‘எனைத்தானும் நல்லவை கேட்க’- திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் 

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் ‘எனைத்தானும் நல்லவை கேட்க நிகழ்ச்சியைத் தொடர்ப் பொழிவாக 02.07.24 செவ்வாய்முதல் டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கி வருகிறார். செவிவழி வரும் செய்திகளை அறிவுக்கான உணவு என்று அறிஞர்கள் கூறுவதைச் சுட்டி, அந்த அறிவை நெறிசார்ந்து வாழ்ந்தவர்கள் வாழ்க்கைவழி கேட்போர் பெற்றிட தம் பொழிவால் உதவுகிறார். அவ்வகையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வரலாறான பெருமக்களையும் அவர்தம் சீரிய பணிகளையும் சுவைமிகு செய்திகளாக நற்றமிழில் கேட்டு மகிழலாம்.

பொழிவு 1 – 02.07.24

திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள, பாடல்பெற்ற திருத்தலமான திருவெறும்பியூர்க் கோயிலைக் கற்றளியாக மாற்றிய செம்பியன் வேதிவேளானைப் பற்றியது இப்பொழிவு. செம்பியன் மாதேவியாரின் கணவர் கண்டராதித்த சோழர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த செம்பியன் வேதிவேளானின் கோயில்பணிகளும் அவற்றால் விளைந்த நன்மைகளும் குறித்துக் கிடைக்கும் கல்வெட்டுச் செய்திகளைப் பொழிவின்மூலன் அறிந்து கொள்ளலாம்.

பொழிவு 2 – 09.07.24

முதலாம் இராஜராஜரின் அரண்மனையில் பணியாற்றிய பணிப்பெண் குழுக்களில் பெரியவேளத்தைச் சேர்ந்த கற்பகவல்லி, சிராப்பள்ளி முசிறிச் சாலையிலுள்ள திருவாசி மாற்றுரைவரதீசுவர்பால் அளவற்ற பற்று கொண்டிருந்தார். இறைவனின் மகளாகத் தம்மைக் கருதிய கற்பகவல்லி, அறக்கட்டளைகள்மூலம் வழங்கிய கோயில் கொடைகள் பற்றி இப்பொழிவில் பேசுகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

பொழிவு 3 – 16.07.24

‘சுங்கம் தவிர்த்த சோழர்’ என்று கல்வெட்டுக்கள் கொண்டாடும் முதற் குலோத்துங்கரின் 83 கல்வெட்டுக்கள் திருவரங்கத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரங்கத்து மடைப்பள்ளிக்கு நேர்ந்த சிக்கலான இடர்ப்பாடுகளும் அதை நேர்செய்ய குலோத்துங்கர் ஆட்சி அரங்கத்துடன் கையிணைத்தெடுத்த போர்க்கால நடவடிக்கைகளும் இப்பொழிவில் பேசப்பட்டுள்ளன.

பொழிவு 4 – 23.07.24

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் உத்தமநாதர் கோயில் மற்றும் திருஇறையான்குடி என்று முதல் இராஜராஜர் காலத்தில் அழைக்கப்பெற்ற விளாங்குடி திருவன்னியுடையார் கோயிலில், சோழர் காலத்தில் நிகழ்ந்தேறிய இரண்டு அருமையான செயற்பாடுகளைப் பற்றியது இப்பதிவு.

பொழிவு 5 – 30.07.24

சோழப் பேரரசின் விரிவாக்கத்திற்குழைத்த பழுவேட்டரையர்கள் என்ற சிற்றரச மரபினர் ஏறத்தாழ 139 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த இடம் அரியலூர் மாவட்டத்திலுள்ள பழுவூர். மேலப்பழுவூர் கீழப்பழுவூர் என்று இரு பிரிவுகளாக வி̀ளங்கிய இவ்வூரில், பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தெற்றிப் பெரியானைக் கீழப்பழுவூர் கோயில் கல்வெட்டொன்று அறிமுகப்படுத்துகிறது. திருமழபாடியிலும் தவத்துறைக்கருகிலுள்ள நத்தமாங்குடியிலும் கிடைக்கும் கல்வெட்டுக்கள்வழி தெற்றிப் பெரியானைப் பற்றிய அரிய தகவல்களை வழங்குகிறது இப்பொழிவு.

 

‘எனைத்தானும் நல்லவை கேட்க’- வானொலிப் பொழிவு

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ நிகழ்ச்சியில், இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் சார்ந்த செய்திகளைத் தொடர்ப் பொழிவாக டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கி வருகிறார். முதல் பொழிவு 03.10.23 திங்களன்று ஒலிபரப்பானது. சுவையான வரலாற்றுத் தகவல்களைக் கேட்டு மகிழ, திங்கள்தோறும் காலை 06.10 மணிக்கு இணையலாம்.

பொழிவு 1 – 03.10.23

சங்க இலக்கியங்கள் குறித்தும், குறிப்பாக மிகுதியாகப் பேசப்படாத கீழ்க்கணக்கு நூல்கள் பற்றியதுமாக முதல் பொழிவு அமைந்தது. அதன் பதிவை இங்கு கேட்கலாம்.

பொழிவு 2- 10.10.23

பூதன் சேந்தனாரின் இனியவை நாற்பது காட்டும் கல்விச் சிந்தனைகளைப் பற்றியது இந்தப் பொழிவு. வயிற்றுப் பசிக்குக் கொள்ளப்படும் உணவு உயிர்காப்பதுபோல, செவிகளில் நிறையும் கருத்துக் குவியல் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

பொழிவு 3- 17.10.23

இந்த வாரப் பொழிவு, கீழ்க்கணக்கின் மற்றொரு நூலான விளம்பி நாகனாரின் நான்மணிக்கடிகை கூறும் புகழ் வளர்த்து வாழ்வதற்கான வழிகள் பற்றியதாக அமைந்தது. முதலில், ‘பிறர்க்களித்து உண்பதால் புகழ் வளரும்’ என்று கடிகை இயம்புவதை வள்ளுவத்தோடு இணைத்து விளக்கும் டாக்டர் இரா. கலைக்கோவன், நூல் காட்டும் வாழ்வின் எளிய வழிமுறைகளை “புகழை விதை- அதற்கு அறம் போற்றும்; அறம் நிலைப்பட வாழ- சினம் விடு”- என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறார்.

பொழிவு 4- 25.10.23

கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நல்லாதனார் இயற்றிய திரிகடுகத்தின் சிறப்புக்களைச் சுட்டியது இந்த வாரப் பொழிவு. ‘ஒவ்வொரு பாடலும் வாழ்விற்குத் தேவையான மூன்று நல்கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதால் பெயர்ப் பொருத்தம் இனிதே அமைந்தது’ என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். எடுத்துக்காட்டாகக் கடுகப் பாடல்களில் ஒன்று, நன்மைப் பயவாத மூன்றாய்- கணக்காயர் இல்லாத ஊரையும்; பிணக்கறுக்கும் மூத்தார் இல்லாத அவையையும்; பகிர்ந்துண்ணும் மனமில்லாத பக்கத்து வீட்டுக்காரரையும் காட்டுவதைச் சுவைபட விளக்குகிறார்.

பொழிவு 5- 31.10.23

முக்கடுகத்தின் 43ஆவது பாடல் கூறும் வாழ்வின் கோட்பாடுகளான- அ) வாயின் அடங்குதல்; ஆ) மாசற்ற செய்கை; இ) பொய்யற்ற நெஞ்சம் கொள் ஆகியன பற்றியது இந்தப் பொழிவு. “இதழ் மூடிக்குள் பல் அடுக்குகளின்பின் பக்குவமாய்ச் சிறை வைக்கப்பட்டிருந்தபோதும் நா அடங்கி இருப்பதில்லை. வாய்ப்பமையும் போதெல்லாம் வெளிப்பட்டு வேதனைகளை விதைத்துவிடுகிறது,” என்று அடங்காத நாவின் விளைவுகளை அழகாக விளக்குகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.