பல்லவ மன்னன் மகேந்திரர்: கலைஞர்களின் கலைஞர்

‘பல்லவ மன்னன் மகேந்திரர்: கலைஞர்களின் கலைஞர்’ என்ற தலைப்பிலான டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் பிப்ரவரி 19, 2023 அன்று வெளியானது. மகேந்திரர் பற்றிப் பலரும் அறியாத பல புதிய தகவல்களை இக்கட்டிரை வழங்குகிறது.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது-

திருமங்கலம் சோழா் கல்வெட்டு குறிக்கும் அயோத்தி ஆழ்வார் கோயில்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கச்சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுகளில், அயோத்தி ஆழ்வார் கோயில் என்ற புதிய கோயில் பற்றிய குறிப்புகள் கிட்டின. அதனைத் தொடர்ந்து, அயோத்தி ஆழ்வார் கோயிலைத் தேடும் அடுத்தக்கட்ட கள ஆய்வு தொடங்கியது. திருமங்கலத்தில் வரதராஜப் பெருமாள் பெயரால் விளங்கும் இன்றைய கோயிலைக் கண்டறிந்து அங்கு ஆய்வு செய்தபோது, மற்றுமொரு புதிய கல்வெட்டு கிடைத்தது. அக்கல்வெட்டு, கோயிலின் ஒரு பகுதியை ‘திருஅயோத்தி எம்பெரிமான் திருமுற்றம்’ என்று சுட்டியது வினாக்களுக்கு விடையளிக்குமாறு அமைந்தது.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கையில், “வரதராஜப் பெருமாள் கோயிலின் இன்றைய கட்டுமானம் அண்மைக் காலத்தது என்றபோதும், அது கட்டப்பட்டிருக்கும் இடம் திருமங்கலத்திலிருந்த அயோத்தி ஆழ்வார் கோயில் திருமுற்றமாகவே இருப்பது சிறப்பாகும்” என்று குறிப்பிட்டார்.

வரலாற்றுத் தகவல்களைத் தாங்கிய நாளிதழ்ச் செய்திக்குறிப்பு –

கார்த்திகைச் செல்வி கற்பகவல்லி

சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1006) பொறிக்கப்பட்டது கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லியின் கல்வெட்டு.

தஞ்சாவூர் அரண்மனைப் பணியிலிருந்த கற்பகவல்லி குறித்தும் அவரளித்த அளப்பரிய கொடைகள் குறித்துமான மேலும் விரிவான தகவல்களை வழங்கும் டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘கார்த்திகைச் செல்வி கற்பகவல்லி’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-

இராஜராஜரின் தளிச்சேரிக் கல்வெட்டு

“பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் ஒரு கோயிலின் வாழ்க்கை எப்படியிருந்தது என்றறிய விழைவாருக்கு முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எடுப்பித்த இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் கைப்பிடித்து வழிகாட்டும்”, என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

குறிப்பாக, ஆடற்கலை வளர்த்த உறைவிடப் பள்ளிகளான தளிச்சேரிகள் பற்றிய விரிவான செய்திகள் வழங்குவது இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிக் கல்வெட்டு.

இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு பற்றிய டாக்டர் இரா. கலைக்கோவனின் விரிவான கட்டுரை, ‘இராஜராஜரின் தளிச்சேரிக் கல்வெட்டு’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-

அல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் புதிய கல்வெட்டுகள்


திருச்சிராப்பள்ளி கரூர் சாலையில் உள்ள அல்லூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது முதலாம் பராந்தகச் சோழர் காலத்ததான பசுபதீசுவரர் கோயில்.

அக்கோயிலில், அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா், புதிய கல்வெட்டு ஒன்றையும் ஏற்கனவே படியெடுக்கப்பட்டப் பழைய கல்வெட்டுகளின் பிற பகுதிகளையும் கண்டறிந்தனர்.

கல்வெட்டு குறித்து டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது-

சிராப்பள்ளியில் உலகச் சுற்றுலா நாள் நிகழ்வுகள்

உலகச் சுற்றுலா நாளை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் ஜமால் முகம்மது கல்லூரியுடன் இணைந்து, இந்தியத் தொல்லியல் துறை (திருச்சி வட்டம்), பல்வேறு நிகழ்ச்சிகளைத் திருச்சிராப்பள்ளியில நடத்தியது.

அதன் ஒரு பகுதியாக, மலைக்கோட்டையின் கீழ்க்குடைவரையில் ‘தென்தமிழகத்தில் மரபுவளங்கள்’ என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றது.

முன்னதாக நடந்த தொடக்க நிகழ்வில், டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், மரபுவளங்கள் மற்றும் சுற்றுலா குறித்துச் சிறப்புரை ஆற்றினார்.

செய்திகளைத் தாங்கிய இதழ்களின் வெளியீடு இணைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாயக்கர் கால மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டிக்கும் குரும்பப்பட்டிக்கும் இடையிலுள்ள மாங்குளக்கரையில் இரண்டு மடைத்தூண்களில், நாயக்கர் காலத்துக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மடைத்தூண்கள் குறித்த செய்தியறிந்து, சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

மடைத்தூண்கள் குறித்தும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு குறித்தும், டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

செய்திக்குறிப்பைத் தாங்கிய நாளிதழ்கள் –

திருமங்கலத்து ராமாயண உளி உன்னதங்கள்

திருச்சிராப்பள்ளி லால்குடிச் சாலையில் உள்ளது திருமங்கலம். இது 63 திருத்தொண்டர்களுள் ஒருவரான ஆனாயரின் ஊராகும். திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில் காணப்படும் ராமாயணச் சிற்பங்கள் பற்றிய டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘திருமங்கலத்து ராமாயண உளி உன்னதங்கள்’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.

நாளிதழில்…

மின்னிதழில்…

கட்டுரையின் வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில் சோழா்காலக் கல்வெட்டுகள்


திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ளது திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் அக்கோயிலில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்தனர்.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த பல வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வரலாற்றுத் தகவல்களுடன் செய்திக்குறிப்பைத் தாங்கிய நாளிதழ்கள் –

முக்தீசுவரத்தில் சோழர்கால நில அளவுகோல்கள் கண்டுபிடிப்பு

சிராப்பள்ளியை அடுத்த சமயபுரத்திற்கு அருகிலுள்ள கண்ணனூர், பொதுக்காலம் 11 ஆம் நூற்றாண்டளவில் ஹொய்சள அரசர்களின் தலைநகரமாக விளங்கியது. சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜருக்கு உதவுவதற்காக மைசூர்ப்பகுதியிலிருந்து சோழநாட்டிற்கு வந்த ஹொய்சள அரசர்கள் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வூரைத் தங்கள் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தனர். அக்காலக்கட்டத்தில் இப்பகுதியில் உருவான பழங்கோயில்களுள் ஒன்று முக்தீசுவரம். கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்றுமாளிகை என ஒரு காலத்தில் எழுச்சியுடன் விளங்கிய இக்கோயில் இன்று அறநிலையத்துறைத் திருப்பணிக்காகக் காத்திருக்கிறது.

2020 இல், இக்கோயிலில் இணைஆணையர் திரு. க. பெ. அசோக்குமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு. நளினியும் முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் பொதுக்காலம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அளவுகோல்களையும் 14-18 ஆம் நூற்றாண்டளவில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுக்கள் சிலவற்றையும் கண்டறிந்தனர். களஆய்வின்போது சமயபுரம் கோயில் இளநிலைப் பொறியாளர் திரு. எம். அஜந்தன் உடனிருந்து உதவினர்.

இக்கல்வெட்டுக்களையும் அளவுகோல்களையும் நேரில் ஆய்வுசெய்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குனர் டாக்டர் இரா. கலைக்கோவன், இக்கோயில் சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜர் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும் பொதுக்காலம் 1221 ஏப்ரல் 14 ஆம் நாள் இவ்வளாகத்தில் பொறிக்கப்பட்ட அம்மன்னரின் 6 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இக்கோயில் இறைவனை, ‘கழுகிறை நாயனார்’ என்றழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்குக் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்கள் குறிப்பிடும் முத்தன் செட்டியார், திருச்சிராப்பள்ளித் தாயுமான செட்டியார், கழயடி மயிலேறும் பெருமாள் ஆகிய பெருமக்கள் அவர்தம் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள கட்டுமானப்பகுதிகளின் திருப்பணிக்கு உதவியவர்கள் ஆகலாம்.

‘கழயடி மயிலேறும் பெருமாள்’… என்ற குறிப்பு

‘திருச்சிராப்பள்ளித் தாயுமான செட்டியார்’ …. என்ற குறிப்பு

ஆய்வின்போது கண்டறியப்பட்ட மூன்று அளவுகோல்களுள் 87 செ. மீ. அளவினதாக இரு கூட்டல் குறிகளுக்கிடையில் விமானத்தின் மேற்குப் பகுதியில் பதிவாகியுள்ள கோல் இக்கட்டுமானத்திற்குச் சிற்பிகள் பயன்படுத்திய தச்சக்கோலாகலாம். இதுவொத்த தச்சக்கோல்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் பனைமலை ஈசுவரம், தஞ்சாவூர் ராஜராஜீசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம் உள்ளிட்ட பல கோயில்களில் கண்டறியப்பட்டுள்ளன.

புன்செய், நன்செய் நிலங்களை அளப்பதற்காகச் சோழர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த நில அளவுகோல்கள் அந்தந்த ஊர்க் கோயில்களில் வெட்டி வைக்கப்பட்டன. இரண்டல்லது மூன்று கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்டனவாய் வெட்டப்பட்ட இந்த அளவுகோல்கள், சில கோயில்களில் நன்செய்க்கோல், புன்செய்க்கோல் எனும் பொறிப்புகளுடனும் சில கோயில்களில் அத்தகு அடையாளப் பொறிப்புகள் இல்லாமலும் காணப்படுகின்றன. முக்தீசுவரத்தின் பெருமண்டபத் தென்புறக் குமுதத்தில் வெட்டப்பட்டுள்ள 6.99 மீ. நீளமுள்ள அளவுகோல், அப்பகுதி சார்ந்த புன்செய் நிலங்களை அளக்கப் பயன்பட்ட அளவுகோலாகலாம்.

நன்செய் நிலங்களை அளக்க வழக்கிலிருந்த சோழர் கால நிலமளந்த கோல் முக்தீசுவரம் விமானத்தின் மேற்குப் பட்டிகையில் 3.76 மீ. நீளத்தில் வெட்டப்பட்டுள்ளது. பெரியகுறுக்கை சிவன்கோயிலில் மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்ட நன்செய்க்கோலும் இதே அளவினது என்பது இங்கு எண்ணத்தக்கது.

முக்தீசுவரத்திற்கு அருகிலுள்ள போசளீசுவரம் கோயிலிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அக்கோயில் கோபுரத்தின் உட்புற வடசுவரில் ‘நல்லதம்பி மகன் காவுடை நயினான்’ எனும் பெயர்ப் பொறிப்புக் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டுச் சுட்டும் காவுடை நயினார் கோயில் திருப்பணியில் பங்கேற்றவராகலாம்.