திருமெய்யம் ஒப்பந்தம்

இரா. கலைக்கோவன்

புதுக்கோட்டைத் திருப்புத்தூர்ச் சாலையில் 20 கி. மீ. தொலைவிலுள்ளது திருமெய்யம். பொதுக்காலம் 7 – 8ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர்க் குன்றில் மூன்று குடைவரைகள் குடையப்பட்டன. ஒன்று குன்றின் மேற்பகுதியில் அமைய, குன்றின் கீழ்ப்பகுதியில் சிவபெருமானுக்கு ஒன்றும் விஷ்ணுவுக்கு ஒன்றுமாய் இரண்டு குடைவரைகள் அருகருகே உருவாயின. தமிழ்நாட்டளவில் பள்ளிகொண்ட பெருமாளுக்குப் பல குடைவரைகள் இருந்தபோதும் மெய்யம் குடைவரைதான் அளவிலும் உடனிருப்பாளர்களின் எண்ணிக்கையிலும் பெரியது. தாய்ப் பாறையிலான பள்ளிகொண்டவருடன் செய்தமைத்தவராய் நின்றருளிய பெருமாளும் இங்குள்ளார். அருகிலுள்ள சிவபெருமான் குடைவரையும் தான் கொண்டிருக்கும் பேரளவிலான லிங்கோத்பவர் வடிவத்தால் தமிழ்நாட்டின் தன்னிகரற்ற படைப்பாய் ஒளிர்கிறது. இரண்டு கோயில்களும் சமயப்பொறை நோக்குடன் அருகருகே அமைக்கப்பெற்று வாகான வருவாய் திட்டமிடப்பட்டிருந்தும் வருவாய்ப் பங்கீட்டில் நேர்ந்த இணக்கமற்ற சூழல்கள் குழப்பங்களாய்த் தொடங்கி, சச்சரவுகளாய் வெடித்து வழிபாட்டு நிறுத்தத்தில் முடிந்தன.

பள்ளிகொண்டவர்

எத்தனைக் காலம் இந்நிலை நீடித்தது என்பது தெரியாதபோதும் இதற்கான விடியல் பொ. கா. 1245இல் வந்ததை இங்குள்ள கல்வெட்டால் அறியமுடிகிறது. சோழர், பாண்டியர் பகையால் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த மைசூர் ஹொய்சளர் திருச்சிராப்பள்ளிக்கருகில் தலைநகர் உருவாக்கி ஆளத் தொடங்கிய காலமது. ஹொய்சள அரசர் வீரசோமேசுவரரின் படைத்தலைவர்கள் மெய்யத்தை உள்ளடக்கிய கானநாட்டை வென்றிருந்தனர். மெய்யத்தின் இரு கோயில் பூசல்களும் பூசை நிறுத்தமும் அவர்கள் கவனத்திற்கு வந்தபோது, உரியவாறு அதை நேர்செய்யக் கருதிப் பெருங்கூட்டமொன்றைக் கூட்டினர்.

மெய்யத்தை உள்ளடக்கிய கானநாடு என்று மட்டுமல்லாது, சுற்றிலுமுள்ள நாடுகள், நகரங்கள், ஊர்களின் ஆட்சிக் குழுவினருடன், இது சைவ, வைணவக் கோயில்களுக்கு இடையிலான சிக்கல் என்பதால் கானநாட்டுச் சைவ, வைணவப் பெரியவர்கள், அரசு உயர்அலுவலர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டனர். சைவர்கள் பக்கம் பேசத் திருக்கொடுங்குன்றம் சைவாச்சாரியார்களும் வைணவத்திற்குத் துணைநிற்கத் திருக்கோட்டியூர் திருப்பாணதாதர் குழுவினரும் வந்திருந்தனர். இரு கோயில் நிருவாகிகளும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு ஹொய்சளப் படைத்தலைவர்களான ரவிதேவரும் அப்பண்ணரும் முன்னிலை வகித்தனர்.

லிங்கோத்பவர்

‘என்ன சிக்கல்? ஏன் பூசைகள் நின்றன?’ என்ற கேள்விகளுக்கு, ‘வருவாய் இரு கோயில்களுக்கும் பொதுவாக இருந்ததால் பங்கிட்டுக்கொள்வதில் சிக்கல். ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்த சச்சரவுகளால் முதல்கள் அழிந்தன. பூசை நின்றது’ என்று நிருவாகம் விடையிறுக்க, இரு கோயில் கணக்குகளும் ஆராயப்பட்டன. சொத்து ஆவணங்கள் சோதிக்கப்பட்டன. இருப்பதும் இழந்ததும் தெரியவந்தது. இவர்களும் அவர்களுமாய்க் குறைகளை அடுக்கினாலும் இருந்தவரில் சார்பற்றோர் முடிவுகளை நோக்கிப் பேச்சை நகர்த்தினர். இரு கோயிலாரும் இணைங்கிய பிறகு படைத் தலைவர்கள் முன்னிலையில் திருமெய்யம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தின் முதல் கூறாய் வருவாய் திட்டமிடப்பட்டது. மெய்யத்திலும் அதற்கடங்கிய சிற்றூர்களிலும் பயிரிடப்பட்ட நிலவிளைச்சலில் கோயிற்கடமையாக வரவான நெல்வருவாய் ஐந்து கூறுகளாக்கப்பட்டு, பெருமாள்கோயிலுக்கு மூன்றும் சிவன்கோயிலுக்கு இரண்டுமாய்ப் பிரிக்கப்பட்டது. அருகருகே இருந்த இவ்விரு கோயில்களை அந்நாளில் வழக்கிலிருந்த தச்சன் முழக்கோலால், ஒரு முழம் கனத்தில் சுவரெடுத்துப் பிரிக்கவும் அச்சுவர் எங்கிருந்து, எப்படி, எதுவரை நீள்வது என்பது குறித்தும் முடிவுசெய்ததுடன், சுவர் நீளும் வழியிலுள்ள மரங்களை அகற்றவும் சுவரமைப்புச் செலவை இரு கோயில்களும் நெல் வருவாய் பெற்ற அதே விகிதத்தில் பகிர்ந்துகொள்வதென்றும் தீர்மானித்தனர். இரண்டு கோயில்களின் எல்லைகளும் முறையாக வரையறுக்கப்பட்டன.

அடுத்து, கோயில்களுக்கான நீர்நிலைகள் ஒதுக்கப்பட்டன. கிழக்குச் சுனை பெருமாளுக்கும் மேற்குக் கிணறு சிவபெருமானுக்குமாயின. நீர்நிலைகளில் தூர் எடுக்கும்போது அவ்வக்கோயில் உற்சவப் படிமங்களை எழுந்தருளுவித்துக் கொள்ள அனுமதியாயிற்று. ஊர் நிலப்பகுதி ஒன்று ஐந்து கூறுகளாக்கப்பட்டு மூன்றின் விளைவு பெருமாளுக்கும் இரண்டின் விளைவு சிவபெருமானுக்குமாய் ஒப்பந்தமானது. விஷ்ணு கோயிலுக்கான பழங்கொடைகளாக விளங்கிய அண்டக்குடி, பெருந்துறை நிலங்கள் அவர் பெயரிலேயே உறுதிசெய்யப்பட்டன.

இரு கோயில்களும் அவரவர் வருவாயில் கருவிக் கலைஞர்களைப் பணியமர்த்திக் கொள்ளவும் அந்தந்தக் கோயிலுக்கென அளிக்கப்பட்டிருந்த பழங் கொடைகள் பழநடை மாறாது நின்று நிலவவும் ஆணையானது. கானநாட்டு ஊற்றியூரில் பிராமணர் சிலர் விலைக்கு வாங்கி, வரியிறுக்க முடியாமல் நாட்டுப்பொதுவாக ஓலையெழுதித் தந்த மேலைப்பாதி நிலமும் அதன் வரி வருவாயும் இரு கோயில்களுக்கும் சரிபாதியாகப் பகிரப்பட்டது.

லிங்கோத்பவர்

இங்குள்ள மற்றொரு கல்வெட்டால், ‘வைஷ்ணவ மாகேசுவரம்’ என்று சுட்டப்படும் இந்தத் திருமெய்யம் ஒப்பந்தத்தின் இறுதிப்பகுதி முக்கியமானது. இரு கோயில் நிருவாகமும் அவரவர் கோயிலுக்குரிய கல்வெட்டுகள் அடுத்தவர் கோயிலில் இருந்தால் அவற்றைப் படியெடுத்துத் தத்தம் கோயிலில் பதிவுசெய்து கொள்ளலாம் என்பது இப்பகுதியின் முதற்கூறு. இக்கல்வெட்டுப் படிகளை ஏற்காதவர்கள், ‘ராஜ, மாத்ரு, நாட்டுத் துரோகிகளாய்க் கருதப்படுவர். அவர்களுக்குப் பிறப்பு, இறப்புத் துன்பங்கள் நேரும்’ என்று எச்சரிக்கும் ஒப்பந்தம், அவர்கள் அரசிற்கு 200 அச்சுத் தண்டமும் தரவேண்டும் என்கிறது.

இரண்டாம் கூறு இரு கோயில்களும் இரு வேறு வளாகங்களாகப் பிரிந்த நிலையில் இரண்டுக்கும் பொதுவான இடத்திலும் பிற பகுதிகளிலும் நேர்ந்த கல்வெட்டழிப்பு. சிவன்கோயிலில் மூன்று கல்வெட்டுகள் அழிக்கப்பட்டன. அவற்றுள், ‘பாஷை தெரியாத கல்வெட்டு’ என்ற சுட்டலுடன் இவர்களால் அழிக்கப்பட்ட கல்வெட்டு, புகழ்பெற்ற குடுமியான்மலை இசைக்கல்வெட்டொத்த அமைப்பில் இக்குடைவரை பெற்றிருந்த மற்றோர் இசைக்கல்வெட்டாகும். அதை அழித்த இடத்தில்தான் நாற்பது பேர் கையெழுத்திட்டுள்ள இந்தத் திருமெய்யம் ஒப்பந்தம் மறுசெதுக்கலாய்க் கண்சிமிட்டுகிறது. இவர்களின் அழிப்பையும் மீறி பழைய இசைக்கல்வெட்டின் எச்சங்கள் இந்தப் புதிய பொறிப்பினூடே ஆங்காங்கே தலைகாட்டுவது இவர்தம் செய்நேர்த்திக்குச் சான்றாம்.

இந்த ஒப்பந்தத்தால் இரு கோயில்களுக்குமிடையே அமைதி நிலவியதா என்றால், இல்லை என்கிறது இங்குள்ள இன்னொரு கல்வெட்டு. சிவன்கோயில் கருவிக் கலைஞர்களுக்கான நிலமளிப்பில் திருவேங்கடத்து நம்பி செந்தாமரைக் கண்ணரால் நேர்ந்த துன்பத்தை ஈடுசெய்ய, அக்கோயில் நிருவாகம் மீண்டும் நாடு, நகரம், ஊராட்சிகளை அணுக, அம்முறையீட்டில் உண்மை இருப்பது உணர்ந்த அப்பெருங்குழு, மெய்யம் சபைக்கு இச்சிக்கலைத் தீர்க்க ஆணையிட, ஒருவாறாக உரியது நடந்து தீர்வேற்பட்டது.

பகிர்ந்துகொள்ளும் பேரன்பு இறைவளாகங்களில்கூட இல்லாமல் போனமையால் இரு கோயில்கள் இழந்ததும் அந்த இழப்பை நேர்செய்ய ஊரும் நாடும் ஆட்சியாளரும் ஒன்றுகூடி உழைத்ததும் திருமெய்யம் ஒப்பந்தத்தின் நேர்ப்பார்வையென்றால், மரங்கள் வெட்டப்பட்டதும் வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுகள் அழிக்கப்பட்டதும் அதன் எதிர்ப்பார்வையாய் நிற்கின்றன.

இருண்ட காலமா?

இருண்ட காலமா?

இருண்டகாலத்தின் பிடியிலிருந்து தமிழகம் விடுதலையான முதல் 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக் கட்டட, சிற்பக் கலைகளில் நிகழ்ந்த வியத்தகு மாற்றங்கள் திடீரென நிகழ்ந்தவையாக இருக்கமுடியாது. கல் எனும் ஊடகமாற்றம் புதியதென்றாலும் அதன் பின்னணியிலான கலைச் சிந்தனைகளும் காட்சிப்படுத்தல்களும் சங்க, காப்பியக் காலப் பதிவுகளின் விரிவாக்கங்களாகவே உள்ளமை வெளிப்படை.

டாக்டர் இரா. கலைக்கோவன்

மா. இராசமாணிக்கனார்

மா. இராசமாணிக்கனார்

இந்திய இலக்கியச்‌ சிற்பிகள்‌ வரிசையில்‌ எழுதப்பட்டுள்ள இந்த நூல்‌, முனைவர்‌ மா இராசமாணிக்கனாரின்‌ வாழ்க்கை வரலாற்றையும்‌ அவருடைய முப்பத்தேழு ஆண்டுக்‌ காலப்‌ படைப்புகளையும்‌ வளரும்‌ தலைமுறையினர்‌ அறிந்துகொள்ள வேண்டும்‌ என்ற கருத்துடன்‌ உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கியம்‌, இலக்கணம்‌, வரலாறு, சமயம்‌, கோயிற்கலைகள்‌, கல்வெட்டு, புதினம்‌, சிறுவர்‌ இலக்கியம்‌, வாழ்க்கை வரலாறு என்று பல்வேறு துறைகளில்‌ நூல்களைப்‌ படைத்துள்ள இப்பெருமகனார்‌ சிறந்த சிந்தனையாளராக நேரிய வாழ்வு வாழ்ந்தவர்‌.

டாக்டர் இரா. கலைக்கோவன்

திருவானைக்காவில் ‘தலைப்பலி’ சிற்பங்கள் கண்டுபிடிப்பு

சமீபத்தில் திருவானைக்கா பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட முசிறி அரசினா் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியா் அர.அகிலா, திருவானைக்கா கீழ உள்வீதியிலுள்ள ஆனந்த கணபதி கோயில் நுழைவு வாயிலின் வெளிச்சுவரில் பக்கத்திற்கொன்றாக இரண்டு ‘தலைப்பலி’ சிற்பங்கள் இணைத்துக் கட்டப்பட்டுள்ளதைக் கண்டறிந்தாா்.

இச்சிற்பங்களை ஆய்வு செய்த டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டர் இரா. கலைக்கோவன், அவை பொதுக்காலம் 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல தகவல்களுடன் நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு

மறைந்த நகரம், பொருநை

டாக்டர் இரா. கலைக்கோவன்

சைவ சமய வளர்ச்சி

மறைந்த நகரம் அல்லது மொஹெஞ்சொதரோ

வலஞ்சுழி வாணர்

வலஞ்சுழி வாணர்

குடந்தைத் தஞ்சாவூர்ச் சாலையில் 6 கி. மீ. தொலைவிலுள்ள திருவலஞ்சுழிக் கோயிலை முழுமையாக ஆய்வுசெய்து எழுதப்பட்ட நூல். ஆய்வின்போது பல புதிய கல்வெட்டுகளும் சிற்பத்தொகுதிகளும் கண்டறியப்பட்டன. கல்வெட்டுகள் சுட்டும் பிடாரி ஏகவீரி அடையாளப்பட்டதுடன் அவர் கோயிலும் கண்டறியப்பட்டது. கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள், இலக்கியம் சார்ந்து உருவான நூல்.

‘எனைத்தானும் நல்லவை கேட்க’- திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் 

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் ‘எனைத்தானும் நல்லவை கேட்க நிகழ்ச்சியைத் தொடர்ப் பொழிவாக 02.07.24 செவ்வாய்முதல் டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கி வருகிறார். செவிவழி வரும் செய்திகளை அறிவுக்கான உணவு என்று அறிஞர்கள் கூறுவதைச் சுட்டி, அந்த அறிவை நெறிசார்ந்து வாழ்ந்தவர்கள் வாழ்க்கைவழி கேட்போர் பெற்றிட தம் பொழிவால் உதவுகிறார். அவ்வகையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வரலாறான பெருமக்களையும் அவர்தம் சீரிய பணிகளையும் சுவைமிகு செய்திகளாக நற்றமிழில் கேட்டு மகிழலாம்.

பொழிவு 1 – 02.07.24

திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள, பாடல்பெற்ற திருத்தலமான திருவெறும்பியூர்க் கோயிலைக் கற்றளியாக மாற்றிய செம்பியன் வேதிவேளானைப் பற்றியது இப்பொழிவு. செம்பியன் மாதேவியாரின் கணவர் கண்டராதித்த சோழர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த செம்பியன் வேதிவேளானின் கோயில்பணிகளும் அவற்றால் விளைந்த நன்மைகளும் குறித்துக் கிடைக்கும் கல்வெட்டுச் செய்திகளைப் பொழிவின்மூலன் அறிந்து கொள்ளலாம்.

பொழிவு 2 – 09.07.24

முதலாம் இராஜராஜரின் அரண்மனையில் பணியாற்றிய பணிப்பெண் குழுக்களில் பெரியவேளத்தைச் சேர்ந்த கற்பகவல்லி, சிராப்பள்ளி முசிறிச் சாலையிலுள்ள திருவாசி மாற்றுரைவரதீசுவர்பால் அளவற்ற பற்று கொண்டிருந்தார். இறைவனின் மகளாகத் தம்மைக் கருதிய கற்பகவல்லி, அறக்கட்டளைகள்மூலம் வழங்கிய கோயில் கொடைகள் பற்றி இப்பொழிவில் பேசுகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

பொழிவு 3 – 16.07.24

‘சுங்கம் தவிர்த்த சோழர்’ என்று கல்வெட்டுக்கள் கொண்டாடும் முதற் குலோத்துங்கரின் 83 கல்வெட்டுக்கள் திருவரங்கத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரங்கத்து மடைப்பள்ளிக்கு நேர்ந்த சிக்கலான இடர்ப்பாடுகளும் அதை நேர்செய்ய குலோத்துங்கர் ஆட்சி அரங்கத்துடன் கையிணைத்தெடுத்த போர்க்கால நடவடிக்கைகளும் இப்பொழிவில் பேசப்பட்டுள்ளன.

பொழிவு 4 – 23.07.24

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் உத்தமநாதர் கோயில் மற்றும் திருஇறையான்குடி என்று முதல் இராஜராஜர் காலத்தில் அழைக்கப்பெற்ற விளாங்குடி திருவன்னியுடையார் கோயிலில், சோழர் காலத்தில் நிகழ்ந்தேறிய இரண்டு அருமையான செயற்பாடுகளைப் பற்றியது இப்பதிவு.

பொழிவு 5 – 30.07.24

சோழப் பேரரசின் விரிவாக்கத்திற்குழைத்த பழுவேட்டரையர்கள் என்ற சிற்றரச மரபினர் ஏறத்தாழ 139 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த இடம் அரியலூர் மாவட்டத்திலுள்ள பழுவூர். மேலப்பழுவூர் கீழப்பழுவூர் என்று இரு பிரிவுகளாக வி̀ளங்கிய இவ்வூரில், பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தெற்றிப் பெரியானைக் கீழப்பழுவூர் கோயில் கல்வெட்டொன்று அறிமுகப்படுத்துகிறது. திருமழபாடியிலும் தவத்துறைக்கருகிலுள்ள நத்தமாங்குடியிலும் கிடைக்கும் கல்வெட்டுக்கள்வழி தெற்றிப் பெரியானைப் பற்றிய அரிய தகவல்களை வழங்குகிறது இப்பொழிவு.

 

இராஜராஜர் கால ஊதியக்குறைப்பு

இரா. கலைக்கோவன்

தமிழ்க் கல்வெட்டுகளில் எண்ணிக்கையிலும் தரவுகளைப் புதையலாய்க் கொண்டிருப்பதிலும் முதனிலையில் உள்ளவை சோழர் காலக் கல்வெட்டுகளே. பல வரலாற்றறிஞர்கள் அவற்றிலிருந்து அகழ்ந்தளித்திருக்கும் பன்முகப் பதிவுகளையும் தாண்டி, அவை அடைகாக்கும் வரலாற்றுச் செய்திகள் பலவாகும். அவற்றுள் ஒன்றுதான் முதல் இராஜராஜர் காலத்தே நிகழ்ந்த பணியாளர் ஊதியக்குறைப்பு.

சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகினாற் போலவே, அவற்றின் நடைமுறைகளும் பெருகின. வழிபாடு, படையலுக்கென ஏராளமான நிலத் தொகுதிகளும் பொன், வெள்ளி, காசு, கால்நடை முதலியனவும் வழங்கப்பெற்றன. இறைத்திருமேனிகளை அழகுபடுத்தவும் அவற்றுக்குப் பெருமை சேர்க்கவும் விலை மதிப்பற்ற அணிகலன்கள் வந்தடைந்தன. வரவு மிகுதியான நிலையில் நிதியம், நகைகள் காக்கக் கருவூலங்களும் அவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியமாயின. கோயிலின் வரவு செலவுக்கேற்ப வழிபாட்டு நடைமுறைகள் விரிவடையவே, பணியாளர் பட்டியலும் நீண்டது. முதல் இராஜராஜர் காலத்தே தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் 400 தளிப்பெண்டுகள் பணியிலிருந்தனர். இவர்கள் தவிர, 36 வகையான தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த 217 தொழிலர்களைக் கோயில் புரந்தது. அவர்களுள் 138 பேர் ஆடல், இசையுடன் தொடர்புடைய நுண்கலைஞர்கள்.

இராஜராஜீசுவரம் அளவிற்கு இல்லையென்றாலும் பல கோயில்களில் இத்தகு பணியாளர் பெருமளவில் இருந்தனர். பணியமர்த்தப்பட்டபோதே அவர்களுக்கான ஊதியம் நிலப்பங்காக அறிவிக்கப்பெற்றது. செய்யும் தொழிலுக்கேற்ப அப்பங்கின் அளவு அமைந்ததை இராஜராஜீசுவரத் தளிச்சேரிக் கல்வெட்டால் அறியமுடிகிறது. ஒரு பணிக்கென உறுதிசெய்யப்பெற்ற நிலப்பங்கு, கோயில் தேவைக்கேற்ப வேறு பணிக்கு மாற்றப்படுவதையும், சில நேரங்களில் அதே பணியில் புதியவர்கள் நுழையும்போது பங்கின் அளவு மாறுதலுக்கு உள்ளாவதையும் கல்வெட்டுகள் இனிதே உணர்த்துகின்றன.

பாச்சில் அவனீசுவரம்

ஆனால், ஒருவர் பணியிலமரும்போது முடிவாகும் நிலப்பங்கு, அவர் பணியிலிருக்கும்போதே கோயிலின் புதிய தேவைகளுக்காகக் குறைக்கப்படுவது அரிதினும் அரிதான நிகழ்வாகும். முதல் இராஜராஜர் காலத்தில் இத்தகு ஊதியக்குறைப்பு சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பாச்சில் மேற்றளி, பாச்சில் அவனீசுவரம், திருவாசி மாற்றுரை வரதீசுவரர் ஆகிய மூன்று கோயில்களில் நிகழ்ந்துள்ளது. இதை நிகழ்த்தியவர் நாடு வகை செய்யும் பணியிலிருந்த ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் என்ற அரசு அலுவலர். இவரை, ‘இராஜராஜரின் பணிமகன்’ என்கிறது கல்வெட்டு.

பணிக்கான நிலப்பங்குகளைக் குறைக்கும் முன், பங்கிலிருந்து கிடைக்கும் நெல் அளவு, அதில் பணியாளர் குடும்பத்திற்கு எந்த அளவு போதுமானது என்பதையெல்லாம் அவர்களிடமே கேட்டு ஆராய்ந்தே உத்தமன் ஊதியம் குறைத்ததை, ‘உண்டு வருகின்ற பங்கு வினவி, பங்கில் இவர்களுக்குப் பற்றும்படி நிறுத்தி (கூடுதலாக உள்ளதை) வாங்கி’ எனும் கல்வெட்டுத் தொடர் நிறுவுகிறது. இந்த ஊதியக்குறைப்பில் தொழில் சார்ந்த பாகுபாடு இல்லாமையையும் அறியமுடிகிறது.

‘ஏன் இந்தத் திடீர் ஊதியக்குறைப்பு’ என்ற வினாவுக்கு ஒவ்வொரு கோயிலும் ஒரு விடை வைத்திருந்தது. அவனீசுவரத்தில் இப்படிக் குறைக்கப்பட்ட பங்குகள் வழிக் கோயிலுக்கு 300 கலம் நெல் கிடைத்தது. அதில் 120 கலம் மாதந்தோறும் முதல் இராஜராஜரின் பிறந்த நட்சத்திரமான சதையத்தன்று இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்ய ஒதுக்கப்பெற்றது. எஞ்சிய 180 கலம் அவர் தமக்கை குந்தவையாரின் பிறந்த நட்சத்திரமான அவிட்டத்தன்று இறைவனுக்குத் திங்கள்தோறும் சிறப்பு வழிபாடு செய்யவும் அக்கொண்டாட்டத்தின்போது கோயிலில் 60 பேருக்கு உணவிடவும் பயன்பட்டது.

பாச்சில் மேற்றளி

பாச்சில் மேற்றளியில் நடந்த ஊதியக்குறைப்பால் வரவான 909 கலம் நெல் மேற்றளி ஊரில் முதல் இராஜராஜரின் ஜனநாதன் எனும் விருதுப்பெயரேற்று அமைந்திருந்த சாலையில் நாள்தோறும் 30 பிராமணர்களுக்கு உணவிட உதவியது. திருவாசியில் ஊதியக்குறைப்பால் பெறப்பட்ட 142 கலம் நெல் அக்கோயிலிலிருந்த உலாத்திருமேனியான இராஜராஜவிடங்கரின் பெயரில் வரவு வைக்கப்பெற்று அத்திருமேனிக்கு நாளும் ஒரு சந்தி வழிபாடு, படையல் அமைக்கத் துணையானது.

இந்த ஊதியக்குறைப்புக் கல்வெட்டுகளால் இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய தொழிலர், கலைஞர் சிலரை அறியமுடிவதுடன், இங்குப் பயன்பாட்டிலிருந்த இசைக்கருவிகளின் பட்டியலும் கிடைக்கிறது. அவனீசுவரத்திலும் திருவாசியிலும் மெராவியம், குழல் முதலிய கருவிகளை இசைத்தவர்களும் நட்டுவரும், கணக்கரும் பணியாற்ற, அவனீசுவரத்திலும் மேற்றளியிலும் சோதிடரும் மெய்மட்டு உள்ளிட்ட கருவிக்கலைஞர்களும் பணியிலிருந்தனர். காளம், செயகண்டிகை, கரடிகை முதலிய இசைக்கருவிகளை இயக்கியோர் மேற்றளியில் வாழ, வண்ணக்கர், நாவிசர், தச்சர், பரிசாரகர் முதலிய தொழிலர்கள் திருவாசியில் உழைத்தனர். மேற்றளியிலும் திருவாசியிலும் காவிதி என்ற பெயருடன் விளங்கிய கணக்கர்களையும் அவனீசுவரத்திலும் மேற்றளியிலும் இருந்த வழிபாடு நிகழ்த்தியவர்களையும் அடையாளப்படுத்தும் இக்கல்வெட்டு, மூன்று கோயில்களிலும் இருந்தவர்களாக மட்பாண்டம் வனையும் வேட்கோவர்களைத்தான் முன் நிறுத்துகிறது.

இப்பணியாளர்கள், கலைஞர்களின் ஊதியத்தில் உச்சமாக இரண்டு பங்கும் கீழாக அரைக்கால் பங்கும் குறைக்கப்பட்டது. இரண்டு பங்கு இழப்புப் பெற்றவர்கள் மேற்றளிக் கருவிக் கலைஞர்கள். ஒன்றரைப் பங்கை இழந்தவர்களும் மேற்றளியினரே. அவனீசுவரத்து நட்டுவரும் ஆசாரியரும் தலைக்கு ஒரு பங்கு இழக்க, அரைப்பங்கு இழப்பை மூன்று கோயில் பணியாளர்களில் பலர் சந்தித்தனர். மூன்று கோயில்களில் மிகையான குறைப்பு நேர்ந்ததும் மேற்றளியில்தான். அங்குப் பதினாறு பங்குகள் நீக்கப்பட்டன. மிகக் குறைவான பங்கிழப்பைப் பார்த்தது திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில். அங்கு உச்சக் குறைப்பே அரைப்பங்குதான். இராஜராஜீசுவரத் தளிச்சேரிக் கல்வெட்டுப்படி ஒரு பங்கு என்பது 100-120 கலம் நெல் விளைவு தந்த ஒரு வேலி நிலமாகும்.

மாற்றுரை வரதீசுவரர்

ஊதியக்குறைப்பை உழைப்போருக்கு நிகழ்த்தினாற் போல, இம்மூன்று கோயில்களிலும் ஒளிர்ந்த விளக்குகளுக்கான எண்ணெய்ச் செலவையும் உத்தமன் குறைத்துள்ளார். மேற்றளி விளக்குச் செலவில் அரைப்பங்கும் அவனீசுவரத்து எண்ணெய்ச் செலவில் கால்பங்கும் குறைத்த உத்தமன், திருவாசிக் கோயில் விளக்குகளை மட்டும் தொடவில்லை. அது மட்டுமன்று, இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய தேவரடியார், தளிப்பெண்டுகள், கூத்திகள், தலைக்கோலியர் ஊதியத்திலும் அவர் கைவைக்கவில்லை. சொல்லப்போனால், இந்த மூன்று கோயில்களுமே சோழர் காலத்து ஆடற்கலையை உயர்த்திப்பிடித்த பெண் கலைஞர்களின் வாழிடங்களாக விளங்கிய பெருமைக்குரியவை.