
அன்புள்ள வாருணி, நலந்தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னோடு பேச வாய்த்துள்ளது. எழுத்துப் பேச்சாகுமா என்று நீ கேட்கலாம். உன்னோடு நிகழும் எதுவும் எனக்கு உரையாடல்தான். நண்பர் ஒருவர் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பற்றி நூல் உருவாக்குவதாகவும் அதில் என் பணியாய்ச் சில கட்டுரைகள் அமையவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் தந்தை மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையிலும் அம்மா பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையிலும் பணியாற்றிய காலத்து ஏறத்தாழ ஐந்தாண்டுகள் என் பள்ளிப் பருவ வாழ்க்கை மதுரையில்தான்.
மீனாட்சிக் கோயில் திருவள்ளுவர் மன்றத்தில் அப்பாவை அடிக்கடிப் பேச அழைப்பார்கள். அருமையான மலை வாழைப்பழம் உண்ணக் கிடைக்கும் என்பதால் நான் தவறாது உடன் செல்வேன். அந்த வயதில் கோயில் புரிந்ததில்லை என்றாலும், வளாகத்தில் சுற்றாத இடமில்லை. பொற்றாமரைக் குளமும் புதுமண்டபமும் இசைத்தூண்கள் உள்ள சுற்றுவெளியும் என்னால் மறக்கவே முடியாத விளையாட்டுக் களங்கள்.
1959இல் அப்பா சென்னைப் பல்கலைக்கு வந்தார். மதுரைத் தொடர்பு அன்றோடு முடிந்து சென்னை வாசியானேன். மருத்துவம் முடிக்கும்வரை சிங்காரச் சென்னைதான் என்னை வடிவமைத்தது. காதலும் திருமணமும் கண்மருத்துவப் பணியும் என்னைத் திருச்சிராப்பள்ளிக்கு நகர்த்தின. 1975இல் இருந்து இந்தக் காவிரி மண்தான் எனக்குள் கலை வளர்த்து வருகிறது. உறையூர்ப் பஞ்சவர்ணசாமி கோயிலில் நான் பார்த்து வியந்த சைக்கிள் சிற்பத்தின் வடிவில் வந்த வரலாறு என் பயணம் மாற்றிப் பாதையைத் திருப்பியது. கோயில்களோடு கையிணைத்த பிறகுதான் எது வரலாறு என்பதே எனக்குத் தெளிவானது.
வாருணி, எதையோ சொல்லத் தொடங்கி எங்கோ போய்விட்டேன். நண்பரின் மதுரைக் கோயில் நூலுக்கு எழுத ஒப்புக் கொண்டதும், அக்கோயிலில் ஒலி, ஒளிக் காட்சி அமைக்கக் கருதிய அரசின் வேண்டுகோளேற்று நானும் பேராசிரியர் மு. நளினியும் அங்குத் தொடராய்வுகள் மேற்கொண்டமை நினைவுக்கு வந்தது. என் எண்ணவோட்டம் அறிந்தவராய் நளினி கணினித் தொகுப்புகளைக் கண்முன் நிறுத்தினார். ஒவ்வொரு காட்சியும் என்னை எழுதத் தூண்டின.
மதுரையைப் பற்றி எவ்வளவோ கட்டுரைகளும் நூல்களும் வந்திருந்தபோதும் பார்க்காமல் விட்டதும் சொல்லாமல் போனதும் கோயில் முழுவதுமாய் நிறைந்திருப்பதை உணர்ந்தேன். எழுத நினைத்ததுமே நினைவில் நிறைந்தவர் கண்ணன் விக்கிரமன்தான். அவரது ஆசிரியத்தில் வெளிவரும் இலக்கியப் பீடத்தில் ஒரு தொடராக எழுத அனுமதி கேட்டேன். ‘உடனே தொடங்குங்கள்’ என்று உள்ளம் பூரித்தார் கண்ணன். தந்தையைப் போலவே துடிப்பான செயற்பாடுகள்.
வாருணி, ஒரு கோயிலின் சிற்பங்கள் குறித்து ஓர் இதழில் தொடராக எழுதப்போவது இதுவே முதல் முறை. என் பார்வைகளின் விளைவான படப்பிடிப்புகளை உன்னோடு பகிர்ந்து கொள்வது எப்போதுமே எனக்குப் பிடித்தமானது. உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்வுகளை, அவை வரலாறு தொட்டே வளர்ந்தபோதும் நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்திக் களிப்பது சுகந்தானே.
சம்பந்தரால், ‘கூடல் ஆலவாய்’ எனப் போற்றப்படும் இக்கோயில் வளாகத்திலுள்ள மண்டபங்கள் பலவாகும். அவற்றுள் மூன்று மண்டபங்கள் அவற்றின் வாயிலைத் தழுவியுள்ள விளக்கு மாலைகளால் சிறப்புப் பெறுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகளில் தீபமாலைகளாகச் சுட்டப் பெறும் இந்த அகல் அடுக்கிய அழகுத் தோரணங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கின்றன.
மீனாட்சிக் கோயிலின் சிற்பக்களஞ்சியமாக விளங்கும் சிறந்த மண்டபங்களில் கம்பத்தடி மண்டபமும் ஒன்று. மையப் பகுதிக் கூட்டுத்தூண்கள் ஒரு சதுரமாக வடிவமைக்கும் காட்சிக் கூடத்தின் முன் இந்த அகல்தோரணம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கீர்த்திமுகத் தலைப்புடனான மகர திருவாசியில் மூன்றடுக்கு அகல்கள். அவற்றைத் தழுவி மேலடுக்காய் இலை போல் மதலைகள். தோரணத் தலைப்பில் நெற்றிச்சுட்டிப் போலத் தொங்கல்.
இந்த மகரத்திருவாசியை இருபுறத்தும் தாங்கும் தூண்களிலும் அகல் வரிசைகள். தாங்கலின் மேற்பகுதியில் விரிந்த ஊமத்தம்பூவாய் அழகிய நாணுதல்கள். அவற்றின் கீழே தாவும் யாளிகள். தாங்கலின் கீழ்ப்பகுதியிலோ, பக்கத்திற்கு ஒருவராகக் கருவிகளுடன் காவலர். இந்தக் கம்பத்தடித் தோரணத்தின் வலப்புறம் மலர்ப் பதக்கங்களுடன் பொதுக்காலம் 1654 ஜெய ஆண்டு மாசி மாதம் 12ஆம் நாள் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை நம் பேராசிரியர் நளினிதான் கண்டறிந்து படித்தார்.
விசுவநாத நாயக்கர் மரபினரான திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகக் குப்பையாண்டிச் செட்டியார் எனும் பெரியவர், ‘புவனேசுவர விளக்கு’ என்ற பெயருடன் இந்த மகர தோரண விளக்கைச் செய்தளித்திருப்பது கல்வெட்டால் தெரிய வந்தது. இந்தத் தோரணம் கோயிலில் அமையத் துணை இருந்தவர் அப்போது இங்குப் பாரபத்தியமாகப் பணியிலிருந்த நாவாயி ஆனந்த வீரப்பச் செட்டியாராம்.
இதைவிடச் சிறப்பானவை வீரவசந்தராயர், மீனாட்சி நாயக்கர் மண்டபத் தோரணங்கள். அவற்றிலும் கல்வெட்டுகள். தகவல்கள் அடுத்த மடலில்.
அன்புடன்,
இரா. கலைக்கோவன்
