மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 9. தொட்டான் . . பட்டான் . .

அன்புள்ள வாருணி, ‘பொதுவான இல்லம்’ என்ற பொருளுடன் தோன்றிய சங்ககாலப் பொதியில்கள், அந்தந்த ஊர்மக்களின் வழிபாட்டிடங்களாக விளங்கியதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் விரித்துப் பேசுகின்றன. ஊர்மக்களின் திரட்சிக்கேற்ப, அவர்கள் இருந்து வழிபட இடமளிப்பதற்காகவே அந்த எளிய பொதியில்கள் முன் மண்டபங்கள் பெறத் தொடங்கின. மக்கள் மண்டும் (கூடும்) இடம் என்ற பொருளில், ‘மண்டகம்’ என்று தொடக்கக் காலக் கல்வெட்டுகளில் அழைக்கப்பெறும் இம்மண்டபங்கள், காலத் தேவைக்கும் வழிபாட்டுப் பெருக்கத்துக்கும் ஏற்பப் பலவாய்ப் பெருகின.

குடைவரைக் காலத்திலேயே கருவறையாம் இறையகத்தின் முன் அகமண்டபம், முகமண்டபம் என இரண்டு மண்டபங்கள் உருவாயின. அவை கற்றளிக் காலத் தொடக்கத்தில் பெருகின. பெருமண்டபம், நிருத்தமண்டபம், நீராட்டு மண்டபம், திருவோலக்க மண்டபம் எனப் பலவாய்ப் பெயரேற்ற இக்கட்டுமானங்கள் பிற்சோழர் காலத்தில், கூரை தாங்கும் தூண்களின் எண்ணிக்கை அடிப்படையில் நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்களாய்ப் பேருருப் பெற்றன.

தமிழ்நாட்டில் பல்லாயிரமாய்க் கோயில்கள் இருந்தபோதும் மிகச் சிலவே இத்தகு பெருமண்டபங்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில். வேறெந்தக் கோயிலின் ஆயிரங்கால் மண்டபமும் பெறாத ஆளுயரச் சிற்பங்கள் இம்மண்டப முகப்பையும் உட்புறத்தையும் அணிசெய்கின்றன. நாயக்க மரபின் கலைச் செழுமையை அவர்தம் திருப்பணிகளுக்கு ஆளான தமிழ்நாட்டுக் கோயில்கள் சில கொண்டிருப்பினும், மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபப் பேருருவச் சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையன.

எங்கள் ஆய்வின்போது இம்மண்டபத் தூண்களை ஒன்றுவிடாமல் பார்த்தபோதுதான் பேராசிரியர் மு. நளினியின் பார்வையில்பட்டு அந்தச் சிற்பம் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் நாங்கள் அதுநாள்வரை கண்டிராத சிற்பமது. ஒரு பாலியல் குற்றவாளி நாயக்கர் ஆட்சியில் எப்படித் தண்டிக்கப்பட்டார் என்பதைப் படம்பிடித்துக் காட்டும் அச்சிற்பம் பெருந்தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது.

மூன்று நிகழ்வுகளின் கூட்டிணைவாக உள்ள அச்சிற்பத்தின் முதல் பிரிவான கீழ்ப்பகுதியில், ஓர் இளம்பெண் இடஒருக்கணிப்பில் சரிந்துள்ளார். அவரது கைகள் மார்பகங்களை மறைக்க முயலுமாறு மடிந்துள்ளன. அவருக்குப் பின்னுள்ள ஆடவர், அப்பெண்ணின் இடுப்பருகே தம் வலக்காலை இருத்தியவாறு அவரிடம் முறைதவறி நடக்கும் முயற்சியில் முனைந்துள்ளார்.

தாக்குதலுக்கு ஆளான பெண், தாக்கும் ஆடவர் இவர்கள் இருவருக்கும் பின்னால் நிற்பவர் நாயக்கர் காலக் காவலர். முடிச்சிடப்பட்ட தொப்பி போன்ற தலைப்பாகை, கழுத்தில் சரப்பளி, மார்பில் வீரத்தைக் குறிக்கும் சன்னவீரம், செவியணிகள், தோள்வளைகள் என கம்பீரமாகக் காட்சிதரும் அக்காவலர், தம் கையிலுள்ள கத்தியால் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயலும் ஆடவரின் பின்பகுதியில் குத்தியவாறே, இடக்கையால் அந்த ஆடவரைப் பிடிக்க முயற்சிக்கிறார். இரண்டாம் நிலையாகப் படமாகியுள்ள இக்காவலரின் செயற்பாடு, தவறு நிகழும் இடங்களில் மேற்கொள்ளப்படும் அக்காலக் காவல் நடவடிக்கையைக் கண்முன் நிறுத்துகிறது.

கோதண்டத்தில் மாட்டுவது என்றொரு தண்டனை முறை அக்காலத்தே இருந்ததாகச் செவிவழிக் கதைகள் சொல்கின்றன. வரலாற்றுப் புதினங்கள் பல படைத்த திரு. சாண்டில்யன் தம்முடைய, ‘மன்னன் மகள்’ கதையில், அத்தகு கோதண்டத்தையும் அதில் சிக்கிக் கொள்பவரையும் கதைப்போக்கில் காட்டியிருப்பார். மீனாட்சிக் கோயில் சிற்பத்தில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் காட்சி அக்கோதண்டத் தண்டனையை நினைவூட்டுகிறது.

சிற்பத்தின் மேலடுக்கில் உள்ளது கோதண்டத் தண்டனைக் கூடம். பெருஞ்சட்டகம் ஒன்றின் பக்கப்பகுதியில் கைகளும் கால்களும் இறுக்கப்பட்ட நிலையில் முறை தவறி நடந்த ஆடவர் கட்டப்பட்டுள்ளார். கயிறுகளால் இறுக்கப்பட்ட நிலையில் அசைக்கமுடியாதவாறு மேற்பலகையில் அவர் தலையும் பிணைக்கப்பட்டுள்ளது. ஆடைகளற்ற நிலையில் சட்டகத்தில் மாட்டப்பட்டிருக்கும் அப்பாலியல் குற்றவாளியின் ஆணுறுப்பைத் தாவிக் கவ்வியுள்ள விலங்கின் காட்சியே தண்டனை எப்படியிருந்தது என்பதை உணர்த்திவிடுகிறது.

நியாயமற்ற ஆசைகளும் நேர்மையற்ற உணர்வுகளும் தவறான செயல்களுக்குத் தூண்டுகோல்கள். காலந்தோறும் இது போல் வரம்பு மீறல்கள் நிகழ்வதையும் அவை குற்றங்களாகித் தண்டனைகளுக்கு உள்ளாவதையும் இலக்கியக் காட்சிகளாய் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணமுடிந்தாலும், கண்ணெதிர் நிகழ்வாய்க் கற்பனைக்கே இடமில்லாது, ஒரு குற்றமும் அது தண்டிக்கப்பட்ட முறையும் காட்சியாகச் செதுக்கப்பட்டிருப்பது அதைப் பதிவுசெய்த சிற்பாசிரியரின் சமூகப் பார்வைக்குச் சான்றாகும் வாருணி.

இச்சிற்பக் காட்சியைக் கண்ணுறும் எவருக்கும் பாலியல் வரம்பு மீறல் சிந்தனையே வர வாய்ப்பில்லை. பத்திமைக்கான இடங்கள்தான் என்றாலும், கோயில்கள் சமூகம் சந்திக்குமிடம் என்பதால், சொல்ல வேண்டியவற்றை, உணர்த்தக்கூடியவற்றை, வாழ்க்கையின் ஒழுகலாறுகளைக் கிடைக்குமிடங்களில் காட்டிவிடுவதைக் கடமையாகக் கொண்டியங்கிய இத்தகு சிற்பாசிரியர்களைக் கை கூப்பி வணங்கத் தோன்றுகிறது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.