மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 6. உங்கள் திருவடிகள் என் மேலன . . .

அன்புள்ள வாருணி, பெரியவர்களின் திருவடிகளில் தலையிருத்தி வணங்கி அவர்தம் வாழ்த்துப் பெறுவது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். எல்லார்க்கும் பெரியவராம் இறைவனின் திருவடிகள் தம் தலைமீது விளங்க வேண்டுமென்று விழைந்தவர்களில் தலையாயவர் நாவுக்கரசர். அந்தத் திருவடிப் பேற்றுக்காகவே ஏங்கிப் பதிகம் பாடி நல்லூர் வந்தவர் தலையில், தம் திருவடிகளைப் பதித்தார் சிவபெருமான். அந்த நினைவு போற்றியே தஞ்சாவூர் மாவட்டம் திருநல்லூர் மணவழகர் கோயிலில் வணங்க வருவாருக்கெல்லாம் இறையடி தலைமீது சூடும் பேறு இன்றளவும் தொடர்கிறது. தமிழ்நாட்டு சிவன்கோயில்களில் இங்கு மட்டும்தான் இந்தத் திருவடிப்பேறு தட்டாமல் கைகூடுகிறது.

சிவசூடாமணி, சிவசரணசேகரன் என்றெல்லாம் இறைவனைத் தம்முடன் இணைத்துப் பட்டம் சூடிய அரசர்களுக்கிடையே சிவபாதசேகரனாய் இறைத்திருவடியில் தலை சாய்த்து மகிழ்ந்தவர் நித்தவிநோதரான முதலாம் இராஜராஜர். சிவசரணசேகரனும் ஏறக்குறைய அதே பொருளில் அமைந்த பெயர்தான். அதைத் தமக்கான சிறப்புப் பெயராய்க் கொண்டிருந்தவர் இராஜராஜர் மகனான இராஜேந்திரன்.

பதிகப் பெருமக்களும் அரசஏறுகளும் சிவபெருமான் திருவடிகளைத் தலையில் தாங்க விழைந்து வேண்டிக் கொண்டிருந்த காலத்தே, ‘உங்கள் திருவடிகள் என் தலை மேலன’ என்று அறங்காப்பார் நோக்கி அன்போடு உரைத்தவர்கள் இந்த மண்ணின் எளிய மக்கள். கோயிலுக்கோ, மக்களுக்கோ பயன்படுமாறு அறச்செயலொன்றைத் தம் கொடையால்அ மைத்து, அச்செயலைக் கதிரவனும் நிலவும் உள்ளவரை காப்பாற்றித் தொடர்வார் திருவடிகளைத் தம் தலைமேல் சுமப்பதாகக் கல்வெட்டுகளில் வேண்டி நிற்கும் பெருமக்கள் ஓரிருவரல்லர்.

ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் தங்கள் அறச்செயல்களைக் காலத்துக்கும் காப்பாற்றுமாறு அறம் காப்போரை எதிர்நோக்கியிருக்கும் இத்தகு கொடையாளிகளின் கல்வெட்டுகளைப் படிக்கும்போது கண்கள் ஈரமாவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஒவ்வொரு கோயிலுக்குள்ளும் எனக்குத் தெரிவது இறைப்பற்றில் இழைந்து நிற்கும் இந்த மனிதர்கள்தான். இறைவன்கூட அடுத்த நிலையில்தான்.

அறம் தொடர அதைக் காப்பாற்றுவார் திருவடிகளைத் தலைமேல் கொள்ள விழையும் இப்பெருமக்களினும் ஒரு படி கூடுதலாக இன்னுஞ் சிலர், ‘உங்கள் திருவடிகள் என் மேலன’ என்ற அன்பான, அதே சமயம் அழுத்தமான வேண்டலுடன் தனித்தும் குடும்பத்துடனும் பலகைச் சிற்பங்களாகக் கோயில் சுற்றுகளிலும் திருமுன் வாயில்களிலும் காட்சியளிப்பதை நீ கண்டிருக்கலாம் வாருணி. கட்டமைப்புக்கான கொடையாளிகளாய்த் தூண்களிலும் தனித்தும் சிற்பங்களாகியுள்ள மானுடரினும் இவர்கள் வேறானவர்கள். இறைக்கோயிலை வலம் வரும் பத்திமையாளர் அனைவர் திருவடிகளும் தங்கள் மீது பதிந்து தொடரட்டும் என்ற தணியாத ஆவலுடன் இறைவனை வணங்குமாறு சிற்பமாகியுள்ள இணையர்களைப் பல கோயில்களில் காணலாம். செங்கற்பட்டு மாவட்டச் சிங்கப்பெருமாள்கோயில் சிறந்த சான்றாகும்.

இந்த எளிய மக்களைப் போல் அரசர்களும் விழுந்து வணங்கிய கோலத்தில் சுற்று வலம் கொள்ளும் மக்களின் திருவடிப்பேற்றைப் பெருமையோடு ஏற்றுச் சிற்பங்களாகியுள்ளனர். திருக்கழுக்குன்ற மலைப்பாதையில் வாளோடு விழுந்து வணங்கும் அரசரைக் காணலாம்.

மீனாட்சியம்மன் கோயிலில் நாங்கள் பார்த்த காட்சி இவை அனைத்தினின்றும் வேறானது வாருணி. மீனாட்சி யம்மனின் திருமுன் வெளிச்சுற்றில், திருமுன் வாயிலுக்கு இடப்புறத் தரையில் ஒரு பலகைச் சிற்பம் பதிவாகியுள்ளது. அந்தச் சுற்றில் நடக்கும் அனைத்து மக்களும் அந்தப் பலகைச் சிற்பத்தின் மீது, அது இருப்பதும் அதில் இருப்பவர்கள் யார் என்பதும் அறியாமலேயே திருவடி பதித்து நடந்து மகிழ்கின்றனர்.

நால்வர் இடம்பெற்றுள்ள அதில் பெருமிதத்துடன் நிற்கும் அரசர் யார் தெரியுமா வாருணி? நாயக்கமரபின் தலைநாயகராக வரலாறு யாரைக் கொண்டாடுகிறதோ அந்தத் திருமலைநாயக்கர்தான் அவர். அவரது இருபுறத்தும் பட்டத்தரசியர். அனைவருமே வணங்கிய கைகளுடன். வலப்புறம் செண்டுதாளத்துடன் உடனிருப்பவர் குமரகுருபரர் ஆகலாம். திருமலைநாயக்கர் காலத்தில்தான் அவர் மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இரண்டையும் பாடியதாக நாயக்கர் வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். குருபரர் இலக்கியம் பாட, அதைக் கேட்டவாறும் இறையிணையை வணங்கியவாறும் மன்னர் குடும்பம் உலாவரும் இந்தக் காட்சியைத் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாது.

தங்கள் மீதுதான் மக்கள் நடப்பார்கள் என்பதை நன்கறிந்த நிலையில்தான், திருமலை விழைந்தே இதைச் செய்திருக்க வேண்டும். முக்குறுணிப் பிள்ளையாரை வணங்குமாறு போலச் செப்புத்திருமேனியாக அத்திருமுன் வாயிலில் இது போலவே பட்டத்தரசியர் இருவருடன் பளிச்சிடும் மன்னர், புதுமண்டபத்திலும் அவர்களுடன் அரசகோலத்தில் அழகுறக் காட்சியாகிறார்.

ஆனால், மீனாட்சியன்னையின் திருச்சுற்றுத் தரையிலோ எளியருக்கும் எளியராய், மீனாட்சியை வணங்க வலம் வரும் அத்தனை பேருக்கும் உரியராய், ‘உங்கள் திருவடிகள் என் மேலன’ என்று குடும்பத்தோடு காத்திருக்கிறார், அம்மைத் தமிழ் கேட்டவாறே. என்ன அற்புதம் வாருணி! இதுதான் இந்த மண்ணின் பெருமை, வாசம்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 5. பெரிய கூத்தும் பேயம்மையும்

அன்புள்ள வாருணி, ஆடற்போட்டியில் சிவபெருமான் காளியை வென்றதும் அதன் வழி ஆடல்நாயகரானதும் பத்திமைக் காலப் பதிகங்களில் சம்பந்தராலும் அப்பர் பெருமானாலும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. காளியை வெல்ல இறைவன் ஆடிய ஊர்த்வதாண்டவத்தைப் பெரிய கூத்து என்பார் சம்பந்தர். சொக்கம், நிருத்தம் என இறைவன் ஆடிய அனைத்து ஆடல்களிலும் இணைய ஆடி சமநிலையிலிருந்த காளியை, காலை உயர்த்திய ஆடலால் தோல்வியுறச் செய்தவர் சிவபெருமான். ‘சொக்கத்தே நிருத்தத்தே தொடர்ந்த மங்கை’ என்று இச்செய்தியை நிறுவுகிறது சம்பந்தரின் பதிக அடி. காளியைக் குணஞ்செய்த கூத்தாகவும் இந்த ஊர்த்வதாண்டவம் சம்பந்தரால் போற்றப்படுகிறது.

பல்லவர் கற்றளிகளில் பெருஞ்சிற்பமாகக் காட்டப்பட்டிருக்கும் சிவபெருமானின் ஊர்த்வதாண்டவக் கோலங்களின் அருகே காளியின் ஆடலும் சில தளிகளில் உள்ளமை பதிகங்களைப் பல்லவர்கள் பழுதறப் பின்பற்றியமை உணர்த்தும். பல்லவர்களும் பிற்சோழர்களும் பெரிதும் போற்றிய இப்பெரிய கூத்தை, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தூண் சிற்பங்களாக நந்திப்பந்தலிலும் ஆயிரங்கால், கம்பத்தடி மண்டபங்களிலும் இடம்பெறச் செய்தவர்கள் நாயக்கர்கள்.

கம்பத்தடி அம்மை

இம்மூன்று பதிவுகளுள் முதலிரண்டும் அளவில் சிறியன. கம்பத்தடிச் சிற்பம் பேரளவினது. அருகில் அதே அளவில் காளியின் ஆடலையும் உடன் கொண்டது. பல்லவ, பிற்சோழர் கால ஊர்த்வர்களுக்கு இல்லாத பெருமையாக, இங்கே அப்பன் ஆடல் காண, அவர் தாயும் உடனிருப்பதுதான். ஆம் வாருணி, கயிலை வந்த காரைக்காலம்மையை, ‘இவர் யார்’ என்று உமை கேட்க, ‘நம் அம்மை’ என்று சிவபெருமானே கூறியதாகச் சேக்கிழார் பதிவு செய்துள்ளார்.

நாயக்கர் கைவண்ணங்களில் பல தளிகளில் பேரளவுச் சிற்பங்களாய் ஊர்த்வதாண்டவர்களைப் பார்க்க முடிந்தாலும் அவற்றுள் சில காரைக்காலம்மையை உடன் கொண்டிருந்தாலும் மீனாட்சி ஊர்த்வரும் உடனிருக்கும் அம்மையும் தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் சிற்பப் புதையல்கள் எனலாம்.

இடப்புறம் தலைவைத்துப் படுத்திருக்கும் முயலகன் மீது இடப்பாதம் இருத்தி, வலக்காலை மார்புக்கு முன்னாக மேலுயர்த்தியுள்ளார் சிவபெருமான். அவரது சடைமகுட முகப்பில் மண்டையோட்டிற்கு மாற்றாக பைரவர் தலை. பத்துக் கைகளுடன் நிகழும் இந்த ஆடலில் மேலிருந்து கீழாக அவரது இடக்கைகள் தீயகல், மான், வில், கேடயம், வஜ்ரமணி கொள்ள, வலக்கைகளில் உடுக்கை, மழு, முத்தலைஈட்டி, குத்துவாள், அம்பு.

ஒரு பெருந்தூணின் முன்புறத்தே உருவாகியுள்ள இப்பெருஞ்சிற்பத்தின் தோற்றமும் எழுச்சியும் சொற்களில் வண்ணிக்க இயலாதவை. சிவபெருமானின் இடப்புறம் குடமுழவிசைப்பவராய் நந்திகேசுவரர். வலப்புறம் காரைக்காலம்மை. ஆனந்ததாண்டவருடன் அமர்நிலையில் காட்சிதரும் அம்மை இங்கே இறைவனின் ஊர்த்வத்திற்கேற்ப அதே எழுச்சியைத் தாமும் கொண்டவராய் எழுந்து நின்று குனித்தாடுகிறார். தாம் தரும் தாள இசைக்கேற்ற வளைந்த கோலமென்றாலும் முகம் பார்வையாளருக்காய்த் திரும்பியுள்ளது.

ஆயிரக்கால் ஊர்த்வர்

ஆயிரக்கால் மண்டபத்திலும் நந்தி மண்டபத்திலும் உள்ள ஊர்த்வதாண்டவக் கோலங்களும் தூணோடு ஒட்டிப் பிறந்தவையே. ஆனால், அளவில் சிறியவை. இரண்டனுள் ஆயிரக்கால் சிற்பம் சற்றே பெரியது. இங்கும் இறைவனின் இடத்திருவடிக் கீழ் முயலகன். என்றாலும், அவன் படுத்திருக்கும் முறை மாறுபட்டுள்ளது. இறைவன் வலக்கால் மேலுயர நெடுஞ்சடை மகுடராய் 12 கைகளுடன் ஆடுகிறார். அவரது வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கையில் தீயகல். பின் கைகளுள் மேலிருப்பன ரேசித வீச்சில். பிற கைகளில் மணி, அம்பு, வில் உள்ளிட்ட பல பொருள்கள்.

இரு கைகளையும் ரேசிதமாக்கி ஊர்த்வம் நிகழ்த்தும் தமிழ்நாட்டின் ஒரே தாண்டவர் என்ற பெருமை ஆயிரக்கால் மண்டபத்தாருக்குக் கிடைத்துள்ளது. நாட்டிய சாத்திரம் பேசும் எண்ணற்ற அழகுக் கைகளுள் ஒன்றுதான் இந்த ரேசிதக் கை. நாயக்கர் காலத்திலும் நாட்டியசாத்திரம் வழக்கிலிருந்ததை இந்த ஊர்த்வக் கைகள் நன்கு உணர்த்துகின்றன.

இத்தொகுதியில் காரைக்காலம்மை கால்களை முழங்காலளவில் மடக்கி அவற்றையே இருக்கையாக்கி அமர்ந்துள்ளார். இந்த வியத்தகு அமர்வு அவர் இடம்பெற்றுள்ள ஆனந்ததாண்டவச் சிற்பத்திலும் உள்ளது. முகம் பார்வையாளருக்காய்த் திரும்பியிருந்தாலும் அம்மையின் கைத்தாளங்கள் தாளம் தருவதில் தவறவில்லை. இத்தொகுதியின் மற்றொரு சிறப்பாய் ஊர்த்வரின் இருபுறத்தும் வணங்கிய நிலையிலுள்ள முனிவர்களைச் சுட்டலாம்.

நந்திப்பந்தல் ஊர்த்வர்

நந்திப்பந்தல் ஊர்த்வரும் ஆயிரக்கால் ஊர்த்வர் போலவே பல கையினர். இத்தொகுதியின் தனித்துவமாக இறைவனின் இடப்பாதம் தளத்தில் இருப்பதைச் சுட்டலாம். ஆம், வாருணி, இங்கு முயலகன் இல்லை. இது போல் முயலகனற்ற இறையாடல் காட்சிகள் ஆங்காங்கே காணக் கிடைப்பினும் மீனாட்சிக் கோயிலில் இது ஒன்றே அத்தகு அமைப்பிலுள்ளது. இங்கு அம்மை, கம்பத்தடி மண்டபக் கோலத்தில் குனித்தாடிக் கண்களை மலர்விக்கிறார். கைகளில் செண்டு தாளங்கள்.

புதுமண்டப ஊர்த்வர்

மதுரையின் புதுமண்டபத்திலும் பேரளவிலான ஊர்த்வதாண்டவர் அதே அளவிலான காளியுடன் கண்களுக்கு விருந்தாகிறார். இங்கு இறைவனுக்கு 10 கைகள்தான். வலக்கைகளில் ஒன்று காக்கும் குறிப்பிலிருக்க, பிற கைகளில் முத்தலைஈட்டி, குத்துவாள், மழு, உடுக்கை. இடக்கைகளில் முன் கை வேழக்கையாய் வலப்புறம் வீசப்பட்டுள்ளது. மற்றொரு இடக்கையில் நந்திக் கொடித்தண்டு. ஆடும் இறைவனின் கைகளில் மிக அரிதாகவே இடம்பெறும் இந்நந்திக் கொடித்தண்டு பரங்குன்றம் ஆடவல்லான் கையில் முற்பாண்டியர் படைப்பாய் பளிச்சிடுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம் வாருணி.

இறைவன் இடுப்பின் இருபுறத்துமுள்ள மகரங்கள் அழகான திருவாசியை இறைவனுக்குப் பின்னணியாக்க, முயலகனின் கைப்பாம்பு நெடுக ஊர்ந்து இடப்புறம் நெளிந்து இறைவனின் இடக்காலருகே குடமுழவு வாசிக்கும் வாணனின் முழவுக்குத் தளமாகித் தலைவிரித்துள்ளது. இது மீனாட்சிக் கோயில் ஆனந்ததாண்டவப் பதிவினும் மாறுபட்ட விரிவாக்கமாகும்.

இத்தொகுதியிலும் அம்மை கம்பத்தடிக் கோலத்திலேயே காட்சியாகிறார். அதே எழுச்சி, அதே குனிப்பு, அதே பெருமிதம். கைகள் சிதைக்கப்பட்ட நிலையிலும் அம்மையின் பேரன்பை உடல்மொழியால் வெளிப்படுத்தும் இச்சிற்பம் நாயக்க முத்திரைகளுள் ஒன்றெனலாம்.

வாருணி, நாயக்கர் காலப் படைப்பாற்றல் யார் காலத்திற்கும் குறைந்ததன்று. கதைகள் பெருகியதால் காட்சிகள் விரிந்து படைப்புகளில் இறுக்கம், நெருக்கம் இருந்தாலும் காதலோடு காண்பாருக்கு அவை தரவல்ல சுகங்கள் பார்த்தவரே அறிதல் கூடும். அடுத்தமுறை மதுரை சென்றால் இந்தப் பெருங்கூத்துப் படைப்புகளை சம்பந்தர், நாவுக்கரசர், காரைக்காலம்மையின் பதிகப் பின்புலங்களோடு பார்த்துவிட்டு வா. இலக்கியம் இல்லாமல் கலையா? கலை இல்லாமல் வரலாறா? வரலாறு இல்லாமல் வாழ்க்கையா?

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும் – 4. அம்மன் கோயில் அம்மை

அன்புள்ள வாருணி, சிவபெருமான் 108 தாண்டவங்களை நிகழ்த்தியதாக ஆகமங்கள் பேசினாலும், அவற்றுள் ஆனந்ததாண்டவமும் ஊர்த்வதாண்டவமுமே தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாகக் காட்டப்பட்டுள்ளன. சிற்றுருவச் சிற்பந்தொட்டுப் பேரளவிலான படப்பிடிப்புவரை இவ்விரு தாண்டவக் கோலங்களும் பல்லவரில் தொடங்கி நாயக்கர் காலம்வரை ஏறத்தாழ 12 நூற்றாண்டுகளாகப் பல்வேறு அளவுகளில் தமிழ்நாட்டுக் கோயில்களில் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

இச்சிற்பங்களுள் சில ஆடல்நாயகராக சிவபெருமானை மட்டும் கொள்ள, சிலவற்றில் அந்த ஆடலைக் காண்பவராக உமையன்னையும் ஆடலுக்கு இசை கூட்டுபவர்களாக சிவபெருமானின் பூதகணங்களும் காட்சிதரக் காணலாம். இன்னும் சில சிற்பங்களில் இறையாடலைக் காண்பவர்களாகவும் அதற்கு இசை தருபவர்களாகவும் விஷ்ணு, நான்முகன் உள்ளிட்ட விண்ணுலகினரும் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையை இணைத்தவர் சோழஅரசி செம்பியன்மாதேவி.

ஆனந்ததாண்டவத்தில் சிவபெருமானின் வலக்கால் தரையிலோ அல்லது முயலகன் என்னும் குறளரக்கன் மீதோ ஊன்ற, இடக்கால் உயர்ந்து முழங்காலளவில் மடிக்கப்பட்டு வலப்புறம் வீசப்பட்டிருக்கும். இறைவனின் முன்னிருகைகளில் வலக்கை காக்கும் குறிப்பிலிருக்க, இடக்கை இடக்கால் போலவே வலப்புறம் வீசப்பட்டு வேழமுத்திரையில் அமையும். 

ஊர்த்வதாண்டவம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதில், இறைவனின் ஒருகால் தரையிலோ, முயலகன் மீதோ ஊன்றியிருக்கும். மற்றொரு காலோ மார்புக்கு முன் அல்லது பின்னிருக்குமாறு மேல் நோக்கி உயர்த்தப்பட்டிருக்கும். இத்தாண்டவத்திலும் வல முன் கை காக்கும் குறிப்பிலேயே அமையும். ஆனால், இட முன் கை மாறுபட்ட குறிப்புகளில் அமைவது சிற்பங்கள் காட்டும் காட்சியாகும்.

தமிழ்நாட்டிலுள்ள பல்லவக் கற்றளிகளில் சிவபெருமானின் ஊர்த்வதாண்டவம் இடம்பெற, விஜயாலய சோழர்களின் கட்டுமானங்களில் ஆனந்ததாண்டவம் கோலோச்சியது. சாளுக்கியச் சோழர் கோயில்கள் மீண்டும் ஊர்த்வதாண்டவத்திற்குத் திரும்ப, நாயக்கர்கள்அ அதைக் கொண்டாடிப் பின்பற்றினர். இப்படி ஆடல்நிலை மாறினாலும் பெரும்பாலான கோயில்களில் இரண்டு தாண்டவங்களில் ஒன்று தவறாமல் இடம்பெற்றது. மிகச் சில வளாகங்களே சிவபெருமானின் இரு ஆடற்கோலங்களையும் பெற்றுச் சிறந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது மதுரை மீனாட்சியம்மன் கோயில்.

இந்த வளாகத்தில் ஆய்வுசெய்தபோது சிவபெருமானின் இரண்டு அழகிய ஆனந்ததாண்டவச் சிற்பங்களையும் மூன்று ஊர்த்வதாண்டவச் சிற்பங்களையும் கண்டு மகிழ வாய்த்தது. இந்தக் கண்டுபிடிப்பின் கூடுதல் சிறப்பு, இவை ஐந்திலும் இறையாடலின் உடனிருப்பாகக் காரைக்கால் அம்மையும் இடம்பெற்றிருப்பதுதான். செம்பியன்மாதேவியால் இறையாடல் வடிப்புகளில் இடம்பெறத் தொடங்கிய அம்மை, விஜயாலய சோழமரபின் இறுதிவரை தொடர்ந்து காட்சியானார். சாளுக்கியச் சோழர்களின் இறையாடல் சிற்பங்கள் அவரை இழந்தபோதும், நாயக்கர்கள் அம்மையை விடவில்லை. மீண்டும் பற்றி, அதை இறுகிய பற்றாகவும் மாற்றினர். அதனால்தான், மீனாட்சி அம்மன் கோயிலில் இறைவன் ஆடுமிடமெல்லாம் இசைக்கலைஞராய் அம்மையும் உடனிருக்கிறார்.

முதலில் ஆனந்ததாண்டவச் சிற்பங்களைப் பார்ப்போம் வாருணி. இரண்டு இடங்களில் இவை உள்ளன. இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட சுவரில் மகரதிருவாசிக்கு நடுவில் வலக்காலை முயலகன் முதுகின் மீதும் உயர்த்தி வீசிய இடக்காலை அம்முயலகன் கையிலிருந்து சீறி வளர்ந்தோங்கி படம் விரித்திருக்கும் பாம்பின் மீதும் இருத்தி ஆனந்த நடமிடும் இறைவனின் இடமுழங்காலை மற்றொரு பாம்பு சுற்றிப் படமெடுத்துள்ளது. அதன் தலை தொட்டவாறே இறைவனின் இட முன் கை வேழக்கையாக வீசப்பட்டுள்ளது. பின்கைகளில் துடியும் தீயகலும் அமைய, வல முன் கையோ காக்கும் குறிப்பில்.

மலர்ந்த முகத்துடன் ஆடும் இறைவனின் இடப்புறத்தே அழகே உருவாய் உமை. அவரது வலப்புறம் குடமுழவுடன் நந்தியெம்பெருமான். இறைவனின் தூக்கிய திருவடிக்கருகில் தாம் விரும்பி ஏற்ற பேயுருவில் கைகளில் செண்டுதாளங்களுடன் காரைக்காலம்மை. இலலிதாசனத்தில் இடக்கால் மடித்து, வலக்காலைக் குத்துக்காலாக்கி முகமெல்லாம் மலர, தம் பேற்றுக்குத் தாமே மகிழ்ந்து அம்மை தாளமிசைக்கும் அருமையான படிப்பிடிப்பம்மா இது. 

வாருணி, இச்சிற்பத்தை அடியொற்றியே மற்றொரு பதிவும் அமைந்துள்ளது. எனினும், மாற்றங்கள் இல்லாமல் இல்லை. இதுவும் தூண்களுக்கிடையிலான சுவரில்தான் உள்ளது. ஆனால், அந்தத் தூண்களை யாளிகள் தாங்குகின்றன. நந்திகேசுவரரின் குடமுழவை இருத்தத் தன்னையே தளமாக்கிச் சுருண்டுள்ள பாம்பு முழவின் முன்பகுதியில் படமெடுத்துள்ளது. 

வலக்காலை நீட்டி, இடக்காலை மடக்கி மிக இயல்பாக அமர்ந்துள்ள நந்தியெம்பெருமான் சாய்ந்தாடி முழவிசைக்கும் அழகே அழகு. முதல் பதிவில் தாம் பாடினாற் போலவே செடித்தலைப் பேயாகக் கட்சிதரும் அம்மை, இதில் படியவாரிய தலையராய் வடிவம் மாறியுள்ளார். முதல் பதிவு இறையாடலில் மூழ்கி மகிழ்ந்திருக்கும் முத்தாய்ப்புக் கோலம் என்றால், இந்த இரண்டாம் பதிவை ஆடலில் மயங்கிய அம்மையின் பெருங்களிப்பு நிலையாகக் குறிக்கலாம்.

குடமுழவிற்குத் தளமாகி அந்தக் கருவி எழுப்பும் தாள ஒலிக்குப் படமெடுத்தாடும் இந்தப் பாம்புப் பதிவு தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் காணமுடியாதது வாருணி. சிற்பிகளின் கற்பனையாற்றல் எப்படியெல்லாம் பெருகிப் பாயும் என்பதற்கு இந்தப் பாம்புத் தளமும் அதன் தலைவிரிப்பும் சரியான சான்றுகளம்மா. 

​​அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 3. மீனாட்சிநாயக்கர் விளக்குமாலை

அன்புள்ள வாருணி, நீ எழுதியிருப்பது சரிதான். தேவார மூவரில் நீண்ட காலம் மதுரையில் தங்கியவரும் அதைப் பாடிப் பதிகம் வளர்த்தவரும் சம்பந்தர்தான். அதனால்தான், ஆலவாய்க்கு 9 பதிகங்கள் வாய்த்துள்ளன. சம்பந்தருக்கும் மதுரைக்கும் உள்ள உறவைச் சேக்கிழார் விரிவாகப் பேசியிருக்கிறார். அது தொடர்பான பெரியபுராணக் காட்சிகள் படிக்கத் தக்கவை. பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியின் அழைப்பேற்று அரசரின் வெப்புநோய் தீர்த்ததுடன், சைவத்தின் பேரெழுச்சியைப் பதிவுசெய்தவர் சம்பந்தர். அவரது பதிகங்களே அதற்குச் சான்று. நாவுக்கரசரும் மதுரைக் கோயிலைப் பாடியுள்ளார். சுந்தரர் பதிகந்தான் கிடைக்கவில்லை. என்றாலும், சேக்கிழாரின் கூற்றை ஏற்றால் சுந்தரரும் ஆலவாய் வந்தமை புலப்படும்.

பத்திமைக் காலத்தில் பாண்டியநாட்டின் தனிப்பெருங் கோயிலாய்த் திகழ்ந்த ஆலவாய் தொடர்ந்து வந்த அரசமரபுகளால் புரக்கப்பட்டாலும், அதன் மலர்ச்சி குன்றிய காலமும் இருக்கத்தான் செய்தது. அதனால்தான், கோயில் வளாகத்தில் பழங்கல்வெட்டுகளைக் காணக்கூடவில்லை. நடுவணரசின் தொல்லியல்துறை இவ்வளாகத்திலிருந்து படியெடுத்துள்ள 64 கல்வெட்டுகளில் முதலாம் சடையவர்மர் குலசேகரபாண்டியரின் கல்வெட்டே (பொ. கா. 1194) காலத்தால் முற்பட்டது.

வாருணி, மதுரைக் கோயில் என்றாலே நம் நினைவுக்கு வருபவர்கள் நாயக்க அரசர்கள்தான். ஆனால், வரலாற்றுச் சான்றுகளைப் புரட்டினால், இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலமே இக்கோயிலை வளப்படுத்தியதென்பது புலப்படும். இங்குள்ள 44 கல்வெட்டுகள் அவர்தம் கொடையுள்ளம் காட்டுகின்றன. நடுவணரசின் கணக்குப்படி விஜயநகர நாயக்க அரசர்களின் பதிவுகளாய் இங்குள்ளவை 19தான். இந்தச் சூழலில்தான் வாருணி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை எங்கள் ஆய்வுமையம் அணுகியது.

ஒலி ஒளிக் காட்சிக்கான கருத்துருவைப் பெறக் கோயில் முழுவதும் உலாவந்தோம். அங்குலம் அங்குலமாக அவ்வளாகத்தை ஆராய்ந்த சூழலில்தான், அதுவரை வெளிச்சம் காணாத பல காட்சிகள் எங்களுக்காகவே காத்திருந்தாற் போல் பளிச்சென்று தோற்றம் தந்தன. கோயிலின் எல்லாப் பகுதிகளிலும் இப்படி இலைமறை காயாக இருந்து கண்காட்டியவற்றுள் இந்த விளக்குத்தோரணங்களும் அடக்கம்.

நாயக்க அரசமரபின் நாயகராக விளங்கிய திருமலை நாயக்கரைக் கேள்விப்படாதவர் இருக்கமுடியாது. அவருடைய அமைச்சர்களுள் ஒருவராக வாழ்ந்தவர்தான் மூன்றாம் மீனாட்சி நாயக்கர். அவரை ஆதிமீனாட்சிநாயக்கர் என்று பெருமைப்படுத்துகிறது கல்வெட்டு. ஆலவாய்க் கோயிலைத் திருமலைநாயக்கர் விரிவாக்கம் செய்தபோது தம் பணியாக ஒரு மண்டபத்தை எடுப்பித்தார் இவ்வமைச்சர். அவர் பெயராலேயே இன்றும் விளங்கும் அம்மண்டபத்தின் பின்பகுதியில் அதையடுத்துள்ள இருட்டுமண்டபமாம் முதலிப்பிள்ளை மண்டபத்தின் முன்னுள்ளது மூன்றாவது விளக்குத்தோரணம். அதில் நம் பேராசிரியர் நளினி கண்டறிந்த 82 வரிகளில் அமைந்த தமிழ் எழுத்துப் பொறிப்பு இந்த விளக்குமாலையை, ‘ஆதிமீனாட்சி நாயக்கர் உபயம்’ என்கிறது.

ரோஸ்பீட்டர் தோரணம் போலவே கீழே யானைகள் மேலே காவலர்கள் கொண்டெழும் இந்தத் தோரணம், இருபுறத்தும் 6. 89 மீ. உயர்ந்து, பிறைநிலவாய் வளைந்து, கீர்த்திமுகத் தலைப்பில் முடிகிறது. வளைவின் தொடக்கத்தில் பக்கத்திற்கு ஒருவராக உச்சிக்கொண்டையிட்ட வானவமகளிர் ஒரு கையில் அகலும் மறு கையில் மணியுமாய் நிற்க, இருபுறத்தும் அவர்களைத் தொடர்பவர்களாய் உயர்த்திய முழங்காலுடன் ஊர்த்வஜாநு கரணத்தில் பக்கத்திற்கு 13 அழகியர். இரு கைகளிலும் மலர் கொண்ட இந்தக் கரணச் செல்விகளால் நாயக்கர் தோரணம் ரோஸ்பீட்டர் படைப்பை அழகில் விஞ்சி நிற்கிறது. செல்வியர் தலைக்கருகே நீளும் தண்டுகள் அகலேந்த, கீர்த்திமுகத்திற்குக் கீழிருக்குமாறு யானைத்திருமகள்.

மீனாட்சிநாயக்கரின் ஆதிதோரணம் சிதைந்ததால் பொ. கா. 1898 நவம்பர் 21ஆம் நாள் சிவகங்கை ஜமீன்தார் கௌரி வல்லபதேவர், மீனாட்சி நாயக்கரின் வாரிசு பங்காரு திருமலைசாமி மேலாண்மையில் செய்து வைக்கப்பட்ட இத்தோரணம் ஆவியூரை உள்ளடக்கிய 5 ஊர்களின் வருவாயில் உருவானது. 1300 அகல்களுடன் எண்ணிக்கையிலும் வடிவமைப்பிலும் கம்பீரத்திலும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விளக்குமாலைகளையும் விஞ்சி ஒளிரும் இந்த அழகிய தோரணத்தைச் செய்த பெருமைக்குரியவர் திருநெல்வேலி முத்துசாமி ஆசாரியின் மகனான திரு. இராசகோபால் ஆசாரி.

கலைத்திறன் படைத்த அவரது கைவளமும் கற்பனையாற்றலும் மின்னி மிளிரும் இந்த விளக்குமாலை 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த பித்தளைப் படைப்புகளின் செழுமைக்குச் சான்றாய் நம் கண்முன் நிற்கிறது. இதிலுள்ள எழுத்துப் பொறிப்பு இத்தோரணத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட பித்தளையின் அளவைத் தருவதுடன், தாங்கல்கள், மரஏணி ஆகியவற்றிற்கான செலவினங்களையும் கணக்குச் சுத்தமாகப் பதிவுசெய்துள்ளது.

இந்த எழுத்துப்பொறிப்பு இல்லாது போயிருந்தாலோ அல்லது கண்டறியப்படாதிருந்தாலோ தோரணத்தின் வரலாறே இருளடைந்திருக்கும். ஒளி உமிழவே உருவாக்கப்பட்ட இந்த அகல்தோரணத்தில், அதன் வரலாற்றைப் பொறித்தவர்களுக்கும் அதைத் தம் கடினஉழைப்பால் கண்டறிந்து வெளிப்படுத்தியவருக்கும் நன்றி சொல்வோம் வாருணி. இது போன்ற பதிவுகள்தான் நமக்கு வரலாறு தருகின்றன. அதனால், இத்தகு பதிவுகளை உருவாக்குவதுடன் உருக்குலையாமல் காப்பதும் நம் கடமை.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 2. ரோஸ்பீட்டரும் சையது இஸ்மாயிலும்


அன்புள்ள வாருணி, நீயும் நானுமாய் மதுரைக் கோயிலைப் பார்த்தபோது, ‘எவ்வளவு பெரிய வளாகம்!’ என்று நீ வியந்தது உனக்கு நினைவிருக்கலாம். அப்பயணத்தின் போது மதுரையைப் பற்றி மிகுதியும் பேசியதை நினைவுகூர்கிறேன். நீ குறிப்பிட்டாற்போலத் தமிழ்நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான பேரூர்களில், சங்க இலக்கியம் ஒன்றுக்குத் தலைப்பாகும் பேறு மதுரைக்கு மட்டுமே வாய்த்தது. மறக்கக்கூடிய இலக்கியமா மதுரைக்காஞ்சி!

‘மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை’ என்றல்லவா அதில் மதுரையை வியந்திருக்கிறார் மாங்குடி மருதனார். அந்த மதுரையின் மகுடம்தான் மீனாட்சி சுந்தரேசுவரர் வளாகம். அதிலுள்ள பெருமண்டபங்களுள் ஒன்றே வீரவசந்தராயர் மண்டபமாய் அழைக்கப்படுகிறது. பொ.கா. 1611இல் மதுரை நாயக்க அரசமரபின் 6ஆம் பட்டமாகக் கருதப்படும் முத்து வீரப்ப நாயக்கரால் எழுப்பப்பட்ட இம்மண்டபத்தை மதுரைக் கோயில் திருப்பணிமாலை, ‘மண்டபக் குலதீபம், மண்டபங்களுக்கு நாயன், மண்டப சிரோ ரத்தினம்’ என்றெல்லாம் போற்றிக் களிக்கிறது.

புதுமண்டபத்தை ஒத்த நீளமுள்ள இந்த வீரவசந்தராயர் மண்டபத்தின் பின்பகுதியில்தான் பேச்சிமண்டப வாயிலுக்கு அழகூட்டுமாறு அமைந்துள்ளது இரண்டாம் விளக்குத்தோரணம். அதன் இருபுறப் பித்தளைத்தூண் தாங்கல்களும் 6. 13 மீ. உயரமுடையவை. 70 செ. மீ. அகலமுள்ள அவற்றைத் தந்தங்களில் பூண்கள், முகபடாம், மணிமாலைகள், தாள்செறிகளுடன் பக்கத்திற்கு ஒன்றாய் நிற்கும் எழிலார்ந்த யானைகள் தாங்க, மேற்றளங்களில் கால்களை சுவஸ்திகமாய் இருத்தியுள்ள காவலர். அவர்தம் கைகளில் ஒன்று கடகம் காட்ட, மற்றொன்றில் உருள்பெருந்தடி.

இந்தக் காவலர் மீது வளரும் அகல் அடுக்குகள் பிறைநிலவாய் வளைந்து உச்சியில் கீர்த்திமுகம் கொண்டு முடிகின்றன. கீர்த்திமுக வாயிலிருந்து வெளிப்படும் தீச்சுடர்கள் மகரங்களாக, பிறைவளைவில் கொடிக்கருக்குகள் தழுவிய தாவுயாளிகள். பக்கத்திற்குப் பதின்மூன்றாய் வளரும் அந்த யாளிகளும் அகல் தாங்கிகள்தான் வாருணி. தூண்கள் பிறையென வளையுமிடத்துப் பதக்கமாலையுடன் ஒரு கையில் அகலும் ஒரு கையில் மணியுமாய்ப் பக்கத்திற்கொரு வானவர்.

கீர்த்திமுகத்திற்கு நேர் கீழே தாமரைமலரில் அர்த்தபத்மாசனத்தில் பின் கைகளில் தாமரை மொட்டுகளுடன் யானைத்திருமகள். முன் கைகள் காப்பும் அருளும் காட்ட, அம்மையின் இருபுறத்தும் துளைக்கைகளில் நீர்க்குடங்களுடன் அலங்கரிக்கப்பட்ட யானைகள்.

கம்பீரமும் கவர்ச்சியுமாய்த் தாமரை அடுக்கென விரிந்து கண்களை நிறைக்கும் இந்த விளக்குமாலையிலும் இரண்டு எழுத்துப் பொறிப்புகளை நளினி கண்டறிந்தார். பொ. கா. 1819இல் செதுக்கப்பட்டுள்ள அவற்றுள், மத நல்லிணக்கப் பார்வையில் அமைந்திருக்கும் வலப்புறப் பொறிப்பு அக்காலத்தே மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக விளங்கிய ஆங்கிலேயரான ரோஸ்பீட்டரின் ஆணைக்கிணங்க, மதுரை மாடக்குள வட்டாட்சியர் பொறுப்பிலிருந்த திரு. சையது இஸ்மாயில் அனைத்து மக்களுக்குமாக இந்த விளக்குத்தோரணத்தை அமைத்ததாக அறிவிக்கிறது.

பூசநட்சத்திரம் விளங்கிய பிரமாதி ஆண்டு ஆவணி 30இல் மீனாட்சிசுந்தரேசுவரர் திருமுன்னில் வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைக்கப்பட்ட இம்மகரதோரண விளக்குமாலையில் 616 விளக்குகள் இருப்பதாகக் கூறும் இப்பதிவு, இதற்கான வெண்கலம், மெழுக்கு வகையறா, சில்லறை சாமான், கூலி இவற்றிற்காக 1500 பணம் செலவழிக்கப்பட்டதாகச் சொல்வதுடன், இவ்விளக்குத்தோரணம் எந்நாளும் சுடர்விட்டு ஒளிர வேண்டுவதுடன், இதைக் காணும் மக்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் அருளைச் சிந்திக்கவேண்டும் என்றும் இறைஞ்சுகிறது.

புகழ் பெற்ற இந்துக் கோயிலில் மக்கள் இறையருள் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கிறிஸ்துவ ஆட்சியரும் இசுலாமிய வட்டாட்சியரும் செய்தமைத்த இந்த மகரதோரண விளக்கு, சிலம்பம் மாம்பழம் ஆசாரி மகன் முத்து வயிரவன் ஆசாரி, காமாட்சி ஆசாரி தம்பி பரிமணம் ஆசாரி, அம்மமுத்து ஆசாரி மகன் சொக்கலிங்க ஆசாரி ஆகியோர் கைவண்ணத்தில் உருவானதென இரண்டாம் செதுக்கல் கூறுகிறது.

இத்தோரணத்தின் பின்புற வாயில்நிலைக் கீழ்ப்படியை மூடியுள்ள பித்தளைத்தகட்டின் முகப்பில் வலப்புறம் நால்வரும் இடப்புறம் ஐவருமாய்க் கோயிலுக்கு வருபவர்களை வரவேற்பார்போலக் கூப்பிய கைகளுடன் ஆடவர்கள்.

ஒரு மண்டபத்தில் அமைந்து மற்றொரு மண்டப வாயிலை அலங்கரிக்கும் இந்த வீரவசந்தராயர் விளக்குமாலை அதில் இடம்பெற்றிருக்கும் கனிவான வேண்டுகோளால் பெருஞ் சிறப்புப் பெறுகிறது. தமிழ்நாட்டுக் கோயில்களில் இது ஒத்த எழிலார்ந்த விளக்குமாலைகள் பலவாய் இருந்தபோதும் ரோஸ் பீட்டர், இஸ்மாயில் கூட்டுறவில் அமைந்ததே இதற்கு நிகரற்ற பெருமை சேர்க்கிறது.

வாருணி, அடுத்த முறை மதுரை போனால், இந்த விளக்குத் தோரணத்தைக் கட்டாயம் பார். இதைச் செய்தமைத்தவர்களையும் வரவேற்பவர்களையும் நீ அறிந்தவர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்து. மீனாட்சி நாயக்கர் மண்டபத் தோரணம் அடுத்த மடலில்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்- 1. புவனேசுவர விளக்கு

அன்புள்ள வாருணி, நலந்தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னோடு பேச வாய்த்துள்ளது. எழுத்துப் பேச்சாகுமா என்று நீ கேட்கலாம். உன்னோடு நிகழும் எதுவும் எனக்கு உரையாடல்தான். நண்பர் ஒருவர் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பற்றி நூல் உருவாக்குவதாகவும் அதில் என் பணியாய்ச் சில கட்டுரைகள் அமையவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் தந்தை மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையிலும் அம்மா பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையிலும் பணியாற்றிய காலத்து ஏறத்தாழ ஐந்தாண்டுகள் என் பள்ளிப் பருவ வாழ்க்கை மதுரையில்தான்.

மீனாட்சிக் கோயில் திருவள்ளுவர் மன்றத்தில் அப்பாவை அடிக்கடிப் பேச அழைப்பார்கள். அருமையான மலை வாழைப்பழம் உண்ணக் கிடைக்கும் என்பதால் நான் தவறாது உடன் செல்வேன். அந்த வயதில் கோயில் புரிந்ததில்லை என்றாலும், வளாகத்தில் சுற்றாத இடமில்லை. பொற்றாமரைக் குளமும் புதுமண்டபமும் இசைத்தூண்கள் உள்ள சுற்றுவெளியும் என்னால் மறக்கவே முடியாத விளையாட்டுக் களங்கள்.

1959இல் அப்பா சென்னைப் பல்கலைக்கு வந்தார். மதுரைத் தொடர்பு அன்றோடு முடிந்து சென்னை வாசியானேன். மருத்துவம் முடிக்கும்வரை சிங்காரச் சென்னைதான் என்னை வடிவமைத்தது. காதலும் திருமணமும் கண்மருத்துவப் பணியும் என்னைத் திருச்சிராப்பள்ளிக்கு நகர்த்தின. 1975இல் இருந்து இந்தக் காவிரி மண்தான் எனக்குள் கலை வளர்த்து வருகிறது. உறையூர்ப் பஞ்சவர்ணசாமி கோயிலில் நான் பார்த்து வியந்த சைக்கிள் சிற்பத்தின் வடிவில் வந்த வரலாறு என் பயணம் மாற்றிப் பாதையைத் திருப்பியது. கோயில்களோடு கையிணைத்த பிறகுதான் எது வரலாறு என்பதே எனக்குத் தெளிவானது.

வாருணி, எதையோ சொல்லத் தொடங்கி எங்கோ போய்விட்டேன். நண்பரின் மதுரைக் கோயில் நூலுக்கு எழுத ஒப்புக் கொண்டதும், அக்கோயிலில் ஒலி, ஒளிக் காட்சி அமைக்கக் கருதிய அரசின் வேண்டுகோளேற்று நானும் பேராசிரியர் மு. நளினியும் அங்குத் தொடராய்வுகள் மேற்கொண்டமை நினைவுக்கு வந்தது. என் எண்ணவோட்டம் அறிந்தவராய் நளினி கணினித் தொகுப்புகளைக் கண்முன் நிறுத்தினார். ஒவ்வொரு காட்சியும் என்னை எழுதத் தூண்டின.

மதுரையைப் பற்றி எவ்வளவோ கட்டுரைகளும் நூல்களும் வந்திருந்தபோதும் பார்க்காமல் விட்டதும் சொல்லாமல் போனதும் கோயில் முழுவதுமாய் நிறைந்திருப்பதை உணர்ந்தேன். எழுத நினைத்ததுமே நினைவில் நிறைந்தவர் கண்ணன் விக்கிரமன்தான். அவரது ஆசிரியத்தில் வெளிவரும் இலக்கியப் பீடத்தில் ஒரு தொடராக எழுத அனுமதி கேட்டேன். ‘உடனே தொடங்குங்கள்’ என்று உள்ளம் பூரித்தார் கண்ணன். தந்தையைப் போலவே துடிப்பான செயற்பாடுகள்.

வாருணி, ஒரு கோயிலின் சிற்பங்கள் குறித்து ஓர் இதழில் தொடராக எழுதப்போவது இதுவே முதல் முறை. என் பார்வைகளின் விளைவான படப்பிடிப்புகளை உன்னோடு பகிர்ந்து கொள்வது எப்போதுமே எனக்குப் பிடித்தமானது. உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்வுகளை, அவை வரலாறு தொட்டே வளர்ந்தபோதும் நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்திக் களிப்பது சுகந்தானே.

சம்பந்தரால், ‘கூடல் ஆலவாய்’ எனப் போற்றப்படும் இக்கோயில் வளாகத்திலுள்ள மண்டபங்கள் பலவாகும். அவற்றுள் மூன்று மண்டபங்கள் அவற்றின் வாயிலைத் தழுவியுள்ள விளக்கு மாலைகளால் சிறப்புப் பெறுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகளில் தீபமாலைகளாகச் சுட்டப் பெறும் இந்த அகல் அடுக்கிய அழகுத் தோரணங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கின்றன.

மீனாட்சிக் கோயிலின் சிற்பக்களஞ்சியமாக விளங்கும் சிறந்த மண்டபங்களில் கம்பத்தடி மண்டபமும் ஒன்று. மையப் பகுதிக் கூட்டுத்தூண்கள் ஒரு சதுரமாக வடிவமைக்கும் காட்சிக் கூடத்தின் முன் இந்த அகல்தோரணம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கீர்த்திமுகத் தலைப்புடனான மகர திருவாசியில் மூன்றடுக்கு அகல்கள். அவற்றைத் தழுவி மேலடுக்காய் இலை போல் மதலைகள். தோரணத் தலைப்பில் நெற்றிச்சுட்டிப் போலத் தொங்கல்.

இந்த மகரத்திருவாசியை இருபுறத்தும் தாங்கும் தூண்களிலும் அகல் வரிசைகள். தாங்கலின் மேற்பகுதியில் விரிந்த ஊமத்தம்பூவாய் அழகிய நாணுதல்கள். அவற்றின் கீழே தாவும் யாளிகள். தாங்கலின் கீழ்ப்பகுதியிலோ, பக்கத்திற்கு ஒருவராகக் கருவிகளுடன் காவலர். இந்தக் கம்பத்தடித் தோரணத்தின் வலப்புறம் மலர்ப் பதக்கங்களுடன் பொதுக்காலம் 1654 ஜெய ஆண்டு மாசி மாதம் 12ஆம் நாள் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை நம் பேராசிரியர் நளினிதான் கண்டறிந்து படித்தார்.

விசுவநாத நாயக்கர் மரபினரான திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகக் குப்பையாண்டிச் செட்டியார் எனும் பெரியவர், ‘புவனேசுவர விளக்கு’ என்ற பெயருடன் இந்த மகர தோரண விளக்கைச் செய்தளித்திருப்பது கல்வெட்டால் தெரிய வந்தது. இந்தத் தோரணம் கோயிலில் அமையத் துணை இருந்தவர் அப்போது இங்குப் பாரபத்தியமாகப் பணியிலிருந்த நாவாயி ஆனந்த வீரப்பச் செட்டியாராம்.

இதைவிடச் சிறப்பானவை வீரவசந்தராயர், மீனாட்சி நாயக்கர் மண்டபத் தோரணங்கள். அவற்றிலும் கல்வெட்டுகள். தகவல்கள் அடுத்த மடலில்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

பந்தவிளக்குகளும் பங்கேற்ற ஊர்களும்

இரா. கலைக்கோவன்

காலந்தோறும் வரலாற்றைப் பதிவுசெய்ய மக்கள் கையாண்ட முறைகளுள் எழுத்துப் பொறிப்புகள் ஒன்றாகும். எதிலெல்லாம் முடியுமோ அதிலெல்லாம் அவ்வக் காலத்து வழக்கிலிருந்த எழுத்துகளால் அறிந்தவற்றையும் நடந்தவற்றையும் எழுதத் தொடங்கியவர்களால் கல்லில் செதுக்கப்பட்ட பதிவுகளே கல்வெட்டுகள் என அறியப்படுகின்றன. இந்தியாவில் மிக அதிக அளவிலான கல்வெட்டுகள் தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே கிடைப்பதாக இதுவரை வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன. முறை சாரா திருப்பணிகளால் காலந்தோறும் அழிவுக்குள்ளான கல்வெட்டுகள் ஏராளம் என்றாலும், எஞ்சியிருப்பவை பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடர் நழுவாமால் பகிர்ந்துகொள்கின்றன. அத்தகு கல்வெட்டுகளுள் ஒன்றுதான், பந்தவிளக்குகளையும் அவற்றுக்கான பொறுப்பைப் பகிர்ந்துகொண்ட ஊர்களையும் வெளிச்சப்படுத்துகிறது.

திருமுதுகுன்றம் கோயில்

தமிழ்நாட்டின் பெருங்கோயில்களுள் ஒன்றைத் தக்கவைத்துள்ள தேவார ஊர்களுள் ஒன்றான திருமுதுகுன்றம் இன்றைக்கு விருத்தாசலமாக அறியப்படுகிறது. திருமுறைப் பாடல் பெற்ற இக்கோயில் இறைவனைப் பதிகங்கள் முதுகுன்றத்தார் என்றழைக்க, கோயில் வளாகக் கல்வெட்டுகள் திருமுதுகுன்றமுடைய நாயனார் என்கின்றன. சோழஅரசி செம்பியன்மாதேவியால் கற்றளியாக்கப்பட்ட பல கோயில்களில் முதுகுன்ற வளாகமும் ஒன்றாகும். இவ்வாளகத்துள்ள, ‘ஸ்ரீபராந்தக தேவரான பெரியசோழனார் மகனார் கண்டராதித்ததேவர் தேவியார் மழபெருமானடிகள் மகளார் ஸ்ரீஉத்தமசோழர் தங்கள் ஆச்சி செம்பியன்மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்டது ஸ்ரீகோயிலும் ஸ்நபனமண்டபமும் கோபுரமும் சுற்றாலையும் பரிவாரக் கோயில்களும்’ எனும் உத்தமசோழரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இங்குள்ள சிறப்பான பதிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மிகச் சில கல்வெட்டுகளே ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகையில் அவரது தலையாய உறவுமுறைகளை விதந்தோதுகின்றன. அந்த வகையில் பேறுபெற்றவர்களாய்ச் செம்பியன்மாதேவியையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்த பூதிஆதித்த பிடாரியையும் குறிக்கலாம். திருமுதுகுன்றம் கல்வெட்டு செம்பியன்மாதேவியாரின் தந்தை, மாமனார், கணவர், மகன் என மூன்று தலைமுறை ஆண் உறவுகளைப் பகிர்ந்துகொள்கிறது. அன்னையைக் குறிக்கும், ‘ஆச்சி’ என்ற அழகான தமிழ்ச் சொல்லும் கோயிற்கட்டடக்கலை சார்ந்த கலைச்சொற்களும் இக்கல்வெட்டின் கொடைகளாகும். இது குறிக்கும் சுற்றாலையே இன்று பிரகாரம் என மாறியுள்ளது. ‘கோபுரம்’ என்ற கோயில் நுழைவாயில் கட்டுமானத்தைக் குறிக்கும் மிகச் சில பழங்கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மறக்கமுடியாத வரலாற்று நாயகி செம்பியன்மாதேவியால் கட்டப்பெற்ற இக்கோயிலுக்குச் சோழ அரசர்கள் காலத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு அளப்பரிய கொடைகள் அளிக்கப்பட்டன. அவற்றுள் தனித்த சிறப்புடன் திகழும் கொடை, பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனான குலோத்துங்கசோழக் காடவராயரால் வழங்கப்பட்டது. இரண்டாம் குலோத்துங்கர் காலச் சிற்றரசரான இவர், குலோத்துங்கர் மகனான இரண்டாம் இராஜராஜர் காலத்தில் திருமுதுகுன்றம் கோயிலில், ‘குன்றப்பெருமாள்’ என்ற திருப்பெயரில் இறைத்திருமேனி ஒன்றை எழுந்தருளுவித்தார்.

அத்திருமேனிக்காகவும் வைகாசி, ஆவணிமாதக் கொண்டாட்டங்களாகவும் கோயிலில் 36 நாள்கள் நிகழ்ந்த விழாக்களில் பந்தவிளக்குகள் ஏற்ற ஆகும் செலவுகளுக்காகக் காடவராயர், கோயில் கருவூலத்தாரிடம் 2810 காசு கொடையாகத் தந்தார். இக்காசை வைப்புநிதியாகக் கொண்டு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியால் 36 நாள் விழாவிலும் நாளும் 562 பந்தவிளக்குகள் எரிக்கவேண்டும் என்பது திட்டம். கோயிலார் கொடைத்தொகையை 70 ஊர்களுக்குப் பகிர்ந்தளித்து, அதை முதலாகக் கொண்டு விளக்கேற்றும் பொறுப்பை அந்தந்த ஊராட்சி ஏற்குமாறு செய்தனர். ஒரு விளக்கிற்கு 5 காசு வைப்புநிதி எனக் கணக்கிடப்பட்டு 2810 காசும் 70 ஊராட்சியினரிடம் பிரித்துத் தரப்பட்டது. காசு பெற்ற ஊராட்சியினர் கொடையை முதலாகக் கொண்டு அதன் வட்டியில் விளக்கேற்றும் பொறுப்பேற்றனர்.

திருமுதுகுன்றம் விமானம்

‘விளக்கேற்றக் கொடை, அதைப் பெற்ற ஊராட்சி அதன் வட்டிகொண்டு விளக்கேற்ற ஒப்பியமை’ என்பதே இக்கல்வெட்டின் அடிநாதச் செய்தி. ஆனால், இக்கல்வெட்டு வழங்கும் சமூகப் பொருளாதாரத் தரவுகள் பலவாகும். கோயிலிலுள்ள ஏழிசைமோகன் திருமண்டபத்தின் வடசுவரில் தொடங்கப்பட்டு, அங்கு இடம்போதாமையின் தென்சுவரில் தொடரப்பட்ட இக்கல்வெட்டு, தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் மிக நீளமான கல்வெட்டுகளுள் ஒன்றாகும். எத்தனையோ வகையான விளக்குகள் பற்றிப் பேசும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில், மிக அரிதாகவே இக்கல்வெட்டுச் சுட்டும் பந்தவிளக்கு பயின்று வந்துள்ளது. முதுகுன்ற விழாக்களில் எரிந்த இவ்விளக்குகளின் 562 என்ற உயர் எண்ணிக்கையும் வியக்கவைக்கிறது. ஒரு விளக்கிற்கு 5 காசெனக் கொடைப்பணம் பெற்ற ஊர்களால், 12ஆம் நூற்றாண்டில் பெண்ணாகடம், இருங்கோளப்பாடி, முதுகுன்றம் எனும் மூன்றிடங்களைச் சுற்றிலுமிருந்த பல ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் பெயர்களுடன் பழைய ஊர்களாக 32 உள்ளன. பிராமணர் குடியிருப்புகளாக 11, வணிகக்குடியிருப்புகளாக 2, கோயில் நிலமிருந்த ஊர்களாக 5 அமைய, 20 ஊர்கள் பல்வேறு பின்னொட்டுகளோடு முடியும் பெயர்களில் இருந்தன.

பெற்ற காசுக்கும் அதற்கான பந்தவிளக்கிற்கும் ஒவ்வோர் ஊராட்சியிலும் பொறுப்பேற்றவர்கள் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திடவேண்டும். ஆனால், அவர்களில் சரிபாதியினர் எழுத்தறிவற்றவர்களாய் இருந்தமையால் அவர்களுக்காக வேறு சிலர் கையெழுத்திட்டுள்ளனர். எழுத்தறிவின்மையை, ‘சையிஜையானமை, கைமாட்டாமை’ என்ற தொடர்களால் கல்வெட்டு குறிக்கிறது. சில ஊர்களில் பொறுப்பாளர்கள் அனைவருக்குமே பிறர் கையெழுத்திட்டுள்ளனர். ஓரிரு ஊர்களில் பொறுப்பேற்ற அனைவர் சார்பிலும் ஒருவரே கையெழுத்திட்டுள்ளார். மிகச் சில ஊர்களிலேயே பொறுப்பேற்ற அனைவரும் எழுத்தறிவுள்ளவர்களாய் விளங்கியுள்ளனர். பொறுப்பேற்ற அனைவருமே ஆண்களாக இருப்பதால், ஊராட்சிப் பொறுப்பில் இந்த 70 ஊர்களில் பெண்கள் யாரும் இல்லாமை தெளிவு. புஞ்சி, குப்பை, பிச்சன், சோறன், பன்றி, ஆவணம், மாட்டத்தான் எனச் சிலர் பெயர் கொண்டிருக்க, குடிதாங்கி, அறம், திருவரைசு போன்ற பெயர்களும் மக்களுக்கு இருந்தன.

பொறுப்பேற்றவர்களுள் பலர் பல்வேறு ஊர்களில் பிறந்தவர்களாகவும் அங்கு நிலம் உடையவர்களாகவும் இருந்தமையால், அக்கால வழக்கப்படி தத்தம் பெயருக்கு முன் பிறப்பூரையும் சுட்டியுள்ளனர். இதன்வழிக் கூடுதலாக, 85 சோழர் கால ஊர்ப்பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஊர், குடி என முடியும் ஊர்கள் 41. ஒழுகை, வாழ்க்கை, வஞ்சிரம், போகுடி, கடுகா, வரகு, ஈசால் முதலிய ஊர்ப்பெயர்கள் கவனமீர்க்கின்றன. மத்தளங்குடி எனத் தோலிசைக்கருவியின் பெயராலும் ஓர் ஊர் இருந்துள்ளது.

155 ஊர்ப்பெயர்களையும் எண்ணற்ற மக்கள் பெயர்களையும் வழங்கும் இக்கல்வெட்டு, கொடை வழங்கப்பட்ட காலத்தே சமூகத்தில் நிலவிய படிப்பறிவின் நிலையையும் படம்பிடிக்கிறது. ஒரு தனி மனிதக் கொடைக்குப் பொறுப்பேற்று அதை நிறைவேற்ற உளங்கொண்ட 70 ஊர் மக்களின் மனப்பாங்கு அன்றிருந்த கூட்டுறவுப் பார்வையையும் அறச்செயல்களில் மக்கள் காட்டிய ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதுடன், கோயில் விழாக்கள் மக்கள் பங்களிப்புடன் பொலிந்ததையும் வெளிச்சப்படுத்துகிறது.

சுந்தர வாழ்க்கை

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டின் முப்பெரும் தேவாரப் பெருமக்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் சுந்தரர். சிவபெருமானைப் போற்றி அவர் பாடிய நூறு பதிகங்களே ஏழாம் திருமுறையின் உள்ளடக்கம். முதல் ஆறு திருமுறைகளைப் பாடிய சம்பந்தரும் அப்பரும் மண்ணுலகினர். சுந்தரரோ விண்ணுலகில் வாழ்ந்து, செய்த பிழைக்காக மண்ணுலக வாழ்வுக்கு அனுப்பப்பட்டவர். அவரது வாழ்க்கையை விரித்துரைக்கச் சேக்கிழாருக்கு உதவிய எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளில் இராஜராஜீசுவரத்துத் தூரிகைப் படப்பிடிப்பு முதன்மையானது எனலாம்.

சுந்தரர் வாழ்க்கை

‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்ற பெருமைமிகு அறிவிப்புடன் சோழப் பேரரசர் முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எழுப்பிய இராஜராஜீசுவரம், தமிழ்நாட்டுக் கட்டடக்கலை வரலாற்றில் ஒரு மைல் கல். கருவறையைச் சுற்றி இரண்டு சுவர்களும் அவற்றுக்கு இடைப்பட்டு நடைவழியும் கொண்டு உருவான சாந்தார விமானங்களில் இராஜராஜீசுவரம் தனித்தன்மையது. இங்கு மட்டுமே அந்த நடைவழி, அது அமைந்துள்ள விமானத்தின் இருதளங்களிலும் கலைப்படைப்புகளைப் பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள கீழ்த்தள நடைவழியில் சோழ, நாயக்கர் கால ஓவியங்களுடன் கூரைப்பகுதியில் ஆடற்சிற்பங்களும் உள்ளன. மேற்றள நடைவழி பரதரின் நாட்டியசாத்திரம் குறிப்பிடும் 108 ஆடற்கரணங்களில் 81க்கான சிற்பவடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.

கீழ்த்தள நடையின் நான்கு பெருஞ்சுவர்களில் முழுமையாகவும் பிற சுவர்களில் ஆங்காங்குமென வெளிப்பட்டுள்ள சோழ ஓவியங்களில் ஒன்றே, சுந்தரர் வாழ்க்கை பேசும் தடுத்தாட்கொண்ட புராணத்தை எழுதச் சேக்கிழாருக்குத் துணையானது எனில், இராஜராஜர் காலத்தில் வழக்கிலிருந்த தரவுகளும் பதிவுகளுமே நான்கு பெருஞ்சுவர்களுள் ஒன்றில் அந்த வாழ்க்கையின் வளமை காட்டச் சோழத் தூரிகைகளுக்கு உதவின எனலாம். சுந்தரர் வாழ்க்கையில் காதலும் பத்திமையும் இணைந்தே இருந்தன. பரவை, சங்கிலி எனும் இரு பெண்களுடன் அவருக்கு ஏற்பட்ட இணைவையும் பிரிவையும் தவிர்த்த சோழ ஓவியர்கள், தாம் அறிய நேர்ந்த சுந்தர வாழ்க்கையின் மூன்று திருப்புமுனை நிகழ்வுகளை மட்டுமே காட்சிகளாக்கினர்.

சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, ஓலை காட்டி அவரைத் தம் அடிமையென அறிவித்து, அதை வழக்குமன்றத்திலும் நிறுவி, தம் இருப்பிடம் கேட்டவர்களைத் திருவருட்துறைக்கு அழைத்துச்சென்று, அங்கு சுந்தரருக்குத் தம்மை வெளிப்படுத்தி, அவர் பாட ‘பித்தா’ எனச் சொல்லெடுத்துத் தந்த சிவபெருமானின் திருவிளையாட்டு முதல் நிகழ்வாகச் சுவரின் கீழ்ப்பகுதியில் பதிவாகியுள்ளது.

வழக்காடு மன்றம்

சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் இடையில் மலர்ந்த நட்புறவு இரண்டாம் நிகழ்வாகச் சுவரின் நடுப்பிரிவில் சுருக்கமாக அமைய, சுந்தரரும் சேரமான் பெருமாளும் மேற்கொண்ட கயிலைப் பயணமும் அங்கு இறைப் பார்வையில் அவர்களுக்குக் கிடைத்த தேவ வரவேற்பும் மேற்பகுதியில் விரிந்துள்ளன.

சோழர்கால அடுக்களை, மணவரங்கு, வழக்குமன்று, வழக்காடுமுறை, கோயில் என்று பொதுக்காலம் 10, 11ஆம் நூற்றாண்டுச் சமூக வாழ்வை முதல் பிரிவு ஓவியங்கள் வண்ணப் படப்பிடிப்பாய் வழங்க, இரண்டாம் பிரிவில் சேரமானின் அஞ்சைக்கள ஆடவல்லான் சிறக்க வடிக்கப்பட்டுள்ளார். இறைவனின் ஆனந்ததாண்டவத்தை உமையுடன் பிள்ளைகள் இருவரும் இடப்புறமிருந்து காண, குடமுழவில் தாளம் தருபவரும் காரைக்காலம்மையும் வீசிய திருவடியின் கீழ் வலப்புறம்.

சுந்தரர், சேரமான் பெருமாளின் கயிலைப் பயணம் சுவரையும் கடந்து தூணிலும் பரவியுள்ளது. வருபவர் சுந்தரர் என்பதால் அவரை வரவேற்க, விண்ணுலக நண்பர்கள் ஆடலும் பாடலுமாய்ச் சிறுசிறு குழுக்களாய் வழியெங்கும் பரவி அவரை வரவேற்கின்றனர். இந்தக் காட்சிப்பரப்பில் சோழர்காலக் கலைவளம், கருவிகளும் கலைஞர்களும் நிகழ்முறையும் ஒப்பனையுமெனக் கண்களை விரியச் செய்து தரவுகளைக் குவிக்கிறது.

சுந்தரரின் கயிலைப் பயணம்

யானைமீது சுந்தரரும் குதிரைமீது சேரமானும் கயிலை செல்லும் அந்தப் பெருவழியில், நீர்வாழ் இனங்கள் நீந்திப் பரவ, யானையின் கால்கள் கடல்நீரில். வான் வழிப் பயணத்தில் கடல் எங்கிருந்து வந்தது? யானையின் வாலைப் பற்றியவாறு சுந்தரரின் உடன்பயணியாய்ப் பின்னால் ஒருவர். யார் இவர்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுந்தரரின் நூறாம் பதிகம் விடை தருகிறது. சுந்தரரை அழைத்துவர யானையையும் வழிநடத்திவர தம் அடியார்களுள் ஒருவரான வாணனையும் இறைவன் அனுப்ப, பயணவழியில் கடலரசனான வருணன் வானவர் அனைவருக்கும் முன்னதாக வந்து மலர்கள் தூவித் தம்மை வணங்கி வரவேற்றதாக சுந்தரரே பேசுகிறார். கடலரசன் வணங்க, வழிதர வந்த வாணன் யானையின் வால் பிடித்துப் பின்வர, சேரமான் பெருமாள் முன் செல்ல, வானவ நண்பர்களின் வரவேற்பிற்கு இடையே சுந்தரர் கயிலையை அடைந்ததும் அங்கே இறைத்திருமுன் அவரும் சேரமானும் இணைந்து கண்ட ஆடல், பாடல் நிறைந்த அரங்க நிகழ்வும் கோடுகளும் வண்ணங்களுமாய்ச் சோழர்கால ஓவியர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அழகின் உச்சம்.

வாணன்

சிவபெருமானும் உமையும் மேடையில் அமர்ந்திருக்க, பின்னால் எழில்நிறை வடிவுடன் இறைவியின் விண்ணகத் தோழியர். அரங்கில் ஒழுங்குற அமர்ந்த பாடற்குழு. அவர்தம் பண்ணிசைப் பாடல்களுக்கு ஆடலரசிகளின் அவிநயம். உடன்கூட்டமாய்ப் பூதங்களின் இசைக்கோலத்துடன், பேரிசையாய்க் குடமுழவு. பார்வையாளர்களாய் சுந்தரரே சுட்டும் திருமால், நான்முகன், இந்திரன் உள்ளிட்ட தேவர்களும் பிறரும். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையை நினைவூட்டுமாறு விரிந்து பரவும் இந்தக் கயிலாயக் காட்சி சோழர் கால நிகழ்த்துக் கலைக்குக் கிடைத்த அரிதிலும் அரிதான வண்ணப்பதிவாகும்.

தவம், நட்பு, போர், பத்திமை எனும் நான்கை முதன்மைப்படுத்தி நான்கு பெருஞ்சுவர்களை வண்ணக் கலவைகளால் நிறைத்திருக்கும் சோழத் தூரிகைகள் இலக்கியம் பயின்றும் வரலாறு அறிந்துமே வரைவைச் செய்தன என்பதை சுந்தர வாழ்க்கையின் தேர்ந்தெடுத்த நிகழ்வுகளும் அவற்றை அவை பதிவுசெய்திருக்கும் பாங்கும் உள்ளங்கைக் கனியாய் உணர்த்துகின்றன. வாணன் வந்து வழி தந்து உடன் சென்றதும் கடலரசன் மலர் கொண்டு வாழ்த்தி வணங்கிப் பரவியதும் நம்பி ஆரூரருக்கு மட்டுமே வாய்த்த சுந்தரப் பெருமைகள்.

தள்ளாத வயதில் அப்பரும் தளிரான பருவத்தில் சம்பந்தரும் தலைக்கு மூன்று திருமுறைகள் கொள்ளுமளவிற்குப் பதிகங்கள் பாடியும் கருவறைச் சுவரோவியத்திற்கு சுந்தரர் வாழ்வை இராஜராஜர் தேர்ந்தது ஏன்? அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த தம்பிரான் தோழர் என்பதாலா? அப்பருக்கும் சம்பந்தருக்கும் கிடைக்காத இணையற்ற நண்பராய் சுந்தரருக்கு சேரமான் பெருமாள் வாய்த்ததாலா? ஊர்ப் பதிகங்களோடு நில்லாமல் வரலாற்றுத் தொடராய் தமக்கு முன்னும் தம் காலத்தும் வாழ்ந்த இறையடியார்களைத் தொகைப்படுத்தித் திருத்தொண்டத்தொகை தந்ததாலா? வரலாறு வளப்படுவதே கேள்விகளால்தான்.

புரட்சிக் கலைஞர் கோச்செங்கணான்

இரா. கலைக்கோவன்

‘பொதுவான இல்லம்’ எனும் பொருளில் அமைந்த பொதியில் என்ற சொல் சங்ககால இறையகங்களைக் குறிக்கும். எழுதணி கடவுளுடன் பொதியில், கந்துடைப் பொதியில், மண்டகப் பொதியில் முதலிய சங்க இலக்கியச் சொல்வழக்குகளும், ‘இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென’, ‘மரஞ்சோர் மாடம்’ எனும் சங்கத் தொடர்களும் அந்த இறையகங்களின் கட்டுமான அமைப்பைக் கண்முன் நிறுத்துகின்றன. நகர் என்றும் அழைக்கப்பட்ட அவற்றின் காலநிரலான அமைப்பு மாற்றங்களையும் அதற்கேற்ப உருவான பெயர்களையும் கோட்டம், கோயில் உள்ளிட்ட சிலப்பதிகாரச் சொல்வழக்குகளால் அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் இடம்பெறாத இறையகச் சொல்வழக்கொன்றைப் பத்திமை இலக்கியங்கள் முன்வைக்கின்றன. ‘மாடக்கோயில்’ என்ற அந்தச் சொல்லைக் கோச்செங்கணான் என்ற சோழவேந்தருடன் இணைத்துப் பேசும் பாங்கை மங்கையாழ்வாரின் திருநறையூர்ப் பாசுரத்திலும் ஞானசம்பந்தரின் வைகல் பதிகத்திலும் காணமுடிகிறது. அதைப் பெருங்கோயில் என்றும் அறிமுகப்படுத்துவார் சம்பந்தர். இத்தகு கோயில்கள் எழுபது இருந்ததாகவும் அவற்றைக் கட்டமைத்தவர் திருக்குலத்து வளச்சோழரான கோச்செங்கணானே என்றும் மங்கையாழ்வார் உறுதிபடப் பாடியுள்ளார். தம் காலத்தே தமிழ்நாட்டிலிருந்த கோயில் கட்டமைப்பு வகைகளைச் சுட்டுமிடத்து அவற்றைப் பெயரளவில் மட்டுமே குறிப்பிடும் அப்பர் பெருமான் அவற்றுள் ஒன்றான பெருங்கோயிலை மட்டும் எழுபத்தெட்டு என்று எண்ணிக்கையுடன் சொல்வார்.

குடவாயில்

கோச்செங்கணான் எனும் சோழஅரசரின் பெருவீரம் மங்கையாழ்வாரின் திருநறையூர்ப் பாசுரத்தில் பலபடப் பேசப்பட்டுள்ளது. வெண்ணியில் விறல் மன்னரையும் விளந்தையில் அதன் வேளையும் அழுந்தையில் படை மன்னர்களையும் போரில் வெற்றிகண்டு உலகமாண்ட தென்னாடராகக் கோச்செங்கணானைப் பாடிப் பரவுகிறார் மங்கையாழ்வார். இம்மன்னன் மீது பொய்கையாழ்வாரால் பாடப்பெற்ற களவழிநாற்பது எனும் கீழ்க்கணக்கு நூலொன்றும் மன்னரின் வீரம், அவருக்கும் சேர அரசர் ஒருவருக்கும் நிகழ்ந்த போர், அப்போரில் சேரஅரசர் உயிரிழந்தமை முதலிய பல வரலாற்றுத் தரவுகளை முன்வைக்கிறது.

சோழர் காலச் செப்பேடுகள் சிலவற்றில் சோழர் மரபுவழி கூறுமிடத்துச் சுட்டப்படும் இக்கோச்செங்கணானின் காலம் குறித்துப் பல கருத்துகள் முன்வைக்கப் பட்டாலும் நெடிய ஆய்வுகளுக்குப் பின் டாக்டர் மா. இராசமாணிக்கனார் செங்கணான் காலத்தைப் பொதுக்காலம் 5ஆம் நூற்றாண்டாகச் சுட்டியுள்ளமை பொருந்துவதாகவே உள்ளது.

பெருவேளூர்

சைவம், வைணவம் எனும் இருவேறு சமயஞ்சார் இலக்கியச் சான்றுகளால் கோச்செங்கணானோடு தொடர்புபடுத்தப்படும் மாடக்கோயில்கள் கட்டமைப்பில் புதியவை. அதனாலேயே, எத்தனையோ கோயில்களைப் பாடியுள்ள தேவார மூவரில் இருவரும் மங்கையாழ்வாரும் மாடக்கோயில்களைப் பாடுமிடத்து அவற்றை எழுப்பியவரையும் மறவாது அடையாளப்படுத்தியுள்ளனர். அதுநாள்வரை இருந்த கட்டமைப்புகளிலிருந்து மாடக்கோயில் மாறுபட்டு அமைந்ததாலேயே அதற்குப் புதிய பெயரும் கிடைத்தது. அதைக் கட்டியவருக்குப் பாடல் புகழும் அமைந்தது.

தமிழ்நாட்டில் இன்றும் பார்வைக்குக் கிடைக்கும் இம்மாடக்கோயில்களில் பெரும்பாலன நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலேயே அமைந்துள்ளன. அவற்றைக் கண்டறிந்து விரிவான அளவில் ஆய்வுசெய்து, ‘மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள்’ என்றொரு நூலையும் வெளியிட்டுள்ள டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்ற இறையகமே மாடக்கோயில் என்று வரையறை செய்துள்ளனர்.

தலைஞாயிறு

தளம் என்பது கட்டுமானஞ் சார்ந்த கலைச்சொல். இது தாங்குதளம், சுவர், கூரை எனும் மூன்று உறுப்புகள் கொண்ட அமைப்பாகும். இத்தளம் ஒரு மேடை போல, உள்ளீடின்றி அமையும்போது வெற்றுத்தளமாகிறது. இறையகங்கள் பொதுவாக நிலத்திலோ, பாறை அல்லது குன்றுகளின் மீதோ அமையுமாறு போல, மாடக்கோயில்கள் மூன்று உறுப்புகள் பெற்ற வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்றன. இந்த வெற்றுத்தளமே பிற கோயில் வகைகளிலிருந்து மாடக்கோயிலை வேறுபடுத்தி அதைப் பெருங்கோயிலாகவும் வடிவமைத்தது. வெற்றுத்தளத்தின் உயரமும் கட்டமைப்புத் திறனும் கோயிலுக்குக் கோயில் மாறுபட்டாலும், அதன் மீதிருக்கும் இறையகத்தை அடைய அனைத்து மாடக்கோயில்களும் படிவரிசை பெற்றுள்ளன. இப்படிவரிசையின் அமைப்பு, உயரம், படிகளின் எண்ணிக்கை என அனைத்துமே இடத்திற்கு இடம் மாறுபட்டுள்ளன.

பெரியஸ்ரீகோயில் என்றழைக்கப்படும் சிராப்பள்ளி மாவட்டத் திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர் கோயில் ஒரே திசையில் இரு படிவரிசைகள் பெற்ற மாடக்கோயிலாகும். அதன் வெற்றுத்தளக் கீழ்ப்பகுதியில் பிற்பல்லவர் காலச் சிற்பங்கள் தொடராக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பு. அது போலவே திருப்பேர்நகரிலுள்ள அப்பக்குடத்தான் மாடக்கோயிலும் முன்புறமொன்றும் பின்புறமொன்றுமாய் இரண்டு படிவரிசைகள் கொண்டுள்ளது. பாபநாசத்திற்கு அருகிலுள்ள திருநல்லூர் மணவழகர் மாடக்கோயிலின் இறையகமும் அதன் மேற்றளமும் இன்றும் பல்லவச் சுவடுகளுடன் மின்னுகின்றன. திருப்பணிகளுக்கு ஆட்பட்டுத் தண்டலைநீள்நெறி போன்ற சில மாடக்கோயில்கள் உருமாறியிருந்தாலும், சில கால வெள்ளத்தில் கரைந்துபோயிருந்தாலும் கோச்செங்கணான் பெயர் சொல்ல நாம் அறிந்தவரையில் 37 கோயில்கள் எஞ்சியுள்ளன.

ஆலம்பாக்கம்

இயல்பான இறையகங்களுக்கு மாற்றாக ஏன் இந்த வெற்றுத்தள மாடக்கோயில்கள் என்ற கேள்விக்கு விடைகாண முயன்றவர்கள் தொன்மங்களையும் பலவாய்க் காரணங்களையும் முன்வைத்தபோதும், பெருமழைக்கால வெள்ளப் பெருக்கில் அக்கால இறையகங்கள் கரைந்து மறைந்தமை கண்ட சூழலில், அந்நிலையிலிருந்து கட்டுமானங்களைக் காப்பதற்காகவே ஒரு தடுப்புச்சுவர் போல கோச்செங்கணான் காலக் கட்டுமான அறிஞர்களால் இந்த வெற்றுத்தள அமைப்பு உருவாக்கப்பட்டது என்ற அறிவியல் பார்வை ஏற்புடையதாக உள்ளது.

இம்மாடக்கோயில்களை உருவாக்கிய கோச்செங்கணானை நாயன்மார்களுள் ஒருவராக்கிச் சைவம் கொண்டாட, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மங்கையாழ்வாரோ நறையூர்ப் பாசுரப் பாடல்கள் அனைத்திலும் அவரைப் பல்வேறு சிறப்புச் சொற்களால் போற்றி மகிழ்ந்துள்ளார். கட்டுமானங்களுக்காகப் பாடலடிகளில் இப்படி இரு சமயப் பெரியவர்களின் போற்றல் பெற்ற ஒரே தமிழ் மன்னர் கோச்செங்கணான்தான்.

வழக்கமான, இயல்பான முறைகளிலிருந்து மாறுபட்டுப் புதிய கோணங்களை நோக்கிப் பயணிப்பது புரட்சி என்றால், கோச்செங்கணானின் மாடக்கோயில்களும் கலையுலகப் புரட்சிதான். தமிழ் மண்ணில் இது போல் தங்கள் கட்டுமான அமைப்புகளால் புதிய கண்ணோட்டங்களுக்கான வாயில்களைத் திறந்த முதலாம் மகேந்திரர், இராஜசிம்மப் பல்லவர், முதல் இராஜராஜர் என்ற புரட்சிக் கலைஞர்களின் வரிசையில் முதலடி எடுத்துவைத்தவரும் கோச்செங்கணான்தான்.

இராஜராஜர் தேவியின் தளிகளும் மகள்களும்

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் தமக்கெனத் தனி முத்திரை பதித்தவர்களில் அரசர்களைப் போலவே அரசியரும் இருந்தனர். எனினும், கண்டராதித்த சோழரின் தேவியும் உத்தமசோழரின் அன்னையுமான செம்பியன்மாதேவிக்குக் கிடைத்த வெளிச்சம் அவர்களில் பலருக்குக் கிடைக்காமலே போயிற்று. கணவர், மகன் என இருவரும் ஆட்சியில் இருந்ததும் அவர்களுக்கிடையிலும் பின்பும் ஆட்சியிலிருந்தவர்கள் மாதேவியிடம் செலுத்திய அன்புநிறை பத்திமையுமே செம்பியன்மாதேவியின் அரும்பணிகள் சிறக்கவும் தொடரவும் நிலைக்கவும் காரணிகளாயின. முதல் பராந்தகர் காலத்திலிருந்து முதல் இராஜராஜர் காலம்வரை சோழராட்சியைப் பார்த்த பெருமாட்டி அவர். அவர் போல் நெடிய வாழ்வும் பெருமிதப் புரப்பும் கிடைக்காத சூழலிலும் பெற்ற வாழ்க்கையின் சொற்ப காலத்தில் பெருமைக்குரியன செய்து இம்மண்ணின் கலைவளம் கூட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தந்திசத்திவிடங்கி.

சோழநாட்டின் பெருவேந்தராய் மிளிர்ந்த முதல் இராஜராஜரின் பட்டத்தரசியாக, உலகமாதேவி என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இப்பெருமாட்டி இரண்டு கலைக்கோயில்களை உருவாக்கியுள்ளார். இரண்டுமே பாடல் பெற்ற இரு காவிரிக்கரைக் கோயில்களில் அடங்கியுள்ளன. சுவாமிமலைக்கு அருகிலுள்ள வலஞ்சுழித் தளி, பெருவளாகமாய் விரிந்த பெருங்கோயில். அதன் முதலிரு கோபுரங்களுக்கு இடைப்பட்ட பெருவெளியில் தென்புறத்தே இலங்கும் ஒருதள விமானமும் முகமண்டபமும் பெற்ற சேத்திரபாலர் கோயில் தந்திசத்திவிடங்கியால் இராஜராஜரின் 6ஆம் ஆட்சியாண்டில் எழுப்பப்பட்டது. அப்பர் கயிலாயக் காட்சி பெற்ற திருவையாற்று ஐயாறப்பர் கோயிலுள் வடபுறத்தே விளங்கும் உலகமாதேவீசுவரமான வடகயிலாயம் இவ்வம்மையால் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டிற்குச் சற்று முன்பாக வடிவம் பெற்றது. இரண்டு கோயில்களுமே எழிலார்ந்த சிற்பங்களாலும் வளமான கல்வெட்டுகளாலும் நிறைந்துள்ளன.

வலஞ்சுழி சேத்திரபாலர் கோயில்

பல திருக்கோலங்களில் பல்வேறு திருப்பெயர்களுடன் விளங்கும் சிவபெருமானுக்கு ஆடையற்ற கோலங்களாய் அமைந்தவை மிகச் சிலவே. அவற்றுள் மிகப் பழைமையானது அவர் பிச்சையேற்கும் கோலம். நாயை ஊர்தியாகக் கொண்ட பைரவ வடிவம் அவரது மற்றோர் ஆடையற்ற கோலமாகும். இவ்விரண்டு கோலங்களிலும் முற்சோழர் சிற்பங்கள் பலவாய்க் கிடைத்துள்ளன. மூன்றாவதும் சிறப்புக்குரியதுமான வடிவமாக அமைந்த சேத்ரபாலரைத் தமிழ்நாட்டில் செழிக்கச் செய்தவர் தந்திசத்திவிடங்கி.

உத்தமசோழரின் ஆட்சிக்காலத்தில் உலகமாதேவியால் வலஞ்சுழிக் கோயிலில் உள்ளடக்கத் திருமேனியாய் அமைக்கப்பெற்ற சேத்ரபாலர், இராஜராஜர் ஆட்சிக் காலத்தே தனித் திருமுன் பெற்றுக் கற்றளித் தெய்வமாய் இடம்பெயர்ந்தமையைக் கல்வெட்டுகள் பெருமையோடு புகல்கின்றன. சேத்ரபாலர் என்றால், ‘ஊர்க்காவலர்’ என்று பொருள். ‘தாம் இருக்கும் இடத்தைக் காப்பவர்’ என்று இவரை ஆகமங்கள் அடையாளப்படுத்துகின்றன. வலஞ்சுழிக் கோயிலுக்குள் தென்கிழக்கில் மேற்குப் பார்வையாக அமைந்த இத்திருமுன்னே தமிழ்நாட்டில் சேத்ரபாலருக்காக எடுக்கப்பட்ட முதல் தனித் திருக்கோயிலாகும்.

வலஞ்சுழி சேத்திரபாலர்

தமிழ்நாட்டில் காணப்பெறும் மிகச் சிலவான இந்த ஊர்க்காவலர் சிற்பங்களில் தலையாயது உலகமாதேவியால் உருவாக்கப்பட்டது. எட்டுக் கைகளுடன் சுடர்முடி அழகராய் விளங்கும் வலஞ்சுழி ஊர்க்காவலரின் தலையில், இடுப்பில், திருவடியில் பாம்புகள். காவலுக்குரிய கருவிகள் கைகளில் இலங்கக் கோரைப்பற்களுடன் நெடிய திருமேனியராய் விளைந்த இந்தக் காவலருக்குப் பூசைக்கும் அழகூட்டலுக்கும் என உலகமாதேவியும் சோழப் பெருங்குடும்பமும் வாரி வழங்கிய கொடைகள் கல்வெட்டுகளாய் இந்தத் திருமுன் சுவர்களை நிறைத்துள்ளன. இராஜராஜப் பெருவேந்தர் தஞ்சாவூரில் எழுப்பிய இராஜராஜீசுவரத்தின் கொடையாளர் பட்டியலில்கூட இடம்பெறாத அவரது மூன்று திருமகள்களுள் குந்தவையும் நடுவிற் பெண்ணான மாதேவடிகளும் சேத்ரபாலருக்குத் தங்கம் தந்து மகிழ்ந்துள்ளனர். உலகமாதேவியின் வலஞ்சுழி அறிமுகம் சேத்ரபாலர் வழிபாட்டைச் சோழநாட்டில் செழிக்க வைத்தது.

உலகமாதேவீசுவரம், திருவையாறு

ஐயாற்று உலகமாதேவீசுவரம் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டிற்குச் சற்று முன்பாக உலகமாதேவியால் கற்றளியாய் எழுப்பப்பெற்றது. வலஞ்சுழி சேத்ரபாலர் போலவே இங்கும் சோழக் கொடைகள் கல்வெட்டுகளாய்க் கற்சுவர்களை நிறைத்துக் கண்சிமிட்டுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் முதல் இராஜராஜரின் மூன்றாம் மகள் அருமொழி சந்திரமல்லியான கங்கமாதேவியை வெளிச்சப்படுத்துகிறது. வலஞ்சுழி சேத்ரபாலருக்கு விருப்போடு பொன்னையும் நகைகளையும் அள்ளி வழங்கிய குந்தவை நங்கையை உலகமாதேவீசுவரம் கல்வெட்டுகளில் காணமுடியாதபோதும் மாதேவடிகள் வலஞ்சுழிக்கு அளித்தாற் போலவே இங்கும் கொடையாளியாய் ஒளிர்கிறார்.

உலகமாதேவீசுவரத்திற்கு அளிக்கப்பட்ட கொடைகளுள் குறிப்பிடத்தக்கது பாவைக்- கண்ணாடி. இதை, ‘செம்பின் மேல் பொன் அடுக்கிய பாவைக்கண்ணாடியில் ஆடுகிற பாவை ஒன்று, மத்தளம் கொட்டுகிற பாவை ஒன்று, உடுக்கை வாசிக்கிற பாவை ஒன்று, பாடுகிற பாவை ஒன்று, பீடம் ஒன்று உட்படக் காண்ணடி ஒன்று’ என விரித்துப் போற்றும் கல்வெட்டு, அந்நாளைய ஆடலுக்குத் தோல்கருவிகளே பேரிசைக் கருவிகளாய் விளங்கியமை சுட்டுவதுடன், சோழர் கைத்திறம், கலைத்திறம் இவற்றிற்கும் சான்றாய் நிற்கிறது.

வலஞ்சுழி சேத்ரபாலரை உருவாக்கிய சிற்பியின் பெயர் பதிவாகவில்லை என்றாலும், உலகமாதேவீசுவரச் சிற்பியை முதல் இராஜேந்திரரின் கல்வெட்டு அடையாளப்படுத்துகிறது. எழிலார்ந்த சிற்பங்களுடன் உருவான இக்கற்றளியை வடிவமைத்த செம்பியன்மாதேவிப் பெருந்தட்டாரின் உளித்திறம் போற்றித் தட்டாரக்காணியாக நிலம் வழங்கிப் பெருமைப்படுத்திய தந்திசத்திவிடங்கி இராஜராஜருக்குப் பிறகும் பெருமையுடன் வாழ்ந்திருந்தமை இங்குள்ள இராஜேந்திரர் கல்வெட்டுகளால் வெளிச்சமாகிறது.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயில்களிலும் கொடையாளிகளாய்த் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யாத இராஜராஜரின் மகள்கள் மூவரும் உலகமாதேவியின் திருப்பணிகளில் மட்டும் பங்கேற்றுள்ளமை அவர்களை அவ்வம்மையின் அன்புக்குரிய புதல்விகளாய் அடையாளப்படுத்துகிறது. இம்மூவருள் குந்தவை மட்டுமே விமலாதித்தரின் தேவியாய் அறிமுகமாகிறார். பிற இருவரும் இராஜராஜரின் திருமகள்களாக மட்டுமே கல்வெட்டுகளில் காட்டப்பெறுகின்றனர்.

வரலாற்றின் பாதை விசித்திரமானது. ‘நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்’ என்ற இராஜராஜரின் பெருமைக்குரிய தொடரில் அவர் திருமகள்கள் அடைக்கலமாகாமைக்கு எது காரணமோ அதுவே தந்திசத்திவிடங்கி போன்ற படைப்பாளிகளையும் மேகமாய் மறைத்து வேடிக்கை காட்டுகிறது.