திருமெய்யம் ஒப்பந்தம்

இரா. கலைக்கோவன்

புதுக்கோட்டைத் திருப்புத்தூர்ச் சாலையில் 20 கி. மீ. தொலைவிலுள்ளது திருமெய்யம். பொதுக்காலம் 7 – 8ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர்க் குன்றில் மூன்று குடைவரைகள் குடையப்பட்டன. ஒன்று குன்றின் மேற்பகுதியில் அமைய, குன்றின் கீழ்ப்பகுதியில் சிவபெருமானுக்கு ஒன்றும் விஷ்ணுவுக்கு ஒன்றுமாய் இரண்டு குடைவரைகள் அருகருகே உருவாயின. தமிழ்நாட்டளவில் பள்ளிகொண்ட பெருமாளுக்குப் பல குடைவரைகள் இருந்தபோதும் மெய்யம் குடைவரைதான் அளவிலும் உடனிருப்பாளர்களின் எண்ணிக்கையிலும் பெரியது. தாய்ப் பாறையிலான பள்ளிகொண்டவருடன் செய்தமைத்தவராய் நின்றருளிய பெருமாளும் இங்குள்ளார். அருகிலுள்ள சிவபெருமான் குடைவரையும் தான் கொண்டிருக்கும் பேரளவிலான லிங்கோத்பவர் வடிவத்தால் தமிழ்நாட்டின் தன்னிகரற்ற படைப்பாய் ஒளிர்கிறது. இரண்டு கோயில்களும் சமயப்பொறை நோக்குடன் அருகருகே அமைக்கப்பெற்று வாகான வருவாய் திட்டமிடப்பட்டிருந்தும் வருவாய்ப் பங்கீட்டில் நேர்ந்த இணக்கமற்ற சூழல்கள் குழப்பங்களாய்த் தொடங்கி, சச்சரவுகளாய் வெடித்து வழிபாட்டு நிறுத்தத்தில் முடிந்தன.

பள்ளிகொண்டவர்

எத்தனைக் காலம் இந்நிலை நீடித்தது என்பது தெரியாதபோதும் இதற்கான விடியல் பொ. கா. 1245இல் வந்ததை இங்குள்ள கல்வெட்டால் அறியமுடிகிறது. சோழர், பாண்டியர் பகையால் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த மைசூர் ஹொய்சளர் திருச்சிராப்பள்ளிக்கருகில் தலைநகர் உருவாக்கி ஆளத் தொடங்கிய காலமது. ஹொய்சள அரசர் வீரசோமேசுவரரின் படைத்தலைவர்கள் மெய்யத்தை உள்ளடக்கிய கானநாட்டை வென்றிருந்தனர். மெய்யத்தின் இரு கோயில் பூசல்களும் பூசை நிறுத்தமும் அவர்கள் கவனத்திற்கு வந்தபோது, உரியவாறு அதை நேர்செய்யக் கருதிப் பெருங்கூட்டமொன்றைக் கூட்டினர்.

மெய்யத்தை உள்ளடக்கிய கானநாடு என்று மட்டுமல்லாது, சுற்றிலுமுள்ள நாடுகள், நகரங்கள், ஊர்களின் ஆட்சிக் குழுவினருடன், இது சைவ, வைணவக் கோயில்களுக்கு இடையிலான சிக்கல் என்பதால் கானநாட்டுச் சைவ, வைணவப் பெரியவர்கள், அரசு உயர்அலுவலர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டனர். சைவர்கள் பக்கம் பேசத் திருக்கொடுங்குன்றம் சைவாச்சாரியார்களும் வைணவத்திற்குத் துணைநிற்கத் திருக்கோட்டியூர் திருப்பாணதாதர் குழுவினரும் வந்திருந்தனர். இரு கோயில் நிருவாகிகளும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு ஹொய்சளப் படைத்தலைவர்களான ரவிதேவரும் அப்பண்ணரும் முன்னிலை வகித்தனர்.

லிங்கோத்பவர்

‘என்ன சிக்கல்? ஏன் பூசைகள் நின்றன?’ என்ற கேள்விகளுக்கு, ‘வருவாய் இரு கோயில்களுக்கும் பொதுவாக இருந்ததால் பங்கிட்டுக்கொள்வதில் சிக்கல். ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்த சச்சரவுகளால் முதல்கள் அழிந்தன. பூசை நின்றது’ என்று நிருவாகம் விடையிறுக்க, இரு கோயில் கணக்குகளும் ஆராயப்பட்டன. சொத்து ஆவணங்கள் சோதிக்கப்பட்டன. இருப்பதும் இழந்ததும் தெரியவந்தது. இவர்களும் அவர்களுமாய்க் குறைகளை அடுக்கினாலும் இருந்தவரில் சார்பற்றோர் முடிவுகளை நோக்கிப் பேச்சை நகர்த்தினர். இரு கோயிலாரும் இணைங்கிய பிறகு படைத் தலைவர்கள் முன்னிலையில் திருமெய்யம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தின் முதல் கூறாய் வருவாய் திட்டமிடப்பட்டது. மெய்யத்திலும் அதற்கடங்கிய சிற்றூர்களிலும் பயிரிடப்பட்ட நிலவிளைச்சலில் கோயிற்கடமையாக வரவான நெல்வருவாய் ஐந்து கூறுகளாக்கப்பட்டு, பெருமாள்கோயிலுக்கு மூன்றும் சிவன்கோயிலுக்கு இரண்டுமாய்ப் பிரிக்கப்பட்டது. அருகருகே இருந்த இவ்விரு கோயில்களை அந்நாளில் வழக்கிலிருந்த தச்சன் முழக்கோலால், ஒரு முழம் கனத்தில் சுவரெடுத்துப் பிரிக்கவும் அச்சுவர் எங்கிருந்து, எப்படி, எதுவரை நீள்வது என்பது குறித்தும் முடிவுசெய்ததுடன், சுவர் நீளும் வழியிலுள்ள மரங்களை அகற்றவும் சுவரமைப்புச் செலவை இரு கோயில்களும் நெல் வருவாய் பெற்ற அதே விகிதத்தில் பகிர்ந்துகொள்வதென்றும் தீர்மானித்தனர். இரண்டு கோயில்களின் எல்லைகளும் முறையாக வரையறுக்கப்பட்டன.

அடுத்து, கோயில்களுக்கான நீர்நிலைகள் ஒதுக்கப்பட்டன. கிழக்குச் சுனை பெருமாளுக்கும் மேற்குக் கிணறு சிவபெருமானுக்குமாயின. நீர்நிலைகளில் தூர் எடுக்கும்போது அவ்வக்கோயில் உற்சவப் படிமங்களை எழுந்தருளுவித்துக் கொள்ள அனுமதியாயிற்று. ஊர் நிலப்பகுதி ஒன்று ஐந்து கூறுகளாக்கப்பட்டு மூன்றின் விளைவு பெருமாளுக்கும் இரண்டின் விளைவு சிவபெருமானுக்குமாய் ஒப்பந்தமானது. விஷ்ணு கோயிலுக்கான பழங்கொடைகளாக விளங்கிய அண்டக்குடி, பெருந்துறை நிலங்கள் அவர் பெயரிலேயே உறுதிசெய்யப்பட்டன.

இரு கோயில்களும் அவரவர் வருவாயில் கருவிக் கலைஞர்களைப் பணியமர்த்திக் கொள்ளவும் அந்தந்தக் கோயிலுக்கென அளிக்கப்பட்டிருந்த பழங் கொடைகள் பழநடை மாறாது நின்று நிலவவும் ஆணையானது. கானநாட்டு ஊற்றியூரில் பிராமணர் சிலர் விலைக்கு வாங்கி, வரியிறுக்க முடியாமல் நாட்டுப்பொதுவாக ஓலையெழுதித் தந்த மேலைப்பாதி நிலமும் அதன் வரி வருவாயும் இரு கோயில்களுக்கும் சரிபாதியாகப் பகிரப்பட்டது.

லிங்கோத்பவர்

இங்குள்ள மற்றொரு கல்வெட்டால், ‘வைஷ்ணவ மாகேசுவரம்’ என்று சுட்டப்படும் இந்தத் திருமெய்யம் ஒப்பந்தத்தின் இறுதிப்பகுதி முக்கியமானது. இரு கோயில் நிருவாகமும் அவரவர் கோயிலுக்குரிய கல்வெட்டுகள் அடுத்தவர் கோயிலில் இருந்தால் அவற்றைப் படியெடுத்துத் தத்தம் கோயிலில் பதிவுசெய்து கொள்ளலாம் என்பது இப்பகுதியின் முதற்கூறு. இக்கல்வெட்டுப் படிகளை ஏற்காதவர்கள், ‘ராஜ, மாத்ரு, நாட்டுத் துரோகிகளாய்க் கருதப்படுவர். அவர்களுக்குப் பிறப்பு, இறப்புத் துன்பங்கள் நேரும்’ என்று எச்சரிக்கும் ஒப்பந்தம், அவர்கள் அரசிற்கு 200 அச்சுத் தண்டமும் தரவேண்டும் என்கிறது.

இரண்டாம் கூறு இரு கோயில்களும் இரு வேறு வளாகங்களாகப் பிரிந்த நிலையில் இரண்டுக்கும் பொதுவான இடத்திலும் பிற பகுதிகளிலும் நேர்ந்த கல்வெட்டழிப்பு. சிவன்கோயிலில் மூன்று கல்வெட்டுகள் அழிக்கப்பட்டன. அவற்றுள், ‘பாஷை தெரியாத கல்வெட்டு’ என்ற சுட்டலுடன் இவர்களால் அழிக்கப்பட்ட கல்வெட்டு, புகழ்பெற்ற குடுமியான்மலை இசைக்கல்வெட்டொத்த அமைப்பில் இக்குடைவரை பெற்றிருந்த மற்றோர் இசைக்கல்வெட்டாகும். அதை அழித்த இடத்தில்தான் நாற்பது பேர் கையெழுத்திட்டுள்ள இந்தத் திருமெய்யம் ஒப்பந்தம் மறுசெதுக்கலாய்க் கண்சிமிட்டுகிறது. இவர்களின் அழிப்பையும் மீறி பழைய இசைக்கல்வெட்டின் எச்சங்கள் இந்தப் புதிய பொறிப்பினூடே ஆங்காங்கே தலைகாட்டுவது இவர்தம் செய்நேர்த்திக்குச் சான்றாம்.

இந்த ஒப்பந்தத்தால் இரு கோயில்களுக்குமிடையே அமைதி நிலவியதா என்றால், இல்லை என்கிறது இங்குள்ள இன்னொரு கல்வெட்டு. சிவன்கோயில் கருவிக் கலைஞர்களுக்கான நிலமளிப்பில் திருவேங்கடத்து நம்பி செந்தாமரைக் கண்ணரால் நேர்ந்த துன்பத்தை ஈடுசெய்ய, அக்கோயில் நிருவாகம் மீண்டும் நாடு, நகரம், ஊராட்சிகளை அணுக, அம்முறையீட்டில் உண்மை இருப்பது உணர்ந்த அப்பெருங்குழு, மெய்யம் சபைக்கு இச்சிக்கலைத் தீர்க்க ஆணையிட, ஒருவாறாக உரியது நடந்து தீர்வேற்பட்டது.

பகிர்ந்துகொள்ளும் பேரன்பு இறைவளாகங்களில்கூட இல்லாமல் போனமையால் இரு கோயில்கள் இழந்ததும் அந்த இழப்பை நேர்செய்ய ஊரும் நாடும் ஆட்சியாளரும் ஒன்றுகூடி உழைத்ததும் திருமெய்யம் ஒப்பந்தத்தின் நேர்ப்பார்வையென்றால், மரங்கள் வெட்டப்பட்டதும் வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுகள் அழிக்கப்பட்டதும் அதன் எதிர்ப்பார்வையாய் நிற்கின்றன.

இராஜராஜர் கால ஊதியக்குறைப்பு

இரா. கலைக்கோவன்

தமிழ்க் கல்வெட்டுகளில் எண்ணிக்கையிலும் தரவுகளைப் புதையலாய்க் கொண்டிருப்பதிலும் முதனிலையில் உள்ளவை சோழர் காலக் கல்வெட்டுகளே. பல வரலாற்றறிஞர்கள் அவற்றிலிருந்து அகழ்ந்தளித்திருக்கும் பன்முகப் பதிவுகளையும் தாண்டி, அவை அடைகாக்கும் வரலாற்றுச் செய்திகள் பலவாகும். அவற்றுள் ஒன்றுதான் முதல் இராஜராஜர் காலத்தே நிகழ்ந்த பணியாளர் ஊதியக்குறைப்பு.

சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகினாற் போலவே, அவற்றின் நடைமுறைகளும் பெருகின. வழிபாடு, படையலுக்கென ஏராளமான நிலத் தொகுதிகளும் பொன், வெள்ளி, காசு, கால்நடை முதலியனவும் வழங்கப்பெற்றன. இறைத்திருமேனிகளை அழகுபடுத்தவும் அவற்றுக்குப் பெருமை சேர்க்கவும் விலை மதிப்பற்ற அணிகலன்கள் வந்தடைந்தன. வரவு மிகுதியான நிலையில் நிதியம், நகைகள் காக்கக் கருவூலங்களும் அவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியமாயின. கோயிலின் வரவு செலவுக்கேற்ப வழிபாட்டு நடைமுறைகள் விரிவடையவே, பணியாளர் பட்டியலும் நீண்டது. முதல் இராஜராஜர் காலத்தே தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் 400 தளிப்பெண்டுகள் பணியிலிருந்தனர். இவர்கள் தவிர, 36 வகையான தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த 217 தொழிலர்களைக் கோயில் புரந்தது. அவர்களுள் 138 பேர் ஆடல், இசையுடன் தொடர்புடைய நுண்கலைஞர்கள்.

இராஜராஜீசுவரம் அளவிற்கு இல்லையென்றாலும் பல கோயில்களில் இத்தகு பணியாளர் பெருமளவில் இருந்தனர். பணியமர்த்தப்பட்டபோதே அவர்களுக்கான ஊதியம் நிலப்பங்காக அறிவிக்கப்பெற்றது. செய்யும் தொழிலுக்கேற்ப அப்பங்கின் அளவு அமைந்ததை இராஜராஜீசுவரத் தளிச்சேரிக் கல்வெட்டால் அறியமுடிகிறது. ஒரு பணிக்கென உறுதிசெய்யப்பெற்ற நிலப்பங்கு, கோயில் தேவைக்கேற்ப வேறு பணிக்கு மாற்றப்படுவதையும், சில நேரங்களில் அதே பணியில் புதியவர்கள் நுழையும்போது பங்கின் அளவு மாறுதலுக்கு உள்ளாவதையும் கல்வெட்டுகள் இனிதே உணர்த்துகின்றன.

பாச்சில் அவனீசுவரம்

ஆனால், ஒருவர் பணியிலமரும்போது முடிவாகும் நிலப்பங்கு, அவர் பணியிலிருக்கும்போதே கோயிலின் புதிய தேவைகளுக்காகக் குறைக்கப்படுவது அரிதினும் அரிதான நிகழ்வாகும். முதல் இராஜராஜர் காலத்தில் இத்தகு ஊதியக்குறைப்பு சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பாச்சில் மேற்றளி, பாச்சில் அவனீசுவரம், திருவாசி மாற்றுரை வரதீசுவரர் ஆகிய மூன்று கோயில்களில் நிகழ்ந்துள்ளது. இதை நிகழ்த்தியவர் நாடு வகை செய்யும் பணியிலிருந்த ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் என்ற அரசு அலுவலர். இவரை, ‘இராஜராஜரின் பணிமகன்’ என்கிறது கல்வெட்டு.

பணிக்கான நிலப்பங்குகளைக் குறைக்கும் முன், பங்கிலிருந்து கிடைக்கும் நெல் அளவு, அதில் பணியாளர் குடும்பத்திற்கு எந்த அளவு போதுமானது என்பதையெல்லாம் அவர்களிடமே கேட்டு ஆராய்ந்தே உத்தமன் ஊதியம் குறைத்ததை, ‘உண்டு வருகின்ற பங்கு வினவி, பங்கில் இவர்களுக்குப் பற்றும்படி நிறுத்தி (கூடுதலாக உள்ளதை) வாங்கி’ எனும் கல்வெட்டுத் தொடர் நிறுவுகிறது. இந்த ஊதியக்குறைப்பில் தொழில் சார்ந்த பாகுபாடு இல்லாமையையும் அறியமுடிகிறது.

‘ஏன் இந்தத் திடீர் ஊதியக்குறைப்பு’ என்ற வினாவுக்கு ஒவ்வொரு கோயிலும் ஒரு விடை வைத்திருந்தது. அவனீசுவரத்தில் இப்படிக் குறைக்கப்பட்ட பங்குகள் வழிக் கோயிலுக்கு 300 கலம் நெல் கிடைத்தது. அதில் 120 கலம் மாதந்தோறும் முதல் இராஜராஜரின் பிறந்த நட்சத்திரமான சதையத்தன்று இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்ய ஒதுக்கப்பெற்றது. எஞ்சிய 180 கலம் அவர் தமக்கை குந்தவையாரின் பிறந்த நட்சத்திரமான அவிட்டத்தன்று இறைவனுக்குத் திங்கள்தோறும் சிறப்பு வழிபாடு செய்யவும் அக்கொண்டாட்டத்தின்போது கோயிலில் 60 பேருக்கு உணவிடவும் பயன்பட்டது.

பாச்சில் மேற்றளி

பாச்சில் மேற்றளியில் நடந்த ஊதியக்குறைப்பால் வரவான 909 கலம் நெல் மேற்றளி ஊரில் முதல் இராஜராஜரின் ஜனநாதன் எனும் விருதுப்பெயரேற்று அமைந்திருந்த சாலையில் நாள்தோறும் 30 பிராமணர்களுக்கு உணவிட உதவியது. திருவாசியில் ஊதியக்குறைப்பால் பெறப்பட்ட 142 கலம் நெல் அக்கோயிலிலிருந்த உலாத்திருமேனியான இராஜராஜவிடங்கரின் பெயரில் வரவு வைக்கப்பெற்று அத்திருமேனிக்கு நாளும் ஒரு சந்தி வழிபாடு, படையல் அமைக்கத் துணையானது.

இந்த ஊதியக்குறைப்புக் கல்வெட்டுகளால் இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய தொழிலர், கலைஞர் சிலரை அறியமுடிவதுடன், இங்குப் பயன்பாட்டிலிருந்த இசைக்கருவிகளின் பட்டியலும் கிடைக்கிறது. அவனீசுவரத்திலும் திருவாசியிலும் மெராவியம், குழல் முதலிய கருவிகளை இசைத்தவர்களும் நட்டுவரும், கணக்கரும் பணியாற்ற, அவனீசுவரத்திலும் மேற்றளியிலும் சோதிடரும் மெய்மட்டு உள்ளிட்ட கருவிக்கலைஞர்களும் பணியிலிருந்தனர். காளம், செயகண்டிகை, கரடிகை முதலிய இசைக்கருவிகளை இயக்கியோர் மேற்றளியில் வாழ, வண்ணக்கர், நாவிசர், தச்சர், பரிசாரகர் முதலிய தொழிலர்கள் திருவாசியில் உழைத்தனர். மேற்றளியிலும் திருவாசியிலும் காவிதி என்ற பெயருடன் விளங்கிய கணக்கர்களையும் அவனீசுவரத்திலும் மேற்றளியிலும் இருந்த வழிபாடு நிகழ்த்தியவர்களையும் அடையாளப்படுத்தும் இக்கல்வெட்டு, மூன்று கோயில்களிலும் இருந்தவர்களாக மட்பாண்டம் வனையும் வேட்கோவர்களைத்தான் முன் நிறுத்துகிறது.

இப்பணியாளர்கள், கலைஞர்களின் ஊதியத்தில் உச்சமாக இரண்டு பங்கும் கீழாக அரைக்கால் பங்கும் குறைக்கப்பட்டது. இரண்டு பங்கு இழப்புப் பெற்றவர்கள் மேற்றளிக் கருவிக் கலைஞர்கள். ஒன்றரைப் பங்கை இழந்தவர்களும் மேற்றளியினரே. அவனீசுவரத்து நட்டுவரும் ஆசாரியரும் தலைக்கு ஒரு பங்கு இழக்க, அரைப்பங்கு இழப்பை மூன்று கோயில் பணியாளர்களில் பலர் சந்தித்தனர். மூன்று கோயில்களில் மிகையான குறைப்பு நேர்ந்ததும் மேற்றளியில்தான். அங்குப் பதினாறு பங்குகள் நீக்கப்பட்டன. மிகக் குறைவான பங்கிழப்பைப் பார்த்தது திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில். அங்கு உச்சக் குறைப்பே அரைப்பங்குதான். இராஜராஜீசுவரத் தளிச்சேரிக் கல்வெட்டுப்படி ஒரு பங்கு என்பது 100-120 கலம் நெல் விளைவு தந்த ஒரு வேலி நிலமாகும்.

மாற்றுரை வரதீசுவரர்

ஊதியக்குறைப்பை உழைப்போருக்கு நிகழ்த்தினாற் போல, இம்மூன்று கோயில்களிலும் ஒளிர்ந்த விளக்குகளுக்கான எண்ணெய்ச் செலவையும் உத்தமன் குறைத்துள்ளார். மேற்றளி விளக்குச் செலவில் அரைப்பங்கும் அவனீசுவரத்து எண்ணெய்ச் செலவில் கால்பங்கும் குறைத்த உத்தமன், திருவாசிக் கோயில் விளக்குகளை மட்டும் தொடவில்லை. அது மட்டுமன்று, இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய தேவரடியார், தளிப்பெண்டுகள், கூத்திகள், தலைக்கோலியர் ஊதியத்திலும் அவர் கைவைக்கவில்லை. சொல்லப்போனால், இந்த மூன்று கோயில்களுமே சோழர் காலத்து ஆடற்கலையை உயர்த்திப்பிடித்த பெண் கலைஞர்களின் வாழிடங்களாக விளங்கிய பெருமைக்குரியவை.

பார்வையிழப்பின் மூவருலா

இரா. கலைக்கோவன்

கதைக்கும் வரலாறுக்குமான இடைவெளி ஆய்வுகளால் மட்டுமே வெளிச்சமாகும். சில கதைகள் வரலாற்றின் வீச்சுப் போலவே முகங்காட்டினாலும், வரிக்குவரி கற்பனைப்பூச்சுடன் எழுதப்பட்டிருப்பதை நுணுக்கப் பார்வை தெளிவுபடுத்தும். வரலாறும் அப்படித்தான். உண்மைகளையே அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருந்தாலும் எழுத அல்லது சொல்லப்பட்டிருக்கும் முறையால், ‘இது கதையோ’ என்றுணர வைக்குமாறு அமைந்துவிடும். சொல்லப்போனால், சில கதைகள் சாகாவரம் பெற்று வரலாறாகவே வாழ்கின்றன. சில வரலாறுகள் சரியாக வெளிப்படாமையினால் கதைகளோ என்று மருளச்செய்கின்றன.

மூன்று பேர் வாழ்க்கையில் நேர்ந்த ஒரே நிகழ்வைப் புராணக்கதையாகவும் கல்வெட்டுச் சொல்லாடலாகவும் காலம் நம் முன் நிறுத்துகிறது. தேவாரமூவரில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானின் தோழராகக் கொண்டாடப்படுபவர். அவரது வாழ்க்கையை விளக்கும் திருத்தொண்டர் புராணம், ஒற்றியூரில் தாம் காதலித்து மணந்த சங்கிலிக்கு அளித்த வாக்குறுதியை மீறியதால் அவருக்கு நேர்ந்த பார்வையிழப்பையும் அதன் தொடர் விளைவுகளையும் விரிவாகப் பேசுகிறது.

‘உன்னைப் பிரியேன், ஒற்றியூரில் உன்னுடன் உறைவேன்’ என்று உறுதியளித்துச் சங்கிலியை மணந்த சுந்தரரைச் சின்னாட்களில் பரவை நங்கையுடன் அவர் வாழ்ந்த திருவாரூர் நினைவுகள் ஆட்கொண்டன. ஆரூர் வயப்பட்டவராய், சிவபெருமானறியத் தாம் சங்கிலிக்கு அளித்த உறுதிமொழி மறந்து, ஒற்றியூர் நீங்கிய சுந்தரருக்கு இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. தவறால் நேர்ந்த துன்பமிது என்பதை உணர்ந்த சுந்தரர் ஆரூர் இறைவனைப் பாடிப் பார்வை பெறுவேன் என்று பாடியவாறே பயணம் தொடர்ந்தார்.

பாடல்கள் வளர்ந்தன, பயணமும் நீண்டது. ஆனால், பார்வை வரவில்லை. திருவெண்பாக்கத்தை அடைந்து ஆற்றாமையால், ‘இறைவனே இங்குள்ளீரோ’ என்று கேட்டபோதும், ‘உளோம் போகீர்’ என்று மறுமொழித்து, தடுமாறாது நடக்க சுந்தரருக்கு ஊன்றுகோல் தந்தாராம் இறைவன். காஞ்சிபுரத்தில்தான் கடவுள் கருணை காட்டி, அவருக்கு இடக்கண் பார்வையை மீளத் தந்தார். வலக்கண் பார்வை சுந்தரருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. வழியெல்லாம் கதறியும் புலம்பியும் பாடிச்சென்றவருக்கு, மறு கண் பார்வை ஆரூரில்தான் கிடைத்தது.

இப்படிப் பார்வை போவதும் இறையருளால் மீளக் கிடைப்பதும் சுந்தரருக்கு மட்டுமே நிகழ்ந்ததன்று. சிராப்பள்ளி மாவட்டம் பெருங்குடி அகத்தீசுவரம் கோயிலிலும் புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டி ஆலத்தூர்த் தளியிலும் பொறிக்கப்பட்டிருக்கும் இரண்டு கல்வெட்டுகள் அவ்வூர்களில் வாழ்ந்த இருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டுச் சரியானதாகச் சொல்கின்றன.

பெருங்குடி அகத்தீசுவரம் கோயில்

சிராப்பள்ளிப் பகுதியைப் பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டளவில் ஆண்ட ஒய்சள மன்னர்களுள் ஒருவரான வீரராமநாதன் ஆட்சிக்காலத்தில், பெருங்குடி இருந்த பகுதி ஜகதேகவீரச்சதுர்வேதிமங்கலமாக அறியப்பட்டது. அங்கு வாழ்ந்த தட்டார் மருதாண்டார் அறச்சிந்தனையாளர். அகத்தீசுவரம் கோயிலில் அவர் காலத்தே திருப்பணி நிகழ்ந்தது. அதுபோழ்து அங்குப் பணியாற்றிய கல்தச்சர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப் போதுமான தொகை கோயிலாரிடம் இல்லை. நிருவாகத்திற்கு ஏற்பட்ட இச்சிக்கலான சூழலை அறிந்த மருதாண்டார், உடனே தம்மிடமிருந்த மூன்று கழஞ்சுப் பொன்னைத் தந்து உழைத்த தச்சர்கள் ஊதியம் பெறத் துணையானார்.

மருதாண்டாருக்கு நல்லமங்கை என்ற பெயரில் ஒரு பெண் இருந்தார். அவருக்குத் திடீரெனக் கண்பார்வை மங்கிப் பார்வையிழப்பு நேர்ந்தது. மகளின் பார்வையிழப்பால் உளம் சோர்ந்த மருதாண்டார் அகத்தீசுவரரிடம் முறையிட, இறையருளால் நல்லமங்கை பார்வை பெற்றதாகவும் அந்த மகிழ்வைக் கொண்டாட, மருதாண்டார் ஒரு கழஞ்சுப் பொன்னில் தங்கப்பட்டம் செய்து பெருங்குடி இறைவனுக்கு வழங்கியதாகவும் கோயிலில் பதிவாகியுள்ள கல்வெட்டுக் கூறுகிறது.

பல்லவ மன்னரான தந்திவர்மர் காலத்தில் குவாவன் சாத்தன் எனும் முத்தரையரால் மலையடிப்பட்டியில் குடையப்பெற்ற ஆலத்தூர்த் தளி சிறப்புக்குரிய குடைவரைக் கோயிலாகும். தமிழ்நாட்டின் மிகப் பழைமையான எழுவர்அன்னையர் சிற்பத்தொகுதிகளுள் ஒன்று இங்குள்ளது. வாகீசுவரர் கோயிலாகவும் கல்வெட்டொன்றால் அறியப்படும் இத்தளியில், வெகுதானிய ஆண்டு, தைத்திங்கள் 11ஆம் நாளில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, ஆவுடையாதேவன் என்பாருக்கு நேர்ந்த பார்வையிழப்பைப் பதிவுசெய்துள்ளது.

ஆலத்தூர்த் தளி

பூச்சிக்குடியைச் சேர்ந்தவர் ஆவுடையாதேவன். அவருக்கும் சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருநெடுங்களத்து விலைமாது ஒருவருக்கும் உறவிருந்தது. தேவன் அப்பெண்ணின் இல்லத்தில் தங்கியிருக்கையில், அப்பெண்மணி பிராமணர் ஒருவரையும் வரச்செய்து உறவாக்கிக் கொண்டமை ஆவுடையாதேவனைச் சினமுறச் செய்தது. உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத ஆவுடையான் இருவரையும் வெட்டிக் கொன்றார். பின் அங்கிருந்து மலையடிப்பட்டிக்கு வருகையில் அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வையிழப்பு நேர்கிறது.

தம் கொலைச்செயலுக்கு நேர்ந்த தண்டனையோ இது என்று உளம் மருகிய ஆவுடையான், பார்வை மீண்டால் தம் வயலை வாகீசுவர சுவாமிக்கு அளிப்பதாக வேண்டிக்கொள்ள, பார்வை திரும்பக் கிடைக்கிறது. இழந்த பார்வை மீளப்பெற்ற மகிழ்வில் தம் காணியான குடிகாட்டை வாகீசுவரருக்கு எழுதித் தந்த ஆவுடையான், அதை ஆலத்தூர்த் தளியில் கல்வெட்டாகவும் பொறிக்கச் செய்தார்.

சுந்தரர், நல்லமங்கை, ஆவுடையாதேவன் இம்மூவருக்குமே திடீரெனப் பார்வையிழப்பு நேர்ந்து சிறிது காலத்தில் அது மீளக்கிடைக்கிறது. சுந்தரர் நிகழ்வைக் கதையென்று ஒதுக்குவாருக்குப் பெருங்குடி, மலையப்பட்டிக் கல்வெட்டுகள் அது வரலாறாக இருக்க வாய்ப்புண்டு என்பதைக் கண்முன் காட்சியாக நிறுவுகின்றன.

கண்மருத்துவத்தில் அமோரோஸிஸ் பியுகாக்ஸ் (Amaurosis Fugax) என்றொரு நிலை பேசப்படுகிறது. பார்வைத்திரையாகப் பார்க்கப்படும் ரெட்டினாவுக்குத் திடீரென ஏற்படும் இரத்தஓட்டக் குறைவினால் ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலோ நேரும் தற்காலிகப் பார்வையிழப்பு நிலையே அமோரோஸிஸ் பியுகாக்ஸ். இது சில நிமிடங்களில் சரியாகக்கூடியது என்றாலும், சிலருக்கு உள்ளிருக்கும் பிற நோய்களால் தொடரலாம். சுந்தரர், நல்லமங்கை, ஆவுடையாதேவன் மூவருக்கும் நேர்ந்த பார்வையிழப்பு இதனால்தானா என்பதை யாரறிவார்? ஆனால், இந்த மூன்று நிகழ்வுகளும் கதையல்ல, வரலாற்றின் பதிவுகள்.

பூதி ஆதித்தபிடாரி

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருந்தபோதும் பொது வெளிச்சத்திற்கு வராத பெண்ணரசிகள் பலராவர். அவர்களுள் பூதி ஆதித்தபிடாரி குறிப்பிடத்தக்கவர். ‘கொடும்பை’ என்று சிலப்பதிகாரத்தால் சுட்டப்படும் கொம்பாளூரையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டிருந்த வேளிர்மரபின் குலக்கொழுந்து இவர். முதற் பராந்தகர் சோழநாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாம் ஆண்டிலேயே கொடும்பாளூர் அரசர் மறவம்பூதியின் மகளாகவும் பராந்தகரின் மருமகளாகவும் அவரது புதல்வர்களுள் ஒருவரான அரிஞ்சயசோழரின் தேவியாகவும் கல்வெட்டு வெளிச்சம் பெறும் இவ்வம்மையே சிராப்பள்ளிக் குழித்தலைப் பெருவழியில் காவிரியின் தென்கரையிலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக்கிய பெருமைக்குரியவர்.

திருச்செந்துறைக் கோயில்

பல்லவ அரசரான முதல் மகேந்திரர் தாம் எழுப்பிய கோயில்களைக் கல்வெட்டுகளில் தம் கட்டுமானங்களாக அடையாளம் காட்டினாற் போலவே ஆதித்தபிடாரியும், இரண்டு தளங்கள் பெற்ற இறையகமும் அதன் முன் முகமண்டபமும் எனத் தம்மால் எழுப்பப்பெற்ற திருச்செந்துறைக் கோயிலை ‘நான் எடுப்பித்த கற்றளி’என்று கல்வெட்டுப் பொறித்து அடையாளப்படுத்தியுள்ளார். இத்தகு மொழிதல்கள் இல்லாமற் போனதால்தான் தமிழ்நாட்டுக் கோயில்கள் பல யாரால், எக்காலத்தே உருவாக்கப்பட்டன என்பதை அறியமுடியாதுள்ளது.

பொதுக்காலம் 910இல் பூதி ஆதித்தபிடாரியால் கற்றளியான இக்கோயிலில் 59 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள், ஏறத்தாழ நான்கில் ஒரு பங்குக் கல்வெட்டுகள் இக்கோயிலுக்கும் இங்குப் பணியாற்றிய ஊழியர்களுக்கும் அவ்வம்மை கருதிச் செய்த ஏற்பாடுகளைச் செவ்வனே பதிவு செய்துள்ளன. இறைவனுக்கான வழிபாடு, படையல்கள், மலர்த் தேவைகள், விளக்குகள் ஆகியவை எக்காலத்தும் குறைவின்றி அமையச் செந்துறை வாழ் மக்களிடமும் அவ்வூரை நிருவகித்த ஊராட்சியினரிடமும் பல நிலத்துண்டுகளை விலைக்குப் பெற்று கோயில் ஆட்சியரிடம் ஒப்புவித்ததுடன், உரிய வைப்புத்தொகையை ஊராட்சிக்குச் செலுத்தி அந்நிலத்துண்டுகளை வரியற்றவையாக்கியவர் இவ்வம்மை.

இறைவனுக்கு அளிக்கப்படும் நிலம் தேவதானமாகவும் வரி நீக்கப்பட்ட நிலையில் அது இறையிலித் தேவதானமாகவும் கல்வெட்டுகளில் சுட்டப்படுகிறது. இந்நில வாங்கல்-வழங்கல்களால் சோழர் கால நிலவிற்பனை, நிலஞ்சார் வரியினங்கள், ஆவண நடைமுறைகள் ஆகியவற்றை அறியமுடிவதுடன், ஆட்சியாளரின் வருவாய்த்துறைச் செயற்பாடுகளையும் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஒவ்வோர் ஆவணத்திலும் விற்கப்பட்ட நிலத்துண்டுகளின் நாற்றிசை எல்லைகளும் கூறப்படுவதால், சோழர் காலத்தில் நிலப்பகுதிகள் எப்படி அடையாளப்பட்டன, அவற்றின் பாசன-வடிகால் வசதிகள் எப்படியிருந்தன, ஊர்த்தெருக்களின் அமைப்பு என எண்ணற்ற தரவுகள் வரலாற்றுக்கு வரவாகின்றன.

ஆடற் சிற்பங்களுடன் கோயிலின் மேற்பகுதி

கொடும்பாளூர் இளவரசி எடுப்பித்த கோயில் என்பதால் கொடும்பாளூர்க் குடும்பமே இக்கோயிலில் ஈடுபாடு கொண்டிருந்தது. மறவம்பூதி, அவர் தேவி நக்கன் விக்கிரமகேசரி, மகன் பூதி ஆதித்தபிடாரன் அவர் மகன்களான ஆதித்தன் பூதி, ஆதித்தன் ஒற்றி எனப் பலரைக் கல்வெட்டுகள் அடையாளப்படுத்துகின்றன. தாங்கள் பிறந்த நட்சத்திரங்களில் திங்கள் தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப் பூதி ஆதித்தபிடாரரும் ஆதித்தன்பூதியும் நிலமளிக்க, தம் திருமணக் கொடையாக ஆதித்தன் ஒற்றி அளித்த நிலவிளைவால் 12 நந்தாவிளக்குகள் இக்கோயிலில் ஒளிர்ந்தன. ஆதித்தன் பூதி தம் மகனான பூதிபராந்தகனுக்கு முதற்சோறு ஊட்டிய நாளில் இக்கோயில் இறைவனுக்கு நான்கு வேலி நிலமளித்தார். அதன் விளைச்சல் ஒரு வேலிக்கு நூறு கலம் நெல்லாக இக்கோயில் செயற்பாடுகளுக்கு உதவியது.

கோயிலை எழுப்பிய ஆதித்தபிடாரி இறைவனையும் வழிபாட்டையும் பற்றி மட்டுமே சிந்தனை கொள்ளாது, கோயில் ஊழியர்களின் நலத்தையும் கருதிச் செயற்பட்டதைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. செந்துறைக் கோயிலில் உழைத்த பல்வகைப் பணியாளர்களுக்கும் வாழிடம் உருவாக்க விழைந்த அவ்வம்மை, அதற்காகவே ஊர்மக்களிடம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளை இணைத்துக் கோயிலருகே, ‘மடவிளாகம்’ ஒன்றை அமைத்தார்.

அக்காலத்தே கோயில் வழிபாடுகளின்போது பல்வேறு இசைக்கருவிகளை இயக்கிய கலைஞர்கள் உவச்சர்கள் என்றழைக்கப்பட்டனர். செந்துறையில்தோல், காற்று, நரம்பு, கஞ்சக் கருவிகளுடன் வாய்ப்பாட்டும் சேர்ந்தமையும் இசைப் பெருக்கை ஐம்பேரொலியாக எழுப்பிய கலைஞர்களுக்கு வாழ்வூதியமாக ஊரவையாரிடமிருந்து தாம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளைத் தட்டழிப்புறம் என்ற பெயரில் வழங்கி மகிழ்ந்தவர் ஆதித்தபிடாரி. சோழர் காலத்தில் ஐம்பேரொலியுடன் வழிபாடு நடைபெற்ற கோயில்கள் மிகச்சிலவே. அவற்றுள் செந்துறையும் ஒன்றென்னும் பெருமை ஆதித்தபிடாரியால் விளைந்தது.

ஆதித்தபிடாரியின் கல்வெட்டு

கோயிற் செயற்பாடுகளுக்காகவும் கோயிலில் ஒளியூட்டிய விளக்குகளுக்காகவும் திருவிழா முதலிய கொண்டாட்டங்களுக்காகவும் தம்மாலும் பிறராலும் ஊரவையாலும் கோயிலுக்கு அளிக்கப்பெற்றிருந்த நிலங்களை உழுது பயிரிட்டுக் கோயிலுக்கு வளம் சேர்த்த உழுகுடிகளையும் பிடாரி மறந்தாரில்லை. அவர்களுக்கு இல்லிருக்கை அமைக்கப் பல நிலத்துண்டுகளை விலைக்குப்பெற்று உதவியவர், அந்நிலங்களின் மீது பின்னாளில் உரிமைச் சிக்கல்கள் நேரிடக்கூடாது என்பதற்காகவே, ‘நான் பெற்ற பரிசே குடுத்தேன்’ என்று நிலத்தின் மீதான உரிமைகளையும் விலக்குகளையும் தெளிவுபடுத்திக் கல்வெட்டாக்கினார்.

கோயில் நிலங்களையும் ஊர் நிலங்களையும் பழுதின்றி அளக்கக் கோயில்களில் அந்நாளில் அளவுகோல்கள் வெட்டப்பட்டிருந்தன. சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் பலவற்றில் நன்செய், புன்செய் நிலங்களை அளக்கப் பயன்படுத்திய நில அளவுகோல்கள் எழுத்துப் பொறிப்புடனும் பொறிப்பின்றியும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் புகழ்வாய்ந்த இரண்டு அளவுகோல்களை இக்கோயிலில் அமைத்த பெருமை ஆதித்தபிடாரிக்கே உரியது. ‘இது குழிக்கோல்’ என்ற எழுத்துப் பொறிப்புடன் இறையகத் தாங்குதளத்தின் மேல் வெட்டப்பட்டுள்ள 90 செ.மீ. அளவுகோல் அரிதினும் அரிதான சோழர் காலப்பொறிப்பாகும். முகமண்டபத் தென்பகுதியில் இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடையில் வெட்டப்பட்டுள்ள 4 மீ.நீள அளவுகோலை அங்குள்ள எழுத்துப் பொறிப்பு ‘நிலமளந்தகோல்’ என்கிறது.

நிலமளந்தகோல்

ஒரு கோயிலில் வெட்டப்பட்டிருக்கும் அளவுகோலை மற்றொரு கோயிலிலுள்ள கல்வெட்டுக் குறிப்பது மிகமிக அரிதான செய்தியாகும். செந்துறையில் ஆதித்தபிடாரியின் காலத்தில் வெட்டப்பட்ட இக்கோல்களுள் ஒன்றான நிலமளந்தகோலை, செந்துறையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள அந்தநல்லூர் வடதீர்த்தநாதர் கோயில் கல்வெட்டொன்று சுட்டுகிறது. முதல் இராஜராஜரின் ஏழாம் ஆட்சியாண்டில்(பொ.கா.992) பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு, ‘திருச்செந்துறை ஸ்ரீவிமானத்து வெட்டிக்கிடக்கும் பெருங்கோலால்’ என்று இந்நிலமளந்த கோலைக் குறிக்கிறது. அல்லூர்ப் பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டொன்றும் இக்கோலை முதன்மைப்படுத்திப் பேசுகிறது.

ஆதித்தபிடாரியால் கற்றளியான இக்கோயிலின் தலமரமான பலாவும் இங்குள்ள கல்வெட்டொன்றில் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். இம்மரத்தின் கீழிருந்து கோயிலாரும் கொடையாளரும் சான்றாளர் முன்னிலையில் ஓர் அறக்கட்டளை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டதை இக்கல்வெட்டு வழி அறியநேர்கையில் தலமரங்களுக்கு மக்கள் அளித்த பெருமையை உணரமுடிகிறது.

தமிழ்நாட்டில் பல பெண்ணரசிகள் கோயில்கள் எடுத்துப் புகழ் வளர்த்திருந்தாலும் நங்கை பூதி ஆதித்தபிடாரி வரலாற்றில் அழுந்தப் பதிவாவது கோயிற்குடிகளின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறையால்தான். அளவில் சிறியதாக இருந்தாலும் அழகுணர்ச்சியுடன் எடுக்கப் பெற்றிருக்கும் செந்துறைக் கோயில் சோழர் காலப் பொருளாதாரம், சமூக நடைமுறைகள், கலைகள் சார்ந்து கல்வெட்டுகளும் சிற்பங்களும் கொண்டு பொலிவது நங்கை பூதி ஆதித்தபிடாரியின் பெயரைக் காலங்கடந்தும் வாழவைக்கும்.

இராவணப் பதிவுகள்

இரா. கலைக்கோவன்

இராமாயணத்தின் தலைநாயகர்களுள் இராவணனும் ஒருவர். தமிழிலக்கிய வரலாற்றில் இராவணனை முதன்முதலாக அடையாளப்படுத்துவது கலித்தொகையே. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக அறியப்பட்டாலும் காலத்தால் அதுவும் பரிபாடலும் பிற்பட்டவை என்பது அறிஞர் முடிபு. கலித்தொகை சுட்டும் மிகச் சிலவான சிவக்கோலங்களில், இராவணன் கயிலையை அகற்ற முயன்றபோது அம்மலையில் உமையுடன் இருந்த சிவபெருமானின் திருவடிவமும் ஒன்றாகும். இராவணன் யார், அவர் ஏன் கயிலைமலையை அகற்ற முயன்றார், அம்முயற்சியின் விளைவுகள் எப்படியிருந்தன என்ற கேள்விகளுக்கெல்லாம் கலித்தொகையில் விடையில்லை. தேவாரமூவரில் காலத்தால் மூத்த அப்பர் பெருமானும் சம்பந்தருமே தங்கள் பதிகங்களில் இவ்வினாக்களுக்கான விரிவான விளக்கங்களைத் தருகின்றனர். என்றாலும், சம்பந்தரினும் அப்பர் பெருந்தகையே கயிலை அசைத்த இராவண வாழ்க்கையைப் படக்காட்சிகளெனப் புலப்படுத்தி மகிழ்கிறார்.

அப்பரின் பதிக இராவணன்

கடலால் சூழப்பெற்ற தென்னிலங்கை வேந்தர், பெருவீரர், குபேரனை வென்று புட்பகம் பெற்றவர் என்றெல்லாம் இராவணனைப் பெருமைப்படுத்தும் அப்பர், ‘அரக்கன்’ என்ற அடையாளத்தையும் முத்திரையாகப் பொறிக்கத் தவறவில்லை. அப்பரின் திருமுறைகளை அடியொற்றிப் பின்பற்றினால் இராவணன் கதையை பெருமளவிற்கு அறியமுடியும்.

தன் தேரில் உலாவந்த இராவணனின் வழியில் கயிலைமலை குறுக்கிட்டது. ‘கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது’ என்று தேர்ப்பாகன் கூற, அது கேளாது இராவணன் வீரமொழி பேசிப் பாகனை முடுக்க, தேர் கயிலை நெருங்கி நின்றது. வழித்தடையாகும் அம்மலையைப் பெயர்த்து அகற்றக் கருதித் தேரிலிருந்து இறங்கிய இராவணன், தம் இருபது கைகளாலும் மலையைப் பற்றி அசைத்தார். மலை அசைவதும் ஆடுவதும் உணர்ந்த கயிலை வாழ் முனிவர்களும் இறைவனின் பூதப்படையும் நடுக்குற, உமையும் அஞ்சியது கண்ட சிவபெருமான் தம் கால்விரலை அழுத்தி ஊன்றினார்.

இராவணனின் துன்பம்

கைகளாலும் தோள்களாலும் கயிலைமலையைத் தூக்க முயன்ற இராவணன் சிவபெருமான் தந்த அழுத்தம் தாங்காது, கைகளும் தோள்களும் தலைகளும் நசுக்குறக் கண்களில் குருதி கசிய அலறித் துவண்டார். இராவணனின் இந்தத் துன்பநிலையை அப்பர் போலவே சம்பந்தரும் பலபட விரித்துரைக்கிறார். ‘அலறித் துடித்தான், வாய்விட்டு அலறினான், மிகக் கடுத்து அலறி வீழ்ந்தான், இறையருள் கேட்டு மன்றாடினான்’ என்றெல்லாம் இராவணன் துன்பம் காட்டும் பாடலடிகள், இறைவனிடம் அவன் மன்றாடியதையும் சொல்கின்றன.

இராவணன் என்ற பெயர்

நரம்பையே வீணையிழையாக்கிய இராவணன், முக்தேசுவரம்

இழைத்த தவறுக்கு வருந்தி அழுத இராவணனைப் பொறுத்தருளும் முன், அவர் இசைவளம் கேட்க இறைவன் உளம் கொண்டார். அதை அறிந்தவராய் இறைவனைப் பாடிப் பரவிய இராவணன் தம் கை நரம்புகளையே வீணை இழைகளாகக் கொண்டு இருக்கிசைப் பாடல்களும் வேதகீதங்களும் இசைத்ததாகவும் இராவணனின் பண்திறம் கேட்டுகந்த இறைவன், அதுவரை வாளரக்கன் என்றே அறியப்பட்டிருந்த அவருக்கு இராவணன் என்ற பெயரைத் தந்ததுடன் நெடிது வாழும் சிறப்பையும் தம் கொற்றவாளையும் தந்து வாழ்த்தியனுப்பியதாகவும் அப்பரின் பதிகப் பாடல்கள் தெளிவுறத் தெரிவிக்கின்றன.

பல்லவ இராவணச் சிற்பங்கள்

மலை அசைத்த இராவணன், முக்தேசுவரம்

கலித்தொகை ஐந்து அடிகளில் குறிப்பாய்ச் சுட்டும் இராவணத் தொன்மம் பதிகக் காலத்தில் பலபட விரிந்து பாடலடிகளாய் மலர்ந்து பொதுக்காலம் எட்டாம் நூற்றாண்டில் சிற்பக்காட்சிகளாய்த் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள் நுழைந்தது. பல்லவர் பகுதியான தொண்டைநாட்டில் இத்தொன்மத்தை மக்கள் பார்வைக்குக் காட்சியாக்கிய பெருமைக்குரியவர் இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மப் பல்லவர். அவர் உருவாக்கிய கற்றளிகளில் முக, அகமண்டபக் காட்சியாகவோ, சுவர்க் கோட்டப் படப்பிடிப்பாகவோ இராவணன் கயிலையை அசைக்கும் முயற்சி பேரளவுச் சிற்பமாகப் பொலிந்தது. அப்பர் பதிகங்களின் விளக்கம் போலவே அமைந்த அவற்றில், சிவபெருமான் உமை இணையுடன், மலைவாழ் பூதங்கள், அடியவர்களின் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. மலையின் முன் ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில் மலையசைக்கும் முயற்சியுடன் இராவணனைக் காணமுடிகிறது. காஞ்சிபுரம் முக்தேசுவரத்தில் மட்டும் முகமண்டபத் தென்சுவரில் இராவணன் மலையசைப்பதும் வடசுவரில் அவர் கைநரம்புகளை மீட்டிப் பண்திறல் காட்டுவதும் படமாகியுள்ளன.

பரங்குன்றத்து இராவணத் தொடர்

ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில் பாண்டியர் பகுதியிலும் இராவணத் தொன்மம் முத்திரை பதித்தது. மதுரைக்கு அருகிலுள்ள பரங்குன்றத்தின் வடக்கு வளாகத்தில், குன்றின் இடைப்பகுதியில், அன்னபூரணித் திருமுன்னின் வலப்புறம் ‘இருட்டுக்கொட்டகை’ என்றழைக்கப்படும் பாறைப்பகுதி உள்ளது. மேற்றளக் கருவறைகள், முருகன், பிள்ளையார் திருமுன்களின் திருமஞ்சண நீர் வெளியேறும் வழியாக உள்ள இந்தக் கொட்டகையின் உட்புறத்தேதான் குன்றின் சரிவுப்பகுதியில் இராவண வரலாறு தொடர்கதை போலக் கிழக்கிலிருந்து மேற்காகச் சிற்பப் பொளிவுகளின் துணையுடன் சொல்லப்பட்டுள்ளது.

அலறும் இராவணன், பரங்குன்றம்

பின்னாளில் நேர்ந்த கட்டமைப்பு மாற்றங்களால் எழிலார்ந்த இந்தச் சிற்பத்தொடர் பல நிலைகளில் மறைக்கப்பட்டிருந்தாலும், இறைவன் கால்விரல் அழுத்தத்தால் மலையின் கீழ் நசுக்குண்டு இராவணன் வாய்விட்டு அலறும் காட்சி, பாண்டியர் கைநேர்த்தியில், அப்பர் பாடலடிகளை அப்படியே கண் முன் நிறுத்துகிறது. இராவணனின் வலப்புறத்தும் இடப்புறத்தும் அவனை எதிர்க்கும் பேரளவிலான கயிலைப் பூதங்கள். தமிழ்நாட்டின் வேறெந்தப்பகுதியிலும் இராவணத்தொன்மத்தில் இத்தகு வீரப்பூதங்களைக் காணக்கூடவில்லை. உருள்பெருந்தடி, கேடயம், ஈட்டி, வில், அம்பு, கல் என அக்காலத்திய அனைத்துவிதமான போர்க்கருவிகளையும் ஏந்திப் பெருவீரத்துடன் இராவணனைக் குறிபார்க்கும் பரங்குன்றப் பூதங்கள் பேரெழிலின.

தேரும் வாளும்

தேரில் இராவணன், பரங்குன்றம்

இறைவனைத் தம் இசையால் மகிழ்வித்த இராவணனுக்கு வாளும் வாழ்நாளும் பெயரும் அளித்துகந்த இறைவனை இங்குக் காணமுடியவில்லை என்றாலும், இறையருள் பெற்ற இராவணன் தேரில் செல்லும் காட்சி தென்முகப் பாறையில் ஒளிர்கிறது. இடக்கையை மார்பருகே கொண்டு வலக்கையால் இறைவனைப் போற்றியவாறே செல்லும் இராவணனின் தேருக்குள் இறைவனளித்த கொற்ற வாளையும் மறக்காமல் காட்டியிருக்கிறார் பாண்டியச் சிற்பி. இராவணனுக்கு இந்தத் தேரையும் இறைவனே அளித்ததாக சம்பந்தரின் பதிகம் ஒன்று கண்சிமிட்டுகிறது.

சோழப் பதிவு

சோழர் பதிவு, திருப்பூந்துருத்தி

பத்திமைக் காலத்திற்குப் பின் வந்த ஆகமங்கள் இந்தத் தொன்மத்தைச் சில பல வேறுபாடுகளுடன் பதிவுசெய்து, இராவணனுக்கு அருளியவராய் சிவபெருமானைப் போற்றுகின்றன. பல்லவ, பாண்டியர்களைத் தொடர்ந்த சோழர்களும் இந்தத் தொன்மத்தைக் கைவிடவில்லை. பேரளவுச் சிற்பங்களாய் இல்லாவிடினும் சிற்றுருவச் சிற்பங்களாய் இராவண அருளராய் சிவபெருமான் சோழர்களால் தொடர்ந்து அடையாளப்பட்டார்.

சோழர் பதிவுகளில் சற்றே மாறுபட்ட இராவண அருள் மூர்த்தி வடிவத்தைத் திருப்பூந்துருத்திக் கோபுரத்தில் காணமுடிகிறது. இங்கு இராவணனை விரட்டப் புதிய முயற்சியொன்றில் பூதமொன்று ஈடுபட்டதைக் காட்டியுள்ளனர். இந்தியாவின் வடபகுதிகளில் காணப்படும் பெரும்பாலான இராவண அருள்மூர்த்தி சிற்பங்களில் பூதங்கள் இரண்டு இராவணனின் இருபுறத்தும் குனிந்து நின்று தம் வயிற்றுக்காற்றைப் பின்வழி வெளியேற்றி அவனைத் திக்குமுக்காடச் செய்வதைக் காணமுடிகிறது. பூந்துருத்திச் சிற்பத்தொகுதியின் மேற்பகுதியிலோ இராவணனுக்காய்த் திரும்பி நிற்கும் பூதமொன்று காற்றுக்குப் பதில் வயிற்றுக் கழிவை வெளித்தள்ளித் தன் வெறுப்பையும் சினத்தையும் புலப்படுத்துகிறது.

கலித்தொகைத் தொன்மம் ஒன்று பத்திமைக் காலத்தில் பதிக வாழ்க்கை பெற்றுப் பேரரசுக் காலங்களில் சிற்பங்களாகப் பதிவாகி, சிவபெருமானின் அருள்பெற்ற தென்னிலங்கை இராவணனை மக்கள் உள்ளங்களில் நிலைபேறு கொள்ளச் செய்துள்ளமை கலையும் இலக்கியமும் கையிணைக்கும்போது நிகழும் பேரதிசயங்களுள் ஒன்றெனலாம்.


திருமடத்துக் குடைவரைகள்

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டில் பழம் பெருமையுடன் விளங்கும் திருமடங்கள் பல உள்ளன. சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், சமணம் எனப் பல்வேறு சமயங்களைச் சார்ந்துள்ள அவற்றுள், குடைவரைக் கோயில்களைத் தங்கள் ஆளுகையின் கீழ்க் கொண்டுள்ள திருமடமாய்த் திகழ்வது திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடம்தான். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இலங்கும் இத்திருமடத்தின் கீழ்க் குன்றக்குடியில் மூன்றும் கோளக்குடியில் ஒன்றும் பிரான்மலையில் ஒன்றும் அரளிப்பட்டியில் ஒன்றுமாய் ஆறு குடைவரைகள் உள்ளன. இவை ஆறுமே தமிழ்நாட்டுக் குடைவரைக் கலைவரலாற்றில் தனிச்சிறப்புடன் பொலிபவை.

குடைவரை

மலையிலோ, குன்றிலோ, பாறையிலோ முன்னிருந்து பின்னாகக் குடைந்து உருவாக்கப்படும் கோயில்களே குடைவரைகள். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான குடைவரைகள் பாறை அல்லது சிறு குன்றுகளின் கீழ்ப்பகுதியில் அமைய, சிலவே பெரிய குன்றின் அல்லது மலைச்சரிவின் இடைப்பகுதியில் உள்ளன. 

குன்றக்குடிக் குடைவரைகள்

மகுடமற்ற பிள்ளையார்

குன்றக்குடித் திருமடத்தின் கீழுள்ள ஆறு குடைவரைகளில் குன்றக்குடியிலுள்ள மூன்றும் அங்குள்ள குன்றின் கீழ்ப்பகுதியில் அடுத்தடுத்துக் குடையப்பட்டுள்ளன. குடைவுகளுக்கு இடைப்பட்ட பாறைச்சரிவுகளில் இலிங்கத் திருமேனி, பிள்ளையார். மகுடமற்ற தலையுடன் விளங்கும் இப்பிள்ளையார் தனித்தன்மையர். மூன்று குடைவரைகளிலுமே கருவறையில் தாய்ப்பாறையில் உருவான இலிங்கத்திருமேனி.

முதலிரு குடைவரைகள்

விஷ்ணுவும் கருடனும்

குடைவரைக் காலச் சிற்பங்கள் ஏதுமற்ற முதல் குடைவரையில் இலிங்கத்தின் கோமுகத்தைக் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ள பூதம் தலையால் தாங்குகிறது. மசிலீச்சுரம் என்று கல்வெட்டுக் குறிக்கும் இரண்டாம் குடைவரை, முகப்பின் பக்கச்சுவர்களில் சிவபெருமானின் கருவிகளான மழுவையும் முத்தலை ஈட்டியையும் அடையாளப்படுத்துமாறு, அவற்றை மகுடத்திலும் தோள்களின் பின்னிருக்குமாறும் கொண்ட காவலர் இருவர் சிற்பங்களையும் மேற்குச்சுவர்க் கோட்டத்தில் விஷ்ணுவும் கருடனும் தோழமையுடன் நிற்கும் சிற்பக் காட்சியையும் கொண்டுள்ளது. கருடன் மனிதவடிவில் காட்டப்பட்டுள்ளார். தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் இதுபோல் மழுவடியாராகவும் சூலத்தேவராகவும் காவலர்களைக் காண்பது அரிதானது. 

சூலத்தேவர்

மூன்றாம் குடைவரை

மூன்றாம் குடைவரையின் முப்பக்கச் சுவர்களும் பேருருவச் சிற்பங்களால் நிறைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது இரண்டு கால்களையும் குறுக்கீடு செய்து எட்டுத் திருக்கைகளுடன் சிவபெருமான் ஆடும் அர்த்தஸ்வஸ்திகக் கரணம். செவல்பட்டிக் குடைவரையிலும் இக்கரணக் காட்சி இடம்பெற்றிருந்தாலும் இங்கு இசைக்கலைஞர்களும் உடனிருப்பது கூடுதல் சிறப்பு. 

கோளக்குடிக் குடைவரை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோளக்குடிக் குடைவரை அவ்வூர்க் குன்றின் நடுப்பகுதியில் உள்ளது. காலப்போக்கில் மலையின் அடிவாரத்திலும் இடைப்பகுதியிலும் மலைமேலும் எனப் பல கற்றளிகள் பெற்றுப் பெருவளாகமாக மாறியுள்ள கோளக்குடிக் குடைவரையின் மண்டபச் சுவர்களில் இருபுறத்தும் மலரேந்திய முனிவர்களின் சிற்பங்கள். அகத்தியர், புலத்தியர் என்று கோயிலாரால் அழைக்கப்படும் இத்தகு அருளாளர் சிற்பங்களைப் புதுக்கோட்டை மாவட்டத் தேவர்மலைக் குடைவரையிலும் காணமுடிகிறது. கோளக்குடியின் சிறப்புகளாகக் கருவறை வாயில் மேலுள்ள மகரதோரணத்தையும் குன்றின் ஒருபகுதியில் வெட்டப்பட்டுள்ள எழுவர் அன்னையர் சிற்பத்தொகுதியையும் சுட்டலாம்.

எழுவர் அன்னையர்

தமிழ்நாட்டின் தென்பகுதியில் மட்டுமே காணக்கிடைக்கும் குடைவரைக் கால எழுவர் அன்னையர் தொகுதிகளில், இங்கு மட்டுமே அன்னையருள் ஒருவரான சாமுண்டி, இயமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு, அவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர், அழகில் சிறந்தவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகள் கீழிறங்கிப் பிணக்குண்டலங்களுடன் தோள்களை வருட, கொண்டையின் முகப்பில் மண்டையோடு. மூன்று தலைகளைச் சுற்றியும் பெரிய ருத்திராக்கங்களாலான தலைமாலை அணிந்து, வலக்கையில் சுரைக்குடுவையுடன் இங்குள்ள நான்முகியின் சிற்பமும் தனித்தன்மையதே. குன்றக்குடி போலவே கோளக்குடியிலும் தாய்ப்பாறைப் பிள்ளையார் மலையின் தென்சரிவில் செதுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை வளாகம் கோளக்குடிதான். 

சாமுண்டி

பிரான்மலைக் குடைவரை

வள்ளல் பாரியின் பறம்புமலையாக அறியப்படும் பிரான்மலையிலுள்ள திருக்கொடுங்குன்றநாதர் கோயில்வளாகத்தின் அளவில் சிறிய குடைவரை, அதன் மண்டபவாயிற் கோட்டங்களில் காவற்பெண்டுகளைக் கொண்டுள்ளது. திருமடத்துக் குடைவரைகள் ஆறனுள் பிரான்மலையில் மட்டுமே தாய்ப்பாறைச் செதுக்கலாகப் பிள்ளையார் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கருவறையில் சிவபெருமானும் உமையன்னையும் இணையாக அருகருகே அமர்ந்துள்ள அழகுக் கோலம் கண்களை நிறைப்பது. தாய்ப்பாறையில் உருவானவையா, சுதைவடிவங்களா என்றறிய முடியாதவாறு அழகூட்டல்கள் பெற்றுள்ள இவ்விரு இறைத் திருமேனிகளும் கைத்திறன் வல்ல பாண்டிநாட்டுக் கவின்கலைஞர்களின் படைப்புகளாகும். இது ஒத்த இணைக்கோலம் சிவகங்கை மாவட்டத் திருமலைக் குடைவரைக் கருவறையிலும் இடம்பெற்றிருப்பினும் பிரான்மலை இணையரின் அழகு சொற்களை மீறிய சுகம்.

அரளிப்பட்டிக் குடைவரை

பிள்ளையார் லிங்கம்

அரளிப்பட்டி மஞ்சுவிரட்டுக்குப் பெயர் பெற்றிருக்குமாறே, அரவங்கிரிக் குன்றின்கீழ்ப் பகுதியிலுள்ள எளிய குடைவரைக்காகவும் அறியப்பட்ட ஊராகும். குடைவரையின் மண்டபச் சுவர்களில் வடபுறமுள்ள இலிங்கத்திருமேனி தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாத ‘பிள்ளையார் லிங்கமாக’ ஒன்றுக்குள் ஒன்றாய் இலிங்கபாணத்தில் பிள்ளையார் செதுக்கலைப் பெற்றுள்ளது. உற்றுநோக்குவாருக்கே வடிவம் புலப்படுமாறு, தந்தைக்குள் தனையனைப் பொருத்தமாய்ப் பொளிந்திருக்கிறார்கள். இயற்கை எழில் நிரம்பிய சூழலில் அமைந்திருக்கும் இக்குடைவரையின் தாய்ப்பாறை இலிங்கம் இத்திருமடக் குடைவரைகளிலேயே அளவில் சிறியதாகும். 

திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடத்தின் ஆளுகையிலுள்ள ஆறு குடைவரைகளும் அங்குள்ள பல்வேறு தாய்ப்பாறைச் செதுக்கல்களும் பொதுக் காலம் எட்டாம் நூற்றாண்டில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. இவையனைத்துமே ஏதேனும் ஒரு விதத்தில் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் தனித்துக் குறிக்குமளவு சிறப்புப் பெற்றுள்ளமை இவற்றை உருவாக்கிய கைகளின் வளமையையும் பின்னிருந்த உள்ளங்களின் செழுமையையும் காலம் உள்ளளவும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும். இக்குடைவரைகளில், பதிவாகியிருக்கும் கல்வெட்டுகளோ பாண்டிநாட்டு வரலாற்றின் சுவையான பக்கங்களைக் கருத்தோடு தேடுவாருக்குக் கனிவோடு வழங்கி மகிழ வல்லன.

குலோத்துங்கப் புரட்சி

இரா. கலைக்கோவன்

திருவரங்கம் திருக்கோயிலை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கமுடியாது. பாசுரம் பெற்ற 108 வைணவத் திருக்கோயில்களில் திருப்பதிக்கு இணையாகப் பதினொரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற பெருங்கோயில் இது. பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தால் சுட்டப்பெற்ற பழைமைச் சிறப்பினது. தமிழ்நாட்டுக் கோயில்களில் அதிக அளவில் கல்வெட்டுப் பதிவுகள் பெற்ற இடமும் இதுதான். இங்குள்ள 191 சோழர் காலக் கல்வெட்டுகளில் சுங்கம் தவிர்த்தவராகவும் பேரம்பலம் பொன் வேய்ந்தவராகவும் அறியப்படும் முதற்குலோத்துங்கர் காலத்தன 83. பொதுக்காலம் 1070இலிருந்து 1120வரை 50 ஆண்டுகள் சோழப் பேரரசைக் கட்டிக் காத்த இவரது பதிவுகளில் 72, திருவரங்கம் கோயிலின் மூன்றாம் திருச்சுற்றின் நாற்றிசைச் சுவர்களிலும் பரவி, அச்சுற்றையே குலோத்துங்கச் சுற்றாக்கியுள்ளன. கலிங்கத்தை வென்று கலிங்கத்துப்பரணி உருவாகக் காரணராய் அமைந்த இம்மன்னரின் காலத்தில் அரங்கத்தில் நிகழ்ந்த வேளாண்புரட்சியை இங்குள்ள கல்வெட்டுகளில் பல ஒரு கதைபோலச் சொல்லிக் கண்சிமிட்டுகின்றன.

சோழர் காலத்தில் தமிழ்நாட்டுக் கோயில்கள் அவற்றின் வழிபாடு, படையல், விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு, அவற்றிற்கென வழங்கப்பட்டிருந்த கொடைநிலங்களின் விளைச்சலையே நம்பியிருந்தன. அரங்கத்தின் நிலையும் அதுதான். கோயில் மடைப்பள்ளி சார்ந்த பல்வேறு அறக்கட்டளைகள் திருமடைப்பள்ளிப்புறமாக அளிக்கப்பட்டிருந்த கொடைநிலங்களின் விளைவு கொண்டே நிறைவேற்றப்பட்டன. இந்நிலங்களின் பெரும்பகுதி தண்டுறை, காரைக்குடி எனும் காவிரிக்கரை ஊர்களில் இருந்ததால், ஆற்றில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்நிலங்களில் மணலடித்து விளைச்சலைக் குறைப்பதும் நிலத்தைத் தரிசாக்குவதும் தொடர்ந்தது.

நிலச்சீர்மைப் பணிகள் தேவைக்கேற்ப நிகழ்ந்தாலும் முழுவீச்சில் நடைபெறாமையின் வரவு குறைந்து மடைப்பள்ளிப் பணிகள் சுருங்கின. குலோத்துங்கர் ஆட்சிக்காலத்தில் இவ்விரு ஊர்களிலும் பயிர் ஏறாதிருந்த நிலங்களின் அளவு பெருகியிருந்தமை கோயில் ஆட்சியருக்குப் பெருந்துன்பமானது. போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் திருவரங்கத்து மடைப்பள்ளிச் செயற்பாடுகள் நின்றுவிடும் எனக் கருதிய கோயிலார், அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டுசென்றனர். அரங்கம் கோயிலின் அன்றாட நடைமுறைகள் தொய்வின்றித் தொடரவும் உழுகுடிகள் வேலைவாய்ப்புப் பெறவும் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்விளைவாக இவ்விரு ஊர்களின் மணலடித்த நிலங்களைப் பண்படுத்தும் நோக்கில் அரசும் கோயிலும் முழு வீச்சில் கையிணைத்தன. 

நிலச்சீர்மையே குறிக்கோளாய்த் தொடங்கிய இந்த அரும்பணியில் குலோத்துங்கரின் தேவியர் தென்னவன் மாதேவி, வளவன் மாதேவி, உலகமாதேவி, நெரியன் மாதேவி ஆகியோருடன் அரசின் உயர் அலுவலர்களும் சோழப் பெரும்படையின் தலைவர்களும் நிலக்கிழார்களும் அரண்மனைப் பணிமக்களும் ஒன்றிணைந்தனர். தமிழ்நாட்டில் வேறெங்கும் வரலாற்றின் எக்காலத்தும் இது போல் நிலம் திருத்தும் பணி அரசுசார் முயற்சி எனக் கொள்ளத்தக்க அளவிற்கு மேற்கொள்ளப்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை. மணலடித்து விளையாதிருந்த தண்டுறை, காரைக்குடி நிலங்களை முப்பதிற்கும் மேற்பட்ட அரசு உயர் அலுவலர்கள் விலைக்குப் பெற்று அவற்றை விளைநிலங்களாகத் திருத்தினர். எட்டுக்கும் மேற்பட்ட படைத்தலைவர்கள் இத்திருப்பணியில் பங்கேற்றனர். இப்பெருமக்களுள் சிலர் சைவ சமயம் சார்ந்தவர்களாய் இருந்தபோதும் அரங்கன் கோயில் நிலச்சீர்மைப்பணியில்  சமயச் சார்பின்றிச் செயற்பட்டமை கல்வெட்டுகள் சுட்டும் அவர்தம் இயற்பெயர்களால் அறியப்படும் உண்மையாகும்.  

மணலடித்து வீணான நிலங்களைத் திருத்தி விளைச்சல் காட்ட முன்வந்தவர்களுக்கு ஒரு வேலி ஒரு காசு என நிலம் விற்கப்பட்டதுடன் ஐந்தாண்டுகளுக்கு அந்நிலத்தின் மீதான வரியும் நீக்கப்பட்டது. குலோத்துங்கர் காலத்தில் காவிரி, கொள்ளிடம்சார் ஊர்கள் எத்தகு நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றிருந்தன என்பதையும் அவை வெள்ளத்தால் சீர்குலைந்த நிலையில் அவற்றைச் சரிசெய்ய ஊராட்சிகள் எத்தகு முயற்சிகளை மேற்கொண்டன என்பதையும் இக்கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. 

ஆற்றிலிருந்து தலைவாய் மதகுகள் வழி வெளிப்பட்ட நீர் அதற்கென அமைந்த நீரோடுகால்களில் ஓடிப் பெருவாய்க்கால்களை அடைய, அவை அந்தந்த ஊர்களுக்கான வாய்க்கால்களுக்கு நீர்ப்பிரிக்க, உள்வாய்க்கால்களும் உட்சிறு வாய்க்கால்களும் உள்ளார்ந்த நிலத்துண்டுகளுக்கு நீரெடுத்துச் சென்றன. நாட்டு வாய்க்கால், பொது வாய்க்கால், திசைநோக்கிய வாய்க்கால்கள், ஊர்ப்பெயர் கொண்ட வாய்க்கால்கள் என நீர்ப்பாசனம் தேவைக்கேற்பவும் ஊரின் நிலவிளைவுகளுக்கு ஏற்பவும் பிரித்துப் பகிர்ந்தளிக்கப்பட்டது. மிகைநீர் செல்ல நீர்வடிகால்களும் பயன்பாட்டிலிருந்தன. இப்பாசனப் பராமரிப்பிற்குத் தேவையான ஆள்உழைப்பிற்கு நிலஉரிமையாளர்கள் பொறுப்பேற்றிருந்தனர். 

நிலத்தை விலைக்குப் பெற்றவர்கள் நிலச்சீர்மைக்கு உள்ளூர் மக்களையும் சுற்றூர் மக்களையும் உழுகுடிகளாகக் கொண்டதால் வேலைவாய்ப்புப் பெருகிற்று. வேலைக்கேற்ற ஊதியம் உழைத்தவர்களுக்குக் கிடைத்ததாகக் கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன. பண்படுத்தப்பட்ட நிலத்தில் நிலத்துக்கு உரியவர்கள் அவரவர் விருப்பிற்கேற்ற பயிர்களை விளைவிக்கும் உரிமை வழங்கப் பெற்றதால், இவ்வேளாண் புரட்சியில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஊருக்கும் கோயிலுக்கும் பயன்தரும் மரங்களையும் செடிகளையும் விளைவித்தனர். இது போல் நிலம் திருத்தும் பணி சோழர் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்துள்ளது எனினும் ஒரு தவம் போல ஒரு மன்னர் காலத்தில் அரசு சார்ந்தவர்களால் அது நிகழ்த்தப்பட்டிருப்பது திருவரங்கத்தில்தான், அதுவும் குலோத்துங்கர் ஆட்சியில்தான் என்பது வரலாற்று உண்மையாகும். 

திருத்திய நிலத்தில் பயிர் தலைகாட்டியிருப்பின், ஐந்தாம் ஆண்டிற்குப் பிறகு ஒரு வேலி விளைவுக்கு 8 கலம் நெல்கோயில் வரியாகக் கொள்ளப்பட்டது. அதையும் இருதவணைகளில் தர ஒப்புதலானது. பழ, பயன் மரங்கள், காய்கறிப் பயிர்கள் விளைவித்தவர்கள் மரத்திற்கு இவ்வளவு எனப் பழங்களையும் விளைச்சலைப் பொறுத்துக் காய்களையும் கோயிலுக்கு வழங்கினர். திருத்தப்பட்ட நிலங்களுள் பெரும்பாலன பூந்தோட்டங்களாக மாறியதால், குலோத்துங்கர் காலத்தில் திருவரங்கம் கொண்டிருந்த அளவிற்கு வேறெந்தக் கோயிலிலும் பூந்தோட்டங்கள் அமையவில்லை எனலாம். இவை அரங்கனின் பல்வேறு திருப்பெயர்களில் வழங்கியதுடன் இங்குப் பூத்தமலர்களே அரங்கனின் திருமேனியை அழகுசெய்து கோயில் வளாகத்தை மணக்க வைத்தன. 

நிலம், நீர் சார்ந்த இயற்கையின் நெருக்குதல்களை ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ச்சமுதாயம் எத்தனை எளிதாகக் கூட்டுறவு நோக்கில் எதிர்கொண்டது என்பதைக் குலோத்துங்கரின் அரங்கக் கல்வெட்டுகள் மிக விரிவாகவும் தெளிவாகவும் பதிவுசெய்துள்ளன. இந்த மண்ணின் வரலாறு வளம்மிக்கது. தேடுவார் திறனுக்கேற்ப அது வழங்கிடும் வழிகாட்டல்கள் வாழ்க்கையின் பன்முகச் சிக்கல்களுக்கும் திறப்பாக அமையும். எந்த உலகமயமாக்கலும் அடிப்படைகளை அழிப்பதில்லை. அவை பொதிந்திருக்கும் வரலாற்றுக்கும் அழிவில்லை. வரலாறு நிழலைப் போல. ஓளியில் வாழ நினைப்பவர்கள் அதைத் தவிர்க்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது.

அடையாளத்தின் அடையாளம்

இரா. கலைக்கோவன்

‘புனிதவதி’ எனும் பெயர் கொண்டவரில் பலர் அப்பெயரின் பின்னிருக்கும் பெருமை அறிவதில்லை. புனிதவதி வெறும் பெயரன்று. பெண்ணாகப் பிறந்து தம்மைப் பேயாக மாற்றிக் கொண்ட ஓர் அம்மையின் முதற்கட்ட வாழ்க்கையே அந்தப் பெயருடன்தான் ஒட்டியுள்ளது. ஊர்ப்பெயருடன் சிவபெருமானால் வழங்கப்பட்ட அம்மை எனும் சிறப்புப் பெயர் இணையக் காரைக்கால் அம்மையாக அறியப்படும் இப்புனிதவதிப் பெருமாட்டி பல முதல்களின் சொந்தக்காரர்.

சிவபெருமானைப் போற்றி முதன்முதலாகப் பதிகம், வெண்பா, அந்தாதி, கட்டளைக்கலித்துறை பாடிய பெருமைக்குரிய இவர், தம் இறைப்பாடல்களால் திருமுறைகளில் இடம்பெற்று அறுபத்து மூவரிலும் ஒருவரான ஒரே பெண்மணி. அறுபத்து மூன்று தனியடியார் திருமுன்களில் அமர்ந்த திருக்கோலத்தவர் இவர் ஒருவரே. சிவபெருமானின் திருக்கூத்தை உளம் களிக்கப் பாடி, அந்த ஆடலின் களம், ஆடும்போது இறைவன் கொண்ட ஒப்பனை, கைகளில் கொண்ட கருவிகள், ஆடை, அணிகள், ஆடலுக்கு அமைந்த இசை, அதைத் தந்த கருவிகள், அவற்றை இயக்கிய பேய், பூதம் உள்ளிட்ட உடன்கூட்டத்தார், உடன் ஆடியவர்கள், அந்த ஆடலின் அமைவு, அதன் விளைவுகள், ஆடலைக் கண்ணுற்றார் என இறையாடல் நோக்கில் பதிகப் பெருவழியில் பயணப்பட்ட முதல் அடியாரும் அம்மைதான்.

பெருமைகள் சூழ உயர்ந்தோங்கி நிற்கும் இவ்வம்மையை முதன்முதலாக வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்ந்த பெருமை சுந்தரருக்கு உரியது. தம் காலத்தும் தமக்கு முன்னும் வாழ்ந்த இறையடியார்களின் பெயர்களைத் தொகுத்து அவர் பாடிய திருத்தொண்டத்- தொகையில்தான் புனிதவதியான காரைக்கால் அம்மை அறிமுகமாகிறார். அந்த அறிமுகமும் அவரது இயற்பெயராலோ, வழங்கு பெயராலோ அமையவில்லை. அவர் விரும்பி வேண்டிப் பெற்ற பேய்வடிவமே பெயராகிப் பேயாராகவே சுந்தரரால் பதிவுபெறுகிறார் அம்மை. ‘பெருமிழலைக் குறும்பனார்க்கும் பேயார்க்கும் அடியேன்’ என்பது சுந்தரர் வாய்மொழி.

திருத்தொண்டத்தொகையை உள்வாங்கி நம்பியாண்டார் நம்பியால் சற்றே விரிவுசெய்யப்பட்ட அடியார்களின் வரலாறுதான் திருத்தொண்டர் திருவந்தாதி. அதில்தான் அம்மையைப் பற்றிய இரண்டு புதிய செய்திகள் கிடைக்கின்றன. சிவபெருமானைக் காண அம்மை கயிலை சென்றதாகவும் அங்குக் கால்பதித்து நடப்பதை விழையாமல் தலையால் நடந்து சென்றதாகவும் அது கண்ட உமை சிவபெருமானிடம் யாரிவர் எனக் கேட்டதாகவும் கூறும் அந்தாதி, இறைவன், ‘இவர் நம் அம்மை’ என்று மகிழ்ந்துரைத்தாகச் சொல்கிறது.

சிவபெருமானால் அம்மை என்றழைக்கப்பட்ட பெருமையுடன் காரைக்கால் குலதனமாகவும் நம்பியால் அம்மை உயர்த்தப்பட்டுள்ளார். கயிலையில் அம்மை தலைகீழாக நடைபயின்ற காட்சியைத் தாராசுரம் கோயில் விமானம் சிற்பச் செதுக்கலாய்ப் பதிவுசெய்துள்ளது. சென்னை அருங்காட்சியக வாயிலிலுள்ள சோழர் காலச் சிற்பத்தொகுதியொன்றும் கயிலை நடையைக் கொண்டுள்ளது.

0 Ammaiyin Kayilai Nadai Darasuram

அம்மையின் கயிலை நடை, தாராசுரம்

அம்மையின் வரலாறு பேசும் மூன்றாவது நூல் சேக்கிழாரின் பெரியபுராணம். அதில்தான், பல பாடல்கள் வழி அம்மையின் முழுமையான வரலாற்றைச் சேக்கிழார் பகிர்ந்து கொள்கிறார். தம்மைக் காணவந்த அம்மையிடம் சிவபெருமான், ‘உமக்கு வேண்டுவது கேட்க’ என்றதும், இன்ப அன்பு, பிறவாமை, பிறந்தால் இறைவனை மறவாமை கேட்ட அம்மை, மிகச் சிறப்பான ஒன்றையும் வேண்டிப் பெற்றார். ‘பெருமானே, நீ ஆடும்போது உன் திருவடிக்கீழ் நான் இருக்கவேண்டும்’. காரைக்கால் அம்மையின் இந்த வேண்டுகோளைச் சேக்கிழார் எப்படி அறிந்திருக்கமுடியும்? பெரியபுராணத்தைப் பல கோணங்களில் ஆய்வுசெய்த பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கனார் சேக்கிழாரை வரலாற்று ஆய்வாளராக அடையாளப்படுத்துவார். அது உண்மையே என்பதை அம்மையின் வரலாற்றுத் தடங்கள் நிறுவுகின்றன.

பேய், காரைக்கால் குலதனம், கயிலையில் தலைகீழ் நடை எனும் தொடக்க அடையாளங்களுடன் வெளிப்படும் அம்மையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேண்டுகோளைக் கண்முன் காட்சியாக்கியவரும் ஓர் அம்மைதான். பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் பெருவாழ்வு வாழ்ந்த இவ்வம்மையை வரலாறு மழவரையர் மகளாகக் கொண்டாடுகிறது. கண்டராதித்த சோழரின் தேவியாகவும் உத்தமசோழரின் அன்னையாகவும் தம்மைக் கல்வெட்டுகளில் அடையாளப்படுத்திக் கொள்ளும் செம்பியன்மாதேவி எனும் இவ்வம்மையும் காரைக்கால் அம்மை போல் பல முதல்களின் முதல்வர். இவர் காலத்தில்தான் கோயில்களில் மண்டபங்களும் அவற்றில் இறைக்கோட்டங்களும் பெருகின. செப்புத்திருமேனிகள் பலவாய் உருவாயின. பழங்கோயில்கள் புதுப்பிக்கப்பெற்றபோது அங்கிருந்த கல்வெட்டுகள் கருத்தோடு படியெடுக்கப்பட்டு, ‘இதுவும் ஒரு பழங்கற்படி’ என்ற குறிப்புடன் புதிய கட்டுமானத்தில் பதிக்கப்பெற்றன.

கருந்திட்டைக்குடி ஆனந்ததாண்டவரும் காரைக்கால் அம்மையும்

மாதேவியின் சாதனைகளின் சிகரமாய், முற்சோழர்களின் தொடக்கக்காலக் கோயில்களில் கண் தழுவாத இடங்களில் ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சிவபெருமானைத் தாம் திருப்பணிசெய்த கோயில்களில் மண்டபக்கோட்டத்தில் பேருருவினராய் ஆடச்செய்தமையைக் குறிக்கலாம். இந்தச் சிற்பப் பதிவுகள் அனைத்திலும் மாதேவியின் மகத்தான முத்திரையாக சிவபெருமானின் திருவடிக் கீழோ, அருகிலோ காரைக்கால் அம்மை இடம்பெற்றார். கைத்தாளமிடுமாறோ, கைகளைக் கொட்டுமாறோ, பாடியநிலையிலோ, ஆடலைப்போற்றி மகிழுமாறோ அம்மையின் பேயுரு அடையாளமானது. கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயில் ஆனந்ததாண்டவக் காட்சியிலுள்ள அம்மையின் வடிவம் ஈடுஇணையற்ற சிற்பப்பதிவாகும்.

ஆனந்ததாண்டவரும் காரைக்கால் அம்மையும் – கூகூர் மற்றும் திருக்கோடிக்கா

செம்பியன்மாதேவி அடையாளப்படுத்துவதில் முதன்மையர். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் இவர் ஒருவரே தம் கணவரைப் பெயர்சுட்டி சிற்பக் காட்சியாக்கியிருப்பவர். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கோனேரிராஜபுரம் உமைக்குநல்லவர் கோயிலில் கண்டராதித்தர் இறைவனை வழிபடும் காட்சி கல்வெட்டுடன் பதிவாகியுள்ளது. அதே காட்சி அம்மை திருப்பணி செய்த சித்தீசுவரம், ஆனாங்கூர், ஆடுதுறை உள்ளிட்ட வேறு சில கோயில்களிலும் மீள்பதிவாகியுள்ளது. அடையாளத்தின் அடையாளமாய் வாழ்ந்த செம்பியன்மாதேவியே சேக்கிழாருக்குக் காரைக்கால் அம்மையின் வேண்டுகோளைத் தாம் அமைத்த சிற்பக்காட்சிகளின் வழி அடையாளப்படுத்தியவர்.

கோனேரிராஜபுரம் கண்டராதித்தர்

சுந்தரர், நம்பியின் சுட்டல்களாலும் தம் காலத்து வழங்கிய செய்திகளாலும் ஈர்க்கப்பட்டே காரைக்கால் அம்மையின் வேண்டுகோளுக்கு இத்தகு முத்திரைப்பதிவைச் செம்பின்மாதேவி வழங்கியிருக்கிறார். அறுபத்து மூன்று அடியார்களில் சிற்பக்காட்சிகள் வழிப் பல்லவர் காலத்திலேயே இறைவனோடு இணையும் பேறு பெற்ற முதல் அடியவர் சண்டேசுவரர் என்றால், இறையாடலோடு நெருங்கிய முதல் அடியவராகக் காரைக்கால் அம்மையைக் குறிக்கலாம். ஆடலைப் பாடிய முதல் அடியவர் என்ற பெருமையோடு அவ்வாடலை அருகிருந்து காணும் ஒரே அடியவர் என்ற சிறப்பும் என்றென்றும் அம்மைக்கே.

வரலாறு இலக்கிய ஏடுகளிலோ, கல்வெட்டு வரிகளிலோ மட்டுமில்லை. அது கோயில்களில் சிற்பக்காட்சிகளாகவும் கண்சிமிட்டுகிறது. தொடரிழைகளைக் கண்டு தொடர்புபடுத்திக் கொள்பவர்களே வரலாற்றை வளப்படுத்துகிறார்கள்.

கலை, இலக்கியத்தில் பேய், பிசாசு, பூதம்

இரா. கலைக்கோவன்

பேய், பிசாசு, பூதம் என்று சொல்லும் போதே ஒரு மெல்லிய நடுக்கம் உடலில் பரவும். கண்கள் நாற்புறமும் சுழன்று, ‘ஏதுமில்லையே’ என்பதை உறுதி செய்யும். அண்மைக் காலத்தே வெளியான பேய்ப்படங்களின் பசுமையான நினைவுகளுடன் பழம் பேய்ப்படங்களின் நிழலான பின்னணியும் மனத்திரையில் ஓடும். காலங்காலமாய் அச்சம் எனும் உணர்வுடன் இணைந்து பின்னப்பட்ட இந்த மூன்று சொற்களும் மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்தே உயிர் பெற்று உலா வருவதே இதற்கெல்லாம் காரணம்.

பேய்

பேய், பிசாசு, பூதம் எனும் இம்மூன்றனுள் தமிழர் இலக்கியத்தில் பெருவழக்குப் பெற்று மிளிர்பவை பேயும் பூதமும்தான். பேய் தொல்காப்பியப் பழைமையது. பொருளதிகாரக் காஞ்சித்திணை பேயின் செயற்பாடுகள் குறித்துப் பேசுகிறது. போரில் காயப்பட்டோரை நரி முதலியன கடித்துவிடாதவாறு, அவர்தம் உயிர் தானாகப் போகுமளவும் அருகிருந்து காக்குமாம் பேய். இதை, ‘பேய் ஓம்பல்’ என்றே இலக்கியம் பாராட்டுகிறது. உயிர் நீங்கிய உடலே பேய்க்கு உணவு. அதனால்தான், இந்தக் காவல். தன் உணவைப் பிற உயிர்கள் சேதப்படுத்திவிடக் கூடாதல்லவா! உண்ட மகிழ்வில் பேய் ஆடுவதும் உண்டு. அதைப் பேய்க் குரவையாகப் பார்க்கிறது சிலப்பதிகாரம். பேய்கள் ஆடி மகிழும் போர்க்களத்தைப் படம்பிடிக்கிறது பதிற்றுப்பத்து.

சாமுண்டியின் கீழ்ப் பிணமுண்ணும் பேய்

பேய்களைச் சிவபெருமானுடன் இணைத்து மகிழ்கின்றன பத்திமைக் கால இலக்கியங்கள். அவர் சுடுகாட்டில் ஆடுபவரல்லவா! சம்பந்தரும் அப்பரும் ஆறு திருமுறைகளிலும் காட்டியிருக்கும் பேய்க்காட்சிகள், ‘பேய் வரலாறு’ எழுதுமளவிற்குத் ததும்பி நிற்கின்றன. ஆடிவரும் பேய்கள், கூடி ஓடிவரும் பேய்கள், இசைக்கருவிகளை இயக்கியவாறே பாடிவரும் பேய்கள் எனப் பதிகங்களில் இறையாடலைக் கிளர்ச்சியுடன் காட்ட சம்பந்தருக்கும் அப்பருக்கும் பேய்கள் பெருந்துணையாகின்றன. அச்சமூட்டும் காட்சிகளும் இல்லாமல் இல்லை. அது போலவே பேய் வண்ணனைகளும் பதிகங்களில் விரவிக்கிடக்கின்றன.

பேய் எப்படியிருக்கும்?

காளியுடன் பேய்கள்

நீண்டு விரிந்த செந்நிறக் கூந்தல், வேனிற் கால முருக்கமரத்தின் முற்றிய நெற்றுப் போல் கைவிரல்கள், அகலத்திறந்த வாய், கோரைப் பற்கள், குழிந்த கண்கள், சுழன்றும் சுற்றியும் வரும் நடை என்று இலக்கியப் பேய்கள் கண்காட்டுகின்றன. பேய்கள் எங்கிருக்கும், எப்போது நடமாடத் தொடங்கும் என்பதைக்கூட இலக்கியங்கள் இடஞ்சுட்டிப் பொருள் விளக்கியுள்ளன. சிவபெருமானின் மகளே பேய்த்தொழிலாட்டிதானே!

பூதம்

சங்க இலக்கியங்கள் பேய்க்கு நெருக்கமாக விளங்க, காப்பியங்களும் பத்திமை இலக்கியங்களும் பூதத்தை இமய உச்சிக்குக் கொண்டு செல்கின்றன. பாழ் மன்றத்திலும் போர்க்களத்திலும் மட்டுமே உலவும் பேய்களுக்கு மாறாகப் பூதங்கள் நகர் நடுவில் இடம்பிடித்துத் தீமைகளைக் கண்டித்தன. தவறு செய்தாரைப் பிடித்துண்ணவும் செய்தன. காவல் பூதங்களாகவும் சதுக்கப் பூதங்களாகவும் மக்களால் மகிழ்ந்து போற்றப்பட்ட அவற்றைப் படையாகக் கொண்டவரே சிவபெருமான் என்று அப்பரும் சம்பந்தரும் கொண்டாடுகின்றனர்.

பூதத்தின் தோற்றம்

​குள்ள வடிவின, பெருத்த வயிறின, சிறுகண் உடையன, இருண்டு அகன்ற வாயின, கூட்டமாய் இயங்கும் பண்பின என்று பூதங்களை வண்ணிக்கும் பதிக ஆசிரியர்கள் சிவபெருமான் ஆடும்போது அதற்குப் பாடுவதும் உடன் ஆடுவதும் கருவியிசை சேர்ப்பதும் அவற்றின் அரும்பணி என்று போற்றுகின்றனர். சிவபெருமான் பிச்சையேற்கும் பெம்மானாய் முனிவர் தவச்சாலைகளை அணுகும்போது அவரது பிச்சைக் கலத்தைத் தலையில் சுமந்து முன் நகர்பவை இவையே. இறைவனின் இத்தகு நகர் உலாக்களில் பேய்களுக்கு இடமில்லை. அவை காட்டோடு நின்றுவிடும்.

மக்கள் வழக்கில் பேயும் பூதமும்

பாடல்களில் இடம்பெற்றாற் போலவே மக்கள் உள்ளங்களிலும் நிறைந்து சிலரது பெயராகவே இவை மாறின. பேய்மகள் இளவெயினியும் பூதங்கண்ணனாரும் சங்கக் கவிஞர்கள். பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் முதலாழ்வார் மூவருள் இருவர். பூதப்பாண்டியன் மனைவி இலக்கியப் பாடல் ஈந்தவர். பேயுரு எடுத்துத் தம்மை பேயார் என்று அழைத்துக் கொண்டவர் காரைக்காலம்மை.

சிற்பக் காட்சிகளாய்ப் பேயும் பூதமும்

குடைவரைகளின் நுழைவாயிலான முகப்புகளின் தூண்கள் தாங்கும் கூரையுறுப்புகளில் ஒன்றுதான் எழுதகம். சிற்ப நூல்கள், ‘வலபி’ என்று குறிப்பிடும் இந்த வளைமுகப் பகுதியைத்தான் தங்கள் எண்ணம் போல் கைத்திறன் காட்டும் இடமாய்த் தேர்ந்தனர் சிற்பிகள். தமிழ்நாட்டிலுள்ள 106 குடைவரைகளில் மிகச் சிலவற்றிலேயே எழுதகம் உள்ளது. பல்லவர்ப் பகுதியில் குறிப்பிடத்தக்கது சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை. கொங்குப் பகுதியில் முன்னணியில் நிற்பது கரூர்த் தான்தோன்றீசுவரம். பாண்டியர் பகுதியின் குறிக்கத்தக்க எழுதகம் உள்ள இடமாய் ஒருகல் தளியான கழுகுமலை வெட்டுவான் கோயிலைக் குறிக்கலாம். சோழர்கள் இந்த எழுதகக் கலையைத் தங்கள் கற்றளிகளில் போற்றி வளர்த்து உச்சத்திற்குக் கொண்டு சென்றனர்.

வெட்டுவான்கோயில் கலைப் பூதங்கள்

பலவாய்ப் பூதங்களும் ஒரு சிலவாய்ப் பேய்களும் என இந்த எழுதகக் காட்சிகள் அமைந்தன. மனித வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளை இவற்றின் வழிச் சிற்பிகள் வரலாறாக்கினர். தமிழ்நாட்டில் அன்று வழக்கிலிருந்த இசைக்கருவிகளை இங்குப் பூதங்கள் இசைக்கக் காணலாம். போர்முறைகள், ஆடல்வகைகள், ஒப்பனை, ஆடை- அணிகலன்கள், தலையலங்காரம், அன்றாட நடைமுறைகள், உடற்பயிற்சிகள், குறும்புகள், விளையாட்டுகள், பறவை-விலங்கு வளர்ப்பியல் என இங்குக் காட்டப்பட்டிருக்கும் தமிழர் வாழ்வியல் இன்றளவும் முறையான ஆய்வுகளைச் சந்திக்கவில்லை.

புள்ளமங்கைப் பூதங்கள்

எழுதகத் தொடராக மட்டுமல்லாது, தனிச் சிற்பங்களாகவும் அளவில் பெரியனவாகவும் அமையும் பெருமை பூதங்களுக்கே கிடைத்தது. பரங்குன்றத்து இராவண அருள்மூர்த்தித் தொகுதிப் பூதங்கள் பேரளவின. கயிலையை அசைக்கும் இராவணனை எதிர்க்கும் போர்க்கோலத்தின. உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் தாங்குதளப் பூதம் நரம்பிசைக்கருவியின் நயம் காட்ட, புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் முகமண்டபக் கூரைப் பூதங்களோ வீணையும் தாளமும் சிரட்டைக்கின்னரியும் உடுக்கையும் இயக்கும் அழகின. எழுவர்அன்னையருள் ஒருவரான சாமுண்டியின் சிற்பங்களிலும் காளி அரக்கர்களை அழிக்கும் படப்பிடிப்புகளிலும் பேய்கள் உடனிருப்பாய் உள்ளன. திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், திருத்தணி வீரட்டானேசுவரம் என இவை காட்சிதரும் இடங்களும் கண்களை நிறைப்பவையே.

கல்வெட்டுகளில்

பூதர், பூதபலி எனும் தொடர்களால் பூதமும், ‘விழிகட்பேய்’ என்ற தொடர்வழிப் பேயும் கல்வெட்டுகளில் கண்காட்டினாலும் இலக்கிய ஆளுகை போல் பெருவழக்குப் பெறாமை குறிப்பிடத் தக்கது.  

பிசாசு

பேய், பூதம் சரி. பிசாசு?அகராதிகள் சில பேயே பிசாசு என்கின்றன. பழைய இலக்கியங்களில் கலித்தொகை மட்டுமே பிசாசைச் சுட்டுகிறது. திருக்கோளக்குடிக் கல்வெட்டொன்றும் பிசாசைக் காட்டுகிறது. அந்த ஊர் ஊருணிக்குச் சோழர் காலத்தில் மூவேந்தன் என்னும் பிசாசின் பெயரை மக்கள் சூட்டியிருந்தனராம். நிருவாகத்தால் சுரங்கமாய்க் கருதப்பட்ட்கோயில் நிலவறையில் துணிந்து இறங்கி இந்தக் கல்வெட்டைக் கண்டறிந்தவர் பேராசிரியர் மு. நளினி. நல்லவேளை அவர் இறங்கியபோது அந்த நிலவறையில் கல்வெட்டு மட்டுமே இருந்தது. மூவேந்தன் இல்லை.

பனைமலை ஓவியம் பகிரும் உண்மைகள்

​அன்புள்ள வாருணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மடல். உன் பணிகள் வழக்கம்போல் இருக்குமென நம்புகிறேன். இல்லத்தில் அனைவரும் நலந்தானே. 6.8.2023 ஞாயிறன்று இந்து தமிழ் திசை இதழில், ‘ஒளிரும் பல்லவ ஓவியம்’ என்ற தலைப்பில் திரு சு. தியடோர் பாஸ்கரன் எழுதியிருந்த பனைமலை ஓவியம் குறித்த கட்டுரை படித்தேன். 90களில் நீயும் நானும் மேற்கொண்ட பனைமலைப் பயணம்தான் நினைவில் நிழலாடியது. இராஜசிம்மப் பல்லவரின் அந்த மணற்கல் தளியின் அழகில் மயங்கிப்போய் வெளிமண்டபத் தூணில் சாய்ந்து அமர்ந்தவாறே அவரது கற்றளிகளைப் பற்றி நாம் பேசியதெல்லாம் எனக்குள் மறுபதிவாய் மலர்ந்தன. அந்த நினைவு உலாவைத் தடுப்பது போல, ஒளிரும் பல்லவ ஓவியக் கட்டுரையில் கண்சிமிட்டிய சிலவற்றை உன்னிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

​காலந்தோறும் இருந்த தமிழர் ஓவியக்கலை பேசுமிடத்துக் கட்டுரையாசிரியர், ஓவியச் செந்நூலைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவதாக எழுதியிருந்தார். சிலப்பதிகாரம் நாட்டிய நன்னூலைக் குறிப்பிடுவது நாம் அறிவோம். ஓவியச் செந்நூல்? பனைமலையில் அதைப் பற்றியும் நாம் பேசியது நீ மறந்திருக்கமாட்டாய். சாத்தனாரின் இணையற்ற காப்பியமான மணிமேகலையில், ஊர் அலர் உரைத்த காதையின் 30-31ஆம் அடிகளே ஓவியச் செந்நூலைக் குறிக்கின்றன.

‘நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
வோவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்’ என அவ்வடிகள் செந்நூலை மட்டுமா சுட்டுகின்றன, அதற்கான உரைநூலையும் அல்லவா குறிக்கின்றன. இது போல் ஒவ்வொரு துறைசார்ந்தும் இருந்த புரவிநூல், மடைநூல், தேர்நூல், சிற்பநூல் முதலியவற்றிற்கும் உரைநூல்கள் இருந்திருக்கலாமோ என்று கருதுமாறு, ஓவியச்செந்நூலின் உரைநூல் கிடக்கை கருத்துக்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது வாருணி.

அவிநயத்தின் நான்கு களங்களான நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்கல் ஆகியவற்றையும் அவற்றின் மாறுபட்ட நிலைகளையும் அறிந்து தெளிவதற்கான வழிகாட்டு நூலாக இந்த ஓவியச்செந்நூலை அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுவது நோக்க, அவர் காலம்வரை இந்நூலின் பயன்பாடு அறியப்பட்டிருந்ததும் தெளிவாகிறதல்லவா!

​முதலாம் மகேந்திரவர்மரின் மாமண்டூர்க் கல்வெட்டுச் சுட்டும் விருத்தி, தட்சிண, சித்ர எனும் சொற்கள் கொண்டு, தட்சிணசித்திரமெனும் ஓவிய உரைநூல் ஒன்றை மகேந்திரவர்மர் எழுதியுள்ளதாகவும் வர்ணசதுர்த்த என்ற கல்வெட்டுச் சொல்லாட்சி மகேந்திரரின் ஓவிய ஆற்றலை வெளிப்படுத்துமாறு உள்ளதாகவும் டி.வி. மகாலிங்கம், மயிலை சீனி. வேங்கடசாமி, தி.நா. இராமச்சந்திரன் ஆகிய வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ளமை நினைக்கத்தத்தது. சித்திரகாரப்புலி என்று மகேந்திரர் தம்மைப் பெருமையுடன் அழைத்துக்கொள்வது எத்தனை பொருத்தம் என்று இந்தக் கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளைப் பரிமாறிப் பனைமலையில் நாம் பேசிக்கொண்டதை நீ மறந்திருக்கமாட்டாய். இலக்கியமில்லாத வரலாற்றுப் பார்வையும் வரலாறு தெரியாத இலக்கிய நுகர்வும் முழுமையற்ற கருத்து முடிவையே தரும் என்பது குறித்தும் நாம் விவாதித்ததை நினைவூட்டுகிறேன் வாருணி.

​திரு. தியடோர் தம் கட்டுரையில் சித்திரகாரப் புலியாகச் சிம்மவிஷ்ணுவைக் குறிப்பிட்டிருக்கிறார். முதலாம் மகேந்திரர்தான் சித்திரகாரப் புலியாக அறியப்பட்டார் என்ற கல்வெட்டு உண்மையைப் பள்ளிப் பாடநூல்களே பகிர்ந்துகொள்ளும்போது தியடோர் அந்தப் பெருமையைச் சிம்மவிஷ்ணுவுக்கு மாற்றியிருப்பது துன்பமானது.

​பனைமலைக் கற்றளியின் வடக்குச் சாலைத் திருமுன் மேற்குச்சுவரில் துணுக்குகளாய் எஞ்சியிருக்கும் சிவபெருமானின் ஆடலும் வடக்குச் சுவரில் தப்பிப் பிழைத்திருக்கும் உமையின் தோற்றமும் நம் கண்களை நிறைத்தாற் போலவே திரு. தியடோரின் கண்களையும் கவர்ந்தன போலும். இரண்டைப் பற்றியும் அவரது ‘ஒளிரும் பல்லவ ஓவியம்’ மெல்லப் பேசுகிறது.

​வண்ண வரைவாய் விளங்கி இன்று சிறுசிறு பகுதிகளாய்த் தேடிக் காணும் நிலையிலுள்ள ‘நடராஜர்’ ஓவியத்தை அவரது கட்டுரையின் இரண்டாம் பத்தி, ‘சிவபெருமான் ஆடலை சந்தியாபாணி என்பர் வல்லுநர்’ என்று அடையாளப்படுத்துகிறது. ‘வலது காலைத் தரையில் வைத்து இடது காலை மண்டியிட்டு இடது கையைத் தலைக்கு மேல் வைத்து வலது கையை மார்புக்குக் குறுக்கே வீசி ஆடும் சிவன்’ என்று சிவபெருமானின் இந்த ஆடற்கோலத்தை வண்ணிப்பதுடன் ‘இந்த நடராஜரைச் சிற்ப வடிவில் மாமல்லபுரத்திலும் கயிலாசநாதர் கோயிலிலும் காணலாம்’ என்றும் கூறியிருக்கும் தியடோர், ஆடலை அடையாளப்படுத்துவதில் வல்லுநர்களைச் சார்ந்ததால் தவறியிருக்கிறார். வல்லுநர்கள் யார் என்பதை அவர் குறித்திருந்தால், அவ்வல்லுநர்கள் ஏன் அத்தகு முடிவை மேற்கொண்டனர் என்பதை அவர்களிடமே கேட்டு அறிந்திருக்கலாம். தியடோர் எழுதியுள்ளாற் போன்ற காலமைப்புகளை இன்று பனைமலை ஓவியத்தில் காணக்கூடவில்லை என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எஞ்சியிருக்கும் சிதறல்களைக் கூட்டி சிவபெருமானின் அந்த ஆடல் தோற்றத்தை பரதரின் நாட்டியசாத்திரம் பேசும் 108 கரணங்களுள் ஒன்றான குஞ்சிதமாக நாம் அடையாளப்படுத்தியதை நினைத்துப்பார்.

குஞ்சிதகரணம்

​இராஜசிம்மப் பல்லவரின் கைவண்ணமாக அவர் கட்டமைத்த பல கோயில்களில் இக்குஞ்சிதகரணம் பல அளவுகளில், கோயிலின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ளமை நான் விளக்க, நீ வியந்து கேட்டதை மறந்திருக்கமாட்டாய். இராஜசிம்மரின் கோயில்களில் குஞ்சிதம் போலவே சிவபெருமானின் ஊர்த்வதாண்டவமும் இருக்கையில், காலமைப்புத் தெளிவாகத் தெரியாத இறைவனின் இந்த ஆடல் தோற்றத்தை எப்படிக் குஞ்சிதமாகப் பிரித்தறிகிறீர்கள் என்று நீ கேட்டாய்.

​நாம் பார்த்த ஓவியக்காட்சியில் சிவபெருமானின் வலமுன் கை வேழக்கையாக நீண்டிருக்கும் அழகையும் அவரது மார்பின் வலப்பகுதி அமைப்பையும் உனக்கு விளக்கி, இராஜசிம்மர் பதிவு செய்திருக்கும் சிவபெருமானின் ஊர்த்வ, குஞ்சித கரணத் தோற்றங்களில் குஞ்சிதர் மட்டுமே முன்கையை வேழக்கையாக வீசியிருப்பதையும் ஊர்த்வர் அக்கையை அனைத்துச் சிற்பங்களிலும் பதாகத்தில் கொண்டிருப்பதையும் சுட்டி நான் பேசியபோது நீ பூரித்ததும், ஆய்வு எத்தனை நுட்பமாக அமையவேண்டும் என்பதை அன்று புரிந்துகொண்டதாகக் கூறியதும் என் உள்ளம் நிறைத்தது வாருணி.

​இறைவனின் ஆடலைக் காண்பவராய் ஒசிந்து நிற்கும் உமையின் தோற்றத்தில் திரு. தியடோர் தம்மை இழந்தார் போலும். அதனாலோ என்னவோ, ‘பார்வதியின் தலையை மஞ்சள் நிற கிரீடமகுடம் அணிசெய்கிறது’ என்று எழுதியுள்ளார். கிரீடமகுடம் தலையை முழுமையாக மூடுவதால் அதில் முடிக்கற்றைகள் தெரியாது. பல்லவர் கால விஷ்ணு, வைணவி சிற்பங்கள் கிரீடமகுடம் பெற்றுள்ளன. ஆனால், பல்லவர் கால உமைச் சிற்பங்களில் சடைத்திரள்கள் ஆங்காங்கே முடியப்பெற்றுக் கூம்பி உயர்வதையே பார்க்கமுடிகிறது. சிவபெருமான், நான்முகன் சிற்பங்களில் அமையும் சடைமகுடத்தினின்று உமையின் இத்தலையலங்காரம் சற்றே மாறுபட்டுள்ளது.

​சிற்பச் செந்நூலில் வை. கணபதி சிற்பி, சிற்பங்களுக்கு அமையும் தலையலங்காரங்களைக் குறிக்கையில், ‘கேசபந்தம்’ என்ற முடியமைப்பைப் படங்களுடன் விளக்கியிருப்பார். இராஜசிம்மப் பல்லவர் கோயில்களில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான உமைச் சிற்பங்களின் தலையலங்காரம் இக்கேசபந்த அமைப்பையே ஒத்துள்ளமையால் பனைமலை உமையின் முடியமைப்பைச் சடைமகுடமாகக் கொள்வதினும் கேசபந்தமாகக் கொள்வதுவே பொருந்தும். எப்படியிருப்பினும், நீ அதைக் கேசபந்தமாகவோ, சடைமகுடமாகவோ கொள்ளமுடியுமே தவிர கிரீடமகுடமாக அடையாளப்படுத்த முடியாது.

​திரு. தியடோர் தம் கட்டுரையின் இறுதியில், ‘மாமல்லபுரம் தருமராஜரதம், எல்லோரா கைலாசர் குடைவரை, காஞ்சி கயிலாசநாதர் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் ஆகிய எல்லாவற்றிலும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள். விமானங்கள் ஒரே மாதிரி உள்ளன’ என்று எழுதியுள்ளார். உபானத்திலிருந்து தூபி வரையிலான இறையகத்தின் முழுமையைச் சுட்டும் கலைச்சொல் விமானம். (‘The Shrine from upana to stupi – base to final is vimana’ K. R. Srinivasan, Cave Temples of the Pallavas, p. 189.) தியடோர் சுட்டியுள்ள நான்கு கோயில்களும் ஒன்று போல் அமைந்த விமான அமைப்புக் கொண்டவை அன்று. ஒன்றுக்கொன்று மாறுபட்ட விமான அமைப்புக் கொண்ட அவற்றுள், காஞ்சி கயிலாசநாதர் தவிர்த்த பிற மூன்றும் ஒருகல் தளிகள்.

​காஞ்சிபுரம் கயிலாசநாதர், கருவறைச் சுவர்களுக்கிடையில் உள்சுற்றுப் பெற்ற நாற்றளக் கலப்புத் திராவிட விமானம். தமிழ்நாட்டின் முதல் சாந்தார விமானமான அதன் கீழ்த்தளப் பத்திகள் தாய்ச்சுவரினின்று முன்னிழுக்கப்பட்டு ஏழு துணை விமானங்களாகி இறையகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் புதுமைக் கட்டுமானமாக உருவாகி அங்காலயம் எனப் பெயர்பெற்றது.

​பிற மூன்றும் ஒருகல் தளிகள் என்றாலும், ஒவ்வொன்றின் விமானமும் மாறுபட்ட அமைப்பின. மாமல்லபுரம் தருமராஜ ரத விமானம் அதன் மூன்று தளங்களிலும் இறையகம் கொண்ட மாடிக்கோயில். எல்லோரா கயிலாசநாதர் திரு. தியடோர் தம் கட்டுரையில் குறித்துள்ளாற் போல் குடைவரையன்று. அதன் விமானம் கலப்பு முத்தளத் திராவிடமாகச் செதுக்கப்பட்ட ஒருகல் தளி. கழுகுமலை வெட்டுவான் கோயில் நிறைவுறாத ஒருகல் தளி. சிகரம், கிரீவம், இரண்டாம் தளம், கீழ்த்தளாரம் மட்டுமே உருவான இவ்விமானம் இப்போதிருக்கும் நிலையில் இருதளக் கலப்புத் திராவிடமாக அறியப்படும்.

​ஒன்று போல் அமைந்த விமானங்களாகத் தியடோர் சுட்டியுள்ள நான்கில் ஒன்று மாடிக்கோயில். ஒன்று நிறைவுறாத விமானம். காஞ்சி கயிலாசநாதர் ஏழு துணை விமானங்கள் முதன்மை விமானத்துடன் இணையப்பெற்ற பெருங்கற்றளி. எல்லோரா கயிலாசநாதர் இவற்றினின்றும் மாறுபட்ட முத்தள ஒருகல் தளி. இந்நான்கிலும் உள்ள ஒரே ஒற்றுமை இவற்றின் திராவிட சிகர அமைப்புதான். எண்முகம் பெற்ற இச்சிகரமும் நான்கு விமானங்களிலும் மாறுபட்ட அழகூட்டல்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

​கோயிற்கலை சார்ந்த செய்திகளை மக்களுடன் பகிர்ந்துகொள்வது சிறப்பாகும். அதனால், கோயில்களுக்குச் செல்வோர் அவ்வளாகத்தில் எதைப் பார்க்கலாம், அதை எப்படிப் பார்க்கலாம், அதிலிருந்து பெறக்கூடியதென்ன எனப் பல வழிகாட்டல்களைப் பெறமுடியும். அவரவர் பார்வை பொறுத்து பார்ப்பனவற்றிலிருந்து வரலாறும் பெறக்கூடும். அதனால், கோயிற்கலைக் கட்டுரைகளை எழுதும் பெருமக்கள் தாம் எழுதும் செய்திகளில் உரிய தெளிவு பெற்று எழுதுதல் நன்றாகும்.

​தியடோரின் கட்டுரையால் மீண்டும் பனைமலைப் பயணம் அமைந்தது. நாம் அங்கிருந்தபோது அளவுகோல் ஒன்றைக் கண்டறிந்தமை உனக்கு நினைவிருக்குமென நம்புகிறேன். ஓரிரு மாதங்களுக்கு முன் நானும் பேராசிரியர் நளினியும் அல்லூர் நக்கன் கோயிலில் மீளாய்வு மேற்கொண்டோம். கோயில் பெருமண்டப மேற்குச்சுவரில் அடர்த்தியான சுண்ணப்பூச்சின் பின் மறைந்திருந்த அருமையான தமிழ்க் கல்வெட்டை ஆய்வின்போது நளினி கண்டறிந்தார். எத்தனை முறை பார்த்த கோயில் அது. நீயும் நானும்கூட ஓரிருமுறை அக்கோயிலில் ஆய்வு செய்துள்ளோம். என்றாலும், நளினியின் கண்களில் காட்சியாகவேண்டும் என்பதற்காகவே அது காத்திருந்தது போலும். ‘ஒற்றிமதுராந்தகன் என்பது இம்மண்டபம். எடுப்பிச்சான் முனைச்சுடர் விரையாச்சிலை’ என்ற அக்கல்வெட்டால், கொடும்பாளூர் வேளிர் அரசரான ஒற்றிமதுராந்தகன் பெயரால் அப்பெருமண்டபம் வணிகர் முனைச்சுடர் விரையாச்சிலையால் எடுப்பிக்கப்பட்ட வரலாறு வெளிச்சமானது.

​அப்பெருமண்டபத்தின் மேற்குச்சுவரில் பதிவாகி, பின்னாளில் நேர்ந்த இடைநாழிகை இணைப்பால் இரு பிரிவுகளாகி, வெளிப்பிரிவு மட்டுமே இந்தியக் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்ட நிலையில், அதன் உள்பிரிவையும் அன்றைய ஆய்வின்போது நளினியின் கண்கள் தேடிப்பிடித்தன. கல்வெட்டுத் தொகுதியில் எட்டு வரிகளுடன் மிகவும் சிதைந்துள்ளது என்ற அடிக்குறிப்புடன் பதிவாகியுள்ள கண்டராதித்த சோழரின் அந்தக் கல்வெட்டை முழுமையாகப் படித்தறிந்தபோது, நக்கன் கோயிலில் முனைச்சுடர் விரையாச்சிலை உமையன்னையின் உலாத்திருமேனியை அமைத்து அதன் வழிபாட்டிற்கும் படையலுக்கும் நிலமளிக்க, அரசர் ஒற்றிமதுராந்தகர் ஆணைவழி ஊரார் அந்நிலத்தை அளந்து கொடையைப் பதிவுசெய்த வரலாறு கிடைத்தது.

​வாருணி ஒரு பார்வையில் கோயில்கள் முழு வரலாற்றையும் தருவதில்லை. தேடத்தேடத்தான் அந்தத் தேடலின் தகைமை தெரிந்துதான் கதவுகள் திறக்கின்றன. காட்சிகள் தெரிகின்றன. அல்லூர் ஓர் எடுத்துக்காட்டு. பார்க்கச் சென்றபோது பார்த்த பார்வைகள் வேறு, நூலாக்கம் கருதி எதுவும் விடுபடலாகாது என்ற நோக்கில் தேடல் விரிந்தபோது திரைகள் ஒவ்வொன்றாய் விலகி வரலாற்றின் ஒளி வாழ்க்கையை நிறைத்தது. ஆய்வு வெறும் செயற்பாடன்று வாருணி. அது உள்ளத்தை நிறைக்கும் உழைப்பு.

​அன்புடன்,

​இரா. கலைக்கோவன்.