ஒரு கோபுரத்தின் கதை

இரா. கலைக்கோவன்

திருப்பைஞ்ஞீலி கோபுரம்

கோபுரங்களுக்குக்கூட கதை உண்டா எல்லாக் கோபுரங்களுக்கும் கதை இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், சில கோபுரங்களின் கதைகள் கல்வெட்டுகளாகக் கண்முன் வளர்கின்றன. பைஞ்ஞீலிக் கோபுரத்தின் கதை மூன்று கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது. கதைக்குள் போவதற்கு முன், ‘கோபுரம்’ எது என்பது தெரியவேண்டாமா? ஒரு கோயிலின் நுழைவாயிலும் அதன் மேலெழும் கட்டுமானமும்தான் கோபுரம். பலர் இறைவன் உள்ள கருவறைக் கட்டுமானத்தையும் கோபுரம் என்றே அழைக்கிறார்கள். ஆனால், அந்த அமைப்பிற்கு விமானம் என்று பெயர்.

‘திருப்பைஞ்ஞீலி’ என்று திருவுடன் இணையும் பைஞ்ஞீலி, சிராப்பள்ளி மாவட்ட மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள ஊராகும். முதல் இராஜராஜர் காலந்தொட்டுக் கல்வெட்டுகள் பெற்று விளங்கும் இக்கோயில் தேவார மூவரால் பாடப்பெற்றது. சூழவுள்ள வீதியையும் சேர்த்து நான்கு சுற்றுகள் கொண்டுள்ள இக்கோயிலின் மூன்றாம் சுற்றில் பொதுக்காலம் 8ஆம் நூற்றாண்டுக் குடைவரைக் கோயில் உள்ளது. தென்தமிழ்நாட்டிலுள்ள இரண்டே சோமாஸ்கந்தர் குடைவரைகளில் இது ஒன்று. தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய இக்குடைவரையில் மட்டும்தான் உமையன்னை வலப்புறமும் சிவபெருமான் இடப்புறமுமாய் இடையில் குழந்தை முருகனுடன் அமர்ந்துள்ளனர். வேறெந்தக் குடைவரையிலும் இந்த இட, வல மாற்றம் இல்லை.

இந்தச் சுற்றின் வாயிலாகவே எழுநிலைக் கோபுரம் ஒன்றமைக்கச் சோழர் கால மக்கள் விரும்பினர். அதற்கான பணி மூன்றாம் குலோத்துங்க சோழர் ஆட்சியில் பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்தது. திரிபுவன வீரதேவராகக் கல்வெட்டுகள் கொண்டாடும் இம்மூன்றாம் குலோத்துங்கர் அப்பெயரிலேயே கும்பகோணத்திற்கருகில் உருவாக்கிய திரிபுவன வீரேசுவரம் கோயிலின் முதற்கோபுரம் போலவே கருதப்பட்டுப் பைஞ்ஞீலிப் பணி வளரத் தொடங்கியது.

பேரளவினதாக ஏழுநிலைகள் கொண்டதாய் உருவாக்க எண்ணித் தொடங்கப்பட்ட இக்கோபுரத்தின் துணை, தாங்குதளங்களின் கட்டமைப்புப் பார்த்தாலே, எத்தகு எதிர்பார்ப்புடன் இக்கோபுரம் உயரத் தொடங்கியது என்பது புரிந்துவிடும். குலோத்துங்கரின் 31ஆம் ஆட்சியாண்டில் பதிவாகியுள்ள கல்வெட்டு, இக்கோபுரப் பணிக்கான செலவுகளைச் சந்திக்க, ஆதனூர் என்ற ஊரையே அதன் வருவாய், வரிகள் உட்பட மன்னர் அரசாணை வழிக் கோயிலுக்குக் கொடையளித்ததை உணர்த்துகிறது.

கீழ்த்தளம் எழும்போதே கட்டுமானச் செலவுகள் கைமீறிப் போனதால், ஆதனூர் வருவாய் போதாத நிலை ஏற்பட்டது. அதனால், தம் 36ஆம் ஆட்சியாண்டில் பெரியகள்ளிக்குடி என்னும் ஊரை அதன் வரி, விளைவு உட்படக் கோயிலுக்களித்து மற்றோர் அரசாணை மன்னரால் பிறப்பிக்கப்பட்டது.

கோபுரத்தின் வெளிப்புறத்தே காவலர் சிற்பங்கள் அமைந்தன. உட்பகுதியில் தெற்கிலும் வடக்கிலுமாய் 12 பெருந்தூண்கள் நிறுவி, ஒவ்வொரு தூணையும் பல சதுரங்களாக வரையறுத்த சிற்பிகள், ஒவ்வொரு சதுரத்திலும் அழகான சிற்பங்களைச் செதுக்கினர். சோழர் கால ஆடற்கோலங்கள், பூதங்களின் பல்வேறு அமர்வுகள், இறைவடிவங்கள் என அந்த 12 தூண்களில் அமைந்த 157 சிற்பங்களும் சோழர் கலைமுறைக்கும் சமயச் சிந்தனைகளுக்கும் சான்றுகளாயின. உட்பகுதியின் மேற்புறத்தே வடக்கில் கங்காளரையும் தெற்கில் சிவபெருமான் உமை இணையையும் பெருஞ்சிற்பங்களாய்க் காட்டிய சிற்பிகள், தூண்களுக்கு இடைப்பட்ட ஈரடுக்கு மாளிகையைத் தங்கள் கற்பனை வளத்தால் செழுமையாக்கினர். பிற்சோழர் கால ஆடற்கலைப் பெருமை விளம்பும் இந்த மாளிகைச் சிற்பங்களும் இதை அலங்கரிக்கும் தூண்களின் வடிவமைப்பும் கண்களில் நிற்கும் கலைச் சிறப்பின.

கோபுரத் தூண்கள்

மூன்றாம் குலோத்துங்கரை அடுத்து வந்த மூன்றாம் இராஜராஜர் காலத்தில் பாண்டியர் எழுச்சி ஏற்பட்டது. இராஜராஜருக்கு உதவ மைசூரிலிருந்து ஒய்சள அரசர் படை நகர்த்தினார். சோழ, பாண்டிய, ஒய்சளப் படைகளுக்கிடையே பைஞ்ஞீலியும் அதைச் சுற்றியிருந்த பாச்சில் கூற்றமும் பேரிழப்பைச் சந்தித்ததால், கோபுரப்பணி தடைபட்டது. குறைபணியாய் நின்ற இக்கோபுரத்தை முழுமையுறச் செய்யவேண்டும் எனும் அவா பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் இறுதியில், மாறவர்மர் குலசேகர பாண்டியரின் 27ஆம் ஆட்சியாண்டில் பெருந்தீயாய் எழுந்தது.

தவப்பெருமாள் முதலியாண்டான் என்பார் பொறுப்பேற்றார். சித்ரமேழிப் பெரியநாட்டார் துணையாயினர். நாட்டார் உறுப்பினர் ஒவ்வொருவரும் அவரவர் நிலங்களின் அளவுக்கேற்பப் பொருளோ, விளைவோ அளிக்க முடிவாயிற்று. அந்தப் பெருங்கருணையால் கீழ்நிலை முற்றுப்பெற்று இரண்டாம் நிலை தொடங்கப் பெற்றாலும் கோபுரப்பணி முடிவடையவில்லை.

ஈரடுக்கு மாளிகை

திரிபுவனவீரேசுவரத்தினும் சிறப்பான படைப்பாக விளங்கியிருக்க வேண்டிய இந்தப் பைஞ்ஞீலிக் கோபுரம், பலமுறை முயன்றும் இரண்டாம் தளத்துடன் நிறைவடையாமல் நின்றதற்குத் தொடர்ந்த போர்களும் நிலையற்ற அரசியலுமே காரணங்களாயின. முற்றுப்பெறாது போனாலும் தான் வளர்ந்த காலத்தின் சமூகப் பண்பாட்டுப் படப்பிடிப்பாய் 12 தூண்களும் 157 சோழச் சிற்பங்களுமாய் எழுச்சியோடு நிற்கும் இந்தக் கோபுரத்தின் கதை கண்களை நனைத்தாலும் இருக்கும் இந்த நிலையிலும் அது கவிதையாகவே உள்ளம் நிறைக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக