சோழர் கால ஊரார்

சோழர் காலத் தமிழ்நாட்டில் இருந்த மூன்று வகை ஊராட்சிகள்- பிராமணர் குடியிருப்புகளுக்கான பிரமதேய மகாசபை, வணிகர் பணிகளுக்கான நகரத்தார் கூட்டமைப்பு, வேளாண் பெருமக்கள் வாழ்ந்த ஊர்களுக்குரிய ஊரார் அவை என்பன.

இம்மூன்று உள்ளாட்சிகளில், சங்க காலம்முதலே நன்கு அறியப்பட்ட ஊரார் கூட்டாட்சி சோழர்காலத்திலும் தொடர்ந்துச் சிறப்புடன் இயங்கிவந்தமைக்குச் சோழர் கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும்  ஏப்ரல் 09, 2023 அன்று வெளியான டாக்டர் இரா. கலைக்கோவனின் ‘சோழர் கால ஊரார்’ என்ற தலைப்பிலான கட்டுரை- ஊரவைகளின் பணிகள், அவை தனித்து இயங்கியபோதும் தேவைக்கேற்பத் தத்தம் ஊரை அடுத்திருந்த பிரமதேய சபை, நகரத்தார் அவையுடன் இணைந்து செயற்பட்டச் சூழல், ஊரில் நில உரிமை கொண்டிருந்தவர்கள் தம் பெயருடன் இணைத்துக் கொண்ட சிறப்பொட்டுக்கள் போன்ற சுவையான பலச் செய்திகளை விளக்குகிறது.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-

அழுந்தூரின் ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு

“சில சுவையான கதைகள் வரலாறு போல வாழ்வதும் சில ஊர்களின் வரலாறு கதைகளைப் போல நிகழ்வுகளின் தொடரிணைப்பால் உருவாவதும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன”, என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் 12.03.2023 அன்று ‘வரலாறு ஒரு கதை போல…’ என்ற தலைப்பில் பதிவான அவருடைய கட்டுரை, இப்படித்தான் தொடங்குகிறது.

திருச்சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் உள்ள அழுந்தூர் என்ற சிற்றூரில் சிதைந்திருந்த பழங்காலக் கோயிலையும், அங்குப் புதைந்திருந்த சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் சமீபத்தில் ஆய்வு செய்தனர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர். அந்த ஆய்வுக் களம் கூட்டிச்சென்ற பாதைகளும், பாதைகள் காட்டிய சான்றுகளும், சான்றுகளால் கிட்டிய அழுந்தூரின் வரலாறும் பற்றியதுதான் ‘வரலாறு ஒரு கதை போல…’.

அழுந்தூர் கண்டுபிடிப்புகள் குறித்து நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-

பல்கலைக்கழக மானியக்குழுவின் தமிழ் ஆய்விதழ்ப் பட்டியல் 2023- தொடர்ந்து இடம்பெறும் ‘வரலாறு’ ஆய்விதழ்



இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC), ஆய்வுப் படைப்புகளின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, நவம்பர் 2018இல் ‘Consortium for Academic and Research Ethics’ (CARE)/ சிஎஆர்இ-UGC என்ற அமைப்பை நிறுவியது.

முனைவர் பட்டம் பெறும்முன் ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வுத் தாள்களைப் பதிப்பிக்க, தரமான ஆய்விதழ்களை நாடுவர். அத்தகைய தரமான ஆய்விதழ்களின் பட்டியலை சிஎஆர்இ (CARE), ஆண்டிற்கு இருமுறை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 

அப்பட்டியலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் ஆண்டு ஆய்விதழ் ‘வரலாறு’ செப்டம்பர் 2019 முதல் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் 2023ஆம் ஆண்டிற்கான பட்டியலிலும் ‘வரலாறு’ ஆய்விதழ் தொடர்கிறது.

பல்லவ மன்னன் மகேந்திரர்: கலைஞர்களின் கலைஞர்

‘பல்லவ மன்னன் மகேந்திரர்: கலைஞர்களின் கலைஞர்’ என்ற தலைப்பிலான டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் பிப்ரவரி 19, 2023 அன்று வெளியானது. மகேந்திரர் பற்றிப் பலரும் அறியாத பல புதிய தகவல்களை இக்கட்டிரை வழங்குகிறது.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-

திருமங்கலம் சோழா் கல்வெட்டு குறிக்கும் அயோத்தி ஆழ்வார் கோயில்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கச்சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுகளில், அயோத்தி ஆழ்வார் கோயில் என்ற புதிய கோயில் பற்றிய குறிப்புகள் கிட்டின. அதனைத் தொடர்ந்து, அயோத்தி ஆழ்வார் கோயிலைத் தேடும் அடுத்தக்கட்ட கள ஆய்வு தொடங்கியது. திருமங்கலத்தில் வரதராஜப் பெருமாள் பெயரால் விளங்கும் இன்றைய கோயிலைக் கண்டறிந்து அங்கு ஆய்வு செய்தபோது, மற்றுமொரு புதிய கல்வெட்டு கிடைத்தது. அக்கல்வெட்டு, கோயிலின் ஒரு பகுதியை ‘திருஅயோத்தி எம்பெரிமான் திருமுற்றம்’ என்று சுட்டியது வினாக்களுக்கு விடையளிக்குமாறு அமைந்தது.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கையில், “வரதராஜப் பெருமாள் கோயிலின் இன்றைய கட்டுமானம் அண்மைக் காலத்தது என்றபோதும், அது கட்டப்பட்டிருக்கும் இடம் திருமங்கலத்திலிருந்த அயோத்தி ஆழ்வார் கோயில் திருமுற்றமாகவே இருப்பது சிறப்பாகும்” என்று குறிப்பிட்டார்.

வரலாற்றுத் தகவல்களைத் தாங்கிய நாளிதழ்ச் செய்திக்குறிப்பு –

கார்த்திகைச் செல்வி கற்பகவல்லி

சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1006) பொறிக்கப்பட்டது கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லியின் கல்வெட்டு.

தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி குறித்தும் அவரளித்த அளப்பரிய கொடைகள் குறித்துமான மேலும் விரிவான தகவல்களை வழங்கும் டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘கார்த்திகைச் செல்வி கற்பகவல்லி’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-

இராஜராஜரின் தளிச்சேரிக் கல்வெட்டு

“பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் ஒரு கோயிலின் வாழ்க்கை எப்படியிருந்தது என்றறிய விழைவாருக்கு முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எடுப்பித்த இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் கைப்பிடித்து வழிகாட்டும்”, என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

குறிப்பாக, ஆடற்கலை வளர்த்த உறைவிடப் பள்ளிகளான தளிச்சேரிகள் பற்றிய விரிவான செய்திகள் வழங்குவது இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிக் கல்வெட்டு.

இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு பற்றிய டாக்டர் இரா. கலைக்கோவனின் விரிவான கட்டுரை, ‘இராஜராஜரின் தளிச்சேரிக் கல்வெட்டு’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-

பழுவேட்டரையர்கள் யார்?

அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ புதினம் திரைப்படமாக வெளிவந்ததைத் தொடர்ந்து, சோழர்கால வரலாற்று மாந்தர்கள் குறித்த தேடல்கள் தொடர்கின்றன. அப்படிப்பட்ட மாந்தர்களுள் ஒருவர் பெரிய பழுவேட்டரையர்.

‘பொன்னியின் செல்வன்’ கதையா? வரலாறா?’ என்ற இந்து தமிழ் வலையொலிப் பக்கத்தில், பழுவேட்டரையர் குறித்து டாக்டர் இரா. கலைக்கோவன்-

“பெரிய, சின்னப் பழுவேட்டரையர்கள் என்று அண்ணனும் தம்பியுமாக இருவர் இக்கதையில் குறிக்கப்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் கதைக்களம் சுந்தரசோழர் காலத்தில் அமைகிறது. அவர் ஆட்சி ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகள் அமைந்தது. அப்போது பழுவூர் மன்னராக இருந்த பழுவேட்டரையர் மறவன்கண்டன். அவருக்குத் தம்பி யாருமில்லை. உத்தமசோழர் காலம்வரை மறவன்கண்டனே ஆட்சியில் இருந்ததைப் பழுவூர்க் கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், கதையில் பெரியபழுவேட்டரையர் உயிர் துறப்பதாகவும் சின்னப்பழுவேட்டரையர் பொறுப்பு நீங்குவதாகவும் கல்கி எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர், பழுவேட்டரையர்கள் குறித்த விளக்கமான வரலாற்றுத் தகவல்களை -‘பழுவேட்டரையர்கள் யார்?’ என்ற கட்டுரையில் வழங்கியிருக்கிறார். அக்டோபர் 2, 2022 அன்று வந்த  ‘இந்து தமிழ் திசை’ இதழில் கட்டுரை வெளியானது.

முழுமையான கட்டுரையைப் படித்திட, இதழின் இணைய இணைப்பை இங்கே காணலாம்-

‘பழுவேட்டரையர்கள் யார்?’

கட்டுரையின் வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.

அல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் புதிய கல்வெட்டுகள்


திருச்சிராப்பள்ளி கரூர் சாலையில் உள்ள அல்லூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது முதலாம் பராந்தகச் சோழர் காலத்ததான பசுபதீசுவரர் கோயில்.

அக்கோயிலில், அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா், புதிய கல்வெட்டு ஒன்றையும் ஏற்கனவே படியெடுக்கப்பட்டப் பழைய கல்வெட்டுகளின் பிற பகுதிகளையும் கண்டறிந்தனர்.

கல்வெட்டு குறித்து டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-

புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில்,  தஞ்சாவூரிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பசுபதிகோயில் என்ற சிற்றூர்.  9-10ஆம் நூற்றாண்டுகளில் புள்ளமங்கலம் என்று அழைக்கப்பட்ட இன்றைய பசுபதிகோயிலில் உள்ளது முதலாம் பராந்தகர் காலத்ததான ஆலந்துறையார் கோயில். 

புள்ளமங்கை ஆலந்துறையார் பற்றிய குறும்படம் ஒன்று ‘மீட்பியம்’ குழுவினரால் வெளியிடப்பட்டது.

ஐந்து பகுதிகளாக வழங்கப்பட்ட காணொலியில், கட்டடக்கலை, சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என்ற மூன்று நிலைகளிலும்  சிறப்பு வாய்ந்த அக்கோயில் பற்றிய  விரிவான தகவல்களை வழங்கியிருக்கிறார்  டாக்டர் மா.இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன். 

காணொலியின் இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.