மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 3. மீனாட்சிநாயக்கர் விளக்குமாலை

அன்புள்ள வாருணி, நீ எழுதியிருப்பது சரிதான். தேவார மூவரில் நீண்ட காலம் மதுரையில் தங்கியவரும் அதைப் பாடிப் பதிகம் வளர்த்தவரும் சம்பந்தர்தான். அதனால்தான், ஆலவாய்க்கு 9 பதிகங்கள் வாய்த்துள்ளன. சம்பந்தருக்கும் மதுரைக்கும் உள்ள உறவைச் சேக்கிழார் விரிவாகப் பேசியிருக்கிறார். அது தொடர்பான பெரியபுராணக் காட்சிகள் படிக்கத் தக்கவை. பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியின் அழைப்பேற்று அரசரின் வெப்புநோய் தீர்த்ததுடன், சைவத்தின் பேரெழுச்சியைப் பதிவுசெய்தவர் சம்பந்தர். அவரது பதிகங்களே அதற்குச் சான்று. நாவுக்கரசரும் மதுரைக் கோயிலைப் பாடியுள்ளார். சுந்தரர் பதிகந்தான் கிடைக்கவில்லை. என்றாலும், சேக்கிழாரின் கூற்றை ஏற்றால் சுந்தரரும் ஆலவாய் வந்தமை புலப்படும்.

பத்திமைக் காலத்தில் பாண்டியநாட்டின் தனிப்பெருங் கோயிலாய்த் திகழ்ந்த ஆலவாய் தொடர்ந்து வந்த அரசமரபுகளால் புரக்கப்பட்டாலும், அதன் மலர்ச்சி குன்றிய காலமும் இருக்கத்தான் செய்தது. அதனால்தான், கோயில் வளாகத்தில் பழங்கல்வெட்டுகளைக் காணக்கூடவில்லை. நடுவணரசின் தொல்லியல்துறை இவ்வளாகத்திலிருந்து படியெடுத்துள்ள 64 கல்வெட்டுகளில் முதலாம் சடையவர்மர் குலசேகரபாண்டியரின் கல்வெட்டே (பொ. கா. 1194) காலத்தால் முற்பட்டது.

வாருணி, மதுரைக் கோயில் என்றாலே நம் நினைவுக்கு வருபவர்கள் நாயக்க அரசர்கள்தான். ஆனால், வரலாற்றுச் சான்றுகளைப் புரட்டினால், இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலமே இக்கோயிலை வளப்படுத்தியதென்பது புலப்படும். இங்குள்ள 44 கல்வெட்டுகள் அவர்தம் கொடையுள்ளம் காட்டுகின்றன. நடுவணரசின் கணக்குப்படி விஜயநகர நாயக்க அரசர்களின் பதிவுகளாய் இங்குள்ளவை 19தான். இந்தச் சூழலில்தான் வாருணி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை எங்கள் ஆய்வுமையம் அணுகியது.

ஒலி ஒளிக் காட்சிக்கான கருத்துருவைப் பெறக் கோயில் முழுவதும் உலாவந்தோம். அங்குலம் அங்குலமாக அவ்வளாகத்தை ஆராய்ந்த சூழலில்தான், அதுவரை வெளிச்சம் காணாத பல காட்சிகள் எங்களுக்காகவே காத்திருந்தாற் போல் பளிச்சென்று தோற்றம் தந்தன. கோயிலின் எல்லாப் பகுதிகளிலும் இப்படி இலைமறை காயாக இருந்து கண்காட்டியவற்றுள் இந்த விளக்குத்தோரணங்களும் அடக்கம்.

நாயக்க அரசமரபின் நாயகராக விளங்கிய திருமலை நாயக்கரைக் கேள்விப்படாதவர் இருக்கமுடியாது. அவருடைய அமைச்சர்களுள் ஒருவராக வாழ்ந்தவர்தான் மூன்றாம் மீனாட்சி நாயக்கர். அவரை ஆதிமீனாட்சிநாயக்கர் என்று பெருமைப்படுத்துகிறது கல்வெட்டு. ஆலவாய்க் கோயிலைத் திருமலைநாயக்கர் விரிவாக்கம் செய்தபோது தம் பணியாக ஒரு மண்டபத்தை எடுப்பித்தார் இவ்வமைச்சர். அவர் பெயராலேயே இன்றும் விளங்கும் அம்மண்டபத்தின் பின்பகுதியில் அதையடுத்துள்ள இருட்டுமண்டபமாம் முதலிப்பிள்ளை மண்டபத்தின் முன்னுள்ளது மூன்றாவது விளக்குத்தோரணம். அதில் நம் பேராசிரியர் நளினி கண்டறிந்த 82 வரிகளில் அமைந்த தமிழ் எழுத்துப் பொறிப்பு இந்த விளக்குமாலையை, ‘ஆதிமீனாட்சி நாயக்கர் உபயம்’ என்கிறது.

ரோஸ்பீட்டர் தோரணம் போலவே கீழே யானைகள் மேலே காவலர்கள் கொண்டெழும் இந்தத் தோரணம், இருபுறத்தும் 6. 89 மீ. உயர்ந்து, பிறைநிலவாய் வளைந்து, கீர்த்திமுகத் தலைப்பில் முடிகிறது. வளைவின் தொடக்கத்தில் பக்கத்திற்கு ஒருவராக உச்சிக்கொண்டையிட்ட வானவமகளிர் ஒரு கையில் அகலும் மறு கையில் மணியுமாய் நிற்க, இருபுறத்தும் அவர்களைத் தொடர்பவர்களாய் உயர்த்திய முழங்காலுடன் ஊர்த்வஜாநு கரணத்தில் பக்கத்திற்கு 13 அழகியர். இரு கைகளிலும் மலர் கொண்ட இந்தக் கரணச் செல்விகளால் நாயக்கர் தோரணம் ரோஸ்பீட்டர் படைப்பை அழகில் விஞ்சி நிற்கிறது. செல்வியர் தலைக்கருகே நீளும் தண்டுகள் அகலேந்த, கீர்த்திமுகத்திற்குக் கீழிருக்குமாறு யானைத்திருமகள்.

மீனாட்சிநாயக்கரின் ஆதிதோரணம் சிதைந்ததால் பொ. கா. 1898 நவம்பர் 21ஆம் நாள் சிவகங்கை ஜமீன்தார் கௌரி வல்லபதேவர், மீனாட்சி நாயக்கரின் வாரிசு பங்காரு திருமலைசாமி மேலாண்மையில் செய்து வைக்கப்பட்ட இத்தோரணம் ஆவியூரை உள்ளடக்கிய 5 ஊர்களின் வருவாயில் உருவானது. 1300 அகல்களுடன் எண்ணிக்கையிலும் வடிவமைப்பிலும் கம்பீரத்திலும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விளக்குமாலைகளையும் விஞ்சி ஒளிரும் இந்த அழகிய தோரணத்தைச் செய்த பெருமைக்குரியவர் திருநெல்வேலி முத்துசாமி ஆசாரியின் மகனான திரு. இராசகோபால் ஆசாரி.

கலைத்திறன் படைத்த அவரது கைவளமும் கற்பனையாற்றலும் மின்னி மிளிரும் இந்த விளக்குமாலை 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த பித்தளைப் படைப்புகளின் செழுமைக்குச் சான்றாய் நம் கண்முன் நிற்கிறது. இதிலுள்ள எழுத்துப் பொறிப்பு இத்தோரணத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட பித்தளையின் அளவைத் தருவதுடன், தாங்கல்கள், மரஏணி ஆகியவற்றிற்கான செலவினங்களையும் கணக்குச் சுத்தமாகப் பதிவுசெய்துள்ளது.

இந்த எழுத்துப்பொறிப்பு இல்லாது போயிருந்தாலோ அல்லது கண்டறியப்படாதிருந்தாலோ தோரணத்தின் வரலாறே இருளடைந்திருக்கும். ஒளி உமிழவே உருவாக்கப்பட்ட இந்த அகல்தோரணத்தில், அதன் வரலாற்றைப் பொறித்தவர்களுக்கும் அதைத் தம் கடினஉழைப்பால் கண்டறிந்து வெளிப்படுத்தியவருக்கும் நன்றி சொல்வோம் வாருணி. இது போன்ற பதிவுகள்தான் நமக்கு வரலாறு தருகின்றன. அதனால், இத்தகு பதிவுகளை உருவாக்குவதுடன் உருக்குலையாமல் காப்பதும் நம் கடமை.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 2. ரோஸ்பீட்டரும் சையது இஸ்மாயிலும்


அன்புள்ள வாருணி, நீயும் நானுமாய் மதுரைக் கோயிலைப் பார்த்தபோது, ‘எவ்வளவு பெரிய வளாகம்!’ என்று நீ வியந்தது உனக்கு நினைவிருக்கலாம். அப்பயணத்தின் போது மதுரையைப் பற்றி மிகுதியும் பேசியதை நினைவுகூர்கிறேன். நீ குறிப்பிட்டாற்போலத் தமிழ்நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான பேரூர்களில், சங்க இலக்கியம் ஒன்றுக்குத் தலைப்பாகும் பேறு மதுரைக்கு மட்டுமே வாய்த்தது. மறக்கக்கூடிய இலக்கியமா மதுரைக்காஞ்சி!

‘மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை’ என்றல்லவா அதில் மதுரையை வியந்திருக்கிறார் மாங்குடி மருதனார். அந்த மதுரையின் மகுடம்தான் மீனாட்சி சுந்தரேசுவரர் வளாகம். அதிலுள்ள பெருமண்டபங்களுள் ஒன்றே வீரவசந்தராயர் மண்டபமாய் அழைக்கப்படுகிறது. பொ.கா. 1611இல் மதுரை நாயக்க அரசமரபின் 6ஆம் பட்டமாகக் கருதப்படும் முத்து வீரப்ப நாயக்கரால் எழுப்பப்பட்ட இம்மண்டபத்தை மதுரைக் கோயில் திருப்பணிமாலை, ‘மண்டபக் குலதீபம், மண்டபங்களுக்கு நாயன், மண்டப சிரோ ரத்தினம்’ என்றெல்லாம் போற்றிக் களிக்கிறது.

புதுமண்டபத்தை ஒத்த நீளமுள்ள இந்த வீரவசந்தராயர் மண்டபத்தின் பின்பகுதியில்தான் பேச்சிமண்டப வாயிலுக்கு அழகூட்டுமாறு அமைந்துள்ளது இரண்டாம் விளக்குத்தோரணம். அதன் இருபுறப் பித்தளைத்தூண் தாங்கல்களும் 6. 13 மீ. உயரமுடையவை. 70 செ. மீ. அகலமுள்ள அவற்றைத் தந்தங்களில் பூண்கள், முகபடாம், மணிமாலைகள், தாள்செறிகளுடன் பக்கத்திற்கு ஒன்றாய் நிற்கும் எழிலார்ந்த யானைகள் தாங்க, மேற்றளங்களில் கால்களை சுவஸ்திகமாய் இருத்தியுள்ள காவலர். அவர்தம் கைகளில் ஒன்று கடகம் காட்ட, மற்றொன்றில் உருள்பெருந்தடி.

இந்தக் காவலர் மீது வளரும் அகல் அடுக்குகள் பிறைநிலவாய் வளைந்து உச்சியில் கீர்த்திமுகம் கொண்டு முடிகின்றன. கீர்த்திமுக வாயிலிருந்து வெளிப்படும் தீச்சுடர்கள் மகரங்களாக, பிறைவளைவில் கொடிக்கருக்குகள் தழுவிய தாவுயாளிகள். பக்கத்திற்குப் பதின்மூன்றாய் வளரும் அந்த யாளிகளும் அகல் தாங்கிகள்தான் வாருணி. தூண்கள் பிறையென வளையுமிடத்துப் பதக்கமாலையுடன் ஒரு கையில் அகலும் ஒரு கையில் மணியுமாய்ப் பக்கத்திற்கொரு வானவர்.

கீர்த்திமுகத்திற்கு நேர் கீழே தாமரைமலரில் அர்த்தபத்மாசனத்தில் பின் கைகளில் தாமரை மொட்டுகளுடன் யானைத்திருமகள். முன் கைகள் காப்பும் அருளும் காட்ட, அம்மையின் இருபுறத்தும் துளைக்கைகளில் நீர்க்குடங்களுடன் அலங்கரிக்கப்பட்ட யானைகள்.

கம்பீரமும் கவர்ச்சியுமாய்த் தாமரை அடுக்கென விரிந்து கண்களை நிறைக்கும் இந்த விளக்குமாலையிலும் இரண்டு எழுத்துப் பொறிப்புகளை நளினி கண்டறிந்தார். பொ. கா. 1819இல் செதுக்கப்பட்டுள்ள அவற்றுள், மத நல்லிணக்கப் பார்வையில் அமைந்திருக்கும் வலப்புறப் பொறிப்பு அக்காலத்தே மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக விளங்கிய ஆங்கிலேயரான ரோஸ்பீட்டரின் ஆணைக்கிணங்க, மதுரை மாடக்குள வட்டாட்சியர் பொறுப்பிலிருந்த திரு. சையது இஸ்மாயில் அனைத்து மக்களுக்குமாக இந்த விளக்குத்தோரணத்தை அமைத்ததாக அறிவிக்கிறது.

பூசநட்சத்திரம் விளங்கிய பிரமாதி ஆண்டு ஆவணி 30இல் மீனாட்சிசுந்தரேசுவரர் திருமுன்னில் வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைக்கப்பட்ட இம்மகரதோரண விளக்குமாலையில் 616 விளக்குகள் இருப்பதாகக் கூறும் இப்பதிவு, இதற்கான வெண்கலம், மெழுக்கு வகையறா, சில்லறை சாமான், கூலி இவற்றிற்காக 1500 பணம் செலவழிக்கப்பட்டதாகச் சொல்வதுடன், இவ்விளக்குத்தோரணம் எந்நாளும் சுடர்விட்டு ஒளிர வேண்டுவதுடன், இதைக் காணும் மக்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் அருளைச் சிந்திக்கவேண்டும் என்றும் இறைஞ்சுகிறது.

புகழ் பெற்ற இந்துக் கோயிலில் மக்கள் இறையருள் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கிறிஸ்துவ ஆட்சியரும் இசுலாமிய வட்டாட்சியரும் செய்தமைத்த இந்த மகரதோரண விளக்கு, சிலம்பம் மாம்பழம் ஆசாரி மகன் முத்து வயிரவன் ஆசாரி, காமாட்சி ஆசாரி தம்பி பரிமணம் ஆசாரி, அம்மமுத்து ஆசாரி மகன் சொக்கலிங்க ஆசாரி ஆகியோர் கைவண்ணத்தில் உருவானதென இரண்டாம் செதுக்கல் கூறுகிறது.

இத்தோரணத்தின் பின்புற வாயில்நிலைக் கீழ்ப்படியை மூடியுள்ள பித்தளைத்தகட்டின் முகப்பில் வலப்புறம் நால்வரும் இடப்புறம் ஐவருமாய்க் கோயிலுக்கு வருபவர்களை வரவேற்பார்போலக் கூப்பிய கைகளுடன் ஆடவர்கள்.

ஒரு மண்டபத்தில் அமைந்து மற்றொரு மண்டப வாயிலை அலங்கரிக்கும் இந்த வீரவசந்தராயர் விளக்குமாலை அதில் இடம்பெற்றிருக்கும் கனிவான வேண்டுகோளால் பெருஞ் சிறப்புப் பெறுகிறது. தமிழ்நாட்டுக் கோயில்களில் இது ஒத்த எழிலார்ந்த விளக்குமாலைகள் பலவாய் இருந்தபோதும் ரோஸ் பீட்டர், இஸ்மாயில் கூட்டுறவில் அமைந்ததே இதற்கு நிகரற்ற பெருமை சேர்க்கிறது.

வாருணி, அடுத்த முறை மதுரை போனால், இந்த விளக்குத் தோரணத்தைக் கட்டாயம் பார். இதைச் செய்தமைத்தவர்களையும் வரவேற்பவர்களையும் நீ அறிந்தவர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்து. மீனாட்சி நாயக்கர் மண்டபத் தோரணம் அடுத்த மடலில்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 1. புவனேசுவர விளக்கு

அன்புள்ள வாருணி, நலந்தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னோடு பேச வாய்த்துள்ளது. எழுத்துப் பேச்சாகுமா என்று நீ கேட்கலாம். உன்னோடு நிகழும் எதுவும் எனக்கு உரையாடல்தான். நண்பர் ஒருவர் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பற்றி நூல் உருவாக்குவதாகவும் அதில் என் பணியாய்ச் சில கட்டுரைகள் அமையவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் தந்தை மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையிலும் அம்மா பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையிலும் பணியாற்றிய காலத்து ஏறத்தாழ ஐந்தாண்டுகள் என் பள்ளிப் பருவ வாழ்க்கை மதுரையில்தான்.

மீனாட்சிக் கோயில் திருவள்ளுவர் மன்றத்தில் அப்பாவை அடிக்கடிப் பேச அழைப்பார்கள். அருமையான மலை வாழைப்பழம் உண்ணக் கிடைக்கும் என்பதால் நான் தவறாது உடன் செல்வேன். அந்த வயதில் கோயில் புரிந்ததில்லை என்றாலும், வளாகத்தில் சுற்றாத இடமில்லை. பொற்றாமரைக் குளமும் புதுமண்டபமும் இசைத்தூண்கள் உள்ள சுற்றுவெளியும் என்னால் மறக்கவே முடியாத விளையாட்டுக் களங்கள்.

1959இல் அப்பா சென்னைப் பல்கலைக்கு வந்தார். மதுரைத் தொடர்பு அன்றோடு முடிந்து சென்னை வாசியானேன். மருத்துவம் முடிக்கும்வரை சிங்காரச் சென்னைதான் என்னை வடிவமைத்தது. காதலும் திருமணமும் கண்மருத்துவப் பணியும் என்னைத் திருச்சிராப்பள்ளிக்கு நகர்த்தின. 1975இல் இருந்து இந்தக் காவிரி மண்தான் எனக்குள் கலை வளர்த்து வருகிறது. உறையூர்ப் பஞ்சவர்ணசாமி கோயிலில் நான் பார்த்து வியந்த சைக்கிள் சிற்பத்தின் வடிவில் வந்த வரலாறு என் பயணம் மாற்றிப் பாதையைத் திருப்பியது. கோயில்களோடு கையிணைத்த பிறகுதான் எது வரலாறு என்பதே எனக்குத் தெளிவானது.

வாருணி, எதையோ சொல்லத் தொடங்கி எங்கோ போய்விட்டேன். நண்பரின் மதுரைக் கோயில் நூலுக்கு எழுத ஒப்புக் கொண்டதும், அக்கோயிலில் ஒலி, ஒளிக் காட்சி அமைக்கக் கருதிய அரசின் வேண்டுகோளேற்று நானும் பேராசிரியர் மு. நளினியும் அங்குத் தொடராய்வுகள் மேற்கொண்டமை நினைவுக்கு வந்தது. என் எண்ணவோட்டம் அறிந்தவராய் நளினி கணினித் தொகுப்புகளைக் கண்முன் நிறுத்தினார். ஒவ்வொரு காட்சியும் என்னை எழுதத் தூண்டின.

மதுரையைப் பற்றி எவ்வளவோ கட்டுரைகளும் நூல்களும் வந்திருந்தபோதும் பார்க்காமல் விட்டதும் சொல்லாமல் போனதும் கோயில் முழுவதுமாய் நிறைந்திருப்பதை உணர்ந்தேன். எழுத நினைத்ததுமே நினைவில் நிறைந்தவர் கண்ணன் விக்கிரமன்தான். அவரது ஆசிரியத்தில் வெளிவரும் இலக்கியப் பீடத்தில் ஒரு தொடராக எழுத அனுமதி கேட்டேன். ‘உடனே தொடங்குங்கள்’ என்று உள்ளம் பூரித்தார் கண்ணன். தந்தையைப் போலவே துடிப்பான செயற்பாடுகள்.

வாருணி, ஒரு கோயிலின் சிற்பங்கள் குறித்து ஓர் இதழில் தொடராக எழுதப்போவது இதுவே முதல் முறை. என் பார்வைகளின் விளைவான படப்பிடிப்புகளை உன்னோடு பகிர்ந்து கொள்வது எப்போதுமே எனக்குப் பிடித்தமானது. உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்வுகளை, அவை வரலாறு தொட்டே வளர்ந்தபோதும் நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்திக் களிப்பது சுகந்தானே.

சம்பந்தரால், ‘கூடல் ஆலவாய்’ எனப் போற்றப்படும் இக்கோயில் வளாகத்திலுள்ள மண்டபங்கள் பலவாகும். அவற்றுள் மூன்று மண்டபங்கள் அவற்றின் வாயிலைத் தழுவியுள்ள விளக்கு மாலைகளால் சிறப்புப் பெறுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகளில் தீபமாலைகளாகச் சுட்டப் பெறும் இந்த அகல் அடுக்கிய அழகுத் தோரணங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கின்றன.

மீனாட்சிக் கோயிலின் சிற்பக்களஞ்சியமாக விளங்கும் சிறந்த மண்டபங்களில் கம்பத்தடி மண்டபமும் ஒன்று. மையப் பகுதிக் கூட்டுத்தூண்கள் ஒரு சதுரமாக வடிவமைக்கும் காட்சிக் கூடத்தின் முன் இந்த அகல்தோரணம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கீர்த்திமுகத் தலைப்புடனான மகர திருவாசியில் மூன்றடுக்கு அகல்கள். அவற்றைத் தழுவி மேலடுக்காய் இலை போல் மதலைகள். தோரணத் தலைப்பில் நெற்றிச்சுட்டிப் போலத் தொங்கல்.

இந்த மகரத்திருவாசியை இருபுறத்தும் தாங்கும் தூண்களிலும் அகல் வரிசைகள். தாங்கலின் மேற்பகுதியில் விரிந்த ஊமத்தம்பூவாய் அழகிய நாணுதல்கள். அவற்றின் கீழே தாவும் யாளிகள். தாங்கலின் கீழ்ப்பகுதியிலோ, பக்கத்திற்கு ஒருவராகக் கருவிகளுடன் காவலர். இந்தக் கம்பத்தடித் தோரணத்தின் வலப்புறம் மலர்ப் பதக்கங்களுடன் பொதுக்காலம் 1654 ஜெய ஆண்டு மாசி மாதம் 12ஆம் நாள் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை நம் பேராசிரியர் நளினிதான் கண்டறிந்து படித்தார்.

விசுவநாத நாயக்கர் மரபினரான திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகக் குப்பையாண்டிச் செட்டியார் எனும் பெரியவர், ‘புவனேசுவர விளக்கு’ என்ற பெயருடன் இந்த மகர தோரண விளக்கைச் செய்தளித்திருப்பது கல்வெட்டால் தெரிய வந்தது. இந்தத் தோரணம் கோயிலில் அமையத் துணை இருந்தவர் அப்போது இங்குப் பாரபத்தியமாகப் பணியிலிருந்த நாவாயி ஆனந்த வீரப்பச் செட்டியாராம்.

இதைவிடச் சிறப்பானவை வீரவசந்தராயர், மீனாட்சி நாயக்கர் மண்டபத் தோரணங்கள். அவற்றிலும் கல்வெட்டுகள். தகவல்கள் அடுத்த மடலில்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

மரபுரிமை வாரச் சிறப்புத் தொடர்- ‘பாரம்பரியப் பெட்டகங்கள்’

உலக மரபுரிமை வாரத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையமும் இணைந்து வழங்கிய, ‘பாரம்பரியப் பெட்டகங்கள்’ என்ற சிறப்புத் தொடர் நிகழ்ச்சி, திருச்சிராப்பள்ளி பண்பலை 102.1இல் 19.11.25 முதல் 25.11.25 வரை ஒலிபரப்பானது. பெருமைக்குரிய பழங்கோயில்கள், கோட்டைகள் மற்றும் பழங்கால நினைவுச் சின்னங்கள் பற்றிய செய்திகளைத் தம்முடைய வரலாற்றாய்வுக் குழுவினருடன், சுவையான கலந்துரையாடலாக டாக்டர் இரா. கலைக்கோவன் அமைத்திருந்தது மேலும் ஆர்வமூட்டியது.

ஏழு நாள் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவினைக் கீழே இணைப்புகளில் கேட்டு மகிழலாம்.

1. அப்பருக்குச் சோறூட்டிய அழகன் கோயில்திருப்பைஞ்ஞீலி

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் அர. அகிலா, பேராசிரியர் மு. நளினி

2. பெருந்திருக்கோவிலும் பாறை அகழ்வுகளும்திருவெள்ளறை

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

3. விண்வருடும் இராஜேந்திரப் பெருமிதம்கங்கை கொண்ட சோழபுரம்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

4. சிற்பச் செழுமையின் சிகரம்புள்ளமங்கலத்து ஆலந்துறையார்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், வரலாற்றாய்வாளர் செல்வி அருண், பேராசிரியர் மு. நளினி

5. தேவன் கோவிலும் தேவியர் கற்றளிகளும் – திருவையாறு

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், விரிவுரையாளர் ஹேமலைலா, பேராசிரியர் மு. நளினி

6. குன்றில் தோன்றிய கோவில்கள் – திருமெய்யம்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், வரலாற்றாய்வாளர் செல்வி அருண், பேராசிரியர் அர. அகிலா

7. எங்கும் எதிலும் மரபுரிமை – பழங்காலச் சின்னங்கள்

கலந்துரையாடியோர்: டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் மு. நளினி, பேராசிரியர் அர. அகிலா

விருது வழங்கல் மற்றும் நூல் வெளியீட்டு விழாக்கள்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையமும் வரலாறு.காம் இணைய இதழும் இணைந்து நடத்திய இரண்டு விழாக்கள் (விருது வழங்கல் மற்றும் நூல் வெளியீடு), 03.08.25 அன்று திருவிடைமருதூர் ஶ்ரீவத்சம் முதுமக்கள் குடியிருப்பிலுள்ள பிரேமி கேந்திரம் அரங்கில் நடைபெற்றன.

முதலில், இதழியல் இமயம் பேராசிரியர் முனைவர் மா. ரா. அரசு அறக்கட்டளையின் ‘இளம் ஆய்வாளர்’ விருது, வரலாறு.காம் இணைய இதழின் பொறுப்பாசிரியர் திரு சு. சீதாராமனுக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வரலாறு.காம் இணைய இதழின் பொறுப்பாசிரியர் திரு ச. கமலக்கண்ணனுடைய ‘ஜப்பானிய பழங்குறுநூறு’ நூலை டாக்டர் இரா. கலைக்கோவன் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

அன்றைய நிகழ்வின் இணையப் பதிவை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். 

💐விருது வழங்கல் & நூல் வெளியீட்டு விழாக்கள் 💐@Srivathsam on 03-08-2025

நான்காம் புத்தகத் திருவிழா 2025, நாகபட்டினம்


நாகபட்டினம் மாவட்ட நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் மூன்றாண்டுகளாக நடத்தி வரும் புத்தகத் திருவிழாவின் நான்காம் ஆண்டு (2025) நிகழ்வுகள், ஆகஸ்டு 01 முதல் 11 வரை நடைபெற்றன. எட்டாம் நாளான 08.08.25 அன்றைய கருத்தரங்கில் டாக்டர் இரா. கலைக்கோவன், ‘நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள்’ பற்றிய பொழிவை நிகழ்த்தினார்.

அன்றைய காணொலிப் பொழிவின் இணையப் பதிவை இங்கு காணலாம். 

முதலாம் இராஜேந்திரரின் கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம் பற்றி வரலாற்றுத் துறை அறிஞர்களின் கருத்துகள் தாங்கிய காணொலி, இந்து இதழின் மின்தளத்தில் 26/07/25 அன்று பதிவானது. அதில், முதலாம் இராஜராஜருக்கும் வானவன்மாதேவிக்கும் பிறந்த திருமகன் முதலாம் இராஜேந்திரர், தமிழ்நாட்டை மிக உயர்ந்த நிலைக்குத் தம்முடைய ஆட்சிக் காலத்தில் கொண்டு சென்ற வரலாறையும், வேறு எந்த இந்திய மன்னரும் நிகழ்த்திடாத அளவுக்குக் கடல் போர்கள் நிகழ்த்தி வெற்றி கண்ட முதல் இராஜேந்திரருடைய சிறப்பையும் சுருக்கமாக விளக்கினார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள்

நாகபட்டினம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நேர்க்காணலில், நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள் குறித்த செய்திகளை டாக்டர் இரா. கலைக்கோவன் விரிவாக விளக்கினார். நிகழ்ச்சி, அம்மாவட்ட நிர்வாகத்தின் வலையொலிப் பக்கத்தில் 10.07.2025 அன்று பதிவிடப்பட்டது.

பேசும் தலைமை/ நியூஸ் 7 தமிழ்

25.06.2017 அன்று ‘நியூஸ் 7 தமிழ்’ அலைவரிசையில் ஒளிபரப்பான டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்காணலை இங்கே காணலாம்.

பந்தவிளக்குகளும் பங்கேற்ற ஊர்களும்

இரா. கலைக்கோவன்

காலந்தோறும் வரலாற்றைப் பதிவுசெய்ய மக்கள் கையாண்ட முறைகளுள் எழுத்துப் பொறிப்புகள் ஒன்றாகும். எதிலெல்லாம் முடியுமோ அதிலெல்லாம் அவ்வக் காலத்து வழக்கிலிருந்த எழுத்துகளால் அறிந்தவற்றையும் நடந்தவற்றையும் எழுதத் தொடங்கியவர்களால் கல்லில் செதுக்கப்பட்ட பதிவுகளே கல்வெட்டுகள் என அறியப்படுகின்றன. இந்தியாவில் மிக அதிக அளவிலான கல்வெட்டுகள் தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே கிடைப்பதாக இதுவரை வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன. முறை சாரா திருப்பணிகளால் காலந்தோறும் அழிவுக்குள்ளான கல்வெட்டுகள் ஏராளம் என்றாலும், எஞ்சியிருப்பவை பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடர் நழுவாமால் பகிர்ந்துகொள்கின்றன. அத்தகு கல்வெட்டுகளுள் ஒன்றுதான், பந்தவிளக்குகளையும் அவற்றுக்கான பொறுப்பைப் பகிர்ந்துகொண்ட ஊர்களையும் வெளிச்சப்படுத்துகிறது.

திருமுதுகுன்றம் கோயில்

தமிழ்நாட்டின் பெருங்கோயில்களுள் ஒன்றைத் தக்கவைத்துள்ள தேவார ஊர்களுள் ஒன்றான திருமுதுகுன்றம் இன்றைக்கு விருத்தாசலமாக அறியப்படுகிறது. திருமுறைப் பாடல் பெற்ற இக்கோயில் இறைவனைப் பதிகங்கள் முதுகுன்றத்தார் என்றழைக்க, கோயில் வளாகக் கல்வெட்டுகள் திருமுதுகுன்றமுடைய நாயனார் என்கின்றன. சோழஅரசி செம்பியன்மாதேவியால் கற்றளியாக்கப்பட்ட பல கோயில்களில் முதுகுன்ற வளாகமும் ஒன்றாகும். இவ்வாளகத்துள்ள, ‘ஸ்ரீபராந்தக தேவரான பெரியசோழனார் மகனார் கண்டராதித்ததேவர் தேவியார் மழபெருமானடிகள் மகளார் ஸ்ரீஉத்தமசோழர் தங்கள் ஆச்சி செம்பியன்மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்டது ஸ்ரீகோயிலும் ஸ்நபனமண்டபமும் கோபுரமும் சுற்றாலையும் பரிவாரக் கோயில்களும்’ எனும் உத்தமசோழரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இங்குள்ள சிறப்பான பதிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மிகச் சில கல்வெட்டுகளே ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகையில் அவரது தலையாய உறவுமுறைகளை விதந்தோதுகின்றன. அந்த வகையில் பேறுபெற்றவர்களாய்ச் செம்பியன்மாதேவியையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்த பூதிஆதித்த பிடாரியையும் குறிக்கலாம். திருமுதுகுன்றம் கல்வெட்டு செம்பியன்மாதேவியாரின் தந்தை, மாமனார், கணவர், மகன் என மூன்று தலைமுறை ஆண் உறவுகளைப் பகிர்ந்துகொள்கிறது. அன்னையைக் குறிக்கும், ‘ஆச்சி’ என்ற அழகான தமிழ்ச் சொல்லும் கோயிற்கட்டடக்கலை சார்ந்த கலைச்சொற்களும் இக்கல்வெட்டின் கொடைகளாகும். இது குறிக்கும் சுற்றாலையே இன்று பிரகாரம் என மாறியுள்ளது. ‘கோபுரம்’ என்ற கோயில் நுழைவாயில் கட்டுமானத்தைக் குறிக்கும் மிகச் சில பழங்கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மறக்கமுடியாத வரலாற்று நாயகி செம்பியன்மாதேவியால் கட்டப்பெற்ற இக்கோயிலுக்குச் சோழ அரசர்கள் காலத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு அளப்பரிய கொடைகள் அளிக்கப்பட்டன. அவற்றுள் தனித்த சிறப்புடன் திகழும் கொடை, பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனான குலோத்துங்கசோழக் காடவராயரால் வழங்கப்பட்டது. இரண்டாம் குலோத்துங்கர் காலச் சிற்றரசரான இவர், குலோத்துங்கர் மகனான இரண்டாம் இராஜராஜர் காலத்தில் திருமுதுகுன்றம் கோயிலில், ‘குன்றப்பெருமாள்’ என்ற திருப்பெயரில் இறைத்திருமேனி ஒன்றை எழுந்தருளுவித்தார்.

அத்திருமேனிக்காகவும் வைகாசி, ஆவணிமாதக் கொண்டாட்டங்களாகவும் கோயிலில் 36 நாள்கள் நிகழ்ந்த விழாக்களில் பந்தவிளக்குகள் ஏற்ற ஆகும் செலவுகளுக்காகக் காடவராயர், கோயில் கருவூலத்தாரிடம் 2810 காசு கொடையாகத் தந்தார். இக்காசை வைப்புநிதியாகக் கொண்டு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியால் 36 நாள் விழாவிலும் நாளும் 562 பந்தவிளக்குகள் எரிக்கவேண்டும் என்பது திட்டம். கோயிலார் கொடைத்தொகையை 70 ஊர்களுக்குப் பகிர்ந்தளித்து, அதை முதலாகக் கொண்டு விளக்கேற்றும் பொறுப்பை அந்தந்த ஊராட்சி ஏற்குமாறு செய்தனர். ஒரு விளக்கிற்கு 5 காசு வைப்புநிதி எனக் கணக்கிடப்பட்டு 2810 காசும் 70 ஊராட்சியினரிடம் பிரித்துத் தரப்பட்டது. காசு பெற்ற ஊராட்சியினர் கொடையை முதலாகக் கொண்டு அதன் வட்டியில் விளக்கேற்றும் பொறுப்பேற்றனர்.

திருமுதுகுன்றம் விமானம்

‘விளக்கேற்றக் கொடை, அதைப் பெற்ற ஊராட்சி அதன் வட்டிகொண்டு விளக்கேற்ற ஒப்பியமை’ என்பதே இக்கல்வெட்டின் அடிநாதச் செய்தி. ஆனால், இக்கல்வெட்டு வழங்கும் சமூகப் பொருளாதாரத் தரவுகள் பலவாகும். கோயிலிலுள்ள ஏழிசைமோகன் திருமண்டபத்தின் வடசுவரில் தொடங்கப்பட்டு, அங்கு இடம்போதாமையின் தென்சுவரில் தொடரப்பட்ட இக்கல்வெட்டு, தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் மிக நீளமான கல்வெட்டுகளுள் ஒன்றாகும். எத்தனையோ வகையான விளக்குகள் பற்றிப் பேசும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில், மிக அரிதாகவே இக்கல்வெட்டுச் சுட்டும் பந்தவிளக்கு பயின்று வந்துள்ளது. முதுகுன்ற விழாக்களில் எரிந்த இவ்விளக்குகளின் 562 என்ற உயர் எண்ணிக்கையும் வியக்கவைக்கிறது. ஒரு விளக்கிற்கு 5 காசெனக் கொடைப்பணம் பெற்ற ஊர்களால், 12ஆம் நூற்றாண்டில் பெண்ணாகடம், இருங்கோளப்பாடி, முதுகுன்றம் எனும் மூன்றிடங்களைச் சுற்றிலுமிருந்த பல ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் பெயர்களுடன் பழைய ஊர்களாக 32 உள்ளன. பிராமணர் குடியிருப்புகளாக 11, வணிகக்குடியிருப்புகளாக 2, கோயில் நிலமிருந்த ஊர்களாக 5 அமைய, 20 ஊர்கள் பல்வேறு பின்னொட்டுகளோடு முடியும் பெயர்களில் இருந்தன.

பெற்ற காசுக்கும் அதற்கான பந்தவிளக்கிற்கும் ஒவ்வோர் ஊராட்சியிலும் பொறுப்பேற்றவர்கள் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவேண்டும். ஆனால், அவர்களில் சரிபாதியினர் எழுத்தறிவற்றவர்களாய் இருந்தமையால் அவர்களுக்காக வேறு சிலர் கையெழுத்திட்டுள்ளனர். எழுத்தறிவின்மையை, ‘சையிஜையானமை, கைமாட்டாமை’ என்ற தொடர்களால் கல்வெட்டு குறிக்கிறது. சில ஊர்களில் பொறுப்பாளர்கள் அனைவருக்குமே பிறர் கையெழுத்திட்டுள்ளனர். ஓரிரு ஊர்களில் பொறுப்பேற்ற அனைவர் சார்பிலும் ஒருவரே கையெழுத்திட்டுள்ளார். மிகச் சில ஊர்களிலேயே பொறுப்பேற்ற அனைவரும் எழுத்தறிவுள்ளவர்களாய் விளங்கியுள்ளனர். பொறுப்பேற்ற அனைவருமே ஆண்களாக இருப்பதால், ஊராட்சிப் பொறுப்பில் இந்த 70 ஊர்களில் பெண்கள் யாரும் இல்லாமை தெளிவு. புஞ்சி, குப்பை, பிச்சன், சோறன், பன்றி, ஆவணம், மாட்டத்தான் எனச் சிலர் பெயர் கொண்டிருக்க, குடிதாங்கி, அறம், திருவரைசு போன்ற பெயர்களும் மக்களுக்கு இருந்தன.

பொறுப்பேற்றவர்களுள் பலர் பல்வேறு ஊர்களில் பிறந்தவர்களாகவும் அங்கு நிலம் உடையவர்களாகவும் இருந்தமையால், அக்கால வழக்கப்படி தத்தம் பெயருக்கு முன் பிறப்பூரையும் சுட்டியுள்ளனர். இதன்வழிக் கூடுதலாக, 85 சோழர் கால ஊர்ப்பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் ஊர்கள் 41. ஒழுகை, வாழ்க்கை, வஞ்சிரம், போகுடி, கடுகா, வரகு, ஈசால் முதலிய ஊர்ப்பெயர்கள் கவனமீர்க்கின்றன. மத்தளங்குடி எனத் தோலிசைக்கருவியின் பெயராலும் ஓர் ஊர் இருந்துள்ளது.

155 ஊர்ப்பெயர்களையும் எண்ணற்ற மக்கள் பெயர்களையும் வழங்கும் இக்கல்வெட்டு, கொடை வழங்கப்பட்ட காலத்தே சமூகத்தில் நிலவிய படிப்பறிவின் நிலையையும் படம்பிடிக்கிறது. ஒரு தனி மனிதக் கொடைக்குப் பொறுப்பேற்று அதை நிறைவேற்ற உளங்கொண்ட 70 ஊர் மக்களின் மனப்பாங்கு அன்றிருந்த கூட்டுறவுப் பார்வையையும் அறச்செயல்களில் மக்கள் காட்டிய ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதுடன், கோயில் விழாக்கள் மக்கள் பங்களிப்புடன் பொலிந்ததையும் வெளிச்சப்படுத்துகிறது.