மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 7. கொல் களிறு

மீனாட்சிக் கோயில் கொல்களிறு

அன்புள்ள வாருணி, ஒளியும் கலையும்; அருளுமாய் ஆறு திங்கள்கள் ஓடிவிட்டன. வாழ்க்கையில் ஒளிநிறைந்த பக்கங்கள் மட்டுமா சுடர்விடுகின்றன? இருளான பகுதிகளும் இருக்கத்தானே செய்கின்றன. மீனாட்சியம்மன் கோயில் விதிவிலக்காகுமா?வரலாற்றைப் பதிவு செய்யும் சிற்பாசிரியர்கள் தங்கள் கைப்போக்கில் நல்லன காட்டுமாறு போலவே கண்களில் பதிவான அல்லனவற்றையும் கிடைக்குமிடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தேடுவாருக்கு மட்டுமே தெரியுமாறு விட்டுச் செல்கிறார்கள். எங்கள் ஆய்வில் அவையும் வெளிச்சமாயின. அவற்றுள் ஒன்றுதான் யானைகாலால் இடறிக் கொல்லும் மரணதண்டனை.

திருச்சுற்றுடனுள்ள மீனாட்சியம்மன் திருமுன், இறைவி எழுந்தருளியுள்ள விமானம், நீளமான முகமண்டபம், இடைநாழிகை என அமைந்துள்ளது. இருதள நாகரமாக உள்ள அம்மன் விமானத்தின் துணைத்தளமும் தாங்குதளமும்போ கபோதபந்த வடிவின. துணைத்தளம் சிற்பக் களஞ்சியமாக மாறியுள்ளது. தாங்குதளம் சிற்பங்கள் பெறாவிடினும் அதன் மேலுறுப்பான கபோதம், தன் வளைவுக்கூடுகளில் இயல்புக்கு மாறான சிற்பங்களைப் பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்றுதான் குற்றமிழைத்தவரை யானைகாலால் இடறி அழிக்கும் காட்சி.

இந்தச் சிற்பத்தில் தரையில் கிடக்கும் மனிதன் குற்றம் செய்தவன் போலும்! இரு கைகளையும் உயர்த்தி வலித் துன்பத்தால் துடிக்கும் அவன் முகம் யானைக்கு அஞ்சி வலத்திருப்பமாய் உள்ளது. முகபடாமும் முதுகில் விரிப்பும் பின் கால்களில் சதங்கைகளும் பெற்றுள்ள அரச யானையின் முன் கால்களுள் ஒன்று, அம்மனிதனின் தலையை நசுக்க உயர்ந்துள்ளது. மற்றொரு கால் அவனை உதைக்கும் முயற்சியில். தலையைக் குனிந்து, துதிக்கை சுருண்டு மேலேகுமாறு, தந்தங்களை அவன் உடலில் பாய்ச்சிக் கிழிக்கும் அந்த வேழத்தின் மேல், அதை அச்செயலுக்கு இயக்கிக் கொண்டிருக்கும் பாகன். யானையின் சினப்போக்கை அதன் கண்களிலும் தலையை அது குனித்துள்ள பாங்கிலும் வாலை வளைத்து உயர்த்தியுள்ள அமைப்பிலும் சிற்பி நன்கு அடையாளப்படுத்திவிடுகிறார். மரணதண்டனைதான் எப்படியெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது வாருணி!

மீனாட்சிக் கோயில் கொல்களிறு

அம்மன் திருமுன் சுற்றிலுள்ள தூண்களைப் பார்வையிட்டபோது தென்புறத் தூணொன்றில் இதுபோன்ற மற்றொரு சிற்பக்காட்சியைப் பேராசிரியர் அர.அகிலா கண்டறிந்தார். முதற் சிற்பத்திற்கும் இதற்குமிடையே இரண்டு வேறுபாடுகளைக் காணமுடிந்தது. இதில், குற்றவாளியின் இடக்கையை யானை தன் துளைக்கையால் வளைத்துப் பிடித்துள்ளது. முதல் சிற்பத்திலுள்ள பாகன் இதில் இல்லை. அம்மன் திருமுன்னில் இரண்டு இடங்களில் கண்டறியப்பட்ட இப்பதிவு, நாயக்கர் காலத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான அரச தண்டனைகளுள் ஒன்றாக இது விளங்கியதை உணர்த்தும்.

சங்ககாலந்தொட்டே குற்றம் இழைத்தவர்களை யானையை ஏவிக் கொல்லும் பழக்கம் வழக்கிலிருந்ததைப் புறநானூற்றால் அறியலாம். மலையமான் பிள்ளைகளைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அதுபோல் கொல்ல முயன்றபோது, கோவூர் கிழார் எனும் பெரும் புலவர் தம் அறிவார்ந்த பாடலால் அச்செயலைத் தடுத்து நிறுத்தினாராம் வாருணி. சோழர் காலத்திலும் இத்தண்டனை முறை தொடர்ந்ததைச் சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள துடையூர் விஷமங்களேசுவரர், திருப்பைஞ்ஞீலி நீலிவனநாதர், உய்யக்கொண்டான் திருமலை விழுமியநாதர் கோயில்களில் ஆய்வு மேற்கொண்ட நம் பேராசிரியர் மு. நளினி கண்டறிந்த சிற்பங்களால் அறியமுடிந்தது. இம்மூன்றனுள், தரையில் கிடக்கும் குற்றவாளியின் தலையை மேலிருக்கும் பாகனின் ஏவலுக்கேற்பக் காலால் மிதித்துத் தன் கூரிய தந்தங்களால் அவர் உடலைக் குத்திக் கிழிக்கும் பஞ்ஞீலி யானை மிகத் தெளிவாகப் படமாகியுள்ளது.

திருப்பைஞ்ஞீலி கொல்களிறு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உசிலம்பட்டிச் சாலையிலுள்ள குன்றுவரன் கோட்டையில் ஊருக்கு வெளியே உள்ள இடிந்த கோயிலின் வாயில் மேல்நிலையாக விளங்கிய கற்பலகையில் இதே போன்றதொரு சிற்பத்தைக் காணமுடிந்தது. பொதுக்காலம் 14ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க அதில், இம்மரணதண்டனையைப் போற்றிக் கொண்டாடுவார் போல மூன்று ஆடவர்கள். முதலாவதாகவும் மூன்றாவதாகவும் உள்ளவர்கள் மத்தளம் போன்ற தோல்கருவியை இயக்கியவாறே ஆட, இடையிலுள்ளவர் வலக்கையில் செண்டேந்தி இடக்கையை அர்த்தரேசிதமாக்கி ஆடுகிறார். இதுவரை கிடைத்துள்ள கொல் களிறு காட்சிகளில், அதைக் கொண்டாடுமாறு ‘பொருநர் ஆட்டம்’ காட்டப்பட்டிருப்பது குன்றுவரன்கோட்டையில் மட்டுமே.

குன்றுவரன்கோட்டை கொல்களிறும் பொருநர் ஆட்டமும்

போர்க்களங்களில் எதிரிகள் தோல்வியுறும்போது பொருநர்கள் என்றழைக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் தங்கள் கருவிகளை இயக்கியபடியே வென்றவர்களைப் போற்றிக் கொண்டாடிய சங்கமரபின் தொடர்ச்சியாகவே இந்தத் தண்டனைக்கள ஆடலையும் கொள்ளலாம் வாருணி.

எங்களுக்கு வியப்பு என்னவென்றால், காலந்தோறும் இத்தண்டனைக் காட்சி பதிவாகியுள்ளதுடன், மீனாட்சிக் கோயிலையும் இது தழுவிக்கொண்டதுதான். பல இடங்களில் ஓரிடக் காட்சியாக மட்டுமே உள்ள இப்பதிவு, இங்கு மட்டுமே இரண்டு இடங்களில் அழுந்தக் காட்டப்பட்டுள்ளது. யானை எல்லோருக்கும் பிடித்த விலங்கு. குழந்தைகள் கூட நேசிக்கும் அதை ஒருகாலத்தே கொலைக் கருவியாகவும் பயன்படுத்தியுள்ளனர். எதுவும் யார் கைப்படுகிறதோ, எதன் வயப்படுகிறதோ அவர் வழியில், அதன் முறையில்தான் அமையும் போலும்.

அன்புடன்,

இரா. கலைக்கோவன்.

பின்னூட்டமொன்றை இடுக