குறிச்சி ஆவணங்கள்

மு. நளினி, இரா. கலைக்கோவன்

திருப்பைஞ்ஞீலி சோறுடைய நாயனார் கோயில்

சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டத்திலுள்ள பழைமையான ஊர் திருப்பைஞ்ஞீலி. வாழையின் பெயருடன் விளங்கும் இவ்வூரில், பதிகம் பெற்ற 1400 ஆண்டு வயதுடைய பெருங்கோயில் 71 கல்வெட்டுகளுடன் வாழ்கிறது. உள்ளிருக்கும் இறைவன் நீலிவனப்பெருமாள். இறைவி நீள்நெடுங்கண்ணி.

இங்குள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் அழுத்தமான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டுள்ளன. அவற்றுள், நான்கு ஆவணங்கள் அடுத்தடுத்து சோழநாட்டை ஆண்ட இரண்டு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், ஓர் ஊர் கோயிலுக்கும் தனியர்களுக்குமாகப் பிரித்து விற்கப்பட்ட கதையைக் கூறுகின்றன. சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேறெந்தக் கோயிலிலும் இது போல் நான்கு விற்பனை ஆவணங்கள் பெற்ற ஓர் ஊர் காட்சியாகவில்லை.

‘குறிச்சி’ என்ற பின்னொட்டுடன் பதிவாகும் இந்த ஊரின் கதை பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகிறது. திரிபுவனவீரதேவராக அறியப்படும் மூன்றாம் குலோத்துங்கசோழரின் ஆட்சிக்காலத்தில் அறிமுகமாகும் இக்குறிச்சியின் முழுப்பெயர் பிள்ளையாண்டான்குறிச்சியான நானூற்றுவன்குறிச்சி. அக்குறிச்சியில் பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது.

முதல் ஆவணம்

சிராப்பள்ளி முசிறிச் சாலையில் ஏறத்தாழ 11 கி. மீ. தொலைவில் திருவாசியை அடுத்துள்ள துடையூர் அக்காலத்தே பிராமணர் குடியிருப்பாக, ‘தொடையூர்’ என்ற பெயருடன் திகழ்ந்தது. அவ்வூரில் வாழ்ந்த சிங்கப்பிள்ளை செந்தாமரைக்கண்ணர், திருவரங்கச் செல்வனான செல்வநம்பி, திருவரங்கப் பெருமாளான திருவரங்கபட்டன் ஆகிய மூவருக்கும் அக்குறிச்சியில் புன்செய் நிலமிருந்தது.

பைஞ்ஞீலி இறைவனின் வழிபாட்டுக்கெனப் பூந்தோட்டம் அமைக்க விழைந்த கோயில் அலுவலர் காத்தானுக்கு, இம்மூவரும் குறிச்சியில் தங்கள் காணியாக இருந்த 1600 குழிப் புன்செய் நிலத்தை 400 நற்காசுகளுக்கு விற்றனர். இந்நிலத்துண்டு குறிச்சியிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கும் அக்கோயில் நடைமுறைகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு மா அளவு நிலத்திற்கும் வடக்கில் இருந்தது. இதற்கான நிலவிலை ஆவணம் ஓலையாகவும் கோயிலில் கல்வெட்டாகவும் அமைந்தது.

பைஞ்ஞீலி, தென்சுற்று

இரண்டாம் ஆவணம்

மூன்றாம் குலோத்துங்கரின் மகனான மூன்றாம் இராஜராஜரின் ஆறாம் ஆட்சியாண்டில், அதாவது பொ. கா. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நடைமுறைக்கு வந்த இரண்டாவது விற்பனை ஆவணத்தில் இவ்வூரின் பெயர் முன்பின்னாக மாறி நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சியாகப் பதிவாகியுள்ளது. அக்காலத்தில் தொடையூர் சபை உறுப்பினர்களாய் விளங்கிய திருவரங்கப் பெருமாள் சிங்கப்பிள்ளையான செந்தாமரைக்கண்ணர், மண்டலபுருஷனான சூரியதேவன், வீற்றிருந்தான் திருவாலப்பிள்ளையான திருவரங்கமாளி, சுந்தரத்தோளுடையானான சீராமன் ஆகிய நால்வரும் அவ்விற்பனையை நிகழ்த்தியுள்ளனர்.

சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பழம்பெரும் ஊரான தவத்துறை(இலால்குடி)க்கு அருகிலுள்ள நகர் எனும் சிற்றூரைச் சேர்ந்த கல்லன் சதிரனான மழைநாட்டு விழுப்பரையனுக்கு இக்குறிச்சி நிலம் 40 வேலி 10, 300காசுக்கு இவர்களால் விற்கப்பட்டது. இந்நிலத்தைக் குறிக்கும் சபையின் விற்பனை ஆவணம், ‘நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சி நத்தமும் நீர்நிலைக் குளமும் இக்குளத்தால் விளையும் நிலமும் இது சூழ்ந்த புன்செயும் நிலக்குடியும்’ என்று விற்கப்பட்ட இடத்தின் வளம் குறிப்பதுடன், இப்பகுதியிலிருந்த பைஞ்ஞீலி இறைவனுக்கும் பிள்ளையாருக்கும் உரிமையுடைய நிலப்பரப்புகளைத் தவிர்த்தே இவ்விற்பனை நிகழ்ந்தமை கூறுகிறது. இவ்விற்பனை ஆவணத்தை எழுதியவர் அன்பிலைச் சேர்ந்த துடையூர் மத்தியஸ்தர். ஆவணத்தில் அரசு அலுவலர் விக்கிரமசோழ பிரும்மராயர் உள்ளிட்டவர், ‘இப்படி அறிவேன்’ என்று சான்றாளர்களாகக் கையெழுத்திட்டுள்ளனர்.

மூன்றாம் ஆவணம்

இப்பதிவின் தொடர்ச்சியாக உள்ள மூன்றாம் ஆவணம், இக்குறிச்சி நிலம் 40 வேலியை விலைக்குப் பெற்ற கல்லன் சதிரனை, பாண்டிய அரசர் முதலாம் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் மண்டல முதலிகளுள் ஒருவரான கேரளத்துக் காலடியைச் சேர்ந்த சங்கரன் மகனாகக் குறிப்பதுடன், கல்லன் சதிரன் இக்குறிச்சியில் தாம் வாங்கிய நிலத்தின் உரிமையை வாங்கிய விரைவில் கைமாற்றியதைப் பதிவு செய்துள்ளது.

சதிரன் வாங்கிய 40 வேலியைப் பைஞ்ஞீலி இறைவன் பெயரில் அவருக்கான திருநாமத்துக்காணியாக்க விரும்பிய தொடையூர் சபையார், சதிரனிடம் சபை உறுப்பினர் நால்வர் பெற்ற விலைத்தொகையைத் திருப்பியளிக்கச் செய்து, சதிரனை அந்த 40 வேலியையும் இறைவனுக்கான திருநாமத்துக்காணியாக மாற்றித்தருமாறு வேண்ட, சதிரன் அதையேற்று, பெற்ற கையோடு நிலத்தை விற்ற கையருமாயினார். இப்படி வாங்கியவுடன் நிலம் விற்கப்படுதல் திரிவிட்டுத் தருதலாகவும் அதற்கான ஆவணம் திரிவுத்தீட்டாகவும் அழைக்கப்பெற்றன. வாங்கியவுடன் விற்கும் இந்தப் பாங்கைப் பைஞ்ஞீலியின் வேறு கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது.

பைஞ்ஞீலி, வசந்த மண்டபம்

நான்காம் ஆவணம்

நானூற்றுவன்குறிச்சி பற்றிய நான்காம் ஆவணம் மூன்றாம் இராஜராஜரின் 11ஆம் ஆட்சியாண்டில் அமைந்தது. அதில் விற்பனையாளர்களாக அறிமுகமாகும் மூவருமே தொடையூர் சபையின் உறுப்பினர்கள். அவர்களை, ‘சபைக்குச் சமைந்த’ என்றழைத்தே ஆவணம் அறிமுகப்படுத்துகிறது. அவர்களுள் இருவர், கல்லன் சதிரனுக்கு நிலம் விற்ற ஆவணத்திலும் விற்பனையாளர்களாக இடம்பெற்றுள்ளனர். மூன்றாமவர், திருவரங்கப்பெருமாளாள செந்தாமரைக்கண்ணராக அறியப்படுகிறார். கல்லன் சதிரனின் தந்தையும் பாண்டிய அரசரான முதலாம் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் மண்டல முதலிகளில் ஒருவருமான கேரளத்தைச் சேர்ந்த காலடி சங்கரன் அழகனான மழவராயரே இந்த ஆவணம் வழி இக்குறிச்சியில் 60 வேலி நிலத்தை 6,000 காசுக்கு வாங்கியவராகக் காட்சியாகிறார். கல்லன் சதிரனுக்கு விற்பனையான 40 வேலி நிலம், பைஞ்ஞீலி இறைவனுக்கும் பிள்ளையாருக்கும் உரிமையுடைய நிலப்பகுதிகள் ஆகியன தவிர்த்த நிலையிலேயே இந்த 60 வேலி நிலம் விற்பனையானதாக அறியமுடிகிறது.

நானூற்றுவன்குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சியின் எல்லைகளாகக் கிழக்கில் மீசெங்கோடு, தெற்கில் பாண்டிகுலாசனிப்புரம், மேற்கில் நெல்வேலி, வடக்கில் பைஞ்ஞீலி ஆகிய ஊர்கள் இருந்தமையை இரண்டு ஆவணங்கள் படம்பிடிக்கின்றன. இந்த ஆவணத்தில் சான்றாளர்களாகத் தொடையூர் மத்தியஸ்தர் உய்யநின்றாடுவான் வாளவரிசன் கையெழுத்திட்டுள்ளார்.

நச்சினார்க்கினியனும் தற்குறிகளும்

இந்தக் குறிச்சி ஆவணங்களில் நம்மைக் கவர்வது நச்சினார்க்கினியன் என்ற அழகிய தமிழ்ப் பெயரும் அக்காலத்தே இப்பகுதியில் இருந்த பல ஊர்களின் பெயர்களுமாகும். கையெழுத்தாளர்களுள் சிலர் தற்குறிகளாக இருந்தமையால் எழுதத் தெரிந்த வேறு சிலர் அவர்களுக்காகக் கையெழுத்திட்டுள்ளனர். இப்படி மாற்றுக் கையெழுத்திட்டவர்கள், முன்னவர் ‘சயிஞ்ஞாதன்மை’ (தற்குறி) அதனால் இக்கையெழுத்து என்று தெளிவாகச் சுட்டியுள்ளனர்.

தொடையூர் சபை உறுப்பினர்கள் சிலரால் நானூற்றுவன் குறிச்சியான பிள்ளையாண்டான்குறிச்சி நிலம் நான்கு முறை விற்பனைக்கு ஆளாகியது. அந்நிலத்தொகுதிகளின் பெரும்பகுதியைத் தந்தையும் மகனுமான கேரளத்தவர்களே வாங்கியதையும் அவர்களுள் மகன், வாங்கிய கையோடு பைஞ்ஞீலிக் கோயிலுக்கு அதை உரிமை மாற்றம் செய்ததையும் வெளிச்சமிடும் இந்நான்கு ஆவணங்களும் பிற்சோழராட்சியின் இறுதிக் காலத்தே, இப்பகுதியில் நிலவிய சமூக, பொருளாதாரச் சூழல்களையும் கோயில் தொடர்ந்து நிலப்பற்றாளராகவே நீடித்ததையும் வெளிப்படுத்துவதோடு, அக்கால ஆவண நடைமுறைகளையும் கண்முன் வைக்கின்றன. காலம் காத்துத் தந்திருக்கும் இந்தக் குறிச்சி ஆவணங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றுக்குப் பைஞ்ஞீலிக் கோயிலின் கொடை என்றே சொல்லலாம்.

ஒரு கோபுரத்தின் கதை

இரா. கலைக்கோவன்

திருப்பைஞ்ஞீலி கோபுரம்

கோபுரங்களுக்குக்கூட கதை உண்டா எல்லாக் கோபுரங்களுக்கும் கதை இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், சில கோபுரங்களின் கதைகள் கல்வெட்டுகளாகக் கண்முன் வளர்கின்றன. பைஞ்ஞீலிக் கோபுரத்தின் கதை மூன்று கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது. கதைக்குள் போவதற்கு முன், ‘கோபுரம்’ எது என்பது தெரியவேண்டாமா? ஒரு கோயிலின் நுழைவாயிலும் அதன் மேலெழும் கட்டுமானமும்தான் கோபுரம். பலர் இறைவன் உள்ள கருவறைக் கட்டுமானத்தையும் கோபுரம் என்றே அழைக்கிறார்கள். ஆனால், அந்த அமைப்பிற்கு விமானம் என்று பெயர்.

‘திருப்பைஞ்ஞீலி’ என்று திருவுடன் இணையும் பைஞ்ஞீலி, சிராப்பள்ளி மாவட்ட மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள ஊராகும். முதல் இராஜராஜர் காலந்தொட்டுக் கல்வெட்டுகள் பெற்று விளங்கும் இக்கோயில் தேவார மூவரால் பாடப்பெற்றது. சூழவுள்ள வீதியையும் சேர்த்து நான்கு சுற்றுகள் கொண்டுள்ள இக்கோயிலின் மூன்றாம் சுற்றில் பொதுக்காலம் 8ஆம் நூற்றாண்டுக் குடைவரைக் கோயில் உள்ளது. தென்தமிழ்நாட்டிலுள்ள இரண்டே சோமாஸ்கந்தர் குடைவரைகளில் இது ஒன்று. தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய இக்குடைவரையில் மட்டும்தான் உமையன்னை வலப்புறமும் சிவபெருமான் இடப்புறமுமாய் இடையில் குழந்தை முருகனுடன் அமர்ந்துள்ளனர். வேறெந்தக் குடைவரையிலும் இந்த இட, வல மாற்றம் இல்லை.

இந்தச் சுற்றின் வாயிலாகவே எழுநிலைக் கோபுரம் ஒன்றமைக்கச் சோழர் கால மக்கள் விரும்பினர். அதற்கான பணி மூன்றாம் குலோத்துங்க சோழர் ஆட்சியில் பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்தது. திரிபுவன வீரதேவராகக் கல்வெட்டுகள் கொண்டாடும் இம்மூன்றாம் குலோத்துங்கர் அப்பெயரிலேயே கும்பகோணத்திற்கருகில் உருவாக்கிய திரிபுவன வீரேசுவரம் கோயிலின் முதற்கோபுரம் போலவே கருதப்பட்டுப் பைஞ்ஞீலிப் பணி வளரத் தொடங்கியது.

பேரளவினதாக ஏழுநிலைகள் கொண்டதாய் உருவாக்க எண்ணித் தொடங்கப்பட்ட இக்கோபுரத்தின் துணை, தாங்குதளங்களின் கட்டமைப்புப் பார்த்தாலே, எத்தகு எதிர்பார்ப்புடன் இக்கோபுரம் உயரத் தொடங்கியது என்பது புரிந்துவிடும். குலோத்துங்கரின் 31ஆம் ஆட்சியாண்டில் பதிவாகியுள்ள கல்வெட்டு, இக்கோபுரப் பணிக்கான செலவுகளைச் சந்திக்க, ஆதனூர் என்ற ஊரையே அதன் வருவாய், வரிகள் உட்பட மன்னர் அரசாணை வழிக் கோயிலுக்குக் கொடையளித்ததை உணர்த்துகிறது.

கீழ்த்தளம் எழும்போதே கட்டுமானச் செலவுகள் கைமீறிப் போனதால், ஆதனூர் வருவாய் போதாத நிலை ஏற்பட்டது. அதனால், தம் 36ஆம் ஆட்சியாண்டில் பெரியகள்ளிக்குடி என்னும் ஊரை அதன் வரி, விளைவு உட்படக் கோயிலுக்களித்து மற்றோர் அரசாணை மன்னரால் பிறப்பிக்கப்பட்டது.

கோபுரத்தின் வெளிப்புறத்தே காவலர் சிற்பங்கள் அமைந்தன. உட்பகுதியில் தெற்கிலும் வடக்கிலுமாய் 12 பெருந்தூண்கள் நிறுவி, ஒவ்வொரு தூணையும் பல சதுரங்களாக வரையறுத்த சிற்பிகள், ஒவ்வொரு சதுரத்திலும் அழகான சிற்பங்களைச் செதுக்கினர். சோழர் கால ஆடற்கோலங்கள், பூதங்களின் பல்வேறு அமர்வுகள், இறைவடிவங்கள் என அந்த 12 தூண்களில் அமைந்த 157 சிற்பங்களும் சோழர் கலைமுறைக்கும் சமயச் சிந்தனைகளுக்கும் சான்றுகளாயின. உட்பகுதியின் மேற்புறத்தே வடக்கில் கங்காளரையும் தெற்கில் சிவபெருமான் உமை இணையையும் பெருஞ்சிற்பங்களாய்க் காட்டிய சிற்பிகள், தூண்களுக்கு இடைப்பட்ட ஈரடுக்கு மாளிகையைத் தங்கள் கற்பனை வளத்தால் செழுமையாக்கினர். பிற்சோழர் கால ஆடற்கலைப் பெருமை விளம்பும் இந்த மாளிகைச் சிற்பங்களும் இதை அலங்கரிக்கும் தூண்களின் வடிவமைப்பும் கண்களில் நிற்கும் கலைச் சிறப்பின.

கோபுரத் தூண்கள்

மூன்றாம் குலோத்துங்கரை அடுத்து வந்த மூன்றாம் இராஜராஜர் காலத்தில் பாண்டியர் எழுச்சி ஏற்பட்டது. இராஜராஜருக்கு உதவ மைசூரிலிருந்து ஒய்சள அரசர் படை நகர்த்தினார். சோழ, பாண்டிய, ஒய்சளப் படைகளுக்கிடையே பைஞ்ஞீலியும் அதைச் சுற்றியிருந்த பாச்சில் கூற்றமும் பேரிழப்பைச் சந்தித்ததால், கோபுரப்பணி தடைபட்டது. குறைபணியாய் நின்ற இக்கோபுரத்தை முழுமையுறச் செய்யவேண்டும் எனும் அவா பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் இறுதியில், மாறவர்மர் குலசேகர பாண்டியரின் 27ஆம் ஆட்சியாண்டில் பெருந்தீயாய் எழுந்தது.

தவப்பெருமாள் முதலியாண்டான் என்பார் பொறுப்பேற்றார். சித்ரமேழிப் பெரியநாட்டார் துணையாயினர். நாட்டார் உறுப்பினர் ஒவ்வொருவரும் அவரவர் நிலங்களின் அளவுக்கேற்பப் பொருளோ, விளைவோ அளிக்க முடிவாயிற்று. அந்தப் பெருங்கருணையால் கீழ்நிலை முற்றுப்பெற்று இரண்டாம் நிலை தொடங்கப் பெற்றாலும் கோபுரப்பணி முடிவடையவில்லை.

ஈரடுக்கு மாளிகை

திரிபுவனவீரேசுவரத்தினும் சிறப்பான படைப்பாக விளங்கியிருக்க வேண்டிய இந்தப் பைஞ்ஞீலிக் கோபுரம், பலமுறை முயன்றும் இரண்டாம் தளத்துடன் நிறைவடையாமல் நின்றதற்குத் தொடர்ந்த போர்களும் நிலையற்ற அரசியலுமே காரணங்களாயின. முற்றுப்பெறாது போனாலும் தான் வளர்ந்த காலத்தின் சமூகப் பண்பாட்டுப் படப்பிடிப்பாய் 12 தூண்களும் 157 சோழச் சிற்பங்களுமாய் எழுச்சியோடு நிற்கும் இந்தக் கோபுரத்தின் கதை கண்களை நனைத்தாலும் இருக்கும் இந்த நிலையிலும் அது கவிதையாகவே உள்ளம் நிறைக்கிறது.