மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 8. கழுதையேற்றமாய் ஊரகத் தண்டனை

அன்புள்ள வாருணி, தமிழரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது தேர். சங்க இலக்கியங்கள் விதந்து பேசும் காதல், வீரம் இரண்டுடனும் தொடர்புடைய அத்தேரையும் அதை இழுத்த புரவிகளையும் நன்கு அறிந்து தேர்ந்து கொள்வதற்கும் இயக்குவதற்குமாகவே சங்கத்தமிழர் தேர்நூல், புரவிநூல் என அறிவியல் சுவடிகளை ஆய்ந்து வைத்திருந்தனர். தேரோட்டிகள், தேர்த்தச்சர்கள் குறித்துப் பெரியதொரு நூலே படைக்குமளவு சங்கப்பாடல்கள் தரவுகள் கொண்டுள்ளன.

மானுடப் பழக்கத்திலிருந்த இத்தேர்கள் இறை ஊர்தியானமை எப்போதென்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், பத்திமைப் பாடல்களில் பேசப்படும் தேரோடும் வீதிகள், பல்லவர் படைப்புகளில் முப்புரம் எரித்த சிவபெருமானின் ஊர்தியாக வெளிப்படும் சிற்பத்தேர்கள் ஆகியவை பொதுக்காலம் 6ஆம் நூற்றாண்டளவில் இது நேர்ந்திருக்கலாம் என்று கண்காட்டுகின்றன.

தேர் என்றதும் என் நினைவுக்கு வருபவர் முதலாம் இராஜேந்திரசோழர்தான் வாருணி, தமிழ்நாட்டு மன்னர்களில் தம் அணுக்கியுடன் தேரூர்ந்து சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டவர் அவர் ஒருவர்தான். திருவாரூரில் அவரும் தானும் நின்ற இடங்களில், காலமெல்லாம் ஒளிருமாறு அவர் அணுக்கி பரவை விளக்கேற்றச் செய்தது வரலாறு. அந்தப் பொன்னாளை நினைந்து பூரித்தே, தியாகேசர் விமானத்தை அவ்வம்மை தங்கத்தகடுகளால் அழகுபடுத்தினார்.

தமிழ்நாட்டிலேயே ஊர், கோயில் என இரண்டும் ஒரு மன்னரின் அணுக்கியின் பெயரால் அமைந்ததெனில், அது இராஜேந்திரரின் பரவைநங்கைக்கு மட்டுமே கிடைத்த பேறெனலாம். பரவைப்புரத்து (இன்றைய விழுப்புரம் மாவட்டப் பனையவரம்) பரவை ஈசுவரமுடையார் கோயிலில், இராஜேந்திரரின் இரண்டாம் மகன் இரண்டாம் இராஜேந்திரர் காலத்தில், இராஜேந்திரசோழர் – பரவைநங்கை திருமேனிகளின் முன் விளக்கேற்றப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.

தேர் இறை ஊர்தியாகித் தெருவலம் வந்ததை நல்லூர் வில்வாரண்யேசுவரர் கோயில் கல்வெட்டுகள் படம் பிடிக்கின்றன. சாளுக்கியச் சோழர்கள் காலத்தில்தான் தேருலாக் கல்வெட்டுகளும், இறைக்கோயிலே தேர்வடிவில் வெளிப்பட்டதும் நிகழ்ந்தன. இறைவன் தேருடன் நடக்கவும் இறைவனுடன் தேரிலிருந்து பயணிக்கவுமான உரிமைகள் நல்லூர்க் கோயில் தேவரடியாருக்குக் கோயிலாரால் விற்பனை செய்யப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

முதற் குலோத்துங்கர் காலத்தில் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில் விமானம் தேர் வடிவில் உருவானது. தொடர்ந்து வந்தவர்கள் தேர்மண்டபங்களை உருவாக்கினர். தாராசுரத்து இராஜராஜேசுவரம் கோயில் இராஜகம்பீரன் மண்டபம் குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயிலில் தேர் வடிவிலான ஆடரங்கு உள்ளது. திருக்கோடிக்காவில்தான் முதல் முறையாகக் கோயில் தேர்களைச் சிற்பங்களாகக் காணமுடிகிறது.

தேரின் சுவையான இந்த வரலாற்றுக்கும் மீனாட்சிக் கோயிலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கக் தோன்றுகிறதா வாருணி? இருக்கிறது, இல்லாமலா இவ்வளவு தரவுகளும்! தேர் எப்படி வந்தது, எப்படியெல்லாம் அதன் பயன்பாடுகள் வளர்ந்தன என்பது போலவே, அந்தத் தேரில் எவைஎவை பதிவாயின என்பதும் வியப்பூட்டும் செய்தியாகவே உள்ளது. தேரின் நாற்புறத்தும் இறைவடிவங்களையும் புராணக்கதைகளையும் ஆடல் தோற்றங்களையும் மரச்சிற்பங்களாகக் காட்டுமாறே, பாலுணர்வு நிலைகளையும் இலைமறை காயாக அதே தேரின் பக்கப்பகுதிகளில் படைத்துள்ளனர் நம் தேர்த்தச்சர்கள்.

மீனாட்சிக் கோயில் அம்மன் திருத்தேரைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அளவில் சிறிதானாலும் அருமையான தேர். இறைச்சிற்பங்களும் திருவிளையாடல் புராணக் காட்சிகளாய்ச் சில சிற்பங்களும் அதில் கண்டோம். சிற்பங்களை இரசித்தவாறே தேரைச் சுற்றிவந்த நிலையில், தேரின் மேற்பகுதியில் பேராசிரியர் நளினி ஒரு சிற்பத்தைச் சுட்டிக் காட்டினார். நிமிர்ந்து பார்த்தபோதுதான், எத்தனை அரிய பதிவைக் காண வாய்த்தது என மகிழ்ந்தேன். ஊரகத் தண்டனை ஒன்றைச் சிற்பி அத்தேரில் காட்சியாக்கியிருந்தார்.

தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில் தேர்களை ஆய்வு செய்திருந்தபோதும், இத்தகு காட்சி எங்குமே கண்டதில்லை வாருணி. ‘கரும்புள்ளிச் செம்புள்ளி குத்திக் கழுதை மேலேற்றி’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தேரில் அதைக் காட்சியாகக் கண்டோம். சிற்பத்தில், முதலிரண்டும் தெரியாது என்பதால் வேறு தண்டனைகளை இணைத்துள்ளனர். அவையும் ஊரகத் தண்டனைகளாய் அறியப்படுபவைதான்.

சிறிய குடுமியும் தொங்குமீசையும் இடையில் சுருக்கிய ஆடையுமாய், ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்பது போல் கைகளைக் கூப்பிய நிலையில் கழுதைமேல் அமர்ந்துள்ளார் ஆடவர் ஒருவர். அவர் என்ன தவறு செய்தார் என்பது சுற்றியுள்ள மூன்று பெண்களைப் பார்த்தாலே புரிந்துவிடும். அப்பெண்களுள் ஒருவர் கழுதையின் முன்னும் மற்றவர் பின்னுமாக நிற்கின்றனர். பின்னுள்ளவர்களுள் ஒருவர் உயர்த்திப் பிடித்த சட்டியிலிருந்து எதையோ, (சாணக்கரைசல்?) அந்த ஆடவரின் தலையில் ஊற்றுகிறார். இரண்டாம் பெண்காலியான சட்டியை இடக்கையில் பிடித்தவாறு, வலக்கைத் துடைப்பத்தால் அந்த ஆடவரை அடிப்பதுபோல் உள்ளார். வலமுள்ள பெண் தம் கையிலுள்ள மிதியடி போன்ற பொருளால் ஆடவரின் தலையில் அடிக்க முனைகிறார். இந்தத் தண்டனைக் காட்சியைப் பார்த்தவாறு வலப்புறம் ஒரு சிறுவன்!

தண்டிக்கும் பெண்கள் மூவருமே சேலை அணிந்துள்ளனர். செவியணிகள், தோள், கை வளைகள், கழுத்தணிகள் பெற்றுள்ள அப்பெண்களின் இதழ்க்கடையில் எள்ளல் புன்னகை. இத்தேர் செய்யப்பட்ட காலத்தே பாலியல் குற்றவாளிகளை ஊரகப்பகுதிகளில் இது போல்தான் தண்டித்திருப்பார்களோ என நினைக்குமாறு உள்ள இச்சிற்பத்தில், சிறுவன் இடம்பெற்றிருப்பது சிந்தனையைத் தூண்டுகிறது.

பெண்மைக்கு இழிவு செய்வார் எந்நிலைக்கு ஆளாவார் என்பதைக் கண்ணெதிர்க் காட்சியாகக் காட்டி, பெண்மைக்கு மதிப்பளிக்கும் உணர்வோடு ஆண்மகன் வளரவேண்டும் என்பதைச் சிறுவனின் இருப்பால் மென்மையாக உணர்த்தியிருக்கும் இந்த ஊரக அறிவுறுத்தல் உன்னதம் வாருணி. பாலியல் சீண்டல்களில் முனைவோர் தலையில் சாணியைக் கரைத்து ஊற்றி, அவர்களைத் துடைப்பம், மிதியடி ஆகியவற்றால் தாக்கித் தண்டிக்கும் நாயக்கர் கால ஊரகப் பழக்கம் ஒரு மரத்தச்சரின் வரலாற்று நோக்கால் நமக்குப் பாடமாகப் பகிரப்பட்டுள்ளது. பெண்ணிடம் பழகிவிட்டு இல்லையென்று சொன்ன சங்ககாலப் பொய்யரைக் கள்ளூர் ஊரார் மரத்தில் கட்டிவைத்து அவர் மேல் சுண்ணாம்பு நீரூற்றிய ஊரகத் தண்டனையின் வளர்நிலைதான் மீனாட்சிக் கோயிலின் இந்தப் பதிவு.

தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும், அத்தண்டனையும் தவறுக்கு ஆளானவர்களாலேயே தரப்படவேண்டும் என்பது போல் பதிவாகியுள்ள இந்தக் கழுதையேற்றச் சிற்பம் காலத்துக்கும் பாலியல் குற்றவாளிகளுக்குப் பாடமாக நிற்கும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.