திருமடத்துக் குடைவரைகள்

இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டில் பழம் பெருமையுடன் விளங்கும் திருமடங்கள் பல உள்ளன. சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், சமணம் எனப் பல்வேறு சமயங்களைச் சார்ந்துள்ள அவற்றுள், குடைவரைக் கோயில்களைத் தங்கள் ஆளுகையின் கீழ்க் கொண்டுள்ள திருமடமாய்த் திகழ்வது திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடம்தான். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இலங்கும் இத்திருமடத்தின் கீழ்க் குன்றக்குடியில் மூன்றும் கோளக்குடியில் ஒன்றும் பிரான்மலையில் ஒன்றும் அரளிப்பட்டியில் ஒன்றுமாய் ஆறு குடைவரைகள் உள்ளன. இவை ஆறுமே தமிழ்நாட்டுக் குடைவரைக் கலைவரலாற்றில் தனிச்சிறப்புடன் பொலிபவை.

குடைவரை

மலையிலோ, குன்றிலோ, பாறையிலோ முன்னிருந்து பின்னாகக் குடைந்து உருவாக்கப்படும் கோயில்களே குடைவரைகள். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான குடைவரைகள் பாறை அல்லது சிறு குன்றுகளின் கீழ்ப்பகுதியில் அமைய, சிலவே பெரிய குன்றின் அல்லது மலைச்சரிவின் இடைப்பகுதியில் உள்ளன. 

குன்றக்குடிக் குடைவரைகள்

மகுடமற்ற பிள்ளையார்

குன்றக்குடித் திருமடத்தின் கீழுள்ள ஆறு குடைவரைகளில் குன்றக்குடியிலுள்ள மூன்றும் அங்குள்ள குன்றின் கீழ்ப்பகுதியில் அடுத்தடுத்துக் குடையப்பட்டுள்ளன. குடைவுகளுக்கு இடைப்பட்ட பாறைச்சரிவுகளில் இலிங்கத் திருமேனி, பிள்ளையார். மகுடமற்ற தலையுடன் விளங்கும் இப்பிள்ளையார் தனித்தன்மையர். மூன்று குடைவரைகளிலுமே கருவறையில் தாய்ப்பாறையில் உருவான இலிங்கத்திருமேனி.

முதலிரு குடைவரைகள்

விஷ்ணுவும் கருடனும்

குடைவரைக் காலச் சிற்பங்கள் ஏதுமற்ற முதல் குடைவரையில் இலிங்கத்தின் கோமுகத்தைக் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ள பூதம் தலையால் தாங்குகிறது. மசிலீச்சுரம் என்று கல்வெட்டுக் குறிக்கும் இரண்டாம் குடைவரை, முகப்பின் பக்கச்சுவர்களில் சிவபெருமானின் கருவிகளான மழுவையும் முத்தலை ஈட்டியையும் அடையாளப்படுத்துமாறு, அவற்றை மகுடத்திலும் தோள்களின் பின்னிருக்குமாறும் கொண்ட காவலர் இருவர் சிற்பங்களையும் மேற்குச்சுவர்க் கோட்டத்தில் விஷ்ணுவும் கருடனும் தோழமையுடன் நிற்கும் சிற்பக் காட்சியையும் கொண்டுள்ளது. கருடன் மனிதவடிவில் காட்டப்பட்டுள்ளார். தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் இதுபோல் மழுவடியாராகவும் சூலத்தேவராகவும் காவலர்களைக் காண்பது அரிதானது. 

சூலத்தேவர்

மூன்றாம் குடைவரை

மூன்றாம் குடைவரையின் முப்பக்கச் சுவர்களும் பேருருவச் சிற்பங்களால் நிறைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது இரண்டு கால்களையும் குறுக்கீடு செய்து எட்டுத் திருக்கைகளுடன் சிவபெருமான் ஆடும் அர்த்தஸ்வஸ்திகக் கரணம். செவல்பட்டிக் குடைவரையிலும் இக்கரணக் காட்சி இடம்பெற்றிருந்தாலும் இங்கு இசைக்கலைஞர்களும் உடனிருப்பது கூடுதல் சிறப்பு. 

கோளக்குடிக் குடைவரை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோளக்குடிக் குடைவரை அவ்வூர்க் குன்றின் நடுப்பகுதியில் உள்ளது. காலப்போக்கில் மலையின் அடிவாரத்திலும் இடைப்பகுதியிலும் மலைமேலும் எனப் பல கற்றளிகள் பெற்றுப் பெருவளாகமாக மாறியுள்ள கோளக்குடிக் குடைவரையின் மண்டபச் சுவர்களில் இருபுறத்தும் மலரேந்திய முனிவர்களின் சிற்பங்கள். அகத்தியர், புலத்தியர் என்று கோயிலாரால் அழைக்கப்படும் இத்தகு அருளாளர் சிற்பங்களைப் புதுக்கோட்டை மாவட்டத் தேவர்மலைக் குடைவரையிலும் காணமுடிகிறது. கோளக்குடியின் சிறப்புகளாகக் கருவறை வாயில் மேலுள்ள மகரதோரணத்தையும் குன்றின் ஒருபகுதியில் வெட்டப்பட்டுள்ள எழுவர் அன்னையர் சிற்பத்தொகுதியையும் சுட்டலாம்.

எழுவர் அன்னையர்

தமிழ்நாட்டின் தென்பகுதியில் மட்டுமே காணக்கிடைக்கும் குடைவரைக் கால எழுவர் அன்னையர் தொகுதிகளில், இங்கு மட்டுமே அன்னையருள் ஒருவரான சாமுண்டி, இயமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு, அவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர், அழகில் சிறந்தவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகள் கீழிறங்கிப் பிணக்குண்டலங்களுடன் தோள்களை வருட, கொண்டையின் முகப்பில் மண்டையோடு. மூன்று தலைகளைச் சுற்றியும் பெரிய ருத்திராக்கங்களாலான தலைமாலை அணிந்து, வலக்கையில் சுரைக்குடுவையுடன் இங்குள்ள நான்முகியின் சிற்பமும் தனித்தன்மையதே. குன்றக்குடி போலவே கோளக்குடியிலும் தாய்ப்பாறைப் பிள்ளையார் மலையின் தென்சரிவில் செதுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை வளாகம் கோளக்குடிதான். 

சாமுண்டி

பிரான்மலைக் குடைவரை

வள்ளல் பாரியின் பறம்புமலையாக அறியப்படும் பிரான்மலையிலுள்ள திருக்கொடுங்குன்றநாதர் கோயில்வளாகத்தின் அளவில் சிறிய குடைவரை, அதன் மண்டபவாயிற் கோட்டங்களில் காவற்பெண்டுகளைக் கொண்டுள்ளது. திருமடத்துக் குடைவரைகள் ஆறனுள் பிரான்மலையில் மட்டுமே தாய்ப்பாறைச் செதுக்கலாகப் பிள்ளையார் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கருவறையில் சிவபெருமானும் உமையன்னையும் இணையாக அருகருகே அமர்ந்துள்ள அழகுக் கோலம் கண்களை நிறைப்பது. தாய்ப்பாறையில் உருவானவையா, சுதைவடிவங்களா என்றறிய முடியாதவாறு அழகூட்டல்கள் பெற்றுள்ள இவ்விரு இறைத் திருமேனிகளும் கைத்திறன் வல்ல பாண்டிநாட்டுக் கவின்கலைஞர்களின் படைப்புகளாகும். இது ஒத்த இணைக்கோலம் சிவகங்கை மாவட்டத் திருமலைக் குடைவரைக் கருவறையிலும் இடம்பெற்றிருப்பினும் பிரான்மலை இணையரின் அழகு சொற்களை மீறிய சுகம்.

அரளிப்பட்டிக் குடைவரை

பிள்ளையார் லிங்கம்

அரளிப்பட்டி மஞ்சுவிரட்டுக்குப் பெயர் பெற்றிருக்குமாறே, அரவங்கிரிக் குன்றின்கீழ்ப் பகுதியிலுள்ள எளிய குடைவரைக்காகவும் அறியப்பட்ட ஊராகும். குடைவரையின் மண்டபச் சுவர்களில் வடபுறமுள்ள இலிங்கத்திருமேனி தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாத ‘பிள்ளையார் லிங்கமாக’ ஒன்றுக்குள் ஒன்றாய் இலிங்கபாணத்தில் பிள்ளையார் செதுக்கலைப் பெற்றுள்ளது. உற்றுநோக்குவாருக்கே வடிவம் புலப்படுமாறு, தந்தைக்குள் தனையனைப் பொருத்தமாய்ப் பொளிந்திருக்கிறார்கள். இயற்கை எழில் நிரம்பிய சூழலில் அமைந்திருக்கும் இக்குடைவரையின் தாய்ப்பாறை இலிங்கம் இத்திருமடக் குடைவரைகளிலேயே அளவில் சிறியதாகும். 

திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடத்தின் ஆளுகையிலுள்ள ஆறு குடைவரைகளும் அங்குள்ள பல்வேறு தாய்ப்பாறைச் செதுக்கல்களும் பொதுக் காலம் எட்டாம் நூற்றாண்டில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. இவையனைத்துமே ஏதேனும் ஒரு விதத்தில் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் தனித்துக் குறிக்குமளவு சிறப்புப் பெற்றுள்ளமை இவற்றை உருவாக்கிய கைகளின் வளமையையும் பின்னிருந்த உள்ளங்களின் செழுமையையும் காலம் உள்ளளவும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும். இக்குடைவரைகளில், பதிவாகியிருக்கும் கல்வெட்டுகளோ பாண்டிநாட்டு வரலாற்றின் சுவையான பக்கங்களைக் கருத்தோடு தேடுவாருக்குக் கனிவோடு வழங்கி மகிழ வல்லன.

வரலாறு ஆய்விதழின் வரலாறு

1993-2021

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுமுடிவுகளையும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் 1993 ஆகஸ்டு 15ஆம் நாள் தோன்றியதே வரலாறு ஆய்விதழ். தொடக்கத்தில் அரையாண்டிதழாக ஐந்து இதழ்கள் வெளியாயின. 1996இல் ஆண்டிதழாக மாறிய வரலாறு இதுநாள்வரை 30 இதழ்களைக் கண்டுள்ளது. வரலாறு 25ஆம் தொகுதியின் வெளியீட்டு விழா 31.10.2015 அன்று வரலாறு டாட் காம் மின்னிதழ்க் குழுவினரால் சென்னையில் வெள்ளிவிழாவாக நடத்தப்பெற்றது. 25 தொகுதிகளின் வழி வரலாறு ஆய்விதழ் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளதை இதழின் தலையங்கப் பக்கம் பகிர்ந்துகொண்டது.

‘25 தொகுதிகளின் வழி வரலாறு இதழ் சாதித்திருப்பது என்ன? தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட 570 கல்வெட்டுகளை இந்த இதழ் பதிவுசெய்துள்ளது. பல கோயில்களிலிருந்து நடுவணரசால் படியெடுக்கப்பட்டுப் பாடம் வெளியாகாதிருக்கும் 408 கல்வெட்டுகளின் முழுமையான பாடங்களைப் ‘பதிப்பிக்கப்படாத பாடங்கள்’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு பதிப்பித்துள்ள கல்வெட்டுகள் சிலவற்றின் விட்டுப்போன தொடர்ச்சிகளைக் களஆய்வுகளில் கண்டறிந்து பதிவுசெய்துள்ளது. செப்பேடுகள் சிலவற்றை வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது.

ஆய்வுக்கட்டுரைகள் என்ற தலைப்பின் கீழ் இலக்கியம் சார்ந்து 17 கட்டுரைகளும் குடைவரைகள், ஒருகல் தளிகள், கற்றளிகள் ஆகியவற்றின் விரிவான ஆய்வின் வெளிப்பாடாக 85 கட்டுரைகளும் வரலாற்றின் பல்வேறு பிரிவுகள் சார்ந்து 48 கட்டுரைகளும் இந்த 25 இதழ்களில் பதிவாகியுள்ளன. பெருமைச்சுவடுகளாக இந்த மண்ணின் அறிவுவளத்தைப் பெருக்கியவர்கள் இதழ்தோறும் வெளிப்பட்டிருக்கிறார்கள். வரலாறு இதழின் வாழ்க்கைப் பயணத்தில் உள்ளத்தைத் தொட்டவர்கள், உண்டாலம்ம இவ்வுலகம் என்று நெகிழச் செய்து அதன் பக்கங்களாகியிருக்கிறார்கள். இலக்கியங்களின் சில முத்திரைப்பதிவுகள் பெட்டிச் செய்திகளாக வரலாற்றின் ஒவ்வோர் இதழையும் ஒப்பனை செய்துள்ளன. அத்யந்தகாமம், வரலாற்றின் வரலாறு, வலஞ்சுழி வாணர் எனும் மூன்று ஆய்வு நூல்கள் வரலாறு இதழின் உடன்பிறப்புகளாக முகிழ்த்துள்ளன.

ஓர் ஆய்வாளனின் பிறப்பும் வளர்ச்சியும் பற்றிய பதிவுகள் வரலாற்றிற்கும் வரும் தலைமுறை ஆய்வாளர்களுக்கும் வழிகாட்ட உதவும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்டதே திரும்பிப்பார்க்கிறோம் தொடர். ஒன்பதாண்டுகளாக ஆயிரம் பக்கங்களைக் கடந்த நிலையில் ஆய்வுவாழ்க்கையின் படப்பிடிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த அனுபவப் பதிவு, வாழ்க்கை வரலாற்றின் ஒரு புதிய முகம். ஓர் ஆய்விதழ் 25 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்து எண்ணம் கொண்டிருந்தோமோ அவற்றில் சிலவற்றையேனும் செம்மையாகச் செய்திருக்கிறோம் என்ற நிறைவோடு இந்த வெள்ளி இதழை உங்கள் கைகளில் வழங்குகிறோம்.

23 ஆண்டுகளில் 25 இதழ்கள். பாடுகளுக்கு எப்போதுமே பயன்கள் உண்டு. உடனிருந்து உழைத்தவர்களுக்கும் வரலாறு இதழின் 11ஆம் தொகுதி முதற்கொண்டு இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் நல்கை இதழுக்குக் கிடைக்குமாறு துணைநின்ற வரலாற்றறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், எம். ஜே. எஸ். நாராயணன் ஆகியோருக்கும் வரலாறு இதழ் கடப்பாடுடையது.

உண்மைகளின் பாதை துன்பமானதுதான்; தளர்ச்சி தருவதுதான். என்றாலும், உழைப்பு அவற்றை நேர்செய்கிறது. வரலாறு என்னும் பேரண்டத்தில் சில துகள்களையேனும் எங்களால் உலவவிட முடிந்திருப்பதே உறவுகள் உடன்நின்ற ஊக்கத்தால்தான். இந்த 25 இதழ்ப் பயணத்தில் கையிணைத்த நல்ல உள்ளங்களை நன்றியோடு வணங்குவதினும் வேறென்ன செயவல்லோம்.’

2016இல் வெளியான வரலாறு 26ஆம் தொகுதி தவத்துறை சப்தரிஷீசுவரர், பூரத்தூர் முக்தீசுவரம், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளையும் உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதரில் படியெடுக்கப்பட்டுப் பாடம் வெளியாகாத கல்வெட்டுகளையும் பதிவுசெய்துள்ளது. ஆய்வில் கண்டறியப்பட்ட தவத்துறை சப்தரிஷீசுவரர், திருஎறும்பியூர் எறும்பீசுவரர்க் கோயில் கல்வெட்டுகள் சிலவற்றின் விடுபட்ட பகுதிகள் விட்டுப்போன தொடர்ச்சிகளாக இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

சங்க காலத்தின் காலம்? வெள்ளறைக் குடைவரை, குடக்கூத்து, தவத்துறைக் கல்வெட்டுகள்-1, நகரி மாடக்கோயில், குலாலகோட்டையூர்க் குடைவரை, முழங்கால் (ஜாநு), திருப்பேர் நகர், இராஜராஜரின் புதல்வியர் மூவர் எனும் 9 ஆய்வுக்கட்டுரைகள் வரலாறு 26இல் பதிவாகியுள்ளன.

2017இல் வெளியான வரலாறு 27ஆம் தொகுதியில் கூத்தப்பார் மருதீசர், பாச்சில் மேற்றளி-ஆதிநாயகப் பெருமாள் கோயில்களிலும் உறையூர்க் குளத்திலும் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளுடன் பாச்சில் அவனீசுவரம் – மேற்றளிக் கோயில்களிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்களும் எறும்பியூர்க் கோயில் கல்வெட்டொன்றின் விட்டுப்போன தொடர்ச்சியும் பதிவாகியுள்ளன.

கழுகுமலைக் குடைவரை, கூத்தப்பார் மருதீசர், தவத்துறைக் கல்வெட்டுகள் -2, புதுப்பட்டிக் குடைவரை, பெருமுடியீசுவரம் மீளாய்வு, அரிட்டாபட்டிக் குடைவரை, தமிழமுதம்-1, மணப்பாடு குடைவரை, ஐந்தொகை காட்டும் தமிழர் சமயமும் கட்டடக்கலையும், நங்கவரம் சுந்தரேசுவரர், பசுபதிகோயில் எனும் 11 ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழில் இணைந்துள்ளன. 

2018இல் வெளியான வரலாறு 28ஆம் தொகுதியில் உத்தமசீலிச் செங்கனிவாய்ப் பெருமாள், செந்துறைப் பெருமானடிகள், பாலைத்துறை மகாதேவர், எறும்பியூர் எறும்பீசுவரர் கோயில்களில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள், பாலைத்துறை மகாதேவர், துடையூர் விஷமங்களேசுவரர் கோயில்களில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்கள் ஆகியவற்றுடன் பாலைத்துறை மகாதேவர்கோயில் கல்வெட்டொன்றின் விட்டுப்போன தொடர்ச்சியும் இடம்பெற்றுள்ளது.

தமிழமுதம்-2, சேய்ஞலூர் மாடக்கோயில், சோழமாதேவி கயிலாசநாதர், சிங்கப்பெருமாள் குடைவரை, பாச்சில் கல்வெட்டுகள், வைகல் மாடக்கோயில், அகச்சாரல், கற்குடிக் கோயில் கல்வெட்டுகள்-1, வெள்ளறை வடஜம்புநாதர் எனும் தலைப்புகளில் 9 ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழில் உள்ளன.

2020இல் வெளியான வரலாறு ஆய்விதழ் 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த தொகுதியாக (29-30) திகழ்ந்தது. சிங்களாந்தகபுரம் அமரேசுவரம், எறும்பியூர் எறும்பீசுவரம், பேட்டைவாய்த்தலை மதுராந்தக ஈசுவரம், பாப்பாப்பட்டி, பத்தாளப்பேட்டை, கோட்டாரப்பட்டி, பனங்காட்டங்குடி ஆகிய இடங்களில் கண்டறிந்த புதிய கல்வெட்டுகள், கொல்லிமலை நடுகல் கல்வெட்டு, அமரேசுவரம், மதுராந்தக ஈசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம், பைஞ்ஞீலி நீலிவனநாதர் கோயில் கல்வெட்டுகளின் பதிப்பிக்கப்படாத பாடங்கள் ஆகியவற்றுடன் கட்டங்கம் கையதே, வட, தென்பரங்குன்றக் குடைவரைகள், மல்லூர் அரங்கநாதர், கற்குடிக் கோயில் கல்வெட்டுகள்-2 எனும் 5 ஆய்வுக்கட்டுரைகளும் இவ்விதழில் பதிவாயின.

இப்போது கிடைக்கும் வரலாறு தொகுதிகள்

1.   வரலாறு 27

2.  வரலாறு 28

3. வரலாறு 29-30

நூல்கள் பெற– +91 93451 11790