பழுவேட்டரையர்கள் யார்?

அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ புதினம் திரைப்படமாக வெளிவந்ததைத் தொடர்ந்து, சோழர்கால வரலாற்று மாந்தர்கள் குறித்த தேடல்கள் தொடர்கின்றன. அப்படிப்பட்ட மாந்தர்களுள் ஒருவர் பெரிய பழுவேட்டரையர்.

‘பொன்னியின் செல்வன்’ கதையா? வரலாறா?’ என்ற இந்து தமிழ் வலையொலிப் பக்கத்தில், பழுவேட்டரையர் குறித்து டாக்டர் இரா. கலைக்கோவன்-

“பெரிய, சின்னப் பழுவேட்டரையர்கள் என்று அண்ணனும் தம்பியுமாக இருவர் இக்கதையில் குறிக்கப்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் கதைக்களம் சுந்தரசோழர் காலத்தில் அமைகிறது. அவர் ஆட்சி ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகள் அமைந்தது. அப்போது பழுவூர் மன்னராக இருந்த பழுவேட்டரையர் மறவன்கண்டன். அவருக்குத் தம்பி யாருமில்லை. உத்தமசோழர் காலம்வரை மறவன்கண்டனே ஆட்சியில் இருந்ததைப் பழுவூர்க் கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், கதையில் பெரியபழுவேட்டரையர் உயிர் துறப்பதாகவும் சின்னப்பழுவேட்டரையர் பொறுப்பு நீங்குவதாகவும் கல்கி எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர், பழுவேட்டரையர்கள் குறித்த விளக்கமான வரலாற்றுத் தகவல்களை -‘பழுவேட்டரையர்கள் யார்?’ என்ற கட்டுரையில் வழங்கியிருக்கிறார். அக்டோபர் 2, 2022 அன்று வந்த  ‘இந்து தமிழ் திசை’ இதழில் கட்டுரை வெளியானது.

முழுமையான கட்டுரையைப் படித்திட, இதழின் இணைய இணைப்பை இங்கே காணலாம்-

‘பழுவேட்டரையர்கள் யார்?’

கட்டுரையின் வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாயக்கர் கால மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டிக்கும் குரும்பப்பட்டிக்கும் இடையிலுள்ள மாங்குளக்கரையில் இரண்டு மடைத்தூண்களில், நாயக்கர் காலத்துக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மடைத்தூண்கள் குறித்த செய்தியறிந்து, சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

மடைத்தூண்கள் குறித்தும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு குறித்தும், டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

செய்திக்குறிப்பைத் தாங்கிய நாளிதழ்கள் –

திருச்சிராப்பள்ளி புத்தகத் திருவிழாவில் விருது

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகமும் தேசிய நூல் அறக்கட்டளையும் (National Book Trust of India) இணைந்து நடத்தும் ‘புத்தகத் திருவிழா’, திருச்சிராப்பள்ளி ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 16, 2022 அன்று தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இந்நூல் கண்காட்சியின் இரண்டாம் நாளான செப்டம்பர் 17 அன்று, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கு, அவர்தம் ஆய்வுப் பணிகளைப் பாராட்டி நிகழ்ச்சி அமைப்பாளர்களால் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்த செய்திக் குறிப்பு

திருமங்கலத்து ராமாயண உளி உன்னதங்கள்

திருச்சிராப்பள்ளி லால்குடிச் சாலையில் உள்ளது திருமங்கலம். இது 63 திருத்தொண்டர்களுள் ஒருவரான ஆனாயரின் ஊராகும். திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில் காணப்படும் ராமாயணச் சிற்பங்கள் பற்றிய டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘திருமங்கலத்து ராமாயண உளி உன்னதங்கள்’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.

நாளிதழில்…

மின்னிதழில்…

கட்டுரையின் வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ கதையா? வரலாறா?

அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’, சோழர் வரலாற்றைப் படம்பிடிக்கிறதா என்பது பற்றிய டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, சமீபத்தில் ‘இந்து தமிழ் திசை’ வலையொலிப் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ கதையா? வரலாறா?

இரா. கலைக்கோவன்

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டையாண்ட சோழர்கள் குறித்த விரிவான வரலாறு பேராசிரியர் நீலகண்டசாஸ்திரியால் ஆங்கிலத்தில் எழுதி வெளியிடப்பட்டது. விஜயாலய சோழரின் தஞ்சாவூர் வெற்றியுடன் தொடங்கும் அந்த இணையற்ற வரலாற்றைத் தமிழில் தந்தவர்களாக வை.சதாசிவ பண்டாரத்தாரையும் மா.இராசமாணிக்கனாரையும் குறிப்பிடலாம். தமிழ்நாட்டரசும் ‘சோழப் பெருவேந்தர்காலம்’ என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாகச் சோழர் வரலாற்றை வெளியிட்டுள்ளது. சோழர் கால நிலஉடைமை, பொருளாதாரம், நீர்ப்பாசனம், கலைகள் இவை குறித்தெல்லாம் பல நுண்ணாய்வுகளும் வெளிவந்துள்ளன.

தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் காலம் பெருஞ்சிறப்புக்குரியதாகக் கருதப்படுவதற்குக் காரணம் அவர்கள் விட்டுச்சென்றிருக்கும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளிலிருந்து கிடைக்கும் அளப்பரிய தரவுகள்தாம். முதல் ராஜராஜர், முதல் ராஜேந்திரர் காலத்தில் சோழர்ஆட்சி தென்னிந்தியப் பரப்பை உள்ளடக்கி இருந்ததோடு வடகிழக்கில் கலிங்கம் வரையிலும் பரவியிருந்தது. இலங்கையும் அவர்தம் ஆட்சியின் கீழ் இணைந்திருந்தது. கடல் கடந்த கீழ்த்திசை நாடுகளையும் பல வடபுலநாடுகளையும் சோழர்கள் போரில் வென்றிருந்தபோதும் அவை சோழப் பேராட்சியின் கீழ் இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

சோழர்களின் கலைவளம் மகத்தானது. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல பெருங்கோயில்கள் அவர்தம் காலத்தில்தான் உருப்பெற்றன. ஆயிரக்கணக்கான செங்கல் கோயில்கள் அவர்களால்தான் கற்றளியாக்கப்பட்டன. நான்கு நூற்றாண்டுக் காலத் தமிழர் பண்பாடும் வாழ்க்கையும் அக்கோயில்களில்தான் சிற்பங்களாகவும் கல்வெட்டுகளாகவும் உறைந்துள்ளன. எவ்வளவோ ஆய்வுகளுக்குப் பிறகும் சோழர் காலத் தமிழ்நாடு முற்றிலும் வெளிப்பட்டுவிட்டதாகக் கொள்ளமுடியாதபடி தரவுப்பொதிகள் தேங்கியுள்ளன. இந்நிலையில், அமரர் கல்கியின், ‘பொன்னியின்செல்வன்’, சோழர் வரலாற்றைப் படம்பிடிக்கிறதா என்ற வினா முன்வைக்கப்படுகிறது. இதற்கான விடையைத் தேடும் முன் சில தெளிவுகள் தேவைப்படுகின்றன.

வரலாறு உண்மைகளின் அடுக்கில் உருவாவது. அதில் வெளிப்படும் ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் சான்றுகள் தூண்களாய் நின்று தாங்கும். வரலாற்றைக் கட்டமைக்க ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஊகங்கள்கூடச் சான்றுகளின் நிழலில்தான் வடிவம்பெறும். அந்த ஊகங்கள்தான் ஆய்வாளர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் நேரக் காரணமாகி, நெடிய விவாதங்களை எதிர்கொண்டு, சரியானவை எனில் நிலைப்படும். தவறானவை எனில் தவிர்க்கப்படும் அல்லது திருத்தப்படும்.

வரலாற்றுப் புதினம் அப்படியன்று. தேவைக்கேற்ப வரலாற்று மாந்தர் சிலரைத் தேர்ந்து, கருவிலுள்ள கதைக்கேற்ப அவர்களுடன் கற்பனை மனிதர்களையும் இணைத்துச் சுவை குன்றா நிகழ்வுகளைக் கட்டமைத்துப் படிப்பவர் ஒவ்வொரு வரியிலும் ஒன்றுமாறு சொல்லடுக்கி, ஆர்வத்தைத் தூண்டுமாறு அடுக்கடுக்காகத் திருப்பங்கள் நிகழ்த்தி வெளிப்படுவதே வரலாற்றுப் புதினம். அதில் வரலாற்றின் வாசம் இருக்கும். வரலாறு எப்படி இருக்கும்? ஒரு புதினத்தில் வரலாற்றை எதிர்பார்ப்பதோ, அது வரலாறாக வடிவம் காட்டும் என்று நினைப்பதோ எப்படிப் பொருந்தும்?

பொன்னியின் செல்வன் கதையை முடித்த கையோடு, அதற்கொரு முடிவுரையும் எழுதினார் கல்கி. அந்த முடிவுரையில் வரலாற்றுப் புதினங்கள் குறித்த தம் கருத்துரையாக, ‘பொதுவாக நாவல்கள் எழுதுவதற்கும் முக்கியமாகச் சரித்திர நவீனங்கள் எழுதுவதற்கும் சட்டதிட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் அவற்றை நான் படித்ததில்லை. ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய முறையை வகுத்துக்கொண்டு எழுதுகிறார்கள்,’ என்று தெளிவுபடச் சொல்லியிருக்கிறார். இந்தச் சொல்லாடல், அவர் படைப்பு எந்த வரையறைகளுக்கும் உட்பட்டதல்ல என்பதை மென்மையாக உணர்த்துகிறது.

‘பொன்னியின் செல்வன்’ தமிழ்நாட்டில் இதுநாள்வரையில் வெளியான வரலாற்றுப் புதினங்களில் விற்பனையில் முதல்நிலையில் உள்ள நூலாகும். அதைப் படித்தவர்கள் அதனுடன் ஒன்றினார்கள். அதைப் புதினமாக அவர்கள் பார்க்கவில்லை. வரலாறாகவே வரித்துக் கொண்டார்கள். அதுநாள்வரை அவர்கள் அறியாதிருந்த சோழர்களைப் பொன்னியின் செல்வன்அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. சோழர் வரலாறு ஒரு சாதாரண மனிதனுக்கு எவ்வளவு தெரிந்திருந்தால்போதுமோ, அந்த அளவுக்கு அது வழங்கியது. புதினம் வரலாறு பேசத் தொடங்கினால் படிப்பவர்கள் புத்தகத்தை மூடிவிடுவார்கள் என்பது பொன்னியின் செல்வனை எழுதியவருக்குத் தெரியாதிருக்குமா? மக்களின் நாடியறிந்த எழுத்தாளரல்லவா அவர்.!

வாழ்ந்த மனிதர்கள் குறித்து எழுதும்போது வரையறைகள் வட்டமிடும். எல்லைகளை மீறமுடியாது. அதனால்தான் கற்பனை மாந்தர்கள் வரலாற்றுப் புதினங்களில் பெருவாழ்வு பெறுகிறார்கள். பொன்னியின் செல்வன் புதினத்தை நகர்த்திச் செல்லும் ஆழ்வார்க்கடியான், நந்தினி, பூங்குழலி உள்ளிட்ட பலர் கற்பனைப் படைப்புகள். வந்தியத்தேவன், ஆதித்தகரிகாலர் ஆகிய இருவரும் சோழர் வரலாற்றில் பதிவாகியிருந்தபோதும் அவர்களைப் பற்றிய தரவுகள் குறைவே. ஆதித்தகரிகாலருக்குக் கிடைக்கும் அளவில்கூட வந்தியத்தேவனுக்குக் குறிப்புகள் இல்லை. அதனால்தான், அவரைப் பொன்னியின் செல்வனின் நாயகனாகக் கொண்டு கதை வளர்த்தார் கல்கி.

பொன்னியின் செல்வன் கதை சோழர்களை அடையாளம் காட்டுகிறது. அந்தப் புதினத்தால்தான் தமிழர்கள் வரலாற்றின்பால் ஈர்க்கப்பட்டார்கள். சோழர்கள், ராஜராஜர் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். அவ்வகையில் கல்கியின் எழுத்தாற்றல் போற்றத்தக்கது. ஒரு கதைசொல்லி வெற்றிபெறுவது அவர் சொல்லும் கதையின் நிலைபேற்றைப் பொறுத்தே அமைகிறது. அப்படியானால், பொன்னியின் செல்வனில் குறைகளே இல்லையா? அதைச் சோழர்களின் வரலாற்று முகமென்று ஏற்றுக்கொள்ளமுடியுமா?

அரசியல் சூழ்ச்சிகளும் அதற்கான ஆள்சேர்ப்புப் படலங்களும் தவறான உறவுகளும் நிறைந்திருந்த சமூகமாகவே சோழச்சமூகத்தைப் பொன்னியின் செல்வன் படம்பிடிக்கிறது. சிற்றரசர்களைப் பிரித்தாளும் முயற்சிகள், இளம் தலைவர்களைத் தன்வயப்படுத்த நந்தினியிடமிருந்து வெளிப்படும் கவர்ச்சி நிறைந்த மொழிவுகள், பெரிய பழுவேட்டரையர், வீரபாண்டியன், சுந்தரசோழர், மந்தாகினி இவர்களைச் சூழ்ந்த பொருந்தா உறவுகள் என இப்புதினம் சுவைக்காக வெளிப்படுத்தும் சூழல்கள்தான் சோழர் கால அரசியல் வாழ்க்கையாக அமைந்திருந்ததா என்ற கேள்வி வரலாற்றை நேசிப்பவர்களுக்கு எழாமல் இருக்கமுடியாது.

ஒரு வரலாற்றுப் புதினம் எந்தக் காலத்தைத் தழுவி எழுதப்படுகிறதோ, அந்தக் காலத்து மாந்தர்களையே அது கதைப் போக்கில் கொள்ளவேண்டும். கற்பனை மாந்தர்கள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் ஆங்காங்கே இணையலாம். ஆனால், வரலாற்று மனிதர்கள் காலப் பிறழ்ச்சிக்கு உள்ளாதல் சரியன்று. பொன்னியின் செல்வனில் இத்தகு காலப் பிறழ்வுகள் கண்சிமிட்டாமல் இல்லை.

புதினத்தின் தொடக்கத்திலேயே அறிமுகமாகும் சம்புவரையர்கள், சுந்தரசோழர் காலத்தில் வரலாற்றின் வாயிலுக்கே வரவில்லை. சாளுக்கியச் சோழர்களின் இரண்டாம் அரசரான விக்கிரமசோழர் காலத்திலேயே அவர்கள் சிற்றரசர் நிலையைப் பெறுகிறார்கள். அக்காலக்கட்டத்திலும் அவர்கள் வாழ்ந்திருந்த பகுதி திருவண்ணாமலை மாவட்டமும் அதைச் சுற்றியிருந்த சில ஊர்களும்தான். கதை நிகழும் காலத்திலிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று வெளிச்சம்பெறும் சம்புவரையர்களைக் கால நீரோட்டத்தில் முன்னிழுத்து, அவர்களுக்குச் சுந்தரசோழர் கால வாழ்வளித்ததுடன், அவர்தம் இருப்பிடத்தையும் மாற்றி வீரநாராயணபுரத்துக்கு அருகிலுள்ள கடம்பூராகக் காட்டியிருப்பதும் அவ்வூர் மாளிகையிலேயே கதையின் தலைமை நிகழ்வுகள் நடப்பதாகக் கதை புனைந்திருப்பதும் காலப் பிறழ்வான அமைப்பாகும்.

அது போலவே பெரிய, சின்னப் பழுவேட்டரையர்கள் என்று அண்ணனும் தம்பியுமாக இருவர் இக்கதையில் குறிக்கப்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் கதைக்களம் சுந்தரசோழர் காலத்தில் அமைகிறது. அவர் ஆட்சி ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகள் அமைந்தது. அப்போது பழுவூர் மன்னராக இருந்த பழுவேட்டரையர் மறவன்கண்டன். அவருக்குத் தம்பி யாருமில்லை. உத்தமசோழர் காலம்வரை மறவன்கண்டனே ஆட்சியில் இருந்ததைப் பழுவூர்க் கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், கதையில் பெரியபழுவேட்டரையர் உயிர் துறப்பதாகவும் சின்னப்பழுவேட்டரையர் பொறுப்பு நீங்குவதாகவும் கல்கி எழுதியுள்ளார்.

வரலாறு அதன் பதிவுப்படியே புதினத்தில் அமையவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், படிப்பார் அதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்குச் சுவை நிறைந்த கதை வேண்டும். எடுத்தால் முடிக்காமல் வைக்க முடியாத அளவிற்கு ஆர்வத்தைத் தூண்டுவதாக அக்கதை அமைய வேண்டும். பொன்னியின் செல்வன் அத்தகு புதினமாக மலர்ந்தது. அதுதான் அதனுடைய வெற்றி. காலநிரலற்ற சில வரலாற்று அமைப்புகளுக்காகவும் சமூகத்தின் குறைநிறைந்த காட்சிகளுக்காவும் பொன்னியின் செல்வனைத் தள்ளிவைக்கமுடியாது. அது ஆயிரமாயிரம் மக்கள் மனதில் தமிழ்நாட்டு வரலாற்றை வேர்விடச் செய்த புதினம். ‘வரலாறு’ என்ற சொல்லைப் பலரும் பேசுமாறு பழக்கிவிட்ட படைப்பு.

திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில் சோழா்காலக் கல்வெட்டுகள்


திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ளது திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் அக்கோயிலில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்தனர்.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த பல வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வரலாற்றுத் தகவல்களுடன் செய்திக்குறிப்பைத் தாங்கிய நாளிதழ்கள் –

‘வசந்த அழைப்பு’ – திருச்சிராப்பள்ளி வானொலியில் டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்க்காணல்

23/07/2022 அன்று ஒலிபரப்பான திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையின் ‘வசந்த அழைப்பு’ நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் உ.வே.சா. விருது  பெற்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடலாக அமைந்தது.

கண் மருத்துவராகத் தொடங்கி வரலாற்றாய்வாளராக மாறிய தம் வாழ்வின் சுவையான நிகழ்வுகள் பலவற்றை டாக்டர் இரா. கலைக்கோவன் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆய்வுலகின் முன்னோடிகள், அவர்தம் நூல்கள், கோயில்கள், கல்வெட்டுக்கள், நூல் வாசிப்பு குறித்த பயனுள்ள தகவல்களை அவர் வழங்கினார்.

கோயில்கள் இன்றி வரலாறு இல்லை; வரலாறு இன்றி நம் அடையாளம் இல்லை; அத்தகைய கோயில்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மக்களின் கடமை என்பதைத் தெளிவாக விளக்கினார்.

‘வசந்த அழைப்பின்’ பதிவை இங்கே கேட்டு மகிழலாம்.

தமிழக அரசின் உ.வே.சா. விருது – 2021

தமிழ்நாடு நாள் விழா ஜூலை 18, 2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கு, அவர்தம் சீரிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது பெற்றமை குறித்து, திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையில், 19/07/2022 அன்று டாக்டர் இரா. கலைக்கோவன் உரையாற்றினார். அந்த உரையின் பதிவை இங்கே கேட்கலாம்.

முக்தீசுவரத்தில் சோழர்கால நில அளவுகோல்கள் கண்டுபிடிப்பு

சிராப்பள்ளியை அடுத்த சமயபுரத்திற்கு அருகிலுள்ள கண்ணனூர், பொதுக்காலம் 11 ஆம் நூற்றாண்டளவில் ஹொய்சள அரசர்களின் தலைநகரமாக விளங்கியது. சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜருக்கு உதவுவதற்காக மைசூர்ப்பகுதியிலிருந்து சோழநாட்டிற்கு வந்த ஹொய்சள அரசர்கள் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வூரைத் தங்கள் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தனர். அக்காலக்கட்டத்தில் இப்பகுதியில் உருவான பழங்கோயில்களுள் ஒன்று முக்தீசுவரம். கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்றுமாளிகை என ஒரு காலத்தில் எழுச்சியுடன் விளங்கிய இக்கோயில் இன்று அறநிலையத்துறைத் திருப்பணிக்காகக் காத்திருக்கிறது.

2020 இல், இக்கோயிலில் இணைஆணையர் திரு. க. பெ. அசோக்குமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு. நளினியும் முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் பொதுக்காலம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அளவுகோல்களையும் 14-18 ஆம் நூற்றாண்டளவில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுக்கள் சிலவற்றையும் கண்டறிந்தனர். களஆய்வின்போது சமயபுரம் கோயில் இளநிலைப் பொறியாளர் திரு. எம். அஜந்தன் உடனிருந்து உதவினர்.

இக்கல்வெட்டுக்களையும் அளவுகோல்களையும் நேரில் ஆய்வுசெய்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குனர் டாக்டர் இரா. கலைக்கோவன், இக்கோயில் சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜர் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும் பொதுக்காலம் 1221 ஏப்ரல் 14 ஆம் நாள் இவ்வளாகத்தில் பொறிக்கப்பட்ட அம்மன்னரின் 6 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இக்கோயில் இறைவனை, ‘கழுகிறை நாயனார்’ என்றழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்குக் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்கள் குறிப்பிடும் முத்தன் செட்டியார், திருச்சிராப்பள்ளித் தாயுமான செட்டியார், கழயடி மயிலேறும் பெருமாள் ஆகிய பெருமக்கள் அவர்தம் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள கட்டுமானப்பகுதிகளின் திருப்பணிக்கு உதவியவர்கள் ஆகலாம்.

‘கழயடி மயிலேறும் பெருமாள்’… என்ற குறிப்பு

‘திருச்சிராப்பள்ளித் தாயுமான செட்டியார்’ …. என்ற குறிப்பு

ஆய்வின்போது கண்டறியப்பட்ட மூன்று அளவுகோல்களுள் 87 செ. மீ. அளவினதாக இரு கூட்டல் குறிகளுக்கிடையில் விமானத்தின் மேற்குப் பகுதியில் பதிவாகியுள்ள கோல் இக்கட்டுமானத்திற்குச் சிற்பிகள் பயன்படுத்திய தச்சக்கோலாகலாம். இதுவொத்த தச்சக்கோல்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் பனைமலை ஈசுவரம், தஞ்சாவூர் ராஜராஜீசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம் உள்ளிட்ட பல கோயில்களில் கண்டறியப்பட்டுள்ளன.

புன்செய், நன்செய் நிலங்களை அளப்பதற்காகச் சோழர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த நில அளவுகோல்கள் அந்தந்த ஊர்க் கோயில்களில் வெட்டி வைக்கப்பட்டன. இரண்டல்லது மூன்று கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்டனவாய் வெட்டப்பட்ட இந்த அளவுகோல்கள், சில கோயில்களில் நன்செய்க்கோல், புன்செய்க்கோல் எனும் பொறிப்புகளுடனும் சில கோயில்களில் அத்தகு அடையாளப் பொறிப்புகள் இல்லாமலும் காணப்படுகின்றன. முக்தீசுவரத்தின் பெருமண்டபத் தென்புறக் குமுதத்தில் வெட்டப்பட்டுள்ள 6.99 மீ. நீளமுள்ள அளவுகோல், அப்பகுதி சார்ந்த புன்செய் நிலங்களை அளக்கப் பயன்பட்ட அளவுகோலாகலாம்.

நன்செய் நிலங்களை அளக்க வழக்கிலிருந்த சோழர் கால நிலமளந்த கோல் முக்தீசுவரம் விமானத்தின் மேற்குப் பட்டிகையில் 3.76 மீ. நீளத்தில் வெட்டப்பட்டுள்ளது. பெரியகுறுக்கை சிவன்கோயிலில் மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்ட நன்செய்க்கோலும் இதே அளவினது என்பது இங்கு எண்ணத்தக்கது.

முக்தீசுவரத்திற்கு அருகிலுள்ள போசளீசுவரம் கோயிலிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அக்கோயில் கோபுரத்தின் உட்புற வடசுவரில் ‘நல்லதம்பி மகன் காவுடை நயினான்’ எனும் பெயர்ப் பொறிப்புக் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டுச் சுட்டும் காவுடை நயினார் கோயில் திருப்பணியில் பங்கேற்றவராகலாம்.

‘ஆடவல்லான்’- இலக்கியப் பேருரை

‘ஆடவல்லான்’ என்ற தலைப்பில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் இரா. கலைக்கோவன், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் வழங்கிய இலக்கியப் பேருரையின் பதிவு இது.

ஆடல்கலையின் தனிப்பெரும் தெய்வமாக, சிவன் மாற்றபட்டதும் உயர்த்தப்பட்டதுமான வரலாறு குறித்தும், மற்ற தெய்வங்களின் பெருமைக்குரிய உடைமையாக இருந்த ‘ஆடல்கலையின் மணிமகுடம்’ சிவனாரின் தலையில் பொருத்தப்பட்டதுமான நீண்ட வரலாற்றை, நற்றமிழில் விளக்கமுற வழங்கியிருக்கிறார் டாக்டர். கலைக்கோவன்.

10ஆம் நூற்றாண்டுத் தமிழகக் கோயில் படிமவியலில் சிவனுடைய ஆடல், ‘ஆனந்த தாண்டவம்’ என்று பார்போற்றும் வியத்தகு ஆடல் தோற்றநிலையாக மாறும் பரிணாம வளர்ச்சியை, மெய்நிகர்ப் பயணமாகக்  காலக்கருவியில் அமரச்செய்து, காட்டிச் செல்கிறார்.

‘ஆடவல்லான்’ என்ற டாக்டர். இரா. கலைக்கோவனின் வானொலிப் பொழிவு, அவர்தம் கருத்துக்களோடு தொடர்புடைய தமிழகக் கோயில் சிற்பங்களின் பின்னணியில், குறும்படம்போல் இங்கு வழங்கப்பட்டுள்ளது.