இராஜராஜர் தேவியின் தளிகளும் மகள்களும்

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் தமக்கெனத் தனி முத்திரை பதித்தவர்களில் அரசர்களைப் போலவே அரசியரும் இருந்தனர். எனினும், கண்டராதித்த சோழரின் தேவியும் உத்தமசோழரின் அன்னையுமான செம்பியன்மாதேவிக்குக் கிடைத்த வெளிச்சம் அவர்களில் பலருக்குக் கிடைக்காமலே போயிற்று. கணவர், மகன் என இருவரும் ஆட்சியில் இருந்ததும் அவர்களுக்கிடையிலும் பின்பும் ஆட்சியிலிருந்தவர்கள் மாதேவியிடம் செலுத்திய அன்புநிறை பத்திமையுமே செம்பியன்மாதேவியின் அரும்பணிகள் சிறக்கவும் தொடரவும் நிலைக்கவும் காரணிகளாயின. முதல் பராந்தகர் காலத்திலிருந்து முதல் இராஜராஜர் காலம்வரை சோழராட்சியைப் பார்த்த பெருமாட்டி அவர். அவர் போல் நெடிய வாழ்வும் பெருமிதப் புரப்பும் கிடைக்காத சூழலிலும் பெற்ற வாழ்க்கையின் சொற்ப காலத்தில் பெருமைக்குரியன செய்து இம்மண்ணின் கலைவளம் கூட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தந்திசத்திவிடங்கி.

சோழநாட்டின் பெருவேந்தராய் மிளிர்ந்த முதல் இராஜராஜரின் பட்டத்தரசியாக, உலகமாதேவி என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இப்பெருமாட்டி இரண்டு கலைக்கோயில்களை உருவாக்கியுள்ளார். இரண்டுமே பாடல் பெற்ற இரு காவிரிக்கரைக் கோயில்களில் அடங்கியுள்ளன. சுவாமிமலைக்கு அருகிலுள்ள வலஞ்சுழித் தளி, பெருவளாகமாய் விரிந்த பெருங்கோயில். அதன் முதலிரு கோபுரங்களுக்கு இடைப்பட்ட பெருவெளியில் தென்புறத்தே இலங்கும் ஒருதள விமானமும் முகமண்டபமும் பெற்ற சேத்திரபாலர் கோயில் தந்திசத்திவிடங்கியால் இராஜராஜரின் 6ஆம் ஆட்சியாண்டில் எழுப்பப்பட்டது. அப்பர் கயிலாயக் காட்சி பெற்ற திருவையாற்று ஐயாறப்பர் கோயிலுள் வடபுறத்தே விளங்கும் உலகமாதேவீசுவரமான வடகயிலாயம் இவ்வம்மையால் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டிற்குச் சற்று முன்பாக வடிவம் பெற்றது. இரண்டு கோயில்களுமே எழிலார்ந்த சிற்பங்களாலும் வளமான கல்வெட்டுகளாலும் நிறைந்துள்ளன.

வலஞ்சுழி சேத்திரபாலர் கோயில்

பல திருக்கோலங்களில் பல்வேறு திருப்பெயர்களுடன் விளங்கும் சிவபெருமானுக்கு ஆடையற்ற கோலங்களாய் அமைந்தவை மிகச் சிலவே. அவற்றுள் மிகப் பழைமையானது அவர் பிச்சையேற்கும் கோலம். நாயை ஊர்தியாகக் கொண்ட பைரவ வடிவம் அவரது மற்றோர் ஆடையற்ற கோலமாகும். இவ்விரண்டு கோலங்களிலும் முற்சோழர் சிற்பங்கள் பலவாய்க் கிடைத்துள்ளன. மூன்றாவதும் சிறப்புக்குரியதுமான வடிவமாக அமைந்த சேத்ரபாலரைத் தமிழ்நாட்டில் செழிக்கச் செய்தவர் தந்திசத்திவிடங்கி.

உத்தமசோழரின் ஆட்சிக்காலத்தில் உலகமாதேவியால் வலஞ்சுழிக் கோயிலில் உள்ளடக்கத் திருமேனியாய் அமைக்கப்பெற்ற சேத்ரபாலர், இராஜராஜர் ஆட்சிக் காலத்தே தனித் திருமுன் பெற்றுக் கற்றளித் தெய்வமாய் இடம்பெயர்ந்தமையைக் கல்வெட்டுகள் பெருமையோடு புகல்கின்றன. சேத்ரபாலர் என்றால், ‘ஊர்க்காவலர்’ என்று பொருள். ‘தாம் இருக்கும் இடத்தைக் காப்பவர்’ என்று இவரை ஆகமங்கள் அடையாளப்படுத்துகின்றன. வலஞ்சுழிக் கோயிலுக்குள் தென்கிழக்கில் மேற்குப் பார்வையாக அமைந்த இத்திருமுன்னே தமிழ்நாட்டில் சேத்ரபாலருக்காக எடுக்கப்பட்ட முதல் தனித் திருக்கோயிலாகும்.

வலஞ்சுழி சேத்திரபாலர்

தமிழ்நாட்டில் காணப்பெறும் மிகச் சிலவான இந்த ஊர்க்காவலர் சிற்பங்களில் தலையாயது உலகமாதேவியால் உருவாக்கப்பட்டது. எட்டுக் கைகளுடன் சுடர்முடி அழகராய் விளங்கும் வலஞ்சுழி ஊர்க்காவலரின் தலையில், இடுப்பில், திருவடியில் பாம்புகள். காவலுக்குரிய கருவிகள் கைகளில் இலங்கக் கோரைப்பற்களுடன் நெடிய திருமேனியராய் விளைந்த இந்தக் காவலருக்குப் பூசைக்கும் அழகூட்டலுக்கும் என உலகமாதேவியும் சோழப் பெருங்குடும்பமும் வாரி வழங்கிய கொடைகள் கல்வெட்டுகளாய் இந்தத் திருமுன் சுவர்களை நிறைத்துள்ளன. இராஜராஜப் பெருவேந்தர் தஞ்சாவூரில் எழுப்பிய இராஜராஜீசுவரத்தின் கொடையாளர் பட்டியலில்கூட இடம்பெறாத அவரது மூன்று திருமகள்களுள் குந்தவையும் நடுவிற் பெண்ணான மாதேவடிகளும் சேத்ரபாலருக்குத் தங்கம் தந்து மகிழ்ந்துள்ளனர். உலகமாதேவியின் வலஞ்சுழி அறிமுகம் சேத்ரபாலர் வழிபாட்டைச் சோழநாட்டில் செழிக்க வைத்தது.

உலகமாதேவீசுவரம், திருவையாறு

ஐயாற்று உலகமாதேவீசுவரம் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டிற்குச் சற்று முன்பாக உலகமாதேவியால் கற்றளியாய் எழுப்பப்பெற்றது. வலஞ்சுழி சேத்ரபாலர் போலவே இங்கும் சோழக் கொடைகள் கல்வெட்டுகளாய்க் கற்சுவர்களை நிறைத்துக் கண்சிமிட்டுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் முதல் இராஜராஜரின் மூன்றாம் மகள் அருமொழி சந்திரமல்லியான கங்கமாதேவியை வெளிச்சப்படுத்துகிறது. வலஞ்சுழி சேத்ரபாலருக்கு விருப்போடு பொன்னையும் நகைகளையும் அள்ளி வழங்கிய குந்தவை நங்கையை உலகமாதேவீசுவரம் கல்வெட்டுகளில் காணமுடியாதபோதும் மாதேவடிகள் வலஞ்சுழிக்கு அளித்தாற் போலவே இங்கும் கொடையாளியாய் ஒளிர்கிறார்.

உலகமாதேவீசுவரத்திற்கு அளிக்கப்பட்ட கொடைகளுள் குறிப்பிடத்தக்கது பாவைக்- கண்ணாடி. இதை, ‘செம்பின் மேல் பொன் அடுக்கிய பாவைக்கண்ணாடியில் ஆடுகிற பாவை ஒன்று, மத்தளம் கொட்டுகிற பாவை ஒன்று, உடுக்கை வாசிக்கிற பாவை ஒன்று, பாடுகிற பாவை ஒன்று, பீடம் ஒன்று உட்படக் காண்ணடி ஒன்று’ என விரித்துப் போற்றும் கல்வெட்டு, அந்நாளைய ஆடலுக்குத் தோல்கருவிகளே பேரிசைக் கருவிகளாய் விளங்கியமை சுட்டுவதுடன், சோழர் கைத்திறம், கலைத்திறம் இவற்றிற்கும் சான்றாய் நிற்கிறது.

வலஞ்சுழி சேத்ரபாலரை உருவாக்கிய சிற்பியின் பெயர் பதிவாகவில்லை என்றாலும், உலகமாதேவீசுவரச் சிற்பியை முதல் இராஜேந்திரரின் கல்வெட்டு அடையாளப்படுத்துகிறது. எழிலார்ந்த சிற்பங்களுடன் உருவான இக்கற்றளியை வடிவமைத்த செம்பியன்மாதேவிப் பெருந்தட்டாரின் உளித்திறம் போற்றித் தட்டாரக்காணியாக நிலம் வழங்கிப் பெருமைப்படுத்திய தந்திசத்திவிடங்கி இராஜராஜருக்குப் பிறகும் பெருமையுடன் வாழ்ந்திருந்தமை இங்குள்ள இராஜேந்திரர் கல்வெட்டுகளால் வெளிச்சமாகிறது.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயில்களிலும் கொடையாளிகளாய்த் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யாத இராஜராஜரின் மகள்கள் மூவரும் உலகமாதேவியின் திருப்பணிகளில் மட்டும் பங்கேற்றுள்ளமை அவர்களை அவ்வம்மையின் அன்புக்குரிய புதல்விகளாய் அடையாளப்படுத்துகிறது. இம்மூவருள் குந்தவை மட்டுமே விமலாதித்தரின் தேவியாய் அறிமுகமாகிறார். பிற இருவரும் இராஜராஜரின் திருமகள்களாக மட்டுமே கல்வெட்டுகளில் காட்டப்பெறுகின்றனர்.

வரலாற்றின் பாதை விசித்திரமானது. ‘நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்’ என்ற இராஜராஜரின் பெருமைக்குரிய தொடரில் அவர் திருமகள்கள் அடைக்கலமாகாமைக்கு எது காரணமோ அதுவே தந்திசத்திவிடங்கி போன்ற படைப்பாளிகளையும் மேகமாய் மறைத்து வேடிக்கை காட்டுகிறது.

திருமெய்யம் ஒப்பந்தம்

இரா. கலைக்கோவன்

புதுக்கோட்டைத் திருப்புத்தூர்ச் சாலையில் 20 கி. மீ. தொலைவிலுள்ளது திருமெய்யம். பொதுக்காலம் 7 – 8ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர்க் குன்றில் மூன்று குடைவரைகள் குடையப்பட்டன. ஒன்று குன்றின் மேற்பகுதியில் அமைய, குன்றின் கீழ்ப்பகுதியில் சிவபெருமானுக்கு ஒன்றும் விஷ்ணுவுக்கு ஒன்றுமாய் இரண்டு குடைவரைகள் அருகருகே உருவாயின. தமிழ்நாட்டளவில் பள்ளிகொண்ட பெருமாளுக்குப் பல குடைவரைகள் இருந்தபோதும் மெய்யம் குடைவரைதான் அளவிலும் உடனிருப்பாளர்களின் எண்ணிக்கையிலும் பெரியது. தாய்ப் பாறையிலான பள்ளிகொண்டவருடன் செய்தமைத்தவராய் நின்றருளிய பெருமாளும் இங்குள்ளார். அருகிலுள்ள சிவபெருமான் குடைவரையும் தான் கொண்டிருக்கும் பேரளவிலான லிங்கோத்பவர் வடிவத்தால் தமிழ்நாட்டின் தன்னிகரற்ற படைப்பாய் ஒளிர்கிறது. இரண்டு கோயில்களும் சமயப்பொறை நோக்குடன் அருகருகே அமைக்கப்பெற்று வாகான வருவாய் திட்டமிடப்பட்டிருந்தும் வருவாய்ப் பங்கீட்டில் நேர்ந்த இணக்கமற்ற சூழல்கள் குழப்பங்களாய்த் தொடங்கி, சச்சரவுகளாய் வெடித்து வழிபாட்டு நிறுத்தத்தில் முடிந்தன.

பள்ளிகொண்டவர்

எத்தனைக் காலம் இந்நிலை நீடித்தது என்பது தெரியாதபோதும் இதற்கான விடியல் பொ. கா. 1245இல் வந்ததை இங்குள்ள கல்வெட்டால் அறியமுடிகிறது. சோழர், பாண்டியர் பகையால் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த மைசூர் ஹொய்சளர் திருச்சிராப்பள்ளிக்கருகில் தலைநகர் உருவாக்கி ஆளத் தொடங்கிய காலமது. ஹொய்சள அரசர் வீரசோமேசுவரரின் படைத்தலைவர்கள் மெய்யத்தை உள்ளடக்கிய கானநாட்டை வென்றிருந்தனர். மெய்யத்தின் இரு கோயில் பூசல்களும் பூசை நிறுத்தமும் அவர்கள் கவனத்திற்கு வந்தபோது, உரியவாறு அதை நேர்செய்யக் கருதிப் பெருங்கூட்டமொன்றைக் கூட்டினர்.

மெய்யத்தை உள்ளடக்கிய கானநாடு என்று மட்டுமல்லாது, சுற்றிலுமுள்ள நாடுகள், நகரங்கள், ஊர்களின் ஆட்சிக் குழுவினருடன், இது சைவ, வைணவக் கோயில்களுக்கு இடையிலான சிக்கல் என்பதால் கானநாட்டுச் சைவ, வைணவப் பெரியவர்கள், அரசு உயர்அலுவலர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டனர். சைவர்கள் பக்கம் பேசத் திருக்கொடுங்குன்றம் சைவாச்சாரியார்களும் வைணவத்திற்குத் துணைநிற்கத் திருக்கோட்டியூர் திருப்பாணதாதர் குழுவினரும் வந்திருந்தனர். இரு கோயில் நிருவாகிகளும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு ஹொய்சளப் படைத்தலைவர்களான ரவிதேவரும் அப்பண்ணரும் முன்னிலை வகித்தனர்.

லிங்கோத்பவர்

‘என்ன சிக்கல்? ஏன் பூசைகள் நின்றன?’ என்ற கேள்விகளுக்கு, ‘வருவாய் இரு கோயில்களுக்கும் பொதுவாக இருந்ததால் பங்கிட்டுக்கொள்வதில் சிக்கல். ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்த சச்சரவுகளால் முதல்கள் அழிந்தன. பூசை நின்றது’ என்று நிருவாகம் விடையிறுக்க, இரு கோயில் கணக்குகளும் ஆராயப்பட்டன. சொத்து ஆவணங்கள் சோதிக்கப்பட்டன. இருப்பதும் இழந்ததும் தெரியவந்தது. இவர்களும் அவர்களுமாய்க் குறைகளை அடுக்கினாலும் இருந்தவரில் சார்பற்றோர் முடிவுகளை நோக்கிப் பேச்சை நகர்த்தினர். இரு கோயிலாரும் இணைங்கிய பிறகு படைத் தலைவர்கள் முன்னிலையில் திருமெய்யம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தின் முதல் கூறாய் வருவாய் திட்டமிடப்பட்டது. மெய்யத்திலும் அதற்கடங்கிய சிற்றூர்களிலும் பயிரிடப்பட்ட நிலவிளைச்சலில் கோயிற்கடமையாக வரவான நெல்வருவாய் ஐந்து கூறுகளாக்கப்பட்டு, பெருமாள்கோயிலுக்கு மூன்றும் சிவன்கோயிலுக்கு இரண்டுமாய்ப் பிரிக்கப்பட்டது. அருகருகே இருந்த இவ்விரு கோயில்களை அந்நாளில் வழக்கிலிருந்த தச்சன் முழக்கோலால், ஒரு முழம் கனத்தில் சுவரெடுத்துப் பிரிக்கவும் அச்சுவர் எங்கிருந்து, எப்படி, எதுவரை நீள்வது என்பது குறித்தும் முடிவுசெய்ததுடன், சுவர் நீளும் வழியிலுள்ள மரங்களை அகற்றவும் சுவரமைப்புச் செலவை இரு கோயில்களும் நெல் வருவாய் பெற்ற அதே விகிதத்தில் பகிர்ந்துகொள்வதென்றும் தீர்மானித்தனர். இரண்டு கோயில்களின் எல்லைகளும் முறையாக வரையறுக்கப்பட்டன.

அடுத்து, கோயில்களுக்கான நீர்நிலைகள் ஒதுக்கப்பட்டன. கிழக்குச் சுனை பெருமாளுக்கும் மேற்குக் கிணறு சிவபெருமானுக்குமாயின. நீர்நிலைகளில் தூர் எடுக்கும்போது அவ்வக்கோயில் உற்சவப் படிமங்களை எழுந்தருளுவித்துக் கொள்ள அனுமதியாயிற்று. ஊர் நிலப்பகுதி ஒன்று ஐந்து கூறுகளாக்கப்பட்டு மூன்றின் விளைவு பெருமாளுக்கும் இரண்டின் விளைவு சிவபெருமானுக்குமாய் ஒப்பந்தமானது. விஷ்ணு கோயிலுக்கான பழங்கொடைகளாக விளங்கிய அண்டக்குடி, பெருந்துறை நிலங்கள் அவர் பெயரிலேயே உறுதிசெய்யப்பட்டன.

இரு கோயில்களும் அவரவர் வருவாயில் கருவிக் கலைஞர்களைப் பணியமர்த்திக் கொள்ளவும் அந்தந்தக் கோயிலுக்கென அளிக்கப்பட்டிருந்த பழங் கொடைகள் பழநடை மாறாது நின்று நிலவவும் ஆணையானது. கானநாட்டு ஊற்றியூரில் பிராமணர் சிலர் விலைக்கு வாங்கி, வரியிறுக்க முடியாமல் நாட்டுப்பொதுவாக ஓலையெழுதித் தந்த மேலைப்பாதி நிலமும் அதன் வரி வருவாயும் இரு கோயில்களுக்கும் சரிபாதியாகப் பகிரப்பட்டது.

லிங்கோத்பவர்

இங்குள்ள மற்றொரு கல்வெட்டால், ‘வைஷ்ணவ மாகேசுவரம்’ என்று சுட்டப்படும் இந்தத் திருமெய்யம் ஒப்பந்தத்தின் இறுதிப்பகுதி முக்கியமானது. இரு கோயில் நிருவாகமும் அவரவர் கோயிலுக்குரிய கல்வெட்டுகள் அடுத்தவர் கோயிலில் இருந்தால் அவற்றைப் படியெடுத்துத் தத்தம் கோயிலில் பதிவுசெய்து கொள்ளலாம் என்பது இப்பகுதியின் முதற்கூறு. இக்கல்வெட்டுப் படிகளை ஏற்காதவர்கள், ‘ராஜ, மாத்ரு, நாட்டுத் துரோகிகளாய்க் கருதப்படுவர். அவர்களுக்குப் பிறப்பு, இறப்புத் துன்பங்கள் நேரும்’ என்று எச்சரிக்கும் ஒப்பந்தம், அவர்கள் அரசிற்கு 200 அச்சுத் தண்டமும் தரவேண்டும் என்கிறது.

இரண்டாம் கூறு இரு கோயில்களும் இரு வேறு வளாகங்களாகப் பிரிந்த நிலையில் இரண்டுக்கும் பொதுவான இடத்திலும் பிற பகுதிகளிலும் நேர்ந்த கல்வெட்டழிப்பு. சிவன்கோயிலில் மூன்று கல்வெட்டுகள் அழிக்கப்பட்டன. அவற்றுள், ‘பாஷை தெரியாத கல்வெட்டு’ என்ற சுட்டலுடன் இவர்களால் அழிக்கப்பட்ட கல்வெட்டு, புகழ்பெற்ற குடுமியான்மலை இசைக்கல்வெட்டொத்த அமைப்பில் இக்குடைவரை பெற்றிருந்த மற்றோர் இசைக்கல்வெட்டாகும். அதை அழித்த இடத்தில்தான் நாற்பது பேர் கையெழுத்திட்டுள்ள இந்தத் திருமெய்யம் ஒப்பந்தம் மறுசெதுக்கலாய்க் கண்சிமிட்டுகிறது. இவர்களின் அழிப்பையும் மீறி பழைய இசைக்கல்வெட்டின் எச்சங்கள் இந்தப் புதிய பொறிப்பினூடே ஆங்காங்கே தலைகாட்டுவது இவர்தம் செய்நேர்த்திக்குச் சான்றாம்.

இந்த ஒப்பந்தத்தால் இரு கோயில்களுக்குமிடையே அமைதி நிலவியதா என்றால், இல்லை என்கிறது இங்குள்ள இன்னொரு கல்வெட்டு. சிவன்கோயில் கருவிக் கலைஞர்களுக்கான நிலமளிப்பில் திருவேங்கடத்து நம்பி செந்தாமரைக் கண்ணரால் நேர்ந்த துன்பத்தை ஈடுசெய்ய, அக்கோயில் நிருவாகம் மீண்டும் நாடு, நகரம், ஊராட்சிகளை அணுக, அம்முறையீட்டில் உண்மை இருப்பது உணர்ந்த அப்பெருங்குழு, மெய்யம் சபைக்கு இச்சிக்கலைத் தீர்க்க ஆணையிட, ஒருவாறாக உரியது நடந்து தீர்வேற்பட்டது.

பகிர்ந்துகொள்ளும் பேரன்பு இறைவளாகங்களில்கூட இல்லாமல் போனமையால் இரு கோயில்கள் இழந்ததும் அந்த இழப்பை நேர்செய்ய ஊரும் நாடும் ஆட்சியாளரும் ஒன்றுகூடி உழைத்ததும் திருமெய்யம் ஒப்பந்தத்தின் நேர்ப்பார்வையென்றால், மரங்கள் வெட்டப்பட்டதும் வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுகள் அழிக்கப்பட்டதும் அதன் எதிர்ப்பார்வையாய் நிற்கின்றன.