
அன்புள்ள வாருணி, தமிழ்நாட்டின் மிகச் சில கோயில்களிலேயே ஆயிரக்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சிற்பக் களஞ்சியங்களாக விளங்குபவை திருவரங்கம், தில்லை, மதுரைத் திருக்கோயில்களில் உள்ளவையே. இம்மூன்றனுள்ளும் ஆளுயரச் சிற்பங்களுடன் காண்போரைக் கவர்ந்திழுக்கும் கவினுறு கட்டுமானமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரக்கால் மண்டபத்தைக் குறிக்கலாம். மண்டப வாயிலிலும் வாயிலை அடுத்து விரியும் கூடத்தின் முதல் வரிசைத் தூண்களிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் விரிவான ஆய்வுக்குரியவை. அவற்றுள் தனித்துக் குறிக்கத்தக்கது கரணக்கோலத்திலுள்ள தேவதேவிச் சிற்பம்.
தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு எப்போது தோன்றியது என்பது குறித்த விரிவான ஆய்வுக்கட்டுரை எங்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, ‘பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளதை நீ அறிவாய். சங்க இலக்கியங்களிலோ, அடுத்தமைந்த காலக்கட்ட நூல்களான காப்பியங்களிலோ இடம்பெறாத பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்துவன திருமுறைகளே. சம்பந்தரும் அப்பரும் வழங்கியுள்ள குறிப்புகள் பிள்ளையார் தோற்றம் பற்றிய தெளிவான தரவுகளை முன்வைக்கின்றன.
தமிழ்நாட்டில் காணப்பெறும் பிள்ளையார் சிற்பங்களில் காலத்தால் முற்பட்டவை குடைவரைகளில் அமைந்துள்ளன. பிள்ளையார்பட்டிக் குடைவரையிலுள்ள கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு அக்குடைவரையை ஆறாம் நூற்றாண்டு அமைப்பாகக் கருதுகின்றனர். எனில், தமிழ்நாட்டின் முதல் பிள்ளையாராக அவரையே கொள்ளவேண்டியிருக்கும். பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் பரவலாக இடம்பெற்றுள்ள பிள்ளையாரைக் காலத்தால் முற்பட்ட வடதமிழ்நாட்டுப் பல்லவக் குடைவரைகளில் காணமுடியவில்லை. வல்லம் குடைவரைகளின் பக்கச்சுவர்களிலும் சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரையிலும் தோற்றம் காட்டும் பல்லவப் பிள்ளையார் கற்றளிக் காலத்தே சிறப்பிடம் பெறுவதைக் காணமுடிகிறது.
தமிழ்நாட்டின் குடைவரைக் காலப் பிள்ளையார்களில் நின்றகோலத்தில் காணக்கிடைப்பவர் சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரையில் உள்ளார். நான்முகன், முருகன், கதிரவன், கொற்றவைக்கு இணையாகப் பின்சுவர்க் கோட்டத்தில் இடம்பெற்றுள்ள இப்பிள்ளையார், பிற்பல்லவர் கற்றளிகளில் விமானத்திற்கு முன்னமைந்த முகமண்டபத் தெற்குக் கோட்டத்திற்கு மாற்றம் பெறுகிறார். இம்மாற்றம் சோழர் காலத்தில் நிலைபேறடைவதை அவர்தம் கற்றளிகள் கண்முன் நிறுத்துகின்றன.
குழந்தை போல் இரு கால்களையும் மடக்கிப் பாதங்கள் எதிர்ப்பட அமர்ந்த எளிய கோலம் தொடங்கி இலலிதாசனம், மகாராஜலீலாசனம் என வரையறுக்கப்பட்ட அமர்வுகளில் பிள்ளையார் சிற்பங்கள் பலவாய்க் கிடைக்கின்றன. சில ஊர்களில் நின்ற கோலத்திலும் சோழப் பிள்ளையார்களைக் காணமுடிகிறது. இதன் அடுத்த நிலையாகப் பிள்ளையாரை ஆடற்கோலத்தில் அமைக்கத் தொடங்கினார்கள். ஒரு காலைத் தரையில் ஊன்றி மற்றொரு காலை முழங்காலளவில் மடக்கி உயர்த்தும் (ஊர்த்வஜாநு, பார்சுவஜாநு) கரணக்கோலப் பிள்ளையார்களைப் பல கோயில்களில் காணமுடிகிறது. முழங்காலை முன்னால் உயர்த்துவது ஊர்த்வஜாநு. பக்கவாட்டில் உயர்த்தினால் பார்சுவஜாநு.
தொடக்கக் காலங்களில் தனித்தமைந்த பிள்ளையாரை அவரது தேவியுடன் இணைத்துக் காட்டும் சிற்பங்கள் அடுத்த நிலையின. சுகாசனப் பிள்ளையாரின் தொடையில் அமர்ந்தவராய் அம்மை காட்சிதரும் சிற்பங்களும் இருவரும் களிநிலை காணும் சிற்பங்களும் தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ளன. ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரக்கால் மண்டபத் தூண் அதுவரை நாங்கள் கண்டிராத புதிய காட்சியைக் கண்முன் நிறுத்தியது, வாருணி.
மண்டபத்துள் நுழைவார் ஒவ்வொருவரும் காணுமாறு முகப்பு வரிசைத் தூணில் இப்பெருஞ் சிற்பம் படைக்கப்பட்டுள்ளது. இதில், பிள்ளையார் பேரழகராய் ஊர்த்வஜாநு கரணத்தில் காட்சியாகிறார். அவரது வலப்பாதம் தளத்தில் நன்கு ஊன்ற, இடக்கால் முழங்காலளவில் மடித்து உயர்த்தப்பட்டுள்ளது. பத்துத் திருக்கைகளுடன் திகழும் அவரது மேலிரு கைகளில் சக்கரமும் தாமரையும் விளங்க, வல முன் கையில் உடைந்த தந்தம். வலம்புரியாய் வளைந்துள்ள துளைக்கையிலோ அமுதக்குடம். கழுத்தணிகள், தோளணிகள், கையணிகள், தொங்கு சரத்துடன் அடர்த்தியான வயிற்றுக்கட்டு, கால்களில் தண்டை, சிலம்பு, பெற்றுக் கரண்டமகுடத்துடன் கண்களுக்கு விருந்தாகும் அவரது இடையில் பதக்கஅணிகளும் குறங்குசெறியும் இருத்தும் அழகிய சிற்றாடை. அதன் தொங்கல்கள் கால்களுக்கிடையே விரிந்தும் மடிந்தும் நெகிழ்ந்திருக்கும் பாங்கு சிற்பிகளின் திறம் காட்டுகிறது.
இது போல் ஊர்த்வஜாநு கரணத்தில் பல பிள்ளையார் சிற்பங்களைச் சோழர் காலத்தே காணமுடிந்தாலும் இது அளவில் பெரியதாகவும் அழகில் உச்சம் பெற்றதாகவும் அமைந்திருப்பதால் மட்டுமே இங்குக் குறிக்கப்படுவதாக நினைத்துவிடாதே வாருணி. அளவு, அழகு இரண்டினும் மேம்பட்ட புதிய சிந்தனை இச்சிற்பத்தில் கையாளப்பட்டுள்ளது. இதில், இறைவனின் உயர்த்தப்பட்ட கால் அவர் தேவிக்கு இருக்கையாகியுள்ளது. பிள்ளையாரின் இடத்தொடையில் கோயிலாரால் வல்லபை என்று அழைக்கப்பெறும் அவரது தேவி இனிதே அமர்ந்துள்ளார்.

அம்மையின் வலக்கை பிள்ளையாரின் முதுகு தழுவ, இடக்கையில் மலர். கரண்டமகுடம் உள்ளிட்ட பல அணிகலன்கள் அழகூட்டப் பட்டாடையும் கச்சும் அணிந்து இறைத்தழுவலில் இளகிக் காட்சிதரும் தேவியின் இடையைத் தம் இடக்கை ஒன்றால் பேரன்புடன் பற்றியுள்ளார் இந்தப் பேரழகர். ஆடும் நேரத்திலும் அந்தக் கோலத்திலும் தம்மில் நிறைந்திருக்கும் தேவியை உடன் கொண்ட இந்த அன்பின் விளைச்சலை என் கண்கள் வேறெங்கும் கண்டதில்லை வாருணி. அதனால்தான், இந்தத் தேவதேவி இலக்கியப்பீடப் பக்கங்களில் இனிதே பதிவாகிறார்.
தமிழ்நாட்டுச் சிற்பிகளின் எண்ண வண்ணங்கள் காலந்தோறும் கவிதைகள் போல் வெளிப்பட்டுத் தமிழ்நாட்டுக் கோயில்களில் நமக்காகவே காத்துக் கிடக்கின்றன. அவற்றைக் காணவும் அவை வழி விளையும் களிப்பில் நிறையவும் நாம்தான் முனைவதில்லை.
அன்புடன்,
இரா. கலைக்கோவன்.








