சான்றோர் சிந்தனை – அறிஞர் வ.சுப. மாணிக்கனார்

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சிக்காக, அறிஞர் வ. சுப. மாணிக்கனார் பற்றி, டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய வானொலிப் பொழிவின் பதிவு இது. பொழிவு 4 பகுதிகளாக ஒலிபரப்பப்பட்டது.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

தமிழமுதம்

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திற்காக, ‘தமிழமுதம்’ என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய பொழிவின் பதிவுகளை இப்பகுதியில் கேட்கலாம்.

‘அமுது’, ‘மடை’, ‘பானை’, ‘குடம்’, ‘கலம்’, ‘மணி’ போன்ற பழந்தமிழ்ச்சொற்கள், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் மற்றும் கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளமையைச் சான்றுகளுடன், சுவைபட விளக்கியுள்ளார்.

தமிழர் வணிகச் சிறப்பு, மிகப் பழங்காலந்தொட்டே பெண்கள் வணிகத்தில் ஈடுபட்டமை, தமிழகத்து விளைபொருட்கள், வணிகக் குழுக்கள் என்று பரந்தூபட்ட செய்திகளை உள்ளடக்கிய பொழிவுகள் இவை.

அமுதம் 1

அமுதம் 2

அமுதம் 3

அமுதம் 4

அமுதம் 5

அமுதம் 6

அமுதம் 7

அமுதம் 8

அமுதம் 9

கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லி

மு. நளினி, இரா. கலைக்கோவன்

திருப்பாச்சில் ஆச்சிராமம் என்று கல்வெட்டுகள் அழைக்கும் திருவாசி, சிராப்பள்ளி முசிறிச் சாலையில் 12 கி. மீ. தொலைவிலுள்ளது. சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பெற்ற இவ்வூர்க் கோயில் இறைவன் இப்போது மாற்றுரைவரதீசுவரராக அறியப்படுகிறார். பல காலக்கட்டங்களில் இங்கு ஆய்வுமேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தார் 17 புதிய கல்வெட்டுகளையும் பல துண்டுக் கல்வெட்டுகளையும் சில சதாசேவைக் கல்வெட்டுகளையும் கண்டறிந்துள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1006) பொறிக்கப்பட்டுள்ள கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லியின் கல்வெட்டு.

யார் இந்தக் கற்பகவல்லி?

வளாகத்தின் இரண்டாம் கோபுர மேற்குமுக வடசுவரில் தொடங்கி மேற்கு, தெற்குச்சுவர்களில் பரவி, தெற்குக் குமுதத்தில் தொடரும் இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி சுற்றுத்தரை உயர்வால் பார்வைக்கு மறைந்துள்ளது. கல்வெட்டின் பல பகுதிகளைப் படித்தறிய அடர்த்தியான சுண்ணாம்புப்பூச்சு இடையூறாக இருந்தமையால் முதலாய்வில் படிக்கப்பெற்ற சில பகுதிகள், தொடர்ச்சியற்ற நிலையிலும், அவற்றின் சிறப்புக் கருதி 1990இல் வரலாற்றாய்வு மையத்தின் பொறுப்பில் வெளிவந்த ஆவணம் முதல் இதழில் பதிவாயின.

காலப்போக்கில் சுண்ணாம்புப்பூச்சுகள் அகற்றப்பட்ட நிலையில், 2020 மார்ச்சுத் திங்கள் நிகழ்ந்த களஆய்வில் கல்வெட்டின் விடுபட்ட பகுதிகள் படித்தறியப்பட்டன. அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதிகளில் பல பிரிவுகளாக இக்கல்வெட்டுப் பதிவாகியிருந்தமையாலும் இருவேறு காலக்கட்டங்களில் அவை படிக்கப்பட்டமையாலும் சில பிரிவுப் பதிவுகளில் இடையிடையே எழுத்துக்கள் சிதைந்தும் விடுபட்டும் போயிருந்தமையாலும்  தொடர்புடைய பகுதிகளை இணைத்துப் பொருள் காண்பதில் சிக்கல்கள் இருந்தன. மையத்தின் மதிப்புறு இணைஇயக்குநர் பேராசிரியர் மு. நளினி அரிதின் முயன்று வரலாற்று நீரோட்டத்தில் கரைந்திருந்த கற்பகவல்லியைக் கரைசேர்த்திருக்கிறார். யார் இந்தக் கற்பகவல்லி?

தேவனார்மகள்

1500 ஆண்டுகள் பழைமையானதான மாற்றுரைவரதீசுவரர் கோயில் வளாகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காலப் பழைமையது முதலாம் பராந்தகரின் பொ. கா. 919க்குரிய பதிவாகும். இங்குக் காணக்கிடைக்கும் கல்வெட்டுகளில் மிக நீளமானதும் (293 வரிகள்) மிக முதன்மையானதுமான முதலாம் ராஜராஜர் காலப் பதிவே கற்பகவல்லியைக் காட்சிக்குத் தருகிறது. நித்தவிநோதரான ராஜராஜரின் பெரியவேளத்தில் பணியிலிருந்த (பெண்டாட்டி) நக்கன் கற்பகவல்லி, பாச்சில் ஆச்சிராமத்து இறைவனின் மகளாகத் தம்மைக் கருதி, ‘தேவனார் மகள்’ என்று தம்மை விளித்துக் கொண்டவர். அக்காலத்தே இறைவனிடம் தங்களைத் தலைப்படுத்திக் கொண்ட அடியவர்கள், தங்கள் பெயருடன் இணைத்துக்கொண்ட சிவபெருமானின் திருப்பெயரே கற்பகவல்லியின் பெயருடனுள்ள நக்கன் என்னும் முன்னொட்டு. இப்பழக்கம், பொ. கா. 5ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ்நாட்டில் வழக்கிலிருந்தமை சித்தன்னவாசல் வட்டெழுத்துக் கல்வெட்டால் உறுதிப்படும்.

கற்பகவல்லியின் கல்வெட்டு

தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி, மாற்றுரைவரதீசுவரரிடம் மாற்றுக்குறையா அன்பு கொண்டிருந்தமை வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பதிவால் தெரியவருகிறது. பொ. கா. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவரளித்த 201 கழஞ்சுப் பொன்னும் 2மா முக்காணி நிலமும் வரதீசுவரர் வளாக வழிபாட்டையும் படையல்களையும் செழிப்பாக்கியதுடன், அத்தளியில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள், ஆடலரசியர், கோயில் அலுவலர்கள் எனப் பலரையும் அப்பணியில் பங்கேற்கச் செய்து பெருமைப்படுத்தியது. சுருங்கியும் விரிந்தும் சுவர்களில் பரவியுள்ள கற்பகவல்லியின் கல்வெட்டு, பாச்சில் ஆச்சிராமத்துப் பழங்கோயிலின் பதினோராம் நூற்றாண்டு வாழ்க்கையைப் படம்பிடிக்கிறது.

கற்பகவல்லியின் பொன், நிலக்கொடை

அந்நாளில் வழக்கிலிருந்த பாச்சில் கல்லால் நிறுக்கப்பெற்ற 201 கழஞ்சுப் பொன்னைக் கோயில் பண்டாரத்திற்களித்த இவ்வம்மை, 2மா முக்காணி நிலமும் கொடையாகத் தந்தார். இரண்டு துண்டுகளாக அமைந்த இந்நிலத்தில், 2மா நிலம் விளைச்சலுக்காகப் பண்படுத்தப்பட்ட தரிசாகும். ‘தென்னூர் 2 மா’ என்றழைக்கப்பெற்ற இந்நிலத்துண்டிற்கு எல்லைகளாக இறைவனின் அப்பச்செய் (அப்பப் படையலுக்காக அளிக்கப்பெற்ற நிலத்துண்டு), திணை எனும் பொறுப்பிலிருந்த ஊர் அலுவலரின் வயக்கல், ஊருக்கான வழி, தென்னந்தோப்பு ஆகியன அமைந்தன. கீழை முக்காணி எனச் சுட்டப்பெற்ற மற்றொரு நிலத்துண்டுக்கான எல்லைகளாகக் கணக்கர் பங்கு, தேவரடியாரான நக்கன் சோழங்கன் நிலம், இறைவன் நிலம், ஊர்வாய்க்கால் ஆகியன அமைந்தன. இவ்விரு நிலத்துண்டுகளின் விளைவாகக் கோயிலுக்கு ஆண்டுதோறும் 16 கலம் நெல் வரவானது.

பொன்னைப் பகிர்ந்து கொண்டவர்கள்

பாச்சிலிலுள்ள திருவாச்சிராமம், திருஅமலீசுவரம், மேற்றளிக் கோயில்களைச் சேர்ந்த தலைக்கோலியர், உவச்சர், கந்தருவர், மெய்மட்டி ஆகிய கோயில் கலைஞர்களும் தேவரடியார், பரிசாரகர், வண்ணக்கர், குயவர், தச்சர், சோதிடர், விளக்கேற்றுபவர் முதலிய பணியாளர்களும் தங்கள் பணிக்கான வருவாய்ப் பங்கை (காணி) முன்னிருத்தி (தலைச்சமாடாக), அப்பங்கின் தகுதிக்கேற்ப, கற்பகவல்லி அளித்த 201 கழஞ்சுப் பொன்னைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு, ஆண்டுதோறும் அதற்கான வட்டியாக ஒரு கழஞ்சுப் பொன்னுக்குக் கோயில் பண்டாரத்திருந்த ராஜாச்ரையன் எனும் மரக்காலால் ஒரு கலம் நெல் அளந்தனர். அதன் வழி ஆச்சிராமத்துக் கோயிலுக்கு 201 கலம் நெல் கிடைத்தது. கற்பகவல்லி அளித்த நிலத்திலிருந்து கிடைத்த 16 கலம் நெல்லுடன் இது சேர ஆண்டுதோறும் கோயிலுக்கு 217 கலம் நெல் வரவானது. அது கற்பகவல்லி இக்கோயிலில் அமைத்த ஐந்து அறக்கட்டளைகளுக்கும் முதலானது.

ஐந்து அறக்கட்டளைகள்

1. நாளும் சிறுகாலையில் முதன்மை இறைக்குப் போனகஅமுது.

2. நாளும் சிறுகாலையில் உலாத்திருமேனிக்குப் போனகஅமுது.

3. கார்த்திகை விழா

4. தைப்பூசத் திருநாள்

5. புதுக்குப்பணி

போனகஅமுது

கற்பகவல்லியின் முதலிரு அறக்கட்டளைகள் கோயில் முதன்மை, உலா இறைத்திருமேனி களுக்கு நாளும் படைக்கப்பெறும் சிறுகாலைப் போனகஅமுதாக அமைந்தன. உடையார் எனக் கல்வெட்டில் சுட்டப்படும் முதன்மை இறைத்திருமேனிக்கு நாளும் 4 நாழி போனகஅரிசி, 2 நாழி பயறு, நெய், சர்க்கரை கொண்டு போனகஅமுதும் உடன் பொரிக்கறியும் படையலிடப்பட்டன. அதற்கான போனகப்பானை, பொரிக்கறிச்சட்டி இட்ட குயவருக்கும் சமைப்பதற்கு விறகிட்டவருக்கும்  நெல்குற்றிய பெண்ணுக்கும் ஊதியமாக உரிய நெல் வழங்கப்பட்டது. பரமவிடங்கதேவர் எனும் பெயரிலிருந்த உலாவரும் திருமேனிக்கும் அது போலவே சிறுகாலைப்போதில் போனகம் வழங்கப்பட்டது. அதற்கான போனகஅரிசி, பருப்பு, நெய், தயிர், பாக்கு உள்ளிட்ட பொருள்களுக்கும் அமுதுக்கான கலங்கள் அளித்த குயவருக்குமாக உரிய நெல் தரப்பட்டது. இவ்விரண்டிற்குமாக ஓராண்டிற்கு 150 கலம், 2 தூணி, குறுணி, 2 நாழி நெல் செலவானது.

கார்த்திகை விழா

கற்பகவல்லி கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் பிறந்தவர் என்பதால், அந்நாளில் திருப்பாச்சில் ஆச்சிராமத்து இறைவனுக்கு நெய், பால், தயிர் உள்ளிட்ட ஆனைந்து, தேன் ஆகியன கொண்டு 108 குடங்களால் திருமுழுக்காட்ட அமைத்த அறக்கட்டளை திருப்பிண்டி, திருச்சுண்ணம், நூல்சூழ நிறுவப்பட்ட குடம், ஜலபவித்ரத்துப் புடவை, நமனதிரவியம், குடத்தின் கீழிடும் பொருள்கள் எனப் பலவும் கொண்டு உரிய சடங்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. முழுக்காட்டுக்குப் பிறகு பெரும்பயறுடன் கறியமுதும் நெல்லுச்சோறும் தயிர், நெய், பாக்கு உள்ளிட்டனவும் இறைமுன் படைக்க ஒரு பொன் ஒதுக்கப்பட்டது.

முழுக்காட்டு, உணவு ஆகியவற்றிற்கான கலங்களை அளித்த குயவர், போனகக்குருத்திடுவார், நெல்குற்றிய பெண், குடத்தை நிறுவியவர், விறகிட்டார், கோமயம் கொணர்ந்தார் ஆகிய அனை வருக்கும் ஊதியமாக நெல் தரப்பட்டது. முதன்மை இறைக்கு முழுக்காட்டு, படையல் முடிந்ததும் உலாத்திருமேனி திருவோலக்கம் கொண்டு அப்பஅமுது கொள்ள, அதற்குரிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களுக்கும் பாக்கு, வெற்றிலை வழங்கவும் நெல்குற்றும் பெண், மாவிடிப்பவர், அப்பம் சுட்டவர் அதற்கான விறகிட்டவர், படையலிடக் கலங்கள் தந்த குயவர் முதலியோருக்கான ஊதியமாகவும் உரிய நெல் ஒதுக்கப்பட்டது.

தைப்பூச விழா

தைப்பூசத்தன்று இறைவன் நீராடிப் பெருந்திருஅமுது கொள்ளத் தேவையான ஒரு கலம் தூணிப்பதக்குப் போனகஅரிசி, நெய், பருப்பு, பெரும்பயறு, தயிர், மிளகு, உப்பு, பாக்கு, கறியமுது ஆகியவற்றுக்கு நெல் ஒதுக்கப்பட்டது. போனகக்குருத்திடுவார், போனகம் இடுவார், நெல்குற்றிய பெண், விறகிட்டவர் ஆகியோருக்கும் ஊதியமாக நெல் வழங்கப்பட்டது. அந்நாளில் இறைவன் உச்சம்போது உணவு கொள்கையில் 50 சிவயோகிகளும் 50 தவசிகளும் கோயிலில் உணவருந்த ஓராளுக்கு நாழி உரி என 100 பேருக்கு 1 கலம் தூணிப்பதக்கு 6 நாழி அரிசி ஒதுக்கப்பட்டது. இவ்வுணவைச் சமைத்தவர், சமைக்க விறகிட்டவர், நெல்குற்றியவர், உண்ணவந்தாருக்கு இலையிட்டவர், உரிய கலங்களிட்ட குயவர் ஆகியோருக்கும் கொள்ளுக்குமென  நெல் தரப்பட்டதுடன், விழாவை முன்னிருத்தித் தேவர்கன்மிகளுக்கும் ஒரு கலம் நெல் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் சேரத் தைப்பூசத் திருவிழாவுக்காக ஆண்டுதோறும் 8 கலம் 2 தூணி 4 நாழி நெல் செலவானது.

புதுக்குப்பணி

இக்கோயிலிலுள்ள பெரிய திருமண்டபத்தைப் பழுது நீக்கிப் பராமரிக்கவும் உரிய வகையில் புதுக்கவும் ஆண்டுதோறும் 10 கலம் நெல் பயன்படுத்திக்கொள்ள கற்பகவல்லியின் ஐந்தாம் அறக்கட்டளை துணைநின்றது.

கலைஞர்களும் பணியாளர்களும்

நக்கன் கற்பகவல்லியின் கொடைக் கல்வெட்டு முதல் ராஜராஜர் காலத்தில் பாச்சில் திருஆச்சிராமம், அமலீசுவரம், மேற்றளி ஆகிய மூன்று கோயில்களில் பணியிலிருந்த கலைஞர்களையும் தொழிலர்களையும் பெயர் சுட்டி அறிமுகப்படுத்துகிறது.

திருஆச்சிராமம்

திருஆச்சிராமத்தில் பொ. கா. 1006ல் பணியிலிருந்தவர்களுள் 7 கலைஞர்களும் 15 தொழிலர்களும் இக்கல்வெட்டால் அறிமுகமாகின்றனர். நக்கன் அழகியான நக்கன் சோழத்தலைக்கோலி, நக்கன் மோடியான மும்முடிசோழத் தலைக்கோலி, நக்கன் கொற்றமான வீதிவிடங்கத் தலைக்கோலி ஆகிய மூவரும் இக்கோயிலில் ஆடலரசிகளாகத் திகழ்ந்தனர். ஆடல் வல்ல பெண்டிருக்கே அக்காலத்தில் தலைக்கோலிப் பட்டம் வழங்கப்பட்டமையால் இம்மூவரும் ஆடற்கலையில் தேர்ந்திருந்தமை தெளிவாகும். அவர்களுள் மும்முடிசோழமும் வீதிவிடங்கமும் கற்பகவல்லி அளித்த பொன்னில் தலைக்கு 10 கழஞ்சு கொண்டு 10 கலம் நெல்லளக்க, அழகி 5 கழஞ்சுப் பொன்னுக்கு 5 கலம் நெல்லளித்தார். 

நக்கன் அகம், நக்கன் எதிரி, நக்கன் ஆவடுதுறை, நக்கன் மோடி ஆகிய நால்வரும் தேவரடியார்களாகப் பணியிலிருந்தனர். ஆவடுதுறை 5, எதிரி 15, அகம் 7, மோடி இரண்டரை எனக் கழஞ்சுகள் கொண்டு, அதற்கான வட்டியாக நெல்லளக்க, கோயில் உச்சவர் அணுக்கன் பொன்னன் பதின்மூன்றரைக் கழஞ்சு கொண்டு பதின்மூன்றரைக் கலம் நெல்லளந்தார். இங்குக் காளமிசைத்த ஆச்சன் இளம்பெருமானும் மற்றொரு காளக்கலைஞரான கந்தருவர் பொன்னையன் தில்லையடிகளும் தலைக்கு 10 கழஞ்சு கொண்டு 10 கலம் நெல்லளக்க, மெய்மட்டியாக விளங்கிய மற்றொரு கந்தருவரான ஐநூற்றுவன் விழுமியான் 2 கழஞ்சுப் பொன் கொண்டு 2 கலம் நெல் தந்தார்.

கலம் வனைந்து வழங்கிய டக்கன் (இப்பெயர் முழுமையாகக் கிடைக்கவில்லை), தெய்யன், கடம்பன் ஆகிய மூவரும் தலைக்கு 1 கழஞ்சு கொண்டு 3 கலம் நெல்லளக்க, வண்ணக்குப் பணியிலிருந்த இளங்குவனன் தில்லையழகன் 15 கழஞ்சுப் பொன் பெற்று 15 கலம் நெல்லளித்தார். தச்சுப்பணியாளர் காரி இரவி 3 கழஞ்சுப் பொன்னுக்கு 3 கலம் நெல் தர, இங்குப் பரிசாரகர்களாக விளங்கிய இரு குடும்பங்களைச் சேர்ந்த சிங்கன் பட்டாலகன், சிங்கன் சோழன், சிங்கன் பதியன், நெதிரன் ஐயன், நெதிரன் பரசுராமன், பொன்னன் நெதிரன் ஆகிய அறுவரும் 17 கழஞ்சுப் பொன்னைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு நெல்லளந்தனர்.

பாச்சில் அமலீசுவரம்

கோபுரப்பட்டியிலுள்ள பாச்சில் அமலீசுவரம் கல்வெட்டுகளில் அமனீசுவரமாகவும் அவனீசுவரமாகவும் அறியப்படும் அழகிய சிவத்தளியாகும். பொ. கா. 981க்குச் சற்று முன் கட்டமைக்கப்பட்ட இம்முற்சோழர் கோயில் இன்றளவும் சிறப்பான நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது (இக்கோயில் வரலாறு அறிய இக்கட்டுரையாசிரியர்களின் பாச்சில் கோயில்கள் நூல் உதவும். நூல் பெற: 9345111790). நக்கன் கற்பகவல்லியின் கொடைப்பொன்னில் 50 கழஞ்சுப் பொன்னை இத்தளிக் கலைஞர்கள் இருவரும் தொழிலர் இருவரும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு ஆண்டு வட்டியாக ஆச்சிராமத்தார் அளித்தவாறே 1 கழஞ்சுப் பொன்னுக்கு 1 கலம் நெல் ஆச்சிராமத்துக் கோயிலுக்கு அளந்தனர். அமலீசுவரத்து ஆடலரசியான திருவையாறு தலைக்கோலியும் அதே கோயில் கந்தருவரான கணவதி கங்காதிரனும் தலைக்கு 10 கழஞ்சுப் பொன் கொள்ள, அமலீசுவரத்தில் ஆச்சாரியம், பரிசாரகம் இரண்டும் பார்த்த கௌசியன் ஆச்சன் பொன்னன் 25 கழஞ்சுகள் பெற்று 25 கலமளிக்க, விளக்கேற்றும் பொறுப்பேற்றிருந்த குமரன் அம்பலவன் 5 கழஞ்சுப் பொன் பெற்று 5 கலம் நெல்லளந்தார்.

மேற்றளி

முற்சோழர் காலத்தில் பாச்சிலில் எழுச்சியுடன் திகழ்ந்த மூன்று தளிகளுள் ஆச்சிராமம், அமலீசுவரம் போலவே மேற்றளியும் அடங்கும். பல்லவர் காலத் தளியான இக்கோயில் தொல்லியல் துறையால் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தன் பழைமையைப் பெரிதும் இழந்து கல்வெட்டுகளுடன் காட்சிதருகிறது (இக்கோயில் வரலாறு அறிய இக்கட்டுரையாசிரியர்களின் பாச்சில் கோயில்கள் நூல் உதவும். நூல் பெற: 9345111790). கற்பகவல்லி அளித்த பொற்கழஞ்சுகளைக் கொண்டவர்களுள் இருவர் பாச்சிலைச் சேர்ந்த இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய பெருமையுடையவர்கள். நக்கன் குராவியான திருவரங்கத் தலைக்கோலி மூன்று கோயில்களிலும் ஆடல்நிகழ்த்திய கலைஞர். இவ்வம்மை 20 கழஞ்சுப் பொன் கொண்டு வட்டியாக 20 கலம் நெல்லும் அவர் போலவே 3 கோயில்களுக்கும் சோதிடராக விளங்கிய சிச்சல் அரையன் 3 கழஞ்சுப் பொன்னுக்கு 3 கலம் நெல்லும் அளந்தனர்.

கற்பகவல்லியின் தனிச்சிறப்பு

சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் மகளிர் கொடைகளைச் சுட்டும் கல்வெட்டுகள் பலவாகப் படித்தறியப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பான்மையன அவ்வக்கோயில்களில் கலைஞர்களாகவோ, பணியாளர்களாகவோ இருந்தவர்தம் கொடைகளாகவே அமைந்துள்ளன. சில கொடைகள் அரசமரபுசார் பெண்களாலும் கோயில்களைக் கட்டியவர்களாலும் வழங்கப்பட்டவை. வேறு சிலவோ வேற்றூர் மகளிர் விழைந்து தந்தவை. தஞ்சாவூர் அரண்மனை வேளத்தில் பணியாற்றிய நக்கன் கற்பகவல்லி இந்த வட்டங்களைத் தாண்டியவராய்ப் பாச்சில் ஆச்சிராமத்து இறைவனிடம் பேரன்பு கொண்டிருந்தார். அதுவே இருவருக்கும் இடையில் தந்தை மகள் உறவைப் பின்ன, அதன் விளைவாகவே கற்பகவல்லியின் ஐந்து அறக்கட்டளை அமைப்பும் அதற்கான கொடையும் பிறந்தன. இந்தக் கொடையால் கற்பகவல்லியின் உள்ளம் மட்டுமன்று, ஆச்சிராமத்து வரலாறும் வெளிச்சப்படுவதுதான் மிகு சிறப்பு. மூன்று கோயில்களின் கலைஞர்கள், பணியாளர்கள் என ஒரு பட்டியலும் கோயில் வழிபாடு, படையல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தவர் பட்டியலும் கிடைப்பதுடன், கோயில்சார் சடங்குகளும் அவற்றுக்கமைந்த செலவினங்களும் அந்நாள் பொன், நெல் மதிப்பீடுகளும் என்று வரலாற்றை வளப்படுத்தும் தரவுகளும் பலவாய் இக்கல்வெட்டில் பொதிந்துள்ளன. சுருங்கச் சொல்லின் கார்த்திகையில் பிறந்த நக்கன் கற்பகவல்லியின் இந்தக் கொடைக் கல்வெட்டால் ஆச்சிராம வரலாற்றின் பொன்னான பக்கமொன்று பொதுவெளிக்கு வந்துள்ளது.

சான்றோர் சிந்தனை – டாக்டர் மா. இராசமாணிக்கனார்

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திற்காக, சான்றோர் சிந்தனை என்ற நிகழ்ச்சியில், டாக்டர் மா. இராசமாணிக்கனார் பற்றி டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய வானொலிப் பொழிவின் பதிவு இது. பொழிவு 5 பகுதிகளாக ஒலிபரப்பப்பட்டது.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

கிடைக்கும் நூல்கள்

நூல்களில் இப்போது கிடைப்பவை

(நூல்கள் பெற–   +91 93451 11790)

1. சங்கச்சாரல்

2. இருண்ட காலமா?

3. தவத்துறையும் கற்குடியும்

4. வாணன் வந்து வழி தந்து. . .

5.  பாச்சில் கோயில்கள்

6. எறும்பியூர் துடையூர் – சோழர் தளிகள்

7.  சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு

8. சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் ஏழு

9. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

10. மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்

11. கலை 66 (பணிப்பாராட்டு நூல்)

திரும்பிப்பார்க்கிறோம்

கண் மருத்துவரும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனருமான இரா. கலைக்கோவன் வரலாற்றாய்வைத் தொடங்கிய நாள் முதல் தொடரும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் திரும்பிப்பார்க்கிறோம் எனும் புதிய பகுதியை வரலாறு ஆய்விதழில் 2007இல் தொடங்கினார். 

ஆய்வு மையத்தின் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள், மையம் சார் ஆய்வாளர்களின் பணிகள், வரலாறு ஆய்விதழின் தோற்றமும் வளர்ச்சிப்பாதையில் அது சந்தித்த சூழல்களும் என ஓர் ஆய்வுக்குழுவின் நெடிய பயணச்சுவடுகள் இத்தொடரில் காலநிரலாகப் பதிவாகியுள்ளன. முதல் பத்துத் தொகுதிகள் தனியாகவும் வெளியிடப்பெற்றன. இதுநாள்வரை 13 தொகுதிகள் வரலாறு இதழுடன் இணைந்து பதிவாகியுள்ளன.

  • தொகுதி 1 1981-1983       பக்கங்கள் 108        
  • தொகுதி 2 1983-1988       பக்கங்கள் 115        
  • தொகுதி 3 1988-1989       பக்கங்கள் 112        
  • தொகுதி 4 1989-1991       பக்கங்கள் 112        
  • தொகுதி 5 1991-1993       பக்கங்கள் 124        
  • தொகுதி 6  1993-1995       பக்கங்கள் 164        
  • தொகுதி 7 1995-1999       பக்கங்கள் 164        
  • தொகுதி 8 1999-2004       பக்கங்கள் 168        
  • தொகுதி 9 2004-2007       பக்கங்கள் 168        
  • தொகுதி 10   2007-2009     பக்கங்கள் 166      
  • தொகுதி 11  2009-2011     பக்கங்கள் 198      
  • தொகுதி 12  2011-2011     பக்கங்கள் 192      
  • தொகுதி 13 2011-2013      பக்கங்கள் 158      

வரலாறு ஆய்விதழின் வரலாறு

1993-2021

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுமுடிவுகளையும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் 1993 ஆகஸ்டு 15ஆம் நாள் தோன்றியதே வரலாறு ஆய்விதழ். தொடக்கத்தில் அரையாண்டிதழாக ஐந்து இதழ்கள் வெளியாயின. 1996இல் ஆண்டிதழாக மாறிய வரலாறு இதுநாள்வரை 30 இதழ்களைக் கண்டுள்ளது. வரலாறு 25ஆம் தொகுதியின் வெளியீட்டு விழா 31.10.2015 அன்று வரலாறு டாட் காம் மின்னிதழ்க் குழுவினரால் சென்னையில் வெள்ளிவிழாவாக நடத்தப்பெற்றது. 25 தொகுதிகளின் வழி வரலாறு ஆய்விதழ் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளதை இதழின் தலையங்கப் பக்கம் பகிர்ந்துகொண்டது.

‘25 தொகுதிகளின் வழி வரலாறு இதழ் சாதித்திருப்பது என்ன? தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட 570 கல்வெட்டுகளை இந்த இதழ் பதிவுசெய்துள்ளது. பல கோயில்களிலிருந்து நடுவணரசால் படியெடுக்கப்பட்டுப் பாடம் வெளியாகாதிருக்கும் 408 கல்வெட்டுகளின் முழுமையான பாடங்களைப் ‘பதிப்பிக்கப்படாத பாடங்கள்’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு பதிப்பித்துள்ள கல்வெட்டுகள் சிலவற்றின் விட்டுப்போன தொடர்ச்சிகளைக் களஆய்வுகளில் கண்டறிந்து பதிவுசெய்துள்ளது. செப்பேடுகள் சிலவற்றை வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது.

ஆய்வுக்கட்டுரைகள் என்ற தலைப்பின் கீழ் இலக்கியம் சார்ந்து 17 கட்டுரைகளும் குடைவரைகள், ஒருகல் தளிகள், கற்றளிகள் ஆகியவற்றின் விரிவான ஆய்வின் வெளிப்பாடாக 85 கட்டுரைகளும் வரலாற்றின் பல்வேறு பிரிவுகள் சார்ந்து 48 கட்டுரைகளும் இந்த 25 இதழ்களில் பதிவாகியுள்ளன. பெருமைச்சுவடுகளாக இந்த மண்ணின் அறிவுவளத்தைப் பெருக்கியவர்கள் இதழ்தோறும் வெளிப்பட்டிருக்கிறார்கள். வரலாறு இதழின் வாழ்க்கைப் பயணத்தில் உள்ளத்தைத் தொட்டவர்கள், உண்டாலம்ம இவ்வுலகம் என்று நெகிழச் செய்து அதன் பக்கங்களாகியிருக்கிறார்கள். இலக்கியங்களின் சில முத்திரைப்பதிவுகள் பெட்டிச் செய்திகளாக வரலாற்றின் ஒவ்வோர் இதழையும் ஒப்பனை செய்துள்ளன. அத்யந்தகாமம், வரலாற்றின் வரலாறு, வலஞ்சுழி வாணர் எனும் மூன்று ஆய்வு நூல்கள் வரலாறு இதழின் உடன்பிறப்புகளாக முகிழ்த்துள்ளன.

ஓர் ஆய்வாளனின் பிறப்பும் வளர்ச்சியும் பற்றிய பதிவுகள் வரலாற்றிற்கும் வரும் தலைமுறை ஆய்வாளர்களுக்கும் வழிகாட்ட உதவும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்டதே திரும்பிப்பார்க்கிறோம் தொடர். ஒன்பதாண்டுகளாக ஆயிரம் பக்கங்களைக் கடந்த நிலையில் ஆய்வுவாழ்க்கையின் படப்பிடிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த அனுபவப் பதிவு, வாழ்க்கை வரலாற்றின் ஒரு புதிய முகம். ஓர் ஆய்விதழ் 25 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்து எண்ணம் கொண்டிருந்தோமோ அவற்றில் சிலவற்றையேனும் செம்மையாகச் செய்திருக்கிறோம் என்ற நிறைவோடு இந்த வெள்ளி இதழை உங்கள் கைகளில் வழங்குகிறோம்.

23 ஆண்டுகளில் 25 இதழ்கள். பாடுகளுக்கு எப்போதுமே பயன்கள் உண்டு. உடனிருந்து உழைத்தவர்களுக்கும் வரலாறு இதழின் 11ஆம் தொகுதி முதற்கொண்டு இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் நல்கை இதழுக்குக் கிடைக்குமாறு துணைநின்ற வரலாற்றறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், எம். ஜே. எஸ். நாராயணன் ஆகியோருக்கும் வரலாறு இதழ் கடப்பாடுடையது.

உண்மைகளின் பாதை துன்பமானதுதான்; தளர்ச்சி தருவதுதான். என்றாலும், உழைப்பு அவற்றை நேர்செய்கிறது. வரலாறு என்னும் பேரண்டத்தில் சில துகள்களையேனும் எங்களால் உலவவிட முடிந்திருப்பதே உறவுகள் உடன்நின்ற ஊக்கத்தால்தான். இந்த 25 இதழ்ப் பயணத்தில் கையிணைத்த நல்ல உள்ளங்களை நன்றியோடு வணங்குவதினும் வேறென்ன செயவல்லோம்.’

2016இல் வெளியான வரலாறு 26ஆம் தொகுதி தவத்துறை சப்தரிஷீசுவரர், பூரத்தூர் முக்தீசுவரம், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளையும் உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதரில் படியெடுக்கப்பட்டுப் பாடம் வெளியாகாத கல்வெட்டுகளையும் பதிவுசெய்துள்ளது. ஆய்வில் கண்டறியப்பட்ட தவத்துறை சப்தரிஷீசுவரர், திருஎறும்பியூர் எறும்பீசுவரர்க் கோயில் கல்வெட்டுகள் சிலவற்றின் விடுபட்ட பகுதிகள் விட்டுப்போன தொடர்ச்சிகளாக இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

சங்க காலத்தின் காலம்? வெள்ளறைக் குடைவரை, குடக்கூத்து, தவத்துறைக் கல்வெட்டுகள்-1, நகரி மாடக்கோயில், குலாலகோட்டையூர்க் குடைவரை, முழங்கால் (ஜாநு), திருப்பேர் நகர், இராஜராஜரின் புதல்வியர் மூவர் எனும் 9 ஆய்வுக்கட்டுரைகள் வரலாறு 26இல் பதிவாகியுள்ளன.

2017இல் வெளியான வரலாறு 27ஆம் தொகுதியில் கூத்தப்பார் மருதீசர், பாச்சில் மேற்றளி-ஆதிநாயகப் பெருமாள் கோயில்களிலும் உறையூர்க் குளத்திலும் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளுடன் பாச்சில் அவனீசுவரம் – மேற்றளிக் கோயில்களிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்களும் எறும்பியூர்க் கோயில் கல்வெட்டொன்றின் விட்டுப்போன தொடர்ச்சியும் பதிவாகியுள்ளன.

கழுகுமலைக் குடைவரை, கூத்தப்பார் மருதீசர், தவத்துறைக் கல்வெட்டுகள் -2, புதுப்பட்டிக் குடைவரை, பெருமுடியீசுவரம் மீளாய்வு, அரிட்டாபட்டிக் குடைவரை, தமிழமுதம்-1, மணப்பாடு குடைவரை, ஐந்தொகை காட்டும் தமிழர் சமயமும் கட்டடக்கலையும், நங்கவரம் சுந்தரேசுவரர், பசுபதிகோயில் எனும் 11 ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழில் இணைந்துள்ளன. 

2018இல் வெளியான வரலாறு 28ஆம் தொகுதியில் உத்தமசீலிச் செங்கனிவாய்ப் பெருமாள், செந்துறைப் பெருமானடிகள், பாலைத்துறை மகாதேவர், எறும்பியூர் எறும்பீசுவரர் கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள், பாலைத்துறை மகாதேவர், துடையூர் விஷமங்களேசுவரர் கோயில்களில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்கள் ஆகியவற்றுடன் பாலைத்துறை மகாதேவர்கோயில் கல்வெட்டொன்றின் விட்டுப்போன தொடர்ச்சியும் இடம்பெற்றுள்ளது.

தமிழமுதம்-2, சேய்ஞலூர் மாடக்கோயில், சோழமாதேவி கயிலாசநாதர், சிங்கப்பெருமாள் குடைவரை, பாச்சில் கல்வெட்டுகள், வைகல் மாடக்கோயில், அகச்சாரல், கற்குடிக் கோயில் கல்வெட்டுகள்-1, வெள்ளறை வடஜம்புநாதர் எனும் தலைப்புகளில் 9 ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழில் உள்ளன.

2020இல் வெளியான வரலாறு ஆய்விதழ் 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த தொகுதியாக (29-30) திகழ்ந்தது. சிங்களாந்தகபுரம் அமரேசுவரம், எறும்பியூர் எறும்பீசுவரம், பேட்டைவாய்த்தலை மதுராந்தக ஈசுவரம், பாப்பாப்பட்டி, பத்தாளப்பேட்டை, கோட்டாரப்பட்டி, பனங்காட்டங்குடி ஆகிய இடங்களில் கண்டறிந்த புதிய கல்வெட்டுகள், கொல்லிமலை நடுகல் கல்வெட்டு, அமரேசுவரம், மதுராந்தக ஈசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம், பைஞ்ஞீலி நீலிவனநாதர் கோயில் கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்கள் ஆகியவற்றுடன் கட்டங்கம் கையதே, வட, தென்பரங்குன்றக் குடைவரைகள், மல்லூர் அரங்கநாதர், கற்குடிக் கோயில் கல்வெட்டுகள்-2 எனும் 5 ஆய்வுக்கட்டுரைகளும் இவ்விதழில் பதிவாயின.

இப்போது கிடைக்கும் வரலாறு தொகுதிகள்

1.   வரலாறு 27

2.  வரலாறு 28

3. வரலாறு 29-30

நூல்கள் பெற– +91 93451 11790

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நூல்கள்- பட்டியல் II

நூலாசிரியர்கள்-

அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

28. பாச்சில் கோயில்கள், 2017, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 264, விலை ரூ. 300.

– பாச்சில் கோயில்களான அவனீசுவரம், திருமேற்றளி, ஆதிநாயகப்பெருமாள், ஆகிய மூன்றுடன் சோழமாதேவி கயிலாசநாதர், கூத்தப்பார் மருதீசர், பெருங்குடி பெருமுடியீசுவரர், குமாரவயலூர் கற்றளிப் பரமேசுவரர், திருப்பாராய்த்துறைத் தாருகாவனேசுவரர், நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் – சுந்தரேசுவரர் கோயில்களைக் குறித்த 10 விரிவான ஆய்வுக்கட்டுரைகள்.

29. எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள், 2016, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 200, விலை ரூ. 250.

திருஎறும்பியூர் எறும்பீசுவரம், துடையூர் விஷமங்களேசுவரம் கோயில்களின் கட்டமைப்பு, சிற்பங்கள், கல்வெட்டுகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் உரிய ஒளிப்படங்களுடன் பதிவாகியுள்ளன.

30.  சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு, 2018, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 208, விலை ரூ. 250. திருச்செந்துறை சந்திரசேகரர், திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர், உத்தமசீலிச் செங்கனிவாய்ப் பெருமாள் – கயிலாசநாதர் கோயில்களின் கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள் குறித்த ஆய்வுத் தரவுகளின் அடங்கல்.

31. சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் ஏழு, 2018, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 240, விலை ரூ. 300.

– உறையூர்த் தான்தோன்றீசுவரம், சீனிவாசநல்லூர்க் குரக்குத்துறை, சிங்களாந்தகபுரம் அமரேசுவரம், பேட்டைவாய்த்தலை மதுராந்தக ஈசுவரம், அழுந்தூர் வரகுணீசுவரம், அலகறை சேமீசுவரம், சிலையாத்தி வாசுதேவப்பெருமாள் ஆகிய ஏழு கோயில்களின் கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள் குறித்த ஆய்வுநூல்.

32. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், 2021, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 224, விலை ரூ. 300.

– தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோயிலிலுள்ள புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலின் கட்டமைப்பு, சிற்பச்செழுமை, கல்வெட்டுச் சிறப்பு, தனித்தன்மைகள் குறித்த விரிவான ஆய்வுநூல், 65 பக்கப் படங்களுடன்.

நூலாசிரியர் மு. நளினி

    33. பாதைகளைத் தேடிய பயணங்கள், 2009, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 240, விலை ரூ. 150.

    – 22 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. முதற் கட்டுரையான வரலாற்றுப் பதிவுகள் களஆய்வுகளின்போது ஆசிரியரின் கண்களில் விழுந்து வரலாற்று மேடைக்கு வந்த புதிய பதிவுகள். புணை ஆவணம், காவற்காட்டு இழுவை, கல்வெட்டில் மருத்துவர், இராமாயணக் கதவுகள், தொட்டான் பட்டான், மரணதண்டனை, மகப்பேற்றின் கொண்டாட்டம், கழுதையேற்றம், மீனாட்சி திருமணத்தில் மங்கம்மாள், மீனாட்சி கோயில் மேற்றள மணிக்கூண்டு, திருமுன் நிற்கும் திருமலை, மரபுவரிசையில் நாயக்க அரசர்களின் சிற்பங்கள், எப்பாடுபட்டாகிலும் மகப்பேறு, பார்க்கவும் படிக்கவும் இராமாயணப் பத்திகள், சிவிகை பொறுத்தாரும் ஊர்ந்தாரும், ஆரத்தழுவ நீயிருந்தால் அமைதியாகப் பெற்றிடுவேன், கழுக்குன்றப் புதையல்கள்ஆகியன பதிவுகளின் தலைப்புகள்.

    தமிழ்நாட்டுக் குடைவரைகள் – சிலசெய்திகள், பரமேசுவர மகா வராக விஷ்ணு கிருகம், தமிழ்நாட்டு ஆடற்கலை, நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில், சோழர் கால ஆடலாசான்கள், இராஜராஜீசுவரத்துப் பாடகர்கள், மூவேந்தன் என்றும் பசாசின் பேர், ஏகவீரி, திருமணல்மேடு பஞ்சநதீசுவரர் கோயில், கோவண நாடகம், உடையாளூர்க் கயிலாசநாதர் கோயில், திருக்கோயில் ஆடலரங்குகள், வைஷ்ணவ மாகேசுவரம், விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில், ஓங்கார நாதத்து வேதமங்கலம், திருவரங்கத்து வைகாசித் திருவிழா, அங்கயற்கண்ணி வளாகம், வரலாறு வழங்கும் விளக்குத் தோரணங்கள், மங்களாவூர் மத்யார்ச்சுனேசுவரர் கோயில், பூலோகநாதசுவாமி கோயில், எரணியம்மன் கோயில் ஆகிய தலைப்புகளில் பிற கட்டுரைகள்.

நூலாசிரியர்கள் அர. அகிலா, இரா. கலைக்கோவன்

    34. ஒருகல் தளிகள் ஒன்பது, 2009, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 280, விலை ரூ. 200.

    – மாமல்லபுரத்துப் பல்லவர் கால ஒருகல் தளிகள் ஒன்பதையும் நிறைவாக ஆய்வு செய்து விரிவான அளவில் உருவான கட்டுரைகளை உள்ளடக்கிய முதல் நூல். ஒன்பது தளிகளையும் பல கோணங்களில் ஒப்பீடு செய்து பொதுக்கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நூலாசிரியர்கள் கோ. வேணி தேவி, இரா. கலைக்கோவன்

    35. மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள், 2011, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 384, விலை ரூ. 300.

    – சோழப் பெருவேந்தர் கோச்செங்கணான் அமைத்த 32 மாடக்கோயில்களை ஆய்வு செய்து எழுதப்பெற்ற நூல். கோச்செங்கணான் குறித்த ஆய்வுக்கட்டுரையும் மாடக்கோயில்கள் குறித்த விரிவான ஒப்பீடும் குறிப்பிடத்தக்கன. பசுபதிகோயில், நல்லூர், ஆவூர், ஆறைவடதளி, சேய்ஞலூர், தலைஞாயிறு, நாலூர், நறையூர், குடவாயில், நன்னிலம், அம்பர், வைகல், மலையீசுவரம், சட்டநாதர் கோயில், கீழ்வேளூர், சிக்கல், வலிவலம், தேவூர், தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர்-தட்சிணபுரீசுவரர், ஆக்கூர், திருவிளையாட்டம், பண்டார வாடை, பெருவேளூர், நாங்கூர், நகரி, இந்தளூர், கீழையூர், திருப்பேர்நகர், ஆலம்பாக்கம், எலவானசூர்க் கோட்டை, பெருங்கடம்பனூர் ஆகிய ஊர்க்கோயில்கள் நன்கு படம் பிடிக்கப்பட்டுள்ளன.

பதிப்பாசிரியர்கள் மா. ரா. அரசு, மு. நளினி, அர. அகிலா

    36. கலை 66, 2014, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 642, விலை ரூ. 500.

    – டாக்டர் இரா. கலைக்கோவனின் ஆய்வு மாணவர்களும் நண்பர்களும் இணைந்து வெளியிட்டிருக்கும் பணிப் பாராட்டு நூல். உறவுகள், நண்பர்கள், மாணவர்கள் என 66 பேர் டாக்டர் கலைக்கோவனிடம் கற்றதும் பெற்றதும் பகிர்ந்துள்ளனர்.

இந்நூல்களில் இப்போது கிடைப்பவை

1.  பாச்சில் கோயில்கள்

2. எறும்பியூர் துடையூர் – சோழர் தளிகள்

3.  சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு

4. சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் ஏழு

5. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

6. மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்

7. கலை 66 (பணிப்பாராட்டு நூல்)

நூல்கள் பெற– +91 93451 11790

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நூல்கள்- பட்டியல் I

நூலாசிரியர் இரா. கலைக்கோவன்

1. கலை வளர்த்த திருக்கோயில்கள், 1984, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி. டி. கே. சாலை, சென்னை – 600 018, பக்கங்கள் 179, விலை ரூ. 20.

            – நூலாசிரியரின் முதல் ஆய்வு நூல் – மானம்பாடி நாகநாதர் – பழையாறைச் சோமநாதர் – குடந்தை நாகேசுவரர் – மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் – உறையூர்ப் பஞ்சவர்ணேசுவரர், நாச்சியார் – கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில்களுடன், குடந்தை ஆறைவடதளி – மேற்றளி, திருச்சத்திமுற்றம், குமாரவயலூர், சோழபுரம், கொரநாட்டுக் கருப்பூர், கங்கைகொண்டசோழபுரம், கண்ணனூர், அரிசிற்கரைப்புத்தூர் சிவன் கோயில் குறித்த பதினாறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ள இந்நூல் தமிழ்நாடு அரசின் முதற் பரிசு பெற்றது.

2. காட்டுக்குள் ஒரு கலைக்கோயில், 1986, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 196, விலை ரூ. 20. 

            – நூலாசிரியரின் இரண்டாம் படைப்பு – அல்லூர்ப் பசுபதீசுவரர், எலுமிச்சம்பாளையம் சக்கராயி, ஆலம்பாக்கம் கயிலாசநாதர் – மாடமேற்றளி, ஐயாறு வடகயிலாசம், முள்ளிக்கரும்பூர், பனமங்கலம் வாரணபுரீசுவரர், உறையூர்த் தான்தோன்றீசுவரம், முழையூர்ப் பரசுநாதர், கோயிலடி அப்பக்குடத்தான் ஆகிய கோயில்கள் குறித்த கட்டுரைகளுடன் திருமலைநாயக்கர் செப்பேடு, சண்டீசக் குழப்பம், கல்லில் வடித்த காதல் கவிதைகள் எனும் பொதுக்கட்டுரைகளும் அடக்கம். சண்டீசக் குழப்பம் நான்குமுக சண்டேசுவரர் திருமேனிகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பரிசு பெற்ற நூல்

            3. எழில் கொஞ்சும் எறும்பியூர், 1987, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 218, விலை ரூ. 20.

            – நூலாசிரியரின் மூன்றாம் படைப்பு – திருஎறும்பியூர் மலைக்கோயில், திருவாசி மாற்றுரை வரதீசுவரர், கோயிலடி திவ்யஞானேசுவரர், திருவரங்கம், பஞ்சவன்மாதேவீசுவரம் குறித்த கட்டுரைகளுடன் தாட்சாயணி, சதுரமும் லலிதமும்,  தாமரைத் திருவடிக்கீழ், நவகண்ட நடுகற்கள் முதலிய செப்புத்திருமேனி, சிற்பம் சார் கட்டுரைகளும் சமுதாயத்தில் திருமுறைத் தாக்கம், வாருங்கள் வலம் வருவோம், கல்வெட்டுகளில் இசைக்கருவிகள் – சமுதாயம் மறுபார்வை ஆகிய பொதுக் கட்டுரைகளும் அடக்கம்.

            4. சுவடழிந்த கோயில்கள், 1987, பாரி நிலையம், 184, பிராடுவே, சென்னை- 600 108, பக்கங்கள் 196, விலை ரூ. 18.

            – திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் ஒலிபரப்பிய மூன்று அரைமணிநேர உரைகள் (சுவடழிந்த கோயில்கள்-1984, அழிந்துகொண்டிருக்கும் அழகுக் கோயில்கள்-1985, காலத்தால் அழியாத கலைக்கோயில்-1986) மூன்று கட்டுரைகளாக அமைய, முள்ளிக்கரும்பூர் ஒரு வரலாற்று விடியல், கோனேரிராஜபுரத்துக் குழப்பங்கள், குடந்தைக் கீழ்க்கோட்டம் கல்வெட்டுகள் எனும் தலைப்புகளில் செந்தமிழ்ச் செல்வியில் வெளியான மூன்று ஆய்வுக் கட்டுரைகள் உடன் இணைய உருவான இந்நூல் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது.

.

            5. பழுவூர்ப் புதையல்கள், 1989, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 322, விலை ரூ. 35.

            – தமிழ்நாட்டின் ஒரு சிறு பகுதியை ஆண்ட சிற்றரச மரபினரான பழுவேட்டரையர்கள் குறித்த ஆய்வுநூல். புதிய பார்வையில் பழுவூர் உண்மைகள், காற்றில் கரைந்து கொண்டிருக்கும் காவியக் கோயில்கள் (பகைவிடை ஈசுவரம், அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம், ஆலந்துறையார் கோயில், மறவனீசுவரம்), கல்வெட்டுப் பார்வையில் பழுவூர் எனும் தலைப்புகளில் அமைந்த பழுவூர் மரபு குறித்த விரிவான நூல்.

            6. பழுவூர் அரசர்கள், கோயில்கள், சமுதாயம், 2002, இலக்கியப்பீடம் பதிப்பகம், 3 ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033, பக்கங்கள் 299, விலை ரூ. 75.

            – பழுவூர்ப் புதையல்களின் மீள் வடிவாக்கம். பழுவேட்டரையர் கட்டமைப்புகள் மிக விரிவான அளவில் படம்பிடிக்கப்பட்டுள்ளமை தனிச்சிறப்பு. இலக்கியப்பீடப் பரிசு பெற்ற நூல்.

            7. சோழர் கால ஆடற்கலை, 2003, அலமு பதிப்பகம் (முதற் பதிப்பு), சேகர் பதிப்பகம், (இரண்டாம் பதிப்பு) 66, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர், சென்னை – 600 078, பக்கங்கள், 288, விலை ரூ. 225.

            – விஜயாலய சோழர் தொடங்கி அதிராஜேந்திரர் காலம் வரை அமைந்த ஆடற்கலைச் சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை ஆய்வுசெய்து ஆடற்கல்வி, கலைஞர்களும் கருவிகளும், அரங்கம், ஆடற்கலைஞர்களும் அவர்தம் வாழ்க்கையும் எனும் நான்கு தலைப்புகளில் எழுதப்பட்ட கலை ஆய்வுநூல். தமிழ்நாடு அரசின் முதற் பரிசு பெற்றது.

            8. தலைக்கோல், 2004, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 264, விலை ரூ. 115.

            – நூலாசிரியரின் ஆடற்கலை சார்ந்த இரண்டாம் ஆய்வுப் படைப்பு. தலைக்கோல், அப்பரும் அவிநயமும், காந்தள், தேர்க்குரவைகள், முதல் திருமுறையில் ஆடல் குறிப்புகள், அப்பர் என்னும் அரிய மனிதர், சங்க காலத்தில் ஆடற்கலை, சங்கம் மருவிய காலத்தில் ஆடற்கலை, பல்லவர்-பாண்டியர் காலத்தில் ஆடற்கலை, புதிய பார்வையில் சார்ங்கபாணி கரணங்கள் ஆகிய கட்டுரைகள் அடங்கிய நூல்.

            9. வரலாற்றின் வரலாறு, 2006, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி – 620 018, பக்கங்கள் 146, விலை ரூ. 100.

            – இலக்கியம், வரலாறு இரண்டிலும் கோலோச்சி முத்திரை நூல்களைப் படைத்த பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கனாரின் வாழ்வையும் ஆய்வுகளையும் ஏழு தலைப்புகளின் கீழ் விரிவாகப் படம்பிடிக்கும் ஆய்வுநூல். பின் இணைப்புகளாக இராசமாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர் குடும்பம், அவர் நினைவு போற்றும் அமைப்புகள், காலநிரல்படி அவர் நூல்கள், அவர் தொடர்பான ஒளிப்படங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

            10. மா. இராசமாணிக்கனார், 2006, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018. பக்கங்கள் 132 விலை ரூ. 25.

            – இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் குறித்த படைப்பு. இலக்கியம், சமயம், வரலாறு, கோயிற்கலைகள், கல்வெட்டு ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை உடையவரும் ஆய்வு நெறிமுறையிலும் அணுகு முறைகளிலும் புதிய சிந்தனைகளை விதைத்தவரும் சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கத் தம் எழுத்தாலும் பேச்சாலும் பாடுபட்டவரும் மாந்தநேயமும் மொழி, நாடு இவற்றில் தளராப் பற்றும் கொண்டு உழைத்து உயருமாறு இளைய தலைமுறையை ஆற்றுப்படுத்தியவரும் பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, பத்துப்பாட்டு ஆராய்ச்சி, பெரியபுராண ஆராய்ச்சி, சைவ சமய வளர்ச்சி, தமிழ் மொழி இலக்கிய வரலாறு முதலிய காலம் கடந்து நிற்கும் அரிய நூல்களைப் படைத்தவருமான பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் எளிமை, இனிமை, உண்மை, உழைப்பு ஆகியவற்றை உரிய தளங்களில் பதிவு செய்திருக்கும் நூல்.

            11. வாருணிக்கு எழுதிய வரலாற்று மடல்கள், 2010, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 224, விலை ரூ. 200.

            – வரலாறு டாட் காம் மின்னிதழிலும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வரலாறு ஆண்டு ஆய்விதழிலும் எழுதிய பதின்மூன்று மடல் வடிவக் கட்டுரைகளின் தொகுப்பு. பரங்குன்றம் வடகுடைவரை வளாகப் புதிய கண்டுபிடிப்புகள், எனக்கு இந்தியா வேண்டாம், கட்டடக்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும், முல்லை நிலத்தில் ஒரு நாள், மகுடாகமம்-பரசிவம்-தங்கவிமானம், மெய்ப்பொருள் காண்பதறிவு, ஞாலவெளியில் ஒரு கால நடை, உண்மைகள் சுடும், காலந்தோறும் கல்வெட்டுத் தமிழ்நடை, பாராட்டுவோம், ஒரு மனிதன்-ஒரு கோயில்-ஒரு புத்தகம்- ஒரே குழப்பம், அழகாகுமா?, பெருமைச் சுவடுகள் ஆகிய கட்டுரைகள் பதிவாகியுள்ள நூல்.

12. சங்கச்சாரல், 2015, டாக்டர் மா. இராச மாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி  – 620 018. பக்கங்கள் 224, விலை ரூ. 250.

            – சங்ககாலத்தின் காலம்? சங்க இலக்கியங்களில் ஆடற்கலை, சமூகத்தரவுகள், பத்துப்பாட்டில் கட்டடக்கலை, தமிழமுதம், தேர்க்குரவைகள், காந்தள், ஐந்தொகை காட்டும் தமிழர் சமயமும் கட்டடக்கலையும், மன்றத்துப் புன்னையும் மாமன்னர் அப்பரும் எனும் ஒன்பது கட்டுரைகள் வழிச் சங்கச் செழுமையைக் காட்டும் நூல். 

13. இருண்ட காலமா?, 2016, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி – 620 018. பக்கங்கள் 224, விலை ரூ. 250.

            – இருண்ட காலமா? பல்லவர்களின் பிராகிருதச் செப்பேடுகள், சிம்மவர்மரின் சமஸ்கிருதச் செப்பேடுகள், ஓங்கோடும் சுராவும், கோச்செங்கணானும் மாடக்கோயில்களும், சங்கம் மருவிய கால ஆடற்கலை, அரங்கேற்றுகாதையும் நாட்டியசாத்திரமும், குன்றக்குரவை – சில புதிய பரிமாணங்கள், சாந்திக்கூத்து. குடக்கூத்து, பிள்ளையார்பட்டிக் குடைவரை, மகேந்திரர் குடைவரைகள் ஓர் ஒப்பாய்வு, பத்திமைக்கால ஆடற்கலை எனும் 13 கட்டுரைகளும் இருண்ட காலத்தை வெளிச்சப்படுத்துகின்றன.

நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்

14. தளிச்சேரிக் கல்வெட்டு, 2002, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 261, விலை ரூ. 100.

            – தஞ்சாவூர் ராஜராஜீசுவரம் திருக்கோயிலில் காணப்படும் ஆடல், இசை, கோயிற் பணிகள் தொடர்பான 56 மீட்டர் நீளத் தமிழ்க் கல்வெட்டின் மறு படிப்பில் விளைந்த விரிவான ஆய்வுக்கட்டுரை. இக்கல்வெட்டுக்குத் தளிச்சேரிக் கல்வெட்டு என்ற பெயரைச் சூட்டியவர்கள் இந்நூலாசிரியர்கள். திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர், பெருமுடி ஈசுவரர், கபிலர்மலைக் கோயில், தழுதாழைச் சிவன் கோயில் குறித்த ஆய்வுக்கட்டுரைகளுடன் சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் குறித்த விரிவான ஆய்வும் இடம்பெற்றுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுடன் குமாரவயலூர்க் கோயில் மீளாய்வுக் கட்டுரையாக, நத்தம் ஆதிமூலநாதப் பெருமாள் கோயிலில் கிடைத்த தனித்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் நத்தத்தில் பழையதும் புதியதும் என்ற தலைப்பில் பதிவாகியுள்ளன. கல்பாளையத்தில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சந்தியப்பன் கல்லில் சரித்திரச் சுவடுகளாக வடிவெடுத்துள்ளது.

15. அத்யந்தகாமம், 2004, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 186, விலை ரூ. 90.

            – மாமல்லபுரம் ஒருகல் தளிகளில் (பஞ்சபாண்டவர் ரதங்கள்) கட்டட, சிற்ப, கல்வெட்டுச் சிறப்பு வாய்ந்த முத்தள ஒருகல் தளியான அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம் (தருமராஜரதம்) குறித்த முழுமையான ஆய்வுநூல். சிற்ப, கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் இதைக் கட்டமைத்தவர் இராஜசிம்மப் பல்லவரே என்பதை நிறுவும் நூல்.

16. மகேந்திரர் குடைவரைகள், 2004, அலமு பதிப்பகம் (முதற் பதிப்பு), சேகர் பதிப்பகம் (இரண்டாம் பதிப்பு), பக்கங்கள் 286, விலை ரூ. 225.

            – தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த பல்லவப் பேரரசர் முதலாம் மகேந்திரவர்மரின் கலையாற்றல் பேசும் நூல். மண்டகப்பட்டு இலக்ஷிதாயதனம், பல்லாவரம் குடைவரை, மாமண்டூர்-நரசமங்கலம் குடைவரைகள், மகேந்திரவாடி மகேந்திர விஷ்ணுகிருகம், சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவரம், தளவானூர் சத்ருமல்லேசுவராலயம், சிராப்பள்ளி லளிதாங்குர பல்லவேசுவர கிருகம் ஆகிய ஏழு குடைவரைகள் குறித்த விரிவான ஆய்வுக்கட்டுரைகள். மகேந்திரர் குடைவரைகள் ஓர் ஒப்பாய்வு என்ற தலைப்பில் குடைவரைகளைப் பற்றிய திறனாய்வு. மகேந்திரரின் ஆளுமை ஆய்வாகப் பேரறிவாளர் என்ற தலைப்பில் தனிக் கட்டுரை. வல்லம், குரங்கணில் முட்டம், மேலைச்சேரிக் குடைவரைகள் மகேந்திரர் காலக் குடைவரைகளாக விளக்கம் பெறல். குடைவரைகளைப் பற்றித் தமிழில் வெளிவந்த முதல் விரிவான நூல்.

17. பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், 2005, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 248, விலை ரூ. 120.

            – பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளும் பெண் தெய்வங்களின் தொன்மையான சிற்பங்கள், காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள் எனும் சிற்ப ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டறிக்கைகள் பதிப்பும் பயன்பாடும், கல்வெட்டுகள் தேடல்-தெளிதல்-பதிப்பித்தல்-சிக்கல்களும் தீர்வுகளும், கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் ஆகிய ஆய்வியல் பதிவுகளும் தலைப்பறை-மத்தளம்-சிரட்டைக் கின்னரி ஆகிய இசைக்கருவிகள் குறித்த ஆய்வுக் கட்டுரையும் உள்ளன. அரும்பாவூர்க் கோயில், சதுர்வேதிமங்கலம் உருத்திரகோடீசுவரர் கோயில் குறித்த புதிய கண்டுபிடிப்புகளுடனான விரிவான பதிவுகளும் பெற்றுள்ள நூல்.

18. வலஞ்சுழி வாணர், 2005, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 244, விலை ரூ. 120.

            – குடந்தைத் தஞ்சாவூர்ச் சாலையில் 6 கி. மீ. தொலைவிலுள்ள திருவலஞ்சுழிக் கோயிலை முழுமையாக ஆய்வுசெய்து எழுதப்பட்ட நூல். ஆய்வின்போது பல புதிய கல்வெட்டுகளும் சிற்பத்தொகுதிகளும் கண்டறியப்பட்டன. கல்வெட்டுகள் சுட்டும் பிடாரி ஏகவீரி அடையாளப்பட்டதுடன் அவர் கோயிலும் கண்டறியப்பட்டது. கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள், இலக்கியம் சார்ந்து உருவான இந்நூல் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.

19. கோயில்களை நோக்கி . . . , 2006, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 228, விலை ரூ. 120.

            – சிராப்பள்ளி வானொலியில் 12 வாரங்கள் தொடர்ந்து கோயில்களின் மேன்மை,  அவை வரலாற்றுக் களங்கள் என்பன குறித்து மக்களிடம் பகிர்ந்த தரவுகளை ஒருங்கிணைத்துத் தலைமைக் கட்டுரையாக்கிப் பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளுடன் சேர்த்து உருவாக்கிய நூல். பல்லவர்களின் பிராகிருதச் செப்பேடுகள், சிம்மவர்மரின் சமஸ்கிருதச் செப்பேடுகள், ஓங்கோடு-சுராச் செப்பேடுகள், காஞ்சிபுரம் ராஜசிம்மேசுவரம் குறித்த அம்ம அழகிதே, தேவதேவிக் கல்வெட்டுகள் ஆகிய கட்டுரைகளும் திருவலஞ்சுழிக் கோயில் ஆய்வுக்காலப் பதிவுகள் பேய்த்தொழிலாட்டி, யார் காரணம், மன்றத்துப் புன்னையும் மாமனிதர்  அப்பரும், சில நேரங்களில் சில கேள்விகள், தட்டாத கதவுகள் திறப்பதில்லை, என்றைக்கு விழிப்பது, சாந்திக்கூத்து, வரலாறு காத்திருக்கிறது, ஆத்மாவின் அடையாளங்கள் எனும் பொதுக் கட்டுரைகளும் நகர் அப்பிரதீசுவரர் கோயில் தொடர்பான சமய சாசனம், நன்றியுடன் நகரிலிருந்து ஆகிய கட்டுரைகளும் திருநெடுங்களம் கோயில் ஆய்வில் வெளிப்பட்ட நெடுங்களத்தில் புதிய கல்வெட்டுகள், ஸ்ரீபுறக்குடிப்பள்ளி ஆகிய பதிவுகளும் மீட்டுருவாக்கத்திற்கு ஆளாகி இடம்பெற்ற நூல்.

20. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள், 2007, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 208, விலை ரூ. 100.

            – தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடர்பான நூலாசிரியர்களின் ஆய்வுப் படைப்புகளில் இது இரண்டாம் தொகுதி. குன்றக்குடித் திருமடத்தின் ஆளுகையிலுள்ள குன்றக்குடிக் குடைவரைகள், பிரான்மலைக் குடைவரை, அரளிப்பட்டிக் குடைவரை, திருக்கோளக்குடிக் குடைவரை வளாகம் ஆகியன குறித்த விரிவான ஆய்வுநூல். இந்நான்கு இடங்களிலும் அகழப்பட்டுள்ள குடைவரைகள், செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் ஒப்பீடும் இடம்பெற்றுள்ள நூல்.

21. மதுரை மாவட்டக் குடைவரைகள், 2007, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 272, விலை ரூ. 150.

            –  தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடர்பான நூலாசிரியர்களின் மூன்றாம் ஆய்வுப் படைப்பு. அரிட்டாபட்டி, மாங்குளம், குன்றத்தூர், ஆனைமலை, பரங்குன்றம் ஆகிய இடங்களிலுள்ள அனைத்துக் குடைவரைகள், குடைவுத் திருமுன்கள், சிற்பங்கள் குறித்த முழுமையான ஆய்வுநூல். மதுரை மாவட்டக் குடைவரைகள் தொடர்பான ஒப்பீடும் இடம் பெற்றுள்ள நூல்.

22. தென்மாவட்டக் குடைவரைகள், 2009, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 208, விலை ரூ. 200.

            – தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடரில் நூலாசிரியர்களின் நான்காம் ஆய்வுப் படைப்பு. தமிழ்நாட்டுத் தென்மாவட்டக் குடைவரைகளான திருமலை, கூத்தம்பூண்டியான் வலசு, மூவரைவென்றான், புதுப்பட்டி, திருத்தங்கல், பாறைக்குளம், செவல்பட்டி, கழுகுமலை, மலையடிக்குறிச்சி, வீரசிகாமணி, திருமலைப்புரம், சொக்கம்பட்டி, ஆண்டிச்சிப்பாறை, ஆனையூர், குரத்தியறை, சிவகிரி, விழிஞம், நந்திக்கரை ஆகிய 18 குடைவரைகள் குறித்த கட்டுரைகளுடன் அவை சார்ந்த ஒப்பீடும் இடம்பெற்றுள்ள நூல்.

23. புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், 2010, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 400, விலை ரூ. 300.

            – தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடரில் நூலாசிரியர்களின் ஐந்தாம் ஆய்வுப் படைப்பு. புதுக்கோட்டை மாவட்ட மலையடிப்பட்டி, குன்றாண்டார்கோயில், மெய்யம், நகரத்தார்மலை, மலையக்கோயில், கோகர்ணம், தேவர்மலை, பூவாலைக்குடி, ஆய்ங்குடி, மாங்குடி, குலாலக்கோட்டையூர், குடுமியான்மலை, சிற்றண்ணல்வாயில் ஆகிய இடங்களிலுள்ள 20 குடைவரைகள் குறித்த கட்டுரைகளும் அவற்றின் ஒப்பீடும் உள்ள நூல். 

24.  மாமல்லபுரம் குடைவரைகள், 2012, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 248, விலை ரூ. 250.

            – தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடரில் நூலாசிரியர்களின் ஆறாம் ஆய்வுப் படைப்பு. மாமல்லபுரம், கழுக்குன்றம் குடைவரைகள் முதல்முறையாக நிறைவடையாக் குடைவரைகள், கருவறைத் தெய்வமற்ற குடைவரைகள், கருவறைத் தெய்வம் பெற்ற குடைவரைகள் என்ற முப்பிரிவுகளின் கீழ் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இக்குடைவரைகள் குறித்த ஒப்பீடும் இவற்றை உருவாக்கியவர் குறித்த கருதுகோள்களும் இடம்பெற்றுள்ள நூல்.

            25. பல்லவர்-பாண்டியர்-அதியர் குடைவரைகள், 2012, சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 352, விலை ரூ. 300.

            – தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடரில் நூலாசிரியர்களின் ஏழாம் ஆய்வுப் படைப்பு. முதல் ஆறு தொகுதிகளில் இடம்பெறாத 20 குடைவரைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் பல்லவர் குடைவரைகள், அதியர் குடைவரைகள், பாண்டியர் குடைவரைகள் எனும் பெருந்தலைப்புகளின் கீழ்ப் பதிவாகியுள்ளன.  சிங்கப்பெருமாள் கோயில் பாண்மலை, ஆவூர், சிங்கவரம், திரைக்கோயில், கீழ்மாவிலங்கை, அறையணிநல்லூர், பைஞ்ஞீலி ஆகிய ஊர்களிலுள்ள குடைவரைகளுடன் சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை, திருவெள்ளறைக் குடைவரைகள், தான்தோன்றிமலைக் குடைவரைகள் ஆகியன பல்லவர் குடைவரைகளாக அமைய, அதியேந்திர விஷ்ணு கிருகமும் நரசிம்மர் குடைவரையும் அதியர் குடைவரைகளாக இடம்பெற்றுள்ளன. பிள்ளையார்பட்டி, மகிபாலன்பட்டி, மணப்பாடு, பூதப்பாண்டி, குற்றாலம், திருச்செந்தூர் ஆகிய இடங்களிலுள்ள குடைவரைகள் பாண்டியர் குடைவரைகளாகப் பதிவாகியுள்ளன. 20 குடைவரைகள் குறித்த ஒப்பீடுமுள்ள நூல்.

26. தவத்துறையும் கற்குடியும், 2016, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 184, விலை ரூ. 200.

– சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் தொடரில் வெளிவந்த இம்முதல் நூலில் லால்குடி சப்தரிஷீசுவரர் கோயில், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில் குறித்த கட்டுமான, சிற்ப, கல்வெட்டுத் தரவுகள் அரிய ஒளிப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

27. வாணன் வந்து வழி தந்து . . . , 2016, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டிச் சாலை, கோயம்புத்தூர் – 641 048, பக்கங்கள் 284, விலை ரூ, 400.

– ‘வாணன் வந்து வழி தந்து’ எனும் 75 பக்கத் தலைப்புக் கட்டுரை ராஜராஜர் கால ஓவியப்பதிவின் வழிச் சுந்தரர் வாழ்க்கை காட்டும் பதிவு. அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப, கிராதார்ச்சுனர் கட்டுரைகள் தஞ்சாவூர் ராஜராஜீசுவரச் சிற்பத்தொகுதிகள் குறித்த விளக்கப் பதிவுகள். கல்வெட்டுகளின் அடிப்படையில் அமைந்த ராஜராஜரின் புதல்வியர் மூவர் வரலாற்றுலகிற்குப் புதிய செய்தி.  இராஜராஜீசுவரம், கசிந்துருகிக் காதலாகிக் கண்ணீர் மல்கி ஆகிய இரு கட்டுரைகளும் தஞ்சாவூர்க் கோயிலின் பெருமை பேசுவன.  பிற கட்டுரைகளாக வலஞ்சுழி சேத்ரபாலர், மாடக்கோயிலான திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர், நகரத்தார்மலை விஜயாலய சோழீசுவரம் ஆகியன உள்ளன.

இந்நூல்களில் இப்போது கிடைப்பவை

1. சங்கச்சாரல்

2. இருண்ட காலமா?

3. தவத்துறையும் கற்குடியும்

4. வாணன் வந்து வழி தந்து. . .

நூல்கள் பெற– +91 93451 11790