயே கருவறையாம் இறையகத்தின் முன் அகமண்டபம், முகமண்டபம் என இரண்டு மண்டபங்கள் உருவாயின. அவை கற்றளிக் காலத் தொடக்கத்தில் பெருகின. பெருமண்டபம், நிருத்தமண்டபம், நீராட்டு மண்டபம், திருவோலக்க மண்டபம் எனப் பலவாய்ப் பெயரேற்ற இக்கட்டுமானங்கள் பிற்சோழர் காலத்தில், கூரை தாங்கும் தூண்களின் எண்ணிக்கை அடிப்படையில் நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்களாய்ப் பேருருப் பெற்றன.

தமிழ்நாட்டில் பல்லாயிரமாய்க் கோயில்கள் இருந்தபோதும் மிகச் சிலவே இத்தகு பெருமண்டபங்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில். வேறெந்தக் கோயிலின் ஆயிரங்கால் மண்டபமும் பெறாத ஆளுயரச் சிற்பங்கள் இம்மண்டப முகப்பையும் உட்புறத்தையும் அணிசெய்கின்றன. நாயக்க மரபின் கலைச் செழுமையை அவர்தம் திருப்பணிகளுக்கு ஆளான தமிழ்நாட்டுக் கோயில்கள் சில கொண்டிருப்பினும், மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபப் பேருருவச் சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையன.

எங்கள் ஆய்வின்போது இம்மண்டபத் தூண்களை ஒன்றுவிடாமல் பார்த்தபோதுதான் பேராசிரியர் மு. நளினியின் பார்வையில்பட்டு அந்தச் சிற்பம் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் நாங்கள் அதுநாள்வரை கண்டிராத சிற்பமது. ஒரு பாலியல் குற்றவாளி நாயக்கர் ஆட்சியில் எப்படித் தண்டிக்கப்பட்டார் என்பதைப் படம்பிடித்துக் காட்டும் அச்சிற்பம் பெருந்தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது.

மூன்று நிகழ்வுகளின் கூட்டிணைவாக உள்ள அச்சிற்பத்தின் முதல் பிரிவான கீழ்ப்பகுதியில், ஓர் இளம்பெண் இடஒருக்கணிப்பில் சரிந்துள்ளார். அவரது கைகள் மார்பகங்களை மறைக்க முயலுமாறு மடிந்துள்ளன. அவருக்குப் பின்னுள்ள ஆடவர், அப்பெண்ணின் இடுப்பருகே தம் வலக்காலை இருத்தியவாறு அவரிடம் முறைதவறி நடக்கும் முயற்சியில் முனைந்துள்ளார்.

தாக்குதலுக்கு ஆளான பெண், தாக்கும் ஆடவர் இவர்கள் இருவருக்கும் பின்னால் நிற்பவர் நாயக்கர் காலக் காவலர். முடிச்சிடப்பட்ட தொப்பி போன்ற தலைப்பாகை, கழுத்தில் சரப்பளி, மார்பில் வீரத்தைக் குறிக்கும் சன்னவீரம், செவியணிகள், தோள்வளைகள் என கம்பீரமாகக் காட்சிதரும் அக்காவலர், தம் கையிலுள்ள கத்தியால் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயலும் ஆடவரின் பின்பகுதியில் குத்தியவாறே, இடக்கையால் அந்த ஆடவரைப் பிடிக்க முயற்சிக்கிறார். இரண்டாம் நிலையாகப் படமாகியுள்ள இக்காவலரின் செயற்பாடு, தவறு நிகழும் இடங்களில் மேற்கொள்ளப்படும் அக்காலக் காவல் நடவடிக்கையைக் கண்முன் நிறுத்துகிறது.

கோதண்டத்தில் மாட்டுவது என்றொரு தண்டனை முறை அக்காலத்தே இருந்ததாகச் செவிவழிக் கதைகள் சொல்கின்றன. வரலாற்றுப் புதினங்கள் பல படைத்த திரு. சாண்டில்யன் தம்முடைய, ‘மன்னன் மகள்’ கதையில், அத்தகு கோதண்டத்தையும் அதில் சிக்கிக் கொள்பவரையும் கதைப்போக்கில் காட்டியிருப்பார். மீனாட்சிக் கோயில் சிற்பத்தில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் காட்சி அக்கோதண்டத் தண்டனையை நினைவூட்டுகிறது.

சிற்பத்தின் மேலடுக்கில் உள்ளது கோதண்டத் தண்டனைக் கூடம். பெருஞ்சட்டகம் ஒன்றின் பக்கப்பகுதியில் கைகளும் கால்களும் இறுக்கப்பட்ட நிலையில் முறை தவறி நடந்த ஆடவர் கட்டப்பட்டுள்ளார். கயிறுகளால் இறுக்கப்பட்ட நிலையில் அசைக்கமுடியாதவாறு மேற்பலகையில் அவர் தலையும் பிணைக்கப்பட்டுள்ளது. ஆடைகளற்ற நிலையில் சட்டகத்தில் மாட்டப்பட்டிருக்கும் அப்பாலியல் குற்றவாளியின் ஆணுறுப்பைத் தாவிக் கவ்வியுள்ள விலங்கின் காட்சியே தண்டனை எப்படியிருந்தது என்பதை உணர்த்திவிடுகிறது.

நியாயமற்ற ஆசைகளும் நேர்மையற்ற உணர்வுகளும் தவறான செயல்களுக்குத் தூண்டுகோல்கள். காலந்தோறும் இது போல் வரம்பு மீறல்கள் நிகழ்வதையும் அவை குற்றங்களாகித் தண்டனைகளுக்கு உள்ளாவதையும் இலக்கியக் காட்சிகளாய் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணமுடிந்தாலும், கண்ணெதிர் நிகழ்வாய்க் கற்பனைக்கே இடமில்லாது, ஒரு குற்றமும் அது தண்டிக்கப்பட்ட முறையும் காட்சியாகச் செதுக்கப்பட்டிருப்பது அதைப் பதிவுசெய்த சிற்பாசிரியரின் சமூகப் பார்வைக்குச் சான்றாகும் வாருணி.

இச்சிற்பக் காட்சியைக் கண்ணுறும் எவருக்கும் பாலியல் வரம்பு மீறல் சிந்தனையே வர வாய்ப்பில்லை. பத்திமைக்கான இடங்கள்தான் என்றாலும், கோயில்கள் சமூகம் சந்திக்குமிடம் என்பதால், சொல்ல வேண்டியவற்றை, உணர்த்தக்கூடியவற்றை, வாழ்க்கையின் ஒழுகலாறுகளைக் கிடைக்குமிடங்களில் காட்டிவிடுவதைக் கடமையாகக் கொண்டியங்கிய இத்தகு சிற்பாசிரியர்களைக் கை கூப்பி வணங்கத் தோன்றுகிறது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 8. கழுதையேற்றமாய் ஊரகத் தண்டனை

அன்புள்ள வாருணி, தமிழரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது தேர். சங்க இலக்கியங்கள் விதந்து பேசும் காதல், வீரம் இரண்டுடனும் தொடர்புடைய அத்தேரையும் அதை இழுத்த புரவிகளையும் நன்கு அறிந்து தேர்ந்து கொள்வதற்கும் இயக்குவதற்குமாகவே சங்கத்தமிழர் தேர்நூல், புரவிநூல் என அறிவியல் சுவடிகளை ஆய்ந்து வைத்திருந்தனர். தேரோட்டிகள், தேர்த்தச்சர்கள் குறித்துப் பெரியதொரு நூலே படைக்குமளவு சங்கப்பாடல்கள் தரவுகள் கொண்டுள்ளன.

மானுடப் பழக்கத்திலிருந்த இத்தேர்கள் இறை ஊர்தியானமை எப்போதென்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், பத்திமைப் பாடல்களில் பேசப்படும் தேரோடும் வீதிகள், பல்லவர் படைப்புகளில் முப்புரம் எரித்த சிவபெருமானின் ஊர்தியாக வெளிப்படும் சிற்பத்தேர்கள் ஆகியவை பொதுக்காலம் 6ஆம் நூற்றாண்டளவில் இது நேர்ந்திருக்கலாம் என்று கண்காட்டுகின்றன.

தேர் என்றதும் என் நினைவுக்கு வருபவர் முதலாம் இராஜேந்திரசோழர்தான் வாருணி, தமிழ்நாட்டு மன்னர்களில் தம் அணுக்கியுடன் தேரூர்ந்து சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டவர் அவர் ஒருவர்தான். திருவாரூரில் அவரும் தானும் நின்ற இடங்களில், காலமெல்லாம் ஒளிருமாறு அவர் அணுக்கி பரவை விளக்கேற்றச் செய்தது வரலாறு. அந்தப் பொன்னாளை நினைந்து பூரித்தே, தியாகேசர் விமானத்தை அவ்வம்மை தங்கத்தகடுகளால் அழகுபடுத்தினார்.

தமிழ்நாட்டிலேயே ஊர், கோயில் என இரண்டும் ஒரு மன்னரின் அணுக்கியின் பெயரால் அமைந்ததெனில், அது இராஜேந்திரரின் பரவைநங்கைக்கு மட்டுமே கிடைத்த பேறெனலாம். பரவைப்புரத்து (இன்றைய விழுப்புரம் மாவட்டப் பனையவரம்) பரவை ஈசுவரமுடையார் கோயிலில், இராஜேந்திரரின் இரண்டாம் மகன் இரண்டாம் இராஜேந்திரர் காலத்தில், இராஜேந்திரசோழர் – பரவைநங்கை திருமேனிகளின் முன் விளக்கேற்றப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.

தேர் இறை ஊர்தியாகித் தெருவலம் வந்ததை நல்லூர் வில்வாரண்யேசுவரர் கோயில் கல்வெட்டுகள் படம் பிடிக்கின்றன. சாளுக்கியச் சோழர்கள் காலத்தில்தான் தேருலாக் கல்வெட்டுகளும், இறைக்கோயிலே தேர்வடிவில் வெளிப்பட்டதும் நிகழ்ந்தன. இறைவன் தேருடன் நடக்கவும் இறைவனுடன் தேரிலிருந்து பயணிக்கவுமான உரிமைகள் நல்லூர்க் கோயில் தேவரடியாருக்குக் கோயிலாரால் விற்பனை செய்யப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

முதற் குலோத்துங்கர் காலத்தில் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில் விமானம் தேர் வடிவில் உருவானது. தொடர்ந்து வந்தவர்கள் தேர்மண்டபங்களை உருவாக்கினர். தாராசுரத்து இராஜராஜேசுவரம் கோயில் இராஜகம்பீரன் மண்டபம் குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயிலில் தேர் வடிவிலான ஆடரங்கு உள்ளது. திருக்கோடிக்காவில்தான் முதல் முறையாகக் கோயில் தேர்களைச் சிற்பங்களாகக் காணமுடிகிறது.

தேரின் சுவையான இந்த வரலாற்றுக்கும் மீனாட்சிக் கோயிலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கக் தோன்றுகிறதா வாருணி? இருக்கிறது, இல்லாமலா இவ்வளவு தரவுகளும்! தேர் எப்படி வந்தது, எப்படியெல்லாம் அதன் பயன்பாடுகள் வளர்ந்தன என்பது போலவே, அந்தத் தேரில் எவைஎவை பதிவாயின என்பதும் வியப்பூட்டும் செய்தியாகவே உள்ளது. தேரின் நாற்புறத்தும் இறைவடிவங்களையும் புராணக்கதைகளையும் ஆடல் தோற்றங்களையும் மரச்சிற்பங்களாகக் காட்டுமாறே, பாலுணர்வு நிலைகளையும் இலைமறை காயாக அதே தேரின் பக்கப்பகுதிகளில் படைத்துள்ளனர் நம் தேர்த்தச்சர்கள்.

மீனாட்சிக் கோயில் அம்மன் திருத்தேரைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அளவில் சிறிதானாலும் அருமையான தேர். இறைச்சிற்பங்களும் திருவிளையாடல் புராணக் காட்சிகளாய்ச் சில சிற்பங்களும் அதில் கண்டோம். சிற்பங்களை இரசித்தவாறே தேரைச் சுற்றிவந்த நிலையில், தேரின் மேற்பகுதியில் பேராசிரியர் நளினி ஒரு சிற்பத்தைச் சுட்டிக் காட்டினார். நிமிர்ந்து பார்த்தபோதுதான், எத்தனை அரிய பதிவைக் காண வாய்த்தது என மகிழ்ந்தேன். ஊரகத் தண்டனை ஒன்றைச் சிற்பி அத்தேரில் காட்சியாக்கியிருந்தார்.

தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில் தேர்களை ஆய்வு செய்திருந்தபோதும், இத்தகு காட்சி எங்குமே கண்டதில்லை வாருணி. ‘கரும்புள்ளிச் செம்புள்ளி குத்திக் கழுதை மேலேற்றி’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தேரில் அதைக் காட்சியாகக் கண்டோம். சிற்பத்தில், முதலிரண்டும் தெரியாது என்பதால் வேறு தண்டனைகளை இணைத்துள்ளனர். அவையும் ஊரகத் தண்டனைகளாய் அறியப்படுபவைதான்.

சிறிய குடுமியும் தொங்குமீசையும் இடையில் சுருக்கிய ஆடையுமாய், ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்பது போல் கைகளைக் கூப்பிய நிலையில் கழுதைமேல் அமர்ந்துள்ளார் ஆடவர் ஒருவர். அவர் என்ன தவறு செய்தார் என்பது சுற்றியுள்ள மூன்று பெண்களைப் பார்த்தாலே புரிந்துவிடும். அப்பெண்களுள் ஒருவர் கழுதையின் முன்னும் மற்றவர் பின்னுமாக நிற்கின்றனர். பின்னுள்ளவர்களுள் ஒருவர் உயர்த்திப் பிடித்த சட்டியிலிருந்து எதையோ, (சாணக்கரைசல்?) அந்த ஆடவரின் தலையில் ஊற்றுகிறார். இரண்டாம் பெண்காலியான சட்டியை இடக்கையில் பிடித்தவாறு, வலக்கைத் துடைப்பத்தால் அந்த ஆடவரை அடிப்பதுபோல் உள்ளார். வலமுள்ள பெண் தம் கையிலுள்ள மிதியடி போன்ற பொருளால் ஆடவரின் தலையில் அடிக்க முனைகிறார். இந்தத் தண்டனைக் காட்சியைப் பார்த்தவாறு வலப்புறம் ஒரு சிறுவன்!

தண்டிக்கும் பெண்கள் மூவருமே சேலை அணிந்துள்ளனர். செவியணிகள், தோள், கை வளைகள், கழுத்தணிகள் பெற்றுள்ள அப்பெண்களின் இதழ்க்கடையில் எள்ளல் புன்னகை. இத்தேர் செய்யப்பட்ட காலத்தே பாலியல் குற்றவாளிகளை ஊரகப்பகுதிகளில் இது போல்தான் தண்டித்திருப்பார்களோ என நினைக்குமாறு உள்ள இச்சிற்பத்தில், சிறுவன் இடம்பெற்றிருப்பது சிந்தனையைத் தூண்டுகிறது.

பெண்மைக்கு இழிவு செய்வார் எந்நிலைக்கு ஆளாவார் என்பதைக் கண்ணெதிர்க் காட்சியாகக் காட்டி, பெண்மைக்கு மதிப்பளிக்கும் உணர்வோடு ஆண்மகன் வளரவேண்டும் என்பதைச் சிறுவனின் இருப்பால் மென்மையாக உணர்த்தியிருக்கும் இந்த ஊரக அறிவுறுத்தல் உன்னதம் வாருணி. பாலியல் சீண்டல்களில் முனைவோர் தலையில் சாணியைக் கரைத்து ஊற்றி, அவர்களைத் துடைப்பம், மிதியடி ஆகியவற்றால் தாக்கித் தண்டிக்கும் நாயக்கர் கால ஊரகப் பழக்கம் ஒரு மரத்தச்சரின் வரலாற்று நோக்கால் நமக்குப் பாடமாகப் பகிரப்பட்டுள்ளது. பெண்ணிடம் பழகிவிட்டு இல்லையென்று சொன்ன சங்ககாலப் பொய்யரைக் கள்ளூர் ஊரார் மரத்தில் கட்டிவைத்து அவர் மேல் சுண்ணாம்பு நீரூற்றிய ஊரகத் தண்டனையின் வளர்நிலைதான் மீனாட்சிக் கோயிலின் இந்தப் பதிவு.

தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும், அத்தண்டனையும் தவறுக்கு ஆளானவர்களாலேயே தரப்படவேண்டும் என்பது போல் பதிவாகியுள்ள இந்தக் கழுதையேற்றச் சிற்பம் காலத்துக்கும் பாலியல் குற்றவாளிகளுக்குப் பாடமாக நிற்கும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 7. கொல் களிறு

மீனாட்சிக் கோயில் கொல்களிறு

அன்புள்ள வாருணி, ஒளியும் கலையும்; அருளுமாய் ஆறு திங்கள்கள் ஓடிவிட்டன. வாழ்க்கையில் ஒளிநிறைந்த பக்கங்கள் மட்டுமா சுடர்விடுகின்றன? இருளான பகுதிகளும் இருக்கத்தானே செய்கின்றன. மீனாட்சியம்மன் கோயில் விதிவிலக்காகுமா?வரலாற்றைப் பதிவு செய்யும் சிற்பாசிரியர்கள் தங்கள் கைப்போக்கில் நல்லன காட்டுமாறு போலவே கண்களில் பதிவான அல்லனவற்றையும் கிடைக்குமிடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தேடுவாருக்கு மட்டுமே தெரியுமாறு விட்டுச் செல்கிறார்கள். எங்கள் ஆய்வில் அவையும் வெளிச்சமாயின. அவற்றுள் ஒன்றுதான் யானைகாலால் இடறிக் கொல்லும் மரணதண்டனை.

திருச்சுற்றுடனுள்ள மீனாட்சியம்மன் திருமுன், இறைவி எழுந்தருளியுள்ள விமானம், நீளமான முகமண்டபம், இடைநாழிகை என அமைந்துள்ளது. இருதள நாகரமாக உள்ள அம்மன் விமானத்தின் துணைத்தளமும் தாங்குதளமும்போ கபோதபந்த வடிவின. துணைத்தளம் சிற்பக் களஞ்சியமாக மாறியுள்ளது. தாங்குதளம் சிற்பங்கள் பெறாவிடினும் அதன் மேலுறுப்பான கபோதம், தன் வளைவுக்கூடுகளில் இயல்புக்கு மாறான சிற்பங்களைப் பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்றுதான் குற்றமிழைத்தவரை யானைகாலால் இடறி அழிக்கும் காட்சி.

இந்தச் சிற்பத்தில் தரையில் கிடக்கும் மனிதன் குற்றம் செய்தவன் போலும்! இரு கைகளையும் உயர்த்தி வலித் துன்பத்தால் துடிக்கும் அவன் முகம் யானைக்கு அஞ்சி வலத்திருப்பமாய் உள்ளது. முகபடாமும் முதுகில் விரிப்பும் பின் கால்களில் சதங்கைகளும் பெற்றுள்ள அரச யானையின் முன் கால்களுள் ஒன்று, அம்மனிதனின் தலையை நசுக்க உயர்ந்துள்ளது. மற்றொரு கால் அவனை உதைக்கும் முயற்சியில். தலையைக் குனிந்து, துதிக்கை சுருண்டு மேலேகுமாறு, தந்தங்களை அவன் உடலில் பாய்ச்சிக் கிழிக்கும் அந்த வேழத்தின் மேல், அதை அச்செயலுக்கு இயக்கிக் கொண்டிருக்கும் பாகன். யானையின் சினப்போக்கை அதன் கண்களிலும் தலையை அது குனித்துள்ள பாங்கிலும் வாலை வளைத்து உயர்த்தியுள்ள அமைப்பிலும் சிற்பி நன்கு அடையாளப்படுத்திவிடுகிறார். மரணதண்டனைதான் எப்படியெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது வாருணி!

மீனாட்சிக் கோயில் கொல்களிறு

அம்மன் திருமுன் சுற்றிலுள்ள தூண்களைப் பார்வையிட்டபோது தென்புறத் தூணொன்றில் இதுபோன்ற மற்றொரு சிற்பக்காட்சியைப் பேராசிரியர் அர.அகிலா கண்டறிந்தார். முதற் சிற்பத்திற்கும் இதற்குமிடையே இரண்டு வேறுபாடுகளைக் காணமுடிந்தது. இதில், குற்றவாளியின் இடக்கையை யானை தன் துளைக்கையால் வளைத்துப் பிடித்துள்ளது. முதல் சிற்பத்திலுள்ள பாகன் இதில் இல்லை. அம்மன் திருமுன்னில் இரண்டு இடங்களில் கண்டறியப்பட்ட இப்பதிவு, நாயக்கர் காலத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான அரச தண்டனைகளுள் ஒன்றாக இது விளங்கியதை உணர்த்தும்.

சங்ககாலந்தொட்டே குற்றம் இழைத்தவர்களை யானையை ஏவிக் கொல்லும் பழக்கம் வழக்கிலிருந்ததைப் புறநானூற்றால் அறியலாம். மலையமான் பிள்ளைகளைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அதுபோல் கொல்ல முயன்றபோது, கோவூர் கிழார் எனும் பெரும் புலவர் தம் அறிவார்ந்த பாடலால் அச்செயலைத் தடுத்து நிறுத்தினாராம் வாருணி. சோழர் காலத்திலும் இத்தண்டனை முறை தொடர்ந்ததைச் சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள துடையூர் விஷமங்களேசுவரர், திருப்பைஞ்ஞீலி நீலிவனநாதர், உய்யக்கொண்டான் திருமலை விழுமியநாதர் கோயில்களில் ஆய்வு மேற்கொண்ட நம் பேராசிரியர் மு. நளினி கண்டறிந்த சிற்பங்களால் அறியமுடிந்தது. இம்மூன்றனுள், தரையில் கிடக்கும் குற்றவாளியின் தலையை மேலிருக்கும் பாகனின் ஏவலுக்கேற்பக் காலால் மிதித்துத் தன் கூரிய தந்தங்களால் அவர் உடலைக் குத்திக் கிழிக்கும் பஞ்ஞீலி யானை மிகத் தெளிவாகப் படமாகியுள்ளது.

திருப்பைஞ்ஞீலி கொல்களிறு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உசிலம்பட்டிச் சாலையிலுள்ள குன்றுவரன் கோட்டையில் ஊருக்கு வெளியே உள்ள இடிந்த கோயிலின் வாயில் மேல்நிலையாக விளங்கிய கற்பலகையில் இதே போன்றதொரு சிற்பத்தைக் காணமுடிந்தது. பொதுக்காலம் 14ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க அதில், இம்மரணதண்டனையைப் போற்றிக் கொண்டாடுவார் போல மூன்று ஆடவர்கள். முதலாவதாகவும் மூன்றாவதாகவும் உள்ளவர்கள் மத்தளம் போன்ற தோல்கருவியை இயக்கியவாறே ஆட, இடையிலுள்ளவர் வலக்கையில் செண்டேந்தி இடக்கையை அர்த்தரேசிதமாக்கி ஆடுகிறார். இதுவரை கிடைத்துள்ள கொல் களிறு காட்சிகளில், அதைக் கொண்டாடுமாறு ‘பொருநர் ஆட்டம்’ காட்டப்பட்டிருப்பது குன்றுவரன்கோட்டையில் மட்டுமே.

குன்றுவரன்கோட்டை கொல்களிறும் பொருநர் ஆட்டமும்

போர்க்களங்களில் எதிரிகள் தோல்வியுறும்போது பொருநர்கள் என்றழைக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் தங்கள் கருவிகளை இயக்கியபடியே வென்றவர்களைப் போற்றிக் கொண்டாடிய சங்கமரபின் தொடர்ச்சியாகவே இந்தத் தண்டனைக்கள ஆடலையும் கொள்ளலாம் வாருணி.

எங்களுக்கு வியப்பு என்னவென்றால், காலந்தோறும் இத்தண்டனைக் காட்சி பதிவாகியுள்ளதுடன், மீனாட்சிக் கோயிலையும் இது தழுவிக்கொண்டதுதான். பல இடங்களில் ஓரிடக் காட்சியாக மட்டுமே உள்ள இப்பதிவு, இங்கு மட்டுமே இரண்டு இடங்களில் அழுந்தக் காட்டப்பட்டுள்ளது. யானை எல்லோருக்கும் பிடித்த விலங்கு. குழந்தைகள் கூட நேசிக்கும் அதை ஒருகாலத்தே கொலைக் கருவியாகவும் பயன்படுத்தியுள்ளனர். எதுவும் யார் கைப்படுகிறதோ, எதன் வயப்படுகிறதோ அவர் வழியில், அதன் முறையில்தான் அமையும் போலும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.