‘எனைத்தானும் நல்லவை கேட்க’- வானொலிப் பொழிவு

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ நிகழ்ச்சியில், இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் சார்ந்த செய்திகளைத் தொடர்ப் பொழிவாக டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கி வருகிறார். முதல் பொழிவு 03.10.23 திங்களன்று ஒலிபரப்பானது. சுவையான வரலாற்றுத் தகவல்களைக் கேட்டு மகிழ, திங்கள்தோறும் காலை 06.10 மணிக்கு இணையலாம்.

பொழிவு 1 – 03.10.23

சங்க இலக்கியங்கள் குறித்தும், குறிப்பாக மிகுதியாகப் பேசப்படாத கீழ்க்கணக்கு நூல்கள் பற்றியதுமாக முதல் பொழிவு அமைந்தது. அதன் பதிவை இங்கு கேட்கலாம்.

பொழிவு 2- 10.10.23

பூதன் சேந்தனாரின் இனியவை நாற்பது காட்டும் கல்விச் சிந்தனைகளைப் பற்றியது இந்தப் பொழிவு. வயிற்றுப் பசிக்குக் கொள்ளப்படும் உணவு உயிர்காப்பதுபோல, செவிகளில் நிறையும் கருத்துக் குவியல் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

பொழிவு 3- 17.10.23

இந்த வாரப் பொழிவு, கீழ்க்கணக்கின் மற்றொரு நூலான விளம்பி நாகனாரின் நான்மணிக்கடிகை கூறும் புகழ் வளர்த்து வாழ்வதற்கான வழிகள் பற்றியதாக அமைந்தது. முதலில், ‘பிறர்க்களித்து உண்பதால் புகழ் வளரும்’ என்று கடிகை இயம்புவதை வள்ளுவத்தோடு இணைத்து விளக்கும் டாக்டர் இரா. கலைக்கோவன், நூல் காட்டும் வாழ்வின் எளிய வழிமுறைகளை “புகழை விதை- அதற்கு அறம் போற்றும்; அறம் நிலைப்பட வாழ- சினம் விடு”- என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறார்.

பொழிவு 4- 25.10.23

கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நல்லாதனார் இயற்றிய திரிகடுகத்தின் சிறப்புக்களைச் சுட்டியது இந்த வாரப் பொழிவு. ‘ஒவ்வொரு பாடலும் வாழ்விற்குத் தேவையான மூன்று நல்கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதால் பெயர்ப் பொருத்தம் இனிதே அமைந்தது’ என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். எடுத்துக்காட்டாகக் கடுகப் பாடல்களில் ஒன்று, நன்மைப் பயவாத மூன்றாய்- கணக்காயர் இல்லாத ஊரையும்; பிணக்கறுக்கும் மூத்தார் இல்லாத அவையையும்; பகிர்ந்துண்ணும் மனமில்லாத பக்கத்து வீட்டுக்காரரையும் காட்டுவதைச் சுவைபட விளக்குகிறார்.

பொழிவு 5- 31.10.23

முக்கடுகத்தின் 43ஆவது பாடல் கூறும் வாழ்வின் கோட்பாடுகளான- அ) வாயின் அடங்குதல்; ஆ) மாசற்ற செய்கை; இ) பொய்யற்ற நெஞ்சம் கொள் ஆகியன பற்றியது இந்தப் பொழிவு. “இதழ் மூடிக்குள் பல் அடுக்குகளின்பின் பக்குவமாய்ச் சிறை வைக்கப்பட்டிருந்தபோதும் நா அடங்கி இருப்பதில்லை. வாய்ப்பமையும் போதெல்லாம் வெளிப்பட்டு வேதனைகளை விதைத்துவிடுகிறது,” என்று அடங்காத நாவின் விளைவுகளை அழகாக விளக்குகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

‘வசந்த அழைப்பு’ – திருச்சிராப்பள்ளி வானொலியில் டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்க்காணல்

23/07/2022 அன்று ஒலிபரப்பான திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையின் ‘வசந்த அழைப்பு’ நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் உ.வே.சா. விருது  பெற்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடலாக அமைந்தது.

கண் மருத்துவராகத் தொடங்கி வரலாற்றாய்வாளராக மாறிய தம் வாழ்வின் சுவையான நிகழ்வுகள் பலவற்றை டாக்டர் இரா. கலைக்கோவன் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆய்வுலகின் முன்னோடிகள், அவர்தம் நூல்கள், கோயில்கள், கல்வெட்டுக்கள், நூல் வாசிப்பு குறித்த பயனுள்ள தகவல்களை அவர் வழங்கினார்.

கோயில்கள் இன்றி வரலாறு இல்லை; வரலாறு இன்றி நம் அடையாளம் இல்லை; அத்தகைய கோயில்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மக்களின் கடமை என்பதைத் தெளிவாக விளக்கினார்.

‘வசந்த அழைப்பின்’ பதிவை இங்கே கேட்டு மகிழலாம்.

‘ஆடவல்லான்’- இலக்கியப் பேருரை

‘ஆடவல்லான்’ என்ற தலைப்பில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் இரா. கலைக்கோவன், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் வழங்கிய இலக்கியப் பேருரையின் பதிவு இது.

ஆடல்கலையின் தனிப்பெரும் தெய்வமாக, சிவன் மாற்றபட்டதும் உயர்த்தப்பட்டதுமான வரலாறு குறித்தும், மற்ற தெய்வங்களின் பெருமைக்குரிய உடைமையாக இருந்த ‘ஆடல்கலையின் மணிமகுடம்’ சிவனாரின் தலையில் பொருத்தப்பட்டதுமான நீண்ட வரலாற்றை, நற்றமிழில் விளக்கமுற வழங்கியிருக்கிறார் டாக்டர். கலைக்கோவன்.

10ஆம் நூற்றாண்டுத் தமிழகக் கோயில் படிமவியலில் சிவனுடைய ஆடல், ‘ஆனந்த தாண்டவம்’ என்று பார்போற்றும் வியத்தகு ஆடல் தோற்றநிலையாக மாறும் பரிணாம வளர்ச்சியை, மெய்நிகர்ப் பயணமாகக்  காலக்கருவியில் அமரச்செய்து, காட்டிச் செல்கிறார்.

‘ஆடவல்லான்’ என்ற டாக்டர். இரா. கலைக்கோவனின் வானொலிப் பொழிவு, அவர்தம் கருத்துக்களோடு தொடர்புடைய தமிழகக் கோயில் சிற்பங்களின் பின்னணியில், குறும்படம்போல் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

சான்றோர் சிந்தனை – அறிஞர் வ.சுப. மாணிக்கனார்

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சிக்காக, அறிஞர் வ. சுப. மாணிக்கனார் பற்றி, டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய வானொலிப் பொழிவின் பதிவு இது. பொழிவு 4 பகுதிகளாக ஒலிபரப்பப்பட்டது.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

தமிழமுதம்

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திற்காக, ‘தமிழமுதம்’ என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய பொழிவின் பதிவுகளை இப்பகுதியில் கேட்கலாம்.

‘அமுது’, ‘மடை’, ‘பானை’, ‘குடம்’, ‘கலம்’, ‘மணி’ போன்ற பழந்தமிழ்ச்சொற்கள், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் மற்றும் கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளமையைச் சான்றுகளுடன், சுவைபட விளக்கியுள்ளார்.

தமிழர் வணிகச் சிறப்பு, மிகப் பழங்காலந்தொட்டே பெண்கள் வணிகத்தில் ஈடுபட்டமை, தமிழகத்து விளைபொருட்கள், வணிகக் குழுக்கள் என்று பரந்தூபட்ட செய்திகளை உள்ளடக்கிய பொழிவுகள் இவை.

அமுதம் 1

அமுதம் 2

அமுதம் 3

அமுதம் 4

அமுதம் 5

அமுதம் 6

அமுதம் 7

அமுதம் 8

அமுதம் 9

சான்றோர் சிந்தனை – டாக்டர் மா. இராசமாணிக்கனார்

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திற்காக, சான்றோர் சிந்தனை என்ற நிகழ்ச்சியில், டாக்டர் மா. இராசமாணிக்கனார் பற்றி டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கிய வானொலிப் பொழிவின் பதிவு இது. பொழிவு 5 பகுதிகளாக ஒலிபரப்பப்பட்டது.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5