மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்

செங்கல், கருங்கல், மணற்கல் இவற்றுள் ஏதேனும் ஒன்றையோ, இரண்டையோ கலந்து அடுக்கிக் கட்டப்பட்டுள்ள கட்டுத் தளிகளே தமிழ்நாட்டில் மிகுதியாகக் காணப்படுகின்றன. கட்டுத்தளிகள் நிலத்திலோ, பாறை அல்லது குன்றுகளின் மீதோ அமைக்கப்பட்டன. இவ்விரு நிலைகளில் இருந்தும் வேறுபட்டுத் தளம் ஒன்றின்மீது அமைக்கப்பட்ட விமானங்களையே மாடக்கோயில்கள் என்கிறோம்.

டாக்டர் இரா. கலைக்கோவன்

இருண்ட காலமா?

இருண்ட காலமா?

இருண்டகாலத்தின் பிடியிலிருந்து தமிழகம் விடுதலையான முதல் 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக் கட்டட, சிற்பக் கலைகளில் நிகழ்ந்த வியத்தகு மாற்றங்கள் திடீரென நிகழ்ந்தவையாக இருக்கமுடியாது. கல் எனும் ஊடகமாற்றம் புதியதென்றாலும் அதன் பின்னணியிலான கலைச் சிந்தனைகளும் காட்சிப்படுத்தல்களும் சங்க, காப்பியக் காலப் பதிவுகளின் விரிவாக்கங்களாகவே உள்ளமை வெளிப்படை.

டாக்டர் இரா. கலைக்கோவன்

மா. இராசமாணிக்கனார்

மா. இராசமாணிக்கனார்

இந்திய இலக்கியச்‌ சிற்பிகள்‌ வரிசையில்‌ எழுதப்பட்டுள்ள இந்த நூல்‌, முனைவர்‌ மா இராசமாணிக்கனாரின்‌ வாழ்க்கை வரலாற்றையும்‌ அவருடைய முப்பத்தேழு ஆண்டுக்‌ காலப்‌ படைப்புகளையும்‌ வளரும்‌ தலைமுறையினர்‌ அறிந்துகொள்ள வேண்டும்‌ என்ற கருத்துடன்‌ உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கியம்‌, இலக்கணம்‌, வரலாறு, சமயம்‌, கோயிற்கலைகள்‌, கல்வெட்டு, புதினம்‌, சிறுவர்‌ இலக்கியம்‌, வாழ்க்கை வரலாறு என்று பல்வேறு துறைகளில்‌ நூல்களைப்‌ படைத்துள்ள இப்பெருமகனார்‌ சிறந்த சிந்தனையாளராக நேரிய வாழ்வு வாழ்ந்தவர்‌.

டாக்டர் இரா. கலைக்கோவன்

திருவானைக்காவில் ‘தலைப்பலி’ சிற்பங்கள் கண்டுபிடிப்பு

சமீபத்தில் திருவானைக்கா பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட முசிறி அரசினா் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியா் அர.அகிலா, திருவானைக்கா கீழ உள்வீதியிலுள்ள ஆனந்த கணபதி கோயில் நுழைவு வாயிலின் வெளிச்சுவரில் பக்கத்திற்கொன்றாக இரண்டு ‘தலைப்பலி’ சிற்பங்கள் இணைத்துக் கட்டப்பட்டுள்ளதைக் கண்டறிந்தாா்.

இச்சிற்பங்களை ஆய்வு செய்த டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டர் இரா. கலைக்கோவன், அவை பொதுக்காலம் 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல தகவல்களுடன் நாளிதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு

வலஞ்சுழி வாணர்

வலஞ்சுழி வாணர்

குடந்தைத் தஞ்சாவூர்ச் சாலையில் 6 கி. மீ. தொலைவிலுள்ள திருவலஞ்சுழிக் கோயிலை முழுமையாக ஆய்வுசெய்து எழுதப்பட்ட நூல். ஆய்வின்போது பல புதிய கல்வெட்டுகளும் சிற்பத்தொகுதிகளும் கண்டறியப்பட்டன. கல்வெட்டுகள் சுட்டும் பிடாரி ஏகவீரி அடையாளப்பட்டதுடன் அவர் கோயிலும் கண்டறியப்பட்டது. கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள், இலக்கியம் சார்ந்து உருவான நூல்.

இராஜராஜர் கால ஊதியக்குறைப்பு

இரா. கலைக்கோவன்

தமிழ்க் கல்வெட்டுகளில் எண்ணிக்கையிலும் தரவுகளைப் புதையலாய்க் கொண்டிருப்பதிலும் முதனிலையில் உள்ளவை சோழர் காலக் கல்வெட்டுகளே. பல வரலாற்றறிஞர்கள் அவற்றிலிருந்து அகழ்ந்தளித்திருக்கும் பன்முகப் பதிவுகளையும் தாண்டி, அவை அடைகாக்கும் வரலாற்றுச் செய்திகள் பலவாகும். அவற்றுள் ஒன்றுதான் முதல் இராஜராஜர் காலத்தே நிகழ்ந்த பணியாளர் ஊதியக்குறைப்பு.

சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகினாற் போலவே, அவற்றின் நடைமுறைகளும் பெருகின. வழிபாடு, படையலுக்கென ஏராளமான நிலத் தொகுதிகளும் பொன், வெள்ளி, காசு, கால்நடை முதலியனவும் வழங்கப்பெற்றன. இறைத்திருமேனிகளை அழகுபடுத்தவும் அவற்றுக்குப் பெருமை சேர்க்கவும் விலை மதிப்பற்ற அணிகலன்கள் வந்தடைந்தன. வரவு மிகுதியான நிலையில் நிதியம், நகைகள் காக்கக் கருவூலங்களும் அவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியமாயின. கோயிலின் வரவு செலவுக்கேற்ப வழிபாட்டு நடைமுறைகள் விரிவடையவே, பணியாளர் பட்டியலும் நீண்டது. முதல் இராஜராஜர் காலத்தே தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் 400 தளிப்பெண்டுகள் பணியிலிருந்தனர். இவர்கள் தவிர, 36 வகையான தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த 217 தொழிலர்களைக் கோயில் புரந்தது. அவர்களுள் 138 பேர் ஆடல், இசையுடன் தொடர்புடைய நுண்கலைஞர்கள்.

இராஜராஜீசுவரம் அளவிற்கு இல்லையென்றாலும் பல கோயில்களில் இத்தகு பணியாளர் பெருமளவில் இருந்தனர். பணியமர்த்தப்பட்டபோதே அவர்களுக்கான ஊதியம் நிலப்பங்காக அறிவிக்கப்பெற்றது. செய்யும் தொழிலுக்கேற்ப அப்பங்கின் அளவு அமைந்ததை இராஜராஜீசுவரத் தளிச்சேரிக் கல்வெட்டால் அறியமுடிகிறது. ஒரு பணிக்கென உறுதிசெய்யப்பெற்ற நிலப்பங்கு, கோயில் தேவைக்கேற்ப வேறு பணிக்கு மாற்றப்படுவதையும், சில நேரங்களில் அதே பணியில் புதியவர்கள் நுழையும்போது பங்கின் அளவு மாறுதலுக்கு உள்ளாவதையும் கல்வெட்டுகள் இனிதே உணர்த்துகின்றன.

பாச்சில் அவனீசுவரம்

ஆனால், ஒருவர் பணியிலமரும்போது முடிவாகும் நிலப்பங்கு, அவர் பணியிலிருக்கும்போதே கோயிலின் புதிய தேவைகளுக்காகக் குறைக்கப்படுவது அரிதினும் அரிதான நிகழ்வாகும். முதல் இராஜராஜர் காலத்தில் இத்தகு ஊதியக்குறைப்பு சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பாச்சில் மேற்றளி, பாச்சில் அவனீசுவரம், திருவாசி மாற்றுரை வரதீசுவரர் ஆகிய மூன்று கோயில்களில் நிகழ்ந்துள்ளது. இதை நிகழ்த்தியவர் நாடு வகை செய்யும் பணியிலிருந்த ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் என்ற அரசு அலுவலர். இவரை, ‘இராஜராஜரின் பணிமகன்’ என்கிறது கல்வெட்டு.

பணிக்கான நிலப்பங்குகளைக் குறைக்கும் முன், பங்கிலிருந்து கிடைக்கும் நெல் அளவு, அதில் பணியாளர் குடும்பத்திற்கு எந்த அளவு போதுமானது என்பதையெல்லாம் அவர்களிடமே கேட்டு ஆராய்ந்தே உத்தமன் ஊதியம் குறைத்ததை, ‘உண்டு வருகின்ற பங்கு வினவி, பங்கில் இவர்களுக்குப் பற்றும்படி நிறுத்தி (கூடுதலாக உள்ளதை) வாங்கி’ எனும் கல்வெட்டுத் தொடர் நிறுவுகிறது. இந்த ஊதியக்குறைப்பில் தொழில் சார்ந்த பாகுபாடு இல்லாமையையும் அறியமுடிகிறது.

‘ஏன் இந்தத் திடீர் ஊதியக்குறைப்பு’ என்ற வினாவுக்கு ஒவ்வொரு கோயிலும் ஒரு விடை வைத்திருந்தது. அவனீசுவரத்தில் இப்படிக் குறைக்கப்பட்ட பங்குகள் வழிக் கோயிலுக்கு 300 கலம் நெல் கிடைத்தது. அதில் 120 கலம் மாதந்தோறும் முதல் இராஜராஜரின் பிறந்த நட்சத்திரமான சதையத்தன்று இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்ய ஒதுக்கப்பெற்றது. எஞ்சிய 180 கலம் அவர் தமக்கை குந்தவையாரின் பிறந்த நட்சத்திரமான அவிட்டத்தன்று இறைவனுக்குத் திங்கள்தோறும் சிறப்பு வழிபாடு செய்யவும் அக்கொண்டாட்டத்தின்போது கோயிலில் 60 பேருக்கு உணவிடவும் பயன்பட்டது.

பாச்சில் மேற்றளி

பாச்சில் மேற்றளியில் நடந்த ஊதியக்குறைப்பால் வரவான 909 கலம் நெல் மேற்றளி ஊரில் முதல் இராஜராஜரின் ஜனநாதன் எனும் விருதுப்பெயரேற்று அமைந்திருந்த சாலையில் நாள்தோறும் 30 பிராமணர்களுக்கு உணவிட உதவியது. திருவாசியில் ஊதியக்குறைப்பால் பெறப்பட்ட 142 கலம் நெல் அக்கோயிலிலிருந்த உலாத்திருமேனியான இராஜராஜவிடங்கரின் பெயரில் வரவு வைக்கப்பெற்று அத்திருமேனிக்கு நாளும் ஒரு சந்தி வழிபாடு, படையல் அமைக்கத் துணையானது.

இந்த ஊதியக்குறைப்புக் கல்வெட்டுகளால் இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய தொழிலர், கலைஞர் சிலரை அறியமுடிவதுடன், இங்குப் பயன்பாட்டிலிருந்த இசைக்கருவிகளின் பட்டியலும் கிடைக்கிறது. அவனீசுவரத்திலும் திருவாசியிலும் மெராவியம், குழல் முதலிய கருவிகளை இசைத்தவர்களும் நட்டுவரும், கணக்கரும் பணியாற்ற, அவனீசுவரத்திலும் மேற்றளியிலும் சோதிடரும் மெய்மட்டு உள்ளிட்ட கருவிக்கலைஞர்களும் பணியிலிருந்தனர். காளம், செயகண்டிகை, கரடிகை முதலிய இசைக்கருவிகளை இயக்கியோர் மேற்றளியில் வாழ, வண்ணக்கர், நாவிசர், தச்சர், பரிசாரகர் முதலிய தொழிலர்கள் திருவாசியில் உழைத்தனர். மேற்றளியிலும் திருவாசியிலும் காவிதி என்ற பெயருடன் விளங்கிய கணக்கர்களையும் அவனீசுவரத்திலும் மேற்றளியிலும் இருந்த வழிபாடு நிகழ்த்தியவர்களையும் அடையாளப்படுத்தும் இக்கல்வெட்டு, மூன்று கோயில்களிலும் இருந்தவர்களாக மட்பாண்டம் வனையும் வேட்கோவர்களைத்தான் முன் நிறுத்துகிறது.

இப்பணியாளர்கள், கலைஞர்களின் ஊதியத்தில் உச்சமாக இரண்டு பங்கும் கீழாக அரைக்கால் பங்கும் குறைக்கப்பட்டது. இரண்டு பங்கு இழப்புப் பெற்றவர்கள் மேற்றளிக் கருவிக் கலைஞர்கள். ஒன்றரைப் பங்கை இழந்தவர்களும் மேற்றளியினரே. அவனீசுவரத்து நட்டுவரும் ஆசாரியரும் தலைக்கு ஒரு பங்கு இழக்க, அரைப்பங்கு இழப்பை மூன்று கோயில் பணியாளர்களில் பலர் சந்தித்தனர். மூன்று கோயில்களில் மிகையான குறைப்பு நேர்ந்ததும் மேற்றளியில்தான். அங்குப் பதினாறு பங்குகள் நீக்கப்பட்டன. மிகக் குறைவான பங்கிழப்பைப் பார்த்தது திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில். அங்கு உச்சக் குறைப்பே அரைப்பங்குதான். இராஜராஜீசுவரத் தளிச்சேரிக் கல்வெட்டுப்படி ஒரு பங்கு என்பது 100-120 கலம் நெல் விளைவு தந்த ஒரு வேலி நிலமாகும்.

மாற்றுரை வரதீசுவரர்

ஊதியக்குறைப்பை உழைப்போருக்கு நிகழ்த்தினாற் போல, இம்மூன்று கோயில்களிலும் ஒளிர்ந்த விளக்குகளுக்கான எண்ணெய்ச் செலவையும் உத்தமன் குறைத்துள்ளார். மேற்றளி விளக்குச் செலவில் அரைப்பங்கும் அவனீசுவரத்து எண்ணெய்ச் செலவில் கால்பங்கும் குறைத்த உத்தமன், திருவாசிக் கோயில் விளக்குகளை மட்டும் தொடவில்லை. அது மட்டுமன்று, இம்மூன்று கோயில்களிலும் பணியாற்றிய தேவரடியார், தளிப்பெண்டுகள், கூத்திகள், தலைக்கோலியர் ஊதியத்திலும் அவர் கைவைக்கவில்லை. சொல்லப்போனால், இந்த மூன்று கோயில்களுமே சோழர் காலத்து ஆடற்கலையை உயர்த்திப்பிடித்த பெண் கலைஞர்களின் வாழிடங்களாக விளங்கிய பெருமைக்குரியவை.

திருவள்ளூர் மாவட்டம் விசாலீசுவரர் கோயிலில் புதிய கல்வெட்டு

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்கள், காலத்தால் முற்பட்ட கட்டுத்தளிகள் பற்றிய ஆய்வுநூலொன்றை உருவாக்கி வருகிறார்கள். அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டம் விளக்கணாம்பூண்டியிலுள்ள விசாலீசுவரர் கோயிலில் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டபோது, மைய ஆய்வாளர் மருத்துவர் ச. சுந்தரேசன், பொதுக்காலம் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயாதித்த வாணராயர் என்ற பாண அரசரின் புதிய கல்வெட்டொன்றைக் கண்டறிந்தார்.

கல்வெட்டு குறித்து டாக்டா மா. இராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இச்செய்தி குறித்த முழு தகவல்களுக்கு, மின்னிதழ் இணைப்பைக் கீழே காணலாம்-

விசாலீஸ்வரா் கோயிலில் பாண அரசரின் கல்வெட்டு!

தகவல்களைத் தாங்கிய நாளிதழ்ச் செய்திக்குறிப்பு

அடையாளத்தின் அடையாளம்

இரா. கலைக்கோவன்

‘புனிதவதி’ எனும் பெயர் கொண்டவரில் பலர் அப்பெயரின் பின்னிருக்கும் பெருமை அறிவதில்லை. புனிதவதி வெறும் பெயரன்று. பெண்ணாகப் பிறந்து தம்மைப் பேயாக மாற்றிக் கொண்ட ஓர் அம்மையின் முதற்கட்ட வாழ்க்கையே அந்தப் பெயருடன்தான் ஒட்டியுள்ளது. ஊர்ப்பெயருடன் சிவபெருமானால் வழங்கப்பட்ட அம்மை எனும் சிறப்புப் பெயர் இணையக் காரைக்கால் அம்மையாக அறியப்படும் இப்புனிதவதிப் பெருமாட்டி பல முதல்களின் சொந்தக்காரர்.

சிவபெருமானைப் போற்றி முதன்முதலாகப் பதிகம், வெண்பா, அந்தாதி, கட்டளைக்கலித்துறை பாடிய பெருமைக்குரிய இவர், தம் இறைப்பாடல்களால் திருமுறைகளில் இடம்பெற்று அறுபத்து மூவரிலும் ஒருவரான ஒரே பெண்மணி. அறுபத்து மூன்று தனியடியார் திருமுன்களில் அமர்ந்த திருக்கோலத்தவர் இவர் ஒருவரே. சிவபெருமானின் திருக்கூத்தை உளம் களிக்கப் பாடி, அந்த ஆடலின் களம், ஆடும்போது இறைவன் கொண்ட ஒப்பனை, கைகளில் கொண்ட கருவிகள், ஆடை, அணிகள், ஆடலுக்கு அமைந்த இசை, அதைத் தந்த கருவிகள், அவற்றை இயக்கிய பேய், பூதம் உள்ளிட்ட உடன்கூட்டத்தார், உடன் ஆடியவர்கள், அந்த ஆடலின் அமைவு, அதன் விளைவுகள், ஆடலைக் கண்ணுற்றார் என இறையாடல் நோக்கில் பதிகப் பெருவழியில் பயணப்பட்ட முதல் அடியாரும் அம்மைதான்.

பெருமைகள் சூழ உயர்ந்தோங்கி நிற்கும் இவ்வம்மையை முதன்முதலாக வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்ந்த பெருமை சுந்தரருக்கு உரியது. தம் காலத்தும் தமக்கு முன்னும் வாழ்ந்த இறையடியார்களின் பெயர்களைத் தொகுத்து அவர் பாடிய திருத்தொண்டத்- தொகையில்தான் புனிதவதியான காரைக்கால் அம்மை அறிமுகமாகிறார். அந்த அறிமுகமும் அவரது இயற்பெயராலோ, வழங்கு பெயராலோ அமையவில்லை. அவர் விரும்பி வேண்டிப் பெற்ற பேய்வடிவமே பெயராகிப் பேயாராகவே சுந்தரரால் பதிவுபெறுகிறார் அம்மை. ‘பெருமிழலைக் குறும்பனார்க்கும் பேயார்க்கும் அடியேன்’ என்பது சுந்தரர் வாய்மொழி.

திருத்தொண்டத்தொகையை உள்வாங்கி நம்பியாண்டார் நம்பியால் சற்றே விரிவுசெய்யப்பட்ட அடியார்களின் வரலாறுதான் திருத்தொண்டர் திருவந்தாதி. அதில்தான் அம்மையைப் பற்றிய இரண்டு புதிய செய்திகள் கிடைக்கின்றன. சிவபெருமானைக் காண அம்மை கயிலை சென்றதாகவும் அங்குக் கால்பதித்து நடப்பதை விழையாமல் தலையால் நடந்து சென்றதாகவும் அது கண்ட உமை சிவபெருமானிடம் யாரிவர் எனக் கேட்டதாகவும் கூறும் அந்தாதி, இறைவன், ‘இவர் நம் அம்மை’ என்று மகிழ்ந்துரைத்தாகச் சொல்கிறது.

சிவபெருமானால் அம்மை என்றழைக்கப்பட்ட பெருமையுடன் காரைக்கால் குலதனமாகவும் நம்பியால் அம்மை உயர்த்தப்பட்டுள்ளார். கயிலையில் அம்மை தலைகீழாக நடைபயின்ற காட்சியைத் தாராசுரம் கோயில் விமானம் சிற்பச் செதுக்கலாய்ப் பதிவுசெய்துள்ளது. சென்னை அருங்காட்சியக வாயிலிலுள்ள சோழர் காலச் சிற்பத்தொகுதியொன்றும் கயிலை நடையைக் கொண்டுள்ளது.

0 Ammaiyin Kayilai Nadai Darasuram

அம்மையின் கயிலை நடை, தாராசுரம்

அம்மையின் வரலாறு பேசும் மூன்றாவது நூல் சேக்கிழாரின் பெரியபுராணம். அதில்தான், பல பாடல்கள் வழி அம்மையின் முழுமையான வரலாற்றைச் சேக்கிழார் பகிர்ந்து கொள்கிறார். தம்மைக் காணவந்த அம்மையிடம் சிவபெருமான், ‘உமக்கு வேண்டுவது கேட்க’ என்றதும், இன்ப அன்பு, பிறவாமை, பிறந்தால் இறைவனை மறவாமை கேட்ட அம்மை, மிகச் சிறப்பான ஒன்றையும் வேண்டிப் பெற்றார். ‘பெருமானே, நீ ஆடும்போது உன் திருவடிக்கீழ் நான் இருக்கவேண்டும்’. காரைக்கால் அம்மையின் இந்த வேண்டுகோளைச் சேக்கிழார் எப்படி அறிந்திருக்கமுடியும்? பெரியபுராணத்தைப் பல கோணங்களில் ஆய்வுசெய்த பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கனார் சேக்கிழாரை வரலாற்று ஆய்வாளராக அடையாளப்படுத்துவார். அது உண்மையே என்பதை அம்மையின் வரலாற்றுத் தடங்கள் நிறுவுகின்றன.

பேய், காரைக்கால் குலதனம், கயிலையில் தலைகீழ் நடை எனும் தொடக்க அடையாளங்களுடன் வெளிப்படும் அம்மையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேண்டுகோளைக் கண்முன் காட்சியாக்கியவரும் ஓர் அம்மைதான். பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் பெருவாழ்வு வாழ்ந்த இவ்வம்மையை வரலாறு மழவரையர் மகளாகக் கொண்டாடுகிறது. கண்டராதித்த சோழரின் தேவியாகவும் உத்தமசோழரின் அன்னையாகவும் தம்மைக் கல்வெட்டுகளில் அடையாளப்படுத்திக் கொள்ளும் செம்பியன்மாதேவி எனும் இவ்வம்மையும் காரைக்கால் அம்மை போல் பல முதல்களின் முதல்வர். இவர் காலத்தில்தான் கோயில்களில் மண்டபங்களும் அவற்றில் இறைக்கோட்டங்களும் பெருகின. செப்புத்திருமேனிகள் பலவாய் உருவாயின. பழங்கோயில்கள் புதுப்பிக்கப்பெற்றபோது அங்கிருந்த கல்வெட்டுகள் கருத்தோடு படியெடுக்கப்பட்டு, ‘இதுவும் ஒரு பழங்கற்படி’ என்ற குறிப்புடன் புதிய கட்டுமானத்தில் பதிக்கப்பெற்றன.

கருந்திட்டைக்குடி ஆனந்ததாண்டவரும் காரைக்கால் அம்மையும்

மாதேவியின் சாதனைகளின் சிகரமாய், முற்சோழர்களின் தொடக்கக்காலக் கோயில்களில் கண் தழுவாத இடங்களில் ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சிவபெருமானைத் தாம் திருப்பணிசெய்த கோயில்களில் மண்டபக்கோட்டத்தில் பேருருவினராய் ஆடச்செய்தமையைக் குறிக்கலாம். இந்தச் சிற்பப் பதிவுகள் அனைத்திலும் மாதேவியின் மகத்தான முத்திரையாக சிவபெருமானின் திருவடிக் கீழோ, அருகிலோ காரைக்கால் அம்மை இடம்பெற்றார். கைத்தாளமிடுமாறோ, கைகளைக் கொட்டுமாறோ, பாடியநிலையிலோ, ஆடலைப்போற்றி மகிழுமாறோ அம்மையின் பேயுரு அடையாளமானது. கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயில் ஆனந்ததாண்டவக் காட்சியிலுள்ள அம்மையின் வடிவம் ஈடுஇணையற்ற சிற்பப்பதிவாகும்.

ஆனந்ததாண்டவரும் காரைக்கால் அம்மையும் – கூகூர் மற்றும் திருக்கோடிக்கா

செம்பியன்மாதேவி அடையாளப்படுத்துவதில் முதன்மையர். தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் இவர் ஒருவரே தம் கணவரைப் பெயர்சுட்டி சிற்பக் காட்சியாக்கியிருப்பவர். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கோனேரிராஜபுரம் உமைக்குநல்லவர் கோயிலில் கண்டராதித்தர் இறைவனை வழிபடும் காட்சி கல்வெட்டுடன் பதிவாகியுள்ளது. அதே காட்சி அம்மை திருப்பணி செய்த சித்தீசுவரம், ஆனாங்கூர், ஆடுதுறை உள்ளிட்ட வேறு சில கோயில்களிலும் மீள்பதிவாகியுள்ளது. அடையாளத்தின் அடையாளமாய் வாழ்ந்த செம்பியன்மாதேவியே சேக்கிழாருக்குக் காரைக்கால் அம்மையின் வேண்டுகோளைத் தாம் அமைத்த சிற்பக்காட்சிகளின் வழி அடையாளப்படுத்தியவர்.

கோனேரிராஜபுரம் கண்டராதித்தர்

சுந்தரர், நம்பியின் சுட்டல்களாலும் தம் காலத்து வழங்கிய செய்திகளாலும் ஈர்க்கப்பட்டே காரைக்கால் அம்மையின் வேண்டுகோளுக்கு இத்தகு முத்திரைப்பதிவைச் செம்பின்மாதேவி வழங்கியிருக்கிறார். அறுபத்து மூன்று அடியார்களில் சிற்பக்காட்சிகள் வழிப் பல்லவர் காலத்திலேயே இறைவனோடு இணையும் பேறு பெற்ற முதல் அடியவர் சண்டேசுவரர் என்றால், இறையாடலோடு நெருங்கிய முதல் அடியவராகக் காரைக்கால் அம்மையைக் குறிக்கலாம். ஆடலைப் பாடிய முதல் அடியவர் என்ற பெருமையோடு அவ்வாடலை அருகிருந்து காணும் ஒரே அடியவர் என்ற சிறப்பும் என்றென்றும் அம்மைக்கே.

வரலாறு இலக்கிய ஏடுகளிலோ, கல்வெட்டு வரிகளிலோ மட்டுமில்லை. அது கோயில்களில் சிற்பக்காட்சிகளாகவும் கண்சிமிட்டுகிறது. தொடரிழைகளைக் கண்டு தொடர்புபடுத்திக் கொள்பவர்களே வரலாற்றை வளப்படுத்துகிறார்கள்.

‘எனைத்தானும் நல்லவை கேட்க’- வானொலிப் பொழிவு

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ நிகழ்ச்சியில், இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் சார்ந்த செய்திகளைத் தொடர்ப் பொழிவாக டாக்டர் இரா. கலைக்கோவன் வழங்கி வருகிறார். முதல் பொழிவு 03.10.23 திங்களன்று ஒலிபரப்பானது. சுவையான வரலாற்றுத் தகவல்களைக் கேட்டு மகிழ, திங்கள்தோறும் காலை 06.10 மணிக்கு இணையலாம்.

பொழிவு 1 – 03.10.23

சங்க இலக்கியங்கள் குறித்தும், குறிப்பாக மிகுதியாகப் பேசப்படாத கீழ்க்கணக்கு நூல்கள் பற்றியதுமாக முதல் பொழிவு அமைந்தது. அதன் பதிவை இங்கு கேட்கலாம்.

பொழிவு 2- 10.10.23

பூதன் சேந்தனாரின் இனியவை நாற்பது காட்டும் கல்விச் சிந்தனைகளைப் பற்றியது இந்தப் பொழிவு. வயிற்றுப் பசிக்குக் கொள்ளப்படும் உணவு உயிர்காப்பதுபோல, செவிகளில் நிறையும் கருத்துக் குவியல் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

பொழிவு 3- 17.10.23

இந்த வாரப் பொழிவு, கீழ்க்கணக்கின் மற்றொரு நூலான விளம்பி நாகனாரின் நான்மணிக்கடிகை கூறும் புகழ் வளர்த்து வாழ்வதற்கான வழிகள் பற்றியதாக அமைந்தது. முதலில், ‘பிறர்க்களித்து உண்பதால் புகழ் வளரும்’ என்று கடிகை இயம்புவதை வள்ளுவத்தோடு இணைத்து விளக்கும் டாக்டர் இரா. கலைக்கோவன், நூல் காட்டும் வாழ்வின் எளிய வழிமுறைகளை “புகழை விதை- அதற்கு அறம் போற்றும்; அறம் நிலைப்பட வாழ- சினம் விடு”- என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறார்.

பொழிவு 4- 25.10.23

கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நல்லாதனார் இயற்றிய திரிகடுகத்தின் சிறப்புக்களைச் சுட்டியது இந்த வாரப் பொழிவு. ‘ஒவ்வொரு பாடலும் வாழ்விற்குத் தேவையான மூன்று நல்கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதால் பெயர்ப் பொருத்தம் இனிதே அமைந்தது’ என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன். எடுத்துக்காட்டாகக் கடுகப் பாடல்களில் ஒன்று, நன்மைப் பயவாத மூன்றாய்- கணக்காயர் இல்லாத ஊரையும்; பிணக்கறுக்கும் மூத்தார் இல்லாத அவையையும்; பகிர்ந்துண்ணும் மனமில்லாத பக்கத்து வீட்டுக்காரரையும் காட்டுவதைச் சுவைபட விளக்குகிறார்.

பொழிவு 5- 31.10.23

முக்கடுகத்தின் 43ஆவது பாடல் கூறும் வாழ்வின் கோட்பாடுகளான- அ) வாயின் அடங்குதல்; ஆ) மாசற்ற செய்கை; இ) பொய்யற்ற நெஞ்சம் கொள் ஆகியன பற்றியது இந்தப் பொழிவு. “இதழ் மூடிக்குள் பல் அடுக்குகளின்பின் பக்குவமாய்ச் சிறை வைக்கப்பட்டிருந்தபோதும் நா அடங்கி இருப்பதில்லை. வாய்ப்பமையும் போதெல்லாம் வெளிப்பட்டு வேதனைகளை விதைத்துவிடுகிறது,” என்று அடங்காத நாவின் விளைவுகளை அழகாக விளக்குகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

கலை, இலக்கியத்தில் பேய், பிசாசு, பூதம்

இரா. கலைக்கோவன்

பேய், பிசாசு, பூதம் என்று சொல்லும் போதே ஒரு மெல்லிய நடுக்கம் உடலில் பரவும். கண்கள் நாற்புறமும் சுழன்று, ‘ஏதுமில்லையே’ என்பதை உறுதி செய்யும். அண்மைக் காலத்தே வெளியான பேய்ப்படங்களின் பசுமையான நினைவுகளுடன் பழம் பேய்ப்படங்களின் நிழலான பின்னணியும் மனத்திரையில் ஓடும். காலங்காலமாய் அச்சம் எனும் உணர்வுடன் இணைந்து பின்னப்பட்ட இந்த மூன்று சொற்களும் மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்தே உயிர் பெற்று உலா வருவதே இதற்கெல்லாம் காரணம்.

பேய்

பேய், பிசாசு, பூதம் எனும் இம்மூன்றனுள் தமிழர் இலக்கியத்தில் பெருவழக்குப் பெற்று மிளிர்பவை பேயும் பூதமும்தான். பேய் தொல்காப்பியப் பழைமையது. பொருளதிகாரக் காஞ்சித்திணை பேயின் செயற்பாடுகள் குறித்துப் பேசுகிறது. போரில் காயப்பட்டோரை நரி முதலியன கடித்துவிடாதவாறு, அவர்தம் உயிர் தானாகப் போகுமளவும் அருகிருந்து காக்குமாம் பேய். இதை, ‘பேய் ஓம்பல்’ என்றே இலக்கியம் பாராட்டுகிறது. உயிர் நீங்கிய உடலே பேய்க்கு உணவு. அதனால்தான், இந்தக் காவல். தன் உணவைப் பிற உயிர்கள் சேதப்படுத்திவிடக் கூடாதல்லவா! உண்ட மகிழ்வில் பேய் ஆடுவதும் உண்டு. அதைப் பேய்க் குரவையாகப் பார்க்கிறது சிலப்பதிகாரம். பேய்கள் ஆடி மகிழும் போர்க்களத்தைப் படம்பிடிக்கிறது பதிற்றுப்பத்து.

சாமுண்டியின் கீழ்ப் பிணமுண்ணும் பேய்

பேய்களைச் சிவபெருமானுடன் இணைத்து மகிழ்கின்றன பத்திமைக் கால இலக்கியங்கள். அவர் சுடுகாட்டில் ஆடுபவரல்லவா! சம்பந்தரும் அப்பரும் ஆறு திருமுறைகளிலும் காட்டியிருக்கும் பேய்க்காட்சிகள், ‘பேய் வரலாறு’ எழுதுமளவிற்குத் ததும்பி நிற்கின்றன. ஆடிவரும் பேய்கள், கூடி ஓடிவரும் பேய்கள், இசைக்கருவிகளை இயக்கியவாறே பாடிவரும் பேய்கள் எனப் பதிகங்களில் இறையாடலைக் கிளர்ச்சியுடன் காட்ட சம்பந்தருக்கும் அப்பருக்கும் பேய்கள் பெருந்துணையாகின்றன. அச்சமூட்டும் காட்சிகளும் இல்லாமல் இல்லை. அது போலவே பேய் வண்ணனைகளும் பதிகங்களில் விரவிக்கிடக்கின்றன.

பேய் எப்படியிருக்கும்?

காளியுடன் பேய்கள்

நீண்டு விரிந்த செந்நிறக் கூந்தல், வேனிற் கால முருக்கமரத்தின் முற்றிய நெற்றுப் போல் கைவிரல்கள், அகலத்திறந்த வாய், கோரைப் பற்கள், குழிந்த கண்கள், சுழன்றும் சுற்றியும் வரும் நடை என்று இலக்கியப் பேய்கள் கண்காட்டுகின்றன. பேய்கள் எங்கிருக்கும், எப்போது நடமாடத் தொடங்கும் என்பதைக்கூட இலக்கியங்கள் இடஞ்சுட்டிப் பொருள் விளக்கியுள்ளன. சிவபெருமானின் மகளே பேய்த்தொழிலாட்டிதானே!

பூதம்

சங்க இலக்கியங்கள் பேய்க்கு நெருக்கமாக விளங்க, காப்பியங்களும் பத்திமை இலக்கியங்களும் பூதத்தை இமய உச்சிக்குக் கொண்டு செல்கின்றன. பாழ் மன்றத்திலும் போர்க்களத்திலும் மட்டுமே உலவும் பேய்களுக்கு மாறாகப் பூதங்கள் நகர் நடுவில் இடம்பிடித்துத் தீமைகளைக் கண்டித்தன. தவறு செய்தாரைப் பிடித்துண்ணவும் செய்தன. காவல் பூதங்களாகவும் சதுக்கப் பூதங்களாகவும் மக்களால் மகிழ்ந்து போற்றப்பட்ட அவற்றைப் படையாகக் கொண்டவரே சிவபெருமான் என்று அப்பரும் சம்பந்தரும் கொண்டாடுகின்றனர்.

பூதத்தின் தோற்றம்

​குள்ள வடிவின, பெருத்த வயிறின, சிறுகண் உடையன, இருண்டு அகன்ற வாயின, கூட்டமாய் இயங்கும் பண்பின என்று பூதங்களை வண்ணிக்கும் பதிக ஆசிரியர்கள் சிவபெருமான் ஆடும்போது அதற்குப் பாடுவதும் உடன் ஆடுவதும் கருவியிசை சேர்ப்பதும் அவற்றின் அரும்பணி என்று போற்றுகின்றனர். சிவபெருமான் பிச்சையேற்கும் பெம்மானாய் முனிவர் தவச்சாலைகளை அணுகும்போது அவரது பிச்சைக் கலத்தைத் தலையில் சுமந்து முன் நகர்பவை இவையே. இறைவனின் இத்தகு நகர் உலாக்களில் பேய்களுக்கு இடமில்லை. அவை காட்டோடு நின்றுவிடும்.

மக்கள் வழக்கில் பேயும் பூதமும்

பாடல்களில் இடம்பெற்றாற் போலவே மக்கள் உள்ளங்களிலும் நிறைந்து சிலரது பெயராகவே இவை மாறின. பேய்மகள் இளவெயினியும் பூதங்கண்ணனாரும் சங்கக் கவிஞர்கள். பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் முதலாழ்வார் மூவருள் இருவர். பூதப்பாண்டியன் மனைவி இலக்கியப் பாடல் ஈந்தவர். பேயுரு எடுத்துத் தம்மை பேயார் என்று அழைத்துக் கொண்டவர் காரைக்காலம்மை.

சிற்பக் காட்சிகளாய்ப் பேயும் பூதமும்

குடைவரைகளின் நுழைவாயிலான முகப்புகளின் தூண்கள் தாங்கும் கூரையுறுப்புகளில் ஒன்றுதான் எழுதகம். சிற்ப நூல்கள், ‘வலபி’ என்று குறிப்பிடும் இந்த வளைமுகப் பகுதியைத்தான் தங்கள் எண்ணம் போல் கைத்திறன் காட்டும் இடமாய்த் தேர்ந்தனர் சிற்பிகள். தமிழ்நாட்டிலுள்ள 106 குடைவரைகளில் மிகச் சிலவற்றிலேயே எழுதகம் உள்ளது. பல்லவர்ப் பகுதியில் குறிப்பிடத்தக்கது சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை. கொங்குப் பகுதியில் முன்னணியில் நிற்பது கரூர்த் தான்தோன்றீசுவரம். பாண்டியர் பகுதியின் குறிக்கத்தக்க எழுதகம் உள்ள இடமாய் ஒருகல் தளியான கழுகுமலை வெட்டுவான் கோயிலைக் குறிக்கலாம். சோழர்கள் இந்த எழுதகக் கலையைத் தங்கள் கற்றளிகளில் போற்றி வளர்த்து உச்சத்திற்குக் கொண்டு சென்றனர்.

வெட்டுவான்கோயில் கலைப் பூதங்கள்

பலவாய்ப் பூதங்களும் ஒரு சிலவாய்ப் பேய்களும் என இந்த எழுதகக் காட்சிகள் அமைந்தன. மனித வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளை இவற்றின் வழிச் சிற்பிகள் வரலாறாக்கினர். தமிழ்நாட்டில் அன்று வழக்கிலிருந்த இசைக்கருவிகளை இங்குப் பூதங்கள் இசைக்கக் காணலாம். போர்முறைகள், ஆடல்வகைகள், ஒப்பனை, ஆடை- அணிகலன்கள், தலையலங்காரம், அன்றாட நடைமுறைகள், உடற்பயிற்சிகள், குறும்புகள், விளையாட்டுகள், பறவை-விலங்கு வளர்ப்பியல் என இங்குக் காட்டப்பட்டிருக்கும் தமிழர் வாழ்வியல் இன்றளவும் முறையான ஆய்வுகளைச் சந்திக்கவில்லை.

புள்ளமங்கைப் பூதங்கள்

எழுதகத் தொடராக மட்டுமல்லாது, தனிச் சிற்பங்களாகவும் அளவில் பெரியனவாகவும் அமையும் பெருமை பூதங்களுக்கே கிடைத்தது. பரங்குன்றத்து இராவண அருள்மூர்த்தித் தொகுதிப் பூதங்கள் பேரளவின. கயிலையை அசைக்கும் இராவணனை எதிர்க்கும் போர்க்கோலத்தின. உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் தாங்குதளப் பூதம் நரம்பிசைக்கருவியின் நயம் காட்ட, புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் முகமண்டபக் கூரைப் பூதங்களோ வீணையும் தாளமும் சிரட்டைக்கின்னரியும் உடுக்கையும் இயக்கும் அழகின. எழுவர்அன்னையருள் ஒருவரான சாமுண்டியின் சிற்பங்களிலும் காளி அரக்கர்களை அழிக்கும் படப்பிடிப்புகளிலும் பேய்கள் உடனிருப்பாய் உள்ளன. திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், திருத்தணி வீரட்டானேசுவரம் என இவை காட்சிதரும் இடங்களும் கண்களை நிறைப்பவையே.

கல்வெட்டுகளில்

பூதர், பூதபலி எனும் தொடர்களால் பூதமும், ‘விழிகட்பேய்’ என்ற தொடர்வழிப் பேயும் கல்வெட்டுகளில் கண்காட்டினாலும் இலக்கிய ஆளுகை போல் பெருவழக்குப் பெறாமை குறிப்பிடத் தக்கது.  

பிசாசு

பேய், பூதம் சரி. பிசாசு?அகராதிகள் சில பேயே பிசாசு என்கின்றன. பழைய இலக்கியங்களில் கலித்தொகை மட்டுமே பிசாசைச் சுட்டுகிறது. திருக்கோளக்குடிக் கல்வெட்டொன்றும் பிசாசைக் காட்டுகிறது. அந்த ஊர் ஊருணிக்குச் சோழர் காலத்தில் மூவேந்தன் என்னும் பிசாசின் பெயரை மக்கள் சூட்டியிருந்தனராம். நிருவாகத்தால் சுரங்கமாய்க் கருதப்பட்ட்கோயில் நிலவறையில் துணிந்து இறங்கி இந்தக் கல்வெட்டைக் கண்டறிந்தவர் பேராசிரியர் மு. நளினி. நல்லவேளை அவர் இறங்கியபோது அந்த நிலவறையில் கல்வெட்டு மட்டுமே இருந்தது. மூவேந்தன் இல்லை.