திருச்சிராப்பள்ளி புத்தகத் திருவிழாவில் விருது

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகமும் தேசிய நூல் அறக்கட்டளையும் (National Book Trust of India) இணைந்து நடத்தும் ‘புத்தகத் திருவிழா’, திருச்சிராப்பள்ளி ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 16, 2022 அன்று தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இந்நூல் கண்காட்சியின் இரண்டாம் நாளான செப்டம்பர் 17 அன்று, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கு, அவர்தம் ஆய்வுப் பணிகளைப் பாராட்டி நிகழ்ச்சி அமைப்பாளர்களால் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்த செய்திக் குறிப்பு

திருமங்கலத்து ராமாயண உளி உன்னதங்கள்

திருச்சிராப்பள்ளி லால்குடிச் சாலையில் உள்ளது திருமங்கலம். இது 63 திருத்தொண்டர்களுள் ஒருவரான ஆனாயரின் ஊராகும். திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில் காணப்படும் ராமாயணச் சிற்பங்கள் பற்றிய டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, ‘திருமங்கலத்து ராமாயண உளி உன்னதங்கள்’ என்ற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் மின்னிதழிலும் சமீபத்தில் வெளியானது.

நாளிதழில்…

மின்னிதழில்…

கட்டுரையின் வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ கதையா? வரலாறா?

அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’, சோழர் வரலாற்றைப் படம்பிடிக்கிறதா என்பது பற்றிய டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை, சமீபத்தில் ‘இந்து தமிழ் திசை’ வலையொலிப் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

வலையொலிப் பதிவைக் கேட்டு மகிழ இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ கதையா? வரலாறா?

இரா. கலைக்கோவன்

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டையாண்ட சோழர்கள் குறித்த விரிவான வரலாறு பேராசிரியர் நீலகண்டசாஸ்திரியால் ஆங்கிலத்தில் எழுதி வெளியிடப்பட்டது. விஜயாலய சோழரின் தஞ்சாவூர் வெற்றியுடன் தொடங்கும் அந்த இணையற்ற வரலாற்றைத் தமிழில் தந்தவர்களாக வை.சதாசிவ பண்டாரத்தாரையும் மா.இராசமாணிக்கனாரையும் குறிப்பிடலாம். தமிழ்நாட்டரசும் ‘சோழப் பெருவேந்தர்காலம்’ என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாகச் சோழர் வரலாற்றை வெளியிட்டுள்ளது. சோழர் கால நிலஉடைமை, பொருளாதாரம், நீர்ப்பாசனம், கலைகள் இவை குறித்தெல்லாம் பல நுண்ணாய்வுகளும் வெளிவந்துள்ளன.

தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் காலம் பெருஞ்சிறப்புக்குரியதாகக் கருதப்படுவதற்குக் காரணம் அவர்கள் விட்டுச்சென்றிருக்கும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளிலிருந்து கிடைக்கும் அளப்பரிய தரவுகள்தாம். முதல் ராஜராஜர், முதல் ராஜேந்திரர் காலத்தில் சோழர்ஆட்சி தென்னிந்தியப் பரப்பை உள்ளடக்கி இருந்ததோடு வடகிழக்கில் கலிங்கம் வரையிலும் பரவியிருந்தது. இலங்கையும் அவர்தம் ஆட்சியின் கீழ் இணைந்திருந்தது. கடல் கடந்த கீழ்த்திசை நாடுகளையும் பல வடபுலநாடுகளையும் சோழர்கள் போரில் வென்றிருந்தபோதும் அவை சோழப் பேராட்சியின் கீழ் இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

சோழர்களின் கலைவளம் மகத்தானது. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல பெருங்கோயில்கள் அவர்தம் காலத்தில்தான் உருப்பெற்றன. ஆயிரக்கணக்கான செங்கல் கோயில்கள் அவர்களால்தான் கற்றளியாக்கப்பட்டன. நான்கு நூற்றாண்டுக் காலத் தமிழர் பண்பாடும் வாழ்க்கையும் அக்கோயில்களில்தான் சிற்பங்களாகவும் கல்வெட்டுகளாகவும் உறைந்துள்ளன. எவ்வளவோ ஆய்வுகளுக்குப் பிறகும் சோழர் காலத் தமிழ்நாடு முற்றிலும் வெளிப்பட்டுவிட்டதாகக் கொள்ளமுடியாதபடி தரவுப்பொதிகள் தேங்கியுள்ளன. இந்நிலையில், அமரர் கல்கியின், ‘பொன்னியின்செல்வன்’, சோழர் வரலாற்றைப் படம்பிடிக்கிறதா என்ற வினா முன்வைக்கப்படுகிறது. இதற்கான விடையைத் தேடும் முன் சில தெளிவுகள் தேவைப்படுகின்றன.

வரலாறு உண்மைகளின் அடுக்கில் உருவாவது. அதில் வெளிப்படும் ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் சான்றுகள் தூண்களாய் நின்று தாங்கும். வரலாற்றைக் கட்டமைக்க ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஊகங்கள்கூடச் சான்றுகளின் நிழலில்தான் வடிவம்பெறும். அந்த ஊகங்கள்தான் ஆய்வாளர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் நேரக் காரணமாகி, நெடிய விவாதங்களை எதிர்கொண்டு, சரியானவை எனில் நிலைப்படும். தவறானவை எனில் தவிர்க்கப்படும் அல்லது திருத்தப்படும்.

வரலாற்றுப் புதினம் அப்படியன்று. தேவைக்கேற்ப வரலாற்று மாந்தர் சிலரைத் தேர்ந்து, கருவிலுள்ள கதைக்கேற்ப அவர்களுடன் கற்பனை மனிதர்களையும் இணைத்துச் சுவை குன்றா நிகழ்வுகளைக் கட்டமைத்துப் படிப்பவர் ஒவ்வொரு வரியிலும் ஒன்றுமாறு சொல்லடுக்கி, ஆர்வத்தைத் தூண்டுமாறு அடுக்கடுக்காகத் திருப்பங்கள் நிகழ்த்தி வெளிப்படுவதே வரலாற்றுப் புதினம். அதில் வரலாற்றின் வாசம் இருக்கும். வரலாறு எப்படி இருக்கும்? ஒரு புதினத்தில் வரலாற்றை எதிர்பார்ப்பதோ, அது வரலாறாக வடிவம் காட்டும் என்று நினைப்பதோ எப்படிப் பொருந்தும்?

பொன்னியின் செல்வன் கதையை முடித்த கையோடு, அதற்கொரு முடிவுரையும் எழுதினார் கல்கி. அந்த முடிவுரையில் வரலாற்றுப் புதினங்கள் குறித்த தம் கருத்துரையாக, ‘பொதுவாக நாவல்கள் எழுதுவதற்கும் முக்கியமாகச் சரித்திர நவீனங்கள் எழுதுவதற்கும் சட்டதிட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் அவற்றை நான் படித்ததில்லை. ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய முறையை வகுத்துக்கொண்டு எழுதுகிறார்கள்,’ என்று தெளிவுபடச் சொல்லியிருக்கிறார். இந்தச் சொல்லாடல், அவர் படைப்பு எந்த வரையறைகளுக்கும் உட்பட்டதல்ல என்பதை மென்மையாக உணர்த்துகிறது.

‘பொன்னியின் செல்வன்’ தமிழ்நாட்டில் இதுநாள்வரையில் வெளியான வரலாற்றுப் புதினங்களில் விற்பனையில் முதல்நிலையில் உள்ள நூலாகும். அதைப் படித்தவர்கள் அதனுடன் ஒன்றினார்கள். அதைப் புதினமாக அவர்கள் பார்க்கவில்லை. வரலாறாகவே வரித்துக் கொண்டார்கள். அதுநாள்வரை அவர்கள் அறியாதிருந்த சோழர்களைப் பொன்னியின் செல்வன்அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. சோழர் வரலாறு ஒரு சாதாரண மனிதனுக்கு எவ்வளவு தெரிந்திருந்தால்போதுமோ, அந்த அளவுக்கு அது வழங்கியது. புதினம் வரலாறு பேசத் தொடங்கினால் படிப்பவர்கள் புத்தகத்தை மூடிவிடுவார்கள் என்பது பொன்னியின் செல்வனை எழுதியவருக்குத் தெரியாதிருக்குமா? மக்களின் நாடியறிந்த எழுத்தாளரல்லவா அவர்.!

வாழ்ந்த மனிதர்கள் குறித்து எழுதும்போது வரையறைகள் வட்டமிடும். எல்லைகளை மீறமுடியாது. அதனால்தான் கற்பனை மாந்தர்கள் வரலாற்றுப் புதினங்களில் பெருவாழ்வு பெறுகிறார்கள். பொன்னியின் செல்வன் புதினத்தை நகர்த்திச் செல்லும் ஆழ்வார்க்கடியான், நந்தினி, பூங்குழலி உள்ளிட்ட பலர் கற்பனைப் படைப்புகள். வந்தியத்தேவன், ஆதித்தகரிகாலர் ஆகிய இருவரும் சோழர் வரலாற்றில் பதிவாகியிருந்தபோதும் அவர்களைப் பற்றிய தரவுகள் குறைவே. ஆதித்தகரிகாலருக்குக் கிடைக்கும் அளவில்கூட வந்தியத்தேவனுக்குக் குறிப்புகள் இல்லை. அதனால்தான், அவரைப் பொன்னியின் செல்வனின் நாயகனாகக் கொண்டு கதை வளர்த்தார் கல்கி.

பொன்னியின் செல்வன் கதை சோழர்களை அடையாளம் காட்டுகிறது. அந்தப் புதினத்தால்தான் தமிழர்கள் வரலாற்றின்பால் ஈர்க்கப்பட்டார்கள். சோழர்கள், ராஜராஜர் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். அவ்வகையில் கல்கியின் எழுத்தாற்றல் போற்றத்தக்கது. ஒரு கதைசொல்லி வெற்றிபெறுவது அவர் சொல்லும் கதையின் நிலைபேற்றைப் பொறுத்தே அமைகிறது. அப்படியானால், பொன்னியின் செல்வனில் குறைகளே இல்லையா? அதைச் சோழர்களின் வரலாற்று முகமென்று ஏற்றுக்கொள்ளமுடியுமா?

அரசியல் சூழ்ச்சிகளும் அதற்கான ஆள்சேர்ப்புப் படலங்களும் தவறான உறவுகளும் நிறைந்திருந்த சமூகமாகவே சோழச்சமூகத்தைப் பொன்னியின் செல்வன் படம்பிடிக்கிறது. சிற்றரசர்களைப் பிரித்தாளும் முயற்சிகள், இளம் தலைவர்களைத் தன்வயப்படுத்த நந்தினியிடமிருந்து வெளிப்படும் கவர்ச்சி நிறைந்த மொழிவுகள், பெரிய பழுவேட்டரையர், வீரபாண்டியன், சுந்தரசோழர், மந்தாகினி இவர்களைச் சூழ்ந்த பொருந்தா உறவுகள் என இப்புதினம் சுவைக்காக வெளிப்படுத்தும் சூழல்கள்தான் சோழர் கால அரசியல் வாழ்க்கையாக அமைந்திருந்ததா என்ற கேள்வி வரலாற்றை நேசிப்பவர்களுக்கு எழாமல் இருக்கமுடியாது.

ஒரு வரலாற்றுப் புதினம் எந்தக் காலத்தைத் தழுவி எழுதப்படுகிறதோ, அந்தக் காலத்து மாந்தர்களையே அது கதைப் போக்கில் கொள்ளவேண்டும். கற்பனை மாந்தர்கள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் ஆங்காங்கே இணையலாம். ஆனால், வரலாற்று மனிதர்கள் காலப் பிறழ்ச்சிக்கு உள்ளாதல் சரியன்று. பொன்னியின் செல்வனில் இத்தகு காலப் பிறழ்வுகள் கண்சிமிட்டாமல் இல்லை.

புதினத்தின் தொடக்கத்திலேயே அறிமுகமாகும் சம்புவரையர்கள், சுந்தரசோழர் காலத்தில் வரலாற்றின் வாயிலுக்கே வரவில்லை. சாளுக்கியச் சோழர்களின் இரண்டாம் அரசரான விக்கிரமசோழர் காலத்திலேயே அவர்கள் சிற்றரசர் நிலையைப் பெறுகிறார்கள். அக்காலக்கட்டத்திலும் அவர்கள் வாழ்ந்திருந்த பகுதி திருவண்ணாமலை மாவட்டமும் அதைச் சுற்றியிருந்த சில ஊர்களும்தான். கதை நிகழும் காலத்திலிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று வெளிச்சம்பெறும் சம்புவரையர்களைக் கால நீரோட்டத்தில் முன்னிழுத்து, அவர்களுக்குச் சுந்தரசோழர் கால வாழ்வளித்ததுடன், அவர்தம் இருப்பிடத்தையும் மாற்றி வீரநாராயணபுரத்துக்கு அருகிலுள்ள கடம்பூராகக் காட்டியிருப்பதும் அவ்வூர் மாளிகையிலேயே கதையின் தலைமை நிகழ்வுகள் நடப்பதாகக் கதை புனைந்திருப்பதும் காலப் பிறழ்வான அமைப்பாகும்.

அது போலவே பெரிய, சின்னப் பழுவேட்டரையர்கள் என்று அண்ணனும் தம்பியுமாக இருவர் இக்கதையில் குறிக்கப்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் கதைக்களம் சுந்தரசோழர் காலத்தில் அமைகிறது. அவர் ஆட்சி ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகள் அமைந்தது. அப்போது பழுவூர் மன்னராக இருந்த பழுவேட்டரையர் மறவன்கண்டன். அவருக்குத் தம்பி யாருமில்லை. உத்தமசோழர் காலம்வரை மறவன்கண்டனே ஆட்சியில் இருந்ததைப் பழுவூர்க் கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், கதையில் பெரியபழுவேட்டரையர் உயிர் துறப்பதாகவும் சின்னப்பழுவேட்டரையர் பொறுப்பு நீங்குவதாகவும் கல்கி எழுதியுள்ளார்.

வரலாறு அதன் பதிவுப்படியே புதினத்தில் அமையவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், படிப்பார் அதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்குச் சுவை நிறைந்த கதை வேண்டும். எடுத்தால் முடிக்காமல் வைக்க முடியாத அளவிற்கு ஆர்வத்தைத் தூண்டுவதாக அக்கதை அமைய வேண்டும். பொன்னியின் செல்வன் அத்தகு புதினமாக மலர்ந்தது. அதுதான் அதனுடைய வெற்றி. காலநிரலற்ற சில வரலாற்று அமைப்புகளுக்காகவும் சமூகத்தின் குறைநிறைந்த காட்சிகளுக்காவும் பொன்னியின் செல்வனைத் தள்ளிவைக்கமுடியாது. அது ஆயிரமாயிரம் மக்கள் மனதில் தமிழ்நாட்டு வரலாற்றை வேர்விடச் செய்த புதினம். ‘வரலாறு’ என்ற சொல்லைப் பலரும் பேசுமாறு பழக்கிவிட்ட படைப்பு.

திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயிலில் சோழா்காலக் கல்வெட்டுகள்


திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ளது திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவர் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் முனைவர் அர. அகிலா ஆகியோா் அண்மையில் அக்கோயிலில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் சோழா் காலத்தைச் சேர்ந்த இரண்டு புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்தனர்.

டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன், கோயில் குறித்த பல வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வரலாற்றுத் தகவல்களுடன் செய்திக்குறிப்பைத் தாங்கிய நாளிதழ்கள் –

‘வசந்த அழைப்பு’ – திருச்சிராப்பள்ளி வானொலியில் டாக்டர் இரா. கலைக்கோவனின் நேர்க்காணல்

23/07/2022 அன்று ஒலிபரப்பான திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையின் ‘வசந்த அழைப்பு’ நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் உ.வே.சா. விருது  பெற்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடலாக அமைந்தது.

கண் மருத்துவராகத் தொடங்கி வரலாற்றாய்வாளராக மாறிய தம் வாழ்வின் சுவையான நிகழ்வுகள் பலவற்றை டாக்டர் இரா. கலைக்கோவன் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆய்வுலகின் முன்னோடிகள், அவர்தம் நூல்கள், கோயில்கள், கல்வெட்டுக்கள், நூல் வாசிப்பு குறித்த பயனுள்ள தகவல்களை அவர் வழங்கினார்.

கோயில்கள் இன்றி வரலாறு இல்லை; வரலாறு இன்றி நம் அடையாளம் இல்லை; அத்தகைய கோயில்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மக்களின் கடமை என்பதைத் தெளிவாக விளக்கினார்.

‘வசந்த அழைப்பின்’ பதிவை இங்கே கேட்டு மகிழலாம்.

தமிழக அரசின் உ.வே.சா. விருது – 2021

தமிழ்நாடு நாள் விழா ஜூலை 18, 2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கு, அவர்தம் சீரிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது பெற்றமை குறித்து, திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையில், 19/07/2022 அன்று டாக்டர் இரா. கலைக்கோவன் உரையாற்றினார். அந்த உரையின் பதிவை இங்கே கேட்கலாம்.

முக்தீசுவரத்தில் சோழர்கால நில அளவுகோல்கள் கண்டுபிடிப்பு

சிராப்பள்ளியை அடுத்த சமயபுரத்திற்கு அருகிலுள்ள கண்ணனூர், பொதுக்காலம் 11 ஆம் நூற்றாண்டளவில் ஹொய்சள அரசர்களின் தலைநகரமாக விளங்கியது. சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜருக்கு உதவுவதற்காக மைசூர்ப்பகுதியிலிருந்து சோழநாட்டிற்கு வந்த ஹொய்சள அரசர்கள் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வூரைத் தங்கள் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தனர். அக்காலக்கட்டத்தில் இப்பகுதியில் உருவான பழங்கோயில்களுள் ஒன்று முக்தீசுவரம். கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்றுமாளிகை என ஒரு காலத்தில் எழுச்சியுடன் விளங்கிய இக்கோயில் இன்று அறநிலையத்துறைத் திருப்பணிக்காகக் காத்திருக்கிறது.

2020 இல், இக்கோயிலில் இணைஆணையர் திரு. க. பெ. அசோக்குமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்ட சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு. நளினியும் முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் பொதுக்காலம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அளவுகோல்களையும் 14-18 ஆம் நூற்றாண்டளவில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுக்கள் சிலவற்றையும் கண்டறிந்தனர். களஆய்வின்போது சமயபுரம் கோயில் இளநிலைப் பொறியாளர் திரு. எம். அஜந்தன் உடனிருந்து உதவினர்.

இக்கல்வெட்டுக்களையும் அளவுகோல்களையும் நேரில் ஆய்வுசெய்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குனர் டாக்டர் இரா. கலைக்கோவன், இக்கோயில் சோழப் பேரரசர் மூன்றாம் ராஜராஜர் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும் பொதுக்காலம் 1221 ஏப்ரல் 14 ஆம் நாள் இவ்வளாகத்தில் பொறிக்கப்பட்ட அம்மன்னரின் 6 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இக்கோயில் இறைவனை, ‘கழுகிறை நாயனார்’ என்றழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்குக் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்கள் குறிப்பிடும் முத்தன் செட்டியார், திருச்சிராப்பள்ளித் தாயுமான செட்டியார், கழயடி மயிலேறும் பெருமாள் ஆகிய பெருமக்கள் அவர்தம் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள கட்டுமானப்பகுதிகளின் திருப்பணிக்கு உதவியவர்கள் ஆகலாம்.

‘கழயடி மயிலேறும் பெருமாள்’… என்ற குறிப்பு

‘திருச்சிராப்பள்ளித் தாயுமான செட்டியார்’ …. என்ற குறிப்பு

ஆய்வின்போது கண்டறியப்பட்ட மூன்று அளவுகோல்களுள் 87 செ. மீ. அளவினதாக இரு கூட்டல் குறிகளுக்கிடையில் விமானத்தின் மேற்குப் பகுதியில் பதிவாகியுள்ள கோல் இக்கட்டுமானத்திற்குச் சிற்பிகள் பயன்படுத்திய தச்சக்கோலாகலாம். இதுவொத்த தச்சக்கோல்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் பனைமலை ஈசுவரம், தஞ்சாவூர் ராஜராஜீசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம் உள்ளிட்ட பல கோயில்களில் கண்டறியப்பட்டுள்ளன.

புன்செய், நன்செய் நிலங்களை அளப்பதற்காகச் சோழர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த நில அளவுகோல்கள் அந்தந்த ஊர்க் கோயில்களில் வெட்டி வைக்கப்பட்டன. இரண்டல்லது மூன்று கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்டனவாய் வெட்டப்பட்ட இந்த அளவுகோல்கள், சில கோயில்களில் நன்செய்க்கோல், புன்செய்க்கோல் எனும் பொறிப்புகளுடனும் சில கோயில்களில் அத்தகு அடையாளப் பொறிப்புகள் இல்லாமலும் காணப்படுகின்றன. முக்தீசுவரத்தின் பெருமண்டபத் தென்புறக் குமுதத்தில் வெட்டப்பட்டுள்ள 6.99 மீ. நீளமுள்ள அளவுகோல், அப்பகுதி சார்ந்த புன்செய் நிலங்களை அளக்கப் பயன்பட்ட அளவுகோலாகலாம்.

நன்செய் நிலங்களை அளக்க வழக்கிலிருந்த சோழர் கால நிலமளந்த கோல் முக்தீசுவரம் விமானத்தின் மேற்குப் பட்டிகையில் 3.76 மீ. நீளத்தில் வெட்டப்பட்டுள்ளது. பெரியகுறுக்கை சிவன்கோயிலில் மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்ட நன்செய்க்கோலும் இதே அளவினது என்பது இங்கு எண்ணத்தக்கது.

முக்தீசுவரத்திற்கு அருகிலுள்ள போசளீசுவரம் கோயிலிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அக்கோயில் கோபுரத்தின் உட்புற வடசுவரில் ‘நல்லதம்பி மகன் காவுடை நயினான்’ எனும் பெயர்ப் பொறிப்புக் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டுச் சுட்டும் காவுடை நயினார் கோயில் திருப்பணியில் பங்கேற்றவராகலாம்.

திருநெடுங்களநாதா் கோயிலில் சோழா்காலக் கல்வெட்டுகள்

திருச்சி- தஞ்சாவூா் சாலையில் வாழவந்தான்கோட்டையை அடுத்துள்ள திருநெடுங்களம், நெடுங்களநாதா் கோயிலில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அதில் சோழா் காலக் கல்வெட்டுகள் சிலவற்றையும், அதே காலத்தைச் சோ்ந்த நிலமளக்கப் பயன்பட்ட அளவுகோலையும் கண்டறிந்தனா்.

இதுகுறித்து, டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் 18/05/2022 அன்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டார்.

செய்திக்குறிப்பைத் தாங்கிய நாளிதழ்கள் –

கோலாட்டம்

அன்புள்ள வாருணி, நீயும் நானுமாய்க் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள
தாராசுரத்திற்குச் சென்ற பயணங்கள் உனக்கு நினைவிருக்கலாம். அங்கு
இரண்டாம் ராஜராஜ சோழரால் எடுப்பிக்கப்பெற்ற ராஜராஜ ஈசுவரம்
சிற்பக்களஞ்சியமாக விளங்குவதைப் போகும் வழியெல்லாம் பேசிச் செல்வோம்.
பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் விளங்கிய பண்பாட்டுக்
கூறுகளின் படப்பிடிப்புகளாகப் பல சிற்பங்களை அங்குக் காணமுடிவதை
உன்னிடம் பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் சில
சிற்பங்களைப் பார்ப்பதும் அவை பற்றிக் கலந்துரையாடுவதுமாகவே நம்
பயணங்கள் நிறைந்திருக்கின்றன. நீ பலமுறை பார்த்துப் பல கேள்விகளுடன்
என்னை நோக்கிய அந்தச் சிறப்பான சிற்பம் இன்றும் என் கண்முன் நிற்கிறது.
அந்தச் சிற்பத்தையும் அது தொடர்பான உன் கேள்விகளுக்கான விடைகளையும்
இம் மடல் வழிப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

மூன்று பெண்கள் இணைந்து நிகழ்த்துமாறு அமைந்த அந்தக் கோலாட்டச்
சிற்பம் தனித்துக் குறிப்பிடத்தக்கதுதான். தமிழ்நாட்டிலுள்ள பழங்கோயில்களில்
12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டமைந்த சிற்பக் காட்சிகளில் கோலாட்டத்தைக்
காணக்கூடவில்லை. ஆடற்சிற்பங்களின் காட்சியகமாக விளங்கும் துக்காச்சி
விக்கிரமசோழீசுவரத்தில்கூடக் கோலட்டச் சிற்பத்தை நாம் பார்த்ததில்லை. நாம்
அறிந்தவரையில், தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் முதல் கோலாட்டச் சிற்பமாகத்
தாராசுரம் காட்சியே முன் நிற்கிறது.

தாராசுரத்துக் கோலாட்டம்

தாராசுரம்

துணைத்தளக் கண்டசிற்பமாக அமைந்துள்ள இக்கோலாட்டக் காட்சியில்
மூன்று பெண்கள் இரண்டு கைகளிலும் கோல் கொண்டு ஆடுவதைக்
காணமுடிகிறது. பெருங்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், தோள், கை
வளைகள், சுவர்ணவைகாக்ஷம், இடைவிரிப்புடனான சிற்றாடை, இடைக்கட்டு
என ஒப்பனை நிறைத்து, கொண்டையை மீறிய சடைக்கற்றைகள் தோள்களில்
நெகிழ ஆடும் இம்மூவரில் முதலிருவர் நேர்ப்பார்வையில் ஆட, மூன்றாமவர்
ஒருக்கணிப்பிலும் சுழற்சியிலுமாய்க் கோலடிக்கிறார்.

இலேசான வலஒருக்கணிப்பில் இடப்பாதத்தை உத்கட்டிதத்திலும்
வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி மண்டலநிலையில் காட்சிதரும்
வலப்பெண்ணின் வலக்கை, கோலுடன் தலைக்குமேல் உயர்ந்துள்ளது. இடக்கைக்
கோல் தொடையருகே நீண்டுள்ளது. அவரைப் போலவே லேசான
வலஒருக்கணிப்பிலுள்ள நடுப்பெண் இருபாதங்களையும் உத்கட்டிதமாக்கி
வலக்கையை உயர்த்தி அதிலுள்ள கோலால் முதல் பெண்ணின் வலக்கைக்
கோலைத் தட்டுகிறார். இடமாய் ஒருக்கணித்து இளநடைபயில்வது போல்
திரும்பியுள்ள மூன்றாம் பெண்ணின் வலக்கைக் கோல் நடுமங்கையின் இடக்கைக்
கோலில் மோத, உடலின் சுழற்சியில் ஆட்ட விரைவைக் காட்டும் அவரது
இடக்கைக் கோல் இடுப்பருகே நீண்டுள்ளது. மூவரில் நடுப்பெண்ணின் இரு கைக்கோல்களும் பிற இருவர் கோல்களுடன் இணைந்து ஒலியெழுப்ப முதல்வர்,
மூன்றாமவர் கைக் கோல்களில் ஓரிணை அடுத்த சுழலுக்காய்க் காத்துள்ளன.

கோலாட்டக் கோயில்கள்

முதல் கோலாட்டச் சிற்பமாகத் தாராசுரக் காட்சி கண்முன் கதை
விரித்தபோதும் தமிழ்நாட்டில் கோலாட்டத்தைப் பரவலாக்கிய பெருமை
விஜயநகர அரசர்களையே சாரும் வாருணி. ஹம்பிக் கோயில்களில்
காணப்படுமாறு போலவே தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றிலும்
கோலாட்டத்தில் தங்களுக்குள்ள ஆளுமையை விஜயநகரச் சிற்பிகள்
பதிவுசெய்துள்ளமையை உன்னிடம் கூறியிருக்கிறேன். ஊர்வலக் காட்சிகள்
போலவும் தனித்த கோலாட்ட நிகழ்வுகளாகவும் அவர்தம் செதுக்கல்களைச்
சிராப்பள்ளி திருநெடுங்களநாதர், திருக்கோடிக்கா கோலக்கநாதர், காஞ்சிபுரம்
கச்சபேசுவரர் – ஏகாம்பரேசுவரர் – வரதராஜப்பெருமாள், வேலூர்
ஜலகண்டேசுவரர், வல்லம் விசுவநாதேசுவரர், மேலைச்சேரி திரௌபதி அம்மன்
கோயில்களில் நான் பார்த்திருக்கிறேன். காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திகுன்றம்
சமணக்கோயிலிலும் உத்தரகோசமங்கை ஆடவல்லான் மண்டபத்திலும்
ஓவியக்காட்சியாகக் கோலாட்டம் காட்டப்பட்டுள்ளது.

கோலாட்டக் களங்கள்

கோயில் கட்டுமானத்தின் பல பகுதிகளில் இக்கோலாட்டக் காட்சிகளைக்
காணமுடிந்தாலும் வளாகச் சுற்றின் துணைத்தளக் கண்டத்திலேயே அவை
பரவலாக இடம்பெற்றுள்ளன. வேலூர்க் கோயிலில் தூண் கட்டிலுள்ள பட்டையில்
சிற்றுருவச் சிற்பத் தொகுதியாகக் காட்டப்பட்டுள்ள கோலாட்டம்,
மேலைச்சேரியில் உத்திரத்தில் காணப்படுகிறது. திருக்கோடிக்கா கோலாட்டம்
கோபுர உட்சுவரிலமைய, வல்லத்துக் கோலாட்டம் அங்குள்ள நீர்த்தொட்டிகளின்
பக்கப்பகுதிகளைச் சிறப்பிக்கிறது. ஓவியக் கோலாட்டமோ கூரைக்காட்சியாய்
மலர்ந்துள்ளது.

ஊர்வலக் கோலாட்டம்

திருநெடுங்களநாதர் கோலாட்டம்

திருநெடுங்களநாதர் ஊர்வலம்

நெடுங்களநாதர் வளாகத்துள்ள அம்மன்கோயில் பெருமண்டபத்
தென்முகத்தில் வெளித்தெரியும் துணைத்தளப் பகுதியில் மண்டப வாயிலின்
வலப்புறம் கோலாட்டமும் இடப்புறம் ஊர்வலமும் சிற்பத்தொடராகக்
காட்சியாகின்றன. ஊர்வலத்தில், முன்னால் ஒருவர் ஓங்கிய வாளுடன் நன்கு
அலங்கரித்த குதிரையை நடத்திச்செல்ல அதன் மேல் இவர்ந்துள்ளவர்
இடக்கையில் கடிவாளத்தைப் பிடித்தவாறு வலக்கையை நீட்டியுள்ளார்.
குதிரையின் பின்னால் குடை, கவரி, குடுவை, சந்தனக்கிண்ணம் ஆகியவற்றுடன்
பணியாட்கள் ஐவரும் வாள், கேடயம் கொண்டவர்களாய் வீரர்கள் மூவரும்
பின்தொடர்கின்றனர்.

இந்த ஊர்வலத்திற்கான முன்னோட்ட ஆடலாய் வாயிலின் வலப்புறம்
பத்துப் பெண்களின் கோலாட்டம். அனைவருமே அழகிய கொண்டையும்
பனையோலைக் குண்டலங்களும் கழுத்தாரமும் தோள், கை வளைகளும் நடுப்பட்டை கொண்ட இடையாடையும் பெற்றுள்ளனர். இடையாடையின் மேல்
அழகிய விரிப்பாய் அனைவருக்கும் தொடையளவிலான சுருக்கிக்கட்டிய
மடிப்பாடை. சிலர் நேர்ப்பார்வையிலும் சிலர் லேசான ஒருக்கணிப்பிலும்
உள்ளனர். ஆட்ட விரைவுக்கேற்பச் சிலர் தலையை வலம் அல்லது இடம் சாய்த்தும்
குனிந்தும் சற்றே நிமிர்ந்தும் அழகுடன் திகழ்கின்றனர். ஒரு கையின் கோல்,
உடலின் முன்புறம் நீண்டு வல அல்லது இட ஆடலரின் கோலுடன் மோத,
மற்றொரு கை தலையின் பின்புறம் கோலை நீட்டி, அடுத்துள்ள ஆடலரின் அதே
அமைப்பிலான கோலைத் தட்டுமாறு ஆடும் இவ்வழகியரின் பாதங்கள்
ஆட்டத்தின் போக்கிற்கேற்பப் பார்சுவம், சூசி, அக்ரதலசஞ்சாரம் எனப் பலவாறு
அமைய, சிலர் ஊர்த்வஜாநுவாய்க் காலை உயர்த்தியும் ஆடுகின்றனர் வாருணி.

திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள்

தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண், திருக்கோடிக்கா

திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள் ஒரு பாதத்தைப் பார்சுவமாக்கி, ஒரு
காலை ஊர்த்வஜாநுவாக உயர்த்திக் கோலாட்டம் அடிக்கின்றனர்.
பூட்டுக்குண்டலம், கழுத்தணிகள், தோள், கை வளைகள், நெற்றிச்சுட்டி,
நடுவிரிப்புடனான இடைப்பட்டாடை, சலங்கையுடன் இரு கைக் கோல்களும்
அடுத்துள்ளவர் கோல்களுடன் மோத, விரைந்தும் சுழன்றும் ஆடும்
அப்பெண்களின் திருமுகங்கள் பல கோணங்களில் திரும்ப, இதழ்களில் எழிலார்ந்த
புன்னகை. ஊர்வலத்தில் வாளும் கேடயமும் ஏந்திய வீரர்கள் பலராகவும் ஈட்டி,
குத்துவாள், கொடி, தண்டு, பானை கொண்டவர்கள் சிலராகவும் உள்ளனர். ஒரு
சிற்பம் தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண்ணைப் படம்பிடிக்க,
மற்றொன்றில் கோலாட்டக் காரிகைக்கு மத்தளத் தாளம் தரும் கலைஞர்.

வல்லத்துக் கோலாட்டம்

திருவல்லம் தொட்டி

வல்லம் கோலாட்டம் நீ அறிவாய். 1990லேயே அது குறித்த என் தினமணி
கதிர் கட்டுரையை உனக்குத் தந்திருக்கிறேன். அக்கோயிலிலுள்ள கலையெழில்
தொட்டிகள் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கோலாட்டம் மங்கல
நிகழ்வின்போது நிகழ்த்தப்பட்டதாகும். கருவுற்ற பெண் ஒருவர் அமர்ந்திருக்க,
அவருக்குப் பூச்சூட்டி ஒப்பனை செய்கிறார் தோழி. முன்னால் கோலாட்ட நிகழ்வு.
வளைந்தும் நிமிர்ந்தும் சாய்ந்தும் சரிந்தும் கோலாட்டமிடும் அழகியர்தம்
இடையாடைகள் அவர்தம் ஆட்டத்திற்கேற்ப விரிந்தும் சுருங்கியும் மடிப்புகளுடன்
விளங்க, இவ்வாட்டத்திற்கு மத்தளம் வழித் தாளம் தருகிறார் ஆடவக்கலைஞர்.
கோயில் மடைப்பள்ளியில் உள்ள மற்றொரு தொட்டியிலும் அதன் கீழ்ப்புறத்தே
கோலாட்டக் காட்சியும் அன்னங்களும் காட்டப்பட்டுள்ளதைப் பார்த்தது உனக்கு
நினைவிருக்கலாம்.

பிற கோலாட்டங்கள்

கச்சபேசுவரர் கோலாட்டம்

ஏகாம்பரநாதர் கோயில் சுற்றுமாளிகைத் துணைத்தளக் கோலாட்டப்
பெண்கள் அனைவரும் ஒருபாதத்தைப் பார்சுவத்திலிருத்தி, மற்றொரு காலின்
முழங்காலை இடுப்பளவு உயர்த்தியுள்ளனர். அனைவருமே பனையோலைக்
குண்டலங்கள், தோள், கை வளைகள், பட்டாடை, இடைவிரிப்புக்
கொண்டவர்களாய் ஒருவர் வலமும் ஒருவர் இடமுமாய் ஒருக்கணித்தாடுகின்றனர்.
கோலாட்டங்களின் தாளத்திற்கு மத்தள இசை துணைநிற்கிறது. வேலூர்க் கோயில் தூண் கட்டுப் பெண்கள் ஊர்த்வஜாநுவின் பல நிலைகளில் ஒரு கால் உயரக்
கோலாட்டமடிக்கின்றனர். அவர்தம் கைக்குச்சிகளின் நீளம் சற்றே
குறைந்துள்ளது. இக்கோயில் துணைத்தளக் கண்டக் கோலாட்டக் குழுவினர்
கோடிக்காக் குழுவினரை ஒத்துள்ளனர். இங்கும் மத்தள வாசிப்பைக்
காணமுடிகிறது. கச்சபேசுவரர், வரதராஜர், மேலைச்சேரி கோலாட்டக் காட்சிகளும்
இவற்றைப் பின்பற்றியுள்ளன.

ஓவியக் கோலாட்டம்

திருப்பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம்

பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம் நாம் பார்த்ததுதான். பிற இடக்
கோலாட்டக் காட்சிகளிலிருந்து இது மாறுபட்டுள்ளது. இப்பெண்கள் முந்தானை
விரிந்த புடவையும் மேற்சட்டையும் அணிந்தவர்களாய்க் கோலாட்டமாடுகின்றனர்.
அவர்தம் நீள்சடை ஆட்டவளைவுக்கேற்பச் சுழன்றும் நெகிழ்ந்தும் காட்சிதர,
நிமிர்ந்த தலையினராய் ஒருவரையொருவர் பார்த்தவாறு அவர்கள் கோலடிக்கும்
அழகு சிறப்பானது. இதே அமைப்பிலான கோலாட்டம் உத்தரகோசமங்கையிலும்
ஓவியமாக்கப்பட்டுள்ளது. பருத்திக்குன்றம் போலல்லாது இங்கு புடவையின்
தலைப்பு ஆடுவோரின் மார்புப்பகுதியை மறைத்துள்ளது.

மாமல்லபுரம் செங்கல்பட்டுச் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் நாம்
பார்த்த காட்சி உனக்கு நினைவிருக்கலாம். இருபதுக்கும் மேற்பட்ட ஆடவர்கள்
கோலாட்டமாடிக் கொண்டே ஊர்வலமாகச் சாலையில் சென்றனர். அவர்கள் சற்று
ஓய்வெடுத்தபோது நாம் அவர்களை நெருங்கி உரையாடினோம்.
கோலாட்டமாடிக்கொண்டே திருப்பதிக்கு நடைப்பயணம் செல்வதாக
அப்பெருமக்கள் தெரிவித்தது உனக்கு நினைவிருக்கலாம்.

பிற்சோழர் காலத்தே ஒற்றைக் காட்சியாய்க் கண்காட்டும் கோலாட்டம்
விஜயநகர வேந்தர்களின் தழுவல் பெற்ற தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில்
தொடராகவும் தனித்தும் காட்டப்பட்டிருப்பதுடன் ஊர்வலம், தேரோட்டம்
ஆகியவற்றின் சிறப்பு நிகழ்வாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளமை இப்போது
உனக்குத் தெளிவாகியிருக்கும். இன்றைக்குத் தமிழகத்தில் ஆண், பெண்
இருவருக்குமான பொதுவான ஆடல்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோலாட்டம்
பிற்சோழர், விஜயநகரத்தார் காலத்தில் பெண்களால் மட்டுமே இம்மண்ணில்
நிகழ்த்தப்பட்டது போல் இதுவரை கிடைத்துள்ள சிற்பக்காட்சிகள்
கண்காட்டுகின்றன. உன்னுடைய ஆய்வுப் பயணங்களில் வேறெங்கேனும்
கோலாட்டக் காட்சிகள் கண்டிருப்பின் எனக்கு எழுது. கோலாட்டம் ஆய்வு
நிறைவுற அது உதவும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

“வரலாறு- நீங்களும் நானும்” 

ஜூன் 6, 2021 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்திய மெய்நிகர் நிகழ்வில், “வரலாறு- நீங்களும் நானும்” என்ற தலைப்பில் டாக்டர் இரா. கலைக்கோவன் ஆற்றிய சிறப்புரையின் பதிவு இது.