கூரம் கோயில்களின் கல்வெட்டுகள்

மு. நளினி, இரா. கலைக்கோவன்

காஞ்சிபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ளது கூரம். பல்லவர் வரலாற்றில் சிறப்பிடம் பெறும் இவ்வூரில்தான் கூரம் செப்பேடு கண்டறியப்பட்டது.1 புகழ்மிக்க கூரம் ஊர்த்வஜாநு ஆடவல்லானும் இவ்வூரினர்தான்.2

விமானம்

பல்லவர் காலக் கோயில்கள்

இங்குப் பல்லவர் காலக் கோயில்கள் இரண்டு உள்ளன. ஒன்று வித்யாவிநீத பல்லவ பரமேசுவரகிருகமான சிவன்கோயில். மற்றொன்று ஆதிகேசவப்பெருமாள் கோயில். இரண்டனுள் முன்னது மிகச் சிதைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கூரம் செப்பேடு இக்கோயிலை எடுப்பித்தவராக வித்யாவிநீத பல்லவரசரைக் குறிக்கிறது. இவர் பல்லவ அரசரான முதல் பரமேசுவரர் ஆட்சியின் கீழியங்கிய சிற்றரசராவார். புதுப்பிக்கப்பட்டுள்ள இக்கோயிலில் இருந்து ஆறு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. ஆறுமே கோயில் உள்மண்டபத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளவையாகும்.3

சிவன்கோயில் கல்வெட்டுகள்

அவற்றுள் ஒரு கல்வெட்டு, ‘பல்லவ மாராசன் மாமல்லன்’ எனும் பெயரைத் தர, மற்றொரு தூண் கல்வெட்டு, அத்தூணை அளித்தவராகத் தட்டார் தொதவத்தியின் பெயரைத் தருகிறது.4 எஞ்சிய நான்கில், பல்லவ அரசர்களுடையது இரண்டு. ஒன்று இராட்டிரகூட அரசர் கன்னரதேவர் காலத்தது. நான்காம் கல்வெட்டு முதல் ஆதித்தராகக் கருதத்தக்க இராஜகேசரிவர்மரின் 27ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது.

கொற்றவை

பல்லவர் கல்வெட்டுகள்

‘நந்திவர்ம மகாராஜன் எழுத்து’ எனத் தொடங்கும் மூன்றாம் நந்திவர்மரின் கல்வெட்டு, ஊற்றுக்காட்டுக் கோட்டத்துக் கூரம் சபையாருக்கான ஆணையாக உள்ளது. தந்திவர்மர் தேவி அக்கள நிம்மடி கொடையளித்திருந்த ஆறுபட்டி நிலத்தை முன் பெற்றாரிடமிருந்து மாற்றி, இறைவனுக்கான அர்ச்சனாபோகமாக அறிவிக்கவும், அந்நிலவிளைவில் கோயில் வழிபாடு செய்பவர் வழிபாடு செய்து தாமும் உண்டுய்யவும் இவ்வாணை வழிசெய்தது.5

ஓய்மாநாட்டுப் பேராயூர் நாட்டு நல்லாயூரைச் சேர்ந்த ஒருவரளித்த பொற்கொடையைப் பெற்ற சபை அதன் வட்டியில் கோயிலுக்கான அறக்கட்டளையொன்றை நிறைவேற்றும் பொறுப்பேற்றதைக் கூறும் நிருபதுங்கவர்மரின் 21ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுச் சிதைந்துள்ளது.6

பிள்ளையார்

கன்னரதேவர் கல்வெட்டு

இராட்டிரகூட அரசரான கன்னரதேவரின் 15ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கூரம் ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வேளூர் நாட்டின் கீழிருந்தமை கூறுவதுடன், அவ்வூரினரான ஆசிரியன் ஆதிய்யணன் இக்கோயிலில் வைத்த பெருந்திருவமுதின் பொறுப்பைக் கோயில் திருவுண்ணாழிகை உடையாரில் பட்ட சிவரும் ஏறடு சிவரும் ஏற்றமை சொல்லிக் கோயிலைப்
பெருந்திருக்கோயிலாகவும் குறிக்கிறது.7 ஆதிகேசவப்பெருமாள் கோயிலிலுள்ள முதல் பராந்தகர் கல்வெட்டின் அருகிலுள்ள துண்டுக் கல்வெட்டும் இக்கோயிலை, ‘இவ்வூர்ப் பெருந்திருக்கோயில்’ எனச் சுட்டுவது குறிப்பிடத்தக்கது.8

முதல் ஆதித்தர் கல்வெட்டு

முதல் ஆதித்தரின் 27ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கூரம் சபையார் ஊர்த் தட்டார் ஸ்ரீகூவைமங்கலப் பெருந்தட்டாரிடம் பொன் கொண்டு, ஊர்ப் பெருந்திருக்கோயில் இறைவனுக்கு நாளும் உழக்கெண்ணெய் கொண்டு நந்தாவிளக்கேற்ற இசைந்தமை தெரிவிக்கிறது. இதற்கான ஆவணத்தை எழுதியவர் ஊர் மத்யஸ்தரான ஸ்ரீக்கவை ஏழாயிரவன்.9

பெருமாள் கோயில் கல்வெட்டுகள்

கூரம் ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலிருந்து 1900இல் ஐந்து கல்வெட்டுகளும் 1923இல் இரண்டு கல்வெட்டுகளும் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் ஐந்து கல்வெட்டுகளின் பாடங்கள் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி ஏழில் பதிவாகியுள்ளன.

நரசிம்மர்

பல்லவர் கல்வெட்டுகள்

கூரம் ஆதிகேசவப்பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் காலப் பழைமையானதான தந்திவர்மரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு முற்றுப்பெறாதுள்ளது. கூரம் சபையின் எழுத்தாவணமாக விளங்கும் இது, கூரம் உணங்கல்பூண்டியைக் குறிப்பதுடன் நிற்கிறது.10 நிருபதுங்கரின் 17ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, படுவூர்க் கோட்டத்துக் காரைநாட்டு வல்லவ நாராயண சதுர்வேதிமங்கல சபையார் பன்னிரு சாண்கோலால் அளக்கப்பெற்ற அவர்கள் ஊர் கற்கயம் 27,000 குழி நிலத்தை அதே கோட்டத்தைச் சேர்ந்த அமனிநாராயண சதுர்வேதிமங்கல ஆளுங்கணத்தாருள் ஒருவர் உள்ளிட்ட பிராமணர் சிலருக்கு உரிய விலைப்பொருள் பெற்று விற்றமை கூறுகிறது.11

பார்த்திவேந்திரவர்மரின் 11ஆம் ஆட்சியாண்டில் பதிவாகியுள்ள சிதைந்த கல்வெட்டு அம்பலம் அமைக்கவும் அதில் கோடை காலத்தில் தண்ணீர் வழங்கவும் தனியார் ஒருவருக்கு இறை நீக்கிய நிலத்துண்டொன்றைக கூரம் சபை விற்றதாகக் கூறுகிறது.12

சோழர் கல்வெட்டுகள்

முதல் பராந்தகரின் சிதைந்த 40ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கூரம் சபை அவ்வூரிலிருந்த திருவாய்ப்பாடி ஸ்ரீகூடத்தே கூடி ஊர் நிலங்களின் தரம், பாசனம், இறை குறித்து மேற்கொண்ட செயற்பாடுகளை முன்னிருத்துகிறது.13 இங்குள்ள முதல் இராஜராஜரின் இரண்டு பதிவுகளில் 10ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கச்சிப்பேட்டு அதிகாரிகள் மீனவன் மூவேந்த வேளாரின் விட்டவீட்டின் மேற்கிலிருந்த ஈசுவராலயத்துத் திருமுற்றத்தில் கூடிய கூரமாகிய விஜயாவிநீத சதுர்வேதி மங்கலத்தை ஆண்ட சபையாரின் திருமுகத்தைப் பற்றிப் பேசுகிறது.

கூரம் ஆளுங்கணத்தாருள் ஒருவரான இருங்கண்டிக் காளிதாச சோமாசியார் எடுப்பித்த மடத்தில் கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் தண்ணீர் வைக்கவும் மடத்தை நான்கு நாள்களுக்கு ஒருமுறை மெழுகுவதற்கும் மடத்திற்கு அழிவு நேராதவாறு ஆண்டுக்கொருமுறை மெழுகவும் கேசவபட்டன் ஊர்விடு நிலம் அரை, ரவிகேசுவ ஜன்மன் ஊர்விடு நிலம் அரை ஆக நிலம் ஒரு பட்டியை சபை மடப்புறமாக அறிவித்து ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எழுதியவர் ஊர் மத்யஸ்தர் மங்கலோத்தமன் மகனான கற்பகப்பிரியன்.14

முதல் இராஜராஜரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கூரம் நடுவில்ஸ்ரீகோயில் முகமண்டபத்தில் கூடிய சபையார், கூரம் சுப்பிரமணியதேவருக்கான திருவமுது குறித்துப் பேசியமை கூறுகிறது. இறைவனுக்கு சபை வைத்த உணங்கற்பிடியால் உச்சிச் சந்தியில் திருவமுது படைக்கப்பெற்றது. பிற இரண்டு சந்திகளில் திருவமுது வழங்க ஊர் ஆளுங்கணத்தாருள் ஒருவரும் ஊர் பிராமணர்கள் மூவரும் ஆளுக்கு ஒரு துண்டாக வழங்கிய ஒரு வேலி ஆறு மா காணி நிலம் துணையானது.

கோயில் சிவபிராமணன் விஜ்ஜாவிநீதபடியான் மகன் கோவிந்த சிவனான ஸ்ரீசாலைப் பட்டுடையான், இந்நிலத்திற்கு வரிநீக்கப் பொருள் தந்தார். சபையார் தங்கள் பொறுப்பிலிருந்த பொத்தகப்படி, இந்நிலங்களைப் பங்கீடு செய்து கொடையை அர்ச்சனாபோகமாக அறிவித்துக் கோயிலில் கல்வெட்டாகவும் பதிவுசெய்தனர். இந்நில விளைவில் மூன்று சந்திக்கும் சுப்பிரமணியருக்குத் திருவமுது காட்டவும் சந்திவிளக்கெரிக்க வட்டி நாழி எனும் வரியினத்தைக் கொள்ளவும் கோயில் சிவபிராமணர் கோவிந்தன் அங்காடிசிவனையும் அவர் தம்பிகளையும் பொறுப்பாக்கிய சபையார், சபைப் பொத்தகப்படி கோயில் திருவிழாவிற்கென ஒதுக்கப்பட்டிருந்த நிலம் அதற்கெனத் தொடரவும் உறுதி செய்தனர்.15

திருப்பணிக் கல்வெட்டு

பொ. கா. 1795இல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு கூரத்தாழ்வார், ஆதிகேசவப்பெருமாள் கோயில்களில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் குறித்துப் பேசுகிறது.16

முடிவுரை

கூரம் சிவன், விஷ்ணு கோயில்களிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுகளால், கூரத்தை நிருவகித்த சபை கூடிய இடங்கள், கூட்டங்களில் அது மேற்கொண்ட செயற்பாடுகள், நில மேலாண்மையில் சபை காட்டிய அக்கறை, அதற்கெனப் பொத்தகம் என்ற பெயரில் சபையிலிருந்த தரவுப் பதிவேடு எனப் பல செய்திகளை அறியமுடிகிறது. கோயில் வழிபாட்டிலும் ஊர் மடத்தைப் புரப்பதிலும் சபை காட்டிய அக்கறையையும் கல்வெட்டுகள் பகிர்ந்துகொள்கின்றன. இப்பகுதியில் பயன்பாட்டிலிருந்த பன்னிருசாண்கோல் வெளிச்சத்திற்கு வருவதுடன், இங்குள்ள சிவன்கோயில் அக்காலத்தே பெருந்திருக்கோயிலாக அறியப்பட்ட அரிய தகவலும் இக்கல்வெட்டுத் தொகுப்பால் தெரியவருகிறது. பெருந்திருக்கோயிலைக் குறிக்கும் பெருங்கோயில் என்ற சொல்லாட்சியைத் தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் முதன்முதலாகப் பயன்படுத்திய அருளாளர் அப்பர் பெருமானாவார். அவரைப் பின்பற்றி சுந்தரரும் நன்னிலம் கோயிலைப் பெருங்கோயில் என்றழைத்துள்ளார்.17 பின்னாளைய கல்வெட்டுகளிலும் பெருந்திருக்கோயில், பெரியஸ்ரீகோயில் எனப் பலவாறாகப் பயின்று வரும் இக்கலைச்சொல்18 மாடக்கோயிலைச் சுட்டுவதால், வித்யாவிநீத பல்லவ பரமேசுவரம் மாடக்கோயிலாக எழுப்பப்பெற்றதா என்ற ஐயம் எழுந்துள்ளது.

குறிப்புகள்

  1. பல்லவர் செப்பேடுகள் முப்பது, பக். 33-60.
  2. இரா. கலைக்கோவன், முழங்கால், வரலாறு 26, பக். 130-146.
  3. SII 7: 37-42.
  4. SII 7: 42, 38.. பல்லவ மாராசன் மாமல்லன் என்று கல்வெட்டுச் சுட்டும் அரசர் பல்லவமல்லனாக வைகுந்தப்பெருமாள் கல்வெட்டுக் குறிக்கும் இரண்டாம் நந்திவர்மராகலாம். T.V. Mahalingam, Insriptions of the Pallavas, p. 326.
  5. SII 7: 40.
  6. SII 7: 39.
  7. SII 7: 37.
  8. SII 7: Foot note 1, p. 15
  9. SII 7: 41.
  10. SII 7: 36.
  11. SII 7: 33.
  12. ARE 1923: 105.
  13. SII 7: 35.
  14. SII 7: 34.
  15. SII 7: 32.
  16. ARE 1923: 106.
  17. ஆறாம் திருமுறை, அடைவுத் திருத்தாண்டகம், ப. 521; ஏழாம் திருமுறை, ப. 798. இரா.கலைக்கோவன், தலைக்கோல், ப. 113.
  18. ARE 1925: 204, 208. கோ.வேணிதேவி, இரா.கலைக்கோவன், மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள், ப. 207. மு.நளினி, இரா.கலைக்கோவன், வாணன் வந்து வழி தந்து, ப. 183.

திருவள்ளூர் மாவட்டம் விசாலீசுவரர் கோயிலில் புதிய கல்வெட்டு

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்கள், காலத்தால் முற்பட்ட கட்டுத்தளிகள் பற்றிய ஆய்வுநூலொன்றை உருவாக்கி வருகிறார்கள். அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டம் விளக்கணாம்பூண்டியிலுள்ள விசாலீசுவரர் கோயிலில் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டபோது, மைய ஆய்வாளர் மருத்துவர் ச. சுந்தரேசன், பொதுக்காலம் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயாதித்த வாணராயர் என்ற பாண அரசரின் புதிய கல்வெட்டொன்றைக் கண்டறிந்தார்.

கல்வெட்டு குறித்து டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இச்செய்தி குறித்த முழு தகவல்களுக்கு, மின்னிதழ் இணைப்பைக் கீழே காணலாம்-

விசாலீஸ்வரா் கோயிலில் பாண அரசரின் கல்வெட்டு!

தகவல்களைத் தாங்கிய நாளிதழ்ச் செய்திக்குறிப்பு

பார்வையிழப்பின் மூவருலா

இரா. கலைக்கோவன்

கதைக்கும் வரலாறுக்குமான இடைவெளி ஆய்வுகளால் மட்டுமே வெளிச்சமாகும். சில கதைகள் வரலாற்றின் வீச்சுப் போலவே முகங்காட்டினாலும், வரிக்குவரி கற்பனைப்பூச்சுடன் எழுதப்பட்டிருப்பதை நுணுக்கப் பார்வை தெளிவுபடுத்தும். வரலாறும் அப்படித்தான். உண்மைகளையே அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருந்தாலும் எழுத அல்லது சொல்லப்பட்டிருக்கும் முறையால், ‘இது கதையோ’ என்றுணர வைக்குமாறு அமைந்துவிடும். சொல்லப்போனால், சில கதைகள் சாகாவரம் பெற்று வரலாறாகவே வாழ்கின்றன. சில வரலாறுகள் சரியாக வெளிப்படாமையினால் கதைகளோ என்று மருளச்செய்கின்றன.

மூன்று பேர் வாழ்க்கையில் நேர்ந்த ஒரே நிகழ்வைப் புராணக்கதையாகவும் கல்வெட்டுச் சொல்லாடலாகவும் காலம் நம் முன் நிறுத்துகிறது. தேவாரமூவரில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானின் தோழராகக் கொண்டாடப்படுபவர். அவரது வாழ்க்கையை விளக்கும் திருத்தொண்டர் புராணம், ஒற்றியூரில் தாம் காதலித்து மணந்த சங்கிலிக்கு அளித்த வாக்குறுதியை மீறியதால் அவருக்கு நேர்ந்த பார்வையிழப்பையும் அதன் தொடர் விளைவுகளையும் விரிவாகப் பேசுகிறது.

‘உன்னைப் பிரியேன், ஒற்றியூரில் உன்னுடன் உறைவேன்’ என்று உறுதியளித்துச் சங்கிலியை மணந்த சுந்தரரைச் சின்னாட்களில் பரவை நங்கையுடன் அவர் வாழ்ந்த திருவாரூர் நினைவுகள் ஆட்கொண்டன. ஆரூர் வயப்பட்டவராய், சிவபெருமானறியத் தாம் சங்கிலிக்கு அளித்த உறுதிமொழி மறந்து, ஒற்றியூர் நீங்கிய சுந்தரருக்கு இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. தவறால் நேர்ந்த துன்பமிது என்பதை உணர்ந்த சுந்தரர் ஆரூர் இறைவனைப் பாடிப் பார்வை பெறுவேன் என்று பாடியவாறே பயணம் தொடர்ந்தார்.

பாடல்கள் வளர்ந்தன, பயணமும் நீண்டது. ஆனால், பார்வை வரவில்லை. திருவெண்பாக்கத்தை அடைந்து ஆற்றாமையால், ‘இறைவனே இங்குள்ளீரோ’ என்று கேட்டபோதும், ‘உளோம் போகீர்’ என்று மறுமொழித்து, தடுமாறாது நடக்க சுந்தரருக்கு ஊன்றுகோல் தந்தாராம் இறைவன். காஞ்சிபுரத்தில்தான் கடவுள் கருணை காட்டி, அவருக்கு இடக்கண் பார்வையை மீளத் தந்தார். வலக்கண் பார்வை சுந்தரருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. வழியெல்லாம் கதறியும் புலம்பியும் பாடிச்சென்றவருக்கு, மறு கண் பார்வை ஆரூரில்தான் கிடைத்தது.

இப்படிப் பார்வை போவதும் இறையருளால் மீளக் கிடைப்பதும் சுந்தரருக்கு மட்டுமே நிகழ்ந்ததன்று. சிராப்பள்ளி மாவட்டம் பெருங்குடி அகத்தீசுவரம் கோயிலிலும் புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டி ஆலத்தூர்த் தளியிலும் பொறிக்கப்பட்டிருக்கும் இரண்டு கல்வெட்டுகள் அவ்வூர்களில் வாழ்ந்த இருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டுச் சரியானதாகச் சொல்கின்றன.

பெருங்குடி அகத்தீசுவரம் கோயில்

சிராப்பள்ளிப் பகுதியைப் பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டளவில் ஆண்ட ஒய்சள மன்னர்களுள் ஒருவரான வீரராமநாதன் ஆட்சிக்காலத்தில், பெருங்குடி இருந்த பகுதி ஜகதேகவீரச்சதுர்வேதிமங்கலமாக அறியப்பட்டது. அங்கு வாழ்ந்த தட்டார் மருதாண்டார் அறச்சிந்தனையாளர். அகத்தீசுவரம் கோயிலில் அவர் காலத்தே திருப்பணி நிகழ்ந்தது. அதுபோழ்து அங்குப் பணியாற்றிய கல்தச்சர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப் போதுமான தொகை கோயிலாரிடம் இல்லை. நிருவாகத்திற்கு ஏற்பட்ட இச்சிக்கலான சூழலை அறிந்த மருதாண்டார், உடனே தம்மிடமிருந்த மூன்று கழஞ்சுப் பொன்னைத் தந்து உழைத்த தச்சர்கள் ஊதியம் பெறத் துணையானார்.

மருதாண்டாருக்கு நல்லமங்கை என்ற பெயரில் ஒரு பெண் இருந்தார். அவருக்குத் திடீரெனக் கண்பார்வை மங்கிப் பார்வையிழப்பு நேர்ந்தது. மகளின் பார்வையிழப்பால் உளம் சோர்ந்த மருதாண்டார் அகத்தீசுவரரிடம் முறையிட, இறையருளால் நல்லமங்கை பார்வை பெற்றதாகவும் அந்த மகிழ்வைக் கொண்டாட, மருதாண்டார் ஒரு கழஞ்சுப் பொன்னில் தங்கப்பட்டம் செய்து பெருங்குடி இறைவனுக்கு வழங்கியதாகவும் கோயிலில் பதிவாகியுள்ள கல்வெட்டுக் கூறுகிறது.

பல்லவ மன்னரான தந்திவர்மர் காலத்தில் குவாவன் சாத்தன் எனும் முத்தரையரால் மலையடிப்பட்டியில் குடையப்பெற்ற ஆலத்தூர்த் தளி சிறப்புக்குரிய குடைவரைக் கோயிலாகும். தமிழ்நாட்டின் மிகப் பழைமையான எழுவர்அன்னையர் சிற்பத்தொகுதிகளுள் ஒன்று இங்குள்ளது. வாகீசுவரர் கோயிலாகவும் கல்வெட்டொன்றால் அறியப்படும் இத்தளியில், வெகுதானிய ஆண்டு, தைத்திங்கள் 11ஆம் நாளில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, ஆவுடையாதேவன் என்பாருக்கு நேர்ந்த பார்வையிழப்பைப் பதிவுசெய்துள்ளது.

ஆலத்தூர்த் தளி

பூச்சிக்குடியைச் சேர்ந்தவர் ஆவுடையாதேவன். அவருக்கும் சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருநெடுங்களத்து விலைமாது ஒருவருக்கும் உறவிருந்தது. தேவன் அப்பெண்ணின் இல்லத்தில் தங்கியிருக்கையில், அப்பெண்மணி பிராமணர் ஒருவரையும் வரச்செய்து உறவாக்கிக் கொண்டமை ஆவுடையாதேவனைச் சினமுறச் செய்தது. உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத ஆவுடையான் இருவரையும் வெட்டிக் கொன்றார். பின் அங்கிருந்து மலையடிப்பட்டிக்கு வருகையில் அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வையிழப்பு நேர்கிறது.

தம் கொலைச்செயலுக்கு நேர்ந்த தண்டனையோ இது என்று உளம் மருகிய ஆவுடையான், பார்வை மீண்டால் தம் வயலை வாகீசுவர சுவாமிக்கு அளிப்பதாக வேண்டிக்கொள்ள, பார்வை திரும்பக் கிடைக்கிறது. இழந்த பார்வை மீளப்பெற்ற மகிழ்வில் தம் காணியான குடிகாட்டை வாகீசுவரருக்கு எழுதித் தந்த ஆவுடையான், அதை ஆலத்தூர்த் தளியில் கல்வெட்டாகவும் பொறிக்கச் செய்தார்.

சுந்தரர், நல்லமங்கை, ஆவுடையாதேவன் இம்மூவருக்குமே திடீரெனப் பார்வையிழப்பு நேர்ந்து சிறிது காலத்தில் அது மீளக்கிடைக்கிறது. சுந்தரர் நிகழ்வைக் கதையென்று ஒதுக்குவாருக்குப் பெருங்குடி, மலையப்பட்டிக் கல்வெட்டுகள் அது வரலாறாக இருக்க வாய்ப்புண்டு என்பதைக் கண்முன் காட்சியாக நிறுவுகின்றன.

கண்மருத்துவத்தில் அமோரோஸிஸ் பியுகாக்ஸ் (Amaurosis Fugax) என்றொரு நிலை பேசப்படுகிறது. பார்வைத்திரையாகப் பார்க்கப்படும் ரெட்டினாவுக்குத் திடீரென ஏற்படும் இரத்தஓட்டக் குறைவினால் ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலோ நேரும் தற்காலிகப் பார்வையிழப்பு நிலையே அமோரோஸிஸ் பியுகாக்ஸ். இது சில நிமிடங்களில் சரியாகக்கூடியது என்றாலும், சிலருக்கு உள்ளிருக்கும் பிற நோய்களால் தொடரலாம். சுந்தரர், நல்லமங்கை, ஆவுடையாதேவன் மூவருக்கும் நேர்ந்த பார்வையிழப்பு இதனால்தானா என்பதை யாரறிவார்? ஆனால், இந்த மூன்று நிகழ்வுகளும் கதையல்ல, வரலாற்றின் பதிவுகள்.

பூதி ஆதித்தபிடாரி

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருந்தபோதும் பொது வெளிச்சத்திற்கு வராத பெண்ணரசிகள் பலராவர். அவர்களுள் பூதி ஆதித்தபிடாரி குறிப்பிடத்தக்கவர். ‘கொடும்பை’ என்று சிலப்பதிகாரத்தால் சுட்டப்படும் கொம்பாளூரையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டிருந்த வேளிர்மரபின் குலக்கொழுந்து இவர். முதற் பராந்தகர் சோழநாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாம் ஆண்டிலேயே கொடும்பாளூர் அரசர் மறவம்பூதியின் மகளாகவும் பராந்தகரின் மருமகளாகவும் அவரது புதல்வர்களுள் ஒருவரான அரிஞ்சயசோழரின் தேவியாகவும் கல்வெட்டு வெளிச்சம் பெறும் இவ்வம்மையே சிராப்பள்ளிக் குழித்தலைப் பெருவழியில் காவிரியின் தென்கரையிலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக்கிய பெருமைக்குரியவர்.

திருச்செந்துறைக் கோயில்

பல்லவ அரசரான முதல் மகேந்திரர் தாம் எழுப்பிய கோயில்களைக் கல்வெட்டுகளில் தம் கட்டுமானங்களாக அடையாளம் காட்டினாற் போலவே ஆதித்தபிடாரியும், இரண்டு தளங்கள் பெற்ற இறையகமும் அதன் முன் முகமண்டபமும் எனத் தம்மால் எழுப்பப்பெற்ற திருச்செந்துறைக் கோயிலை ‘நான் எடுப்பித்த கற்றளி’என்று கல்வெட்டுப் பொறித்து அடையாளப்படுத்தியுள்ளார். இத்தகு மொழிதல்கள் இல்லாமற் போனதால்தான் தமிழ்நாட்டுக் கோயில்கள் பல யாரால், எக்காலத்தே உருவாக்கப்பட்டன என்பதை அறியமுடியாதுள்ளது.

பொதுக்காலம் 910இல் பூதி ஆதித்தபிடாரியால் கற்றளியான இக்கோயிலில் 59 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள், ஏறத்தாழ நான்கில் ஒரு பங்குக் கல்வெட்டுகள் இக்கோயிலுக்கும் இங்குப் பணியாற்றிய ஊழியர்களுக்கும் அவ்வம்மை கருதிச் செய்த ஏற்பாடுகளைச் செவ்வனே பதிவு செய்துள்ளன. இறைவனுக்கான வழிபாடு, படையல்கள், மலர்த் தேவைகள், விளக்குகள் ஆகியவை எக்காலத்தும் குறைவின்றி அமையச் செந்துறை வாழ் மக்களிடமும் அவ்வூரை நிருவகித்த ஊராட்சியினரிடமும் பல நிலத்துண்டுகளை விலைக்குப் பெற்று கோயில் ஆட்சியரிடம் ஒப்புவித்ததுடன், உரிய வைப்புத்தொகையை ஊராட்சிக்குச் செலுத்தி அந்நிலத்துண்டுகளை வரியற்றவையாக்கியவர் இவ்வம்மை.

இறைவனுக்கு அளிக்கப்படும் நிலம் தேவதானமாகவும் வரி நீக்கப்பட்ட நிலையில் அது இறையிலித் தேவதானமாகவும் கல்வெட்டுகளில் சுட்டப்படுகிறது. இந்நில வாங்கல்-வழங்கல்களால் சோழர் கால நிலவிற்பனை, நிலஞ்சார் வரியினங்கள், ஆவண நடைமுறைகள் ஆகியவற்றை அறியமுடிவதுடன், ஆட்சியாளரின் வருவாய்த்துறைச் செயற்பாடுகளையும் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஒவ்வோர் ஆவணத்திலும் விற்கப்பட்ட நிலத்துண்டுகளின் நாற்றிசை எல்லைகளும் கூறப்படுவதால், சோழர் காலத்தில் நிலப்பகுதிகள் எப்படி அடையாளப்பட்டன, அவற்றின் பாசன-வடிகால் வசதிகள் எப்படியிருந்தன, ஊர்த்தெருக்களின் அமைப்பு என எண்ணற்ற தரவுகள் வரலாற்றுக்கு வரவாகின்றன.

ஆடற் சிற்பங்களுடன் கோயிலின் மேற்பகுதி

கொடும்பாளூர் இளவரசி எடுப்பித்த கோயில் என்பதால் கொடும்பாளூர்க் குடும்பமே இக்கோயிலில் ஈடுபாடு கொண்டிருந்தது. மறவம்பூதி, அவர் தேவி நக்கன் விக்கிரமகேசரி, மகன் பூதி ஆதித்தபிடாரன் அவர் மகன்களான ஆதித்தன் பூதி, ஆதித்தன் ஒற்றி எனப் பலரைக் கல்வெட்டுகள் அடையாளப்படுத்துகின்றன. தாங்கள் பிறந்த நட்சத்திரங்களில் திங்கள் தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப் பூதி ஆதித்தபிடாரரும் ஆதித்தன்பூதியும் நிலமளிக்க, தம் திருமணக் கொடையாக ஆதித்தன் ஒற்றி அளித்த நிலவிளைவால் 12 நந்தாவிளக்குகள் இக்கோயிலில் ஒளிர்ந்தன. ஆதித்தன் பூதி தம் மகனான பூதிபராந்தகனுக்கு முதற்சோறு ஊட்டிய நாளில் இக்கோயில் இறைவனுக்கு நான்கு வேலி நிலமளித்தார். அதன் விளைச்சல் ஒரு வேலிக்கு நூறு கலம் நெல்லாக இக்கோயில் செயற்பாடுகளுக்கு உதவியது.

கோயிலை எழுப்பிய ஆதித்தபிடாரி இறைவனையும் வழிபாட்டையும் பற்றி மட்டுமே சிந்தனை கொள்ளாது, கோயில் ஊழியர்களின் நலத்தையும் கருதிச் செயற்பட்டதைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. செந்துறைக் கோயிலில் உழைத்த பல்வகைப் பணியாளர்களுக்கும் வாழிடம் உருவாக்க விழைந்த அவ்வம்மை, அதற்காகவே ஊர்மக்களிடம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளை இணைத்துக் கோயிலருகே, ‘மடவிளாகம்’ ஒன்றை அமைத்தார்.

அக்காலத்தே கோயில் வழிபாடுகளின்போது பல்வேறு இசைக்கருவிகளை இயக்கிய கலைஞர்கள் உவச்சர்கள் என்றழைக்கப்பட்டனர். செந்துறையில்தோல், காற்று, நரம்பு, கஞ்சக் கருவிகளுடன் வாய்ப்பாட்டும் சேர்ந்தமையும் இசைப் பெருக்கை ஐம்பேரொலியாக எழுப்பிய கலைஞர்களுக்கு வாழ்வூதியமாக ஊரவையாரிடமிருந்து தாம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளைத் தட்டழிப்புறம் என்ற பெயரில் வழங்கி மகிழ்ந்தவர் ஆதித்தபிடாரி. சோழர் காலத்தில் ஐம்பேரொலியுடன் வழிபாடு நடைபெற்ற கோயில்கள் மிகச்சிலவே. அவற்றுள் செந்துறையும் ஒன்றென்னும் பெருமை ஆதித்தபிடாரியால் விளைந்தது.

ஆதித்தபிடாரியின் கல்வெட்டு

கோயிற் செயற்பாடுகளுக்காகவும் கோயிலில் ஒளியூட்டிய விளக்குகளுக்காகவும் திருவிழா முதலிய கொண்டாட்டங்களுக்காகவும் தம்மாலும் பிறராலும் ஊரவையாலும் கோயிலுக்கு அளிக்கப்பெற்றிருந்த நிலங்களை உழுது பயிரிட்டுக் கோயிலுக்கு வளம் சேர்த்த உழுகுடிகளையும் பிடாரி மறந்தாரில்லை. அவர்களுக்கு இல்லிருக்கை அமைக்கப் பல நிலத்துண்டுகளை விலைக்குப்பெற்று உதவியவர், அந்நிலங்களின் மீது பின்னாளில் உரிமைச் சிக்கல்கள் நேரிடக்கூடாது என்பதற்காகவே, ‘நான் பெற்ற பரிசே குடுத்தேன்’ என்று நிலத்தின் மீதான உரிமைகளையும் விலக்குகளையும் தெளிவுபடுத்திக் கல்வெட்டாக்கினார்.

கோயில் நிலங்களையும் ஊர் நிலங்களையும் பழுதின்றி அளக்கக் கோயில்களில் அந்நாளில் அளவுகோல்கள் வெட்டப்பட்டிருந்தன. சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் பலவற்றில் நன்செய், புன்செய் நிலங்களை அளக்கப் பயன்படுத்திய நில அளவுகோல்கள் எழுத்துப் பொறிப்புடனும் பொறிப்பின்றியும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் புகழ்வாய்ந்த இரண்டு அளவுகோல்களை இக்கோயிலில் அமைத்த பெருமை ஆதித்தபிடாரிக்கே உரியது. ‘இது குழிக்கோல்’ என்ற எழுத்துப் பொறிப்புடன் இறையகத் தாங்குதளத்தின் மேல் வெட்டப்பட்டுள்ள 90 செ.மீ. அளவுகோல் அரிதினும் அரிதான சோழர் காலப்பொறிப்பாகும். முகமண்டபத் தென்பகுதியில் இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடையில் வெட்டப்பட்டுள்ள 4 மீ.நீள அளவுகோலை அங்குள்ள எழுத்துப் பொறிப்பு ‘நிலமளந்தகோல்’ என்கிறது.

நிலமளந்தகோல்

ஒரு கோயிலில் வெட்டப்பட்டிருக்கும் அளவுகோலை மற்றொரு கோயிலிலுள்ள கல்வெட்டுக் குறிப்பது மிகமிக அரிதான செய்தியாகும். செந்துறையில் ஆதித்தபிடாரியின் காலத்தில் வெட்டப்பட்ட இக்கோல்களுள் ஒன்றான நிலமளந்தகோலை, செந்துறையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள அந்தநல்லூர் வடதீர்த்தநாதர் கோயில் கல்வெட்டொன்று சுட்டுகிறது. முதல் இராஜராஜரின் ஏழாம் ஆட்சியாண்டில்(பொ.கா.992) பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு, ‘திருச்செந்துறை ஸ்ரீவிமானத்து வெட்டிக்கிடக்கும் பெருங்கோலால்’ என்று இந்நிலமளந்த கோலைக் குறிக்கிறது. அல்லூர்ப் பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டொன்றும் இக்கோலை முதன்மைப்படுத்திப் பேசுகிறது.

ஆதித்தபிடாரியால் கற்றளியான இக்கோயிலின் தலமரமான பலாவும் இங்குள்ள கல்வெட்டொன்றில் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். இம்மரத்தின் கீழிருந்து கோயிலாரும் கொடையாளரும் சான்றாளர் முன்னிலையில் ஓர் அறக்கட்டளை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டதை இக்கல்வெட்டு வழி அறியநேர்கையில் தலமரங்களுக்கு மக்கள் அளித்த பெருமையை உணரமுடிகிறது.

தமிழ்நாட்டில் பல பெண்ணரசிகள் கோயில்கள் எடுத்துப் புகழ் வளர்த்திருந்தாலும் நங்கை பூதி ஆதித்தபிடாரி வரலாற்றில் அழுந்தப் பதிவாவது கோயிற்குடிகளின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறையால்தான். அளவில் சிறியதாக இருந்தாலும் அழகுணர்ச்சியுடன் எடுக்கப் பெற்றிருக்கும் செந்துறைக் கோயில் சோழர் காலப் பொருளாதாரம், சமூக நடைமுறைகள், கலைகள் சார்ந்து கல்வெட்டுகளும் சிற்பங்களும் கொண்டு பொலிவது நங்கை பூதி ஆதித்தபிடாரியின் பெயரைக் காலங்கடந்தும் வாழவைக்கும்.

ராச்சாண்டார் திருமலைக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள்

திருச்சிராப்பள்ளி-அரவக்குறிச்சி பெருவழியில் உள்ள விரையாச்சிலை நாயனார் கோயிலில், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி தலைமையில், முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலாவும், தேசியக் கல்லூரி வரலாற்றுத்துறை விரிவுரையாளர் செல்வி ஹேமலைலாவும் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் பயனாகப் படியெடுக்கப்படாத பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து, அவை மூன்றாம் குலோத்துங்கர் மற்றும் மூன்றாம் இராஜராஜர் காலத்தவை என அவர்கள் தெளிவுபடுத்தினர்.

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ராச்சாண்டார் திருமலை என்னும் சிற்றூரின் சிறு குன்றின்மீது அமைந்துள்ள இந்தச் சோழர் காலக் கோயில், கல்வெட்டுகளில் குன்றணிநல்லூரென்று அழைக்கப்பட்டுள்ளது.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கையில், ராச்சாண்டார் திருமலைக் கோயில் பொதுக்காலம் 13 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் இறுதிக் கட்டத்தில் உருவாகியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இச்செய்தி குறித்த முழு தகவல்களுக்கு, மின்னிதழ் இணைப்பைக் கீழே காணலாம்-

ராச்சாண்டார் திருமலைக் கோயிலில் சோழர்கால வரியினங்களை அறியும் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

வரலாற்றுத் தகவல்களைத் தாங்கிய தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்ச் செய்திக்குறிப்புகள் –

இராவணப் பதிவுகள்

இரா. கலைக்கோவன்

இராமாயணத்தின் தலைநாயகர்களுள் இராவணனும் ஒருவர். தமிழிலக்கிய வரலாற்றில் இராவணனை முதன்முதலாக அடையாளப்படுத்துவது கலித்தொகையே. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக அறியப்பட்டாலும் காலத்தால் அதுவும் பரிபாடலும் பிற்பட்டவை என்பது அறிஞர் முடிபு. கலித்தொகை சுட்டும் மிகச் சிலவான சிவக்கோலங்களில், இராவணன் கயிலையை அகற்ற முயன்றபோது அம்மலையில் உமையுடன் இருந்த சிவபெருமானின் திருவடிவமும் ஒன்றாகும். இராவணன் யார், அவர் ஏன் கயிலைமலையை அகற்ற முயன்றார், அம்முயற்சியின் விளைவுகள் எப்படியிருந்தன என்ற கேள்விகளுக்கெல்லாம் கலித்தொகையில் விடையில்லை. தேவாரமூவரில் காலத்தால் மூத்த அப்பர் பெருமானும் சம்பந்தருமே தங்கள் பதிகங்களில் இவ்வினாக்களுக்கான விரிவான விளக்கங்களைத் தருகின்றனர். என்றாலும், சம்பந்தரினும் அப்பர் பெருந்தகையே கயிலை அசைத்த இராவண வாழ்க்கையைப் படக்காட்சிகளெனப் புலப்படுத்தி மகிழ்கிறார்.

அப்பரின் பதிக இராவணன்

கடலால் சூழப்பெற்ற தென்னிலங்கை வேந்தர், பெருவீரர், குபேரனை வென்று புட்பகம் பெற்றவர் என்றெல்லாம் இராவணனைப் பெருமைப்படுத்தும் அப்பர், ‘அரக்கன்’ என்ற அடையாளத்தையும் முத்திரையாகப் பொறிக்கத் தவறவில்லை. அப்பரின் திருமுறைகளை அடியொற்றிப் பின்பற்றினால் இராவணன் கதையை பெருமளவிற்கு அறியமுடியும்.

தன் தேரில் உலாவந்த இராவணனின் வழியில் கயிலைமலை குறுக்கிட்டது. ‘கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது’ என்று தேர்ப்பாகன் கூற, அது கேளாது இராவணன் வீரமொழி பேசிப் பாகனை முடுக்க, தேர் கயிலை நெருங்கி நின்றது. வழித்தடையாகும் அம்மலையைப் பெயர்த்து அகற்றக் கருதித் தேரிலிருந்து இறங்கிய இராவணன், தம் இருபது கைகளாலும் மலையைப் பற்றி அசைத்தார். மலை அசைவதும் ஆடுவதும் உணர்ந்த கயிலை வாழ் முனிவர்களும் இறைவனின் பூதப்படையும் நடுக்குற, உமையும் அஞ்சியது கண்ட சிவபெருமான் தம் கால்விரலை அழுத்தி ஊன்றினார்.

இராவணனின் துன்பம்

கைகளாலும் தோள்களாலும் கயிலைமலையைத் தூக்க முயன்ற இராவணன் சிவபெருமான் தந்த அழுத்தம் தாங்காது, கைகளும் தோள்களும் தலைகளும் நசுக்குறக் கண்களில் குருதி கசிய அலறித் துவண்டார். இராவணனின் இந்தத் துன்பநிலையை அப்பர் போலவே சம்பந்தரும் பலபட விரித்துரைக்கிறார். ‘அலறித் துடித்தான், வாய்விட்டு அலறினான், மிகக் கடுத்து அலறி வீழ்ந்தான், இறையருள் கேட்டு மன்றாடினான்’ என்றெல்லாம் இராவணன் துன்பம் காட்டும் பாடலடிகள், இறைவனிடம் அவன் மன்றாடியதையும் சொல்கின்றன.

இராவணன் என்ற பெயர்

நரம்பையே வீணையிழையாக்கிய இராவணன், முக்தேசுவரம்

இழைத்த தவறுக்கு வருந்தி அழுத இராவணனைப் பொறுத்தருளும் முன், அவர் இசைவளம் கேட்க இறைவன் உளம் கொண்டார். அதை அறிந்தவராய் இறைவனைப் பாடிப் பரவிய இராவணன் தம் கை நரம்புகளையே வீணை இழைகளாகக் கொண்டு இருக்கிசைப் பாடல்களும் வேதகீதங்களும் இசைத்ததாகவும் இராவணனின் பண்திறம் கேட்டுகந்த இறைவன், அதுவரை வாளரக்கன் என்றே அறியப்பட்டிருந்த அவருக்கு இராவணன் என்ற பெயரைத் தந்ததுடன் நெடிது வாழும் சிறப்பையும் தம் கொற்றவாளையும் தந்து வாழ்த்தியனுப்பியதாகவும் அப்பரின் பதிகப் பாடல்கள் தெளிவுறத் தெரிவிக்கின்றன.

பல்லவ இராவணச் சிற்பங்கள்

மலை அசைத்த இராவணன், முக்தேசுவரம்

கலித்தொகை ஐந்து அடிகளில் குறிப்பாய்ச் சுட்டும் இராவணத் தொன்மம் பதிகக் காலத்தில் பலபட விரிந்து பாடலடிகளாய் மலர்ந்து பொதுக்காலம் எட்டாம் நூற்றாண்டில் சிற்பக்காட்சிகளாய்த் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள் நுழைந்தது. பல்லவர் பகுதியான தொண்டைநாட்டில் இத்தொன்மத்தை மக்கள் பார்வைக்குக் காட்சியாக்கிய பெருமைக்குரியவர் இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மப் பல்லவர். அவர் உருவாக்கிய கற்றளிகளில் முக, அகமண்டபக் காட்சியாகவோ, சுவர்க் கோட்டப் படப்பிடிப்பாகவோ இராவணன் கயிலையை அசைக்கும் முயற்சி பேரளவுச் சிற்பமாகப் பொலிந்தது. அப்பர் பதிகங்களின் விளக்கம் போலவே அமைந்த அவற்றில், சிவபெருமான் உமை இணையுடன், மலைவாழ் பூதங்கள், அடியவர்களின் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. மலையின் முன் ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில் மலையசைக்கும் முயற்சியுடன் இராவணனைக் காணமுடிகிறது. காஞ்சிபுரம் முக்தேசுவரத்தில் மட்டும் முகமண்டபத் தென்சுவரில் இராவணன் மலையசைப்பதும் வடசுவரில் அவர் கைநரம்புகளை மீட்டிப் பண்திறல் காட்டுவதும் படமாகியுள்ளன.

பரங்குன்றத்து இராவணத் தொடர்

ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில் பாண்டியர் பகுதியிலும் இராவணத் தொன்மம் முத்திரை பதித்தது. மதுரைக்கு அருகிலுள்ள பரங்குன்றத்தின் வடக்கு வளாகத்தில், குன்றின் இடைப்பகுதியில், அன்னபூரணித் திருமுன்னின் வலப்புறம் ‘இருட்டுக்கொட்டகை’ என்றழைக்கப்படும் பாறைப்பகுதி உள்ளது. மேற்றளக் கருவறைகள், முருகன், பிள்ளையார் திருமுன்களின் திருமஞ்சண நீர் வெளியேறும் வழியாக உள்ள இந்தக் கொட்டகையின் உட்புறத்தேதான் குன்றின் சரிவுப்பகுதியில் இராவண வரலாறு தொடர்கதை போலக் கிழக்கிலிருந்து மேற்காகச் சிற்பப் பொளிவுகளின் துணையுடன் சொல்லப்பட்டுள்ளது.

அலறும் இராவணன், பரங்குன்றம்

பின்னாளில் நேர்ந்த கட்டமைப்பு மாற்றங்களால் எழிலார்ந்த இந்தச் சிற்பத்தொடர் பல நிலைகளில் மறைக்கப்பட்டிருந்தாலும், இறைவன் கால்விரல் அழுத்தத்தால் மலையின் கீழ் நசுக்குண்டு இராவணன் வாய்விட்டு அலறும் காட்சி, பாண்டியர் கைநேர்த்தியில், அப்பர் பாடலடிகளை அப்படியே கண் முன் நிறுத்துகிறது. இராவணனின் வலப்புறத்தும் இடப்புறத்தும் அவனை எதிர்க்கும் பேரளவிலான கயிலைப் பூதங்கள். தமிழ்நாட்டின் வேறெந்தப்பகுதியிலும் இராவணத்தொன்மத்தில் இத்தகு வீரப்பூதங்களைக் காணக்கூடவில்லை. உருள்பெருந்தடி, கேடயம், ஈட்டி, வில், அம்பு, கல் என அக்காலத்திய அனைத்துவிதமான போர்க்கருவிகளையும் ஏந்திப் பெருவீரத்துடன் இராவணனைக் குறிபார்க்கும் பரங்குன்றப் பூதங்கள் பேரெழிலின.

தேரும் வாளும்

தேரில் இராவணன், பரங்குன்றம்

இறைவனைத் தம் இசையால் மகிழ்வித்த இராவணனுக்கு வாளும் வாழ்நாளும் பெயரும் அளித்துகந்த இறைவனை இங்குக் காணமுடியவில்லை என்றாலும், இறையருள் பெற்ற இராவணன் தேரில் செல்லும் காட்சி தென்முகப் பாறையில் ஒளிர்கிறது. இடக்கையை மார்பருகே கொண்டு வலக்கையால் இறைவனைப் போற்றியவாறே செல்லும் இராவணனின் தேருக்குள் இறைவனளித்த கொற்ற வாளையும் மறக்காமல் காட்டியிருக்கிறார் பாண்டியச் சிற்பி. இராவணனுக்கு இந்தத் தேரையும் இறைவனே அளித்ததாக சம்பந்தரின் பதிகம் ஒன்று கண்சிமிட்டுகிறது.

சோழப் பதிவு

சோழர் பதிவு, திருப்பூந்துருத்தி

பத்திமைக் காலத்திற்குப் பின் வந்த ஆகமங்கள் இந்தத் தொன்மத்தைச் சில பல வேறுபாடுகளுடன் பதிவுசெய்து, இராவணனுக்கு அருளியவராய் சிவபெருமானைப் போற்றுகின்றன. பல்லவ, பாண்டியர்களைத் தொடர்ந்த சோழர்களும் இந்தத் தொன்மத்தைக் கைவிடவில்லை. பேரளவுச் சிற்பங்களாய் இல்லாவிடினும் சிற்றுருவச் சிற்பங்களாய் இராவண அருளராய் சிவபெருமான் சோழர்களால் தொடர்ந்து அடையாளப்பட்டார்.

சோழர் பதிவுகளில் சற்றே மாறுபட்ட இராவண அருள் மூர்த்தி வடிவத்தைத் திருப்பூந்துருத்திக் கோபுரத்தில் காணமுடிகிறது. இங்கு இராவணனை விரட்டப் புதிய முயற்சியொன்றில் பூதமொன்று ஈடுபட்டதைக் காட்டியுள்ளனர். இந்தியாவின் வடபகுதிகளில் காணப்படும் பெரும்பாலான இராவண அருள்மூர்த்தி சிற்பங்களில் பூதங்கள் இரண்டு இராவணனின் இருபுறத்தும் குனிந்து நின்று தம் வயிற்றுக்காற்றைப் பின்வழி வெளியேற்றி அவனைத் திக்குமுக்காடச் செய்வதைக் காணமுடிகிறது. பூந்துருத்திச் சிற்பத்தொகுதியின் மேற்பகுதியிலோ இராவணனுக்காய்த் திரும்பி நிற்கும் பூதமொன்று காற்றுக்குப் பதில் வயிற்றுக் கழிவை வெளித்தள்ளித் தன் வெறுப்பையும் சினத்தையும் புலப்படுத்துகிறது.

கலித்தொகைத் தொன்மம் ஒன்று பத்திமைக் காலத்தில் பதிக வாழ்க்கை பெற்றுப் பேரரசுக் காலங்களில் சிற்பங்களாகப் பதிவாகி, சிவபெருமானின் அருள்பெற்ற தென்னிலங்கை இராவணனை மக்கள் உள்ளங்களில் நிலைபேறு கொள்ளச் செய்துள்ளமை கலையும் இலக்கியமும் கையிணைக்கும்போது நிகழும் பேரதிசயங்களுள் ஒன்றெனலாம்.


திருமடத்துக் குடைவரைகள்

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டில் பழம் பெருமையுடன் விளங்கும் திருமடங்கள் பல உள்ளன. சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், சமணம் எனப் பல்வேறு சமயங்களைச் சார்ந்துள்ள அவற்றுள், குடைவரைக் கோயில்களைத் தங்கள் ஆளுகையின் கீழ்க் கொண்டுள்ள திருமடமாய்த் திகழ்வது திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடம்தான். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இலங்கும் இத்திருமடத்தின் கீழ்க் குன்றக்குடியில் மூன்றும் கோளக்குடியில் ஒன்றும் பிரான்மலையில் ஒன்றும் அரளிப்பட்டியில் ஒன்றுமாய் ஆறு குடைவரைகள் உள்ளன. இவை ஆறுமே தமிழ்நாட்டுக் குடைவரைக் கலைவரலாற்றில் தனிச்சிறப்புடன் பொலிபவை.

குடைவரை

மலையிலோ, குன்றிலோ, பாறையிலோ முன்னிருந்து பின்னாகக் குடைந்து உருவாக்கப்படும் கோயில்களே குடைவரைகள். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான குடைவரைகள் பாறை அல்லது சிறு குன்றுகளின் கீழ்ப்பகுதியில் அமைய, சிலவே பெரிய குன்றின் அல்லது மலைச்சரிவின் இடைப்பகுதியில் உள்ளன. 

குன்றக்குடிக் குடைவரைகள்

மகுடமற்ற பிள்ளையார்

குன்றக்குடித் திருமடத்தின் கீழுள்ள ஆறு குடைவரைகளில் குன்றக்குடியிலுள்ள மூன்றும் அங்குள்ள குன்றின் கீழ்ப்பகுதியில் அடுத்தடுத்துக் குடையப்பட்டுள்ளன. குடைவுகளுக்கு இடைப்பட்ட பாறைச்சரிவுகளில் இலிங்கத் திருமேனி, பிள்ளையார். மகுடமற்ற தலையுடன் விளங்கும் இப்பிள்ளையார் தனித்தன்மையர். மூன்று குடைவரைகளிலுமே கருவறையில் தாய்ப்பாறையில் உருவான இலிங்கத்திருமேனி.

முதலிரு குடைவரைகள்

விஷ்ணுவும் கருடனும்

குடைவரைக் காலச் சிற்பங்கள் ஏதுமற்ற முதல் குடைவரையில் இலிங்கத்தின் கோமுகத்தைக் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ள பூதம் தலையால் தாங்குகிறது. மசிலீச்சுரம் என்று கல்வெட்டுக் குறிக்கும் இரண்டாம் குடைவரை, முகப்பின் பக்கச்சுவர்களில் சிவபெருமானின் கருவிகளான மழுவையும் முத்தலை ஈட்டியையும் அடையாளப்படுத்துமாறு, அவற்றை மகுடத்திலும் தோள்களின் பின்னிருக்குமாறும் கொண்ட காவலர் இருவர் சிற்பங்களையும் மேற்குச்சுவர்க் கோட்டத்தில் விஷ்ணுவும் கருடனும் தோழமையுடன் நிற்கும் சிற்பக் காட்சியையும் கொண்டுள்ளது. கருடன் மனிதவடிவில் காட்டப்பட்டுள்ளார். தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் இதுபோல் மழுவடியாராகவும் சூலத்தேவராகவும் காவலர்களைக் காண்பது அரிதானது. 

சூலத்தேவர்

மூன்றாம் குடைவரை

மூன்றாம் குடைவரையின் முப்பக்கச் சுவர்களும் பேருருவச் சிற்பங்களால் நிறைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது இரண்டு கால்களையும் குறுக்கீடு செய்து எட்டுத் திருக்கைகளுடன் சிவபெருமான் ஆடும் அர்த்தஸ்வஸ்திகக் கரணம். செவல்பட்டிக் குடைவரையிலும் இக்கரணக் காட்சி இடம்பெற்றிருந்தாலும் இங்கு இசைக்கலைஞர்களும் உடனிருப்பது கூடுதல் சிறப்பு. 

கோளக்குடிக் குடைவரை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோளக்குடிக் குடைவரை அவ்வூர்க் குன்றின் நடுப்பகுதியில் உள்ளது. காலப்போக்கில் மலையின் அடிவாரத்திலும் இடைப்பகுதியிலும் மலைமேலும் எனப் பல கற்றளிகள் பெற்றுப் பெருவளாகமாக மாறியுள்ள கோளக்குடிக் குடைவரையின் மண்டபச் சுவர்களில் இருபுறத்தும் மலரேந்திய முனிவர்களின் சிற்பங்கள். அகத்தியர், புலத்தியர் என்று கோயிலாரால் அழைக்கப்படும் இத்தகு அருளாளர் சிற்பங்களைப் புதுக்கோட்டை மாவட்டத் தேவர்மலைக் குடைவரையிலும் காணமுடிகிறது. கோளக்குடியின் சிறப்புகளாகக் கருவறை வாயில் மேலுள்ள மகரதோரணத்தையும் குன்றின் ஒருபகுதியில் வெட்டப்பட்டுள்ள எழுவர் அன்னையர் சிற்பத்தொகுதியையும் சுட்டலாம்.

எழுவர் அன்னையர்

தமிழ்நாட்டின் தென்பகுதியில் மட்டுமே காணக்கிடைக்கும் குடைவரைக் கால எழுவர் அன்னையர் தொகுதிகளில், இங்கு மட்டுமே அன்னையருள் ஒருவரான சாமுண்டி, இயமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு, அவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர், அழகில் சிறந்தவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகள் கீழிறங்கிப் பிணக்குண்டலங்களுடன் தோள்களை வருட, கொண்டையின் முகப்பில் மண்டையோடு. மூன்று தலைகளைச் சுற்றியும் பெரிய ருத்திராக்கங்களாலான தலைமாலை அணிந்து, வலக்கையில் சுரைக்குடுவையுடன் இங்குள்ள நான்முகியின் சிற்பமும் தனித்தன்மையதே. குன்றக்குடி போலவே கோளக்குடியிலும் தாய்ப்பாறைப் பிள்ளையார் மலையின் தென்சரிவில் செதுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை வளாகம் கோளக்குடிதான். 

சாமுண்டி

பிரான்மலைக் குடைவரை

வள்ளல் பாரியின் பறம்புமலையாக அறியப்படும் பிரான்மலையிலுள்ள திருக்கொடுங்குன்றநாதர் கோயில்வளாகத்தின் அளவில் சிறிய குடைவரை, அதன் மண்டபவாயிற் கோட்டங்களில் காவற்பெண்டுகளைக் கொண்டுள்ளது. திருமடத்துக் குடைவரைகள் ஆறனுள் பிரான்மலையில் மட்டுமே தாய்ப்பாறைச் செதுக்கலாகப் பிள்ளையார் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கருவறையில் சிவபெருமானும் உமையன்னையும் இணையாக அருகருகே அமர்ந்துள்ள அழகுக் கோலம் கண்களை நிறைப்பது. தாய்ப்பாறையில் உருவானவையா, சுதைவடிவங்களா என்றறிய முடியாதவாறு அழகூட்டல்கள் பெற்றுள்ள இவ்விரு இறைத் திருமேனிகளும் கைத்திறன் வல்ல பாண்டிநாட்டுக் கவின்கலைஞர்களின் படைப்புகளாகும். இது ஒத்த இணைக்கோலம் சிவகங்கை மாவட்டத் திருமலைக் குடைவரைக் கருவறையிலும் இடம்பெற்றிருப்பினும் பிரான்மலை இணையரின் அழகு சொற்களை மீறிய சுகம்.

அரளிப்பட்டிக் குடைவரை

பிள்ளையார் லிங்கம்

அரளிப்பட்டி மஞ்சுவிரட்டுக்குப் பெயர் பெற்றிருக்குமாறே, அரவங்கிரிக் குன்றின்கீழ்ப் பகுதியிலுள்ள எளிய குடைவரைக்காகவும் அறியப்பட்ட ஊராகும். குடைவரையின் மண்டபச் சுவர்களில் வடபுறமுள்ள இலிங்கத்திருமேனி தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாத ‘பிள்ளையார் லிங்கமாக’ ஒன்றுக்குள் ஒன்றாய் இலிங்கபாணத்தில் பிள்ளையார் செதுக்கலைப் பெற்றுள்ளது. உற்றுநோக்குவாருக்கே வடிவம் புலப்படுமாறு, தந்தைக்குள் தனையனைப் பொருத்தமாய்ப் பொளிந்திருக்கிறார்கள். இயற்கை எழில் நிரம்பிய சூழலில் அமைந்திருக்கும் இக்குடைவரையின் தாய்ப்பாறை இலிங்கம் இத்திருமடக் குடைவரைகளிலேயே அளவில் சிறியதாகும். 

திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடத்தின் ஆளுகையிலுள்ள ஆறு குடைவரைகளும் அங்குள்ள பல்வேறு தாய்ப்பாறைச் செதுக்கல்களும் பொதுக் காலம் எட்டாம் நூற்றாண்டில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. இவையனைத்துமே ஏதேனும் ஒரு விதத்தில் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் தனித்துக் குறிக்குமளவு சிறப்புப் பெற்றுள்ளமை இவற்றை உருவாக்கிய கைகளின் வளமையையும் பின்னிருந்த உள்ளங்களின் செழுமையையும் காலம் உள்ளளவும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும். இக்குடைவரைகளில், பதிவாகியிருக்கும் கல்வெட்டுகளோ பாண்டிநாட்டு வரலாற்றின் சுவையான பக்கங்களைக் கருத்தோடு தேடுவாருக்குக் கனிவோடு வழங்கி மகிழ வல்லன.

குலோத்துங்கப் புரட்சி

இரா. கலைக்கோவன்

திருவரங்கம் திருக்கோயிலை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கமுடியாது. பாசுரம் பெற்ற 108 வைணவத் திருக்கோயில்களில் திருப்பதிக்கு இணையாகப் பதினொரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற பெருங்கோயில் இது. பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தால் சுட்டப்பெற்ற பழைமைச் சிறப்பினது. தமிழ்நாட்டுக் கோயில்களில் அதிக அளவில் கல்வெட்டுப் பதிவுகள் பெற்ற இடமும் இதுதான். இங்குள்ள 191 சோழர் காலக் கல்வெட்டுகளில் சுங்கம் தவிர்த்தவராகவும் பேரம்பலம் பொன் வேய்ந்தவராகவும் அறியப்படும் முதற்குலோத்துங்கர் காலத்தன 83. பொதுக்காலம் 1070இலிருந்து 1120வரை 50 ஆண்டுகள் சோழப் பேரரசைக் கட்டிக் காத்த இவரது பதிவுகளில் 72, திருவரங்கம் கோயிலின் மூன்றாம் திருச்சுற்றின் நாற்றிசைச் சுவர்களிலும் பரவி, அச்சுற்றையே குலோத்துங்கச் சுற்றாக்கியுள்ளன. கலிங்கத்தை வென்று கலிங்கத்துப்பரணி உருவாகக் காரணராய் அமைந்த இம்மன்னரின் காலத்தில் அரங்கத்தில் நிகழ்ந்த வேளாண்புரட்சியை இங்குள்ள கல்வெட்டுகளில் பல ஒரு கதைபோலச் சொல்லிக் கண்சிமிட்டுகின்றன.

சோழர் காலத்தில் தமிழ்நாட்டுக் கோயில்கள் அவற்றின் வழிபாடு, படையல், விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு, அவற்றிற்கென வழங்கப்பட்டிருந்த கொடைநிலங்களின் விளைச்சலையே நம்பியிருந்தன. அரங்கத்தின் நிலையும் அதுதான். கோயில் மடைப்பள்ளி சார்ந்த பல்வேறு அறக்கட்டளைகள் திருமடைப்பள்ளிப்புறமாக அளிக்கப்பட்டிருந்த கொடைநிலங்களின் விளைவு கொண்டே நிறைவேற்றப்பட்டன. இந்நிலங்களின் பெரும்பகுதி தண்டுறை, காரைக்குடி எனும் காவிரிக்கரை ஊர்களில் இருந்ததால், ஆற்றில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்நிலங்களில் மணலடித்து விளைச்சலைக் குறைப்பதும் நிலத்தைத் தரிசாக்குவதும் தொடர்ந்தது.

நிலச்சீர்மைப் பணிகள் தேவைக்கேற்ப நிகழ்ந்தாலும் முழுவீச்சில் நடைபெறாமையின் வரவு குறைந்து மடைப்பள்ளிப் பணிகள் சுருங்கின. குலோத்துங்கர் ஆட்சிக்காலத்தில் இவ்விரு ஊர்களிலும் பயிர் ஏறாதிருந்த நிலங்களின் அளவு பெருகியிருந்தமை கோயில் ஆட்சியருக்குப் பெருந்துன்பமானது. போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் திருவரங்கத்து மடைப்பள்ளிச் செயற்பாடுகள் நின்றுவிடும் எனக் கருதிய கோயிலார், அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டுசென்றனர். அரங்கம் கோயிலின் அன்றாட நடைமுறைகள் தொய்வின்றித் தொடரவும் உழுகுடிகள் வேலைவாய்ப்புப் பெறவும் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்விளைவாக இவ்விரு ஊர்களின் மணலடித்த நிலங்களைப் பண்படுத்தும் நோக்கில் அரசும் கோயிலும் முழு வீச்சில் கையிணைத்தன. 

நிலச்சீர்மையே குறிக்கோளாய்த் தொடங்கிய இந்த அரும்பணியில் குலோத்துங்கரின் தேவியர் தென்னவன் மாதேவி, வளவன் மாதேவி, உலகமாதேவி, நெரியன் மாதேவி ஆகியோருடன் அரசின் உயர் அலுவலர்களும் சோழப் பெரும்படையின் தலைவர்களும் நிலக்கிழார்களும் அரண்மனைப் பணிமக்களும் ஒன்றிணைந்தனர். தமிழ்நாட்டில் வேறெங்கும் வரலாற்றின் எக்காலத்தும் இது போல் நிலம் திருத்தும் பணி அரசுசார் முயற்சி எனக் கொள்ளத்தக்க அளவிற்கு மேற்கொள்ளப்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை. மணலடித்து விளையாதிருந்த தண்டுறை, காரைக்குடி நிலங்களை முப்பதிற்கும் மேற்பட்ட அரசு உயர் அலுவலர்கள் விலைக்குப் பெற்று அவற்றை விளைநிலங்களாகத் திருத்தினர். எட்டுக்கும் மேற்பட்ட படைத்தலைவர்கள் இத்திருப்பணியில் பங்கேற்றனர். இப்பெருமக்களுள் சிலர் சைவ சமயம் சார்ந்தவர்களாய் இருந்தபோதும் அரங்கன் கோயில் நிலச்சீர்மைப்பணியில்  சமயச் சார்பின்றிச் செயற்பட்டமை கல்வெட்டுகள் சுட்டும் அவர்தம் இயற்பெயர்களால் அறியப்படும் உண்மையாகும்.  

மணலடித்து வீணான நிலங்களைத் திருத்தி விளைச்சல் காட்ட முன்வந்தவர்களுக்கு ஒரு வேலி ஒரு காசு என நிலம் விற்கப்பட்டதுடன் ஐந்தாண்டுகளுக்கு அந்நிலத்தின் மீதான வரியும் நீக்கப்பட்டது. குலோத்துங்கர் காலத்தில் காவிரி, கொள்ளிடம்சார் ஊர்கள் எத்தகு நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றிருந்தன என்பதையும் அவை வெள்ளத்தால் சீர்குலைந்த நிலையில் அவற்றைச் சரிசெய்ய ஊராட்சிகள் எத்தகு முயற்சிகளை மேற்கொண்டன என்பதையும் இக்கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. 

ஆற்றிலிருந்து தலைவாய் மதகுகள் வழி வெளிப்பட்ட நீர் அதற்கென அமைந்த நீரோடுகால்களில் ஓடிப் பெருவாய்க்கால்களை அடைய, அவை அந்தந்த ஊர்களுக்கான வாய்க்கால்களுக்கு நீர்ப்பிரிக்க, உள்வாய்க்கால்களும் உட்சிறு வாய்க்கால்களும் உள்ளார்ந்த நிலத்துண்டுகளுக்கு நீரெடுத்துச் சென்றன. நாட்டு வாய்க்கால், பொது வாய்க்கால், திசைநோக்கிய வாய்க்கால்கள், ஊர்ப்பெயர் கொண்ட வாய்க்கால்கள் என நீர்ப்பாசனம் தேவைக்கேற்பவும் ஊரின் நிலவிளைவுகளுக்கு ஏற்பவும் பிரித்துப் பகிர்ந்தளிக்கப்பட்டது. மிகைநீர் செல்ல நீர்வடிகால்களும் பயன்பாட்டிலிருந்தன. இப்பாசனப் பராமரிப்பிற்குத் தேவையான ஆள்உழைப்பிற்கு நிலஉரிமையாளர்கள் பொறுப்பேற்றிருந்தனர். 

நிலத்தை விலைக்குப் பெற்றவர்கள் நிலச்சீர்மைக்கு உள்ளூர் மக்களையும் சுற்றூர் மக்களையும் உழுகுடிகளாகக் கொண்டதால் வேலைவாய்ப்புப் பெருகிற்று. வேலைக்கேற்ற ஊதியம் உழைத்தவர்களுக்குக் கிடைத்ததாகக் கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன. பண்படுத்தப்பட்ட நிலத்தில் நிலத்துக்கு உரியவர்கள் அவரவர் விருப்பிற்கேற்ற பயிர்களை விளைவிக்கும் உரிமை வழங்கப் பெற்றதால், இவ்வேளாண் புரட்சியில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஊருக்கும் கோயிலுக்கும் பயன்தரும் மரங்களையும் செடிகளையும் விளைவித்தனர். இது போல் நிலம் திருத்தும் பணி சோழர் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்துள்ளது எனினும் ஒரு தவம் போல ஒரு மன்னர் காலத்தில் அரசு சார்ந்தவர்களால் அது நிகழ்த்தப்பட்டிருப்பது திருவரங்கத்தில்தான், அதுவும் குலோத்துங்கர் ஆட்சியில்தான் என்பது வரலாற்று உண்மையாகும். 

திருத்திய நிலத்தில் பயிர் தலைகாட்டியிருப்பின், ஐந்தாம் ஆண்டிற்குப் பிறகு ஒரு வேலி விளைவுக்கு 8 கலம் நெல்கோயில் வரியாகக் கொள்ளப்பட்டது. அதையும் இருதவணைகளில் தர ஒப்புதலானது. பழ, பயன் மரங்கள், காய்கறிப் பயிர்கள் விளைவித்தவர்கள் மரத்திற்கு இவ்வளவு எனப் பழங்களையும் விளைச்சலைப் பொறுத்துக் காய்களையும் கோயிலுக்கு வழங்கினர். திருத்தப்பட்ட நிலங்களுள் பெரும்பாலன பூந்தோட்டங்களாக மாறியதால், குலோத்துங்கர் காலத்தில் திருவரங்கம் கொண்டிருந்த அளவிற்கு வேறெந்தக் கோயிலிலும் பூந்தோட்டங்கள் அமையவில்லை எனலாம். இவை அரங்கனின் பல்வேறு திருப்பெயர்களில் வழங்கியதுடன் இங்குப் பூத்தமலர்களே அரங்கனின் திருமேனியை அழகுசெய்து கோயில் வளாகத்தை மணக்க வைத்தன. 

நிலம், நீர் சார்ந்த இயற்கையின் நெருக்குதல்களை ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ச்சமுதாயம் எத்தனை எளிதாகக் கூட்டுறவு நோக்கில் எதிர்கொண்டது என்பதைக் குலோத்துங்கரின் அரங்கக் கல்வெட்டுகள் மிக விரிவாகவும் தெளிவாகவும் பதிவுசெய்துள்ளன. இந்த மண்ணின் வரலாறு வளம்மிக்கது. தேடுவார் திறனுக்கேற்ப அது வழங்கிடும் வழிகாட்டல்கள் வாழ்க்கையின் பன்முகச் சிக்கல்களுக்கும் திறப்பாக அமையும். எந்த உலகமயமாக்கலும் அடிப்படைகளை அழிப்பதில்லை. அவை பொதிந்திருக்கும் வரலாற்றுக்கும் அழிவில்லை. வரலாறு நிழலைப் போல. ஓளியில் வாழ நினைப்பவர்கள் அதைத் தவிர்க்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது.

அடையாளத்தின் அடையாளம்

இரா. கலைக்கோவன்

‘புனிதவதி’ எனும் பெயர் கொண்டவரில் பலர் அப்பெயரின் பின்னிருக்கும் பெருமை அறிவதில்லை. புனிதவதி வெறும் பெயரன்று. பெண்ணாகப் பிறந்து தம்மைப் பேயாக மாற்றிக் கொண்ட ஓர் அம்மையின் முதற்கட்ட வாழ்க்கையே அந்தப் பெயருடன்தான் ஒட்டியுள்ளது. ஊர்ப்பெயருடன் சிவபெருமானால் வழங்கப்பட்ட அம்மை எனும் சிறப்புப் பெயர் இணையக் காரைக்கால் அம்மையாக அறியப்படும் இப்புனிதவதிப் பெருமாட்டி பல முதல்களின் சொந்தக்காரர்.

சிவபெருமானைப் போற்றி முதன்முதலாகப் பதிகம், வெண்பா, அந்தாதி, கட்டளைக்கலித்துறை பாடிய பெருமைக்குரிய இவர், தம் இறைப்பாடல்களால் திருமுறைகளில் இடம்பெற்று அறுபத்து மூவரிலும் ஒருவரான ஒரே பெண்மணி. அறுபத்து மூன்று தனியடியார் திருமுன்களில் அமர்ந்த திருக்கோலத்தவர் இவர் ஒருவரே. சிவபெருமானின் திருக்கூத்தை உளம் களிக்கப் பாடி, அந்த ஆடலின் களம், ஆடும்போது இறைவன் கொண்ட ஒப்பனை, கைகளில் கொண்ட கருவிகள், ஆடை, அணிகள், ஆடலுக்கு அமைந்த இசை, அதைத் தந்த கருவிகள், அவற்றை இயக்கிய பேய், பூதம் உள்ளிட்ட உடன்கூட்டத்தார், உடன் ஆடியவர்கள், அந்த ஆடலின் அமைவு, அதன் விளைவுகள், ஆடலைக் கண்ணுற்றார் என இறையாடல் நோக்கில் பதிகப் பெருவழியில் பயணப்பட்ட முதல் அடியாரும் அம்மைதான்.

பெருமைகள் சூழ உயர்ந்தோங்கி நிற்கும் இவ்வம்மையை முதன்முதலாக வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்ந்த பெருமை சுந்தரருக்கு உரியது. தம் காலத்தும் தமக்கு முன்னும் வாழ்ந்த இறையடியார்களின் பெயர்களைத் தொகுத்து அவர் பாடிய திருத்தொண்டத்- தொகையில்தான் புனிதவதியான காரைக்கால் அம்மை அறிமுகமாகிறார். அந்த அறிமுகமும் அவரது இயற்பெயராலோ, வழங்கு பெயராலோ அமையவில்லை. அவர் விரும்பி வேண்டிப் பெற்ற பேய்வடிவமே பெயராகிப் பேயாராகவே சுந்தரரால் பதிவுபெறுகிறார் அம்மை. ‘பெருமிழலைக் குறும்பனார்க்கும் பேயார்க்கும் அடியேன்’ என்பது சுந்தரர் வாய்மொழி.

திருத்தொண்டத்தொகையை உள்வாங்கி நம்பியாண்டார் நம்பியால் சற்றே விரிவுசெய்யப்பட்ட அடியார்களின் வரலாறுதான் திருத்தொண்டர் திருவந்தாதி. அதில்தான் அம்மையைப் பற்றிய இரண்டு புதிய செய்திகள் கிடைக்கின்றன. சிவபெருமானைக் காண அம்மை கயிலை சென்றதாகவும் அங்குக் கால்பதித்து நடப்பதை விழையாமல் தலையால் நடந்து சென்றதாகவும் அது கண்ட உமை சிவபெருமானிடம் யாரிவர் எனக் கேட்டதாகவும் கூறும் அந்தாதி, இறைவன், ‘இவர் நம் அம்மை’ என்று மகிழ்ந்துரைத்தாகச் சொல்கிறது.

சிவபெருமானால் அம்மை என்றழைக்கப்பட்ட பெருமையுடன் காரைக்கால் குலதனமாகவும் நம்பியால் அம்மை உயர்த்தப்பட்டுள்ளார். கயிலையில் அம்மை தலைகீழாக நடைபயின்ற காட்சியைத் தாராசுரம் கோயில் விமானம் சிற்பச் செதுக்கலாய்ப் பதிவுசெய்துள்ளது. சென்னை அருங்காட்சியக வாயிலிலுள்ள சோழர் காலச் சிற்பத்தொகுதியொன்றும் கயிலை நடையைக் கொண்டுள்ளது.

0 Ammaiyin Kayilai Nadai Darasuram

அம்மையின் கயிலை நடை, தாராசுரம்

அம்மையின் வரலாறு பேசும் மூன்றாவது நூல் சேக்கிழாரின் பெரியபுராணம். அதில்தான், பல பாடல்கள் வழி அம்மையின் முழுமையான வரலாற்றைச் சேக்கிழார் பகிர்ந்து கொள்கிறார். தம்மைக் காணவந்த அம்மையிடம் சிவபெருமான், ‘உமக்கு வேண்டுவது கேட்க’ என்றதும், இன்ப அன்பு, பிறவாமை, பிறந்தால் இறைவனை மறவாமை கேட்ட அம்மை, மிகச் சிறப்பான ஒன்றையும் வேண்டிப் பெற்றார். ‘பெருமானே, நீ ஆடும்போது உன் திருவடிக்கீழ் நான் இருக்கவேண்டும்’. காரைக்கால் அம்மையின் இந்த வேண்டுகோளைச் சேக்கிழார் எப்படி அறிந்திருக்கமுடியும்? பெரியபுராணத்தைப் பல கோணங்களில் ஆய்வுசெய்த பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கனார் சேக்கிழாரை வரலாற்று ஆய்வாளராக அடையாளப்படுத்துவார். அது உண்மையே என்பதை அம்மையின் வரலாற்றுத் தடங்கள் நிறுவுகின்றன.

பேய், காரைக்கால் குலதனம், கயிலையில் தலைகீழ் நடை எனும் தொடக்க அடையாளங்களுடன் வெளிப்படும் அம்மையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேண்டுகோளைக் கண்முன் காட்சியாக்கியவரும் ஓர் அம்மைதான். பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் பெருவாழ்வு வாழ்ந்த இவ்வம்மையை வரலாறு மழவரையர் மகளாகக் கொண்டாடுகிறது. கண்டராதித்த சோழரின் தேவியாகவும் உத்தமசோழரின் அன்னையாகவும் தம்மைக் கல்வெட்டுகளில் அடையாளப்படுத்திக் கொள்ளும் செம்பியன்மாதேவி எனும் இவ்வம்மையும் காரைக்கால் அம்மை போல் பல முதல்களின் முதல்வர். இவர் காலத்தில்தான் கோயில்களில் மண்டபங்களும் அவற்றில் இறைக்கோட்டங்களும் பெருகின. செப்புத்திருமேனிகள் பலவாய் உருவாயின. பழங்கோயில்கள் புதுப்பிக்கப்பெற்றபோது அங்கிருந்த கல்வெட்டுகள் கருத்தோடு படியெடுக்கப்பட்டு, ‘இதுவும் ஒரு பழங்கற்படி’ என்ற குறிப்புடன் புதிய கட்டுமானத்தில் பதிக்கப்பெற்றன.

கருந்திட்டைக்குடி ஆனந்ததாண்டவரும் காரைக்கால் அம்மையும்

மாதேவியின் சாதனைகளின் சிகரமாய், முற்சோழர்களின் தொடக்கக்காலக் கோயில்களில் கண் தழுவாத இடங்களில் ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சிவபெருமானைத் தாம் திருப்பணிசெய்த கோயில்களில் மண்டபக்கோட்டத்தில் பேருருவினராய் ஆடச்செய்தமையைக் குறிக்கலாம். இந்தச் சிற்பப் பதிவுகள் அனைத்திலும் மாதேவியின் மகத்தான முத்திரையாக சிவபெருமானின் திருவடிக் கீழோ, அருகிலோ காரைக்கால் அம்மை இடம்பெற்றார். கைத்தாளமிடுமாறோ, கைகளைக் கொட்டுமாறோ, பாடியநிலையிலோ, ஆடலைப்போற்றி மகிழுமாறோ அம்மையின் பேயுரு அடையாளமானது. கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயில் ஆனந்ததாண்டவக் காட்சியிலுள்ள அம்மையின் வடிவம் ஈடுஇணையற்ற சிற்பப்பதிவாகும்.

ஆனந்ததாண்டவரும் காரைக்கால் அம்மையும் – கூகூர் மற்றும் திருக்கோடிக்கா

செம்பியன்மாதேவி அடையாளப்படுத்துவதில் முதன்மையர். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் இவர் ஒருவரே தம் கணவரைப் பெயர்சுட்டி சிற்பக் காட்சியாக்கியிருப்பவர். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கோனேரிராஜபுரம் உமைக்குநல்லவர் கோயிலில் கண்டராதித்தர் இறைவனை வழிபடும் காட்சி கல்வெட்டுடன் பதிவாகியுள்ளது. அதே காட்சி அம்மை திருப்பணி செய்த சித்தீசுவரம், ஆனாங்கூர், ஆடுதுறை உள்ளிட்ட வேறு சில கோயில்களிலும் மீள்பதிவாகியுள்ளது. அடையாளத்தின் அடையாளமாய் வாழ்ந்த செம்பியன்மாதேவியே சேக்கிழாருக்குக் காரைக்கால் அம்மையின் வேண்டுகோளைத் தாம் அமைத்த சிற்பக்காட்சிகளின் வழி அடையாளப்படுத்தியவர்.

கோனேரிராஜபுரம் கண்டராதித்தர்

சுந்தரர், நம்பியின் சுட்டல்களாலும் தம் காலத்து வழங்கிய செய்திகளாலும் ஈர்க்கப்பட்டே காரைக்கால் அம்மையின் வேண்டுகோளுக்கு இத்தகு முத்திரைப்பதிவைச் செம்பின்மாதேவி வழங்கியிருக்கிறார். அறுபத்து மூன்று அடியார்களில் சிற்பக்காட்சிகள் வழிப் பல்லவர் காலத்திலேயே இறைவனோடு இணையும் பேறு பெற்ற முதல் அடியவர் சண்டேசுவரர் என்றால், இறையாடலோடு நெருங்கிய முதல் அடியவராகக் காரைக்கால் அம்மையைக் குறிக்கலாம். ஆடலைப் பாடிய முதல் அடியவர் என்ற பெருமையோடு அவ்வாடலை அருகிருந்து காணும் ஒரே அடியவர் என்ற சிறப்பும் என்றென்றும் அம்மைக்கே.

வரலாறு இலக்கிய ஏடுகளிலோ, கல்வெட்டு வரிகளிலோ மட்டுமில்லை. அது கோயில்களில் சிற்பக்காட்சிகளாகவும் கண்சிமிட்டுகிறது. தொடரிழைகளைக் கண்டு தொடர்புபடுத்திக் கொள்பவர்களே வரலாற்றை வளப்படுத்துகிறார்கள்.

‘எனைத்தானும் நல்லவை கேட்க’- வானொலிப் பொழிவு

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ நிகழ்ச்சியில், இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் சார்ந்த செய்திகளைத் தொடர்ப் பொழிவாக டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கி வருகிறார். முதல் பொழிவு 03.10.23 திங்களன்று ஒலிபரப்பானது. சுவையான வரலாற்றுத் தகவல்களைக் கேட்டு மகிழ, திங்கள்தோறும் காலை 06.10 மணிக்கு இணையலாம்.

பொழிவு 1 – 03.10.23

சங்க இலக்கியங்கள் குறித்தும், குறிப்பாக மிகுதியாகப் பேசப்படாத கீழ்க்கணக்கு நூல்கள் பற்றியதுமாக முதல் பொழிவு அமைந்தது. அதன் பதிவை இங்கு கேட்கலாம்.

பொழிவு 2- 10.10.23

பூதன் சேந்தனாரின் இனியவை நாற்பது காட்டும் கல்விச் சிந்தனைகளைப் பற்றியது இந்தப் பொழிவு. வயிற்றுப் பசிக்குக் கொள்ளப்படும் உணவு உயிர்காப்பதுபோல, செவிகளில் நிறையும் கருத்துக் குவியல் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

பொழிவு 3- 17.10.23

இந்த வாரப் பொழிவு, கீழ்க்கணக்கின் மற்றொரு நூலான விளம்பி நாகனாரின் நான்மணிக்கடிகை கூறும் புகழ் வளர்த்து வாழ்வதற்கான வழிகள் பற்றியதாக அமைந்தது. முதலில், ‘பிறர்க்களித்து உண்பதால் புகழ் வளரும்’ என்று கடிகை இயம்புவதை வள்ளுவத்தோடு இணைத்து விளக்கும் டாக்டர் இரா. கலைக்கோவன், நூல் காட்டும் வாழ்வின் எளிய வழிமுறைகளை “புகழை விதை- அதற்கு அறம் போற்றும்; அறம் நிலைப்பட வாழ- சினம் விடு”- என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறார்.

பொழிவு 4- 25.10.23

கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நல்லாதனார் இயற்றிய திரிகடுகத்தின் சிறப்புக்களைச் சுட்டியது இந்த வாரப் பொழிவு. ‘ஒவ்வொரு பாடலும் வாழ்விற்குத் தேவையான மூன்று நல்கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதால் பெயர்ப் பொருத்தம் இனிதே அமைந்தது’ என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். எடுத்துக்காட்டாகக் கடுகப் பாடல்களில் ஒன்று, நன்மைப் பயவாத மூன்றாய்- கணக்காயர் இல்லாத ஊரையும்; பிணக்கறுக்கும் மூத்தார் இல்லாத அவையையும்; பகிர்ந்துண்ணும் மனமில்லாத பக்கத்து வீட்டுக்காரரையும் காட்டுவதைச் சுவைபட விளக்குகிறார்.

பொழிவு 5- 31.10.23

முக்கடுகத்தின் 43ஆவது பாடல் கூறும் வாழ்வின் கோட்பாடுகளான- அ) வாயின் அடங்குதல்; ஆ) மாசற்ற செய்கை; இ) பொய்யற்ற நெஞ்சம் கொள் ஆகியன பற்றியது இந்தப் பொழிவு. “இதழ் மூடிக்குள் பல் அடுக்குகளின்பின் பக்குவமாய்ச் சிறை வைக்கப்பட்டிருந்தபோதும் நா அடங்கி இருப்பதில்லை. வாய்ப்பமையும் போதெல்லாம் வெளிப்பட்டு வேதனைகளை விதைத்துவிடுகிறது,” என்று அடங்காத நாவின் விளைவுகளை அழகாக விளக்குகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.