காவிரிப் படுகையில் கிடைக்கப்பெற்ற புதிய கல்வெட்டும் சிற்பங்களும்

முசிறி அருகே காவிரி ஆற்றங்கரையில் பெரிய இலிங்கமும் கல்வெட்டும் சிற்பங்களும் இருந்த செய்தியறிந்து டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன், மையத்தைச் சேர்ந்த கல்வெட்டாய்வாளர்கள் பேராசிரியர் மு. நளினி மற்றும் பேராசிரியர் அர. அகிலா ஆகியோருடன் அவ்விடம் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு கூடியிருந்த செய்தியாளர்களுடன் அவர் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

கிடைக்கப் பெற்ற எழில்மிகு ஆலமர் அண்ணல் மற்றும் வீணாதாரர் சிற்பங்கள், முற்சோழர் காலத்தவை என்று கூறிய டாக்டர் கலைக்கோவன், கடினப் பாதையில் சென்று ஆய்வு நிகழ்த்திட, அன்பும் ஆர்வமும் கொண்டு ஊரார் செய்த உதவிகளை நன்றியுடன் குறிப்பிட்டார்.

டாக்டர் இரா. கலைக்கோவன் பகிர்ந்த விரிவான தகவல்களுடன் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட காணொலிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Musiri official Updates தளத்தில் –

Polimer News வெளியிட்ட விரிவான செய்தி இங்கே-

ஆற்றங்கரையில் 10-ம் நூற்றாண்டு சோழர் கால சிற்பங்கள்.. ஆய்வாளர்கள் சொன்ன தகவல்..

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 9. தொட்டான் . . பட்டான் . .

அன்புள்ள வாருணி, ‘பொதுவான இல்லம்’ என்ற பொருளுடன் தோன்றிய சங்ககாலப் பொதியில்கள், அந்தந்த ஊர்மக்களின் வழிபாட்டிடங்களாக விளங்கியதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் விரித்துப் பேசுகின்றன. ஊர்மக்களின் திரட்சிக்கேற்ப, அவர்கள் இருந்து வழிபட இடமளிப்பதற்காகவே அந்த எளிய பொதியில்கள் முன் மண்டபங்கள் பெறத் தொடங்கின. மக்கள் மண்டும் (கூடும்) இடம் என்ற பொருளில், ‘மண்டகம்’ என்று தொடக்கக் காலக் கல்வெட்டுகளில் அழைக்கப்பெறும் இம்மண்டபங்கள், காலத் தேவைக்கும் வழிபாட்டுப் பெருக்கத்துக்கும் ஏற்பப் பலவாய்ப் பெருகின.

குடைவரைக் காலத்திலேயே கருவறையாம் இறையகத்தின் முன் அகமண்டபம், முகமண்டபம் என இரண்டு மண்டபங்கள் உருவாயின. அவை கற்றளிக் காலத் தொடக்கத்தில் பெருகின. பெருமண்டபம், நிருத்தமண்டபம், நீராட்டு மண்டபம், திருவோலக்க மண்டபம் எனப் பலவாய்ப் பெயரேற்ற இக்கட்டுமானங்கள் பிற்சோழர் காலத்தில், கூரை தாங்கும் தூண்களின் எண்ணிக்கை அடிப்படையில் நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்களாய்ப் பேருருப் பெற்றன.

தமிழ்நாட்டில் பல்லாயிரமாய்க் கோயில்கள் இருந்தபோதும் மிகச் சிலவே இத்தகு பெருமண்டபங்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில். வேறெந்தக் கோயிலின் ஆயிரங்கால் மண்டபமும் பெறாத ஆளுயரச் சிற்பங்கள் இம்மண்டப முகப்பையும் உட்புறத்தையும் அணிசெய்கின்றன. நாயக்க மரபின் கலைச் செழுமையை அவர்தம் திருப்பணிகளுக்கு ஆளான தமிழ்நாட்டுக் கோயில்கள் சில கொண்டிருப்பினும், மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபப் பேருருவச் சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையன.

எங்கள் ஆய்வின்போது இம்மண்டபத் தூண்களை ஒன்றுவிடாமல் பார்த்தபோதுதான் பேராசிரியர் மு. நளினியின் பார்வையில்பட்டு அந்தச் சிற்பம் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் நாங்கள் அதுநாள்வரை கண்டிராத சிற்பமது. ஒரு பாலியல் குற்றவாளி நாயக்கர் ஆட்சியில் எப்படித் தண்டிக்கப்பட்டார் என்பதைப் படம்பிடித்துக் காட்டும் அச்சிற்பம் பெருந்தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது.

மூன்று நிகழ்வுகளின் கூட்டிணைவாக உள்ள அச்சிற்பத்தின் முதல் பிரிவான கீழ்ப்பகுதியில், ஓர் இளம்பெண் இடஒருக்கணிப்பில் சரிந்துள்ளார். அவரது கைகள் மார்பகங்களை மறைக்க முயலுமாறு மடிந்துள்ளன. அவருக்குப் பின்னுள்ள ஆடவர், அப்பெண்ணின் இடுப்பருகே தம் வலக்காலை இருத்தியவாறு அவரிடம் முறைதவறி நடக்கும் முயற்சியில் முனைந்துள்ளார்.

தாக்குதலுக்கு ஆளான பெண், தாக்கும் ஆடவர் இவர்கள் இருவருக்கும் பின்னால் நிற்பவர் நாயக்கர் காலக் காவலர். முடிச்சிடப்பட்ட தொப்பி போன்ற தலைப்பாகை, கழுத்தில் சரப்பளி, மார்பில் வீரத்தைக் குறிக்கும் சன்னவீரம், செவியணிகள், தோள்வளைகள் என கம்பீரமாகக் காட்சிதரும் அக்காவலர், தம் கையிலுள்ள கத்தியால் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயலும் ஆடவரின் பின்பகுதியில் குத்தியவாறே, இடக்கையால் அந்த ஆடவரைப் பிடிக்க முயற்சிக்கிறார். இரண்டாம் நிலையாகப் படமாகியுள்ள இக்காவலரின் செயற்பாடு, தவறு நிகழும் இடங்களில் மேற்கொள்ளப்படும் அக்காலக் காவல் நடவடிக்கையைக் கண்முன் நிறுத்துகிறது.

கோதண்டத்தில் மாட்டுவது என்றொரு தண்டனை முறை அக்காலத்தே இருந்ததாகச் செவிவழிக் கதைகள் சொல்கின்றன. வரலாற்றுப் புதினங்கள் பல படைத்த திரு. சாண்டில்யன் தம்முடைய, ‘மன்னன் மகள்’ கதையில், அத்தகு கோதண்டத்தையும் அதில் சிக்கிக் கொள்பவரையும் கதைப்போக்கில் காட்டியிருப்பார். மீனாட்சிக் கோயில் சிற்பத்தில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் காட்சி அக்கோதண்டத் தண்டனையை நினைவூட்டுகிறது.

சிற்பத்தின் மேலடுக்கில் உள்ளது கோதண்டத் தண்டனைக் கூடம். பெருஞ்சட்டகம் ஒன்றின் பக்கப்பகுதியில் கைகளும் கால்களும் இறுக்கப்பட்ட நிலையில் முறை தவறி நடந்த ஆடவர் கட்டப்பட்டுள்ளார். கயிறுகளால் இறுக்கப்பட்ட நிலையில் அசைக்கமுடியாதவாறு மேற்பலகையில் அவர் தலையும் பிணைக்கப்பட்டுள்ளது. ஆடைகளற்ற நிலையில் சட்டகத்தில் மாட்டப்பட்டிருக்கும் அப்பாலியல் குற்றவாளியின் ஆணுறுப்பைத் தாவிக் கவ்வியுள்ள விலங்கின் காட்சியே தண்டனை எப்படியிருந்தது என்பதை உணர்த்திவிடுகிறது.

நியாயமற்ற ஆசைகளும் நேர்மையற்ற உணர்வுகளும் தவறான செயல்களுக்குத் தூண்டுகோல்கள். காலந்தோறும் இது போல் வரம்பு மீறல்கள் நிகழ்வதையும் அவை குற்றங்களாகித் தண்டனைகளுக்கு உள்ளாவதையும் இலக்கியக் காட்சிகளாய் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணமுடிந்தாலும், கண்ணெதிர் நிகழ்வாய்க் கற்பனைக்கே இடமில்லாது, ஒரு குற்றமும் அது தண்டிக்கப்பட்ட முறையும் காட்சியாகச் செதுக்கப்பட்டிருப்பது அதைப் பதிவுசெய்த சிற்பாசிரியரின் சமூகப் பார்வைக்குச் சான்றாகும் வாருணி.

இச்சிற்பக் காட்சியைக் கண்ணுறும் எவருக்கும் பாலியல் வரம்பு மீறல் சிந்தனையே வர வாய்ப்பில்லை. பத்திமைக்கான இடங்கள்தான் என்றாலும், கோயில்கள் சமூகம் சந்திக்குமிடம் என்பதால், சொல்ல வேண்டியவற்றை, உணர்த்தக்கூடியவற்றை, வாழ்க்கையின் ஒழுகலாறுகளைக் கிடைக்குமிடங்களில் காட்டிவிடுவதைக் கடமையாகக் கொண்டியங்கிய இத்தகு சிற்பாசிரியர்களைக் கை கூப்பி வணங்கத் தோன்றுகிறது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 8. கழுதையேற்றமாய் ஊரகத் தண்டனை

அன்புள்ள வாருணி, தமிழரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது தேர். சங்க இலக்கியங்கள் விதந்து பேசும் காதல், வீரம் இரண்டுடனும் தொடர்புடைய அத்தேரையும் அதை இழுத்த புரவிகளையும் நன்கு அறிந்து தேர்ந்து கொள்வதற்கும் இயக்குவதற்குமாகவே சங்கத்தமிழர் தேர்நூல், புரவிநூல் என அறிவியல் சுவடிகளை ஆய்ந்து வைத்திருந்தனர். தேரோட்டிகள், தேர்த்தச்சர்கள் குறித்துப் பெரியதொரு நூலே படைக்குமளவு சங்கப்பாடல்கள் தரவுகள் கொண்டுள்ளன.

மானுடப் பழக்கத்திலிருந்த இத்தேர்கள் இறை ஊர்தியானமை எப்போதென்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், பத்திமைப் பாடல்களில் பேசப்படும் தேரோடும் வீதிகள், பல்லவர் படைப்புகளில் முப்புரம் எரித்த சிவபெருமானின் ஊர்தியாக வெளிப்படும் சிற்பத்தேர்கள் ஆகியவை பொதுக்காலம் 6ஆம் நூற்றாண்டளவில் இது நேர்ந்திருக்கலாம் என்று கண்காட்டுகின்றன.

தேர் என்றதும் என் நினைவுக்கு வருபவர் முதலாம் இராஜேந்திரசோழர்தான் வாருணி, தமிழ்நாட்டு மன்னர்களில் தம் அணுக்கியுடன் தேரூர்ந்து சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டவர் அவர் ஒருவர்தான். திருவாரூரில் அவரும் தானும் நின்ற இடங்களில், காலமெல்லாம் ஒளிருமாறு அவர் அணுக்கி பரவை விளக்கேற்றச் செய்தது வரலாறு. அந்தப் பொன்னாளை நினைந்து பூரித்தே, தியாகேசர் விமானத்தை அவ்வம்மை தங்கத்தகடுகளால் அழகுபடுத்தினார்.

தமிழ்நாட்டிலேயே ஊர், கோயில் என இரண்டும் ஒரு மன்னரின் அணுக்கியின் பெயரால் அமைந்ததெனில், அது இராஜேந்திரரின் பரவைநங்கைக்கு மட்டுமே கிடைத்த பேறெனலாம். பரவைப்புரத்து (இன்றைய விழுப்புரம் மாவட்டப் பனையவரம்) பரவை ஈசுவரமுடையார் கோயிலில், இராஜேந்திரரின் இரண்டாம் மகன் இரண்டாம் இராஜேந்திரர் காலத்தில், இராஜேந்திரசோழர் – பரவைநங்கை திருமேனிகளின் முன் விளக்கேற்றப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.

தேர் இறை ஊர்தியாகித் தெருவலம் வந்ததை நல்லூர் வில்வாரண்யேசுவரர் கோயில் கல்வெட்டுகள் படம் பிடிக்கின்றன. சாளுக்கியச் சோழர்கள் காலத்தில்தான் தேருலாக் கல்வெட்டுகளும், இறைக்கோயிலே தேர்வடிவில் வெளிப்பட்டதும் நிகழ்ந்தன. இறைவன் தேருடன் நடக்கவும் இறைவனுடன் தேரிலிருந்து பயணிக்கவுமான உரிமைகள் நல்லூர்க் கோயில் தேவரடியாருக்குக் கோயிலாரால் விற்பனை செய்யப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

முதற் குலோத்துங்கர் காலத்தில் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில் விமானம் தேர் வடிவில் உருவானது. தொடர்ந்து வந்தவர்கள் தேர்மண்டபங்களை உருவாக்கினர். தாராசுரத்து இராஜராஜேசுவரம் கோயில் இராஜகம்பீரன் மண்டபம் குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயிலில் தேர் வடிவிலான ஆடரங்கு உள்ளது. திருக்கோடிக்காவில்தான் முதல் முறையாகக் கோயில் தேர்களைச் சிற்பங்களாகக் காணமுடிகிறது.

தேரின் சுவையான இந்த வரலாற்றுக்கும் மீனாட்சிக் கோயிலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கக் தோன்றுகிறதா வாருணி? இருக்கிறது, இல்லாமலா இவ்வளவு தரவுகளும்! தேர் எப்படி வந்தது, எப்படியெல்லாம் அதன் பயன்பாடுகள் வளர்ந்தன என்பது போலவே, அந்தத் தேரில் எவைஎவை பதிவாயின என்பதும் வியப்பூட்டும் செய்தியாகவே உள்ளது. தேரின் நாற்புறத்தும் இறைவடிவங்களையும் புராணக்கதைகளையும் ஆடல் தோற்றங்களையும் மரச்சிற்பங்களாகக் காட்டுமாறே, பாலுணர்வு நிலைகளையும் இலைமறை காயாக அதே தேரின் பக்கப்பகுதிகளில் படைத்துள்ளனர் நம் தேர்த்தச்சர்கள்.

மீனாட்சிக் கோயில் அம்மன் திருத்தேரைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அளவில் சிறிதானாலும் அருமையான தேர். இறைச்சிற்பங்களும் திருவிளையாடல் புராணக் காட்சிகளாய்ச் சில சிற்பங்களும் அதில் கண்டோம். சிற்பங்களை இரசித்தவாறே தேரைச் சுற்றிவந்த நிலையில், தேரின் மேற்பகுதியில் பேராசிரியர் நளினி ஒரு சிற்பத்தைச் சுட்டிக் காட்டினார். நிமிர்ந்து பார்த்தபோதுதான், எத்தனை அரிய பதிவைக் காண வாய்த்தது என மகிழ்ந்தேன். ஊரகத் தண்டனை ஒன்றைச் சிற்பி அத்தேரில் காட்சியாக்கியிருந்தார்.

தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில் தேர்களை ஆய்வு செய்திருந்தபோதும், இத்தகு காட்சி எங்குமே கண்டதில்லை வாருணி. ‘கரும்புள்ளிச் செம்புள்ளி குத்திக் கழுதை மேலேற்றி’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தேரில் அதைக் காட்சியாகக் கண்டோம். சிற்பத்தில், முதலிரண்டும் தெரியாது என்பதால் வேறு தண்டனைகளை இணைத்துள்ளனர். அவையும் ஊரகத் தண்டனைகளாய் அறியப்படுபவைதான்.

சிறிய குடுமியும் தொங்குமீசையும் இடையில் சுருக்கிய ஆடையுமாய், ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்பது போல் கைகளைக் கூப்பிய நிலையில் கழுதைமேல் அமர்ந்துள்ளார் ஆடவர் ஒருவர். அவர் என்ன தவறு செய்தார் என்பது சுற்றியுள்ள மூன்று பெண்களைப் பார்த்தாலே புரிந்துவிடும். அப்பெண்களுள் ஒருவர் கழுதையின் முன்னும் மற்றவர் பின்னுமாக நிற்கின்றனர். பின்னுள்ளவர்களுள் ஒருவர் உயர்த்திப் பிடித்த சட்டியிலிருந்து எதையோ, (சாணக்கரைசல்?) அந்த ஆடவரின் தலையில் ஊற்றுகிறார். இரண்டாம் பெண்காலியான சட்டியை இடக்கையில் பிடித்தவாறு, வலக்கைத் துடைப்பத்தால் அந்த ஆடவரை அடிப்பதுபோல் உள்ளார். வலமுள்ள பெண் தம் கையிலுள்ள மிதியடி போன்ற பொருளால் ஆடவரின் தலையில் அடிக்க முனைகிறார். இந்தத் தண்டனைக் காட்சியைப் பார்த்தவாறு வலப்புறம் ஒரு சிறுவன்!

தண்டிக்கும் பெண்கள் மூவருமே சேலை அணிந்துள்ளனர். செவியணிகள், தோள், கை வளைகள், கழுத்தணிகள் பெற்றுள்ள அப்பெண்களின் இதழ்க்கடையில் எள்ளல் புன்னகை. இத்தேர் செய்யப்பட்ட காலத்தே பாலியல் குற்றவாளிகளை ஊரகப்பகுதிகளில் இது போல்தான் தண்டித்திருப்பார்களோ என நினைக்குமாறு உள்ள இச்சிற்பத்தில், சிறுவன் இடம்பெற்றிருப்பது சிந்தனையைத் தூண்டுகிறது.

பெண்மைக்கு இழிவு செய்வார் எந்நிலைக்கு ஆளாவார் என்பதைக் கண்ணெதிர்க் காட்சியாகக் காட்டி, பெண்மைக்கு மதிப்பளிக்கும் உணர்வோடு ஆண்மகன் வளரவேண்டும் என்பதைச் சிறுவனின் இருப்பால் மென்மையாக உணர்த்தியிருக்கும் இந்த ஊரக அறிவுறுத்தல் உன்னதம் வாருணி. பாலியல் சீண்டல்களில் முனைவோர் தலையில் சாணியைக் கரைத்து ஊற்றி, அவர்களைத் துடைப்பம், மிதியடி ஆகியவற்றால் தாக்கித் தண்டிக்கும் நாயக்கர் கால ஊரகப் பழக்கம் ஒரு மரத்தச்சரின் வரலாற்று நோக்கால் நமக்குப் பாடமாகப் பகிரப்பட்டுள்ளது. பெண்ணிடம் பழகிவிட்டு இல்லையென்று சொன்ன சங்ககாலப் பொய்யரைக் கள்ளூர் ஊரார் மரத்தில் கட்டிவைத்து அவர் மேல் சுண்ணாம்பு நீரூற்றிய ஊரகத் தண்டனையின் வளர்நிலைதான் மீனாட்சிக் கோயிலின் இந்தப் பதிவு.

தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும், அத்தண்டனையும் தவறுக்கு ஆளானவர்களாலேயே தரப்படவேண்டும் என்பது போல் பதிவாகியுள்ள இந்தக் கழுதையேற்றச் சிற்பம் காலத்துக்கும் பாலியல் குற்றவாளிகளுக்குப் பாடமாக நிற்கும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 7. கொல் களிறு

மீனாட்சிக் கோயில் கொல்களிறு

அன்புள்ள வாருணி, ஒளியும் கலையும்; அருளுமாய் ஆறு திங்கள்கள் ஓடிவிட்டன. வாழ்க்கையில் ஒளிநிறைந்த பக்கங்கள் மட்டுமா சுடர்விடுகின்றன? இருளான பகுதிகளும் இருக்கத்தானே செய்கின்றன. மீனாட்சியம்மன் கோயில் விதிவிலக்காகுமா?வரலாற்றைப் பதிவு செய்யும் சிற்பாசிரியர்கள் தங்கள் கைப்போக்கில் நல்லன காட்டுமாறு போலவே கண்களில் பதிவான அல்லனவற்றையும் கிடைக்குமிடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தேடுவாருக்கு மட்டுமே தெரியுமாறு விட்டுச் செல்கிறார்கள். எங்கள் ஆய்வில் அவையும் வெளிச்சமாயின. அவற்றுள் ஒன்றுதான் யானைகாலால் இடறிக் கொல்லும் மரணதண்டனை.

திருச்சுற்றுடனுள்ள மீனாட்சியம்மன் திருமுன், இறைவி எழுந்தருளியுள்ள விமானம், நீளமான முகமண்டபம், இடைநாழிகை என அமைந்துள்ளது. இருதள நாகரமாக உள்ள அம்மன் விமானத்தின் துணைத்தளமும் தாங்குதளமும்போ கபோதபந்த வடிவின. துணைத்தளம் சிற்பக் களஞ்சியமாக மாறியுள்ளது. தாங்குதளம் சிற்பங்கள் பெறாவிடினும் அதன் மேலுறுப்பான கபோதம், தன் வளைவுக்கூடுகளில் இயல்புக்கு மாறான சிற்பங்களைப் பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்றுதான் குற்றமிழைத்தவரை யானைகாலால் இடறி அழிக்கும் காட்சி.

இந்தச் சிற்பத்தில் தரையில் கிடக்கும் மனிதன் குற்றம் செய்தவன் போலும்! இரு கைகளையும் உயர்த்தி வலித் துன்பத்தால் துடிக்கும் அவன் முகம் யானைக்கு அஞ்சி வலத்திருப்பமாய் உள்ளது. முகபடாமும் முதுகில் விரிப்பும் பின் கால்களில் சதங்கைகளும் பெற்றுள்ள அரச யானையின் முன் கால்களுள் ஒன்று, அம்மனிதனின் தலையை நசுக்க உயர்ந்துள்ளது. மற்றொரு கால் அவனை உதைக்கும் முயற்சியில். தலையைக் குனிந்து, துதிக்கை சுருண்டு மேலேகுமாறு, தந்தங்களை அவன் உடலில் பாய்ச்சிக் கிழிக்கும் அந்த வேழத்தின் மேல், அதை அச்செயலுக்கு இயக்கிக் கொண்டிருக்கும் பாகன். யானையின் சினப்போக்கை அதன் கண்களிலும் தலையை அது குனித்துள்ள பாங்கிலும் வாலை வளைத்து உயர்த்தியுள்ள அமைப்பிலும் சிற்பி நன்கு அடையாளப்படுத்திவிடுகிறார். மரணதண்டனைதான் எப்படியெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது வாருணி!

மீனாட்சிக் கோயில் கொல்களிறு

அம்மன் திருமுன் சுற்றிலுள்ள தூண்களைப் பார்வையிட்டபோது தென்புறத் தூணொன்றில் இதுபோன்ற மற்றொரு சிற்பக்காட்சியைப் பேராசிரியர் அர.அகிலா கண்டறிந்தார். முதற் சிற்பத்திற்கும் இதற்குமிடையே இரண்டு வேறுபாடுகளைக் காணமுடிந்தது. இதில், குற்றவாளியின் இடக்கையை யானை தன் துளைக்கையால் வளைத்துப் பிடித்துள்ளது. முதல் சிற்பத்திலுள்ள பாகன் இதில் இல்லை. அம்மன் திருமுன்னில் இரண்டு இடங்களில் கண்டறியப்பட்ட இப்பதிவு, நாயக்கர் காலத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான அரச தண்டனைகளுள் ஒன்றாக இது விளங்கியதை உணர்த்தும்.

சங்ககாலந்தொட்டே குற்றம் இழைத்தவர்களை யானையை ஏவிக் கொல்லும் பழக்கம் வழக்கிலிருந்ததைப் புறநானூற்றால் அறியலாம். மலையமான் பிள்ளைகளைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அதுபோல் கொல்ல முயன்றபோது, கோவூர் கிழார் எனும் பெரும் புலவர் தம் அறிவார்ந்த பாடலால் அச்செயலைத் தடுத்து நிறுத்தினாராம் வாருணி. சோழர் காலத்திலும் இத்தண்டனை முறை தொடர்ந்ததைச் சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள துடையூர் விஷமங்களேசுவரர், திருப்பைஞ்ஞீலி நீலிவனநாதர், உய்யக்கொண்டான் திருமலை விழுமியநாதர் கோயில்களில் ஆய்வு மேற்கொண்ட நம் பேராசிரியர் மு. நளினி கண்டறிந்த சிற்பங்களால் அறியமுடிந்தது. இம்மூன்றனுள், தரையில் கிடக்கும் குற்றவாளியின் தலையை மேலிருக்கும் பாகனின் ஏவலுக்கேற்பக் காலால் மிதித்துத் தன் கூரிய தந்தங்களால் அவர் உடலைக் குத்திக் கிழிக்கும் பஞ்ஞீலி யானை மிகத் தெளிவாகப் படமாகியுள்ளது.

திருப்பைஞ்ஞீலி கொல்களிறு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உசிலம்பட்டிச் சாலையிலுள்ள குன்றுவரன் கோட்டையில் ஊருக்கு வெளியே உள்ள இடிந்த கோயிலின் வாயில் மேல்நிலையாக விளங்கிய கற்பலகையில் இதே போன்றதொரு சிற்பத்தைக் காணமுடிந்தது. பொதுக்காலம் 14ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க அதில், இம்மரணதண்டனையைப் போற்றிக் கொண்டாடுவார் போல மூன்று ஆடவர்கள். முதலாவதாகவும் மூன்றாவதாகவும் உள்ளவர்கள் மத்தளம் போன்ற தோல்கருவியை இயக்கியவாறே ஆட, இடையிலுள்ளவர் வலக்கையில் செண்டேந்தி இடக்கையை அர்த்தரேசிதமாக்கி ஆடுகிறார். இதுவரை கிடைத்துள்ள கொல் களிறு காட்சிகளில், அதைக் கொண்டாடுமாறு ‘பொருநர் ஆட்டம்’ காட்டப்பட்டிருப்பது குன்றுவரன்கோட்டையில் மட்டுமே.

குன்றுவரன்கோட்டை கொல்களிறும் பொருநர் ஆட்டமும்

போர்க்களங்களில் எதிரிகள் தோல்வியுறும்போது பொருநர்கள் என்றழைக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் தங்கள் கருவிகளை இயக்கியபடியே வென்றவர்களைப் போற்றிக் கொண்டாடிய சங்கமரபின் தொடர்ச்சியாகவே இந்தத் தண்டனைக்கள ஆடலையும் கொள்ளலாம் வாருணி.

எங்களுக்கு வியப்பு என்னவென்றால், காலந்தோறும் இத்தண்டனைக் காட்சி பதிவாகியுள்ளதுடன், மீனாட்சிக் கோயிலையும் இது தழுவிக்கொண்டதுதான். பல இடங்களில் ஓரிடக் காட்சியாக மட்டுமே உள்ள இப்பதிவு, இங்கு மட்டுமே இரண்டு இடங்களில் அழுந்தக் காட்டப்பட்டுள்ளது. யானை எல்லோருக்கும் பிடித்த விலங்கு. குழந்தைகள் கூட நேசிக்கும் அதை ஒருகாலத்தே கொலைக் கருவியாகவும் பயன்படுத்தியுள்ளனர். எதுவும் யார் கைப்படுகிறதோ, எதன் வயப்படுகிறதோ அவர் வழியில், அதன் முறையில்தான் அமையும் போலும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.