கலை, இலக்கியத்தில் பேய், பிசாசு, பூதம்

இரா. கலைக்கோவன்

பேய், பிசாசு, பூதம் என்று சொல்லும் போதே ஒரு மெல்லிய நடுக்கம் உடலில் பரவும். கண்கள் நாற்புறமும் சுழன்று, ‘ஏதுமில்லையே’ என்பதை உறுதி செய்யும். அண்மைக் காலத்தே வெளியான பேய்ப்படங்களின் பசுமையான நினைவுகளுடன் பழம் பேய்ப்படங்களின் நிழலான பின்னணியும் மனத்திரையில் ஓடும். காலங்காலமாய் அச்சம் எனும் உணர்வுடன் இணைந்து பின்னப்பட்ட இந்த மூன்று சொற்களும் மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்தே உயிர் பெற்று உலா வருவதே இதற்கெல்லாம் காரணம்.

பேய்

பேய், பிசாசு, பூதம் எனும் இம்மூன்றனுள் தமிழர் இலக்கியத்தில் பெருவழக்குப் பெற்று மிளிர்பவை பேயும் பூதமும்தான். பேய் தொல்காப்பியப் பழைமையது. பொருளதிகாரக் காஞ்சித்திணை பேயின் செயற்பாடுகள் குறித்துப் பேசுகிறது. போரில் காயப்பட்டோரை நரி முதலியன கடித்துவிடாதவாறு, அவர்தம் உயிர் தானாகப் போகுமளவும் அருகிருந்து காக்குமாம் பேய். இதை, ‘பேய் ஓம்பல்’ என்றே இலக்கியம் பாராட்டுகிறது. உயிர் நீங்கிய உடலே பேய்க்கு உணவு. அதனால்தான், இந்தக் காவல். தன் உணவைப் பிற உயிர்கள் சேதப்படுத்திவிடக் கூடாதல்லவா! உண்ட மகிழ்வில் பேய் ஆடுவதும் உண்டு. அதைப் பேய்க் குரவையாகப் பார்க்கிறது சிலப்பதிகாரம். பேய்கள் ஆடி மகிழும் போர்க்களத்தைப் படம்பிடிக்கிறது பதிற்றுப்பத்து.

சாமுண்டியின் கீழ்ப் பிணமுண்ணும் பேய்

பேய்களைச் சிவபெருமானுடன் இணைத்து மகிழ்கின்றன பத்திமைக் கால இலக்கியங்கள். அவர் சுடுகாட்டில் ஆடுபவரல்லவா! சம்பந்தரும் அப்பரும் ஆறு திருமுறைகளிலும் காட்டியிருக்கும் பேய்க்காட்சிகள், ‘பேய் வரலாறு’ எழுதுமளவிற்குத் ததும்பி நிற்கின்றன. ஆடிவரும் பேய்கள், கூடி ஓடிவரும் பேய்கள், இசைக்கருவிகளை இயக்கியவாறே பாடிவரும் பேய்கள் எனப் பதிகங்களில் இறையாடலைக் கிளர்ச்சியுடன் காட்ட சம்பந்தருக்கும் அப்பருக்கும் பேய்கள் பெருந்துணையாகின்றன. அச்சமூட்டும் காட்சிகளும் இல்லாமல் இல்லை. அது போலவே பேய் வண்ணனைகளும் பதிகங்களில் விரவிக்கிடக்கின்றன.

பேய் எப்படியிருக்கும்?

காளியுடன் பேய்கள்

நீண்டு விரிந்த செந்நிறக் கூந்தல், வேனிற் கால முருக்கமரத்தின் முற்றிய நெற்றுப் போல் கைவிரல்கள், அகலத்திறந்த வாய், கோரைப் பற்கள், குழிந்த கண்கள், சுழன்றும் சுற்றியும் வரும் நடை என்று இலக்கியப் பேய்கள் கண்காட்டுகின்றன. பேய்கள் எங்கிருக்கும், எப்போது நடமாடத் தொடங்கும் என்பதைக்கூட இலக்கியங்கள் இடஞ்சுட்டிப் பொருள் விளக்கியுள்ளன. சிவபெருமானின் மகளே பேய்த்தொழிலாட்டிதானே!

பூதம்

சங்க இலக்கியங்கள் பேய்க்கு நெருக்கமாக விளங்க, காப்பியங்களும் பத்திமை இலக்கியங்களும் பூதத்தை இமய உச்சிக்குக் கொண்டு செல்கின்றன. பாழ் மன்றத்திலும் போர்க்களத்திலும் மட்டுமே உலவும் பேய்களுக்கு மாறாகப் பூதங்கள் நகர் நடுவில் இடம்பிடித்துத் தீமைகளைக் கண்டித்தன. தவறு செய்தாரைப் பிடித்துண்ணவும் செய்தன. காவல் பூதங்களாகவும் சதுக்கப் பூதங்களாகவும் மக்களால் மகிழ்ந்து போற்றப்பட்ட அவற்றைப் படையாகக் கொண்டவரே சிவபெருமான் என்று அப்பரும் சம்பந்தரும் கொண்டாடுகின்றனர்.

பூதத்தின் தோற்றம்

​குள்ள வடிவின, பெருத்த வயிறின, சிறுகண் உடையன, இருண்டு அகன்ற வாயின, கூட்டமாய் இயங்கும் பண்பின என்று பூதங்களை வண்ணிக்கும் பதிக ஆசிரியர்கள் சிவபெருமான் ஆடும்போது அதற்குப் பாடுவதும் உடன் ஆடுவதும் கருவியிசை சேர்ப்பதும் அவற்றின் அரும்பணி என்று போற்றுகின்றனர். சிவபெருமான் பிச்சையேற்கும் பெம்மானாய் முனிவர் தவச்சாலைகளை அணுகும்போது அவரது பிச்சைக் கலத்தைத் தலையில் சுமந்து முன் நகர்பவை இவையே. இறைவனின் இத்தகு நகர் உலாக்களில் பேய்களுக்கு இடமில்லை. அவை காட்டோடு நின்றுவிடும்.

மக்கள் வழக்கில் பேயும் பூதமும்

பாடல்களில் இடம்பெற்றாற் போலவே மக்கள் உள்ளங்களிலும் நிறைந்து சிலரது பெயராகவே இவை மாறின. பேய்மகள் இளவெயினியும் பூதங்கண்ணனாரும் சங்கக் கவிஞர்கள். பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் முதலாழ்வார் மூவருள் இருவர். பூதப்பாண்டியன் மனைவி இலக்கியப் பாடல் ஈந்தவர். பேயுரு எடுத்துத் தம்மை பேயார் என்று அழைத்துக் கொண்டவர் காரைக்காலம்மை.

சிற்பக் காட்சிகளாய்ப் பேயும் பூதமும்

குடைவரைகளின் நுழைவாயிலான முகப்புகளின் தூண்கள் தாங்கும் கூரையுறுப்புகளில் ஒன்றுதான் எழுதகம். சிற்ப நூல்கள், ‘வலபி’ என்று குறிப்பிடும் இந்த வளைமுகப் பகுதியைத்தான் தங்கள் எண்ணம் போல் கைத்திறன் காட்டும் இடமாய்த் தேர்ந்தனர் சிற்பிகள். தமிழ்நாட்டிலுள்ள 106 குடைவரைகளில் மிகச் சிலவற்றிலேயே எழுதகம் உள்ளது. பல்லவர்ப் பகுதியில் குறிப்பிடத்தக்கது சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை. கொங்குப் பகுதியில் முன்னணியில் நிற்பது கரூர்த் தான்தோன்றீசுவரம். பாண்டியர் பகுதியின் குறிக்கத்தக்க எழுதகம் உள்ள இடமாய் ஒருகல் தளியான கழுகுமலை வெட்டுவான் கோயிலைக் குறிக்கலாம். சோழர்கள் இந்த எழுதகக் கலையைத் தங்கள் கற்றளிகளில் போற்றி வளர்த்து உச்சத்திற்குக் கொண்டு சென்றனர்.

வெட்டுவான்கோயில் கலைப் பூதங்கள்

பலவாய்ப் பூதங்களும் ஒரு சிலவாய்ப் பேய்களும் என இந்த எழுதகக் காட்சிகள் அமைந்தன. மனித வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளை இவற்றின் வழிச் சிற்பிகள் வரலாறாக்கினர். தமிழ்நாட்டில் அன்று வழக்கிலிருந்த இசைக்கருவிகளை இங்குப் பூதங்கள் இசைக்கக் காணலாம். போர்முறைகள், ஆடல்வகைகள், ஒப்பனை, ஆடை- அணிகலன்கள், தலையலங்காரம், அன்றாட நடைமுறைகள், உடற்பயிற்சிகள், குறும்புகள், விளையாட்டுகள், பறவை-விலங்கு வளர்ப்பியல் என இங்குக் காட்டப்பட்டிருக்கும் தமிழர் வாழ்வியல் இன்றளவும் முறையான ஆய்வுகளைச் சந்திக்கவில்லை.

புள்ளமங்கைப் பூதங்கள்

எழுதகத் தொடராக மட்டுமல்லாது, தனிச் சிற்பங்களாகவும் அளவில் பெரியனவாகவும் அமையும் பெருமை பூதங்களுக்கே கிடைத்தது. பரங்குன்றத்து இராவண அருள்மூர்த்தித் தொகுதிப் பூதங்கள் பேரளவின. கயிலையை அசைக்கும் இராவணனை எதிர்க்கும் போர்க்கோலத்தின. உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் தாங்குதளப் பூதம் நரம்பிசைக்கருவியின் நயம் காட்ட, புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் முகமண்டபக் கூரைப் பூதங்களோ வீணையும் தாளமும் சிரட்டைக்கின்னரியும் உடுக்கையும் இயக்கும் அழகின. எழுவர்அன்னையருள் ஒருவரான சாமுண்டியின் சிற்பங்களிலும் காளி அரக்கர்களை அழிக்கும் படப்பிடிப்புகளிலும் பேய்கள் உடனிருப்பாய் உள்ளன. திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், திருத்தணி வீரட்டானேசுவரம் என இவை காட்சிதரும் இடங்களும் கண்களை நிறைப்பவையே.

கல்வெட்டுகளில்

பூதர், பூதபலி எனும் தொடர்களால் பூதமும், ‘விழிகட்பேய்’ என்ற தொடர்வழிப் பேயும் கல்வெட்டுகளில் கண்காட்டினாலும் இலக்கிய ஆளுகை போல் பெருவழக்குப் பெறாமை குறிப்பிடத் தக்கது.  

பிசாசு

பேய், பூதம் சரி. பிசாசு?அகராதிகள் சில பேயே பிசாசு என்கின்றன. பழைய இலக்கியங்களில் கலித்தொகை மட்டுமே பிசாசைச் சுட்டுகிறது. திருக்கோளக்குடிக் கல்வெட்டொன்றும் பிசாசைக் காட்டுகிறது. அந்த ஊர் ஊருணிக்குச் சோழர் காலத்தில் மூவேந்தன் என்னும் பிசாசின் பெயரை மக்கள் சூட்டியிருந்தனராம். நிருவாகத்தால் சுரங்கமாய்க் கருதப்பட்ட்கோயில் நிலவறையில் துணிந்து இறங்கி இந்தக் கல்வெட்டைக் கண்டறிந்தவர் பேராசிரியர் மு. நளினி. நல்லவேளை அவர் இறங்கியபோது அந்த நிலவறையில் கல்வெட்டு மட்டுமே இருந்தது. மூவேந்தன் இல்லை.

என்.ஜே. சன்ரைஸ் ரேடியோ (NJ Sunrise Radio)- நேர்காணல்

11/09/23 அன்று என்.ஜே. சன்ரைஸ் ரேடியோ (NJ Sunrise Radio)- தமிழ் அலைவரிசையில், டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்காணல் ஒளிபரப்பானது. பேராசிரியர் இ.ஜே. சுந்தர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் வரலாறு சார்ந்த வினாக்களுக்கு விடையளித்த டாக்டர் இரா. கலைக்கோவன், எளிய முறையில் பற்பல அரிய தகவல்களை வழங்கினார். அதிலும் குறிப்பாக, தமிழகக் கோயில்கள் பற்றிப் பரவிக் கிடக்கும் தவறான செய்திகளைத் திருத்தி நேர்ப்படுத்தும் தரவுகளை அளித்து, உண்மையான வரலாறைப் புரிந்துகொள்ளச் செய்த உரையாடலாகவும் அது அமைந்தது.

என்.ஜே. சன்ரைஸ் ரேடியோவின் இணையப் பதிவை இங்கு காணலாம்.

‘கறைக்கண்டன் சேவடி சேர்ந்த காரைக்கால் அம்மையார்’- நூல் வெளியீட்டு விழாவில் டாக்டர் இரா. கலைக்கோவனின் காணொலிப் பொழிவு

10/09/23 அன்று சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில், திரு. இராமநாதன் பழனியப்பன் அவர்களின் ‘கறைக்கண்டன் சேவடி சேர்ந்த காரைக்கால் அம்மையார்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் சிறப்புரையாற்றிய டாக்டர் இரா. கலைக்கோவன், காரைக்கால் அம்மை குறித்த காணொலிப் பொழிவொன்றை வழங்கினார்.

அன்றைய நிகழ்வின் இணையப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது. நேரம் 1:15:20 தொடங்கி 1:43:40 வரை டாக்டர் இரா. கலைக்கோவனின் பொழிவைக் காணலாம்.

நூல் வெளியீட்டு இணையப் பதிவு-

பனைமலை ஓவியம் பகிரும் உண்மைகள்

​அன்புள்ள வாருணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மடல். உன் பணிகள் வழக்கம்போல் இருக்குமென நம்புகிறேன். இல்லத்தில் அனைவரும் நலந்தானே. 6.8.2023 ஞாயிறன்று இந்து தமிழ் திசை இதழில், ‘ஒளிரும் பல்லவ ஓவியம்’ என்ற தலைப்பில் திரு சு. தியடோர் பாஸ்கரன் எழுதியிருந்த பனைமலை ஓவியம் குறித்த கட்டுரை படித்தேன். 90களில் நீயும் நானும் மேற்கொண்ட பனைமலைப் பயணம்தான் நினைவில் நிழலாடியது. இராஜசிம்மப் பல்லவரின் அந்த மணற்கல் தளியின் அழகில் மயங்கிப்போய் வெளிமண்டபத் தூணில் சாய்ந்து அமர்ந்தவாறே அவரது கற்றளிகளைப் பற்றி நாம் பேசியதெல்லாம் எனக்குள் மறுபதிவாய் மலர்ந்தன. அந்த நினைவு உலாவைத் தடுப்பது போல, ஒளிரும் பல்லவ ஓவியக் கட்டுரையில் கண்சிமிட்டிய சிலவற்றை உன்னிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

​காலந்தோறும் இருந்த தமிழர் ஓவியக்கலை பேசுமிடத்துக் கட்டுரையாசிரியர், ஓவியச் செந்நூலைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவதாக எழுதியிருந்தார். சிலப்பதிகாரம் நாட்டிய நன்னூலைக் குறிப்பிடுவது நாம் அறிவோம். ஓவியச் செந்நூல்? பனைமலையில் அதைப் பற்றியும் நாம் பேசியது நீ மறந்திருக்கமாட்டாய். சாத்தனாரின் இணையற்ற காப்பியமான மணிமேகலையில், ஊர் அலர் உரைத்த காதையின் 30-31ஆம் அடிகளே ஓவியச் செந்நூலைக் குறிக்கின்றன.

‘நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
வோவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்’ என அவ்வடிகள் செந்நூலை மட்டுமா சுட்டுகின்றன, அதற்கான உரைநூலையும் அல்லவா குறிக்கின்றன. இது போல் ஒவ்வொரு துறைசார்ந்தும் இருந்த புரவிநூல், மடைநூல், தேர்நூல், சிற்பநூல் முதலியவற்றிற்கும் உரைநூல்கள் இருந்திருக்கலாமோ என்று கருதுமாறு, ஓவியச்செந்நூலின் உரைநூல் கிடக்கை கருத்துக்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது வாருணி.

அவிநயத்தின் நான்கு களங்களான நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்கல் ஆகியவற்றையும் அவற்றின் மாறுபட்ட நிலைகளையும் அறிந்து தெளிவதற்கான வழிகாட்டு நூலாக இந்த ஓவியச்செந்நூலை அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுவது நோக்க, அவர் காலம்வரை இந்நூலின் பயன்பாடு அறியப்பட்டிருந்ததும் தெளிவாகிறதல்லவா!

​முதலாம் மகேந்திரவர்மரின் மாமண்டூர்க் கல்வெட்டுச் சுட்டும் விருத்தி, தட்சிண, சித்ர எனும் சொற்கள் கொண்டு, தட்சிணசித்திரமெனும் ஓவிய உரைநூல் ஒன்றை மகேந்திரவர்மர் எழுதியுள்ளதாகவும் வர்ணசதுர்த்த என்ற கல்வெட்டுச் சொல்லாட்சி மகேந்திரரின் ஓவிய ஆற்றலை வெளிப்படுத்துமாறு உள்ளதாகவும் டி.வி. மகாலிங்கம், மயிலை சீனி. வேங்கடசாமி, தி.நா. இராமச்சந்திரன் ஆகிய வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ளமை நினைக்கத்தத்தது. சித்திரகாரப்புலி என்று மகேந்திரர் தம்மைப் பெருமையுடன் அழைத்துக்கொள்வது எத்தனை பொருத்தம் என்று இந்தக் கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளைப் பரிமாறிப் பனைமலையில் நாம் பேசிக்கொண்டதை நீ மறந்திருக்கமாட்டாய். இலக்கியமில்லாத வரலாற்றுப் பார்வையும் வரலாறு தெரியாத இலக்கிய நுகர்வும் முழுமையற்ற கருத்து முடிவையே தரும் என்பது குறித்தும் நாம் விவாதித்ததை நினைவூட்டுகிறேன் வாருணி.

​திரு. தியடோர் தம் கட்டுரையில் சித்திரகாரப் புலியாகச் சிம்மவிஷ்ணுவைக் குறிப்பிட்டிருக்கிறார். முதலாம் மகேந்திரர்தான் சித்திரகாரப் புலியாக அறியப்பட்டார் என்ற கல்வெட்டு உண்மையைப் பள்ளிப் பாடநூல்களே பகிர்ந்துகொள்ளும்போது தியடோர் அந்தப் பெருமையைச் சிம்மவிஷ்ணுவுக்கு மாற்றியிருப்பது துன்பமானது.

​பனைமலைக் கற்றளியின் வடக்குச் சாலைத் திருமுன் மேற்குச்சுவரில் துணுக்குகளாய் எஞ்சியிருக்கும் சிவபெருமானின் ஆடலும் வடக்குச் சுவரில் தப்பிப் பிழைத்திருக்கும் உமையின் தோற்றமும் நம் கண்களை நிறைத்தாற் போலவே திரு. தியடோரின் கண்களையும் கவர்ந்தன போலும். இரண்டைப் பற்றியும் அவரது ‘ஒளிரும் பல்லவ ஓவியம்’ மெல்லப் பேசுகிறது.

​வண்ண வரைவாய் விளங்கி இன்று சிறுசிறு பகுதிகளாய்த் தேடிக் காணும் நிலையிலுள்ள ‘நடராஜர்’ ஓவியத்தை அவரது கட்டுரையின் இரண்டாம் பத்தி, ‘சிவபெருமான் ஆடலை சந்தியாபாணி என்பர் வல்லுநர்’ என்று அடையாளப்படுத்துகிறது. ‘வலது காலைத் தரையில் வைத்து இடது காலை மண்டியிட்டு இடது கையைத் தலைக்கு மேல் வைத்து வலது கையை மார்புக்குக் குறுக்கே வீசி ஆடும் சிவன்’ என்று சிவபெருமானின் இந்த ஆடற்கோலத்தை வண்ணிப்பதுடன் ‘இந்த நடராஜரைச் சிற்ப வடிவில் மாமல்லபுரத்திலும் கயிலாசநாதர் கோயிலிலும் காணலாம்’ என்றும் கூறியிருக்கும் தியடோர், ஆடலை அடையாளப்படுத்துவதில் வல்லுநர்களைச் சார்ந்ததால் தவறியிருக்கிறார். வல்லுநர்கள் யார் என்பதை அவர் குறித்திருந்தால், அவ்வல்லுநர்கள் ஏன் அத்தகு முடிவை மேற்கொண்டனர் என்பதை அவர்களிடமே கேட்டு அறிந்திருக்கலாம். தியடோர் எழுதியுள்ளாற் போன்ற காலமைப்புகளை இன்று பனைமலை ஓவியத்தில் காணக்கூடவில்லை என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எஞ்சியிருக்கும் சிதறல்களைக் கூட்டி சிவபெருமானின் அந்த ஆடல் தோற்றத்தை பரதரின் நாட்டியசாத்திரம் பேசும் 108 கரணங்களுள் ஒன்றான குஞ்சிதமாக நாம் அடையாளப்படுத்தியதை நினைத்துப்பார்.

குஞ்சிதகரணம்

​இராஜசிம்மப் பல்லவரின் கைவண்ணமாக அவர் கட்டமைத்த பல கோயில்களில் இக்குஞ்சிதகரணம் பல அளவுகளில், கோயிலின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ளமை நான் விளக்க, நீ வியந்து கேட்டதை மறந்திருக்கமாட்டாய். இராஜசிம்மரின் கோயில்களில் குஞ்சிதம் போலவே சிவபெருமானின் ஊர்த்வதாண்டவமும் இருக்கையில், காலமைப்புத் தெளிவாகத் தெரியாத இறைவனின் இந்த ஆடல் தோற்றத்தை எப்படிக் குஞ்சிதமாகப் பிரித்தறிகிறீர்கள் என்று நீ கேட்டாய்.

​நாம் பார்த்த ஓவியக்காட்சியில் சிவபெருமானின் வலமுன் கை வேழக்கையாக நீண்டிருக்கும் அழகையும் அவரது மார்பின் வலப்பகுதி அமைப்பையும் உனக்கு விளக்கி, இராஜசிம்மர் பதிவு செய்திருக்கும் சிவபெருமானின் ஊர்த்வ, குஞ்சித கரணத் தோற்றங்களில் குஞ்சிதர் மட்டுமே முன்கையை வேழக்கையாக வீசியிருப்பதையும் ஊர்த்வர் அக்கையை அனைத்துச் சிற்பங்களிலும் பதாகத்தில் கொண்டிருப்பதையும் சுட்டி நான் பேசியபோது நீ பூரித்ததும், ஆய்வு எத்தனை நுட்பமாக அமையவேண்டும் என்பதை அன்று புரிந்துகொண்டதாகக் கூறியதும் என் உள்ளம் நிறைத்தது வாருணி.

​இறைவனின் ஆடலைக் காண்பவராய் ஒசிந்து நிற்கும் உமையின் தோற்றத்தில் திரு. தியடோர் தம்மை இழந்தார் போலும். அதனாலோ என்னவோ, ‘பார்வதியின் தலையை மஞ்சள் நிற கிரீடமகுடம் அணிசெய்கிறது’ என்று எழுதியுள்ளார். கிரீடமகுடம் தலையை முழுமையாக மூடுவதால் அதில் முடிக்கற்றைகள் தெரியாது. பல்லவர் கால விஷ்ணு, வைணவி சிற்பங்கள் கிரீடமகுடம் பெற்றுள்ளன. ஆனால், பல்லவர் கால உமைச் சிற்பங்களில் சடைத்திரள்கள் ஆங்காங்கே முடியப்பெற்றுக் கூம்பி உயர்வதையே பார்க்கமுடிகிறது. சிவபெருமான், நான்முகன் சிற்பங்களில் அமையும் சடைமகுடத்தினின்று உமையின் இத்தலையலங்காரம் சற்றே மாறுபட்டுள்ளது.

​சிற்பச் செந்நூலில் வை. கணபதி சிற்பி, சிற்பங்களுக்கு அமையும் தலையலங்காரங்களைக் குறிக்கையில், ‘கேசபந்தம்’ என்ற முடியமைப்பைப் படங்களுடன் விளக்கியிருப்பார். இராஜசிம்மப் பல்லவர் கோயில்களில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான உமைச் சிற்பங்களின் தலையலங்காரம் இக்கேசபந்த அமைப்பையே ஒத்துள்ளமையால் பனைமலை உமையின் முடியமைப்பைச் சடைமகுடமாகக் கொள்வதினும் கேசபந்தமாகக் கொள்வதுவே பொருந்தும். எப்படியிருப்பினும், நீ அதைக் கேசபந்தமாகவோ, சடைமகுடமாகவோ கொள்ளமுடியுமே தவிர கிரீடமகுடமாக அடையாளப்படுத்த முடியாது.

​திரு. தியடோர் தம் கட்டுரையின் இறுதியில், ‘மாமல்லபுரம் தருமராஜரதம், எல்லோரா கைலாசர் குடைவரை, காஞ்சி கயிலாசநாதர் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் ஆகிய எல்லாவற்றிலும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள். விமானங்கள் ஒரே மாதிரி உள்ளன’ என்று எழுதியுள்ளார். உபானத்திலிருந்து தூபி வரையிலான இறையகத்தின் முழுமையைச் சுட்டும் கலைச்சொல் விமானம். (‘The Shrine from upana to stupi – base to final is vimana’ K. R. Srinivasan, Cave Temples of the Pallavas, p. 189.) தியடோர் சுட்டியுள்ள நான்கு கோயில்களும் ஒன்று போல் அமைந்த விமான அமைப்புக் கொண்டவை அன்று. ஒன்றுக்கொன்று மாறுபட்ட விமான அமைப்புக் கொண்ட அவற்றுள், காஞ்சி கயிலாசநாதர் தவிர்த்த பிற மூன்றும் ஒருகல் தளிகள்.

​காஞ்சிபுரம் கயிலாசநாதர், கருவறைச் சுவர்களுக்கிடையில் உள்சுற்றுப் பெற்ற நாற்றளக் கலப்புத் திராவிட விமானம். தமிழ்நாட்டின் முதல் சாந்தார விமானமான அதன் கீழ்த்தளப் பத்திகள் தாய்ச்சுவரினின்று முன்னிழுக்கப்பட்டு ஏழு துணை விமானங்களாகி இறையகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் புதுமைக் கட்டுமானமாக உருவாகி அங்காலயம் எனப் பெயர்பெற்றது.

​பிற மூன்றும் ஒருகல் தளிகள் என்றாலும், ஒவ்வொன்றின் விமானமும் மாறுபட்ட அமைப்பின. மாமல்லபுரம் தருமராஜ ரத விமானம் அதன் மூன்று தளங்களிலும் இறையகம் கொண்ட மாடிக்கோயில். எல்லோரா கயிலாசநாதர் திரு. தியடோர் தம் கட்டுரையில் குறித்துள்ளாற் போல் குடைவரையன்று. அதன் விமானம் கலப்பு முத்தளத் திராவிடமாகச் செதுக்கப்பட்ட ஒருகல் தளி. கழுகுமலை வெட்டுவான் கோயில் நிறைவுறாத ஒருகல் தளி. சிகரம், கிரீவம், இரண்டாம் தளம், கீழ்த்தளாரம் மட்டுமே உருவான இவ்விமானம் இப்போதிருக்கும் நிலையில் இருதளக் கலப்புத் திராவிடமாக அறியப்படும்.

​ஒன்று போல் அமைந்த விமானங்களாகத் தியடோர் சுட்டியுள்ள நான்கில் ஒன்று மாடிக்கோயில். ஒன்று நிறைவுறாத விமானம். காஞ்சி கயிலாசநாதர் ஏழு துணை விமானங்கள் முதன்மை விமானத்துடன் இணையப்பெற்ற பெருங்கற்றளி. எல்லோரா கயிலாசநாதர் இவற்றினின்றும் மாறுபட்ட முத்தள ஒருகல் தளி. இந்நான்கிலும் உள்ள ஒரே ஒற்றுமை இவற்றின் திராவிட சிகர அமைப்புதான். எண்முகம் பெற்ற இச்சிகரமும் நான்கு விமானங்களிலும் மாறுபட்ட அழகூட்டல்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

​கோயிற்கலை சார்ந்த செய்திகளை மக்களுடன் பகிர்ந்துகொள்வது சிறப்பாகும். அதனால், கோயில்களுக்குச் செல்வோர் அவ்வளாகத்தில் எதைப் பார்க்கலாம், அதை எப்படிப் பார்க்கலாம், அதிலிருந்து பெறக்கூடியதென்ன எனப் பல வழிகாட்டல்களைப் பெறமுடியும். அவரவர் பார்வை பொறுத்து பார்ப்பனவற்றிலிருந்து வரலாறும் பெறக்கூடும். அதனால், கோயிற்கலைக் கட்டுரைகளை எழுதும் பெருமக்கள் தாம் எழுதும் செய்திகளில் உரிய தெளிவு பெற்று எழுதுதல் நன்றாகும்.

​தியடோரின் கட்டுரையால் மீண்டும் பனைமலைப் பயணம் அமைந்தது. நாம் அங்கிருந்தபோது அளவுகோல் ஒன்றைக் கண்டறிந்தமை உனக்கு நினைவிருக்குமென நம்புகிறேன். ஓரிரு மாதங்களுக்கு முன் நானும் பேராசிரியர் நளினியும் அல்லூர் நக்கன் கோயிலில் மீளாய்வு மேற்கொண்டோம். கோயில் பெருமண்டப மேற்குச்சுவரில் அடர்த்தியான சுண்ணப்பூச்சின் பின் மறைந்திருந்த அருமையான தமிழ்க் கல்வெட்டை ஆய்வின்போது நளினி கண்டறிந்தார். எத்தனை முறை பார்த்த கோயில் அது. நீயும் நானும்கூட ஓரிருமுறை அக்கோயிலில் ஆய்வு செய்துள்ளோம். என்றாலும், நளினியின் கண்களில் காட்சியாகவேண்டும் என்பதற்காகவே அது காத்திருந்தது போலும். ‘ஒற்றிமதுராந்தகன் என்பது இம்மண்டபம். எடுப்பிச்சான் முனைச்சுடர் விரையாச்சிலை’ என்ற அக்கல்வெட்டால், கொடும்பாளூர் வேளிர் அரசரான ஒற்றிமதுராந்தகன் பெயரால் அப்பெருமண்டபம் வணிகர் முனைச்சுடர் விரையாச்சிலையால் எடுப்பிக்கப்பட்ட வரலாறு வெளிச்சமானது.

​அப்பெருமண்டபத்தின் மேற்குச்சுவரில் பதிவாகி, பின்னாளில் நேர்ந்த இடைநாழிகை இணைப்பால் இரு பிரிவுகளாகி, வெளிப்பிரிவு மட்டுமே இந்தியக் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்ட நிலையில், அதன் உள்பிரிவையும் அன்றைய ஆய்வின்போது நளினியின் கண்கள் தேடிப்பிடித்தன. கல்வெட்டுத் தொகுதியில் எட்டு வரிகளுடன் மிகவும் சிதைந்துள்ளது என்ற அடிக்குறிப்புடன் பதிவாகியுள்ள கண்டராதித்த சோழரின் அந்தக் கல்வெட்டை முழுமையாகப் படித்தறிந்தபோது, நக்கன் கோயிலில் முனைச்சுடர் விரையாச்சிலை உமையன்னையின் உலாத்திருமேனியை அமைத்து அதன் வழிபாட்டிற்கும் படையலுக்கும் நிலமளிக்க, அரசர் ஒற்றிமதுராந்தகர் ஆணைவழி ஊரார் அந்நிலத்தை அளந்து கொடையைப் பதிவுசெய்த வரலாறு கிடைத்தது.

​வாருணி ஒரு பார்வையில் கோயில்கள் முழு வரலாற்றையும் தருவதில்லை. தேடத்தேடத்தான் அந்தத் தேடலின் தகைமை தெரிந்துதான் கதவுகள் திறக்கின்றன. காட்சிகள் தெரிகின்றன. அல்லூர் ஓர் எடுத்துக்காட்டு. பார்க்கச் சென்றபோது பார்த்த பார்வைகள் வேறு, நூலாக்கம் கருதி எதுவும் விடுபடலாகாது என்ற நோக்கில் தேடல் விரிந்தபோது திரைகள் ஒவ்வொன்றாய் விலகி வரலாற்றின் ஒளி வாழ்க்கையை நிறைத்தது. ஆய்வு வெறும் செயற்பாடன்று வாருணி. அது உள்ளத்தை நிறைக்கும் உழைப்பு.

​அன்புடன்,

​இரா. கலைக்கோவன்.

நான் முதல்வன்

இரா. கலைக்கோவன்

இராஜராஜீசுவர விமானம்

நான் முதல்வன் என்று சொல்ல நினைக்கும்போதே பெருமிதம் பொங்குகிறது. எழுச்சியை உறுதிப்படுத்தும் நம்பிக்கைத் தொடர் அது. மாணவர் உயர்வுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சொல்லிணைவு கோயில்களுக்குப் பொருந்துமா? தமிழ்நாட்டுக் கோயில்களில் எவை எவை இப்படிப் பெருமையுடன் பூரிக்கமுடியும்? அந்தப் பெருமைகள் கலைவரலாற்று மெய்மைகளின் மேல் இவருமா? ‘உறுதியாக’ என்றுதான் உண்மைகள் அணிவகுக்கின்றன.

பல்லவர் மண்ணின் முதல் குடைவரையாக முதலாம் மகேந்திரரின் மண்டகப்பட்டு லக்ஷிதாயதனம் தன் மேனிக் கல்வெட்டைக் காட்டி நான் முதல்வன் என்று உரக்கப் பேசலாம். நாற்றிசையிலும் சுற்று மதிலொட்டிய இருதள விமானத் தொடர் என்னிடம் மட்டுமே என்று காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் நான் முதல்வனுக்கு உரிமை கோரலாம். விமானத்தின் நாற்புறத்தும் சுவரின் நடுப்பத்திகள் மட்டும் வெளியிழுக்கப்பட்டுத் தனித் திருமுன்களாய், முதன்மை விமான உடலோடு ஒட்டிய துணை விமானங்களாய் உருவாக்கப்பட்ட பெருமை எனக்குத்தான் முதலில் அமைந்தது என்று பனைமலை ஈசுவரம் நான்மு முதல்வன் வரிசைக்குப் போட்டியிடலாம்.

தமிழ்நாடு முழுவதும் இப்படிப் பல கோயில்கள் ஏதாவது ஒரு கட்டுமான உத்தியையோ, உறுப்பையோ முதலாவதாய்ப் பெற்றுச் சிறந்திருக்கும் பெருமை சுட்டி, அதில் நான் முதல்வன் என்று நம்பிக்கையோடு பேசமுடியும். ஆனால், ஒன்றல்ல, இரண்டல்ல பலவாய் முதல்களைச் சுமந்து கொண்டு அனைத்திலும் நானே முதல் எனச் சொல்லத்தக்க திருக்கோயில் தமிழ்நாட்டில் உள்ளதா எனின், நிமிர்த்திய தலையும் பூரித்த நெஞ்சுமாய், ‘ஆம்’ என்று மகிழ்ந்து சொல்ல நமக்கு வாய்த்திருக்கும் சிறப்புக்குரிய கோயில் இராஜராஜீசுவரம்!

தஞ்சாவூரில் சோழப் பெருவேந்தர் முதலாம் இராஜராஜரால், ‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்ற தெளிவான முகவுரையுடன் பொதுக்காலம் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டமைக்கப்பட்ட இராஜராஜீசுவரம், நான் முதல்வன் என்று பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டுக் கலைவரலாறு சிலிர்த்தெழும் அளவிற்கு உண்மைகள் ஊர்வலமாகும். இன்று அரசு ஆவணங்களில் பிரகதீசுவரமாய்ப் பெயர் மாற்றப்பட்டிருக்கும் இராஜராஜரின் நெஞ்சுக்கு நெருக்கமான இந்த இராஜராஜீசுவரமே இரண்டு திருவாயில்களைப் பெற்ற தமிழ்நாட்டின் முதல் திருக்கோயில். அந்த இரண்டு வாயில்களுமே கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில் என்று கட்டியவர் பெயரேற்றுப் பெருமை கொண்டதும் அதுவே முதல்முறை.

கோபுரப் புறச்சுவர்கள் புராண, திருமுறைக் காட்சிகளைச் சிற்றுருவச் சிற்பத்தொடர்களாய்க் கொண்டமைந்த முதலிடம் இராஜராஜீசுவரம். இராஜராஜன் திருவாயிலின் நாற்புறச் சுவர்களிலும் சிவபெருமான் முப்புரம் எரித்தமை, அருச்சுனரோடு சண்டையிட்டமை உள்ளிட்ட பல புராணச் சித்தரிப்புகளும் நக்கீரதேவரின், ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ காட்டியிருக்குமாறே கண்ணப்பரின் வாழ்வியலும் சேரமான் பெருமாளின் கயிலாய ஞானஉலாக் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இராஜராஜர் காலத்தே வழக்கிலிருந்த கண்ணப்பர் கதை சேக்கிழாரால் எப்படித் திருத்தி அமைக்கப்பட்டது என்பதை இத்திருவாயில் செதுக்கல்களைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். காலத்தின் தேவைக்கேற்பப் புராணங்களில் நிகழும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும் இதன் வழி விளங்கிக் கொள்ளலாம்.

இராஜராஜீசுவரத்தின் திருச்சுற்று மாளிகை மாறுபட்டது. கோயில் கலை வரலாற்றில் முதன்முறையாக எண்திசைக் காவலர்களுக்கான இருதள விமானங்களை உள்ளடக்கி எழுந்த முதல் சுற்றுமாளிகை அதுதான். இராஜராஜரின் படைத்தலைவர் பொறுப்பேற்றுக் கட்டிய அம்மாளிகையின் எண்திசைக் காவலர்களுள் சிலர் இன்றும் காட்சியாகின்றனர். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் இராஜராஜருக்கு முன்னெழுந்த எந்தக் கோயிலும் இத்தகு பேரளவு திசைக்காவலர்களைப் பெறவில்லை. சோழர் காலச் சிற்பச் செழுமைகளான இக்காவலர்கள் கலைவரலாற்றில் உரிய இடம்பெறாமல் போனமை துன்பமான உண்மை.

இராஜராஜீசுவர விமானம் தமிழ்நாட்டின் தனிப்பெரும் முதல் கட்டுமானம். அதன் உயரமும் கம்பீரமும் தள எண்ணிக்கையும் இன்றளவும் முதல் நிலையிலேயே உள்ளன. இராஜராஜருக்குப் பின்னும் யாரும் அதை மீறமுடியவில்லை. விமானத்தில் அமையும் கருவறையைச் சுற்றி இருசுவரெடுத்து அவற்றிடையே உள்சுற்று அமைப்பது பல்லவப் பழைமையதுதான் எனினும், அதை இருதள நிலைக்கு உயர்த்தி இரண்டு சுற்றுகளாக மாற்றிப் பெற்ற முதல் கோயில் இராஜராஜீசுவரம்தான். இராஜராஜருக்கு முன்னும் பின்னும் இத்தகு சுற்று அமைந்தபோதும் இராஜராஜீசுவரமே அச்சுற்றுகளை வரலாற்றுக் களங்களாக்கிப் பெருமை கொண்டது.

உள்சுற்று ஓவியச் சுவர்

உள்சுற்று ஓவியச் சுவர் கீழ்ச்சுற்றில் சுவரெங்கும் சோழ ஓவியங்கள். ஒரு சுவரை நிறைத்து ஆலமர்அண்ணலின் காட்டுக் காட்சி. அடுத்த சுவரிலோ சுந்தரர் வாழ்க்கை. மூன்றாம் சுவர், பெருங்கோயிலும் வழிபடுவோரும் கோயில் நடைமுறைகளும் என விரிய, நான்காம் சுவரில் முப்புரம் எரித்த கதை. மேல் சுற்று, சிவபெருமானின் 108 கரணங்களுக்கான கற்பதிவுகள் பெற்று எண்பத்தொரு சிற்பங்களுடன் பொலிகிறது.

எந்தத் தாங்கலும் இல்லாமல், சட்டக அமைப்புகள் கொள்ளாமல் கற்களை அடுக்கி இத்தனை உயரத்தில் ஒரு விமானமா? இரண்டாம் தளத்தில் நின்று பார்ப்பவரின் கண்முன் விரியும் அந்தக் காட்சி, தமிழர் கட்டுமானப் பொறியியலின் உச்சம். ‘நான் முதல்வன்’ என்று இராஜராஜரும் இராஜராஜீசுவரமும் இணைந்து புன்னகைக்கும் இடம் அது. சுற்றில் நின்று பார்த்தாலும் உள்ளிருந்து நோக்கினாலும் எல்லாருக்கும் ஒரே கேள்விதான், இந்த முதல்வனை எப்படி எழுப்பினார்கள்! இந்தக் கேள்வியைச் சுற்றித்தான் சாரப்பள்ளம் உள்ளிட்ட எத்தனை வீறுடைக் கதைகள் வளர்ந்துள்ளன! அதிலும் இந்தக் கோயில் முதல்வனே!

சண்டேசுவரர் திருமுன்

தமிழ்நாட்டுக் கோயில்களில் மிகப் பெரிதாய் இலிங்கம் பெற்ற முதல் கருவறை இராஜராஜீசுவரம்தான். இருதள உயரத்திற்குக் கருவறை பெற்ற முதல் கோயிலும் அதுதான். சண்டேசுவரருக்குத் தனிக் கோயில் காலப் பழைமையது எனினும், அதைப் பெருங்கோயிலாய் இருதள விமானமாய் முதலில் பெற்றுப் பெருமிதமுற்றது இராஜராஜீசுவரம்தான். அதற்கிணையான மற்றொரு திருமுன் ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாம் இராஜராஜரால் தாராசுரத்தில் உருவாக்கப்பட்டது.

கல்லெழுத்துக்களைக் கலைநயத்தோடு பொறிப்பது பல்லவர் காலத்திலிருந்து தொடர்ந்தாலும் இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் அலங்காரம் தவிர்த்த அழகியல் பொளிவுகள். இந்தக் கல்வெட்டுகள்தான் வரலாற்றிலும் இந்தக் கோயில் பல முதல்களுடன் திகழ்ந்தமை பேசுகின்றன. தமிழ்நாட்டிலேயே 400 தளிப்பெண்கள் தனி வீடு பெற்று ஊதியமாய் 100 கலம் நெல்லும் பெற்றுக் கலைவளர்த்த முதல் கோயில் இதுதான். 48 பதிகப் பாடகர்கள் இறைத்திருமுன் தேவாரம் பாடிய ஒரே கோயில் இராஜராஜீசுவரம்தான். ‘நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்’ என்று மன்னன் முதல் மக்கள் ஈறாக அனைவரும் ஒரே நிலையில் ஒளிரும் சமத்துவப் பொறிப்பும் தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டுமே களம் கண்டது.

தமிழ்நாட்டின் பல கோயில்கள் பல்லவர், சோழர் காலத்தும் தொடர்ந்த பிற மரபு அரசர் காலத்தும் வளமான இறைத் திருமேனிகளை உலாத்திருமேனிகளாகப் பெற்றுச் சிறந்தன. ஆனால், அவற்றுள் எந்தக் கோயிலும் இராஜராஜீசுவரம் போல் வழங்கப்பட்ட அனைத்துத் திருமேனிகளுக்கும் விரிவான வடிவ அமைப்பு விளக்கங்களைக் கல்வெட்டுப் பொறிப்புகளாய்க் கொள்ளவில்லை. அது மட்டுமன்று, இங்கு வழங்கப்பட்ட சில அரிய செப்புத்திருமேனிகள் வேறெங்கும் அமையவுமில்லை.

‘நான் முதல்வன்’ என்பது வெறும் பெருமைச் சொல்லாடல் அன்று. அப்படி வெறுமையாகச் சொல்லாடவும் முடியாது.

முதல்கள் இல்லாமல் முதல்வனாவது எப்படி? இராஜராஜீசுவரம் முடிவில்லாத முதல்களின் முதல்வன். கட்டி அமைக்கப்பட்ட காலத்தும் இன்று கண்டுகளிப்போரின் கருத்து நிறைக்கும் காலத்தும் இராஜராஜீசுவரத்துக்கு இணை இராஜராஜீசுவரம்தான். அது என்றென்றும் கோயில்களின் முதல்வன்.

கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் அறக்கட்டளைப் பரிசு வழங்கும் விழா

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் சார்பில் மதிப்பிற்குரிய கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் அறக்கட்டளைப் பரிசு வழங்கும் விழா முசிரி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நேற்று (26.07.2023) நடை பெற்றது .

இதில் வரலாற்றுப் பாடப் பிரிவில் முதலிடம் பெற்றவர்கள்-

மாணவி திருமதி.வி. கிரிஜா தேவி (2019-2021 ஆம் ஆண்டு)

மாணவி செல்வி ம. புவனேஸ்வரி (2020-2022 ஆம் ஆண்டு)

இருவருக்கும் நூல்கள், சான்றிதழ், கொடைத்தொகை அளித்துச் சிறப்பிக்கப்பட்டது.

ஜூலை 27, 2023 தேதியிட்ட தினமணி மின்னிதழில் வெளிவந்த இவ்விழா பற்றிய செய்திக் குறிப்பை இங்கே காணலாம்.

அத்யந்தகாமம்

மாமல்லைக் கோயில் தொகுதியில் வியக்கவைக்கும் சாதனைகள் புரிந்தவர் இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மன் என்பதையும், தர்மராஜ ரதம் அவரால் உருவாக்கப்பட்டது என்பதையும் கட்டடக்கலை, கல்வெட்டு மற்றும் சிற்பச் சான்றுகளால் உறுதிசெய்து 2004இல் டாக்டர் இரா. கலைக்கோவன் வெளியிட்ட நூல் ‘அத்யந்தகாமம்’. தர்மராஜ ரதத்தில் கிடைத்த 39 வடமொழிக் கல்வெட்டுக்களில் இரண்டு, ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்’ என்று அக்கோயிலை அடையாளப்படுத்துகின்றன. ஆக, தர்மராஜ ரதத்திற்கு அதை உருவாக்கிய பல்லவ அரசர் வைத்த பெயர் ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம்’.

தமிழ்நாட்டுக் கலை வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையெனக் கருதப்படும் தர்மராஜ ரதம் என்றழைக்கப்படும் ‘அத்யந்தகாம பல்லவேசுவர கிருகத்தைப்’ பற்றி, 30.07.2005 அன்று திருவெறும்பியூரில் நடைபெற்ற ‘ஆவணம்’ இதழ் 16இன் வெளியீட்டு விழாவில் ‘அத்யந்தகாமம்’ என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் சொற்பொழிவு நிகழ்த்தியிருந்தார். அப்பொழிவின் அச்சுரு ‘ஆவணம் 17, 2006’ இதழில் வெளிவந்தது.

அக்கட்டுரை, அனைவரும் படித்துப் பயனுறும் வண்ணம், பதிவிறக்கம் செய்துகொள்ளும் கையடக்க ஆவணமாக இங்கே வழங்கப்பட்டுள்ளது.

மையத்தின் புதிய நூல்கள்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் 2023இல் மூன்று புதிய நூல்களை வெளியிட்டுள்ளது. அல்லூர், வடகுடி, திருமங்கலம் சோழர் தளிகள் பற்றி ஒரு நூலும், திருநெடுங்களம், திருவாசி, நகர், கண்ணனூர் சோழர் தளிகள் பற்றி ஒரு நூலும், வரலாறு ஆய்விதழின் ஒருங்கிணைந்த தொகுதியும் (31-32) தற்போது வெளியாகியுள்ளன. 1993 தொடங்கி 30 ஆண்டுகளில் 30 தொகுதிகளாக மலர்ந்திருக்கும் ஆய்விதழ் வரலாறு என்பது வரலாற்றார்வலர்கள் அறிந்ததே.

அல்லூர் வடகுடி திருமங்கலம் சோழர் தளிகள் மூன்று

அல்லூர் நக்கன், வடகுடி மகாதேவர், திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில்களின் முழுமையான படப்பிடிப்பு, கல்வெட்டுத் தரவுகள், சிற்பச் சிறப்புகள், கோயிலமைப்பு ஆகியவற்றுடன் களஆய்வுகளில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளின் பாடங்களும் கொடும்பாளூர் வேளிர் மரபுவழிப் பட்டியலும் இணைக்கப்பட்ட நூல் இது.

சிராப்பள்ளி மாவட்டச் சோழர் காலத் தளிகள் ஐந்து

திருநெடுங்களம் நெடுங்களநாதர், திருவாசி மாற்றுரைவரதீசுவரர், நகர் அப்ரதீசுவரர், கண்ணனூர்ப் போசளீசுவரர், முக்தீசுவரர் கோயில்களின் கட்டமைப்பு, சிற்பச் செழிப்பு, கல்வெட்டுச் சிறப்புப் பேசும் தரவுப் பெட்டகம். இக்கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய தரவுகளும் கோயில்களின் தனிச் சிறப்புகளும் நூலை வளப்படுத்தியுள்ளன.

வரலாறு ஆய்விதழ்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுமுடிவுகளையும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் 1993 ஆகஸ்டு 15ஆம் நாள் தோன்றிய ஆய்விதழ் ‘வரலாறு’. 2021, 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த இதழாக வரலாறு 31-32 தொகுதி அச்சில் வந்துள்ளது.

வரலாறு 31-32

நூல்கள் பெற விழைவோர் தொடர்புகொள்ள –

சி 87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி – 600 018

தொடர்பு எண்: +91 89036 11790

பண்டிதரான படைத்தலைவர்

இரா. கலைக்கோவன்


ஒற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்

தமிழ்நாட்டு வரலாறு சங்க காலத்திலிருந்தே வீறுடைப் போர்க்களங்கள் பலவற்றைப் பார்த்துள்ளது. கரிகாலரின் வெண்ணிப்போரும் கோச்செங்கணானின் கழுமலப்போரும் இலக்கியங்களாகுமளவு வெற்றி கண்டன. ஒரு போர், அது எந்த நாடுகளுக்கிடையில் நடந்தாலும் எத்தகு அரச மரபுகளுக்கிடையில் நிகழ்ந்தாலும் விளைவு வெற்றி ஒருபக்கம், தோல்வி மற்றொரு பக்கம் என்பதாகத்தான் முடியும். அந்த வெற்றியும் தோல்வியும்தான் போரிடும் அரசுகளின் தொடர்ச்சியையோ, இறுதியையோ முடிவுசெய்கின்றன. திருப்புறம்பியத்தில் நிகழ்ந்த போர் அத்தகையது. பெருகியிருந்த பல்லவர்களைச் சுருட்டி வீசியும் சுருங்கியிருந்த சோழர்களை எழுச்சியுடன் பரவவும் வைத்த களமது! 

புறம்பியத்துக்கு முற்றிலும் நேர்மாறாக அமைந்த போர்களையும் தமிழ் மண் சந்தித்துள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பொதுக்காலம் 949இல் நிகழ்ந்த தக்கோலப் போர். முதற் பராந்தகர் ஆட்சியில் சோழர்களுக்கும் கன்னரதேவர் தலைமையில் இராஷ்டிரகூடர்களுக்கும் நிகழ்ந்த அப்பெரும் போரில், போரை எதிர்பார்த்துப் பல ஆண்டுக் காலம் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் படையுடன் தங்கியிருந்த சோழ இளவரசர் இராஜாதித்தர் யானைமேலிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார். கன்னரதேவரின் துணைக்கு வந்த கங்க அரசர் பூதுகன் இராஜாதித்தரின் யானை மேல் தாவியேறி அவரை அழித்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. சோழர் படை தோற்றது. கன்னரதேவர் வெற்றிப் பெருமையுடன் தொண்டை மண்டலத்தில் நுழைந்தமைக்கு அப்பகுதியில் கிடைக்கும் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன. 

கச்சியும் தஞ்சையும் கொண்டவராகக் கன்னரதேவர் தம்மைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டாலும், அவரது கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் வடபகுதியில் மட்டுமே பதிவாகியுள்ளன. போரில் கன்னரதேவர் வென்றிருந்தபோதும், சோழ அரியணையில் பராந்தகரே தொடர்ந்தார். சோழராட்சியின் கீழிருந்த ஒருபகுதிதான் கன்னரதேவரால் கைக்கொள்ளப்பட்டதே தவிர, தக்கோலப் போர் சோழர்களை வீழ்த்தவில்லை. தஞ்சாவூரும் கன்னரர் வயமாகவில்லை. 

தமிழ்நாட்டுப் போர்க்களங்களில் தங்கள் இன்னுயிரை இழந்த அரசர்கள் பலராவர். சோழ மரபிலேயே யானை மேல் துஞ்சியவர்களாக இருவர் உள்ளனர். ஒருவர் தக்கோலத்தில் கொல்லப்பட்ட இராஜாதித்தர். மற்றொருவர் கொப்பம் போரில் உயிரிழந்த முதல் இராஜாதிராஜர். போர்க்கள மரணம் வீரர்கள் பெருமைப்படுவதுதான் என்றாலும், அந்த இழப்பு, சிலருடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுகிறது. இராஜாதித்தருக்குத் தக்கோலத்தில் நிகழ்ந்த முடிவு ஒரு படைத்தலைவரைப் பண்டிதராக்கியது என்றால் நம்புவீர்களா? இது கதையல்ல வரலாறு.

வடசென்னையின் புகழ் மிக்க கோயில்களுள் ஒற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலும் ஒன்று. பாடல் பெற்ற அத்திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள், சமஸ்கிருதத்திலும் தமிழிலுமாய்ப் பொறிக்கப்பட்டுள்ள இராஷ்டிரகூட அரசர் கன்னரதேவர் காலக் கல்வெட்டொன்று (பொதுக்காலம் 959), திருவொற்றியூர் மடத்தைச் சேர்ந்த சதுரானன பண்டிதர், தாம் பிறந்த அவிட்ட நட்சத்திரத்தின்போது கோயில் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் செலவினங்களுக்காக நரசிங்கமங்கலத்து சபையாரிடம் 100 பொன் அளித்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. கல்வெட்டின் தமிழ்ப்பகுதி இறைவழிபாடு பற்றிய விரிவான செய்திகளைச் சுட்ட, சமஸ்கிருதப் பகுதி பண்டிதரின் பழைய வரலாறு பேசுகிறது.

ஒற்றியூர் கல்வெட்டுக்கள்

பிறை சூடிய சிவபெருமானுக்கு முருகன் மகனானாற் போலக் கேரள இராஜசேகரனுக்கு இவர் மகனானார். இளமையிலேயே திறமைகளின் ஊற்றாய் விளங்கிய இவர், உலக நலத்திற்கு உழைக்க விழைந்தவராய்ச் சோழநாடு வந்து தம் வீரத்தாலும் ஆற்றலாலும் சோழ இளவரசரான இராஜாதித்தரின் உளம் உகந்த படைத்தலைவரானார். இளவரசரோடு இணைந்திருந்தபோதும் உரிய நேரத்தில் உடனிருக்க முடியாமல் போனமையால் போரில் மன்னரோடு உயிரிழக்கும் வாய்ப்பிழந்தார்.

தம் மரபுவழிக்கும் தகுதிக்கும் தாம் ஏற்றிருந்த பொறுப்பிற்கும் பொருந்தாத அச்செயலால் உளம் நொறுங்கிய அவர், உலக சுகங்களை வெறுத்தொதுக்கி கங்கையை அடைந்தார். அதில் மூழ்கிய பிறகே அவர் மனம் தெளிந்தது. நாடெங்கும் திரிந்து ஒற்றியூரிலிருந்த நிரஞ்சன குருவின் குகையில் தங்கியபோது ஞானம் பிறந்தது. அக்குகையை நிருவகிக்கும் பொறுப்பும் வந்தடைந்தது. ‘சதுரானன’ என்ற புதிய பெயருடன் மடத்தின் தலைவராக மறுபிறப்பெய்திய நிலையில்தான், ஒற்றியூர் இறைவனுக்குத் தம் பிறந்தநாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தும் கொடையை அவர் அளித்திருக்கிறார். 

தக்கோலத்தில் உயிரிழந்த இராஜாதித்தருடன் களத்தில் இருக்கமுடியாமைக்கு வருந்தி, நாடெல்லாம் சுற்றி, ஒற்றியூரில் ஞானம் பெற்றுப் பண்டிதரான இந்தக் கேரளப் படைத்தலைவரை அடையாளம் காணப் பெண்ணையாற்றங் கரையிலுள்ள கிராமம் எனும் சிற்றூரில் விளங்கும் சிவலோகநாதசாமி கோயிலுக்கு வரவேண்டும். பொதுக்காலம் 938இல் திருமுனைப்பாடிநாடு என்றழைக்கப்பட்ட இப்பகுதியில்தான் சோழ இளவரசர்களான இராஜாதித்தரும் அரிஞ்சயரும் பெரும் படையுடன் போரை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். போர் நிகழும்வரை திருமுனைப்பாடியில் தங்கியிருந்த சோழர்கள் பல அரும்பணிகளைச் செய்தனர்.

தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் பிறந்த திருநாவலூரிலுள்ள திருத்தொண்டீசுவரத்தை இராஜாதித்தர் கற்றளியாக்கினார். திருக்கோவலூர்க் கோயில் பணிக்கு அரிஞ்சயரின் படைகள் துணைநின்றன. கேரளத்துத் திருநந்திக்கரைப் புத்தூரில் பிறந்து, இராஜாதித்தரிடம் பெரும்படை நாயகராகப் பொறுப்பேற்றிருந்த வெள்ளங்குமரன், தம் தலைவர் போலவே அப்பர் பெருமான் பாடல் பெற்ற கிராமத்து சிவன் கோயிலாம் ஆற்றுத்தளியைக் கற்றளியாக்கி அறக்கட்டளை அமைத்தார். அவரது இரண்டு கல்வெட்டுகள் சிவலோகநாதசாமி கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. அவரோடு அவரது கேரளப் படை வீரர்கள் பலரும் கோயிலுக்குப் பலவாய் அறங்களைச் செய்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. 

செய்திக் குறிப்பைத் தாங்கிய ‘இந்து’ நாளிதழ்

இராஜாதித்தரின் உள்ளத்துக்கு நெருங்கியவராகவும் சோழர்களின் பெரும்படை நாயகராகவும் விளங்கிய வெள்ளங்குமரன், தக்கோலப் போர்க்களத்தில் இராஜாதித்தர் உயிரிழக்க நேர்ந்தபோது உடனிருக்க முடியாமல் போனமை எதனால் என்பதை வரலாறு நமக்குக் கூறவில்லை என்றாலும், அப்பேரிழப்புக் குமரனை எத்தகு துன்பத்திற்கு ஆளாக்கியது என்பதையும் அதனால், அவர் வாழ்வியலே மாறி ஒற்றியூர்ப் பண்டிதராய் அவர் மறுபிறப்புற்றதையும் கல்வெட்டாய் நின்று காட்டத்தான் செய்கிறது. இடைவெளிகள் இல்லாமல் வரலாறு இல்லை. ஆனால், அதனாலேயே, வரலாறு இடைவெளிகளால் ஆனதுதான் என்றும் நினைத்துவிடக் கூடாது.  

சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகள்

திருத்தோணிபுரம் என்று பத்திமை இலக்கியங்கள் குறிப்பிடும் சீர்காழியில் சமீபத்தில் தேவாரப் பாடல்கள் பொறிக்கப்பட்டச் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து டாக்டர் இரா. கலைக்கோவன் கருத்து தெரிவிக்கையில்-

“தேவாரப் பண்களைச் செப்பேடுகளில் எழுதுவது வழக்கில் இருந்ததை முதலாம் குலோத்துங்கன் மற்றும் அவன் மகன் விக்கிரமச் சோழன் ஆட்சிக் காலங்களில் படைத்தலைவனாக இருந்த நரலோக வீரன் கல்வெட்டுகளிலிருந்து அறியமுடிகிறது. சிதம்பரம் கோயிலுக்குச் செப்புத் திருமேனிகள் வழங்கியும், திருஞானசம்பந்தரின் தேவாரப் பண்கள் பாடுவதற்கென அழகியதோர் மண்டபம் அமைத்தும் கோயில் திருப்பணிகள் செய்த நரலோக வீரன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பண்களைச் செப்பேடுகளில் பதிக்கச் செய்தான்,” என்று தெரிவித்தார்.

கூடுதலாக, செப்பேடுகளின் எழுத்தமைதியைப் பார்க்கையில் அவை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கன் காலத்தவை என்று கூறலாம், என்றும் அவர் கருத்துரைத்தார்.

தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களின் செய்திக்குறிப்புகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன-

 

வரலாற்றறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தம் ‘பெரியபுராண ஆராய்ச்சி’ நூலில் நரலோக வீரன் பற்றி எழுதியுள்ள பக்கங்களைக் கீழே காணலாம்-