புரட்சிக் கலைஞர் கோச்செங்கணான்

இரா. கலைக்கோவன்

‘பொதுவான இல்லம்’ எனும் பொருளில் அமைந்த பொதியில் என்ற சொல் சங்ககால இறையகங்களைக் குறிக்கும். எழுதணி கடவுளுடன் பொதியில், கந்துடைப் பொதியில், மண்டகப் பொதியில் முதலிய சங்க இலக்கியச் சொல்வழக்குகளும், ‘இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென’, ‘மரஞ்சோர் மாடம்’ எனும் சங்கத் தொடர்களும் அந்த இறையகங்களின் கட்டுமான அமைப்பைக் கண்முன் நிறுத்துகின்றன. நகர் என்றும் அழைக்கப்பட்ட அவற்றின் காலநிரலான அமைப்பு மாற்றங்களையும் அதற்கேற்ப உருவான பெயர்களையும் கோட்டம், கோயில் உள்ளிட்ட சிலப்பதிகாரச் சொல்வழக்குகளால் அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் இடம்பெறாத இறையகச் சொல்வழக்கொன்றைப் பத்திமை இலக்கியங்கள் முன்வைக்கின்றன. ‘மாடக்கோயில்’ என்ற அந்தச் சொல்லைக் கோச்செங்கணான் என்ற சோழவேந்தருடன் இணைத்துப் பேசும் பாங்கை மங்கையாழ்வாரின் திருநறையூர்ப் பாசுரத்திலும் ஞானசம்பந்தரின் வைகல் பதிகத்திலும் காணமுடிகிறது. அதைப் பெருங்கோயில் என்றும் அறிமுகப்படுத்துவார் சம்பந்தர். இத்தகு கோயில்கள் எழுபது இருந்ததாகவும் அவற்றைக் கட்டமைத்தவர் திருக்குலத்து வளச்சோழரான கோச்செங்கணானே என்றும் மங்கையாழ்வார் உறுதிபடப் பாடியுள்ளார். தம் காலத்தே தமிழ்நாட்டிலிருந்த கோயில் கட்டமைப்பு வகைகளைச் சுட்டுமிடத்து அவற்றைப் பெயரளவில் மட்டுமே குறிப்பிடும் அப்பர் பெருமான் அவற்றுள் ஒன்றான பெருங்கோயிலை மட்டும் எழுபத்தெட்டு என்று எண்ணிக்கையுடன் சொல்வார்.

குடவாயில்

கோச்செங்கணான் எனும் சோழஅரசரின் பெருவீரம் மங்கையாழ்வாரின் திருநறையூர்ப் பாசுரத்தில் பலபடப் பேசப்பட்டுள்ளது. வெண்ணியில் விறல் மன்னரையும் விளந்தையில் அதன் வேளையும் அழுந்தையில் படை மன்னர்களையும் போரில் வெற்றிகண்டு உலகமாண்ட தென்னாடராகக் கோச்செங்கணானைப் பாடிப் பரவுகிறார் மங்கையாழ்வார். இம்மன்னன் மீது பொய்கையாழ்வாரால் பாடப்பெற்ற களவழிநாற்பது எனும் கீழ்க்கணக்கு நூலொன்றும் மன்னரின் வீரம், அவருக்கும் சேர அரசர் ஒருவருக்கும் நிகழ்ந்த போர், அப்போரில் சேரஅரசர் உயிரிழந்தமை முதலிய பல வரலாற்றுத் தரவுகளை முன்வைக்கிறது.

சோழர் காலச் செப்பேடுகள் சிலவற்றில் சோழர் மரபுவழி கூறுமிடத்துச் சுட்டப்படும் இக்கோச்செங்கணானின் காலம் குறித்துப் பல கருத்துகள் முன்வைக்கப் பட்டாலும் நெடிய ஆய்வுகளுக்குப் பின் டாக்டர் மா. இராசமாணிக்கனார் செங்கணான் காலத்தைப் பொதுக்காலம் 5ஆம் நூற்றாண்டாகச் சுட்டியுள்ளமை பொருந்துவதாகவே உள்ளது.

பெருவேளூர்

சைவம், வைணவம் எனும் இருவேறு சமயஞ்சார் இலக்கியச் சான்றுகளால் கோச்செங்கணானோடு தொடர்புபடுத்தப்படும் மாடக்கோயில்கள் கட்டமைப்பில் புதியவை. அதனாலேயே, எத்தனையோ கோயில்களைப் பாடியுள்ள தேவார மூவரில் இருவரும் மங்கையாழ்வாரும் மாடக்கோயில்களைப் பாடுமிடத்து அவற்றை எழுப்பியவரையும் மறவாது அடையாளப்படுத்தியுள்ளனர். அதுநாள்வரை இருந்த கட்டமைப்புகளிலிருந்து மாடக்கோயில் மாறுபட்டு அமைந்ததாலேயே அதற்குப் புதிய பெயரும் கிடைத்தது. அதைக் கட்டியவருக்குப் பாடல் புகழும் அமைந்தது.

தமிழ்நாட்டில் இன்றும் பார்வைக்குக் கிடைக்கும் இம்மாடக்கோயில்களில் பெரும்பாலன நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலேயே அமைந்துள்ளன. அவற்றைக் கண்டறிந்து விரிவான அளவில் ஆய்வுசெய்து, ‘மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள்’ என்றொரு நூலையும் வெளியிட்டுள்ள டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்ற இறையகமே மாடக்கோயில் என்று வரையறை செய்துள்ளனர்.

தலைஞாயிறு

தளம் என்பது கட்டுமானஞ் சார்ந்த கலைச்சொல். இது தாங்குதளம், சுவர், கூரை எனும் மூன்று உறுப்புகள் கொண்ட அமைப்பாகும். இத்தளம் ஒரு மேடை போல, உள்ளீடின்றி அமையும்போது வெற்றுத்தளமாகிறது. இறையகங்கள் பொதுவாக நிலத்திலோ, பாறை அல்லது குன்றுகளின் மீதோ அமையுமாறு போல, மாடக்கோயில்கள் மூன்று உறுப்புகள் பெற்ற வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்றன. இந்த வெற்றுத்தளமே பிற கோயில் வகைகளிலிருந்து மாடக்கோயிலை வேறுபடுத்தி அதைப் பெருங்கோயிலாகவும் வடிவமைத்தது. வெற்றுத்தளத்தின் உயரமும் கட்டமைப்புத் திறனும் கோயிலுக்குக் கோயில் மாறுபட்டாலும், அதன் மீதிருக்கும் இறையகத்தை அடைய அனைத்து மாடக்கோயில்களும் படிவரிசை பெற்றுள்ளன. இப்படிவரிசையின் அமைப்பு, உயரம், படிகளின் எண்ணிக்கை என அனைத்துமே இடத்திற்கு இடம் மாறுபட்டுள்ளன.

பெரியஸ்ரீகோயில் என்றழைக்கப்படும் சிராப்பள்ளி மாவட்டத் திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர் கோயில் ஒரே திசையில் இரு படிவரிசைகள் பெற்ற மாடக்கோயிலாகும். அதன் வெற்றுத்தளக் கீழ்ப்பகுதியில் பிற்பல்லவர் காலச் சிற்பங்கள் தொடராக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பு. அது போலவே திருப்பேர்நகரிலுள்ள அப்பக்குடத்தான் மாடக்கோயிலும் முன்புறமொன்றும் பின்புறமொன்றுமாய் இரண்டு படிவரிசைகள் கொண்டுள்ளது. பாபநாசத்திற்கு அருகிலுள்ள திருநல்லூர் மணவழகர் மாடக்கோயிலின் இறையகமும் அதன் மேற்றளமும் இன்றும் பல்லவச் சுவடுகளுடன் மின்னுகின்றன. திருப்பணிகளுக்கு ஆட்பட்டுத் தண்டலைநீள்நெறி போன்ற சில மாடக்கோயில்கள் உருமாறியிருந்தாலும், சில கால வெள்ளத்தில் கரைந்துபோயிருந்தாலும் கோச்செங்கணான் பெயர் சொல்ல நாம் அறிந்தவரையில் 37 கோயில்கள் எஞ்சியுள்ளன.

ஆலம்பாக்கம்

இயல்பான இறையகங்களுக்கு மாற்றாக ஏன் இந்த வெற்றுத்தள மாடக்கோயில்கள் என்ற கேள்விக்கு விடைகாண முயன்றவர்கள் தொன்மங்களையும் பலவாய்க் காரணங்களையும் முன்வைத்தபோதும், பெருமழைக்கால வெள்ளப் பெருக்கில் அக்கால இறையகங்கள் கரைந்து மறைந்தமை கண்ட சூழலில், அந்நிலையிலிருந்து கட்டுமானங்களைக் காப்பதற்காகவே ஒரு தடுப்புச்சுவர் போல கோச்செங்கணான் காலக் கட்டுமான அறிஞர்களால் இந்த வெற்றுத்தள அமைப்பு உருவாக்கப்பட்டது என்ற அறிவியல் பார்வை ஏற்புடையதாக உள்ளது.

இம்மாடக்கோயில்களை உருவாக்கிய கோச்செங்கணானை நாயன்மார்களுள் ஒருவராக்கிச் சைவம் கொண்டாட, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மங்கையாழ்வாரோ நறையூர்ப் பாசுரப் பாடல்கள் அனைத்திலும் அவரைப் பல்வேறு சிறப்புச் சொற்களால் போற்றி மகிழ்ந்துள்ளார். கட்டுமானங்களுக்காகப் பாடலடிகளில் இப்படி இரு சமயப் பெரியவர்களின் போற்றல் பெற்ற ஒரே தமிழ் மன்னர் கோச்செங்கணான்தான்.

வழக்கமான, இயல்பான முறைகளிலிருந்து மாறுபட்டுப் புதிய கோணங்களை நோக்கிப் பயணிப்பது புரட்சி என்றால், கோச்செங்கணானின் மாடக்கோயில்களும் கலையுலகப் புரட்சிதான். தமிழ் மண்ணில் இது போல் தங்கள் கட்டுமான அமைப்புகளால் புதிய கண்ணோட்டங்களுக்கான வாயில்களைத் திறந்த முதலாம் மகேந்திரர், இராஜசிம்மப் பல்லவர், முதல் இராஜராஜர் என்ற புரட்சிக் கலைஞர்களின் வரிசையில் முதலடி எடுத்துவைத்தவரும் கோச்செங்கணான்தான்.

இராவணப் பதிவுகள்

இரா. கலைக்கோவன்

இராமாயணத்தின் தலைநாயகர்களுள் இராவணனும் ஒருவர். தமிழிலக்கிய வரலாற்றில் இராவணனை முதன்முதலாக அடையாளப்படுத்துவது கலித்தொகையே. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக அறியப்பட்டாலும் காலத்தால் அதுவும் பரிபாடலும் பிற்பட்டவை என்பது அறிஞர் முடிபு. கலித்தொகை சுட்டும் மிகச் சிலவான சிவக்கோலங்களில், இராவணன் கயிலையை அகற்ற முயன்றபோது அம்மலையில் உமையுடன் இருந்த சிவபெருமானின் திருவடிவமும் ஒன்றாகும். இராவணன் யார், அவர் ஏன் கயிலைமலையை அகற்ற முயன்றார், அம்முயற்சியின் விளைவுகள் எப்படியிருந்தன என்ற கேள்விகளுக்கெல்லாம் கலித்தொகையில் விடையில்லை. தேவாரமூவரில் காலத்தால் மூத்த அப்பர் பெருமானும் சம்பந்தருமே தங்கள் பதிகங்களில் இவ்வினாக்களுக்கான விரிவான விளக்கங்களைத் தருகின்றனர். என்றாலும், சம்பந்தரினும் அப்பர் பெருந்தகையே கயிலை அசைத்த இராவண வாழ்க்கையைப் படக்காட்சிகளெனப் புலப்படுத்தி மகிழ்கிறார்.

அப்பரின் பதிக இராவணன்

கடலால் சூழப்பெற்ற தென்னிலங்கை வேந்தர், பெருவீரர், குபேரனை வென்று புட்பகம் பெற்றவர் என்றெல்லாம் இராவணனைப் பெருமைப்படுத்தும் அப்பர், ‘அரக்கன்’ என்ற அடையாளத்தையும் முத்திரையாகப் பொறிக்கத் தவறவில்லை. அப்பரின் திருமுறைகளை அடியொற்றிப் பின்பற்றினால் இராவணன் கதையை பெருமளவிற்கு அறியமுடியும்.

தன் தேரில் உலாவந்த இராவணனின் வழியில் கயிலைமலை குறுக்கிட்டது. ‘கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது’ என்று தேர்ப்பாகன் கூற, அது கேளாது இராவணன் வீரமொழி பேசிப் பாகனை முடுக்க, தேர் கயிலை நெருங்கி நின்றது. வழித்தடையாகும் அம்மலையைப் பெயர்த்து அகற்றக் கருதித் தேரிலிருந்து இறங்கிய இராவணன், தம் இருபது கைகளாலும் மலையைப் பற்றி அசைத்தார். மலை அசைவதும் ஆடுவதும் உணர்ந்த கயிலை வாழ் முனிவர்களும் இறைவனின் பூதப்படையும் நடுக்குற, உமையும் அஞ்சியது கண்ட சிவபெருமான் தம் கால்விரலை அழுத்தி ஊன்றினார்.

இராவணனின் துன்பம்

கைகளாலும் தோள்களாலும் கயிலைமலையைத் தூக்க முயன்ற இராவணன் சிவபெருமான் தந்த அழுத்தம் தாங்காது, கைகளும் தோள்களும் தலைகளும் நசுக்குறக் கண்களில் குருதி கசிய அலறித் துவண்டார். இராவணனின் இந்தத் துன்பநிலையை அப்பர் போலவே சம்பந்தரும் பலபட விரித்துரைக்கிறார். ‘அலறித் துடித்தான், வாய்விட்டு அலறினான், மிகக் கடுத்து அலறி வீழ்ந்தான், இறையருள் கேட்டு மன்றாடினான்’ என்றெல்லாம் இராவணன் துன்பம் காட்டும் பாடலடிகள், இறைவனிடம் அவன் மன்றாடியதையும் சொல்கின்றன.

இராவணன் என்ற பெயர்

நரம்பையே வீணையிழையாக்கிய இராவணன், முக்தேசுவரம்

இழைத்த தவறுக்கு வருந்தி அழுத இராவணனைப் பொறுத்தருளும் முன், அவர் இசைவளம் கேட்க இறைவன் உளம் கொண்டார். அதை அறிந்தவராய் இறைவனைப் பாடிப் பரவிய இராவணன் தம் கை நரம்புகளையே வீணை இழைகளாகக் கொண்டு இருக்கிசைப் பாடல்களும் வேதகீதங்களும் இசைத்ததாகவும் இராவணனின் பண்திறம் கேட்டுகந்த இறைவன், அதுவரை வாளரக்கன் என்றே அறியப்பட்டிருந்த அவருக்கு இராவணன் என்ற பெயரைத் தந்ததுடன் நெடிது வாழும் சிறப்பையும் தம் கொற்றவாளையும் தந்து வாழ்த்தியனுப்பியதாகவும் அப்பரின் பதிகப் பாடல்கள் தெளிவுறத் தெரிவிக்கின்றன.

பல்லவ இராவணச் சிற்பங்கள்

மலை அசைத்த இராவணன், முக்தேசுவரம்

கலித்தொகை ஐந்து அடிகளில் குறிப்பாய்ச் சுட்டும் இராவணத் தொன்மம் பதிகக் காலத்தில் பலபட விரிந்து பாடலடிகளாய் மலர்ந்து பொதுக்காலம் எட்டாம் நூற்றாண்டில் சிற்பக்காட்சிகளாய்த் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள் நுழைந்தது. பல்லவர் பகுதியான தொண்டைநாட்டில் இத்தொன்மத்தை மக்கள் பார்வைக்குக் காட்சியாக்கிய பெருமைக்குரியவர் இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மப் பல்லவர். அவர் உருவாக்கிய கற்றளிகளில் முக, அகமண்டபக் காட்சியாகவோ, சுவர்க் கோட்டப் படப்பிடிப்பாகவோ இராவணன் கயிலையை அசைக்கும் முயற்சி பேரளவுச் சிற்பமாகப் பொலிந்தது. அப்பர் பதிகங்களின் விளக்கம் போலவே அமைந்த அவற்றில், சிவபெருமான் உமை இணையுடன், மலைவாழ் பூதங்கள், அடியவர்களின் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. மலையின் முன் ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில் மலையசைக்கும் முயற்சியுடன் இராவணனைக் காணமுடிகிறது. காஞ்சிபுரம் முக்தேசுவரத்தில் மட்டும் முகமண்டபத் தென்சுவரில் இராவணன் மலையசைப்பதும் வடசுவரில் அவர் கைநரம்புகளை மீட்டிப் பண்திறல் காட்டுவதும் படமாகியுள்ளன.

பரங்குன்றத்து இராவணத் தொடர்

ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில் பாண்டியர் பகுதியிலும் இராவணத் தொன்மம் முத்திரை பதித்தது. மதுரைக்கு அருகிலுள்ள பரங்குன்றத்தின் வடக்கு வளாகத்தில், குன்றின் இடைப்பகுதியில், அன்னபூரணித் திருமுன்னின் வலப்புறம் ‘இருட்டுக்கொட்டகை’ என்றழைக்கப்படும் பாறைப்பகுதி உள்ளது. மேற்றளக் கருவறைகள், முருகன், பிள்ளையார் திருமுன்களின் திருமஞ்சண நீர் வெளியேறும் வழியாக உள்ள இந்தக் கொட்டகையின் உட்புறத்தேதான் குன்றின் சரிவுப்பகுதியில் இராவண வரலாறு தொடர்கதை போலக் கிழக்கிலிருந்து மேற்காகச் சிற்பப் பொளிவுகளின் துணையுடன் சொல்லப்பட்டுள்ளது.

அலறும் இராவணன், பரங்குன்றம்

பின்னாளில் நேர்ந்த கட்டமைப்பு மாற்றங்களால் எழிலார்ந்த இந்தச் சிற்பத்தொடர் பல நிலைகளில் மறைக்கப்பட்டிருந்தாலும், இறைவன் கால்விரல் அழுத்தத்தால் மலையின் கீழ் நசுக்குண்டு இராவணன் வாய்விட்டு அலறும் காட்சி, பாண்டியர் கைநேர்த்தியில், அப்பர் பாடலடிகளை அப்படியே கண் முன் நிறுத்துகிறது. இராவணனின் வலப்புறத்தும் இடப்புறத்தும் அவனை எதிர்க்கும் பேரளவிலான கயிலைப் பூதங்கள். தமிழ்நாட்டின் வேறெந்தப்பகுதியிலும் இராவணத்தொன்மத்தில் இத்தகு வீரப்பூதங்களைக் காணக்கூடவில்லை. உருள்பெருந்தடி, கேடயம், ஈட்டி, வில், அம்பு, கல் என அக்காலத்திய அனைத்துவிதமான போர்க்கருவிகளையும் ஏந்திப் பெருவீரத்துடன் இராவணனைக் குறிபார்க்கும் பரங்குன்றப் பூதங்கள் பேரெழிலின.

தேரும் வாளும்

தேரில் இராவணன், பரங்குன்றம்

இறைவனைத் தம் இசையால் மகிழ்வித்த இராவணனுக்கு வாளும் வாழ்நாளும் பெயரும் அளித்துகந்த இறைவனை இங்குக் காணமுடியவில்லை என்றாலும், இறையருள் பெற்ற இராவணன் தேரில் செல்லும் காட்சி தென்முகப் பாறையில் ஒளிர்கிறது. இடக்கையை மார்பருகே கொண்டு வலக்கையால் இறைவனைப் போற்றியவாறே செல்லும் இராவணனின் தேருக்குள் இறைவனளித்த கொற்ற வாளையும் மறக்காமல் காட்டியிருக்கிறார் பாண்டியச் சிற்பி. இராவணனுக்கு இந்தத் தேரையும் இறைவனே அளித்ததாக சம்பந்தரின் பதிகம் ஒன்று கண்சிமிட்டுகிறது.

சோழப் பதிவு

சோழர் பதிவு, திருப்பூந்துருத்தி

பத்திமைக் காலத்திற்குப் பின் வந்த ஆகமங்கள் இந்தத் தொன்மத்தைச் சில பல வேறுபாடுகளுடன் பதிவுசெய்து, இராவணனுக்கு அருளியவராய் சிவபெருமானைப் போற்றுகின்றன. பல்லவ, பாண்டியர்களைத் தொடர்ந்த சோழர்களும் இந்தத் தொன்மத்தைக் கைவிடவில்லை. பேரளவுச் சிற்பங்களாய் இல்லாவிடினும் சிற்றுருவச் சிற்பங்களாய் இராவண அருளராய் சிவபெருமான் சோழர்களால் தொடர்ந்து அடையாளப்பட்டார்.

சோழர் பதிவுகளில் சற்றே மாறுபட்ட இராவண அருள் மூர்த்தி வடிவத்தைத் திருப்பூந்துருத்திக் கோபுரத்தில் காணமுடிகிறது. இங்கு இராவணனை விரட்டப் புதிய முயற்சியொன்றில் பூதமொன்று ஈடுபட்டதைக் காட்டியுள்ளனர். இந்தியாவின் வடபகுதிகளில் காணப்படும் பெரும்பாலான இராவண அருள்மூர்த்தி சிற்பங்களில் பூதங்கள் இரண்டு இராவணனின் இருபுறத்தும் குனிந்து நின்று தம் வயிற்றுக்காற்றைப் பின்வழி வெளியேற்றி அவனைத் திக்குமுக்காடச் செய்வதைக் காணமுடிகிறது. பூந்துருத்திச் சிற்பத்தொகுதியின் மேற்பகுதியிலோ இராவணனுக்காய்த் திரும்பி நிற்கும் பூதமொன்று காற்றுக்குப் பதில் வயிற்றுக் கழிவை வெளித்தள்ளித் தன் வெறுப்பையும் சினத்தையும் புலப்படுத்துகிறது.

கலித்தொகைத் தொன்மம் ஒன்று பத்திமைக் காலத்தில் பதிக வாழ்க்கை பெற்றுப் பேரரசுக் காலங்களில் சிற்பங்களாகப் பதிவாகி, சிவபெருமானின் அருள்பெற்ற தென்னிலங்கை இராவணனை மக்கள் உள்ளங்களில் நிலைபேறு கொள்ளச் செய்துள்ளமை கலையும் இலக்கியமும் கையிணைக்கும்போது நிகழும் பேரதிசயங்களுள் ஒன்றெனலாம்.