இரா. கலைக்கோவன்
தமிழ்நாட்டின் முப்பெரும் தேவாரப் பெருமக்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் சுந்தரர். சிவபெருமானைப் போற்றி அவர் பாடிய நூறு பதிகங்களே ஏழாம் திருமுறையின் உள்ளடக்கம். முதல் ஆறு திருமுறைகளைப் பாடிய சம்பந்தரும் அப்பரும் மண்ணுலகினர். சுந்தரரோ விண்ணுலகில் வாழ்ந்து, செய்த பிழைக்காக மண்ணுலக வாழ்வுக்கு அனுப்பப்பட்டவர். அவரது வாழ்க்கையை விரித்துரைக்கச் சேக்கிழாருக்கு உதவிய எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளில் இராஜராஜீசுவரத்துத் தூரிகைப் படப்பிடிப்பு முதன்மையானது எனலாம்.

சுந்தரர் வாழ்க்கை
‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்ற பெருமைமிகு அறிவிப்புடன் சோழப் பேரரசர் முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எழுப்பிய இராஜராஜீசுவரம், தமிழ்நாட்டுக் கட்டடக்கலை வரலாற்றில் ஒரு மைல் கல். கருவறையைச் சுற்றி இரண்டு சுவர்களும் அவற்றுக்கு இடைப்பட்டு நடைவழியும் கொண்டு உருவான சாந்தார விமானங்களில் இராஜராஜீசுவரம் தனித்தன்மையது. இங்கு மட்டுமே அந்த நடைவழி, அது அமைந்துள்ள விமானத்தின் இருதளங்களிலும் கலைப்படைப்புகளைப் பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள கீழ்த்தள நடைவழியில் சோழ, நாயக்கர் கால ஓவியங்களுடன் கூரைப்பகுதியில் ஆடற்சிற்பங்களும் உள்ளன. மேற்றள நடைவழி பரதரின் நாட்டியசாத்திரம் குறிப்பிடும் 108 ஆடற்கரணங்களில் 81க்கான சிற்பவடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.
கீழ்த்தள நடையின் நான்கு பெருஞ்சுவர்களில் முழுமையாகவும் பிற சுவர்களில் ஆங்காங்குமென வெளிப்பட்டுள்ள சோழ ஓவியங்களில் ஒன்றே, சுந்தரர் வாழ்க்கை பேசும் தடுத்தாட்கொண்ட புராணத்தை எழுதச் சேக்கிழாருக்குத் துணையானது எனில், இராஜராஜர் காலத்தில் வழக்கிலிருந்த தரவுகளும் பதிவுகளுமே நான்கு பெருஞ்சுவர்களுள் ஒன்றில் அந்த வாழ்க்கையின் வளமை காட்டச் சோழத் தூரிகைகளுக்கு உதவின எனலாம். சுந்தரர் வாழ்க்கையில் காதலும் பத்திமையும் இணைந்தே இருந்தன. பரவை, சங்கிலி எனும் இரு பெண்களுடன் அவருக்கு ஏற்பட்ட இணைவையும் பிரிவையும் தவிர்த்த சோழ ஓவியர்கள், தாம் அறிய நேர்ந்த சுந்தர வாழ்க்கையின் மூன்று திருப்புமுனை நிகழ்வுகளை மட்டுமே காட்சிகளாக்கினர்.
சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, ஓலை காட்டி அவரைத் தம் அடிமையென அறிவித்து, அதை வழக்குமன்றத்திலும் நிறுவி, தம் இருப்பிடம் கேட்டவர்களைத் திருவருட்துறைக்கு அழைத்துச்சென்று, அங்கு சுந்தரருக்குத் தம்மை வெளிப்படுத்தி, அவர் பாட ‘பித்தா’ எனச் சொல்லெடுத்துத் தந்த சிவபெருமானின் திருவிளையாட்டு முதல் நிகழ்வாகச் சுவரின் கீழ்ப்பகுதியில் பதிவாகியுள்ளது.

வழக்காடு மன்றம்
சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் இடையில் மலர்ந்த நட்புறவு இரண்டாம் நிகழ்வாகச் சுவரின் நடுப்பிரிவில் சுருக்கமாக அமைய, சுந்தரரும் சேரமான் பெருமாளும் மேற்கொண்ட கயிலைப் பயணமும் அங்கு இறைப் பார்வையில் அவர்களுக்குக் கிடைத்த தேவ வரவேற்பும் மேற்பகுதியில் விரிந்துள்ளன.
சோழர்கால அடுக்களை, மணவரங்கு, வழக்குமன்று, வழக்காடுமுறை, கோயில் என்று பொதுக்காலம் 10, 11ஆம் நூற்றாண்டுச் சமூக வாழ்வை முதல் பிரிவு ஓவியங்கள் வண்ணப் படப்பிடிப்பாய் வழங்க, இரண்டாம் பிரிவில் சேரமானின் அஞ்சைக்கள ஆடவல்லான் சிறக்க வடிக்கப்பட்டுள்ளார். இறைவனின் ஆனந்ததாண்டவத்தை உமையுடன் பிள்ளைகள் இருவரும் இடப்புறமிருந்து காண, குடமுழவில் தாளம் தருபவரும் காரைக்காலம்மையும் வீசிய திருவடியின் கீழ் வலப்புறம்.
சுந்தரர், சேரமான் பெருமாளின் கயிலைப் பயணம் சுவரையும் கடந்து தூணிலும் பரவியுள்ளது. வருபவர் சுந்தரர் என்பதால் அவரை வரவேற்க, விண்ணுலக நண்பர்கள் ஆடலும் பாடலுமாய்ச் சிறுசிறு குழுக்களாய் வழியெங்கும் பரவி அவரை வரவேற்கின்றனர். இந்தக் காட்சிப்பரப்பில் சோழர்காலக் கலைவளம், கருவிகளும் கலைஞர்களும் நிகழ்முறையும் ஒப்பனையுமெனக் கண்களை விரியச் செய்து தரவுகளைக் குவிக்கிறது.

சுந்தரரின் கயிலைப் பயணம்
யானைமீது சுந்தரரும் குதிரைமீது சேரமானும் கயிலை செல்லும் அந்தப் பெருவழியில், நீர்வாழ் இனங்கள் நீந்திப் பரவ, யானையின் கால்கள் கடல்நீரில். வான் வழிப் பயணத்தில் கடல் எங்கிருந்து வந்தது? யானையின் வாலைப் பற்றியவாறு சுந்தரரின் உடன்பயணியாய்ப் பின்னால் ஒருவர். யார் இவர்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுந்தரரின் நூறாம் பதிகம் விடை தருகிறது. சுந்தரரை அழைத்துவர யானையையும் வழிநடத்திவர தம் அடியார்களுள் ஒருவரான வாணனையும் இறைவன் அனுப்ப, பயணவழியில் கடலரசனான வருணன் வானவர் அனைவருக்கும் முன்னதாக வந்து மலர்கள் தூவித் தம்மை வணங்கி வரவேற்றதாக சுந்தரரே பேசுகிறார். கடலரசன் வணங்க, வழிதர வந்த வாணன் யானையின் வால் பிடித்துப் பின்வர, சேரமான் பெருமாள் முன் செல்ல, வானவ நண்பர்களின் வரவேற்பிற்கு இடையே சுந்தரர் கயிலையை அடைந்ததும் அங்கே இறைத்திருமுன் அவரும் சேரமானும் இணைந்து கண்ட ஆடல், பாடல் நிறைந்த அரங்க நிகழ்வும் கோடுகளும் வண்ணங்களுமாய்ச் சோழர்கால ஓவியர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அழகின் உச்சம்.

வாணன்
சிவபெருமானும் உமையும் மேடையில் அமர்ந்திருக்க, பின்னால் எழில்நிறை வடிவுடன் இறைவியின் விண்ணகத் தோழியர். அரங்கில் ஒழுங்குற அமர்ந்த பாடற்குழு. அவர்தம் பண்ணிசைப் பாடல்களுக்கு ஆடலரசிகளின் அவிநயம். உடன்கூட்டமாய்ப் பூதங்களின் இசைக்கோலத்துடன், பேரிசையாய்க் குடமுழவு. பார்வையாளர்களாய் சுந்தரரே சுட்டும் திருமால், நான்முகன், இந்திரன் உள்ளிட்ட தேவர்களும் பிறரும். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையை நினைவூட்டுமாறு விரிந்து பரவும் இந்தக் கயிலாயக் காட்சி சோழர் கால நிகழ்த்துக் கலைக்குக் கிடைத்த அரிதிலும் அரிதான வண்ணப்பதிவாகும்.
தவம், நட்பு, போர், பத்திமை எனும் நான்கை முதன்மைப்படுத்தி நான்கு பெருஞ்சுவர்களை வண்ணக் கலவைகளால் நிறைத்திருக்கும் சோழத் தூரிகைகள் இலக்கியம் பயின்றும் வரலாறு அறிந்துமே வரைவைச் செய்தன என்பதை சுந்தர வாழ்க்கையின் தேர்ந்தெடுத்த நிகழ்வுகளும் அவற்றை அவை பதிவுசெய்திருக்கும் பாங்கும் உள்ளங்கைக் கனியாய் உணர்த்துகின்றன. வாணன் வந்து வழி தந்து உடன் சென்றதும் கடலரசன் மலர் கொண்டு வாழ்த்தி வணங்கிப் பரவியதும் நம்பி ஆரூரருக்கு மட்டுமே வாய்த்த சுந்தரப் பெருமைகள்.
தள்ளாத வயதில் அப்பரும் தளிரான பருவத்தில் சம்பந்தரும் தலைக்கு மூன்று திருமுறைகள் கொள்ளுமளவிற்குப் பதிகங்கள் பாடியும் கருவறைச் சுவரோவியத்திற்கு சுந்தரர் வாழ்வை இராஜராஜர் தேர்ந்தது ஏன்? அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த தம்பிரான் தோழர் என்பதாலா? அப்பருக்கும் சம்பந்தருக்கும் கிடைக்காத இணையற்ற நண்பராய் சுந்தரருக்கு சேரமான் பெருமாள் வாய்த்ததாலா? ஊர்ப் பதிகங்களோடு நில்லாமல் வரலாற்றுத் தொடராய் தமக்கு முன்னும் தம் காலத்தும் வாழ்ந்த இறையடியார்களைத் தொகைப்படுத்தித் திருத்தொண்டத்தொகை தந்ததாலா? வரலாறு வளப்படுவதே கேள்விகளால்தான்.



