திருமடத்துக் குடைவரைகள்

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டில் பழம் பெருமையுடன் விளங்கும் திருமடங்கள் பல உள்ளன. சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், சமணம் எனப் பல்வேறு சமயங்களைச் சார்ந்துள்ள அவற்றுள், குடைவரைக் கோயில்களைத் தங்கள் ஆளுகையின் கீழ்க் கொண்டுள்ள திருமடமாய்த் திகழ்வது திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடம்தான். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இலங்கும் இத்திருமடத்தின் கீழ்க் குன்றக்குடியில் மூன்றும் கோளக்குடியில் ஒன்றும் பிரான்மலையில் ஒன்றும் அரளிப்பட்டியில் ஒன்றுமாய் ஆறு குடைவரைகள் உள்ளன. இவை ஆறுமே தமிழ்நாட்டுக் குடைவரைக் கலைவரலாற்றில் தனிச்சிறப்புடன் பொலிபவை.

குடைவரை

மலையிலோ, குன்றிலோ, பாறையிலோ முன்னிருந்து பின்னாகக் குடைந்து உருவாக்கப்படும் கோயில்களே குடைவரைகள். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான குடைவரைகள் பாறை அல்லது சிறு குன்றுகளின் கீழ்ப்பகுதியில் அமைய, சிலவே பெரிய குன்றின் அல்லது மலைச்சரிவின் இடைப்பகுதியில் உள்ளன. 

குன்றக்குடிக் குடைவரைகள்

மகுடமற்ற பிள்ளையார்

குன்றக்குடித் திருமடத்தின் கீழுள்ள ஆறு குடைவரைகளில் குன்றக்குடியிலுள்ள மூன்றும் அங்குள்ள குன்றின் கீழ்ப்பகுதியில் அடுத்தடுத்துக் குடையப்பட்டுள்ளன. குடைவுகளுக்கு இடைப்பட்ட பாறைச்சரிவுகளில் இலிங்கத் திருமேனி, பிள்ளையார். மகுடமற்ற தலையுடன் விளங்கும் இப்பிள்ளையார் தனித்தன்மையர். மூன்று குடைவரைகளிலுமே கருவறையில் தாய்ப்பாறையில் உருவான இலிங்கத்திருமேனி.

முதலிரு குடைவரைகள்

விஷ்ணுவும் கருடனும்

குடைவரைக் காலச் சிற்பங்கள் ஏதுமற்ற முதல் குடைவரையில் இலிங்கத்தின் கோமுகத்தைக் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ள பூதம் தலையால் தாங்குகிறது. மசிலீச்சுரம் என்று கல்வெட்டுக் குறிக்கும் இரண்டாம் குடைவரை, முகப்பின் பக்கச்சுவர்களில் சிவபெருமானின் கருவிகளான மழுவையும் முத்தலை ஈட்டியையும் அடையாளப்படுத்துமாறு, அவற்றை மகுடத்திலும் தோள்களின் பின்னிருக்குமாறும் கொண்ட காவலர் இருவர் சிற்பங்களையும் மேற்குச்சுவர்க் கோட்டத்தில் விஷ்ணுவும் கருடனும் தோழமையுடன் நிற்கும் சிற்பக் காட்சியையும் கொண்டுள்ளது. கருடன் மனிதவடிவில் காட்டப்பட்டுள்ளார். தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் இதுபோல் மழுவடியாராகவும் சூலத்தேவராகவும் காவலர்களைக் காண்பது அரிதானது. 

சூலத்தேவர்

மூன்றாம் குடைவரை

மூன்றாம் குடைவரையின் முப்பக்கச் சுவர்களும் பேருருவச் சிற்பங்களால் நிறைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது இரண்டு கால்களையும் குறுக்கீடு செய்து எட்டுத் திருக்கைகளுடன் சிவபெருமான் ஆடும் அர்த்தஸ்வஸ்திகக் கரணம். செவல்பட்டிக் குடைவரையிலும் இக்கரணக் காட்சி இடம்பெற்றிருந்தாலும் இங்கு இசைக்கலைஞர்களும் உடனிருப்பது கூடுதல் சிறப்பு. 

கோளக்குடிக் குடைவரை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோளக்குடிக் குடைவரை அவ்வூர்க் குன்றின் நடுப்பகுதியில் உள்ளது. காலப்போக்கில் மலையின் அடிவாரத்திலும் இடைப்பகுதியிலும் மலைமேலும் எனப் பல கற்றளிகள் பெற்றுப் பெருவளாகமாக மாறியுள்ள கோளக்குடிக் குடைவரையின் மண்டபச் சுவர்களில் இருபுறத்தும் மலரேந்திய முனிவர்களின் சிற்பங்கள். அகத்தியர், புலத்தியர் என்று கோயிலாரால் அழைக்கப்படும் இத்தகு அருளாளர் சிற்பங்களைப் புதுக்கோட்டை மாவட்டத் தேவர்மலைக் குடைவரையிலும் காணமுடிகிறது. கோளக்குடியின் சிறப்புகளாகக் கருவறை வாயில் மேலுள்ள மகரதோரணத்தையும் குன்றின் ஒருபகுதியில் வெட்டப்பட்டுள்ள எழுவர் அன்னையர் சிற்பத்தொகுதியையும் சுட்டலாம்.

எழுவர் அன்னையர்

தமிழ்நாட்டின் தென்பகுதியில் மட்டுமே காணக்கிடைக்கும் குடைவரைக் கால எழுவர் அன்னையர் தொகுதிகளில், இங்கு மட்டுமே அன்னையருள் ஒருவரான சாமுண்டி, இயமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு, அவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர், அழகில் சிறந்தவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகள் கீழிறங்கிப் பிணக்குண்டலங்களுடன் தோள்களை வருட, கொண்டையின் முகப்பில் மண்டையோடு. மூன்று தலைகளைச் சுற்றியும் பெரிய ருத்திராக்கங்களாலான தலைமாலை அணிந்து, வலக்கையில் சுரைக்குடுவையுடன் இங்குள்ள நான்முகியின் சிற்பமும் தனித்தன்மையதே. குன்றக்குடி போலவே கோளக்குடியிலும் தாய்ப்பாறைப் பிள்ளையார் மலையின் தென்சரிவில் செதுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை வளாகம் கோளக்குடிதான். 

சாமுண்டி

பிரான்மலைக் குடைவரை

வள்ளல் பாரியின் பறம்புமலையாக அறியப்படும் பிரான்மலையிலுள்ள திருக்கொடுங்குன்றநாதர் கோயில்வளாகத்தின் அளவில் சிறிய குடைவரை, அதன் மண்டபவாயிற் கோட்டங்களில் காவற்பெண்டுகளைக் கொண்டுள்ளது. திருமடத்துக் குடைவரைகள் ஆறனுள் பிரான்மலையில் மட்டுமே தாய்ப்பாறைச் செதுக்கலாகப் பிள்ளையார் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கருவறையில் சிவபெருமானும் உமையன்னையும் இணையாக அருகருகே அமர்ந்துள்ள அழகுக் கோலம் கண்களை நிறைப்பது. தாய்ப்பாறையில் உருவானவையா, சுதைவடிவங்களா என்றறிய முடியாதவாறு அழகூட்டல்கள் பெற்றுள்ள இவ்விரு இறைத் திருமேனிகளும் கைத்திறன் வல்ல பாண்டிநாட்டுக் கவின்கலைஞர்களின் படைப்புகளாகும். இது ஒத்த இணைக்கோலம் சிவகங்கை மாவட்டத் திருமலைக் குடைவரைக் கருவறையிலும் இடம்பெற்றிருப்பினும் பிரான்மலை இணையரின் அழகு சொற்களை மீறிய சுகம்.

அரளிப்பட்டிக் குடைவரை

பிள்ளையார் லிங்கம்

அரளிப்பட்டி மஞ்சுவிரட்டுக்குப் பெயர் பெற்றிருக்குமாறே, அரவங்கிரிக் குன்றின்கீழ்ப் பகுதியிலுள்ள எளிய குடைவரைக்காகவும் அறியப்பட்ட ஊராகும். குடைவரையின் மண்டபச் சுவர்களில் வடபுறமுள்ள இலிங்கத்திருமேனி தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாத ‘பிள்ளையார் லிங்கமாக’ ஒன்றுக்குள் ஒன்றாய் இலிங்கபாணத்தில் பிள்ளையார் செதுக்கலைப் பெற்றுள்ளது. உற்றுநோக்குவாருக்கே வடிவம் புலப்படுமாறு, தந்தைக்குள் தனையனைப் பொருத்தமாய்ப் பொளிந்திருக்கிறார்கள். இயற்கை எழில் நிரம்பிய சூழலில் அமைந்திருக்கும் இக்குடைவரையின் தாய்ப்பாறை இலிங்கம் இத்திருமடக் குடைவரைகளிலேயே அளவில் சிறியதாகும். 

திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடத்தின் ஆளுகையிலுள்ள ஆறு குடைவரைகளும் அங்குள்ள பல்வேறு தாய்ப்பாறைச் செதுக்கல்களும் பொதுக் காலம் எட்டாம் நூற்றாண்டில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. இவையனைத்துமே ஏதேனும் ஒரு விதத்தில் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் தனித்துக் குறிக்குமளவு சிறப்புப் பெற்றுள்ளமை இவற்றை உருவாக்கிய கைகளின் வளமையையும் பின்னிருந்த உள்ளங்களின் செழுமையையும் காலம் உள்ளளவும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும். இக்குடைவரைகளில், பதிவாகியிருக்கும் கல்வெட்டுகளோ பாண்டிநாட்டு வரலாற்றின் சுவையான பக்கங்களைக் கருத்தோடு தேடுவாருக்குக் கனிவோடு வழங்கி மகிழ வல்லன.

குலோத்துங்கப் புரட்சி

இரா. கலைக்கோவன்

திருவரங்கம் திருக்கோயிலை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கமுடியாது. பாசுரம் பெற்ற 108 வைணவத் திருக்கோயில்களில் திருப்பதிக்கு இணையாகப் பதினொரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற பெருங்கோயில் இது. பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தால் சுட்டப்பெற்ற பழைமைச் சிறப்பினது. தமிழ்நாட்டுக் கோயில்களில் அதிக அளவில் கல்வெட்டுப் பதிவுகள் பெற்ற இடமும் இதுதான். இங்குள்ள 191 சோழர் காலக் கல்வெட்டுகளில் சுங்கம் தவிர்த்தவராகவும் பேரம்பலம் பொன் வேய்ந்தவராகவும் அறியப்படும் முதற்குலோத்துங்கர் காலத்தன 83. பொதுக்காலம் 1070இலிருந்து 1120வரை 50 ஆண்டுகள் சோழப் பேரரசைக் கட்டிக் காத்த இவரது பதிவுகளில் 72, திருவரங்கம் கோயிலின் மூன்றாம் திருச்சுற்றின் நாற்றிசைச் சுவர்களிலும் பரவி, அச்சுற்றையே குலோத்துங்கச் சுற்றாக்கியுள்ளன. கலிங்கத்தை வென்று கலிங்கத்துப்பரணி உருவாகக் காரணராய் அமைந்த இம்மன்னரின் காலத்தில் அரங்கத்தில் நிகழ்ந்த வேளாண்புரட்சியை இங்குள்ள கல்வெட்டுகளில் பல ஒரு கதைபோலச் சொல்லிக் கண்சிமிட்டுகின்றன.

சோழர் காலத்தில் தமிழ்நாட்டுக் கோயில்கள் அவற்றின் வழிபாடு, படையல், விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு, அவற்றிற்கென வழங்கப்பட்டிருந்த கொடைநிலங்களின் விளைச்சலையே நம்பியிருந்தன. அரங்கத்தின் நிலையும் அதுதான். கோயில் மடைப்பள்ளி சார்ந்த பல்வேறு அறக்கட்டளைகள் திருமடைப்பள்ளிப்புறமாக அளிக்கப்பட்டிருந்த கொடைநிலங்களின் விளைவு கொண்டே நிறைவேற்றப்பட்டன. இந்நிலங்களின் பெரும்பகுதி தண்டுறை, காரைக்குடி எனும் காவிரிக்கரை ஊர்களில் இருந்ததால், ஆற்றில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்நிலங்களில் மணலடித்து விளைச்சலைக் குறைப்பதும் நிலத்தைத் தரிசாக்குவதும் தொடர்ந்தது.

நிலச்சீர்மைப் பணிகள் தேவைக்கேற்ப நிகழ்ந்தாலும் முழுவீச்சில் நடைபெறாமையின் வரவு குறைந்து மடைப்பள்ளிப் பணிகள் சுருங்கின. குலோத்துங்கர் ஆட்சிக்காலத்தில் இவ்விரு ஊர்களிலும் பயிர் ஏறாதிருந்த நிலங்களின் அளவு பெருகியிருந்தமை கோயில் ஆட்சியருக்குப் பெருந்துன்பமானது. போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் திருவரங்கத்து மடைப்பள்ளிச் செயற்பாடுகள் நின்றுவிடும் எனக் கருதிய கோயிலார், அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டுசென்றனர். அரங்கம் கோயிலின் அன்றாட நடைமுறைகள் தொய்வின்றித் தொடரவும் உழுகுடிகள் வேலைவாய்ப்புப் பெறவும் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்விளைவாக இவ்விரு ஊர்களின் மணலடித்த நிலங்களைப் பண்படுத்தும் நோக்கில் அரசும் கோயிலும் முழு வீச்சில் கையிணைத்தன. 

நிலச்சீர்மையே குறிக்கோளாய்த் தொடங்கிய இந்த அரும்பணியில் குலோத்துங்கரின் தேவியர் தென்னவன் மாதேவி, வளவன் மாதேவி, உலகமாதேவி, நெரியன் மாதேவி ஆகியோருடன் அரசின் உயர் அலுவலர்களும் சோழப் பெரும்படையின் தலைவர்களும் நிலக்கிழார்களும் அரண்மனைப் பணிமக்களும் ஒன்றிணைந்தனர். தமிழ்நாட்டில் வேறெங்கும் வரலாற்றின் எக்காலத்தும் இது போல் நிலம் திருத்தும் பணி அரசுசார் முயற்சி எனக் கொள்ளத்தக்க அளவிற்கு மேற்கொள்ளப்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை. மணலடித்து விளையாதிருந்த தண்டுறை, காரைக்குடி நிலங்களை முப்பதிற்கும் மேற்பட்ட அரசு உயர் அலுவலர்கள் விலைக்குப் பெற்று அவற்றை விளைநிலங்களாகத் திருத்தினர். எட்டுக்கும் மேற்பட்ட படைத்தலைவர்கள் இத்திருப்பணியில் பங்கேற்றனர். இப்பெருமக்களுள் சிலர் சைவ சமயம் சார்ந்தவர்களாய் இருந்தபோதும் அரங்கன் கோயில் நிலச்சீர்மைப்பணியில்  சமயச் சார்பின்றிச் செயற்பட்டமை கல்வெட்டுகள் சுட்டும் அவர்தம் இயற்பெயர்களால் அறியப்படும் உண்மையாகும்.  

மணலடித்து வீணான நிலங்களைத் திருத்தி விளைச்சல் காட்ட முன்வந்தவர்களுக்கு ஒரு வேலி ஒரு காசு என நிலம் விற்கப்பட்டதுடன் ஐந்தாண்டுகளுக்கு அந்நிலத்தின் மீதான வரியும் நீக்கப்பட்டது. குலோத்துங்கர் காலத்தில் காவிரி, கொள்ளிடம்சார் ஊர்கள் எத்தகு நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றிருந்தன என்பதையும் அவை வெள்ளத்தால் சீர்குலைந்த நிலையில் அவற்றைச் சரிசெய்ய ஊராட்சிகள் எத்தகு முயற்சிகளை மேற்கொண்டன என்பதையும் இக்கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. 

ஆற்றிலிருந்து தலைவாய் மதகுகள் வழி வெளிப்பட்ட நீர் அதற்கென அமைந்த நீரோடுகால்களில் ஓடிப் பெருவாய்க்கால்களை அடைய, அவை அந்தந்த ஊர்களுக்கான வாய்க்கால்களுக்கு நீர்ப்பிரிக்க, உள்வாய்க்கால்களும் உட்சிறு வாய்க்கால்களும் உள்ளார்ந்த நிலத்துண்டுகளுக்கு நீரெடுத்துச் சென்றன. நாட்டு வாய்க்கால், பொது வாய்க்கால், திசைநோக்கிய வாய்க்கால்கள், ஊர்ப்பெயர் கொண்ட வாய்க்கால்கள் என நீர்ப்பாசனம் தேவைக்கேற்பவும் ஊரின் நிலவிளைவுகளுக்கு ஏற்பவும் பிரித்துப் பகிர்ந்தளிக்கப்பட்டது. மிகைநீர் செல்ல நீர்வடிகால்களும் பயன்பாட்டிலிருந்தன. இப்பாசனப் பராமரிப்பிற்குத் தேவையான ஆள்உழைப்பிற்கு நிலஉரிமையாளர்கள் பொறுப்பேற்றிருந்தனர். 

நிலத்தை விலைக்குப் பெற்றவர்கள் நிலச்சீர்மைக்கு உள்ளூர் மக்களையும் சுற்றூர் மக்களையும் உழுகுடிகளாகக் கொண்டதால் வேலைவாய்ப்புப் பெருகிற்று. வேலைக்கேற்ற ஊதியம் உழைத்தவர்களுக்குக் கிடைத்ததாகக் கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன. பண்படுத்தப்பட்ட நிலத்தில் நிலத்துக்கு உரியவர்கள் அவரவர் விருப்பிற்கேற்ற பயிர்களை விளைவிக்கும் உரிமை வழங்கப் பெற்றதால், இவ்வேளாண் புரட்சியில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஊருக்கும் கோயிலுக்கும் பயன்தரும் மரங்களையும் செடிகளையும் விளைவித்தனர். இது போல் நிலம் திருத்தும் பணி சோழர் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்துள்ளது எனினும் ஒரு தவம் போல ஒரு மன்னர் காலத்தில் அரசு சார்ந்தவர்களால் அது நிகழ்த்தப்பட்டிருப்பது திருவரங்கத்தில்தான், அதுவும் குலோத்துங்கர் ஆட்சியில்தான் என்பது வரலாற்று உண்மையாகும். 

திருத்திய நிலத்தில் பயிர் தலைகாட்டியிருப்பின், ஐந்தாம் ஆண்டிற்குப் பிறகு ஒரு வேலி விளைவுக்கு 8 கலம் நெல்கோயில் வரியாகக் கொள்ளப்பட்டது. அதையும் இருதவணைகளில் தர ஒப்புதலானது. பழ, பயன் மரங்கள், காய்கறிப் பயிர்கள் விளைவித்தவர்கள் மரத்திற்கு இவ்வளவு எனப் பழங்களையும் விளைச்சலைப் பொறுத்துக் காய்களையும் கோயிலுக்கு வழங்கினர். திருத்தப்பட்ட நிலங்களுள் பெரும்பாலன பூந்தோட்டங்களாக மாறியதால், குலோத்துங்கர் காலத்தில் திருவரங்கம் கொண்டிருந்த அளவிற்கு வேறெந்தக் கோயிலிலும் பூந்தோட்டங்கள் அமையவில்லை எனலாம். இவை அரங்கனின் பல்வேறு திருப்பெயர்களில் வழங்கியதுடன் இங்குப் பூத்தமலர்களே அரங்கனின் திருமேனியை அழகுசெய்து கோயில் வளாகத்தை மணக்க வைத்தன. 

நிலம், நீர் சார்ந்த இயற்கையின் நெருக்குதல்களை ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ச்சமுதாயம் எத்தனை எளிதாகக் கூட்டுறவு நோக்கில் எதிர்கொண்டது என்பதைக் குலோத்துங்கரின் அரங்கக் கல்வெட்டுகள் மிக விரிவாகவும் தெளிவாகவும் பதிவுசெய்துள்ளன. இந்த மண்ணின் வரலாறு வளம்மிக்கது. தேடுவார் திறனுக்கேற்ப அது வழங்கிடும் வழிகாட்டல்கள் வாழ்க்கையின் பன்முகச் சிக்கல்களுக்கும் திறப்பாக அமையும். எந்த உலகமயமாக்கலும் அடிப்படைகளை அழிப்பதில்லை. அவை பொதிந்திருக்கும் வரலாற்றுக்கும் அழிவில்லை. வரலாறு நிழலைப் போல. ஓளியில் வாழ நினைப்பவர்கள் அதைத் தவிர்க்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது.