திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ நிகழ்ச்சியில், இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் சார்ந்த செய்திகளைத் தொடர்ப் பொழிவாக டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கி வருகிறார். முதல் பொழிவு 03.10.23 திங்களன்று ஒலிபரப்பானது. சுவையான வரலாற்றுத் தகவல்களைக் கேட்டு மகிழ, திங்கள்தோறும் காலை 06.10 மணிக்கு இணையலாம்.

பொழிவு 1 – 03.10.23
சங்க இலக்கியங்கள் குறித்தும், குறிப்பாக மிகுதியாகப் பேசப்படாத கீழ்க்கணக்கு நூல்கள் பற்றியதுமாக முதல் பொழிவு அமைந்தது. அதன் பதிவை இங்கு கேட்கலாம்.
பொழிவு 2- 10.10.23
பூதன் சேந்தனாரின் இனியவை நாற்பது காட்டும் கல்விச் சிந்தனைகளைப் பற்றியது இந்தப் பொழிவு. வயிற்றுப் பசிக்குக் கொள்ளப்படும் உணவு உயிர்காப்பதுபோல, செவிகளில் நிறையும் கருத்துக் குவியல் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.
பொழிவு 3- 17.10.23
இந்த வாரப் பொழிவு, கீழ்க்கணக்கின் மற்றொரு நூலான விளம்பி நாகனாரின் நான்மணிக்கடிகை கூறும் புகழ் வளர்த்து வாழ்வதற்கான வழிகள் பற்றியதாக அமைந்தது. முதலில், ‘பிறர்க்களித்து உண்பதால் புகழ் வளரும்’ என்று கடிகை இயம்புவதை வள்ளுவத்தோடு இணைத்து விளக்கும் டாக்டர் இரா. கலைக்கோவன், நூல் காட்டும் வாழ்வின் எளிய வழிமுறைகளை “புகழை விதை- அதற்கு அறம் போற்றும்; அறம் நிலைப்பட வாழ- சினம் விடு”- என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறார்.
பொழிவு 4- 25.10.23
கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நல்லாதனார் இயற்றிய திரிகடுகத்தின் சிறப்புக்களைச் சுட்டியது இந்த வாரப் பொழிவு. ‘ஒவ்வொரு பாடலும் வாழ்விற்குத் தேவையான மூன்று நல்கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதால் பெயர்ப் பொருத்தம் இனிதே அமைந்தது’ என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். எடுத்துக்காட்டாகக் கடுகப் பாடல்களில் ஒன்று, நன்மைப் பயவாத மூன்றாய்- கணக்காயர் இல்லாத ஊரையும்; பிணக்கறுக்கும் மூத்தார் இல்லாத அவையையும்; பகிர்ந்துண்ணும் மனமில்லாத பக்கத்து வீட்டுக்காரரையும் காட்டுவதைச் சுவைபட விளக்குகிறார்.
பொழிவு 5- 31.10.23
முக்கடுகத்தின் 43ஆவது பாடல் கூறும் வாழ்வின் கோட்பாடுகளான- அ) வாயின் அடங்குதல்; ஆ) மாசற்ற செய்கை; இ) பொய்யற்ற நெஞ்சம் கொள் ஆகியன பற்றியது இந்தப் பொழிவு. “இதழ் மூடிக்குள் பல் அடுக்குகளின்பின் பக்குவமாய்ச் சிறை வைக்கப்பட்டிருந்தபோதும் நா அடங்கி இருப்பதில்லை. வாய்ப்பமையும் போதெல்லாம் வெளிப்பட்டு வேதனைகளை விதைத்துவிடுகிறது,” என்று அடங்காத நாவின் விளைவுகளை அழகாக விளக்குகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.




